சாலு மரதா திம்மக்கா!

0
சாலு மரதா திம்மக்கா!

சாமிநாதன் ராம்பிரகாஷ்

நாம் உயிர் வாழ மரங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்று நாம் இப்போதுதான் உணர்கின்றோம். மரங்கள் இல்லாமல் இயற்கைக் காற்றும் இல்லை, மழையும் இல்லை. இவ்வளவு ஏன் புவியும் அதிக வெப்பமடைந்து சுவாசக் காற்றிலே நஞ்சும் கலந்து விடுகின்றது. இப்படி நம் வாழ்வின் ஓர் அங்கமான மரங்களை நாம் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டுள்ளோம்.

ஆனால் தனக்கு நினைவு தெரிந்தது முதல் இன்று வரை அதாவது நூறு வயதையும் கடந்து, மரம் நடுவதையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழும், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாதனை நாயகி திம்மக்கா அவர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

1910ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலம் குப்பி தாலுகாவில் பிறந்தவர் இவர். தந்தை, வசதியற்ற விவசாயி.

சிறு வயதிலேயே திருமணம் முடித்து, கூடூர் என்னும் ஊருக்கு குடிபெயர்ந்தார். திருமணம் முடிந்து ஆண்டுகள் பல ஆகியும் குழந்தைப் பேறு ஏற்படவில்லை. கேட்கவும் வேண்டுமா நம் சுற்றத்தைப் பற்றி… ஆளாளுக்கு வாய்க்கு வந்த வசைகளையும், கதைகளையும் கட்ட, மிகவும் மனம் வருந்தித் தவித்தார்.

இதிலிருந்து மீள, மீண்டும் தனக்குப் பிடித்த மரங்களை வளர்க்கத் தொடங்கினார்… அவரின் கணவரும் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அங்கே தொடங்கியது சப்தமற்ற ஒரு பசுமைப் புரட்சி. ஆம், கிட்டத்தட்ட ஆயிரம் ஆலமரங்கள் …

நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு! ஹுள்ளிக்கள் கூடூர் தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறியது அந்த அதிசயம்.

1990ஆம் வருடம் அவரின் கணவர் தவறிவிட்டார். பின்னர் மரம் வளர்ப்பதே இவரின் முழு நேரப் பணி! அவர்கள் நட்ட மரங்களை நடந்தே சென்று பராமரித்து வந்தார். அது தவிர பல்வேறு மரங்களையும் நட்டு வளர்க்கத் தொடங்கினார். திக்கெட்டும் திம்மக்காவின் புகழ் பரவத் துவங்கியது. பல்வேறு சேவை அமைப்புகள், பசுமைப் பணியாளர்கள், தொண்டர்கள் ஆகியோரின் நாயகியாக மாறினார் அவர்.

பசுமை நிகழ்ச்சிகளில் இவரே தலைமையாகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். பல்வேறு அமைப்பினருடன் சேர்ந்து மேலும் பத்து ஆயிரம் மரங்களை நட்டு நீரூற்றி வந்தார்.

இப்படி இருக்க… கர்நாடகா அரசாங்கமே அவர் நெடுஞ்சாலையில் நட்ட மரங்களைப் பராமரிக்கத் தொடங்கி, அவருக்கு ‘சாலு மரதா திம்மக்கா’ [Saalumarada சாலுமரதா (வரிசையான மரங்களின்) திம்மக்கா] என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. இந்த ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ விருது வழங்கிக் கௌரவித்தது.

இன்றும் அவர் அதே பணிகளைச் செய்துகொண்டு வருகிறார். நூறு வயது கடந்துவிட்டது இவருக்கு! ஆனால் இன்னும் அதே ஆர்வம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி.

நம்மால் என்ன செய்ய முடியும் என்போருக்கு இவரின் வாழ்வே ஒரு மிகப் பெரிய உதாரணம். எண்ணத்தில் உறுதி இருந்தால் செயலில் தளர்ச்சி வராது. அமேசான் காடுகள் கருகியதைக் கண்டு மனம் உருகிய நாம், அதற்கு மேல் என்ன செய்துவிட்டோம்? என்ன செய்யப் போகிறோம்?

வாருங்கள் செயலில் இறங்குவோம்… எண்ணற்ற சேவை அமைப்புகள் உள்ளன, அவர்களுடன் இணைந்து நம்மால் ஆனதைச் செய்வோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.