அண்ணாமலை சுகுமாரன்

ANS-1-1-1

1898 ஆம் ஆண்டில் INDIAN ANTIQUITIES – BY THE LATE BISHOP CALDWELL என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதிய கால்டுவெல் அதை பரதகண்ட புராதனம் என்ற பெயரில் தானே வெளியிட்டார் .
நான்கு பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ,

இதன் முதல் பாகம் சதுர்வேதங்களைப்பற்றியது ,
இரண்டாம் பாகம் இராமாயணத்தைப் பற்றியது ,
மூன்றாம் பாகம் மகா பாரதத்தைப் பற்றியது ,
நான்காம் பாகம் மற்றைய புராணங்களைப் பற்றியது ,
அவ்வளவுதான்!
இவைகளை ஆதாரமாக வைத்தே பாரதத்தின் புராதனம் எழுதப்பட்டது .

நான்காம் பாகத்தின் இடையே 1841 ஆம் ஆண்டில் சென்னப் பட்டணத்திலிருந்து வெளிவந்த நான்கு காண்டம் கொண்ட ஓரு புத்தகம் குறிப்பிடப்படுகிறது .

அது என்ன புத்தகம் தெரியுமா ?

அதுவும் தக்ஷயாகம் எனும் புராணம் தான் . இத்தகைய நிலையே அந்த காலக்கட்டத்தில் நிலவி வந்தது. ஆதாரம் காட்ட நம்மிடம் புராணங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை .

ஆனால் உண்மை என்னவோ, இதனில் மாறுபட்டது , நமது முன்னோர் விட்டுச் சென்ற தொன்மை ஆதாரங்கள் ,தேடுவாரின்றி மதிப்பறியாமல் கொட்டிக் கிடந்தன என்பதே நிதர்சனம் ஆகும்

இத்தகைய நிலையில் தான் இந்தியாவில் அப்போது Archaeological Survey of India (ASI ) எனும்ஒரு தொல்லியல் ஆய்வு அமைப்பை நிறுவ கடும் முயற்சி எடுத்து அது நிறுவப்பட்டதும் அதன் முதல் தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பற்றி இப்போது தெரிந்து கொள்ளப்போகிறோம் .

அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1814 இல் பிறந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தனது 19வது வயதில் இராணுவ பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தார். அவருக்கு அப்போது இந்திய வரலாற்று ஆய்வில் பிரகாசித்துக்கொண்ட பிரின்செப் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது . அவர் மூலம் கன்னிங்ஹாம்க்கு இந்திய வரலாற்று செய்திகள் மற்றும் ஆய்வுகள் பற்றி பல செய்திகள் தெரியவந்தன . இத்தகைய ஆய்வில் அவருக்கு ஆர்வமும் தோன்றியது

அந்த காலகட்டத்தில் எகிப்த்தில் பிரமிடுகள் பற்றிய ஆய்வு தீவிரமாக இருந்து வந்தது .பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலரும் அத்தகைய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் . அதன் மூலம்அவர்கள் பெரும் பொருளும் ஈட்டினர் . ஆய்வில் கிடைக்கும் தொல் பழம் பொருள்களுக்கு நல்ல ஒரு சந்தை மதிப்பு அப்போதைய உலகில் ஏற்பட்டிருந்தது .

தொல்லியல் ஆய்வு என்பது புத்திசாலிகளுக்கு தங்களின் அறிவை வெளிப்படுத்தும் ஒரு மதிப்பூட்டும் செயலாக அப்போது ஆகியிருந்தது. செல்வந்தர்கள் அதிகாரத்தில் இருப்போர் தொல்லியல் ஆய்வுகள் பற்றி விருந்துகளில் கலந்து பேசுவது ஒரு நாகரிகமாக அப்போது ஆகியிருந்தது. தொல்லியல் ஆய்வுகள் பற்றிய ஆர்வம் ஒரு உயர் வர்க மக்களின் குறியீடாகவே பிறநாடுகளில் போலவே இந்தியாவிலும் அப்போது மாறியிருந்தது .

எனவே இந்தியாவில் மதிப்பாரற்று கொட்டிக்கிடந்த தொல்லியல் பொருள்களை சேகரம் செய்வதிலும் ஆதாரங்களை வெளிப்படுத்துவதிலும் தொகுப்பதிலும் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் போன்ற பலரும் கவனம் செலுத்தலானர் .

1834 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிரின்செப் செய்திருந்த அசோகரின் மணிக்யாளா ஸ்தூபியைப் பற்றிய முந்தய ஆய்வின் தொடர்ச்சியான ஒரு கட்டுரையை பெங்கால் ஆசியாட்டிக் சொசைட்டியின் ஏட்டில் எழுதி கன்னிங்ஹாம் வரலாற்று அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார் .

அதே ஆண்டில் 1834 இல் சாராநாத் என்னும் இடத்தில் இருக்கும் அசோகரின் ஸ்தூபியை அகழ்வாய்வு செய்து உலகிற்கு அறிவித்தார் .

தொடர்ந்து 1837 இல் கர்னல் எப் ஸீ மைசெய் உடன் சேர்ந்து சாஞ்சியில் ஒரு அகழ்வாய்வு தொடங்கி அதன் மூலம் பல ஆதாரங்களைத் தொகுத்தார் .1842 இல் சாங்கிசா எனும் இடத்தில் அகழ்வாய்வு தொடங்கப்பட்டது .

இவ்வாறு அசோகரின் பிராமியில் இருந்த கல்வெட்டுகள் பல படித்தறியப்பட்டன . நெடுங்காலமாக புரியாத புதிராக இருந்த அந்த ஊசி முனை எழுத்துகளுக்கு அர்த்தம் வெளிப்பட்டது .

அசோகரின் கல்வெட்டுகள் , ஸ்தூபிகளைப் பற்றி எத்தகைய இடங்களில் எங்கே அகழ்வாய்வு செய்வது என்பதற்கு அந்த காலகட்டத்தில் எந்த வித இலக்கிய ஆதாரங்களோ வழிகாட்டுதலோ இல்லாத அந்தச் சூழலில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பண்டைய சீன பயணியான ஹுவாங் சுவாங் எழுதிய பயணக் குறிப்புகளைக்கொண்டு அவர் சென்ற வழியில் அவர் விவரித்த பல இடங்களைக் கண்டறிந்தார். பின்பு அத்தகைய இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டது .

1851 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்திய தொல்லியல் ஆய்வின் மதிப்பையும் ,அத்தகைய ஆய்வுகளின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தத் தொடங்கினார் .

1854 இல் புத்த இயக்கத்தின் வரலாற்றை விவரிக்கும் பிளசா ஸ்தூபி (The Bhilsa Topes) எனும் புத்தகத்தை அப்போது கிடைத்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதி வெளியிட்டார்

1861 இல் அப்போது வைஸ்ராயாக இருந்த ஜான் கன்னிங் அவர்கள் கன்னிங்ஹாம்மை இந்திய அரசின் archaeological surveyor ஆக நியமித்தார் . அது அப்போதய நிலையில் புதிய பதவி அதில் முதல் நியமனம் கன்னிங்ஹாமுக்குத் தான் . அந்த பதவியில் அவர் 1861 முதல் 1865 வரை பணியாற்றி பல ஆய்வுகளிலும் சான்றுகளை சேகரம் செய்து பாதுகாப்பதிலும் ஈடுபட்டார் .

ஆனால் அந்த பதவியும் 1865 இல் ரத்து செய்யப்பட்டது. காரணம் இப்போது போலவே அப்போதும் அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை . பின்பு லண்டன் திரும்பிய கன்னிங்ஹாம் Ancient Geography of India என்னும் புத்தகத்தின் முதல் பகுதியை 1871 இல் வெளியிட்டார் . இடையே அடுத்த வைஸ்ராயாக வந்த மாயோ இந்தியாவில் முதல் தொல்லியல் ஆய்வுக்கான அமைப்பான Archaeological Survey of India (ASI) தோற்றுவித்து அதன் முதல் director-general ஆக கன்னிங்ஹாம்மை நியமித்தார் . அது 1ஆம் தேதி , ஜனவரி 1871 ஆகும் .

இன்றைக்கு சரியாக 147 வருடங்களுக்கு முன் இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்ய ஒரு மகத்தான அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவர் கன்னிங்ஹாம் ஆவார் .இந்த அமைப்பு உருவாகவும் பெருமுயற்சிகள் செய்ததும் அவரே ஆகும். இந்த பதிவி வகிக்க இந்தியா திரும்பினார் கன்னிங்ஹாம். தனது பதவிக்காலத்தில் 24 ஆய்வறிக்கைகளை விரிவாக்கத் தயாரித்தளித்தார் . இதில் 13 ஆய்வறிக்கைகள் இவரே நேரடியாக மேற்கொண்ட ஆய்வுகள் . மீதமுள்ளதை இவரது வழிகாட்டலில் பிறரால் மேற்கொண்ட ஆய்வுகள் .

30 செப்டம்பர் 1885 வரை ஏ ஸ் ஐ இல் தலைவராக இருந்த கன்னிங்ஹாம். பின்பு இங்கிலாந்து திரும்பினார் .

அவரது பதவிக்காலத்தில் தஷீலா முதல் கவுர் ( Taxila to Gaur.) வரை பல கள ஆய்வுகளும், அகழ்வாய்வும் செய்யப்பட்டன .

இவரது பதவிக் காலத்தில் அசோகரின் கல்வெட்டுகளைக்கொண்ட முதல் பகுதியை வெளியிட்டார் . (Corpus inscriptionum Indicarum) (1877) இந்திய வரலாற்றின் காலங்களின் ஆய்வான ஒரு அரிய புத்தகத்தை 1883 இல் எழுதி வெளியிட்டார் ( Book of Indian Eras )

தனிப்பட்ட முறையில் கன்னிங்ஹாம் ஒரு பெரிய அளவிலான தொன்மை நாணயங்களின் சேகரிப்பை செய்து வைத்திருந்தார் . ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக அவர் ஒரு முறை 1884 இல் இலங்கையின் அருகில் படகில் பயணம் செய்தபோது விபத்துக்குள்ளாகி அவரின் சேகரத்தில் இருந்த பெரும்பான்மை நாணயங்களை இழந்து விட்டார் .

மீதி இருந்த தொன்மை தங்க வெள்ளி நாணயங்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அவரிடமிருந்து விலைக்கு வாங்கி பாதுகாத்து வருகிறது .

இவரின் ஆலோசனைப்படி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியின் வாயில் சாஞ்சி ஸ்தூபி வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது .

தனது 19 வது வயதில் இந்தியா வந்த ராணுவ பொறியாளர் கன்னிங்ஹாம் 28 வருட பணிக்குப் பின் மேஜர் ஜெனரல் ஆக 1861 இல் பதவி ஒய்வு பெற்றார் . பிறகு இந்திய தொல்லியல் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார் .

கன்னிங்ஹாம் அவர்கள் வட இந்தியாவின் பல பண்டைய தொன்மை சின்னங்களை கண்டுபிடிப்பதிலும் அவைகளை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றினார் .

அவற்றில் சாஞ்சி, சாரநாத் , கயாவில் உள்ள மகாபோதி ஆலயம் , தசாவதார ஆலயம் போன்ற பல குறிப்பிடத்தக்கவை .

இத்தகைய பல இன்று உலக மரபுச் சின்னங்களாக UNESCO வால் அறிவிக்கப்பட்டு இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் பெரும் பொருள் குவிய வழிவகுத்துள்ளது .

அவர் எழுதிய முக்கிய புத்தகங்களின் பட்டியல் பிரமிப்பு அளிப்பதாகும். எத்தனை அரிய ஆய்வுகள் , தலைப்புகள் அவர்தந்தது !

Physical, Statistical, and Historical with Notices of the Surrounding Countries (1854).

–Bhilsa Topes (1854), a history of Buddhism

–The Ancient Geography of India (1871)

–Corpus Inscriptionum Indicarum. Volume 1. (1877)

–The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures

–Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C. (1879)

–The Book of Indian Eras (1883)

–Coins of Ancient India (1891)

–Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya (1892)

1823 இல் சார்லஸ் மேசன் எனும் ஆங்கிலேயப்பயணி இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டார் . அப்போது அவர் ஹரப்பா எனும் குக்கிராமம் வழியே சென்றார் . அங்கே ஒரு சிறிய குன்றில் இடிந்துபோன சிதைந்த கோட்டை ஒன்றை பார்த்திருக்கிறார் .

அதுகுறித்து அங்கே வசித்த கிராமவாசிகளிடம் விசாரித்தபோது , அங்கே சபிக்கப்பட்ட ஒரு அரசரின் தீய ஆவி இருப்பதாகவும் , அந்த அரசர் செய்த தீய செயல்களின் காரணமாக கடவுள் விண்ணில் இருந்து நெருப்புக் கோளத்தை அனுப்பி அந்த கோட்டையை அழித்துவிட்டதாகவும் , அதுமுதல் அந்த கோட்டை பல நூறு ஆண்டுகளாக இடிந்தே கிடப்பதாகவும் கூறியிருக்கிறார்கள் .

பல தீய சக்திகள் அங்கே இருப்பதாகவும் அங்கே யாரும் செல்வதில்லை என பலவேறு கதைகளை கூறியிருக்கிறார்கள் .

அந்த இடிந்த கோட்டை உயர்ந்த மதில் சுவர்களும் இடிபாடுகளும் நிறைந்ததாகவே பலநூறு ஆண்டுகளாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்

1823 இல் அங்கே சென்ற சார்லஸ் மேசன் தான் கண்டதையும் ,கேட்டதையும் பெருமையாக இங்கிலாந்து சென்றதும் பத்திரிகையில் எழுதினர் .

சில ஆண்டுகளுக்குப் பின் இந்த செய்தியை தற்செயலாகப் பார்த்த கன்னிங்ஹாம் , ஆய்வுகளின்பால் கொண்ட ஆர்வத்தால் அங்கே தேடித் சென்றார் . அவர் சென்றது 1853 வருடம் அதாவது முப்பது ஆண்டுகள் கழித்து . ஆனால் ஹரப்பா எனும் குக்கிராமத்தில் அந்த குன்று இருந்தது. ஆனால் அந்த இடிந்த கோட்டை அந்தக் குன்றில் இல்லை .இத்தனை நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்து நின்ற அந்த இடிந்த கோட்டை முப்பது ஆண்டுகளில் இடிந்து தரை மட்டம் ஆகிவிட்டது .

வரலாற்றிற்கு எத்தனை துரதிஷ்டம் பாருங்கள் .சிந்துவெளி நாகரீகத்தின் ஹரப்பா தான் நான் குறிப்பிடும் இந்த ஹரப்பாவும் ஆகும் .

மனம் தளராத கன்னிங்ஹாம் அந்த குன்றில் இருந்த இடிபாடுகள் அத்தனையும் சல்லடையாக சலித்துப் பார்த்திருக்கிறார் .

அதில் சதுரமான கல்துண்டு ஒன்று ,பள பளவென்று மெருகேற்றப்பட்டது அவரது கண்ணில் பட்டது .
அதை எடுத்து ஆராய்ந்த கன்னிங்ஹாம் அதில் மிருகங்கள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டார் . அது என்னவென்று அப்போது அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை . அது ஒரு சிந்துவெளி நாகரீக முத்திரை. இன்னமும் சரிவர புரிந்துகொள்ள இயலாத ஒரு முத்திரை .இதைப்போல் இன்னமும் அந்த ஹரப்பாவில் இத்தகைய பலநூறு முத்திரைகள் அகழ்வாய்வில் இருந்து கிடைக்கும் என்பது அவருக்கு அப்போது எப்படித் தெரியும் ?

ஒருவேளை அந்த இடிந்த கோட்டை அவர் முப்பது ஆண்டுகள் கழித்து வரும்வரை இருந்திருந்தால் இந்த சிந்துவெளி முத்திரைகளின் உபயோகம் என்னவென்று நமக்கு அப்போதே அவருக்கு ஏதாவது துப்பு கிடைத்திருக்கக்கூடும் .

ஆனால் கன்னிங்ஹாம் வந்து சென்றபிறகு பலவித முயற்சிகளுக்குப் பிறகு அந்த ஹரப்பாவில் மீண்டும் அகழ்வாய்வு செய்ய சுமார் 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆய்வுகள் 1920 இல் தான் துவங்கப்பட்டது .

அரசாங்க வேலைகளில் அவசரம் பார்க்க இயலுமா ?

இந்த கால இடைவெளியில் அழிந்துபோன ஆதாரங்கள் எத்தனையோ ?

இவ்வாறு ஆய்வுகளை இடையில் நிறுத்தப்பட்ட அரிக்கமேடு , ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் எப்போது மீண்டும் ஆய்வு தொடங்கப்படும் ,? முடிவுகள் எப்போது மக்களுக்குத் தெரியவரும் ?.
அது ஒரு “கோடி” கொடுத்தாலும் பதில் தெரியாத கேள்வி .!

இவ்வாறுதான் இப்போது இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற அகழ்வாய்வு கீழடியில் மண்போட்டு மீண்டும் மூடப்பட்டது

திரு பாலசுப்ரமணியம் என்பவர் கீழடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1970 முதல் வரலாற்று ஆசிரியராக வேலை செய்து வந்திருக்கிறார் . .

1979 இல் அவர் கீழடியின் ஒரு பகுதியில் பள்ளிச் சந்தைத்திடல் என்னும் இடத்தில் ஒரு மண்மேடை கண்டார். அதில் சில டெராகோட்டா மண் சிலைகளை கண்டெடுத்தார் . அவைகளை தொல்லியல் துறையில் காட்டியபோது அவை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றனர் .வைகை நதிக்கரை நாகரீகம் பற்றி ஆய்வு செய்ய தொல்லியல் துறை 293 இடங்களைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அப்போது பள்ளிச் சந்தைத் திடல் பற்றிய செய்தி அவர்களுக்கு ஆர்வம் கொடுத்தது . எனவே கீழடியில் அகழ்வாய்வு செய்ய தீர்மானித்தனர் .

இதற்கு ஒரு பள்ளிக்கூடத்தின் வரலாற்று ஆசிரியரான பாலசுப்ரமணியம் காரணம் ஆக இருந்தார் . ஆனால் 1978 இல் தொடங்கிய முயற்சி 2015 இல் தான் ஆய்வாக மலர்ந்தது .

இந்தத் தகவல் விரிவாக செய்திக் கட்டுரையாக Frontline, February 19, 2016 இல் வந்துள்ளது . ( திரு நா .கணேசன் அவர்கள் அவருக்கு வந்த கடிதத்தை மின் தமிழ் குழுவில் இட்டிருந்தார் -அதில் இந்தத் தகவல்கள் உள்ளன -அவருக்கு நன்றி )

இத்தனை முயற்சிக்குப் பின் மலர்ந்த இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளே நீடித்தது . 5600 தொல்லியல் சான்றுகள் சேகரிக்கப்பதில் இரண்டு மட்டுமே ரேடியோ கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டது .

எத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும் வரலாற்று உண்மைகள் தக்க காலத்தில் வெளிவராவிட்டால் அதற்கான ஆதாரங்கள் அழிந்துவிடக்கூடும் .இது வருத்தம் அளிக்கும் போக்கு ஆகும் . இத்தகைய போக்கு வரலாற்று ஆய்வுக்குத்தான் பெரும் இழப்பு !என்று தணியும் நமது இத்தகைய அறியாமையும் , அலட்சியமும் ,?

அடுத்த வேறு முக்கிய செய்திகளுடன் சிந்திப்போம் .
கருத்துக்களைப் பகிர்த்தால் மகிழ்வேன் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *