வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 1

6

பவள சங்கரி திருநாவுக்கரசு

Pavalasankari

பவள சங்கரி திருநாவுக்கரசு, சேலம் மாநகரில் பிறந்து, வளர்ந்தவர். சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் இளம் அறிவியல் – குடும்பவியல் (Bsc – Home Science) பயின்றவர். கணவரின் ஊக்கத்தால், திருமணத்திற்குப் பிறகும் கல்வி கற்றார். இந்தி பிரசார சபாவில் இந்தி பிரவீண் தேர்ச்சி, மத்திய அரசின் இந்திச் சான்றிதழ்ப் பட்டயம், DIP. C.R.E.W. IN ENGLISH (creative writing) ஆகியவற்றையும் பயின்றார். 1991 முதல்  எழுதி வருகிறார்.

‘கீழோர்க்கு அஞ்சேல்! குன்றென நிமிர்ந்து நில்! கேட்டிலும் துணிந்து நில்! கொடுமையை எதிர்த்து நில்! கல்வியதைக் கைவிடேல்! சிதையா நெஞ்சு கொள்! சீறுவோர்ச் சீறு! ரௌத்ரம் பழகு!’ என்ற பாரதியின் கருத்துகளே இவரது தாரக மந்திரம். வெண்ணிலவில் ஒரு கருமுகில், இவரின் முதல் தொடர் கதை. =========================================

 

பருவ காலங்களின் மாற்றங்கள் மனித மனங்களிலும் பலவித பரிமாணங்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பதும் இயற்கை. குளிர் பிரதேசங்களின் மைனஸ் டிகிரி குளிரோ, அல்லது கொளுத்துகிற கோடை வெய்யிலின் உக்கிரமோ எதுவாக இருந்தாலும் அந்தப் பருவ காலத்திற்கேற்ப உடல் நிலையிலும், மன நிலையிலும் பல மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதைத் தவிர்க்க முடியாது.

இலையுதிர் காலம். குளிர் ஆரம்பித்துவிட்டது. மரங்களெல்லாம் அழகான செந்நிற இலைகள் தாங்கி, புதுப்பெண் போல நாணம் பொங்க நிற்கின்றன. சாலையின் இரு மருங்கிலும் உதிர்ந்த இலைகளின் கூட்டம். கொள்ளை அழகு. அதனைச் சுத்தம் செய்யும் வேக்யூம் க்ளீனரின் மாய ஜாலங்கள்……….

அன்று காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதே, ஏதோ ஓர் இன்பமான உணர்வு இளமாறனுக்கு. உற்சாகத் துள்ளலுடன் எழுந்தவன், முதல் நாள் இரவு நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் அடித்த லூட்டியை சற்றெ அசை போட்டவன், ஆகா, மணியாகிவிட்டதே, ஏற்கனவே எழுந்ததே லேட்டு, இதில் சோம்பல் வேறயா என்று தன்னையே கன்னத்தில் செல்லமாகத் தட்டிக்கொண்டு ஓய்வரை நோக்கி ஓடினான்.

காலைக் கடன்களை அசுர கதியில் முடித்தவன், வழக்கம் போல பிரெட்டின் மீது ஜெல்லியை பரவவிட்டு, ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து சுருட்டிக் கொண்டு, ஆரஞ்சு ஜீஸ் மினி பாட்டில் ஒன்றை கையில் அள்ளிக்கொண்டு, அவசரமாகக் கிளம்பினான்.

வெளியே ஓடியவன்,

’அடடா வீட்டைப் பூட்டாமலே வந்துவிட்டோமே. பழக்க தோசம், எப்பவுமே நண்பன் ராகேஷ்தான் பூட்டுவான். அவன் விடுமுறைக்கு இந்தியா போனதிலிருந்து பல பிரச்சனை, சாப்பாடு கூட ஒழுங்காக கிடைப்பதில்லை. எப்படியோ இந்த சிரமம் எல்லாம் இன்னும் கொஞ்ச காலம்தான். வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறதே! தனக்கென்று ஒருத்தி வந்துவிட்டால், பிறகு இந்த பிரச்சனையெல்லாம் இல்லை. ஐயா பிறகு ராஜாதான்.’

வீட்டைப் பூட்டிக் கொண்டிருக்கும் போதே ‘கிரீஈஈஈஈங்க்…கிரீஈஈஈஈஈங்க்’ என போன் மணி அழைக்கவும், இந்த நேரத்தில் யாராக இருக்கும்……

“ஹலோ”

“ஹலோ…மாறன், நான்தான்ப்பா……..”

“சொல்லுங்கப்பா… இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க. தூங்கப் போகலையாப்பா? மணி ஆயிடிச்சே……”

“இல்லப்பா உனக்கு மெயில் பண்ணினேனே நீ பார்க்கலையா?”

“ஓ….இல்லப்பா. நேத்து பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்குப் போனேன். வீட்டிற்கு வர நேரமாகிவிட்டது. இனிமேல் ஆபீசிற்குப் போன பிறகுதான் ஓய்வு நேரத்தில் பார்க்க முடியும். ஏதாவது முக்கியமான விசயமாப்பா…..”

“ம்ம்…பார் தெரியும். ஒரு பெண் போட்டோ அனுப்பியிருக்கேன். ஜாதகம் பொருந்தியிருக்கு. பெண் உனக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றுதான் கூப்பிட்டேன்” என்றார்.

“ம்ம்….அப்படியாப்பா. சரி நான் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். ஆபீசிற்கு நேரமாகிவிட்டது. பிறகு பேசலாம் அப்பா” என்று சொல்லிக் கொண்டே ரிசீவரை வைத்துவிட்டு, பரபரவென வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பி ஓடினான், உல்லாச ஊர்தியை நோக்கி.

காரில் பயணம் செய்யும் போதுதான், அடடா, பெண் எப்படி இருப்பாள், எங்கு இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்ற அடிப்படைக் கேள்விகூட கேட்காமல் விட்டு விட்டேனே….. என்னோட முக்கியமான கண்டிசனான பெண்ணிற்குப் பாடத் தெரியுமாங்கறதையாவது கேட்டிருக்கலாமோ………

அலுவலகத்தில் நுழைந்தவுடன், பக்கத்து சீட், ரம்யா,

“என்ன மாறன், இன்னைக்கு லேட்டு? க்ளையண்ட் மீட்டிங், உனக்காகத்தான் வெயிட்டிங். சீக்கிரம் வா போகலாம்” என்றாள். அவளும் நம் தமிழ் திருநாட்டிலிருந்து வந்தவள்தான். தன்னுடைய அழகால் அமெரிக்காவையே கலக்கிக்கொண்டிருக்கிற 50 கேஜி தாஜ்மஹால்.

புரொஜக்ட் நிறைவேற்றி அனுப்புதல் தாமதமாதலால், க்ளையண்ட் காய்ச்சி எடுத்துவிட்டான்…. மீட்டிங் முடியவே வெகு நேரமாகிவிட்டது. மதிய உணவையும் முடித்து, மற்ற வேலையில் மூழ்கவும் அனைத்தும் மறந்துவிட்டது. மாலை வீடு நோக்கி வரும் வழியில் தான் அப்பா அனுப்பிய பெண்ணின் போட்டோ குறித்து நினைவு வந்தது. சற்றே லேசான படபடப்பு……….

தன் கற்பனைக் கனவுக் கன்னியின் நிழலுறுவம் மனத்தில் நிழலாடத்தான் செய்தது. இதோடு பத்தாவது போட்டோ என்று நினைக்கிறேன். அப்பா இவ்வளவு பொறுமையாக, கோபப்படாமல் செய்யும் ஒரே காரியம் இதுவாகத்தான் இருக்கும்.

எப்படியோ தன் மனத்திற்குப் பிடித்த மகாராணி வரும்வரை காத்திருப்பது என்பதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. அது ஆண்டுகள் எவ்வளவு ஆனாலும் சரி.

வீட்டின் உள்ளே நுழையும் போதே தொலைபேசி சிணுங்கிக்கொண்டிருந்தது. ஒரு வேளை அப்பாவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே ரிசீவரை எடுக்கப் போனவன்……. சட்டென பின்வாங்கியதன் காரணம்…

‘என்னைத் தாலாட்ட வருவாளோ’ என்ற செல்பேசியின் கொஞ்சல்தான். தன்னையறியாமல் கை அந்த செல்பேசியை வருடத் தொடங்கியது.

மறு முனையில், அன்புமணி தன் நண்பன், “என்னடா மச்சி, சஞ்சுவோட பர்த்டே பார்ட்டியை மறந்துட்டியா. ஏற்கனவே லேட். எல்லோரும் வெயிட்டிங் . வா சீக்கிரம்”.

“அடடா மறந்தே போயிட்டேனே. இதோ வரேன், ஒரு பத்து நிமிடத்தில் கிளம்பி விடுகிறேன்” என்று சொல்லி முடித்து, சிணுங்கிக்கொண்டிருந்த தொலைபேசியை எடுக்கப் போனவன், அது அமைதியாக அடங்கிப் போனதைப் பார்த்து, ‘சரி ஏதாவது மார்க்கெட்டிங் காலாக இருக்கும்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, பார்ட்டிக்குக் கிளம்பத் தயாரானான்.

வழக்கம் போல் பார்ட்டியில் நண்பர்களுடன் செம அரட்டை, விருந்து என்று பொழுது போனதே தெரியவில்லை. தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பித்த போதுதான் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தவன்,

“அடடே, மணி ஒன்று ஆகிவிட்டது. நான் கிளம்பறேன்ப்பா…. நாளை வேறு எட்டு மணிக்கே க்ளையண்ட் மீட்டிங் இருக்கும். லேட்டா போனா, அண்ணாச்சி எகிறுவான்., நான் வரேன்” என்று சொல்லிக்கொண்டே, ஷூ, ஜாக்கெட், தலைக்கு குரங்கு குல்லா எல்லாம் போட்டுக்கொண்டு தயாரனான்.

நவம்பர் மாதக் குளிர் கொஞ்சம் அதிகம்தான். குடுகுடுவென ஓடிப் போய் காரில் ஏறி அமர்ந்து, ஹீட்டர் போட்டாலும், சூடு பிடித்து, குளிர் குறைவதற்குள் பல்லெல்லாம் டைப் அடிக்க அரம்பித்து விடும். வீட்டிற்கு வரும் வழியில்தான் அப்பா சொன்ன விசயம், பெண் போட்டோ அனுப்பியது நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு போனவுடன் முதல் வேலையாகப் பார்க்க வேண்டும். நாளை அப்பா போன் செய்வதற்குள் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாலும், இந்த பெண்ணாவது நமக்குப் பிடித்த மாதிரி அமைய வேண்டுமே என்று ஆதங்கமாகவும் இருந்தது. தனிமை அவனைப் பல விதங்களிலும் பாடாய்ப் படுத்துவதிலிருந்து தப்பிக்கும் ஒரு உபாயம் அதைத் தவிர வேறு இல்லையே.

வீட்டில் நுழைந்தவுடன் முதல் வேலையாக லேப்டாப்பை எடுத்து வைத்தான். வந்த தூக்கம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டது. எல்லாம் ரெடி பண்ணி, சுவிட்சை ஆன் செய்தால், வலைத்தள இணைப்பு இல்லை. என்ன பிரச்சனையோ தெரியவில்லை. காத்திருந்ததுதான் கண்ட பலன். சரி நாளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்று போய்ப் படுத்ததுதான் தெரியும், எப்போது உறக்கம் வந்தது என்ற நினைவு கூட இல்லை. அத்தனை அலுப்பு….

காலை நன்கு அசந்த உறக்கம். எங்கோ தொலைதூரத்தில் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போன்றிருந்தது தொலைபேசியின் அழைப்பு மணி. கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு வர, சத்தம் வெகு அருகில் ஓங்கி ஒலித்தது.

‘ஆகா இங்குதான் போன் அடிக்கிறதா?’ என்று வாரி சுருட்டிக் கொண்டு ஓடிப்போய், அதன் தலையில் தட்டி, தட்டுத் தடுமாறி ஒரு வழியாக கண்ணை முழித்து, “ஹலொ…….” என்றான்.

“ஹலோ, என்னப்பா இன்னும் தூக்கம் தெளியலயா? மணி ஆகிவிட்டதே, ஆபீஸ் போக வேண்டாமோ” என்றார் அப்பா.

“அடடா ஆமாம்ப்பா. மீட்டிங் வேற இருக்கு.”

அப்போதுதான் மணியைப் பார்த்தான். மணி 7 ஆகிவிட்டிருந்தது. 8.30க்கு மீட்டிங், அதற்குள் குளித்து, கிளம்பி 45 நிமிட பயணம் முடிந்துதான் அலுவலகம் சென்று சேர முடியும். அப்பாவிடம் பேசக்கூட நேரம் போதாது. ஆனால் அப்பா அதைக் கட்டாயம் புரிந்துகொள்வார். எப்படியோ அப்பாவிடம் சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால், அப்பா இன்று பார்த்து, நிறைய பேசும் மூடில் இருப்பார் போல.

அவர் அனுப்பிய புகைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமையாததும், இண்டர்நெட் பிரச்சனையும் எடுத்துக் கூறி ஆபீசில் சென்று பார்த்து விட்டு தொடர்பு கொள்வதாகச் சொல்லி, அப்பாவின் பேச்சைக் காதிலே வாங்காமலே அவசரமாகத் தொடர்பைத் துண்டித்த மாறன், அலுவலகத்திற்குக் கிளம்பினான்.

சரியான நேரத்திற்கு மீட்டிங் அறைக்கு வந்து சேர்ந்தும் புராஜக்ட்டில் இருந்த சில முடிச்சுகள் சற்றே குழப்பமான சூழலை உருவாக்கி, பின்பு ஒரு வழியாக முடிச்சு விலகி, எல்லாம் முடிந்து வெளியே வர, மாலை நான்கு மணி ஆகிவிட்டது. சீட்டில் வந்து உட்கார்ந்து கையை தூக்கித் தலையின் பின் வைத்துக் கட்டி ரிலாக்ஸாக சாய்ந்து உட்கார்ந்து, சிறிது நேரம் உத்திரத்தைப் பார்த்த போதுதான் திடீரென அப்பாவின் நினைவு வந்தது.

பாவம் அப்பா காலையில் எவ்வளவு ஆசையாகப் பேச வந்தார். என்ன பேசினார் என்று கூட காதில் வாங்காமல் லைனைக் கட் பண்ணி விட்டோமே. இப்ப பேசலாம் என்றால், ஒரு வேளை அப்பா தூங்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது. இன்னும் சற்று நேரம் பொறுத்து பண்ணலாம் என்று முடிவு செய்த போதுதான் அப்பா அனுப்பிய போட்டோ மேட்டர் நினைவிற்கு வந்தது. சரி இப்ப பார்த்துவிட்டுத்தான் மறு வேலை என்று முடிவு செய்தவன் பரபரவென இயங்க ஆரம்பித்தான்.

மெயில் பெட்டி குப்பைத் தொட்டியாக குவிந்து கிடந்தது. இந்த ஞாயிற்றுக் கிழமையாவது இதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஒரு வழியாக அப்பா அனுப்பிய மெயிலைக் கண்டுபிடித்து எடுத்துவிட்டான்.

ஓபன் ஆகிக் கொண்டிருக்கிறது…………….

ஒரு நொடி தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் …..

“ஹேய்.. யாருப்பா இந்த அப்சரஸ், ஆள் சூப்பரா இருக்கா………” என்றாள் ரம்யா.

“அட நீயா? போச்சுடா உன் கண்ணுல பட்டுடுத்தா, வேற வினையே வேண்டாமே.”

“ஏய் சொல்லுப்பா, எல்லாம் முடிவாயிடுத்தா. இவதான் உன்னோட கனவுக் கன்னியா?”

‘நீ சொன்னாலும் சொல்லாட்டியும் இவதான் என் கனவுக் கன்னி’ என்று சொல்ல மனம் துடித்தாலும் ஏதோ தயக்கம், இன்னவென்று புரியாத ஒரு தடுமாற்றம்…….

ரம்யா திரும்பத் திரும்ப ஏதோ கேட்டுக்கொண்டே இருக்கவும், சுய நினைவிற்கு வந்தவனுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவளோட பயோ-டேட்டா!

அவளும் கணிணித் துறை வல்லுநர் மற்றும் ஒரு நல்ல ஓவியக் கலை நிபுணர். இது எல்லாவற்றிற்கும் மேலாக அவளும் இப்போது இதே அமெரிக்காவில், தான் இருக்கும் நியூ ஜெர்சியிலிருந்து, 4 மணி நேரப் பயணத்தில் இருக்கக்கூடியத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் இருக்கிறாள். ஆகா இதெல்லாம் கூட நடக்குமா?

மாறனுக்கு தலை கால் புரியவில்லை. தான் நினைத்தது போல் தனக்கு ஒரு தேவதை கிடைக்கப் போகிறாளோ என்று பேராச்சரியமாக இருந்தது. இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? ஒரு வேளை அவளும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கலாமோ? அந்த நினைவே உள்ளம் குளிரச் செய்தது.

நான் ஏன் அவளைப் போய் சர்ப்பிரைசாக நேரில் சென்று சந்திக்கக் கூடாது? அப்பாவிடம் கேட்டுப் பார்க்கலாமா? இதை போய் எப்படி அப்பாவிடம் கேட்பது? எதற்கும் அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம்……… என்ன இது கள்ளத்தனம் புக ஆரம்பிக்கிறதே…… இது பற்றி யோசிக்கும் போதே லேசான ஒரு புன்னகை நெளிய,

அதைக் கவனித்துவிட்ட ரம்யா,

“என்னப்பா, கனவு காண ஆரம்பிச்சாச்சா. என்ன? தேவதைகள் புடைசூழ உன் கனவு இளவரசி காற்றில் மிதந்து வராங்களோ……? போப்பா போய் நேரே போய் பார்த்துட்டு வருவியா….. இப்படி கனவு கண்டுகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கே………..”

மாலை வீட்டிற்குப் போனதும் அப்பாவிடம் பேச முயன்றான். ஆனால் பணிப்பெண் மூலமாக அப்பாவும் அம்மாவும் குலதெய்வ கோவிலுக்குச் சென்றிருக்கும் செய்திதான் கிடைத்தது. அந்தக் கோவில் இருக்கும் இடம் ஒரு குக்கிராமம் ஆதலால், போன் சிக்னல் கிடைக்காது. அதனால் அப்பா, அம்மா வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். அங்கு ஒரு பழைய பரம்பரைச் சொத்து விற்பது சம்பந்தமாக 2 அல்லது 3 நாட்கள் கூட ஆகலாம் என்று வேறு அந்தப் பெண் சொன்னதால், அடுத்த நாள் விடுமுறையானதால், வாஷிங்டன் சென்று அந்தப் பெண்ணைப் பார்த்து வருவது என்று அவன் எடுத்த முடிவு, எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை…………..

(தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 1

  1. ஆரம்பமே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது

    அடுத்து நிகழ்வுகள் இன்னமும் படிக்க ஆவலைத் தூண்டுகிறது’

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  2. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாளின் புகழ் பெற்ற நாவல் தலைப்பு. அனுமதி கிடைத்து மறுபடியும் பயன்படுத்துகிறீர்களா? கல்கி நாவல் போட்டியில் பரிசு பெற்றது. தமிழின் உன்னத நாவல்களில் ஒன்றாக இன்னமும் கருதப்படுகிறது. உங்களுடைய இந்நாவல் அச்சுக்கு எதிர்காலத்தில் செல்லுமானால் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

  3. கதை தொடரட்டும். பிறகு என் கருத்து. தொடக்கம் நன்றாக இருக்கிறது. உரையாடல்கள் ஒரு பிடி அதிகம். அவற்றால் தொய்வு ஏற்படாமல் கவனித்துக்கொள்ளவும்.

    ர.சு.ந.வின் நாவல் தலைப்பு பிரபலம், திரு. சித்தன் அவர்கள் சொன்னமாதிரி. எங்கோ ஒரு இடத்தில் அதை குறிப்பால் உணர்த்தி இருக்கலாம். இனியும் செய்ய முடியும்.

  4. பவளா, ஆரம்பமே சூப்பர். மாறன், பொண்ண பார்த்தானா? ஒரே ஆவலாக உள்ளது. அடுத்தது எப்போ, நாளைக்கா??

  5. அன்பு நண்பர்களே,

    தங்கள் அனைவருக்கும் நன்றி. திரு. சித்தன் அவர்களும் திரு. இன்னம்பூர் ஐயாவும் கூறியது போல் தலைப்பு, திரு ர.சு. நலல பெருமாள் அவர்களுடைய நாவலின் தலைப்பாக இருக்கின்ற காரணத்தினால் இக்கதையின் தலைப்பை, ”வெண்ணிலவில் ஒரு கருமுகில்” என்று மாற்றிவிட்டேன். மேலும் தங்களுடைய பின்னூட்டம் மூலம், தொடர்ந்து ஆதரவு தாருங்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் சாரதா. தமிழ்தேனீ ஐயா, அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *