மேடையில் மலர்ந்த காதற் பொதுமறை !

2

— வில்லவன்கோதை.

downloadமேடைப்பேச்சைக் கேட்பதில் இருந்த ஆர்வம் எப்போதுமே மேடையேறுவதில் இருந்ததில்லை. அதற்கான மனநிலையையும் இதுவரை நான் ஏற்படுத்திக்கொண்டதேயில்லை. எனது கடந்து போன வாழ்க்கையில் வெறும் ஐந்தாறுமுறை பல்வேறு நிர்பந்தங்களால் மேடையேறியபோது அல்லது ஏற்றப்பட்டபோது வெறும் கடமையைச் செய்து இருக்கைக்கு வந்தவன். அந்தச் சாதுரியமான வித்தையை வசப்படுத்திக்கொள்ள முயலாதவன்.

இத்தனைக்கும் பள்ளி நாட்களில் எப்போதாவது நடந்தேறும் இலக்கியக் கூட்டங்களுக்காக ஆவலோடு காத்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களில் நான் ஒருவன்.

ஐம்பதுகளில் இருந்து ஏறத்தாழ எழுபதுவரை மேடைப்பேச்சே வாழ்க்கையின் சுவாரஸ்யம் என்று கருதிய காலம். அப்போதெல்லாம் சென்னை நகர வீதிகளில் தினந்தோறும் அரசியல் சொற்பொழிவுகள் கனல்கக்க பொழிந்து கொண்டிருக்கும். மேடைப்பேச்சுகளின் பொற்காலம் என்று சொல்லலாம். மேடைப்பேச்சுகளில் முக்கியமாக எனது விருப்பம் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தனைகள் தாம் என்றாலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பேருரைகளையும் விரும்பிக்கேட்டவன். அதுமட்டுமல்லாமல் வாழ்வியல், இலக்கியம் சார்ந்த கூட்டங்களையும் நான் விட்டு வைக்கவில்லை. பள்ளிநாட்களில் தேனாம்பேட்டை எல்டாமஸ் சாலை பாலசுப்ரமணியர் திருக்கோயிலில் நிகழ்ந்த கி வா ஜெகனாதனுடைய தொடர் சொற்பொழிவுகள் இன்றும் நினைவில் நிற்கிறது.

இவையெல்லாம் இன்று நான் பெற்றிருக்கிற விரிந்த பார்வைக்கு ஏற்பட்டுவிட்ட அடித்தளம் என்று நம்புகிறவன்.

கடந்த மாதம் ஒரு வெள்ளிக்கிழமை 22- 01- 2016 மாலை நேரத்தில் சென்னை பாம் குரோவ் நட்சத்திர விடுதியில் நேர்த்தியான குளிரூட்டப்பட்ட அரங்கொன்றில் நண்பர் காவிரி மைந்தனின் காதல்பொதுமறை என்ற நூல் வெளியிடப்பெற்றது. பல்வேறு அறிஞர் பெருமக்களும் புலம் பெயர்ந்த தமிழார்வலர்களும் திரண்டிருந்த அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.

நூல் வெளியீட்டு விழாக்களிலே ஒரு புதுமையாக காவிரிமைந்தனின் காதல்பொதுமறை வெளியிடப்பெற அதன் பெருமைபேசும் பேராசிரியை வைகைமலர் எழுதிய இரண்டு ஆய்வு நூல்களும் அந்த அரங்கத்தில் கைகோத்துக்கொண்டன.

நெடுந்தொலைவில் இருந்து வந்திருந்த தமிழார்வலர்கள் அறிஞர் பெருமக்கள் காவிரி மைந்தனையும் அவர் நூலைப்பற்றியும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பெரும்பாலான வல்லமை இணைய ஆஸ்தான எழுத்தாளர்கள் மேடையேறி தங்கள் சகாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள். என் நண்பர் பழனிசாமிகூட மேடையேறி இயல்பாகப் பேசி இறங்கினார்.

அன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நானும் கலந்துகொண்டு ஒரு நூலுக்கு மதிப்புரை தரவேண்டுமென்று நண்பர் காவிரி மைந்தன் சொன்னபோது அதிர்வுற்றேன். பக்கம்பக்கமாக எழுதத்தெரிந்த எனக்குப் பத்து நிமிடம் பதற்றம் தவிர்த்துப் பேசமுடியும் என்ற நம்பிக்கையின்மைதான்.

உங்களால் முடியும் என்ற காவிரிமைந்தனின் குரலுக்கு பணிகிறேன்.

வேறுவழியின்றி பேச்சுக்கு ஆதாரமாக நிரம்பக் குறிப்புகள் கைவசம் இருந்தாலும் தொடர்ந்து பேசமுடியும் என்ற நம்பிக்கையின்மையால் பேச்சை வெகுவாக சுருக்கிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.

வெகு சிறப்பாக நிகழ்ந்த அந்த விழா நிறைவான நேர்த்தியான சிற்றுண்டியுடன் முடிவுக்கு வந்தது.

இன்னொன்றையும் நான் குறிப்பிடவேண்டும்.

நான் எண்ணுகிற பேசுகிற எழுதுகிற அத்தனையுமே சமூக அவலங்களை மையமிட்டே இருக்கும் அதில் காதலுக்கு என்றும் இடமளித்ததாக நினைவில்லை. காதலை மனிதவாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கருதுகிறேன்… அதுதான் வாழ்க்கையென்றோ அதுமட்டும்தான் இலக்கியம் என்றோ நான் கருதியதில்லை.

எப்படியோ மேடையில் மலர்ந்த நண்பர் காவிரி மைந்தனின் காதற் பொதுமறை என் நினைவுகளைக் கிளறியது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மேடையில் மலர்ந்த காதற் பொதுமறை !

  1. வாழ்க்கைக்குத் தேவையான புரிதலை தெளிவாக விளக்கும் அற்புதப் படைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *