வால்ட் விட்மன் வசனக் கவிதை -13
என்னைப் பற்றிய பாடல் – 6
(புல்லின் இலைகள் -1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++++
இவை யாவும் மெய்யாய்
எல்லா மனிதரின் சிந்தனைதான் !
எல்லா காலங் களிலும்,
எல்லா நாடுகளிலும் உதித்தவை தான் !
எனது மூலப் படைப்புகள் அல்ல
உன்னைச் சேரா தாயினும் அவை
என்னைச் சேரா தாயினும்
ஒன்றும் பயனில்லை !
புதிரில்லை யாயினும், அவை
புதிரை விடுவிக்கா திருப்பினும்
மதிப்புறுவ தில்லை !
அப்பால் இருப்பவை
அருகில் இல்லை யாயினும் அவை
பொருளற் றவை தான் !
நிலம் எங்கு இருக்குமோ
நீர் எங்குள்ளதோ அங்கெல்லாம்
இந்தப் புல்லினம் முளைக்கும் !
பூகோளத்தைக் குளிப்பாட்டி வைக்கும்
பொதுக் காற்று இதுதான்
சமமாகப் பரிமாறப் பட்டிருப்பது
நமக்கெல்லாம்
இந்த உணவு தான் !
இயற்கையாய் எழும் பசிக்கு ஏற்றது !
இந்தப் புலால் உணவுதான்
நல்லவர், தீயவர் எல்லோ ருக்கும் !
எல்லாரையும் சந்திக்க நான்
முன்வருவேன் !
ஒருவர் கூட இகழப் பட்டு
ஒதுக்கப் படார் !
வைப்பு மாது,
குப்பை கூட்டுவோன், திருடன் கூட
வரவேற்கப் படுவார் !
உதடு தடித்த அடிமையும்
உடலுறவு நோயாளியும்
வரவேற்கப் படுவார் !
அவருக்கும் பிறருக்கும் வேறுபா டிருப்பது
தவறு தான் !
இந்த நேரத்தில் சொல்லப் போவதை
இரகசிய மாய்ச் சொல்வேன் !
எல்லோ ருக்கும் சொல்வ தில்லை
சொல்வது உனக்கு மட்டும் !
+++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 27, 2013)
http://jayabarathan.wordpress.com/