நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம்

0

-க.பிரகாஷ்  

ஒவ்வொரு மனிதச் சமுதாயமும்  தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனைச் சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவற்றை “கை வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்”கூறுவார். (ETHNO MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETC.,) மிகப் பழமையான மருத்துவ முறை என்று ஆயூர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவார். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது.

நாட்டுப்புற மருத்துவமுறை பற்றி இந்திய நாட்டில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழங்குடிகளை ஆராய்ந்து மேலைநாட்டு மானிடவியலறிஞர்கள் நாட்டுப்புற மருத்துவம் பற்றிச் சில குறிப்புகளை எழுதியுள்ளனார். இம்மருத்துவ முறை கிராமப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடும் சமூக அமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக் கேற்ப நவீன மருத்துவ முறைகளையும் மேற்கொள்கின்றனா். பழங்குடி மக்களிடையேயும் நாட்டுப்புற மருத்துவம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அவை…

வீட்டு வைத்தியம்

சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவை வீட்டுப் trikadukamபுழக்கத்திற்கான பொருள்கள். இவை நோய்களைத் தீா்க்கும் மருத்துவ குணம் பெற்றவையாகவும் திகழ்கின்றன. வீட்டுச் சமையலுக்கான பயன்பாட்டுப் பொருள்களே மருந்துகளாகி நோய்களைப் போக்க உதவியதால் இது வீட்டு வைத்தியம் எனப் பெயர்பெற்றது. தங்களது அனுபவத்தின் அடிப்படையில் செய்திருக்கும் மருத்துவம் வீட்டு வைத்தியமாகும்.

பரம்பரை வைத்தியம்

தந்தை மகனுக்குச் சொல்ல மகன் அவன் மகனுக்குச் சொல்ல ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன தொழில் முறையான மருத்துவ முறை பரம்பரை வைத்தியம் ஆகும்.

இயற்கை வைத்தியம்

ஒவ்வொரு மனிதனிடமும் நோய் வராமல் தடுக்கும் சக்தியும், நோய்வந்தால் அதனைத் தடுக்கும் சக்தியும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இது இயற்கை மருத்துவம் ஆகும்.

மூலிகை வைத்தியம்

மருத்துவ குணங்கள் அடங்கிய செடி, கொடி, வேர், தாவர வகைகளைக் கொண்டு நோய்களைப் போக்கும் மருத்துவமுறை மூலிகை வைத்தியம்  ஆகும்.

கை வைத்தியம்

நாட்டு வைத்திய முறைகளில் கைப்பக்குவம் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மருந்துப் பொருள்களை இடிப்பதும் அரைப்பதும், மருத்துவச் செயல்களாகக் கொண்டு இருந்தனா். இடித்து அரைத்து மருந்துகளின் சீரான தன்மையைக் கைவிரல்களால் தொட்டுத் தடவிப் பார்த்து, அதன் பக்குவம் அறியப்படுகிறது. மருந்தின் அளவை ஒரு கைப்பிடி அல்லது ஒரு சிட்டிகை என்று சொல்லும் போக்கு கிராமங்களில் உண்டு. மருந்தைப் பதம்பார்க்க கைப்பக்குவம் பயன்படுவதால் நாட்டு மருத்துவத்திற்குக் கை வைத்தியம் எனப் பெயா் வந்தது. தனக்கு வந்த நோயைத் தானே போக்கிக் கொள்வதற்குக் கை வைத்தியமே ஒரு முக்கியப் பங்காக அமைகிறது.

பச்சிலை வைத்தியம்

செடி வகையைச் சார்ந்த ஒரு வகை மூலிகை பச்சிலை எனப்படும். தாவரத்தின் இலைகள் நல்ல மணத்துடன் கசக்கினால் சாறு வரக்கூடியதாக இருக்கும். இதன் இலைகளும், விதைகளும், மருத்துவ குணமுடையவையாகச் சொல்லப்படுகிறது. தலைவலி, இருமல் போன்ற நோய்களுக்குப் பச்சிலை நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. நோய்களைத் தீா்ப்பதால் இதற்குப் பச்சிலை வைத்தியம் என்று பெயா்வந்தது.

எ.கா.

அம்மை : வேப்ப இலை மீது படுக்கச் செய்தல்.

காது வலி : சுரைக்காய் இலைச் சாற்றைக் கசக்கிக் காதில் விடுதல்.

முதுகு வலி : புளியந் தழையை  ஒட்டுதல்.

இராஜ வைத்தியம்

மன்னர்கள் காலத்தில் மன்னனுக்கு மருத்துவம் பார்க்கும் அரண்மனை மருத்துவா் இராஜ வைத்தியா் என்றழைக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவா் அவிசென்னா அரபி மன்னரின் அரசவை  மருத்துவராக 16 வது வயதில் நியமிக்கப்பட்டார் என்னும் செய்தி மூலம் அக்காலத்தில் அரண்மனை மருத்துவா்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அரசரின் நோய் தீா்க்கும் மருத்துவா் எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சியையும் மருத்துவத்திற்கு உண்டாகும் பெரும் பொருள் செலவையும் மனதிற் கொள்ளும் மருத்துவமுறை இராஜ வைத்தியமாகும். 

இரகசிய மருத்துவம்

நோயைக் குணமாக்கும் மருந்து மற்றும் அந்த மருத்துவ முறைகளை வெளியில் சொல்லாமல் தொழில்முறையில் செய்துவரும் மருத்துவ முறை இரகசிய மருத்துவ முறையாகும்

பாட்டி வைத்தியம்

உணவே மருந்து” என்பது அனுபவ மொழி.

சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள், கீரை வகைகள் ஆகியவை மருத்துவ குணங்கள் மிக்கவையாகக் கருதப்படுகிறது. காலங்காலமாக வீட்டின் உணவுக் கூடங்கள் பெண்களின் பொறுப்பில் இருந்து வருவதால் இம்மருத்துவப் பயன்பாடுகளைப் பெரிதும் அவா்கள் அரிந்திருப்பார்கள்.

உணவு வகைகள் பல குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளும். சிலரின் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை அருகிலிருந்து பார்த்துத் தம் பட்டறிவால் அதனைச் சரிசெய்ய முயல்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். இதுவே பழக்கவழக்கமானது. எனவே இதற்குப் பாட்டி வைத்தியம் எனப் பெயா் வந்திருக்கலாம்.

ஒரு நோயை குணப்படுத்துவதற்கு அக்காலத்தில் மரப்பட்டைகள், உணவுப்பொருட்கள், பச்சிலைகள், வேர்கள், கசாயம், காய்கள், கனிகள், செடிகள், தாவரக் கொழுந்துகள், தாவரங்களின் (பால்), பழங்கள், கீரைகள், போன்றவை பயன்படுத்தப்பட்டன. சிறு குழந்தைகளில் இருந்து பெரியவா்கள் வரையும் இம்மருத்துவமுறையைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி வருவதுண்டு.

இது மட்டுமல்லாமல் கிராம மக்கள் நம்பிக்கை சார்ந்த மருத்துவத்தையும் பயன்படுத்துவது உண்டு. மருத்துவா் கூறும் மந்திரங்களை வெளியில் சொன்னால் நோய் குணமடையாது (பலிக்காது) என்று குறிப்பிடுவதும் உண்டு. அவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களை வேறு யாவரும் பயன்படுத்தமுடியாது. அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே இம்மந்திரம் சொல்லிக் கொடுக்கப்படும். இம்மருத்துவத்தைப் பரம்பரை மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவம் அளவுகடந்து இருந்தாலும் சில மலைவாழ் மக்களும், கிராம மக்களும் இவ்வகையான நாட்டு மருத்துவத்தைக் கைவிடுவதில்லை.

***

பார்வை நூல்கள்

  • நாட்டுப்புற இயல் ஆய்வு – சத்திவேல்.சு
  • நாட்டு மருத்தவம் – சந்திரன்.ந

***

க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
தமிழ்த்துறை
தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.