மதிப்புக்கூட்டு வரி உயர்வு..
பவள சங்கரி
தலையங்கம்
நேற்று அதிரடியாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மதிப்புக் கூட்டு வரியின் மூலமாக விலையேற்றத்தை அதிகரித்துள்ளனர். அபரிமிதமான இந்த விலையேற்றத்தின் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதன் மூலமாக தமிழ்நாட்டில் எத்தனை கோடி உரூபாய் அரசு கருவூலத்திற்கு வந்துள்ளது. இது இந்தியச் சுதந்திர நாட்டின் ஒரு பகுதியா அல்லது அந்நிய ஆட்சியே மீண்டும் வந்துவிட்டதா? எல்லையில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதா அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளதா. இந்த வரி உயர்வின் மூலம் நிலைமை சீராகலாம் என்பதற்கு அந்நியர் ஆட்சி சுதந்திரப் போராட்டத்தின் போது உப்புக்கு வரி விதித்ததுபோல, அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோலுக்கும், டீசலுக்கும் வரி விதித்துள்ளனர். தேவையற்ற இலவசங்களை அறிவித்துவிட்டு அதற்குத் தேவையான பொருட்களின் மீது வரி விதிப்பது என்ன நியாயம். ஒரு சதவிகிதம் பேருக்கு அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு இலவசங்களை அளிப்பதற்காக 99% மக்களுக்கு வரி விதித்து வேதனை அளிக்கலாமா? நேற்று பெசண்ட் நகர் கடற்கரையில் பெண்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் கூடி, ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று முழங்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அனுமதியின்றி அங்கு கூடியுள்ளது சட்டப்படி தவறு என்றும், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று கோருவது அவர்களுடைய தரப்பில் அது தவறானது என்பது போல கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்று முழங்கியவாறு சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடியவாறு ஊர்வலமாகச் சென்றுள்ளனர். இனி இதுபோல் தேவையற்ற வரி உயர்வுகளை அனைத்துப் பொது மக்களும் ஒன்றுகூடி ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டிய சூழலும் ஏற்படலாம்.
இப்பொழுது தமிழகத்தை ஆளும் கட்சி சந்தேகத்திற்குரிய நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றதை ஆட்சேபித்து சென்னை உயர்நீதி மன்றம், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடமும் இந்தப் பிரச்சனைகளை கொண்டு சென்றுள்ள இந்த நேரத்தில் இந்த அபரிமிதமான வரிவிதிப்பில் அனைத்துத் துறையினர், மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதே உண்மை நிலை.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை அதிகரித்திருப்பது சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற ஐயமும் மக்கள் மத்தியில் உள்ளது.