“நான்” என்னும் ஒரு நாடகம்
க. பாலசுப்பிரமணியன்
கரையோரம் கால்நனைத்துக் கடல்மீளும் அலைபோல
காற்றிழுக்கக் கரைசேரும் என்னுயிரே!
கார்மேகம் இடையிடையே கண்சிமிட்டும் மின்னலைப்போல்
களிப்படைந்த புலன்காட்டும் புன்சிரிப்பே!
வானுயரப் பறக்கின்ற நீர்த்திவலை நிலம்காட்டும்
வண்ணம்போல் வானவில் கனவுகளே !
வாடாத மலரென்றும் வாசம்வரும் நித்தமென்றும்
வாழ்க்கையை வாழ்த்துகின்ற மனமே !
போகுமிடம் தெரியாத புதிரென்று புரிந்தபின்னும்
போகத்திலே விடைதேடும் வாழ்வே !
போதாத மனம்கொண்டு புகலிடம் தேடிச்சென்று
போராடி புலியாட்டம் போடும் ஆசைகளே !
முதல் இதுவென்றும் முடிவு அதுவென்றும்
முன்னறியாப் பிறவியன்றோ நான் !
முடியாத விளையாட்டிலென்னை முதலாக வைத்து
முன்வினைக்குப் பழிதீர்க்கும் படலமிதோ?
புலியாக, நரியாக, புள்ளாகப் புழுவாக
புவியரசாய் நான் போடாத வேடமில்லை !
புரியாத கதையிதுவும் முடிகின்ற நேரத்தில்
புரியாமல் எனைக்கண்டே நான் நகைக்கின்றேன் !
அருமையான ஆத்ம ஆய்வு பரிசீலனை
தங்கள் பாராட்டுதலுக்கு உளங்கனிந்த நன்றி.
அன்புடன்
க பாலசுப்ரமணியன்