எட்டுக் கோணல் பண்டிதன் – 12

0

தி. இரா. மீனா

            அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

11. விகற்பமில்லாத தன்னிலை உடையவனுக்கு அரசாட்சியிலும்,பிச்சை எடுப்பதிலும்,லாப நஷ்டங்களிலும், மக்கள் கூட்டத்திலும், காட்டிலும் விஷேஷமென்று எதுவுமில்லை.

12. இதைச் செய்தோம், இதைச் செய்யவில்லை என்னும் இரட்டையிலிருந்து விடுபட்ட யோகிக்கு அறம், பொருள், இன்பங்கள் எங்கேயுள்ளன!

13. ஜீவன் முக்தராகிய யோகிக்குக் கடமையேதுமில்லை. மனதில் பற்றுதல் இல்லை. இயல்பாக இருப்பதே அவர் தொழிலாகும்.

14. நினைப்பனைத்தின் முடிவிலே இளைப்பாறுகின்றவருக்கு மோக மெங்கே, உலகமெங்கே, தியானமும், விடுதலையும் எங்கே?

15. உலகத்தைக் காண்பவன் அஃதில்லையென்று சாதிக்கட்டும். உலகைக் கண்டும் காணாதவன் என்ன செய்வது ?

16. பரம்பொருளைக் கண்டவன் அப்பரமே நான் எனக் கருதவேண்டும். இரண்டாவதைக் காணாதவன்- நினைப்பற்றவன்-எதை நினைப்பான்?

17. தன் ஆசையைக் காண்பவன் அதை அடக்குவான். பெரியார் ஆசையடைய மாட்டார். அடைவதற்கு எதுவுமில்லாத போது அவர் எதைச் செய்வார்?

18. உலகத்து மனிதர்களைப் போல இருந்தாலும் ஞானி அவர்களிலிருந்து மாறுபட்டவன். தனக்குக் களங்கம் வருவதை அவன் ஒருகாலும் அனுமதிக்க மாட்டான்.

19. நினைப்பும்,  நினைப்பின்மையுமற்று,  வாதனையற்று  நிறைவுற்றிருப்பவன் உலகப் பார்வையில் பல செய்தும் உண்மையில் எதுவும் செய்யாதவனே.

20. எதை எப்போது செய்ய நேர்கிறதோ அதைச் செய்து சுகமாக இருக்கும் தீரனுக்கு எந்தக் கவலையுமில்லை.

21. பற்றற்று, கட்டற்றுச் சுதந்திரமாக இருப்பவன் காற்றில் சருகென வினையை ஏற்றாடுவான்.

22. உலகியல் அற்றவனுக்கு எதனிடமும் களிப்போ, ஏக்கமோ உண்டாகாது. அவன் என்றும் மனம் குளிர்ந்து உடலற்றவன் என ஒளிவிடுவான்.

23. மாசற்றுக் குளிர்ந்த உள்ளமுடையவனாகத் தனக்குள் மகிழ்ச்சி அடையும் தீரன் எதையும் ஒழிக்க நினைக்க மாட்டான். அவனுகெங்கும் அழிவில்லை.

24. இயல்பாகவே மனதில் எதுவும் இல்லாதவனாகச் செயல்படும் தீரனுக்கு பாமரர்களுக்குரிய மான, அவமானங்கள் இல்லை.

25. இந்த வேலையைச் செய்வது உடலே நானில்லை என்னும் கருத்தைப் பின்பற்றுபவன் செய்தும் செய்யாதவனே.

26. ஆர்வமற்றவன் போலச் செயல்பட்டாலும் அவன் சாதாரணனில்லை. ஜீவன் முக்தனான அவன் உலகில் உழன்றாலும் தன் தன்மையிலிருந்து மாறமாட்டான்.

27. பற்பல ஆராய்ச்சிகளால் களைத்த தீரன் எதையும் நினைக்க மாட்டான், அறிய மாட்டான், கேட்க மாட்டான், பார்க்க மாட்டான்.

28. சமாதியும், சமாதியின்மையும் இல்லாததால் ஞானி அறிஞனு மில்லை; பாமரனுமில்லை. உலகம் கற்பிதமென நிச்சயித்து அதைப் பார்க்கும் போது பிரம்மமாயிருக்கிறான்.

29. எவனுக்கு மனதில் அகந்தையிருக்கிறதோ அவன் செய்யாதவனாக இருந்தாலும் செய்கிறான். அகந்தையில்லாத தீரன் செய்தும் ஒன்று மில்லை.

30. முக்தனது மனம் குழப்பமின்றி, குதூகலமின்றி, தொழிலின்றி,  அசைவின்றி, ஆசையின்றி இருக்கிறது.

31. ஆலோசிக்கவோ, செயல்படவோ முற்படாத உள்ளம் எந்தக் காரணமுமில்லாமல் ஒரொருகால் ஆலோசிக்கும், செயல்படும்.

32. உண்மையை உள்ளபடி கேட்கும் சாதாரணன் மயக்கமடைகிறான். ஞானியோ சாதாரணனைப் போல ஒடுக்கம் அடைகிறான்.

33. சித்த ஓர்மையையும், அடக்கத்தையும் சாதாரணர் மிகப் பழகுவர். தூங்கியவர் போலத் தன்னிலை நிற்கும் தீரர் செய்யக் கூடியது எதையும் காண்பதில்லை.

34. முயற்சியினாலோ, முயற்சியின்மையாலோ சாதாரணர் அமைதியடைவதில்லை.  அறிஞரோ உண்மை நிச்சயத்தாலேயே சாந்தனாகிறார்.

35. அப்பழக்கத்தையே மேற்கொண்ட மனிதர்களும் உலகற்று நோயற்று அறிவோடு அன்போடு நிறைவாய்த் திகழும் தம்மையுணர்வதில்லை.

36. சாதாரணர கன்மத்தால்  விடுதலை பெறுவதில்லை. புண்ணியவான்  ஞானத்தினால் விடுபட்டு நிலை பெறுகிறான்.

37. அதுவாக விரும்புவதால் சாதாரண மனிதர் அப்பரம்பொருளை அடைவதில்லை தீரனோ விரும்பாமலே  பரம்பொருளே தானாயிருக்கிறான்.

38. ஆதாரத்தை விட்டு எதையும் அடைய விரும்பும் அவிவேகிகள் பிறவிச் சுழலைப் பெருக்குவார்கள். விவேகிகள் பிறவி வேரையே அறுத்து விடுவார்கள்.

39. சாந்தியடைய விரும்பும் சாதாரணர் சாந்தியடைவதில்லை. தீரன் உண்மையை உணர்ந்து என்றும் மனமடங்கியிருக்கிறான்.

40. காட்சியைப் பற்றி நிற்பவனுக்கு ஆன்மப் பார்வை எங்கேயிருக்கிறது? தீரர் அதையும், இதையும் காணாமல் அழிவற்ற ஆன்மாவையே காண்பார்கள்.

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.