‘விலை’நிலங்கள் – நெருங்கி வரும் ஆபத்து
சித்திரை சிங்கர்
கிராமங்களுக்கு அழகு சேர்ப்பவை அங்குள்ள வயல்களும் வரப்புகளும் மட்டுமே. அப்படிப்பட்ட விளைநிலங்களை விலை நிலங்களாக்கும் முயற்சி, கிராமப்புறங்களிலும் தொடங்கி உள்ளதை நாம் அறிவோம்.
வறண்ட பூமி காரணமாக விளை நிலங்கள் “விலை” நிலங்களாக மாற்றுவது ஒரு புறம் என்றாலும் பல இடங்களில் நில உரிமையாளர்களின் சரியான பராமரிப்பு இல்லாமலேயே..! இன்னும் மனம் திறந்து சொன்னால் விவசாயிகளின் வாரிசுகள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால் விவசாயத்தையும் தங்கள் குடும்பத்தையும் கவனிக்க யாரும் இல்லாத காரணத்தால் விளைநிலங்களை “விலை” நிலங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவத்திற்கு இளைஞர்களை அரசாங்கம் திரட்டுகிறது. விவசாயிகளின் நலன் காக்க விளைநிலங்களின் நலன் காக்க, ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தில் இருந்தும் ஒருவர் கண்டிப்பாக விவசாயப் பயிற்சி பெற வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு சட்டமாக இயற்ற வேண்டும். மேலும் நாட்டில் விவசாயக் கல்விமுறையை ஊக்குவிக்கச் சிறப்புச் சலுகைகளை வழங்க அரசு முன் வர வேண்டும்.
இத்தகு மாற்றங்களுக்கு உதவிட, விவசாயிகள் தங்கள் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுகள் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக் கண்டிப்பாக விவசாயம் சார்ந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள விவசாய நிகழ்வுகளை அறிந்துகொள்ள முன் நிறுத்துதல் முக்கியம்.
நாட்டின் பாதுகாப்புக்கு விவசாய நிலங்கள் “விலை நிலங்களாக” மாறாமல் இருப்பதும் முக்கியம்.