முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
—கவிஞர் காவிரிமைந்தன்.
முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்றான் வள்ளுவன். மண்ணில் பிறந்த உயிர்கள் யாவும் ஒன்றையொன்று சார்ந்துவாழும் உன்னதம் ஜீவனில் தொடங்கியது. மானிடர்களே இந்த சொந்தமும் பந்தமும் மகத்துவமானது. ஈருயிர் இணைந்து ஓருயிர் தோற்றுவிக்க ஜனனக் கணக்கில் பூமிக்கு ஒரு வரவு! ஈன்றவள் நெஞ்சம் பெரிதுவக்க ‘தாய்’ என்று அவளும் மனதில் ஆர்ப்பரிக்க அந்த ஆனந்த வைபவத்தை அணுவணுவாய் ரசிப்பதிலே பெண்மை பெறும் சுகம் கோடியென்பேன்! பிஞ்சு மழலை முகம் பார்த்து அவள் சொல்லரும்பும் வேளையிலே என்ன என்ன வார்த்தை வரும்? கண்ணே கனியே முத்தே அமுதே என்று அல்லும் பகலும் தன் பிள்ளையே உலகம் என்றன்றோ மாறிவிடுவாள்?
தன்னுறக்கம் மறந்து தன்னுயிராய் நினைந்து அன்னையவள் பாடும் பாடல் பிள்ளைக்கனி அமுதே! மழலையின் சின்னச் சின்ன சிணுங்கல்களும் சிங்கார அசைவுகளும் தாய் அவளுக்கு மட்டுமே தனித்துவமாய் புரியும்! அந்த இன்பபுரி நோக்கி இதயம் ஓடிவர, வண்ணக் குழந்தையது வளர்பிறைபோல் நிதம் வளர, தவழ்வதும் தாவி வருவதும் நின்று நடப்பதும் தாயவள் காணும் திருவிழாக்களே!
ராமு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளை வழங்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை முழங்க, இன்னிசைப் பூங்குயில் பி.சுசீலாவின் குரலில் இழைந்து வரும் பாட்டு!
திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில் வல்லமை பெற்ற கவிஞர்கள் பலரை நாம் கண்டிருக்கிறோம். கண்டு கொண்டிருக்கிறோம்! என்றாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்களது முத்திரை தனித்துவம் கதையை உள்வாங்கி அந்தப் பாத்திரங்களைப் பிரதி பிம்பம் எடுத்துக் காட்டும் கவிஞரை எவர்தான் இன்று வரை விஞ்சியிருக்கிறார் சொல்லுங்கள்?
தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்
கதையின் போக்கில் பிள்ளையின் அன்னை ஒரு கோர விபத்தில் மரணமடைகிறாள். அதைப் பார்த்த சிறுவன் அதிர்ச்சியில் பேசும் தன்மை இழக்கிறான். பட்டாளத்தில் இருந்து திரும்பும் தந்தை குழந்தையின் எதிர்கால வாழ்வுக்காக, அவன் மீண்டும் பேசும் சக்தி பெற வேண்டும் என்கிற லட்சியத்துடன் வாழ்கிறான் என்று நகர்கிறது கதை. இவர்களின் வாழ்விலே இன்னொருத்தி நுழைகிறாள். கனிந்த மனம் காதல் மனமாகிறது! தாயென்று ஆகும் முன்னரே அப் பிள்ளையின் தாயாகவே மாறிவிடுகிறாள் சொற்களில் அந்தக் கதையின் சூத்திரங்களைப் பொருத்தி அற்புதமாகப் பாடல் யாத்துத் தந்துவிடுகிறார் பாருங்கள்.
பெற்றவள் உள்ளம் போல் பெரிதும் உவக்க, மற்றவள் ஒருத்தி அப்பதவிக்கு வர மன்றாடுகிறாள். தாயாய் தானும் மாறும் முன்னே தாய்மையின் தரிசனம் காட்டுகின்றாள். தத்தி நடக்கும் முத்துச் செல்வத்தை தங்கத் தேரில் உலவ வைக்கிறாள்! பிள்ளைத் தமிழின் பேரின்பத்தை சொல்லிச் சொல்லி இன்பம் துய்க்கிறாள்!
பெண்ணின் மனது என்ன சொல்லும் என்பதை உணர்ந்த கண்ணதாசன் என்று சொல்லலாமா? இல்லை … இல்லை… உணர்த்திய கண்ணதாசன் வார்த்தைச் சரங்களைத் தொடுக்கிறார்!
ரசிக்கத் தெரிந்த எந்த மனமும் இந்தப் பாடலைக் கேட்டு மயங்கத் தவறியதில்லை!
திரைப்படம்: ராமு
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
பாடியவர்: பி.சுசீலா
நடிப்பு: கே.ஆர்.விஜயா, ஜெமினிகணேசன், மாஸ்டர் ராஜ்குமார்
முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றிப் பிறந்து வரும்
அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)
தாயிருந்து பள்ளி கொண்ட மஞ்சம் – அதில்
தானிருக்கத் துள்ளும் எந்தன் நெஞ்சம்
சென்ற உலகம் இன்று திரும்பும்
தேடி எடுத்தால் கோடி மலரும்!
அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)
மூவருக்கும் சின்னச் சின்ன வீடு – அதில்
மூன்றுதமிழ் வந்ததென்று பாடு
அன்பு மொழியும் இன்ப இசையும்
தங்க மழையும் பொங்கி வழியும்
அம்மம்மா….ஆ அப்பப்பா… ஆ…
தித்திக்கும் சேதி வரும்…. (முத்துச்சிப்பி)
காணொளி: https://youtu.be/vb07dtn23mg