திருமால் திருப்புகழ் (151)
கிரேசி மோகன்
பெருமாள் திருப்புகழ்….
—————————————–
’’கண்ணன் திருப்புகழ்’’(விருத்தம்)
————————————————————
தூங்க வருகவே
——————————-
முடியில் கற்றை மயிற்பீலி புனைந்து
மடியில் பட்டுப் பீதாம்பரம் அணிந்து
நொடியில் ராதைக்காய் காத்துக் களைத்தவன்
அடியேன் என்னகத்தில் தூங்க வருகவே….(6)
அன்னையர் துரத்த ஆயர் பாடியில்
வெண்ணெய் திருடி வீதியோடிக் களைத்தவன்
பின்னையின் பின்னல் நிறத்தன் என்மனத்
திண்ணையில் சாய்ந்து தூங்க வருகவே….(7)
ஆசை கோபியர் அன்புக்கு அடிமையாய்
ராச லீலையில் மூழ்கிக் களைத்தவன்
வாச துளசி மாலை அணிந்தெனது
பூசை உள்ளில் தூங்க வருகவே….(8)
பூதனை நச்சுப் பாலொடு அவளின்
வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்
தீதினை விரட்டித் தூங்க வருகவே….(9)
இத்தரை இன்னல்கள் களைந்து தர்மம்
புத்துயிர் பெற்றிடப் பற்பல யுகத்தில்
பத்தவதாரம் பூண்டுக் களைத்தவன்
புத்தியில் யோகமாய்த் தூங்க வருகவே….(10)
—————————————————————————————————————————
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html