பாட்டுக்கு பாட்டெடுத்து, – கவிஞர் வாலி – படகோட்டி திரைப்பாடல்!!

1

கவிஞர் காவிரி மைந்தன்

kaviri

படகோட்டி திரைப்பாடல்கள் அனைத்தையும் வரைந்த கவிஞர் வாலிக்கு முழுக்க முழுக்க புகழ்மாலை சூட்டிய பாடல்கள்! அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் வாலியின் வாடாமலர்கள் இவை என்றால் அது மிகையில்லை!

விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில் விளைந்த அற்புதவிளைச்சல் எக்காலத்திற்கும் இப்பாடல்களை பவனிவரச் செய்கிற பணியை இனிதே செய்துகொண்டிருக்கிறது! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் உள்ள மாயம் என்ன.. எங்கே நாம் அறிந்துகொள்ள முடிகிறது? அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதொன்றும் அத்தனை எளிதில்லையே!!

எம்.ஜி.ஆர்.. சரோஜாதேவி இணைசேர்ந்து எத்தனையோ படங்களைத் தந்திருக்கும்போதும்.. இந்தப்படமும் இப்பாடல்களும் மகோன்னதம் பெற்றவை! கற்பனைகலந்த கவிதைமுத்துக்கள்.. காதலின் பாலபாடமாய்.. உரைநடைக் கவிதையாகவே ஓடிவரும் பாடலிது! உள்ளம்தொடும் கீதமிது! இப்படியொருபாடல் அதற்கு முன்னும் பின்னும் பிறந்திருக்கிறதா என்கிற ஐயம் எனக்கு உண்டு! பிரிவெனும் நெருப்பில் விழுகின்ற உள்ளங்கள் இரண்டும் இக்கரையில் ஒன்றும் அக்கரையில் ஒன்றுமாய் ஏக்கப்பெருமூச்சுடன் தூதுவிடும் படலம் நடக்கிறது! இடையே உள்ள நீர்ப்பரப்பு இருவருக்கும் சாதகமாக.. மனதின் துடிப்பையெல்லாம் வார்த்தைப் பூக்களாக்கி காற்றில்தவழவிடுகிறார்கள்!

கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவான பாடல்கள் இவை என்பதால் காலங்களைத் தாண்டி இன்றும் மக்கள் மனதில் இடம்பெறும் தகுதியைப் பெறுகின்றன!

kaviri1

புரட்சித்தலைவரின் புகழுக்கு மகுடம்சூட்டிய படகோட்டி திரைப்படம் பார்க்கப் பார்க்க சலிக்காதது! பாடல்களும் கேட்கக் கேட்கத் திகட்டாதவை என்பதற்கு இப்பாடலும் சாட்சியாகும்!

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க …நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "பாட்டுக்கு பாட்டெடுத்து, – கவிஞர் வாலி – படகோட்டி திரைப்பாடல்!!"

  1. இந்தப் பாடலுக்கு உருகியது போல வேற  எந்தப் பாடல் என்று யோசிக்கிறேன். வாழைப்பூ திரிஎடுத்து, என்று சுசிலாம்மா இழையும் போதும்,மின்னலாய் வகிடெடுத்து என்று எம்ஜிஆர்  உருகும்போதும் நெஞ்சும் அவர்களோடு போகும். மிக அருமை. பதிவு க்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.