நீல நிறம்.. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்..
கவிஞர் காவிரிமைந்தன்
மொத்தத்தில் இந்தப்பாடல் முத்தமிழ் விருந்து!!
ஆணும் பெண்ணும் இணைந்து பாடும் ஜோடிப் பாடல் என்பது ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம்பெறுவது இயல்புதான். கவிஞர்களின் கற்பனைத் திறம், சொல்லாட்சி இவைகளுக்கு களமாக அமைவதும் இப்பாடல்கள்தான்! அதுவும் இயல்பான காட்சியமைப்புகளையும் மீறி.. கனவுக்காட்சிகளாக அமையும்போது பாடலில் ஏற்படும் ஈர்ப்பு அதிகமே!!
குறிப்பாக.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படத்தில் இதுபோன்ற கனவுக்காட்சிகளும் பாடல்களும் மிகப் பிரபலமான காலக்கட்டத்தில் அவர்தம் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடலும் தேனாமிர்தம்! கானாமிர்தம்! ‘என் அண்ணன்’ திரைப்படத்தில் கண்ணதாசன் வார்த்தைகள் வழங்க.. கே.வி.மகாதேவன் இசையில் முகிழ்த்து வரும் பாடலிது!
காதலில் நடக்கும் இந்த ஆராய்ச்சிகள் கற்பனையின் உச்சங்களா? இயற்கையை உவமித்து இவர் காட்டியிருக்கும் எழில் ஓவியங்கள் இன்பத்தமிழ் நாட்டியங்களா?
இலை மறை காய் விஷயங்களை நயமாய் எடுத்துரைக்கும் கவிஞரின் சாதுரியம் சபாஷ் போட வைக்கிறது! விரசமில்லாமல் நடக்கும் காதல் விருந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே!
கண்ணனின் நீலம் கடல் நீலம் என்று கார்மேகவண்ணனைப் பாடிய கண்ணதாசன்.. காதலியின் கண்களிலும் நீலத்தைக் கண்டுபிடித்ததை அப்பட்டமாகச் சொல்லும் அட்டகாசமான பாடல்!
டி.எம்.செளந்திரராஜன் எஸ்.ஜானகி கூட்டணியில் காலங்களைத் தாண்டி இன்றும் நம் காதுகளை கெளரவப்படுத்தும் பாட்டு!
கோயிலின் சிலைகள்.. நதியின் வளைவுகள் எல்லாமே கவிஞர் கைவண்ணத்தில் மிளிருகின்றன.. மொத்தத்தில் இந்தப்பாடல் முத்தமிழ் விருந்து!!
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
(நீல நிறம் )
இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
(நீல நிறம் )
கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுரக் கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா
(நீல நிறம் )