காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனிருக்கும். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கைக் கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்துச் செயலாற்றும், சுய தொழில் புரிபவர்களுக்குப் புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும். பெற்றோர்கள் குழந்தைகளைக் கவனமுடன் பார்த்துக் கொண்டால், அவர்களின் ஆரோக்கியம் பற்றிக் கவலைப் பட வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கலாம். எனவே வேலையில் மட்டும் உங்கள் கவனத்தைச் செலுத்தி வாருங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் விளைவுகளை யோசித்தபின் கடினமான செயலில் இறங்குவது அவசியம். கலைஞர்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் திறமைகளே உங்களை வழி நடத்தும்

ரிஷபம்:இந்த வாரம், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், புத்திசாலித் தனமாக செயல்படும் வியாபாரிகளுக்கு வெற்றி உறுதி. என்னதான் வரவிருந்தாலும், கலைஞர்கள் அநாவசியச் செலவுகளுக்காகக் கடன் படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம். மாணவர்கள் அதிக நேரம் கண் விழித்துப் பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். பணியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாமல் இருக்கும். வயதானவர்கள் உடல்நலக் குறைவிற்குச் சொந்த வைத்தியம் மேற்கொள்ளாமல், தகுந்த மருத்துவச் சிகிச்சை எடுத்தல், நல்லது. கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்கள் தரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால், நஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு துணிந்து நின்றால், பாதி வெற்றி கிடைத்து விடும். மீதி வெற்றியை உங்கள் உழைப்பு நல்கும்.

மிதுனம்:மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றிப் பணிகளை மேற்கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களைப் பெற்று மகிழலாம். பெண்கள் தங்களால் நிறைவேற்றக் கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள், உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். வியாபாரிகள் தோள் கொடுத்துப் பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். வீடுகளை வாங்கி விற்பவர்களுக்குச் செலவுகள் சில சமயம் கை மீறிச் செல்லும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உதவி செய்தவர்களே சில சமயம் உபத்திரவங்களைத் தருவார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதைச் சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே சுய தொழில் புரிபவர்கள், கண்ணும் கருத்துமாகச் செயல் பட வேண்டும்.பிள்ளைகளுக்குப், புதிய கலைகளைக் கற்கும் வாய்ப்பு கிட்டும்.

கடகம்:மாணவர்கள், நல்ல இதயங்களைப் புண்படுத்தாமல் இதமாக நடப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை உணர்ந்து செயலாற்றினால், அதிக லாபம் பெறலாம். கலைஞர்கள் பத்திரங்களில் பேரில் கடன் வாங்குவதைத் தள்ளிப் போடுவது நல்லது. கலைஞர்கள், பேச்சைக் குறைத்து, தன்னுடைய செயலில் தீவிரம் காட்டி வந்தால், வரும் வாய்ப்புக்களிலும், வரவிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடுவதோடு புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருப்பது அவசியம். புதிதாக வேலைக்குச் செல்பவர்கள், இந்த வாரம் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை ஏற்படாது.

சிம்மம்:மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும். பெண்கள் தினசரி வேலைகளின் பட்டியலில், சிறு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், அலுப்பின்றி வேலைகள் ஓடும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறவும், அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய முயற்சிகளைக் கையாளவும். வியாபாரிகள் பண சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பல தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். சுய தொழில் புரிபவர்கள், சரக்குப் போக்குவரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். புதிய இடங்களில், பொது வாழ்வில் உள்ளவர்கள் காட்டும் சொற்சிக்கனம் பிரச்னைகளைப் பெரிதாகாமல் தடுக்கும். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தமும் சற்றே அதிகமாகும். பொறுப்பில் உள்ளவர்கள், கவனமாகச் செயல்படவில்லை என்றால், சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

கன்னி: மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால், யாவும் சிறப்பாக நடக்கும். கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களின் மூலம் ஒவ்வாமை ஏற்படாதவாறு, தரமான பொருட்களைப் பயன்படுத்துதல் நல்லது. பெண்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குமுன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையான சிகிச்சையோடு எளிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். மனக் குழப்பம் உங்களின் திறமையைப் பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். பல வெற்றிகளைப் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள், பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமானால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பணியில் ஏற்படும் வேண்டாத இட மாற்றம் சிலரை நெருக்கடியான சூழலுக்குத் தள்ளி விடும். எதிர்பாராத செலவுகளால் சிறு தொழில் புரிபவர்களின் புதிய திட்டங்களில் தொய்வு ஏற்படலாம்.

துலாம்:இந்த ராசிக்காரர்களுக்கு, நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில்தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொள்ளும் பெண்கள் ஈடுபடும் காரியங்களுக்கு உறவுகளும் துணையாய் நிற்கும். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். தலை சுற்றல், மயக்கம் ஆகியவை வாராதவாறு முதியவர்கள் உணவில் கட்டுப்பாடாய் இருப்பது நல்லது. அலுவலகத்தில் இருப்போர்கள் அவசரப் பிரச்னைகளின் பொருட்டு அங்கும் இங்கும் அல்லாட வேண்டியிருக்கும். வெளிடங்களில் தங்கியுள்ளவர்கள் அவ்வப்போது தலை காட்டும் தேவையற்ற சஞ்சலத்தை மாற்ற மனதுக்குப் பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுவது நல்லது. கலைஞர்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப் படுத்தி வைத்தால், பிரச்னைகளுக்கான தீர்வை எளிதில் கண்டு விடலாம். தேர்வுகள் நெருங்குவதால், பெற்றோர்கள் பிள்ளைகளின் மன அழுத்தம் அதிகரிக்க இடம் கொடாமல், பக்குவமாக நடந்து கொள்ளவும்.

விருச்சிகம்:மாணவர்கள் அற்ப காரணங்களுக்காகப் பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, மேலதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லித் தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சுய தொழில் புரிபவர்கள் சுணக்கம் என்ற சொல்லுக்கு இடமின்றி முயற்சி செய்தால், நல்ல முன்னேற்றத்தோடு, பண வரவும் வந்து சேரும். கலைஞர்கள், எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உடையவரோடு பழகும்போது, கவனமாக இருக்கவும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் விதிமுறைகளைப் பின்பற்றினால், கணக்கு வழக்குகள் எப்போதும் சீராக இருக்கும். இந்த வாரம் சுய தொழில் புரிபவர்கள், அதிகப் போட்டிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஏற்றவாறு தங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வது நல்லது.

தனுசு:இந்த ராசிக் காரர்களின், நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். பெண்கள், சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் குழப்பம் அடைவதைத் தவிர்த்து விடவும். பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் குற்றம் குறைகளை பெரிது படுத்திக் கொள்ள வேண்டாம். வேலைகள் எளிதில் முடியும். மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செயல் படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் வரை கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்கள் கிடைத்த ஒப்பந்தங்களைக் குறித்த காலத்தில் முடிப்பதில் கருத்தாக இருந்தால், உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வியாபாரிகள் விரிவாக்கத்திற்காகத் திட்டமிடும் போது நிறை குறைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் முழுப் பலனை அடையலாம். பொது வாழ்வில் இருப்போர்கள் நடு நிலையாக செயல்படுபவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். இந்த வாரம், தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள், சுய தொழில் புரிபவர்களுக்கு ஒரு தேக்கத்தைக் கொடுக்கலாம்.

மகரம்:பெற்றோர்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார் என்று அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியம். இந்த வாரம் வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளைச் சமாளித்தே வெற்றி வாகை சூட வேண்டியிருக்கும். கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் பட்டும் படாமலும் நடந்து கொண்டால், மன உளைச்சலைத் தவிர்த்து விடலாம். அதிக அலைச்சல், தூக்கம் கெடுதல் ஆகியவை அன்றாட வாழ்வைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் தங்கள் வேலையில் ஈடுபட முடியும். மாணவர்கள் சலிப்புக்கு இடம் தராமல், பணியில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளைச் சுருக்கிக் கொண்டால், கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து விடலாம். வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வர வியாபாரிகள் சுறு சுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவது நல்லது. மாணவர்கள் சிறிய விஷயங்கள் உங்கள் கவனத்தை மாற்ற இடம் கொடுக்க வேண்டாம்.

கும்பம்:இந்த வாரம், பொது வாழ்வில் உள்ளவர்கள், தங்கள் கருத்தை நிலை நாட்ட, வாக்குவாதங்களில் இறங்காமலிருந்தால், யாருக்கும் வீண் வருத்தம் ஏற்படாது. நண்பர்கள் உங்களைச் சரி வரப் புரிந்து கொள்ளாமல் முரண்பாடாக நடந்து கொண்டாலும், இந்த ராசிக்காரர்கள், நிதானமாக நடந்தாலே நல்ல பலன் கிட்டும். கலைஞர்கள் விமர்சனங்கள் எதற்கும் கவலைப் படாமல் தங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பதே புத்திசாலித் தனமாகும். கடன் தொல்லைகளால், மன நிம்மதி குறையலாம். ஆகவே பங்குச் சந்தையில் அதிக முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும். சுய தொழில் புரிபவர்கள், கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின், செயலாற்றினால், பொருளாதாரச் சரிவுகளைச் சரி செய்வது எளிதாக இருப்பதோடு, வீண் செலவுகளையும் குறைக்க உதவியாய் இருக்கும்.

மீனம்:பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில், அடுத்து வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தவறுகளைக் களைந்து, முன்னேற முடியும். வலிய வரும் சண்டையால், தலைவலி கூடும். எனவே பெண்கள் தங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திப் பலனடைவார்கள். வியாபாரிகள், வியாபாரச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் பங்குதாரர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள், சுற்றுலா போன்றவற்றில், வீண் ஆரவாரத்தோடு செயல்படுவதைத் தவிர்த்தல் அவசியம். கலைஞர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கினால், தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாய் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் உதவுவதாக வாக்குறுதி அளித்தவர்கள் கடைசி நேரத்தில் பின் வாங்குவதால், சில தடுமாற்றங்கள் தோன்றி மறையும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *