சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் – புத்தக மதிப்புரை

0

த.க.தமிழ் பாரதன்

கவிஞர் வைரமுத்து : கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். இவர் வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

k

விலை : 70
பக்கங்கள் : 103
முதல் பதிப்பு : 1985
தற்போதைய பதிப்பு : 2011
பதிப்பு : 20

வெளியீடு: சூர்யா இலக்கியம், சென்னை
பேசி : 91-44-24914747

இன்று இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும் நூல் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.

இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதாக உள்ளது.

இது இளைஞர்களுக்கு உரமான மொழியில் அவர்களோடு உரையாடுகிறது.

“இல்லாத ஓர் ஊருக்கு யாரும் செல்லாத ஒரு வழியில் நீ தூக்கதில் நடப்பவனாய்த் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறாய். மயில் தோகைகளைப் பரப்பி மல்லிகைப்பூத் தெளித்த சாலை உனது கனவாக இருக்கிறது. ஆனால் காலில் ஆணியடித்துக் கொண்டு முட்களின் மீது நடப்பது தான் உனது எதார்த்தமாக இருக்கிறது”.

என எளிய நடையில் தரணியில் தடம் மாறி நடக்கும் இளைஞர்களுக்கு எதார்த்தத்தை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

மேலும், தன் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார் வைரமுத்து.

“நாளையின் நம்பிக்கைச் சுடர் நீதான் என்று உன்னைப் போலி வார்த்தைகளால் புகழ மாட்டேன்.
ஏனென்றால் – எரிந்து கொண்டிருப்பவனே நீ தானே!”
என்னும் வரிகளில் உண்மைக்கு உருவம் தருகிறார்.

ஆறுதல் தர வேண்டிய இடங்களில் ஆதரவு வார்த்தைகளையும், அறிவுரை தர வேண்டிய இடங்களில் படிப்பவர்க்கு புரியும் வண்ணம், அருமையான எளிமையான உவமை மொழிகளை உறுதி படவும் தெரிவித்துள்ளார் வைரமுத்து அவர்கள்.

“உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம் , முகத்துக்கு முன்னால் இருட்டு. கண்பார்வை உனக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை. ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் , சாவிகொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் மாறியுள்ளனர்”.

தற்கால கல்வி முறையால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குரியாகிறது என்பதை அருமையாக விளக்குகிறார்.

பிறிதொரு பக்கத்தில் “பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு” எனவும், பொழுது போக்கு என்பதே தேவையில்லை என தெளிவுற கூறுகிறார்.

இலட்சியம், கல்வி, கலை, உறவு, வீரம், எதிர்ப்பு, காதல், அடக்கம், புகழ், தாய்மண், என இன்றைய இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து 24 தலைப்புகளில் மாபெரும் கருத்துகளைச் சுமந்து நிற்கும் உளியாக நிற்கிறது ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ புத்தகம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.