மகளை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்கும் தாய்!

3

 

பவள சங்கரி

தலையங்கம்

தம் உயிரைக் கொடுத்தேனும் தாம் பெற்ற குழந்தையைக் காக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தாயும் நினைப்பாள். ஆனால் ஒரு தாயே தம் குழந்தையைக் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்கும் கொடுமை சமீபத்தில் நடந்துள்ளது நெஞ்சை உருகச் செய்யும் இந்த நிகழ்ச்சி, சென்ற திங்களனறு, ஈரோடு மாநகரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகள் தீர்க்கும் கூட்டத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி வேண்டி அக்குழந்தையின் தாயே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தது காண்போரை இரத்தக் கண்ணீர் சிந்தச் செய்தது.

கும்பகோணத்தைச் சார்ந்த தச்சுவேலைத் தொழிலாளி அழகிரிசாமி, ஜெயா தம்பதியினரின் 14 வயது பெண் குழந்தை மதுமிதா. இவள் பிறப்பிலேயே பெருமூளை வாதம் நோயினால் மனநிலையும் பாதிக்கப்பட்டு, நடக்கவும் முடியாமல், முழு நேரமும் யாராவது கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ளாள். இரவு நேரங்களிலும் அதிக சத்தத்துடன் காரணமின்றி அழுவதால், அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் பெரும் தொல்லையாக இருப்பதாக அவர்கள் தகராறு செய்திருக்கிறார்கள். பல தொண்டு நிறுவனங்களையும் அணுகி குழந்தை பாதுகாப்பு குறித்து வேண்டியும், எந்த பலனும் இல்லாதலால், மனமுடைந்து போன தாய், மாவட்ட ஆட்சியரிடம் இப்படி ஒரு அனுமதியை கேட்டிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் திரு வி.கே சண்முகம் அவர்கள் இந்த குழந்தைக்கு அரசு மாற்றுத் திறனாளிகள் இல்லம் மூலமாக தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கொடுத்தாலும், இன்னும் எத்தனை எத்த்னை மதுமிதாக்கள் இது போன்று வேதனையில் தவிக்கிறார்கள். சமீப காலங்களில் இது போன்று பலவிதமான மனநல பாதிப்புகள் உள்ள குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. அதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தாலும், சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நம் நாட்டில் பெரும்பாலான மருத்துவத்துறை வல்லுநர்கள் வெளிநாடுகள் நோக்கி ப்டையெடுப்பதிலேயே விருப்பமாக உள்ளனர். இன்றைய மருத்துவச் செலவுகளும் கையை மீறியதாக இருக்கிறது. கிட்டத்தட்ட 74 சதவிகித தனியார் மருத்துவக் காப்பு, இது போன்று கையை மீறிய செலவாக இருப்பதாக உலக சுகாதார மையம் (2008) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மருத்துவம் என்பது தொழிலாக அல்லாமல் சேவையாகப் பார்க்கும் மனோநிலை இன்று சுத்தமாக இல்லை என்றே கூற வேண்டும். சில கிராம சேவை மருத்துவர்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும், நகரத்தின் பல பெரிய மருத்துவமனைகள் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு விதிக்கும் கட்டணங்களுக்கு எந்த வகைமுறையும் கிடையாது. மருத்துவ சிகிச்சை முடிந்து, நோயாளி உயிர் பிழைத்தாலும், பிழைக்காவிட்டாலும் மருத்துவமனை கொடுக்கும் பில்லை கட்டாமல் வெளியே நகர முடியாது. நோயின் வேதனையைவிட இது பெருங்கொடுமை என்றே நொந்து போவதும் வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

இது ஒரு புறமிருக்க மருந்து விலையை எடுத்துக் கொண்டால், ஏழைகள் கிட்ட நெருங்கவே முடியாத அளவிலேயே இருப்பதால் அவர்கள் படும் வேதனைகள் சொல்லி முடியாது. அரசு மருந்தகங்களில் அனைத்து வகை மருந்துகளும் கிடைக்க ஏற்பாடு செய்வது மிக அவசியம். தனியார் மருந்தக விலைப்பட்டியலுக்கும், அரசாங்க மருந்தக விலைப்பட்டியலுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருந்தகங்களில் ஏழை மக்களுக்காக சகாய விலையில் மருந்துகள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண நோயினால் பாதிக்கப்படும் ஏழை மக்களின் நிலையே இப்படி இருக்கும்போது, தீர்க்க முடியாமல் மருத்துவத் துறைக்கே சவாலாக இருக்கும் சில வியாதிகள் ஏழைகளையும் குறி வைத்து தாக்கும்போது, அவர்கள் சமாளிக்க முடியாமல் திண்டாட வேண்டியுள்ளது. அரசாங்கம் இதற்கு ஆவண செய்யும் விதமாக குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் வழங்குதல், அரசாங்க மருத்துவமனைகளில் வல்லுநர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகங்களை அதிகப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் இது போன்ற கருணைக்கொலை மனுக்கள் எதிர்காலத்தில் அதிகமாகாமல் தடுக்கலாம்.

2008ம் ஆண்டின் சுகாதார மையத்தின் கணக்கெடுப்பின்படி, நம் இந்தியாவில் 10,000 நபர்களுக்கு, மருத்துவமனை படுக்கைகள் எண்ணிக்கை 9ம், செவிலியர்கள் எண்ணிக்கை 13ம் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை 6 மட்டுமே உள்ளது வேதனைக்குரிய விச்யம். இந்த விசயத்தில் உலகிலேயே பின் தங்கிய 11வது இடத்தில் நம் இந்தியா இருக்கிறது. செருமனியும், இங்கிலாந்தும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மருத்துவர் உருவாக வேண்டுமென்றால் அவருடைய குடும்பத்தார் செய்யும் செலவைப்போல, நம் அரசாங்கமும் அந்த மாணவருக்காக ஒரு பெரும் பகுதியை செலவு செய்கிறது. நம் நாட்டிலிருந்து மிக அதிக அளவில் மாணவர்கள் படித்து வெளிவந்தாலும், இங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை அதிகமாகவே இருப்பதற்கு காரணம் மருத்துவர்கள் அதிகபட்சமாக வெளிநாடு சென்று பணிபுரிய விருப்பம் கொள்வதே. இந்த வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு வாய்ப்புகள் அதிகமாவதுடன் அவர்கள் நிர்ணயிப்பதே கட்டணமும் ஆகிவிடுகிறது. அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிடில் எதிர்காலத்தில் இது போன்று பல பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பும் அதிகமாகும். கோடை மழை போன்று ஒரு மகிழ்ச்சியான செய்தியாக 2000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கம் மருந்துகள் ஆய்வுகளுக்காக ஒதுக்கியிருப்பதுதான்! இதை நல்ல முறையில் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "மகளை கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்கும் தாய்!"

  1. தங்களது கட்டுரையை முழுதும் படித்தேன். நெகிழந்து போனேன். ஒரு சிறு சந்தேகம்..இதற்கு முன் இது போல வேறு எங்காவது மனு கொடுக்கப்பட்டுள்ளதா?..அதன் முடிவு என்னவாயிற்று?…தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் …ஒரு நாவல் படைக்க உதவியாய் இருக்கும்!.

  2. ‘அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காவிடில்…’
    இந்த தலையங்கம் ஒரு சமுதாய ஆற்றாமையை முன் கொணருகிறது. அரசாங்கம் மட்டுமில்லாமல் மற்றப்டியும், இந்த வினையெச்சத்துக்கு உரிய பின்னூட்ட்ங்கள் வரையவும். என்னுடைய தரப்பிலிருந்து மிக்க ஆக்கப்பூர்வமான பின்னூட்டத்திற்கு போனஸ் விருது அளிக்கப்படும்.

  3. அரசாங்கம் என்பதே மக்களை, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு சபைதான். ஆகவே, இந்த விஷயத்தில் அரசாங்கத்தை விட, மக்களின் புரிதல், அவ்ர்களின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தக் கட்டுரையில வந்திருப்பது போல் அக்கம் பக்கத்தில் உள்ளோர், “தங்களுக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்தால்?” என்ற சிந்தனையின்றி, அந்தக் குடும்பத்தினரை நடத்தியதன் விளைவே , இப்படி ஒரு கோரிக்கையோடு அந்தத்தாய் நீதிமன்ற வாசலில் நிற்க வேண்டி வந்திருக்கிறது. அக்கம் பக்கத்தை விடுங்கள். அவர்களின் சுற்றமும் விலகி நின்று, நிராகரித்து வேடிக்கை பார்த்து இருக்க வேண்டும். இதற்கெல்லாம் முதலில் இந்தக் குறைபாடுகளைப் பற்றி பொதுமக்களுக்கு “awareness”  வந்தாக, கொடுத்தாக வேண்டும். இது போன்ற குறைபாடுகளைப் பற்றி பள்ளி பாடத்திட்டங்களில் வந்தாக வேண்டும். ஒன்று தெரியுமா உங்களுக்கு? Autism என்ற மூளை வளர்ச்சி சார்ந்த ஒரு குறைபாடு, நம்முடைய MBBS Syllabus-ல் கிட்டத்தட்ட 2000 வருடம் வரை சேர்க்கப்படவில்லை. இந்த லட்சணத்தில் மருத்துவத்துறை இருக்கிறது.

    வெளி நாடுகளில் நிறைய ஆராய்ச்சிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன, இத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்க, களைய. நம்புவோம் நம் கண் முன்னே நல்ல மருத்துவத் தீர்வுகள் கிடைக்குமென.

    அடுத்ததாக, அடுத்தவர் வேதனையை (அது சுற்றமோ, நட்போ எதுவாகினும்) மதிக்க வேண்டிய, அதைப் புரிந்து கொண்டு இயன்றவரை மன ரீதியாக, உழைப்பு ரீதியாக தோள் கொடுக்க வேண்டிய மனப்பாங்கு நம் மனிதர்களிடம் வளர வேண்டும். நாமும், இவ்விதக் குறைபாடுகளைப் பற்றி நாம் அறிந்தவற்றை இயன்ற வரை பிறரிடம் பகிர்ந்து கொண்டு புரிந்துணர்வை பெருக்கும் செயலை செய்யலாம். இப்படிப் பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களின் பிரச்னைகளை, வேதனைகளை கதையாக வடிக்கலாம், பிறருக்கு அந்த வேதனைகளை புரியவைக்க அவை ஒரு தூண்டுகோலாக இருக்குமென்பதால். இதற்கு மேலும் சமுதாயத்தில் மன மாற்றங்கள் நிகழ, கடவுளை வேண்டுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.