-மேகலா இராமமூர்த்தி

மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா!
 என்று மங்கையரைப் போற்றினார் கவிமணி. அத்தகைய மாதவத்தோரான மங்கையர் புன்னகைபூத்த முகத்தோடும், புதுவண்ணங்கள் வழியும் உடலோடும் புகைப்படத்தில் நின்றிருப்பது வாராதுபோல் வந்த வசந்தகாலத்தை வரவேற்கவோ?

girls with holy colors

திரு. ராஜ எடுத்திருக்கும் இந்த வண்ணப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். நன்றி இவ்விருவருக்கும்!

கவிஞர்களின் புத்தாக்கங்களைப் படித்துமகிழும் தருணமிது! புறப்படுங்கள்!

***

”சாயம்பூசி வசந்தம் கொண்டாடும் இந்த அழகுச் சிறுமலர்களைக் காமுகர்களிடமிருந்து காத்திடுங்கள் கடவுளரே” என்று மங்கையரின் நல்வாழ்வுக்காக மன்றாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

சாயம் உடலில் பூசிடினும்
சாயா அழகுச் சிறுமலர்கள்,
மாயம் மந்திரம் ஏதுமில்லை
மாறா வெகுளிப் புன்னகைகள்,
காயம் மனதில் உள்ளவர்தம்
காமப் பார்வை தனில்சிக்கிக்
காயம் படாமல் காத்திடவே
கணத்தில் வருவீர் கடவுள்களே!

*** 

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

’பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்று பகர்ந்த தெய்வப்புலவன் அவதரித்த தமிழ்நாட்டில் இன்றோ வருணாசிரமத்தின் பெயரால் கருணையின்றி மனித உயிர்கள் காவுவாங்கப்படுகின்றன!  சக மனிதர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி நம் பண்பாட்டை அழிப்போர் சகத்தில் வாழ்வது மாந்த இனத்திற்கே பெருத்த அவமானம் ஆகும்!

”வண்ணங்களால் வசந்தம் பூசிக்கொள்ளும் மனித மனத்தை, எண்ணங்களால் மனிதன் வேறுபடுத்துதல் வேதனைக்குரியது; வண்ணங்களே இயற்கைக்கு அழகூட்டுவன; புதிய சாலங்கள் காட்டுவன. அவற்றை மனிதனின் சுயநலம் சிதைக்கலாகாது” என்று நயமாய் உரைக்கும் கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!

வண்ணங்களே இங்கு
வாழ்க்கையாகின்றன….
எண்ணங்களால் அதை
பேதப்படுத்துகிறான் மனிதன்!

வண்ணங்களால் மனம்
வசந்தத்தைப் பூசிக்கொள்கிறது….
வார்த்தைகளால் அதன்
தட்பவெப்பநிலை மாறுபடுகிறது.

வண்ணங்களால் இயற்கை
எல்லையிலா எழில் பெறுகிறது…..
சுயநலத்தால் மனிதரதைச்
சிதைத்து விடுகின்றனர்.

வண்ணங்களால் இறைவனும்
வடிவழகைப் பெறுகின்றான்……
மதப்பூச்சால் வேறுபட்டு
மாகடவுள் நிறமிழக்கின்றான்.

வண்ணங்களால் சூழுலகுஅதன்
வடிவம் கெடாது கொண்டாடு பெண்ணே
வண்ணத்துப்பூச்சிகளை இழந்துவிட்டு
அவையுதிர்த்த வண்ணங்களால் ஏதுபயன்?

வண்ணங்களை மனதிலிருந்தகற்றி
வாழ்க்கையினை வாழ்ந்து பார்!
புறவுலகின் பூக்களெலாம்
வண்ணங்களின் பாடம் புகட்டும்!

இன்னும் பலமுறை
பேதமிலாது
வண்ணங்கள் பூசிக்கொள்ளுங்கள்….
இருக்கின்ற உலகம்
அடடாவோ…..
எத்தனை எழில் கொள்ளும்!

புறவுலகின் பூக்கள் நம் அகவாழ்வுக்கு அழகுசேர்க்கட்டும் என்று இதமாய்ச் சொல்லுகின்ற இனிய இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

***

வறுமை மறந்து வானவில்லாய் ஆடுங்கள்; சாதி மறந்து சமத்துவ ஹோலி கொண்டாடுங்கள் என்று உற்சாகமூட்டும் கவிதை ஒன்று!

வறுமை மறந்து சிரித்திடவே 
வானவில் லாட்டம் ஆடிடுங்கள் !
பெருமை சிறந்து திகழ்ந்திடவே
   பொறுமை யாட்டம் இருந்திடுங்கள் !
கருணை கொண்ட விளங்கிடவே 
கடவு ளாட்டம் மின்னிடுங்கள் !
சாதி மறந்து வாழ்ந்திடவே 
சமத்துவ ஹோலியை விதைத்திடுங்கள் !

எளிய வரிகளில் அரிய வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லியிருக்கும் திருமிகு. ஹிஷாலியைப் பாராட்டுகின்றேன்.

கவிஞர் பெருமக்களே! கவிதைகளின் வரவு இவ்வாரம் மிகவும் குறைந்திருக்கக் காண்கின்றேன். சிந்தனைச்செல்வம் நிரம்பப்பெற்ற உங்களிடமிருந்து அதிக ஆக்கங்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கின்றேன். நன்றி!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 57-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *