திருமால் திருப்புகழ் (136)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
——————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————–

அரிமுகம் கண்டேன், அறிமுகம் கொண்டேன்,
பரிமுகப் பெம்மான் பெயரால், -திருமகள்,
செய்யாள் மடியிருக்க, அய்யா அயக்ரீவா,
கையால் அனுக்கிரஹம் காட்டு….(332)
கீழ்கொவள வீடில், குடியேறப் போகின்ற,
ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா, -கூழ்கவலை,
போக்கதனைப் போக்க, பிராட்டியுடன் ஏளினோய்,
காப்பெனக்கு உந்தன் குளம்பு….(333)
ஆனவரை பெய்த, அடைமழையில் ஆயர்கள்,
காணவரை ஏந்திய கண்ணனிடம், -நாணமுற,
வானவர்கோன் தோற்று, வளைந்தான் சமாதான,
வானவில்லாய் அம்புவிக்கு விட்டு….(334)
அற்புதம் செய்ய, அவதரித்த ஆய்குலத்தோன்,
பொற்பதம் போற்றிப் பணிந்திட, -கற்பூரம்,
மூச்சில் மணத்திடும், மூடக் கழுதைக்கும்,
ஆச்சரியம் கண்ணன் அருள்….(335)
மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடி, தயிருண்டு, -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா வந்திங்(கு) எழுது….(336)
திரும்ப சிறையில், பிறந்து சிரித்து,
விரும்பி வ்ரஜமண் விரைந்து, -கறந்த,
பசுக்கள் பால்மடி, பச்சிளங் கன்று
ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா…(337)
———————————————————————————————————
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2013_04_01_archive.html
