ஆணவ மலம்
பவள சங்கரி
இவ்வுலகில் அழிவின்றி நிலைத்திருப்பவையாக நம் சைவச் சித்தாந்தங்கள் கூறுபவை – பதி, பசு, பாசம் என்பன. பதி எனும் இறையை அடைவதற்கு பசு எனும் உயிர்களுக்குத் தடையாக இருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களே.
உயிர்கள் சத்தியம், அசத்தியம் எனும் இரண்டையும் பகுத்துணர இயலாத இருளாக அறிவொளியை மறைக்கக்கூடியதே இந்த ஆணவ மலம். இறை சக்தியை அண்டவிடாமல் நீச மயக்கத்தில் உழலச் செய்து, அறிவை கீழ் நிலைக்கு எடுத்துச்சென்று பொய் பக்தியை உருவாக்குவதும் இந்த ஆணவ மலமே.
கன்மம் என்பது கர்ம வினையின்பாற்பட்டது. அவரவர் செய்யும் வினைக்கேற்ப அதனதன் பலாபலன்கள் மாறுபடுகிறது. நற்பண்புகளுடன் நல்வினையாற்றுவோர் நற்பலனையும், தீய பண்புகளுடன் தீவினையாற்றுவோர் தீய பலன்களையும் அனுபவிப்பர் என்பது நியதி.
உடல், உலகு மற்றும் உலகில் காணும் அனைத்துப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான் என்பது சைவசித்தாந்தத்தின் வாக்கு. அந்த வகையில் இந்த மலம் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், அறிவின் மயக்கத்தை நீக்கவல்ல ஒளியைப் பாய்ச்சுவதானால் நல்வழியில் தீண்டப்படும் மாயையினால் இறைவனை அடைய முடியும் என்பது சித்தர் வாக்கு. தீய வழியில் பயன்படுத்தப்படும் மாயை ஒருவரை அதல பாதாளத்தில் கொண்டு தள்ளிவிடும் என்பதும் இயற்கை நியதி. இதற்கு இப்பூவுலகின்கண் காணும் ஆயிரம் நிகழ்வுகளே சாட்சி!