Author: கார்த்திகேயன், விமலதாரணி

  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

     

     

    கேள்வி : 1
    என் பெயர் பல்லவி வயது 35. எனக்கு 2 குழந்தைகள். சமீபத்தில் என் கணவர் மும்பைக்கு மாற்றலாகி செல்ல நேர்ந்தது விட்டது. நான் பத்தாவது வகுப்பு வரைதான் படித்துள்ளேன். தற்போது வீட்டிற்குத் தேவையானதை வாங்கவும், பில் கட்டவும் என் குழந்தைகளை அழைத்து வரவும் நான்தான் செல்ல வேண்டியுள்ளது. (இதற்கு முன்  இந்த வேலைகளை என் கணவரே செய்து விடுவார்.) ஆனால் எனக்கு தனியே வெளியெ செல்லவே பயமாக இருக்கிறது. போவதற்கு முன் படபடப்பாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் உள்ளது. நான் என்ன செய்வது மருத்துவரை காண வேண்டுமா?

    பதில் :
    உங்கள் உடம்புக்கோ, இதயத்திற்கோ எந்த பிரச்சினையும் இல்லை, உங்களுடைய பிரச்சனை பதட்டம் (ஆன்சைட்டி ). பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் போது மனிதர்களுக்கு இயல்பாய் ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்கள் உங்களுக்கு  தனியாக வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே ஏற்படுகிறது. இதற்குக் காரணம், உங்களுடைய  எல்லா வெளி வேலைகளையும் தானே செய்து உங்களை பொத்தி பொத்தி வைத்திருந்த உங்கள் கணவர்தான் இதற்கு காரணம் என்றும் கூறலாம். தனியே வெளியே சென்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அனுமானிப்பதும், தன்னால் அதை சமாளிக்க முடியாது என்று நம்புவதும், தான் பத்தாவது வரை மட்டுமே படித்திருப்பதால் தனக்கு தகுதி குறைவு என்ற தாழ்வு மனப்பான்மை தான் உங்களுடைய பதட்டத்திற்குக் காரணம். படிப்பிற்கும், சமயோசிதம் மற்றும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சனைகள் ஏற்படுமோ என்று முன்கூட்டியே யோசிக்காமல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று முதலில் நினையுங்கள். எந்த ஒன்றை செய்ய பயமாக இருக்கிறதோ அதையே திரும்ப திரும்ப செய்யும் போது பயம் நீங்கி விடும் எனவே சின்ன சின்ன விஷயங்களுக்காக,  உங்களுக்கு பிடித்த விஷயங்களுக்காக அடிக்கடி வெளியே சென்று வர பழகுங்கள். வெளியில் இருப்பர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லை உங்களை கவனிப்பது தான் அவர்களுக்கு முக்கியம் என்ற உங்கள் கற்பனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்களுடைய திறமைகளை பாசிட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை செய்தால் உங்களால் இயல்பாக வெளியே சென்று வர முடியும்.

    கேள்வி: 2
    நான் 23 வயது கல்லூரி மாணவன் நானும் என் சிறு வயது நண்பனும் சமீபத்தில் ஒரு பெண்ணை சந்தித்தோம். நாங்கள் இருவரும் அவளை காதலிக்கிறோம். இதைப்பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லையென்றாலும் இந்த காதல் விவகாரத்தால் எங்களின் நட்பு கெட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

    பதில் :
    நீங்கள் 23 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் என்பதால் உணர்ச்சி வசப்படாமல் இப்பிரச்சனையை அணுகலாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்கள் நண்பருடன் பேசி அவரும் அந்த பெண்ணை காதலிக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவரும் காதலிக்கிறார் என்றால் அடுத்து அந்த பெண்ணிடம் கேட்டு அவள் உங்கள் இருவரில் யாரை காதலிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் இருவரில் யாரையுமே அவள் காதலிக்காமல் நட்போடு பழகுவதாகவும் இருக்கலாம் அல்லவா? உங்கள் நண்பருடன் பேசும் போது அவள் உங்கள் இருவரில் யாரை காதலித்தாலும் மற்றவர்  விட்டுக்கொடுத்து விட வெண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். முடிவு செய்வதுடன், முடிவை செயல்படுத்தவும் தயங்கக் கூடாது. சிறு வயது நட்பை மதிப்பவரானால் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்காது.

    கேள்வி : 3
    என் வயது 40. எனக்கு கடந்த 10 வருடங்களாக முதுகு வலி இருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன் என் தம்பியுடன் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டு அதிக கோபப்பட்டு விட்டேன். அதன் பிறகு என் முதுகு வலி அதிகமாகிறது. அதிக உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் முதுகு வலி அதிகமாவதாகவும் உணர்கிறேன். என் உணர்வு உண்மையானது தானா? அல்லது இது என் கற்பனையா?

    பதில் :
    உங்கள் உணர்வு உண்மையானது தான். நீடித்த முதுகு வலி என்பது எலும்புத் தேய்மானத்தினால் ஏற்படலாம். எலும்பு தேய்வதால் எலும்பின் பலம் குறையும் போது அதை சுற்றியுள்ள தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து விடும். அதனால் தான் முதுகு வலி போன்ற மூட்டு வலிகளுக்கு அம்மூட்டை சுற்றியுள்ள தசைகளை உறுதியாக்கும் உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எனவே உங்கள் முதுகு தசை வேலை பளு அல்லது திடீர் வேலை காரணமாக சுருங்கி மீண்டும் விரிவடையாமல் போனாலோ அல்லது விரிவடைந்து சுருங்காமல் போனாலோ வலி ஏற்படும். இது உடல் ரீதியாக வலிக்கான காரணம். இதற்கு மன ரீதியான காரணமும் இருக்கிறது. நாம் மனதளவில் பயம், கோபம், பதட்டம் போன்ற உணர்வுகளை அடையும் போது நம் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினால் உடலில் பல உடலியல் மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான்  தசைகள் சுருங்குவது ஆபத்தான தருணங்களில் தான் இந்த உடலியல் மாற்றம் பெரும்பாலும் ஏற்படும். ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள ஓடவோ, சண்டையிடவோ தசைகளை தயார்படுத்த நம் உடல் எடுக்கும் எச்சரிக்கை நடவடிக்கையே இதுவாகும். நீங்கள் கோபம், பதட்டம் போன்ற உணர்வு நிலைகளில் அதிக நேரம் இருக்கும் போது உங்கள் உடலின் சில தசைகள் இவ்வாறு சுருங்கி விடுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது. தசை வலியை சரி செய்ய மருந்து, ஓய்வு, சுடு நீர் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் தேவை. அதே நேரம் மனதிற்கு மனம் தளர்த்தும் பயிற்சிகளை செய்தல் வேண்டும். ஒரு நல்ல மன நல ஆலோசகரை சந்தித்து இப்பயிற்சியை கற்றுக் கொள்ளலாம்.

    கேள்வி :4
    என் வயது 42 என் கணவரின் வயது 45. என் கணவர் மிகவும் நல்லவர். எங்களுக்குள் இணக்கமான உறவே இருந்து வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக அவர் நடத்தையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அலுவலத்தில் உடன் பணிபுரிபவர் மூலம் அவருடன் வேலை செய்யும் பெண்ணிற்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன் கணவரை இழந்தவர். இதைப் பற்றிக் என் கணவரிடம் கேட்ட போது ஆம் என்று ஒத்து கொண்டாலும் அவரால் அவளை விட முடியவில்லை. அவள் என் கணவருக்கு ஏதோ செய்வினை செய்து விட்டதாக நண்பர்கள் கூறுகின்றனர். இதை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?

    பதில் :
    உங்கள் கணவர் நல்லவர். உங்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்பதால் நடந்த தவறுக்கு அந்த பெண்ணை மட்டும் குற்றம் கூறும் ஒரு மன நிலை தான் அவள் செய்வினை செய்து விட்டாள் என்று கூறுவதெல்லாம். இந்த விஷயத்தில் மற்றவர்களிடம் குறிப்பாக அவருடைய நண்பர்களிடம் இதைப் பற்றி விசாரிப்பது கூடாது. இப்பிரச்சனையை உங்கள் கணவர் மற்றும் அந்த பெண்ணுடன் பேசி தான் சரி செய்ய வேண்டும். உங்கள் கணவர் இந்த விஷயத்தை ஒத்துக் கொண்டதிலிருந்து அவர் தெரிந்தே தான் அந்த பெண்ணுடன் பழகியிருக்கிறர் என்பது தெரிகிறது. திடீரென்று அந்த பெண் கணவரை இழந்ததால் அவர் மேல் ஏற்பட்ட இரக்கம் நாளாவட்டத்தில் இம்மாதிரி உறவில் முடிந்திருக்கும். எப்படியிருந்தாலும் இந்த முறையற்ற உறவை உங்கள் கணவரும் அந்த பெண்ணும் தொடர்வது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே இப்பொழுதே அவர்கள் இருவருடனும் சண்டை போடாமல் பேசி அந்த உறவை நிறுத்தி விடச் சொல்லுங்கள். நடந்ததை மறந்து விட்டு இனி நல்ல முறையில் வாழலாம் என்று கணவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். முடியாவிட்டால் மூவரும் மன நல ஆலோசனை எடுத்துக் கொள்வது உகந்தது.

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

    கேள்வி : 1
    என் மகனுக்கு வயது 7. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் விருப்பமின்றி இருக்கிறான். படிக்கச்  சொன்னாலே பசிக்குது சாப்பிட்டு படிக்கிறேன் என்றோ, டாய்லட் போக வேண்டும் என்றோ எதாவது சாக்கு சொல்வான். நானும் என் கணவரும் வேலை முடித்து வர இரவு ஏழாகி விடுவதால் ட்யூஷன் சேர்த்துள்ளோம். அங்கும் இப்படித்தான் செய்கிறானாம். ஞாபகமும் குறைவாக இருக்கிறது. அவனுக்குப் படிப்பில் ஆர்வம் வர என்ன செய்ய வேண்டும்?

    பதில் :
    உங்கள் குழந்தைக்கு படிப்பில் ஆர்வமில்லாதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பள்ளி ஆசிரியரை சந்தித்து அவன் நடவடிக்கைகளை விசாரியுங்கள். குழந்தையின் ஐக்யூ குறைவாக இருந்தாலும் அவனுக்கு கற்கும் திறன், சிந்திக்கும் மற்றும் நினைவு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். இதனைப் பள்ளி ஆசிரியரும் உறுதி செய்தால் அவனை நல்ல சைக்காலஜிஸ்டிடம் அழைத்து செல்லுங்கள் அவனுக்கு ஐக்யூ டெஸ்ட் செய்ய வேண்டும். ஐக்யூ குறைவாக இருந்தால் ஆக்குபேஷனல் தெரபி கொடுக்க வேண்டியிருக்கும். மேழும் அவனுக்கு டிஸ்லெக்சியா பிரச்சனை உள்ளதா என்பதற்கான டெஸ்ட்களை செய்து அதற்கான தீர்வை கூறுவார்கள். எல்லாம் சரியாக இருக்குமானால் குழந்தையுடன் நீங்கள் செலவிடும் நேரம் குறைவு என்றோ, அவனுக்கு பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் இருப்பது இப்பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.  குழந்தைக்கு சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை அடைந்தால் பரிசுப் பொருள் கொடுங்கள். அவன் மனதில் தோல்வி பயத்தை போக்கி வெற்றி பெற ஊக்கமளியுங்கள். இசை நடனம் போன்ற ஒன்றை கற்றுக் கொடுங்கள். நன்கு வேர்க்கும்படியான விளையாட்டு ஒன்றில் சேர்த்து விடுங்கள் இவையெல்லாம் அவன் திறனை அதிகரித்து படிப்பில் கவனம் செல்ல உதவும்.

    கேள்வி : 2
    நானும் என் கணவரும் நல்ல பணியில் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே மகள். செல்லமாக அவளை வளர்த்திருக்கிறோம். அவள் 11 வகுப்பு படிக்கிறாள். அவள் கடந்த சில மாதங்களாக எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாள். கேட்டால் கோபத்தில் பொருட்களை உடைக்கிறாள். வீசி எறிகிறாள். அவளை நினைத்து கவலையாக இருக்கிறது. இதற்கு முன் அவள் இப்படி இல்லை.

    பதில் :
    உங்கள் மகளைக் செல்லமாக வளர்த்திருக்கிறீர்கள் ஆனால் சுதந்திரமாக வளர்க்கவில்லையென்றே தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாகத்தான் அவள் இப்படி இருக்கிறாள் என்பதால் அவளுக்கு ஏதோ வெளியே சொல்ல முடியாத பிரச்சனை இருக்கலாம்.  ஒரே குழந்தையாக இருப்பவர்களுக்கு தன் பொருளையோ, உணர்வுகளையோ பகிர்ந்து கொள்வது சற்று சிரமம் தான். இதை குழந்தையிலிருந்தே பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டும். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததாலேயே உங்கள் மகள் கோபப்படுகிறாள். அவளிடம் மனம் விட்டுப்பேசுங்கள். அவள் நடத்தையை குறை சொல்லாமல் பொறுமையாக இருந்து பாருங்கள். அவள் தோழிகளிடம் பேசிப்பாருங்கள்.  அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை சரி செய்யாலாம் என்ற நம்பிக்கை கொடுங்கள். அவளாக தன் பிரச்சனை சொன்னால் ஒழிய நீங்களாக துருவித்துருவிக் கேட்காதீர்கள். உங்களின் பக்குவமான அணுகுமுறையினால்  ஒன்று அவள் பிரச்சனை உங்களிடம் பகிர்ந்து கொள்வாள் அல்லது தானாகவே சரி செய்துக் கொண்டு சகஜமாகி விடுவாள்.

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

     
     
     
     

    கேள்வி : 1
    எனக்கு வயது 24. என் அண்ணன், என் அக்காவின் மகளை முறைப்படி  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான மூன்றாம் ஆண்டில் என் அண்ணன் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். இதனால் என் அக்கா பெண் 19 வயதில் விதவையாகி விட்டார்.

    இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அந்த குழந்தையின் நலன் கருதியும் , என் அக்கா பெண்ணின் நலன் கருதியும் அவர்களை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தேன். அவர்களுக்கு என்னை மணந்து கொள்ள விருப்பம் தான். ஆனால் இதை சிலரிடம் சொன்னேன்.

    அவர்கள் அண்ணன் மனைவியை செய்து கொள்ளவது தவறு என்கிறார்கள். நான் அவர்களை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன், இதைப்பற்றி உங்களுடைய கருத்தினை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    பதில் :
    வட இந்தியாவில் சில குறிப்பிட்ட சமுதாயங்களில் அண்ணன் இறந்து போனால் அவரது விதவை மனைவியை கணவரின் தம்பிக்கே திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு 35 வயதாக இருந்து கணவரின் தம்பிக்கு அதை விட வயது குறைவாக  இருந்தாலும் மன ஒற்றுமை அடிப்படையில் திருமணம் செய்து வைக்கிறார்கள். அத்தகைய திருமணங்களில் நானே கலந்து கொண்டிருக்கிறேன்.

    கணவரை பறி கொடுத்த விதவை பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பாள். அவளுக்கு மறுமணம் தேவை. அதே நேரம் மறுமணம் செய்து புதிய வீட்டிற்கு புதிய குடும்பத்திற்கு அவள் செல்லும் போது அங்குள்ள சூழ்நிலைக்கு தக்கபடி அனுசரித்து செல்ல சிரமமாக இருக்கும். அந்த சிரமத்தை குறைக்கவே ஏற்கனவெ பழகிய வீட்டில் பழகிய மனிதருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரையில்  விதவை பெண்ணை கணவரின் தம்பியே திருமணம் செய்யும் பழக்கம் இப்போது தான் தோன்றி வருகிறது.. இது ஒரு நல்ல பழக்கம் தான்.

    திருமணம் என்றாலும் மறுமணம் என்றாலும் அதில் கவனிக்கத்தக்க முதல் விஷயம் மணம் புரியபோகும் ஆண் – பெண் இருவருக்குமே பிடிக்க வேண்டும் என்பது தான். உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் பிடிப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியாக இந்த மறுமண நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    ➢➢➢இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் :

    அந்த பெண்ணுக்கு 19 வயது தான். ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் அந்த பெண் இன்னும் வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் . நீங்கள் இதுவரை அண்ணி என்ற எண்ணத்தில் பழகி வந்து இருப்பீர்கள். அவரும் உங்களிடம் மைத்துனர் என்ற எண்ணத்தில் பழகி வந்திருப்பார். இனி இந்த சூழல் அடியோடு மாற வேண்டும். அண்ணி என்பதை மாற்றி மனைவி என்கிற அந்தஸ்தை முழுமையாகத் தர வேண்டும்.

    தொடக்கத்தில் குடும்பமும் சமுதாயமும் உற்றுப்பார்க்கும். அந்த பார்வையின் அர்த்ததை  புரிந்து கொண்டு ஒரு சில மாதங்கள் மிக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த பக்குவம் உங்கள் இருவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். இதில் எந்த அவசரமும் காட்டாமல் மற்றவர்கள் உங்களையோ அந்தப் பெண்ணையோ தப்பாக பேச வாய்ப்பு கொடுத்து விடாமல் பெற்றோர் மூலமாக நிதானமாக மறு திருமண நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

    திருமண வாழ்க்கையை விட மறுமண வாழ்க்கை சிறப்பானது . இருவரும் இணைந்து விட்டுக் கொடுத்து கருத்தொருமித்து வாழ்ந்தாலே அந்த சிறப்பை அடைய முடியும். இல்லாவிட்டால் சிரமமானதாகி விடும்.

     
     
     
     

    கேள்வி : 2
    நான்  பிளஸ் – 2 மாணவி. வயதுக்கு ஏற்றபடி அழகாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னை பாடாய் படுத்துகிறது. நான் இப்போதும்  படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறேன். இதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது. இதனால் நான் உறவினர் வீடுகளில் இரவு தங்குவது இல்லை. என்னை நினைத்து என் அம்மா ரொம்ப வருந்துகிறார். என் திருமணத்திற்கு பிறகும் கணவர் வீட்டில் இப்படி ஆகி விடுமோ எனப் பயமாக இருக்கிறது.?

    பதில் :
    சகோதரி உங்கள் கடிதத்தின் பதிலுக்கு சற்று பொறுத்திருங்கள். இதே கேள்வியை ஒரு சில சிறுவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக கேட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முதலில் பதில் தருகிறேன்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களை ஆறு வயதிற்கு முன், ஆறு வயதுக்கு பின் என்று  இரண்டு வகையாக பிரிக்கலாம். 6 வயதுக்கு முன்பு என்பது இயல்பானது. பெற்றோர் சற்று சிரமம் எடுத்து கவனித்தால் நிறுத்தி விடலாம்.

    சிறுவர்கள் படுக்க போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு பால் கொடுக்க வேண்டும். பின்பு அவர்கள் தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்க செய்யுங்கள். சிறுநீர் பை வற்றி விடும். அப்புறமாகத் துங்கட்டும். 15 நாட்கள் சிறுவர்களை தொடர்ச்சியாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்க வையுங்கள். அவ்வாறு செய்தால் இயல்பாகவே சிறுநீர் கழிக்கும் மூட் வந்தால் சிறுவன் தானாக எழுந்து அம்மா ஒண்ணுக்கு என்று சொல்லி விடுவான்.

    சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து படுக்கையை நனைத்தால் attention seeking  இயல்பாகக் கூட இருக்கலாம். குழந்தைகள் மீது அதிக கவனம் எடுத்து கொள்ளாத பெற்றோரை தன் பக்கமாக ஈர்த்து என்னையும் கவனியுங்கள். இல்லாவிட்டால் இப்படித்தான் நடந்து கொள்வேன் என்பது போல் செயல்படுவார்கள். இது தான் அட்டென்ஷன் சீக்கிங்.   தாய் மீண்டும் கர்ப்பிணியாதும் முதல் குழந்தைக்கு ஒரு வித பாதுகாப்பு குறைவு ஏற்படும். அந்த பயத்தில் சிறுவர்கள் படுக்கையை நனைப்பார்கள். இப்படிப்பட்ட சிறுவர்களிடம் தாய் அதிக பாசத்தைக் காட்டி எப்போதும் நீ என் அன்பு குழந்தை என்று உணர்த்தினாலே போதும். 6 வயதுக்கு பிறகும் படுக்கையை நனைத்தால் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

    17 வயது சகோதரியின் பெற்றோரே நீங்கள் அவளை திட்டவோ, மிரட்டவோ வேண்டாம் டாக்டரிடம் அழைத்து சென்று ஆலோசனை கேளுங்கள். இது மிகச் சாதாரண விஷயம்.

     

     

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • மன நல ஆலோசனை கேள்வி பதில்கள்

    கார்த்திகேயன்

    கேள்வி : 1

    எனக்கு வயது 17 ஆகிறது. நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறேன். என் வீட்டில் எல்லோரும் என்னை ஒரு வாயாடி என்றும் திமிர் பிடித்தவள் என்றும் சொல்கிறார்கள். நான் அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவேன். இதனால் என்னை சந்தேகத்துடன் பார்த்து இவளுக்கு கொழுப்பு என்கிறார்கள். மேலும் நான் சிரித்து சிரித்து பேசுவதால் என்னை அது ஒரு அரைக்கிறுக்கு என்று கூறுகிறார்கள். ஆனால் என் தோழிகளை நல்ல பெண் என்று  கூறுவார்கள். என்னை நல்ல பெண் என்று அனைவரும் சொல்ல வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    பதில் :

    ரொம்ப குழப்பமான மன நிலையாக தெரிந்தாலும் குழப்பம் ஒன்றுமில்லை. அது இயற்கையானது உனக்கு வயது 17 தான். இப்போது சிறுமி பருவத்தில் இருந்து மெச்சுரிட்டி பருவ நிலை வரும் வழியில் வளரிளம் பருவத்தில் நிற்கிறாய். இந்த இரண்டுங்கெட்டான் பருவத்தில் உனக்குள் தோன்றும் ஹார்மோன்கள் மாறுதல்கள் உன்னைக் குழப்பும். அதே நேரம் சமூகமும், நெருக்கமான உன் உறவினர்களும் உன்னை குழப்புவார்கள். எப்படி என்றால் ஒரு சமயம் உடம்புதான் வளர்ந்திருக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தால் உடனே பிள்ளை பெத்துக்குவே. ஆனா இன்னும் குழந்தை மாதிரி நடந்துக்கலாம் என்று நினைத்தால் வயதுக்கு தக்கபடி நடந்துக்கிறே, என்பார்கள் ஓகோ அப்படினா நாம் பெரிய பெண் மாதிரி நடந்துக்கலாம் என்று நினைத்தால் வயதுக்கு தக்கபடி நடந்துக்க பெரிய மனுஷி மாதிரி நடந்துக்காதே…….. என்பார்கள். ஒண்ணுமே புரியலையே….. இந்த உலகத்தில் நான் எப்படித் தான் நடந்து கொள்வதாம்? என்ற குழப்பம் உனக்கு மட்டுமல்ல சமூகத்தில் நிறைய 17 வயதுப் பெண்களுக்கு ஏற்படத்தான் செய்யும். இதில் ஒரு பகுவனிலை அடைய வேண்டுமானல் 19-20 வயது ஆக வேண்டும். உன் அக்கா, அம்மா எல்லோரும் உன்னைப் போன்றதொரு குழப்பகால கட்டத்தைத் தாண்டித்தான் வந்திருக்கிறார்கள்.

    நீ பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி இல்லை தோழி மாதிரி இல்லை என்றெல்லாம் உன்னைச் சொல்கிறார்கள். அப்படித்தானே. நான் கேட்கிறேன் நீ ஏன் உன் தோழி மாதிரி இருக்க வேண்டும்? நீ நீயாக உனக்கென்று தனித்தன்மை வாய்ந்தவளாக இருக்க வேண்டும் ஒருவர் உயரம், இன்னொருவர் குட்டை உயரத்தைப் போலவும் ஏன் ஆக வேண்டும் அது அவரவர் அளவு. உன் அம்மாவே நீ உன் தோழி மாதிரி இல்லை என்கிறார்கள். உன் அம்மாவும் உன் தோழியின் அம்மா மாதிரியா இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கும். இந்த வித்தியாசம் இயற்கை. இதை யாரும் யாருக்காவும் மாற்றிக் கொள்ள முடியாது.

    சுற்றி இருக்கிறவர்கள் எல்லோரும் உன்னை நல்லப் பெண் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். ஏன் அப்படி எதிர்பார்க்கிறாய்? அனைவரும் சொன்னால் தான் நீ நல்ல பெண்ணா? நீ நல்லதை செய்யும் போது உனக்குள்ளே இருக்கும் நல்லவைகளை நீ உணரும் போதே நீ நல்லப் பெண் தானே மற்றவர்களிடமும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று நினைத்து உன் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஒரு வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக  செய்து முடிக்கும் போது

    • நன்றாக டிரஸ் செய்யும் போது,
    • நன்றாக பேசும் போது,
    •  நன்றாக படிக்கும் போது,
    • மற்றவர்களிடம் நன்றாக நடந்து கொள்ளும் போது.

    என் மனதுக்குள் உன்னையே நீ அங்கீகாரம் செய். மகிழ்ச்சி அடை. நான் நன்றாக நடந்து கொண்டிருக்கிறேன் என பெருமிதம் கொள். இதன் மூலம் உன் சக்தி அதிகரிக்கும். நல்லவைகளைச் செய்யும் ஆற்றல் தோன்றும். அப்போது பலரும் பாராட்டித்தானே ஆக வேண்டும்.

    கேள்வி : 2

    என்னை ஒருவன் காதலித்தான். நானும் அவனைக் காதலித்தேன். என் அப்பாவும் அம்மாவும் அதற்கு சம்மதித்தனர். பிறகு அப்பாவும் அண்ணனும் அவனைப் பற்றி வெளியே விசாரித்தனர். பிறகு அவனைப் பற்றி விசாரித்த தகவல்களை என்னிடம் தெரிவித்தனர். அவன் நடவடிக்கை எதுவும் சரியில்லை எனவும் அவனிடம் இவ்வுலகின் அனைத்து கெட்ட பழக்கங்களும் இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தனர். இதனால் அவனை மறந்து விடும்படி சொன்னார்கள், நானும் என் பெற்றோரின் சொல்படி அவன் உறவை முறித்து விட்டேன். மேலும் எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவருக்கு திருமணம் முடித்த பின் எனது திருமணம் நடக்கும். நான் காதலித்தவனால் ஏகப்பட்ட பிரச்சனைகள். போன் செய்து நான் கல்யாணம் செய்து கொண்டால் அவனைதான் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறான்.. இதுவரை எந்தத் தப்பான விபரீதமும் நடக்கவில்லை.  நான் என்ன செய்ய வேண்டும் என்று நல்ல பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    பதில் :

    உங்கள் முடிவுக்குத் தெளிவான பாராட்டுக்கள். கண்மூடித்தனமாகக் காதலித்து ஏமாறாமல் சரியான தருணத்தில் முடிவு எடுத்துள்ளீர்கள். இப்படிப்பட்ட மோசமானவனை நீங்கள் சந்தித்தது உங்கள் துரதிர்ஷ்டமே. அவனுடைய மிரட்டலுக்கு நீங்கள் எக்காரணம் கொண்டும் பணிந்து விடக்கூடாது. அவனால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிலையை தெளிவாக எடுத்துக் கூறி அவர்கள் மூலம் இப்பிரச்சனையை நீங்கள் கையாள்வதே நல்லது. உங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். உங்களைப் போன்ற துணிச்சலான பெண்களால் தான் இப்படிப்பட்டவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்.

    கேள்வி : 3

    என்னுடைய தோழியின் வயது 22. அவள் எப்போதும் வாயில் விரல்களில் வைத்து இரண்டு கைகளையும் மாறி மாறி நகத்தையும் சதையையும் கடித்துத் துப்பிக்கொண்டே இருக்கிறாள். இதை நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இந்த கெட்டப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? ஆகவே இந்தப் பழக்கத்தை அவள் கைவிடுவதற்கான வழிகளை சொல்லுங்கள்?

    பதில் :

    நகம் கடிக்கும் பழக்கம் உங்கள் தோழிக்கோ உங்களுக்கோ யாருக்கு இருந்தாலும் எளிதாக விட முடியும். அதற்கு முதல் வேலை அதென்ன கெட்டப் பழக்கம் இதை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் தான். இன்று முதல் ஒரு நாள் எத்தனை முறை நகங்களை கடிக்கிறீர்கள் என்று நீங்கள் எண்ண வேண்டும். எவ்வாறான நேரங்களில் கடிக்கிறீர்கள் என்பது தெரிய வேண்டும். ஆனால் எண்ணிக்கை சூழ்நிலை இரண்டையும் குறிப்பெடுக்க முன் வாருங்கள். எண்ணிக் கொண்டிருக்கும் போதே சிலர் அப்பழக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவார்கள். விடுபடாதவர்கள் மொத்த எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு அந்த செயல் மீதே வெறுப்பு கொள்வார்கள். உங்கள் விரல்களுக்கு சற்று அதிக வேலை கொடுங்கள் எழுதுவது, பெயிண்டிங் செய்வது, மெகந்தி போடுவது, தையல் பயிற்சி பெறுவது இப்படிப்பட்ட வேலைகளில் விரலுக்கு வேலை இருக்கும். கடிக்க விரலும் கிடையாது, ஒய்வாக இருக்கும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வது இதில் கொஞ்சம் உச்சக்கட்டம்

    பொதுவாக ஒரு விஷயம் நகம் கடிக்கிறவர்களிடம் மனக் குழப்பம் அதிகம் இருக்கும் அமைதி இராது. பதட்டம் அடிக்கடி வரும் பதட்டமான நேரங்களில் அப்படியே விரல்களை வாய்க்குள் கொண்டு போய் நகங்களை கடி கடி என கடிப்பார்கள். மன அமைதி இன்மைக்கு என்ன காரணம் என்று பார்த்து அமைதி தேடுங்கள். இப்படியே அடிக்கடி கடித்தால் அழுக்கும் நகத்துண்டுகளும் வயிற்றுக்குள் போய் வயிற்றுப் பிரச்சனையை உருவாக்கப் போகிறது. வாய்க்குள் சுவையான எதையாவது போட்டு மெல்லவோ, சுவைக்கவோ செய்தால் நகம் கடிக்கும் பழக்கம் குறையும்.

    சிறு வயதில் பெற்றோரிடம் அதிகம் ஒட்டாமலும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருக்கும். குழந்தைளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் வருகிறது. கை சுவைத்தல், படுக்கையில் சிறு நீர் கழித்தல் போன்றவையும் இது போன்றதே.

    Share
  • மன நல ஆலோசனை – கேள்வி பதில்கள்

    கார்த்திகேயன்

    கேள்வி : 1

                           என்னுடைய வயது 26. 15 வயதிலேயே என் பெற்றோர் இறந்து விட்டனர். என் உறவினர் வீட்டில் வளர்ந்து கல்லுரி படிப்பு வரை முடித்தேன்.எப்போதும் நான் தனி அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பேன். யாரிடமும் பேச மாட்டேன் என்னை குடும்பத்திலே ஒரு சிலர் அன்னியர் போல பாவிக்கின்றனர். இதனால் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லை பாதுகாப்பு உணர்வும் இல்லை. என் மேல் பிரியமாக இருந்த என்னுடைய தாத்தா ஒரு வருடத்திற்கு முன்பு  மாரடைப்பால் இறந்தார். அதிலிருந்து எனக்கு மாரடைப்பு புற்று நோய் வந்து விடுமோ என்ற பயம் வந்தது. டாக்டரிடம் போனேன் அவர் என் பயத்தைப் புரிந்து கொண்டு எல்லா சோதனைகளையும் செய்து விட்டு , எனக்கு உடல் ரீதியாக எந்த கோளாறும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் எனக்கு பயம் நீங்கவில்லை. நான்  பயம் இன்றி வாழ்வது எப்படி?

    பதில் 

                                  எப்போதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் நீங்கள் அனாவசிய பயத்திற்கு உள்ளாகிறீர்கள். மற்றவர்கள் நம்மிடம் எப்படிப் பழகுகிறார்கள் என்பது நாம் எப்படி மற்றவர்களிடம் பழகுகின்றோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. நீங்கள்  அன்பாக மற்றவர்களுடன் பழகி அவரவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால் உங்களை யாரும் அன்னியராகப் பார்க்க மாட்டார்கள். உங்கள் மேல் பிரியமாக இருந்த தாத்தாவைப் பற்றிய எண்ணம் சுழன்று கொண்டிருப்பதால் நீங்கள் அதிகமாக யாருடனும் பேசாமல் ஒரே அறையில் முடங்கிக் கிடப்பதாலும் உங்கள் தாத்தாவின் இறப்பிற்குக் காரணமான மாரடைப்பு நோய் பற்றி நீங்கள் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்கள். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட நோயைப் பற்றி அதிகமாக யோசிக்கும் போது நமக்கே அந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்கின்ற பயம் ஏற்படுவது இயல்பு தான். இன்னமும் சொல்லப் போனால் மருத்துவம் படிக்கும் மாணவர்களே கூட பேத்தாலஜி எனப்படும் நோயியல் பாடம் படிக்கும் போது அதில் சொல்லப்படுகின்ற நோய்கள் நமக்கும் இருக்கின்றனவா? என்ற குழப்பத்திற்கு உள்ளாவதுண்டு. எனவே கவலையை விடுங்கள் எல்லோரிடமும் கலந்து பேசிப் பழக ஆரம்பியுங்கள் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதற்கு அல்ல.

    கேள்வி : 2

                                என்னுடைய பையனுக்கு தற்போது வயது 8 ஆகிறது. இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்குச் செல்கிறான். வீட்டில் அமைதியாக இருப்பான். ஆனால் நண்பர்கள் உறவினர் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள பொருட்களை எடுத்து விளையாடச் செய்கிறான் பெரும்பாலும் உடைத்து விடுகிறான் அவன் செயலை தடுக்க முற்பட்டால் ரொம்ப அடம் பிடிப்பான் இதனால் நான் பெரும் மன வேதனை அடைகிறேன் அவனை எப்படி கட்டுப்படுத்துவது?

    பதில் : 2

    இந்த பிரச்சனைக்காக நீங்கள் அதிக கவலைப்பட வேண்டியதில்லை. 8 வயது மகனிடம் உங்களின் மனப்பக்குவத்தை எதிர்பார்க்கக் கூடாது. சிறுவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களைப் பக்குவமாகத் திருத்த வேண்டும். அது எளிது.

                         வீட்டில் அவன் அடங்கி இருப்பதால் அவன் மனதளவில் அடங்கி இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை. வீட்டில் பொருட்களை உடைத்தால் அடி கிடைக்கும் என்று அவன் தண்டனைக்கு பயந்து அடக்கமாக இருக்கிறான். வெளியே சென்றால் வீட்டில் செய்ய முடியாததைச் செய்யலாம் என நினைக்கிறான். அங்கே நாகரீகம் கருதி அவனை தண்டிக்க முடியாது என கருதுகிறான். ஒரு வேளை நீங்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனையால் உங்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் இப்படி பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறாளே என்ற குறை உங்கள் மீது விழட்டும் என்று கூட அவன் இதைச் செய்யலாம். உங்கள் மகனிடம் அடக்கம் ஒடுக்கமாக இருப்பது நல்ல பண்பு வீடு, வெளி இடங்களுக்கு  எங்கு சென்றாலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று பக்குவமாக எடுத்து கூறுங்கள். அவனை மிரட்டாமல் ஏன் பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை அமைதியாக விளக்கி என்பதையும் அடுத்த வீட்டிற்கு போய் பொருட்களை உடைப்பதால் அவர்களுக்கும் நமக்கும் ஏற்படும் சிரமங்களையும் உணர்த்துங்கள். இந்தக் குறையை வளர விடாமல் இப்போதே சரி செய்து விடுங்கள்

    கேள்வி : 3

                     என் வயது 40. சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறேன். எனக்கு பணம்பெரிய விஷயமில்லை. நான் பாசத்திற்காக ஏங்குபவள். எனக்கு பாதுகாப்புக்கு இருக்கும் ஒரே ஜீவன் என் தாய் .அவருக்கு 65 வயது. நான் இவ்வளவு பெரிய நிலைக்கு வருவதற்கு நான் பட்ட சிரமம் எனக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள் ஏராளம். நான் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை இழந்து விரக்திக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த போதெல்லாம் என் மீது ஒரு சுடு சொல் கூட பேசாமல், கண்னை மூடி ஆதரித்து ஏற்றுக் கொண்டு என்னை ஆளாக்கிய என் தாய் இப்போது மறதியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அரை மணி நேரத்திற்கு முன்பு சொன்னதை கூட மறந்து விடுகிறார். பொருட்களை வைக்கும் இடத்தை மறந்து விடுகிறார். எதிலும் விருப்பம் இல்லாமல் யாரிடமும் பேசாமல் இருக்கிறார். சொந்தமாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரின் இறுதி காலம் வரை அவரை ஒரு குழந்தை போல் வைத்து பராமரிக்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    பதில் : 3

    உங்கள் தாய் மீது பேரன்பு வைத்திருக்கிறீர்கள். மறதி நோய்க்கு சிறந்த மருந்து அன்பு காட்டுதல் தான்.அதுவே உங்களிடம் அதிகம் இருப்பது உங்கள் அம்மாவுக்கு பலம்.தொடர்ந்து எக்காரணம் கொண்டும் அந்த பாசத்தில் குறைவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளிக்காட்டும் பாசம் அவரால் உணரப்பட வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்கது. அவரால் என்னென்ன வேலையைச் செய்ய முடியும் என்பதை பகுத்து உணருங்கள். செய்ய முடியும் என்கின்ற வேலையை அவர் செய்யட்டும் முடியாததை வற்புறுத்த வேண்டாம். தினமும் அவரிடம் பொறுமையாகப் பேசுங்கள். அவர் சொல்வதை எல்லாம் கேளுங்கள். கோபம் கொள்ளவோ எதிர்த்துப் பேசவோ வேண்டவே வேண்டாம். அவரது மறதியை குறையாக வேறு யாரிடமும் பேசி விடக்கூடாது. அப்படி நீங்கள் பேசி அவர் காதில் விழுந்தால்  மறதி நோய் போய் அதிகப்படவே செய்யும். அவரது நினைவாற்றலை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். வயதுக்கு ஏற்ற உணவை சரியான நேரத்தில் வழங்கி விடுங்கள். அவரது விருப்பங்களை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். தனியாக எங்கேயும் விட வேண்டாம். இவை அனைத்தும் பொதுவான பராமரிப்பு விசயங்கள். மேற்கொண்டு குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் நேரடியாக அணுகுங்கள்.

    Share
  • மன நல ஆலோசனை கேள்வி பதில்கள்

    கார்த்திகேயன், விமலதாரணி

    கேள்வி :1

                        நான் 17 வயது மாணவி.  கிராமத்துப் பள்ளியில் பயின்றவள் தற்போது நகரத்தில் பயில்வதால் எனக்கு பாடம் மிகவும் கடினமாக உள்ளது. எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாததை கேட்டால் அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். என்னை பொருட்படுத்த மாட்டேங்கிறார்கள். ஏனெனில் நான் மட்டும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவி. டியுசன் வைக்கவும் வீட்டில் வசதி இல்லை. நான் தனித்து விடப்பட்டது போல் உணருகிறேன். என்னுடன் சாப்பிடுவதற்குக் கூட தோழிகள் இல்லை கல்லூரியில் இப்படி இருப்பதால் வெளி இடத்திலும் பேசுவதற்குக் கூச்சமாகவும் நடுக்கமாகவும் இருக்கிறது. நான் என்ன செய்வது?

    பதில்

    வாழ்க்கை வாழ்வதற்கு தான். வாழ்க்கையைக் கண்டு பயப்படும் பெண்ணால் வாழ்க்கையை ரசிக்க முடியாது, வெல்லவும் முடியாது. சின்ன விஷயமானாலும் சரி, பெரிய விஷயமானாலும் மோதிப் பார்த்துவிட வேண்டும் ”என்னாலும் முடியும்” என்ற தைரியத்தோடு களத்தில் இறங்கி விட வேண்டும். மொழி என்பது நாம் நம் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் கருவி. ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். சுலபமாக எளிமையாக ஒரு மொழியில் பேச வேண்டுமென்றால் முதலில் அம்மொழியில் சிந்திக்கத் தொடங்க வேண்டும். அப்போது தான் அந்த மொழியில் சரளமாகப் பேச முடியும். உங்களின் எண்ண ஒட்டம் தமிழில் இருந்தால் எதிரே நிற்கும் நபரிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது சிரமம். பேச்சில் சரளம் இல்லாமல் திக்கித் திக்கி திணறவேண்டி வரும். காரணம் பேசுவதற்கு முன்னால் உங்களை அறியாமல் உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பு நடந்து கொண்டிருக்கும். இது சிரமத்தை ஏற்படுத்தும் . ஆங்கிலத்திலேயே பேச விரும்புவதால் அந்த மொழியிலேயே சிந்தனை ஓட்டத்தை உருவாக்குங்கள்.

                             உங்கள்தோழியிடமும் ஆங்கிலம் தெரிந்த உறவினர்களிடமும் தப்பு, தவறு என்று பார்க்காமல் ஆங்கிலத்தில் பேசிப் பழங்குகள். தப்பாக பேசினாலும் பரவயில்லை . அதை மற்றவர்கள் பரிகாசம் செய்தாலும் பொருட்படுத்தாதீர்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள் தினமும் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கடிதத்தில் ஒரு விஷயம் என்னை யோசிக்க வைக்கிறது. ஆங்கிலம் தெரியாததால் மட்டுமே உங்களுக்கு இந்த பாதிப்பு இல்லை. எனென்றால் அன்பு, நட்பு எல்லாம் மொழிக்கும் அப்பாற்பட்டது. மொழி தெரியாததால் தோழிகள் கிடைக்காமல் தனிமையை அனுபவிப்பதாகக் கூறுவது தவறு. உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அதனால் உங்களையே நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள் . தாழ்வு மனப்பான்மையை கண்டறிந்து அதனை விலக்குங்கள்.

    கேள்வி: 2

                         எனக்கு 30 வயது ஆகிறது. எனது தந்தை மிகவும் கண்டிப்பாக நடத்தியதால் எனது 10 வயதில்  இருந்தே மனதில் ஒருவித பயம் தோன்றி விட்டது. எனக்கு பேச்சு திக்கித் திக்கி வரும். புது ஆட்களிடமும், பெரிய மனிதர்களிடமும் பேச முற்படும் போதெல்லாம் ஒரு வித படபடப்போடு, கை கால்களும் மிகவும் குளிர்ச்சியடைகிறது. இதை எப்படிப் போக்குவது?

    பதில் :

    சிறு வயதின் பாதிப்புகள் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிக்கும் வல்லமை பெற்றவை தான். ஆனால் முதலெழுத்து கோணி விட்டதால் கடிதமே கோணலாய் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான வலிமை உள்ளது.

    இங்கே உங்களுக்கு எற்பட்ட பாதிப்புக்கு அதிக கண்டிப்புடன் உங்களை வழிநடத்திய தந்தை காரணமாய் இருந்திருக்கிறார். நாளடைவில் தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் விசுவரூபம் எடுத்து உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வை திருத்தி அமைக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க உங்களுடையது தான். திக்கு வாயால் வாழ்க்கையை ஆரம்பித்த சிலர் இன்று தலைசிறந்த மேடை பேச்சாளர்களாய் இருப்பது நாம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கும் உண்மை. முதலில் உங்கள் பயத்தைப் போக்கி  தன்னம்பிக்கையை  வளர்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் தந்தையை உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை உங்களிடம் எதிர்பார்த்து அது நிறைவேறாமல் போன போது உங்களிடம் கோபம் கொண்டிருக்கலாம். இப்போது நீங்கள் உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம். உங்கள் சக்திக்கு உட்பட்ட இலக்கை நீங்கள் அடையும் போது உங்கள் மனதிற்கு அது புது தெம்பைக் கொடுக்கும். தினமும் காலை எழும் போது உங்கள் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு நீங்கள் வழிபடும் கடவுளிடம் இன்று எனக்கு பிரச்சனை எதிர் நோக்கும் பலத்தைக் கொடு என்று முழுமனதுடன் வேண்டிக் கொள்ளுங்கள் . புதிய சூழ்நிலைகளை எதிர் கொள்ள அது துணையாய் இருக்கும். நண்பர்களிடம் அதிகமாகப் பேசுங்கள். விவாதங்களில் ஈடுபடுங்கள். உணர்ச்சி வசப்படும்போது திக்குவதை பொருட்படுத்தாமல் பேசுங்கள். பயத்தால் ஏற்படும் பலகீனத்தால் தான் உங்கள் உடல் குளிர்ச்சியடைகிறது. தேவைப்பட்டால் மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையும் பெறுங்கள்

    கேள்வி 3

                       நான் 28 வயது பெண். வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். பலரும் பாராட்டும்படி படித்தேன். நான் படித்து முடித்ததும் தகுதி அடிப்படையில் நல்ல வேலை கிடைத்தது. அன்றும் இன்றும் எனக்கு பணத்திற்கும், அழகிற்கும்,  அந்தஸ்திற்கும் குறைவில்லை. என் தோழிகளாகட்டும் என்னோடு வேலை பார்ப்பவர்களாகட்டும் நம்ம ’சுஜா கொடுத்து வைத்தவள்’ என்று என் காது படவே பேசுகிறார்கள். ஆனால் நானோ எதையோ இழந்தவள் போல மகிழ்ச்சி இல்லாத நிலையில் இருக்கிறேன். பணி முடிந்து திரும்பும்போது எனது காரை  எங்கேயாவது நிறுத்தி விட்டு சாலை ஓரத்து குடிசைகள் வழியாக நடக்கிறேன். அவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நானும் சராசரி பெண்களைப் போல மகிழ்ச்சியாக இருக்க வழி சொல்லுங்கள்.

    பதில்

    இன்றைய இயந்திரமான வாழ்க்கையில் பலரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயத்தை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதாவது இன்று பலரும் பணம் அந்தஸ்து அழகால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை இருந்தால் கூட மகிழ்ச்சி இல்லை என்பதை நீங்கள் உணர்த்துகிறீர்கள். இன்னொரு விஷயம். நடைப்பாதை குடிசைவாசிகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்கள் நினைப்பது எப்படி சரி இல்லையோ அது போல அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைப்பதும் சரியல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவுக்கு பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்கும். அதனை  எதிர்கொண்டு அதையும் மீறி ஆங்காங்கே இருக்கும் மகிழ்ச்சியான வாய்ப்புகளைக் கண்டறிந்து அதனை அனுபவித்து யார் நிம்மதி அடைகிறார்களோ அவர்களுக்கே மகிழ்ச்சி கிடைக்கிறது. நீங்களும் உங்கள் அளவில் இருந்து கொண்டு மகிழ்ச்சி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    உங்கள் சாதனைகளை சத்தமாக வெளியே சொல்லுங்கள். சறுக்கி விழுந்ததை மறந்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள் மனதில் எதையும் மூடி வைக்காதீர்கள். உற்சாகமாக இருங்கள் மகிழ்ச்சி தானே வரும்.

    Share
  • மனநல ஆலோசனை கேள்வி பதில்கள்

    கேள்வி :1

    நான் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் என் வகுப்பில் ஒரு பெண் எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதனால் நான் மிகவும் தவிப்பாக உணர்கிறேன். அவள் பாடத்தைக் கவனிப்பதில்லை. அவளால் நானும் பாடத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறேன். இது காதலாக மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது. என் எதிர்கால கனவுகளும் இதனால் பாதிக்கப்படுமோ என்றும் பதட்டமாக இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    பதில் :

    நீங்கள் பதட்டப்படுவதை தவிர்த்து ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். உங்கள் வயதில் இந்த மாதிரி எதிர் பாலினத்தால் கவரப்படுவதும் இந்த உணர்வுகளும் இயல்பானது தான். அந்தப் பெண் உங்களை பார்க்கிறாள் என்பதே நீங்கள் அவளை பார்ப்பதால் தானே உங்களுக்குத் தெரிகிறது. நீங்களும் அவள் பால் கவரப்பட்டிருக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த உணர்வுகள் இயற்கையானது தான் எல்லோருக்கும் உள்ளது தான் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

             அடுத்து இம்மாதிரி கவரப்படுவது காதலில் முடிந்து விடுமோ இதனால் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்பதெல்லாம் உங்கள் பதட்டத்தினால் ஏற்படும் பயம்.இது தேவையில்லை. உங்கள் உணர்வுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் உங்களை மீறி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அந்தப் பெண்ணுடன் மற்ற பெண்களுடன் பேசுவது போல் சகஜமாக பேசுங்கள். உங்கள் லட்சியத்தில் உறுதியாக இருங்கள். இப்போதைய உங்கள் கடமை நன்றாகப்  படிப்பது என்பதில் தெளிவாக இருங்கள். அந்தப் பெண்ணுடன் சகஜமாக பழக ஆரம்பித்தாலே தேவையற்ற இந்த சஞ்சலம் போய் விடும்.

    கேள்வி : 2

                என் மகனுக்கு வயது 5. அவன் மிகவும் புத்திசாலி. எதைப்பார்த்தாலும் அதைப்பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து விடுவான். நான் ஓரளவிற்கு அவன் கேள்விக்கு பதில் சொல்லி விடுவேன். இப்போதெல்லாம் நான் எப்படி பிறந்தேன்  என்று கேட்கிறான். அவனது பிறப்புறப்பை காட்டி விளக்கம் கேட்கிறான். இம்மாதிரி கேள்விகளுக்கு அவனுக்கு எப்படி பதில் சொல்வது?

         குழந்தைகள் வளரும் வயதில் இப்படி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பது நல்லது. அவர்களுக்கு முடிந்த வரை உண்மையான பதில்களைத் தான் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியாத கேள்விகளுக்கு எனக்கு தெரியவில்லை கண்டுபிடிச்சி சொல்கிறேன் என்று கூறி எங்காவது பதிலை கண்டுபிடித்து சொல்லுங்கள். அதுவே நீங்கள் தவிர்க்க விரும்பும் கேள்வியாக இருந்தால் அதற்கு மறைமுகமான பதில்களைக் கூறுங்கள். என் வயிற்றுக்குள் தான் நீ இருந்த அப்புறம் டாக்டர் உன்னை வெளியே எடுத்துக் கொடுத்தாங்கன்னு சொல்லலாம். கர்ப்பிணி பெண்களின் புகைப்படத்தைக் காட்டி விளக்கலாம். மேலும் பிறப்புறுப்புகளை நாம் எப்போதுமே மூடி வைத்து அதை ரகசியமான ஒன்றாக சொல்லி வைப்பதாலும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருக்கும். மற்ற உறுப்புகளைப் போல் அதுவும் ஒன்று. அதன் வேலை சிறுநீர் கழிப்பது என்று விளக்குங்கள் .உண்மையான பதிலையே நீங்கள் குழந்தைகளுக்கு கூறலாம். குழந்தை ஜட்டி போடாத போது அதை கேலி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    கேள்வி: 3

    எனக்கு இப்போது வயது 48. 30 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. குடும்ப வாழ்க்கை இவ்வளவு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி இல்லை. எனக்கு வாலிப வயதில் சுய இன்ப பழக்கம் இருந்தது. இப்போது தாம்பத்தியத்தில் இன்பம் அடைய வழி சொல்லுங்கள்

    பதில்:

    கடந்த 18 வருடங்களாக உங்கள் தாம்பத்ய உறவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. தற்போது உங்களுக்கு 48 வயது என்பதால் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சமயம்  (மெனோபாஸ்) போல் ஆண்களுக்கும் ஏற்படும் (ஆண்ரோபாஸ்). இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் தாம்பத்ய உறவில் நாட்டம் குறைவது, விறைப்புத் தன்மை குறைவது, சீக்கிரம் விந்து வெளிப்படுவது போன்றவைகளும் இருக்கலாம். சுய இன்ப பழக்கத்திற்கும் தற்போதைய நிலைக்கும் சம்பந்தம் இல்லை. பதட்டம் இல்லாமல் இருந்தால் தானாகவே இப்பிரச்சனை சரியாகும்.பிரச்சனை  தொடர்ந்தால் முறையான மருத்துவரை (செக்சாலஜிஸ்ட்) அணுகுங்கள்.

    Share
  • மன நல ஆலோசனை

    மன நல ஆலோசனை

    கேள்வி பதில்கள் :

    கேள்வி : 5

    எனது தோழி என்னைச் சில காலம் அண்ணா என்று அழைத்தாள். நானும் அப்படியே இருந்தேன். ஆனால் போகப் போக எங்களுக்குள் அன்பு அதிகமாகி ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய முடியாத வண்ணம் உள்ளோம். ஆனால் நண்பர்கள் வட்டாரத்தில் எங்களை அண்ணன் தங்கை என்று நம்புகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?

    பதில் :

    புதிதாய் பார்த்துப் பழகும் ஒருவரை முறை சொல்லி அழைப்பது நம் கலாச்சாரம். என்றாலும் முறைக்காக அழைப்பது உணர்வு ரீதியாக அப்படியே  இருப்பதில்லை. உங்கள் இருவரின் உணர்வுகள் காதலாக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறொன்றுமில்லை. உங்கள் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து கொடுத்து இருவரும் உங்கள் நிலையை  அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். புரிந்து கொள்பவர் நண்பர்களாக தொடரட்டும். புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை உண்மையாக புரிந்து கொள்வதே முக்கியம்.

    கேள்வி : 6

    நானும் என் கணவரும் வேலைக்குப் போகிறோம். என் 8 வயது மகன் உறவுக்காரப் பெண் ஒருவரின் பராமரிப்பில் இருக்கிறான். அந்தப் பெண் எங்கள் வீட்டோடு இருக்கிறாள். அவள் என் மகன் வீட்டிலிருந்து பணத்தைத் திருடுவதாகக் கூறினாள். ஒரு நாள் இதை நானும் கண்டுபிடித்தேன். அவனிடம் இதைப் பற்றி கேட்டு கண்டிக்கலாமா? கண்டித்தால் பிரச்சனை அதிகமாகுமா?

    பதில் :

    குழந்தை பணத்தை எடுத்ததை தெரிந்து கொண்டு உடனடியாக அவனை அடித்தோ, திட்டியோ கேட்காமல் இருந்ததிலிருந்து உங்களின் பக்குவமான மனப்பான்மை தெரிகிறது. இதே பக்குவத்துடன் குழந்தையிடம் மென்மையாக தனிமையில் இதைப்பற்றி கேளுங்கள். பணம் அங்கே இருக்கிறது எனவே எடுத்துக் கொண்டேன் என்பதாக அவன் பதில் இருந்தால் பணத்தை ஆங்காங்கே போட்டு வைப்பது உங்கள் தவறு. தெரியாமல் எடுத்திருந்தால் அது திருட்டு அப்படி செய்யக் கூடாது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அவன் எதற்காக எடுக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டு அவன் தேவையை நீங்களாக பூர்த்தி செய்யுங்கள். குழந்தைகள் பணத்தைத் தானாகக் கையாள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவனுக்குப் புரிய வையுங்கள். அவன் செய்வது தவறு ஆனால் அதை மாற்றிக் கொள்ளலாம் என்பதை அவனுக்கு பக்குவமாகப் புரிய வையுங்கள். போதுமான அன்பு கிடைக்கவில்லையென்றாலும் கூட சில குழந்தைகள் பெற்றோருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய முற்படும். எனவே அவனுடன் அதிக நேரத்தை செலவு செய்யுங்கள். அன்போடு கூறினால் குழந்தைகள் சுலபமாக திருந்தி விடுவார்கள்.

     கேள்வி :7

    என் குழந்தை (வயது 3) வீட்டில் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான். தொல்லை செய்து அடித்துதான் ஊட்ட வேண்டியுள்ளது. அதுவே உறவினர் நண்பர் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கு எதைக் கொடுத்தாலும் அலைந்து சாப்பிடுகிறான். இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

    பதில் :

    நீங்கள் அவமானமாக  நினைப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. குழந்தைகள் வீட்டில் சாப்பிடும் போது பொதுவாக ஒரே மாதிரியான உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். உங்கள் ரசனை  மற்றும் தேவைக்கேற்ப உணவை சமைத்து அதை ஊட்டுவீர்கள். அது குழந்தைகளுக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் வெளியில் செல்லும் போது வெளியே செல்கிறோம் என்ற குஷியான மன நிலையில் குழந்தைகள் இருப்பார்கள். மற்றொன்று  மற்ற வீடுகளில் அவர்களின் உணவு மற்றும் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருக்கும் போது குழந்தைகள் அதை விரும்பி உண்பார்கள். எவ்வளவு விலையுர்ந்த பொம்மையாக இருந்தாலும் சிறிது நாளில் தூக்கிப் போட்டு விட்டு உடைந்து போன பழைய பொம்மைக்காக குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் வளரும் வயதில் புதிது புதிதாய் கற்கவும் அனுபவிக்கவும் விரும்புவார்கள். எனவே குழந்தையின்  ரசனைக்கேற்ப உணவை வித்தியாசமாக தயாரித்து வித விதமாய் பரிமாறுங்கள். நிறைய பளிச்சென்ற நிறங்கள் உணவில் (காய்கறிகள், பழங்கள், பருப்புகள் மூலம்) இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வடிவங்களை வித்தியாசமாக (வடை, சப்பாத்தி வட்டமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?) செய்து கொடுங்கள். குழந்தைகளுக்காக சிறிது மெனக்கெட்டால் போதும், ”என் அம்மா கொடுத்தா தான் சாப்பிடுவேன்” என்று உங்கள் குழந்தை சொல்லும்.

    Share