Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்!

    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    ஆடை  இன்றி  அவனியில்  பிறந்தோம்
    ஆசை இன்றி பிறந்தவர் இல்லை
    ஆசை என்னும் தொட்டிலில் அனைவரும்
    ஆடி ஆடியே அவனியில் உழல்கிறோம்

    கருவில் தொடரும் ஆசை என்பது
    பெருகிப் பெருகிப் பெருங்கடல் ஆகுது
    பெருங்கடல் எழுகின்ற பேராசை அலைகள்
    எழும்பிக் குதித்து சதிராட்டம் போடுது

    மண்ணில் ஆசை பெண்ணில் ஆசை
    மணி மகுடத்தைச்   சூடவும்   ஆசை
    எண்ணில் அடங்கா ஆசைகள் எழுந்து
    எம்மை இழுத்து இன்னற்குள் வீழ்த்துதே

    வரமும் உரமும் பெற்றவர் பலரும்
    அனைத்தும் இழந்தனர் அவரது ஆசையால்
    காவியம் கதைகள் ஆசையின் அவலம்
    செப்பிடும் திறத்தை சிந்தையில் வைப்போம்

    மாபெரும் மன்னர் மடிந்தனர் ஆசையால்
    மாபெரும் ராஜ்ஜியம் அழிந்தது ஆசையால்
    ஆளுமை மிக்கவர் அழிவதும் ஆசையால்
    ஆசையை அணைத்தால் அனைவர்க்கும் அழிவே

    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    அப்போதே சொன்னார் திருமூலச் சித்தர்
    அப்போது சொன்னது எப்போதும் பொருந்தும்
    சித்தரின் வாக்கைச் சிந்தையில் இருத்துவோம் !

    Share
  • மலரும் மாலையும்!

    மலரும் மாலையும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    காலையிலும் மலர்வேன் மாலையிலும் மலர்வேன்
    கவலையின்றி இருப்பேன் களிப்பதனைக் கொடுப்பேன்
    நாரெடுத்து என்னைக் கட்டிடுவார் மனத்தில்
    நானெடுப்பேன் அப்போ மாலையெனும் பெயரை

    மலர்மாலை சூட்டி மகிழ்ந்தாள் ஓர்மங்கை
    மாலவனும் அதனை வாஞ்சையுடன் ஏற்றான்
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாகினாள்
    கொண்டாடி மகிழுந்திடும் கோதை நாச்சியார்

    பூமாலை புனைந்தேத்தப் புகன்றார் நம்மப்பர்
    பாமாலை பூமாலை பரமனுக்குச் சாற்றினார்
    ஆழ்வார்கள் அடியார்கள் அனைவருமே கரமேந்தி
    பூமாலை கட்டினார் புனிதமுடன் சாற்றினார்

    மலரிறைவன் மாவடியைத் தொழுதபடி இருக்கும்
    மலர்மாலை மாயிறையின் மார்பினையே தழுவும்
    மாயிறையின் மாவடியும் மாண்புநிறை மார்ப்பும்
    மலருக்கும் மாலைக்கும் வாய்த்த பெருவரமே

    பூக்கொண்டு தொழுதால் வாக்குண்டு நல்மனமுண்டு
    மாமலராள் நோக்குண்டு மேனியும் நுடங்காதென்றும்
    மூதாட்டி அவ்வையார் மொழிந்திட்டார் பூச்சிறப்பை
    பூவெடுத்துச் சாற்றுவோம் பூமாலை சூட்டுவோம்

    மண்ணுலகில் வாழ்வாரின் வாழ்வெல்லாம் பூவிருக்கும்
    மங்கலத்தில் பூவிருக்கும் அமங்கலத்தில் வந்திருக்கும்
    தொட்டிலும் இருக்கும் கட்டிலிலும் இருக்கும்
    சுடுகாடு வரைக்கும் தொடர்ந்துவிடும் பூமாலை

    வெற்றியிலும் மாலைவரும் விழாவினிலும் மாலைவரும்
    சுற்றிநின்று வாழ்த்திடுவார் கரங்களிலும்  மலரிருக்கும்
    மலராலே பிறக்கின்ற மலர்மாலை மகத்துவத்தை
    மாநிலத்தில் வாழ்வார்கள் மனமிருத்த வேண்டுகிறேன்!

    Share
  • திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்!

    திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அரனாரின் திருக்குமரன் அருளாலே அருணகிரி
    அமுதமாய் திருப்புகழை அள்ளியே வழங்கினார்
    அள்ளியே வழங்கிய அமுதத் திருப்புகழை
    தமிழன்னை மனமேற்றித் தானணைத்துக் கொண்டாள்

    சம்பந்தப் பெருமானே சந்தத்தின் தந்தை
    அவர் வழியைப் பற்றினார் அருணகிரிநாதர்
    அன்னைத் தமிழன்னை அகமகிழச் சந்தத்தை
    அள்ளி அள்ளி வழங்கினார் அருணகிரிநாதர்

    இத்தனை சந்தங்கள் எப்படித்தான் வந்தனவோ
    எண்ணியே பார்த்திட்டால் வியப்புத்தான் எழுகிறது
    பக்தியுடன் அருணகிரி பாடிவைத்த அனைத்தும்
    சித்தமதைத் திருத்த வந்த தத்துவங்களாகும்

    அருணகிரி வாழ்விலே அளவிலாத் துன்பம்
    துன்பத்தைத் தாங்காமல் துடித்தாரே அருணகிரி
    மண்ணைவிட்டு மறைந்துவிட மலையுச்சி நின்றார்
    விழுகின்ற வேளையிலே வேலவனே தாங்கினார்

    தாங்கி நின்றவேலவன் தமிழ்பாடு என்றார்
    முத்தைத் தருவே முதலாக வந்தது
    திருமுருகன் தாங்கியதால் திருப்புகழே மலர்ந்தது
    தமிழன்னை செய்தவத்தால் சந்தக்கவி நிறைந்தது

    திருப்புகழைப் பாடினால் செய்தவினை அகலும்
    திருப்புகழைப் பாடினால் சிறப்பாக வாழ்ந்திடலாம்
    திருமுருகன் ஓடிவந்து திருவருளைத் தந்திடுவான்
    தினமுமே திருப்புகழைப் பாடிடுவோம் வாருங்கள்

    துன்பமும் துயரமும் சொல்லாமல் ஓடிவிடும்
    துரத்துகின்ற வல்வினைகள் பொடிப்பொடியாய் ஆகிவிடும்
    திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்
    திருத்தமுடன் வாழுதற்குத் திருப்புகழைப் படித்திடுவோம் !

    Share
  • மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே!

    மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    திருவாத வூரார் சிறப்பினை அறிந்து
    அரசனே நாடி அமைச்சர் ஆக்கினான்
    அமைச்சராய் இருந்தார் அலங்காரம் வெறுத்தார்
    அவரது அகமோ புனிதமாய் இருந்தது

    ஆடம் பரங்கள் அரசுச் சுகங்கள்
    அமைச்சராய் இருந்தும் அகமேற்க வில்லை
    ஆண்டவன் நினைப்பு ஆன்மீகச் சிந்தனை
    திருவாத வூரரின் சிந்தையை நிறைத்தது

    பொன்னையும் பொருளையும்  பொருட்டென எண்ணா
    மன்னனின் அவையில் இருந்தார் அவரும்
    மன்னனின் மனத்தின் மாறு பாட்டினால்
    அமைச்சராய் இருந்தவர் அல்லற் பட்டார்

    அல்லல் பட்டதை ஆண்டவன் பொறுக்கா
    அமைச்சரைக் காத்து அரசனை மாற்றினார்
    வாதவூர் பிறந்தார் பரமனைக் கண்டார்
    மனதில் உள்ளதை மாணிக்கம் ஆக்கினார்

    மனிதராய் பிறந்த மாணிக்க வாசகர்
    சொல்லச் சொல்ல சொக்கன் எழுதினார்
    சொக்கனே சொக்கினார் சுந்தரத் தமிழில்
    செந்தமிழ் தேனாய் திருவாசகம் மலர்ந்தது

    உருகா மனத்தையும் உருகிட  வைக்கும்
    திரு வாசகத்தைத் தேனே என்போம்
    உருவாய் அருவாய்  இருக்கும் இறைவன்
    உணர்வாய் இருப்பான் திரு வாசகத்தில்

    மாணிக்க வாசகர் மனமெலாம் சிவனே
    அழுதார் தொழுதார் அவனடி பற்றினார்
    அழுகை அனைத்தும் அருந்தமிழ் ஆனது
    ஆனது அனைத்தும் தத்துவக் குவியலே

    அறுபத்து மூன்று நாயன் மாரும்
    அரனது அருளினைப் பெற்றவர் ஆவார்
    திரு வாசகத்தேனை ஈந்தவர் மட்டும்
    சிவனது பாதத்தின் அருகிலே அமர்ந்தார்

    உருவில் ஆணாய் உணர்வில் பெண்ணாய்
    திருவாசக மனைத்தும் செப்பினார் வாசகர்
    அதனால் உருக்கம் அதனால் இரக்கம்
    அனைத்தும் வாசகர் தமிழாய் மலர்ந்தது

    எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவனருள்
    எண்ணிப் பார்த்தால் எல்லாம் சிவமே
    எண்ணில் அடங்கா எத்தனை தத்துவம்
    தத்துவம் அனைத்தும் தளையெலாம் போக்கும்  !

    Share
  • யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து!

    யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நல்லூரான் திருவடியில் நாளும்பல அதிசயங்கள்
    நாடிவரும் அனைவருக்கும் நன்மைபல வருகிறது
    நல்லூரின் மண்நடந்தால் நம்வினைகள் பறந்தோடும்
    என்றெண்ணிப் பலபேரும் நாளுமங்கே வருகின்றார்

    தேரடியில் தெய்வவருள் செறிந்தங்கே இருக்கிறது
    தேரடியில் வில்வமரம் யாவருக்கும் தெரிந்ததுவே
    மரத்தடியில் பலரமர்வார் மனமெல்லாம் பலநினைப்பில்
    மால்மருகன் காத்திடுவான் என்பதவர் நினைப்பாகும்

    பற்றற்று வந்தமர்வார் பக்குவத்தைத் தேடிடுவார்
    பக்குவத்தை நாடிடுவார் பைத்தியமாய் தெரிந்திடுவார்
    பார்ப்பவர்கள் விசரென்பார் பரிகசித்து நின்றிடுவார்
    ஆனாலும் அம்மனிதர் விசராகத் திரிந்திடுவார்

    திட்டுவார் கல்லெறிவார் மண்ணெடுத்தும் எறிந்திடுவார்
    கிட்டவே போவதற்கு யாவருமே அஞ்சிடுவார்
    செல்லப்பா திருநாமம் கொண்டவந்த மனிதர்க்குள்
    தேடரிய பொக்கிஷங்கள் பொதுந்துமே கிடந்தனவே

    செல்லப்பர் பொக்கிஷத்தைத் தேடிவந்தார் ஒருவர்
    செல்லப்பரோ அவரைத் திட்டியே தீர்த்தார்
    வந்தவரோ வேதனையால் வதைபட்டு உழன்றார்
    மனஞ்சோர்ந்து போகாமல் பின்தொடர்ந்து நின்றார்

    வேதனையும் சோதனையும் வெற்றியினைக் கொடுக்க
    தெடிவந்த மாமனிதர் யோகர்சுவாமி ஆனார்
    தேடரிய பொக்கிஷங்கள் செல்லப்பா ஈந்தார்
    தெளிந்தநற் குருவாக யோகர்சுவாமி மலர்ந்தார்

    கொழும்புத்துறைக் கொட்டிலிலே யோகர்சுவாமி அமர்ந்தார்
    எண்ணரிய தத்துவங்கள் இதயந்தொடக் கொடுத்தார்
    இனங்கடந்து மதங்கடந்து மொழிகடந்து நின்றார்
    எல்லோரும் விடிவுபெற ஏற்றபல செய்தார்

    பற்றற்று நின்றார் பக்குவமாய் இருந்தார்
    பலருக்கும் வழிகாட்டும் விளக்காக ஒளிர்ந்தார்
    தேடிவரும் அனைவரது தேவைகளை உணர்ந்து
    வாடியவர் செல்லாமல் மனமகிழச் செய்தார்

    படித்தவரும் ஒன்றே பாமரரும் ஒன்றே
    பாரபட்சம் யோகர் சுவாமி பார்ப்பதேயில்லை
    கொண்டுவரும் அத்தனையும் பங்குபோட்டுக் கொடுப்பார்
    கொடுக்கின்றார் மனமுடைய எதையுமவர் செய்யார்

    திருமுறைகள் படிப்பார் தித்திக்கப் படிப்பார்
    வருமடியார் இணைய மனமுருகிப் படிப்பார்
    சிவதொண்டன் நிலையம் தியானத்தின் நிலையம்
    சுவாமிகளை என்றும் நினைக்கவைக்கும் நிலையம்

    ஈழத்தின் ஞானி இணையில்லா ஞானி
    எல்லோரும் நினைக்க வாழ்ந்திட்ட ஞானி
    யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து
    ஆன்மீகச் சொத்தை அகமிருத்தி வைப்போம் !

    Share
  • நம்பினார் கெடுவதில்லை!

    நம்பினார் கெடுவதில்லை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நம்பிக்கை என்றால் நம்பிக்கை வேண்டும்
    தும்பிக் கையானை தொழுகிறார் பலபேர்
    பற்பல மதங்கள் பல்வகைத் தெய்வங்கள்
    இப்புவி இருப்பதை எண்ணிட வேண்டும்

    அல்லா என்கிறார் யேசு என்கின்றார்
    அரியே என்கிறார் அரனே என்கிறார்
    அகிலாண் டேஸ்வரி அம்பிகை என்கிறார்
    நம்பிக்கை என்பது நாமமாய் பெருகுது

    உண்டு என்று நம்பிக்கை வைக்கிறார்
    இல்லை என்று சொல்பவர்  இருக்கிறார்
    உண்டா இல்லையா என்பதை நினைக்க
    நம்பிக்கை எதுவெனத் தெளிந்திட வேண்டும்

    பாசம் நேசம் பர்த்ததே இல்லை
    அன்பு கருணை பார்த்ததே இல்லை
    எல்லாம் இருக்கு என்னும் நம்பிக்கை
    எல்லோர் இடத்தும் இறுக்கமாய் இருக்கு

    நிறமும் இல்லை உருவும் இல்லை
    கண்ணால் எவரும் கண்டதும் இல்லை
    இருப்பதாய் நம்பிக்கை இறுக்கமாய் இருக்கு
    விமர்சனம் வெறுப்பை வெளியிட  மாட்டோம்

    இவைகள் அனைத்தும் நிறைந்தது இறையே
    இறையில் நம்பிக்கை தவறா சொல்வீர்
    நம்பிக்கை உருவமே இறையே ஆகும்
    நம்பிக்கை என்றுமே நல்லதே காட்டும்

    நம்பினார் கெடுவதில்லை நம்பினார் வீழ்வதில்லை
    நான்மறையும் நம்பிக்கை நல்வழியும் நம்பிக்கை
    மதங்கூறும் தத்துவங்கள் மகத்தான நம்பிக்கை
    மகத்தான நம்பிக்கை மாநிலத்தில் இறையாகும்!

    Share
  • சேக்கிழார் சிந்தனை சிறந்த நற்சிந்தனை !

    சேக்கிழார் சிந்தனை சிறந்த நற்சிந்தனை !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    காவியம் பாடினால் கம்பனை விஞ்சுவார்
    கற்பனைத் திறனில் உச்சந் தொட்டவர்
    பக்தியின் வழியில் பயணந் தொடங்கினார்
    பாடினார் பாடினார் பக்தியைப் பாடினார்

    கல்வியில் சிறந்தவர் கசடுகள் களைந்தவர்
    எண்ணிடும் அனைத்தும் ஏற்றமாய் கொண்டவர்
    மண்ணிலே வாழும் மக்களின் மனத்தில்
    பக்தியின் பெருமையை பாடியே கொடுத்தார்

    அரசனின் அவையில் அமைச்சராய் இருந்தார்
    அதிகாரம் ஆணவம் அவரகம் இல்லை
    ஆண்டவன் நினைப்பே அவரிடம் நிறைந்தது
    அமைச்சராய் இருப்பதை மறந்தே இருந்தார்

    அரன் அடியார்கள் பெருமையை அறிந்தார்
    அவர் வரலாற்றை இணைத்திட  முனைந்தார்
    எப்படி இணைக்கலாம் என்றவர் எண்ணினார்
    பக்தியின் நினைப்பவர் புத்தியில் புகுந்தது

    பக்தியை உத்தியாய் கொண்டனர் அவரும்
    பக்தியைக் காட்டிடப் பதங்களை நாடினார்
    புத்தியில் புகுந்திடப் பக்குவப் பதங்கள்
    வந்துமே குவிந்தன வளர்ந்தன வளர்ந்தன

    பற்பல குலங்கள் வந்த நல்லடியார்
    அறுபத்து மூவரை பக்தியால் இணைத்தார்
    பற்பல இடங்கள் பற்பல குணங்கள்
    பக்தியில் கலந்திட பகர்ந்தனர் கதையை

    ஒதுக்கப் பட்டவர் உயர்வுடன் மிளிர்ந்தார்
    வெறுக்கப் பட்டவர் வணங்கிட  உயர்ந்தார்
    ஆலயம் எங்கணும் சிலையாய் அமர்ந்தார்
    குருபூசை ஆற்றிடும் பெருநிலை எய்தினார்

    அன்பால் இறையினைத் தொட்டவர் அடியவர்
    அவரது கதையினைத் தொட்டவர் சேக்கிழார்
    சேக்கிழார் தமிழால் செப்பிய கதையே
    மாக் கதையாக  மலர்ந்தது புராணமாய்

    நாயகன் இல்லை நாயகி இல்லை
    எதிரியாய் பாத்திரம் எதுவுமே இல்லை
    இறை அடியாரின் நிறைவுகள் கருவாய்
    அமைந்திடும் வண்ணம் அமைந்தனர் கதையை

    பாமரர் படித்தவர் பக்குவம் பெற்றிட
    பக்தியை தேர்ந்து எடுத்தனர் சேக்கிழார்
    காதலை உருக்கத்தைக் காட்டிடும் நிலையிலும்
    கடவுளின் நினைப்பைக் காட்டியே எழுதினார்

    பக்தியாய் மலர்ந்த நல்பெரிய புராணத்தை
    பாமரர் படித்திட வைத்தவர் நாவலர்
    நாவலர் பெருமான் செய்தநற் பணியால்
    சேக்கிழார் கவியெலாம் மலர்ந்தன வசனமாய்

    ஆலயந் தோறும் பெரிய புராணத்தை
    ஆறுமுக நாவலர் விரித்துமே உரைத்தார்
    அரன் அடியாரின் பெருமையைப்  பக்தியை
    பாமரர் விளங்க நாவலர் செய்தார்

    தத்துவம் சமயம் தலையாய தொண்டு
    சித்ததில் இருக்கச் செய்தவர் சேக்கிழார்
    சேக்கிழார் சிந்தனை சிறந்த நற்சிந்தனை
    போற்றியே நிற்போம் பூசனை ஆற்றுவோம் !

    Share
  • பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பாரதி வந்தார் பற்பல பாடினார்
    பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
    காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
    கன்னித் தமிழின் காவலன் ஆனார்

    பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
    ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார்
    நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
    நாடே அவரின் உயிராய் இருந்தது

    பாரதி காலம் கவிமணி இருந்தார்
    நாமக் கல்லின் நற்கவி இருந்தார்
    எட்டய புரத்து பாரதி மூச்சை
    சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

    நாமக் கல்லார் நற்கவி ஆவார்
    கவிமணி தமிழின் கற்கண் டாவார்
    பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
    அதுவே அவரின் ஆசியே ஆகும்

    சுப்பு ரத்தினம் எழுந்தார் தாசனாய்
    சுப்பிர மணிய பாரதி வாழ்த்தினார்
    வாழ்த்திய வாழ்த்து வளர்ந்தே வந்தது
    மாநிலம் பாரதி தாசனைப் பெற்றது

    அன்னிய ஆட்சியில் பாரதி வாழ்ந்தார்
    அடிமை என்பது அனலாய் கொதித்தது
    அனலை அகற்றப் பாரதி பாடினார்
    அடிமைக் கெதிராய் படைப்புகள் ஈந்தார்

    பாரதி தாசனின் காலமோ வேறு
    அடிமை அகன்று சுதந்திரம் மலர்ந்தது
    தமிழே ஆட்சி தமிழே தலைமை
    அதனால் தமிழை அமுதம் என்றார்

    பாரதி தமிழை தேனாய் ஆக்கினார்
    அவரின் தாசனோ உயிராய் ஆக்கினார்
    பரதி வழியில் பயணந் தொடரினும்
    அவரின் சிந்தனை புதிதாய் மிளிர்ந்தது

    கல்வியை இருவரும் கண்ணே என்றனர்
    பெண்ணின் கல்வியை பெரிதாய் எண்ணினர்
    குருவின் கருவை மனத்தில் கொளினும்
    அவரின் சிந்தனை அகன்றே நின்றது

    பாரதி உள்ளம் புதுமைகள் இருந்தும்
    பக்தியை பாரதி பக்குவம் என்றார்
    பாரதி தாசனோ பக்தியைப் பாரா
    புரட்சிக் கவியாய் ஊர்வலம் வந்தார்

    பாரதி பாடல்கள் திரைக்கு வந்தன
    பாரதி தாசனே திரைக்குள் நுழைந்தார்
    நாடகம் எழுதினார் நடிக்கவும் செய்தார்
    நாட்டுப் பாடலை நயமுடன் அணைத்தார்

    புரட்சிக் கவிஞராய் இருவரும் எழுந்தார்
    புதுமைகள் புகுத்தி கவிஞராய் ஒளிர்ந்தார்
    பாரதி வாழ்த்திய கவிஞராய் அமைந்தார்
    பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்

    Share
  • சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மேன்மைகொள் சைவநீதி விளங்கிட வைப்பதற்கு
    மாதராய் வந்தமைந்தார் மங்கையர் கரசியாரும்
    அரசியாய் ஆனபோதும் அரனது அடியைப்பற்றி
    தினமுமே தொழுதுநின்றார் தீயவை அகன்றுபோக

    தீயதாம் சமணந்தன்னை சிந்தையில் கொண்டதாலே
    பாண்டிய நாட்டுமன்னன் பரமனை மறந்துபோனான்
    பரமனைப் பற்றிநின்ற அவனது மனைவியான
    மங்கையர் கரசியாரோ பரமனைப் பணிந்துநின்றார்

    சைவத்தின் போக்குவேறு சமணத்தின் போக்குவேறு
    அனைவரும் இணைந்துநிற்கும் அன்பதே சைவமாகும்
    ஒறுப்பது சமணமாகும் வெறுப்பது சமணமாகும்
    மக்களை விட்டுவிட்டு தத்துவம் சொல்லிநிற்கும்

    பெண்களைச் சைவமென்றும் பெருதுமே போற்றிநிற்க
    பெண்களை சமணமென்றும் வெறுத்துமே நின்றதாலே
    பொங்கியே எழுந்துநின்ற மங்கையற் கரசியாரும்
    சைவத்தை மீட்டெடுக்கத் தலைமையைத் தாங்கினார்கள்

    ஆடலும் வேண்டாம் பாடலும் வேண்டாம்
    அழகும் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
    எல்லாம் மாயை எதுவும் வேண்டாம்
    என்று சொன்னதே இப்புவி சமணம்

    சமணம் வெறுத்ததைச் சைவம் உயர்த்தி
    இறைவனை வழிபட ஏற்றது என்றது
    ஆலயம் அனைத்தும் ஆடலும் பாடலும்
    ஆண்டவன் பிரார்த்தனை ஆகியே நின்றது

    பாண்டிய மக்கள் மனங்கள் மாறின
    மன்னனின் மனமே சமணத்தில் இருந்தது
    மன்னனை மாற்றிட மங்கையற் கரசியார்
    தென் னாடுடைய சிவனையே வேண்டினார்

    சிவனது அருளாலே தவமுதல் வந்தார்
    கால்பதித்த உடனே கடுங்கோபம் கொண்டார்
    எதிர்த்தார் எரித்தார் எத்தனையோ செய்தார்
    அத்தனையும் அரசர்க்கு வெப்புநோயாய் ஆகியதே

    சமணத் தலைமைகள் மந்திரமோ தந்திரமே
    எதுவுமே அரசர்க்கு ஏற்றசுகம் அளிக்கவில்லை
    மனைவியின் கருத்தை மன்னனப்போ கேட்டான்
    மந்திராமாம் திருநீற்றை சம்பந்தர் கொடுத்தார்

    திருநீறு மன்னனின் நோயினையும் போக்கியது
    திருநீறு மன்னனின் மனதினையும் மாற்றியது
    தீமையென சமணத்தை உணரவும் வைத்தது
    மங்கையற் கரசியார் மனநிறைவை எய்தினார்

    வளவர்கோன் பாவை வழிகாட்டி ஆகினார்
    சம்பந்தர் தலைமையிலே சைவத்தை நிலைநாட்டினார்
    சேக்கிழார் போற்றினார் சிவனாரின் அடியாரை
    சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    Share
  • கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்!

    கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கீதை சொல்லக் கண்ணன் தேரேறி வந்தான்
    பார்த்தனுக்குப் பாதை காட்டியவன் நின்றான்
    பார்த்தனவன் தெளிந்தான் பக்குவத்தை அடைந்தான்
    பாரிலுள்ளார் விழிக்கப் படித்திடுவோம் கீதை

    கீதையைப் படித்தால் பாதை தெளிவாகும்
    பாதை தெளிவானால் பயணம் சிறப்பாகும்
    பயணம் சிறப்பானால் மனது மகிழ்வடையும்
    மனது மகிழ்வடைந்தால் நிறைவுவங்கே பொலியும்

    எண்ணுகின்ற எண்ணம் இழுக்ககற்ற வேண்டும்
    இழுக்ககன்று நிற்க இறைநினைப்பு வேண்டும்
    இறைநினைப்பை ஊட்ட கீதை வழிகாட்டும்
    வழிகாட்டும் கீதை வாழ்க்கைத் துணையாகும்

    கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்
    வாழும் நெறியாக்கினால் வாழ்வு வளமாகிடும்
    வாழ்வு வளமாகிட  மனிதமனம் நினைக்குது
    மனிதமனம் துலங்கிட கீதை வழிக்காட்டிடும்

    கீதைசொல்லக் கண்ணன் நாளும் வருகின்றான்
    பார்த்தனாய் இருப்பார் பக்கம் வருகின்றான்
    உயர்வான கீதையை உபதேசம் செய்து
    மகிழ்வாகக் கண்ணனும் வருகின்றான் தினமும்

    பார்த்தனாய் நாமும் பக்குவமாய் இருந்தால்
    கண்ணனது கீதை கருத்தினிலே பதியும்
    கருத்தினிலே பதிந்தால் கண்ணனுமே தெரிவான்
    கண்ணனது கீதை கண்ணனையே காட்டும்!

    Share
  • அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம்!

    அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    அனுபவம் என்பது அனைவர்க்கு மவசியம்
    அனுபவம் அனைத்துக்கும் அடிப் படையாகும்
    அனுபவ மற்றார் ஆற்றும் அனைத்தும்
    ஆக்கமாய் அமைவது அரிதே யாகும்

    மூத்தோர் யாவரும் அனுபவம் மிக்கவர்
    வீழ்ந்து எழுந்து நிமிர்ந்து நின்றவர்
    துன்பமும் தெரிந்தவர் இன்பமும் தெரிந்தவர்
    சுகமும் துக்கமும் தாங்கியே நின்றவர்

    விரைவாய் எதனையும் செய்யும் வேளை
    அனுபவ மற்றார் அவசரப் படுவார்
    அனுபவ மிக்கவர் விரைவாய் செயினும்
    அவசரப் படாமல் சிறப்புடன் செய்வார்

    இளமை என்பது துடிப்பான பருவம்
    அனுபவம் தொடங்கும் ஆரம்பப் பருவம்
    இளமை முதுமையை எய்திடும் காலம்
    பற்பல அனுபவம் பாங்காய் இணையும்

    அனுபவம் முதுமையின் ஆளுமை யாகும்
    ஆளுமை வழியில் நடப்பது அவசியம்
    இளமையில் ஆளுமை மிக்கவ ராயினும்
    முதுமையின் அனுபவம் இளமையை உயர்த்தும்

    இளமையில் இமயம் தொட்டவர் இருக்கிறார்
    இமயம் தொட்டிட பயிற்சிகள் அவசியம்
    பயிற்சிகள் என்பதே அனுபவ மாகும்
    பயிற்சியை வழங்குவோர் முதிர்ச்சியில் இருப்பார்

    போட்டிகள் நடுவர் அனுபவம் மிக்கார்
    அனுபவம் மிக்கார் இளமையில் நிற்கார்
    அறிவுரை வழங்க அனுபவம் அவசியம்
    அறிவுரை வழங்குவார் முதியோர் ஆகிறார்

    மூத்தோர் வார்த்தை அமுதம் என்பது
    காலம் காலமாய் காதிலே ஒலிக்குது
    அதனுடை அர்த்தம் அனுபவம் என்பதை
    அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம் !

    Share
  • அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்!

    அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியில் ஆண்டவன் பூமியைப்  படைத்தான்
    அங்கே பற்பல உயிர்களைப் படைத்தான்
    மனிதனும் அதற்குள் வந்துமே அமைந்தான்
    மண்ணினை ஆண்டிடும் வளர்ச்சியும் பெற்றான்

    பற்பல உயிர்களைப் படைத்திட்ட ஆண்டவன்
    சிந்திக்கும் திறனை மனிதற்கே கொடுத்தான்
    சிந்திக்கும் திறனால் முந்தினான் மனிதன்
    முந்திய மனிதன் ஏந்தினான் அறிவை

    ஐந்தறி  வுடையவை அஃறிணை என்று
    ஆறறி    வுடையன உயர்திணை என்று
    சொன்னவன் மனிதன் சொல்லிய படியே
    தனக்குக் கீழே அனைத்தையும் வைத்தான்

    வைத்தவன் அறிவைத் தனக்குரித் தாக்கினான்
    விண்ணைத் தொட்டான் விதம்விதம் செய்தான்
    அறிவால் அனைத்தையும் ஆள்கிறான் அவனியில்
    அறிவுடன் அன்பை அணத்திடல் அவசியம்

    அன்பும் அவசியம் அறிவும் அவசியம்
    அன்பொரு கண்ணாய் அறிவொரு கண்ணாய்
    இப்புவி பெற்றவர் மனிதரே ஆவார்
    இரண்டும் இணைந்தால் எல்லாம் சிறக்கும்

    அறிவுளார் அனைவரும் அன்பினைப் பேணார்
    அறிவினால் அனைத்தும் பெருகிடும் என்குவார்
    பிறரது துன்பினை அறியா அறிவினால்
    பயனது உண்டா நினைத்துமே பாருங்கள்

    அன்புடன் இணையும் அறிவே சிறந்தது
    அன்பின் உருவமாய் ஆண்டவ  னிருக்கிறான்
    அன்பே சிவமென ஆன்றோர் மொழிந்தார்
    அறிவு தெளிந்திட அன்புதான் அவசியம்

    அறிவைக் கொண்டு அனைத்தும் பெறலாம்
    அறிவுக்குள் ஆண்டவன் அகப்பட மாட்டான்
    அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்
    அன்புக்குள் ஆண்டவன் அகப்பட்டு  நிற்பான் !

    Share
  • போர் கொடுக்கும் பரிசு !

    போர் கொடுக்கும் பரிசு !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    யாரோடும் பகைகொள்ளல் இல்லென்றால்
    போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
    போரினால் வரும் பொருந்தா நிலையென்ன
    ஊரழியும் உயிரழியும் உண்மையும் அழியும்

    எங்கும் பிணமும் இரத்த வாடையும்
    இடிபாடும் ஓலமும் ஒப்பாரியும் நிறையும்
    தங்கு தடையின்றி பஞ்சமும் பெருகும்
    தானமும் தர்மமும் தானழுது நிற்கும்

    போரிலே மடிகின்ற வீரர்களும் உயிர்தானே
    எதிரியாய் எண்ணி எறிகணைகள் வீசி
    மடிகின்ற மக்களும் மனித உயிர்தானே
    எண்ணியே பார்க்கா இந்தப்போர் ஏனோ

    புராணக் கதைகள் போர்பற்றிச் சொன்னது
    போர்நடந்த வேளை நாமங்கு இல்லை
    கதையிலே போர்பார்த்தோம் கற்பனையி லேற்றினோம்
    நிஜமான போரிப்போ கண்முன்னே காண்கிறோம்

    வெற்றிக் கொடியில் வீரம் இருக்காது
    அற்பத்தனும் அநியாயமும் நிறைந் திருக்கும்
    உயிர்களின் ஓலமும் ஊரெரியும் காட்சியும்
    வெற்றிக் கொடியாய் கம்பத்தில் பறக்கும்

    மனிதம் மடியும் மாண்புகள் அழியும்
    மாநிலமே மயனமாய் ஆகியே இருக்கும்
    பேயாட்சி நடக்கும் பிணமெங்கும் நிறையும்
    போர் கொடுக்கும் பரிசு இப்படித்தானிருக்கும் !

    Share
  • சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமைழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    நீரும் வேண்டும் நெருப்பும் வேண்டும்
    மழையும் வேண்டும் பனியும் வேண்டும்
    இருளும் வேண்டும் ஒளியும் வேண்டும்
    எல்லாம் இணைவதே இயற்கையின் ஒழுங்கு

    ஒழுங்காய் அமைந்தால் உலகம் செழிக்கும்
    ஒழுங்கு குலைந்தால் வளங்கள் மறையும்
    இயற்கை என்றுமே இன்னல் விளைக்கா
    இன்னல் விளைக்கவே மனிதன் வந்தான்

    காட்டில் வாழ்ந்தான் கடும் உழைப்பாலே
    வீட்டைக் கட்டினான் வீதிகள் அமைத்தான்
    நுண்மாண் அறிவால் விண்ணைத் தொட்டான்
    மண்ணை விண்ணை தன்வச மாக்கினான்

    மாநிலம் எங்கணும் மனிதனின் சாதனை
    பல்கிப் பெருகி பேருரு வானது
    இயற்கையின் போக்கை வளைத்திட  முனைந்தான்
    ஒழுங்குகள் தவறி விபரீதம் விளைந்தது

    எல்லை என்பது தொல்லை அல்ல
    தாண்டா திருந்தால் தவறுகள் நிகழா
    தவறெனத் தெரிந்தும் தாண்டியே நின்றால்
    தாங்காத் தண்டனை வந்துதான் சேரும்

    இயற்கை அமைப்பு ஒழுங்காய் அமைந்தது
    சமநிலை என்பதே இயற்கையின் ஒழுங்கு
    நுண்மாண் அறிவினால் உயர்ந்தோ மென்று
    சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    Share
  • அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீல வானத்தில் நெருப்புக் கோளம்
    வெடித்துச் சிதறி வெந்தணலாய் வீழ்கிறது
    நிலமெங்கும் நெருப்பாறு நீண்டோடி நிற்கிறது
    சிதறிய உடல்கள் பரவியே கிடக்கிறது

    ஓலமிடும் குரல்கள் உலுக்கியே நிற்கிறது
    வானிருந்து குண்டுமழை பொழிந்தபடி இருக்கிறது
    வட்டமிடும் கழுகாக வந்துவிழும் எறிகணைகள்
    மனிதவுயிர் பாராமல் பலியெடுத்து நிற்கிறது

    நீள்கடலும் வானும் நீண்டநிலப் பரப்பும்
    போர்முழக்கம் கேளா செய்துவிடல் வேண்டும்
    போரரக்கன்  ஓட  பேரெழிச்சி  கொண்டு
    சமாதானச் சங்கெடுத்து ஊதிவிட வேண்டும்

    மண்ணாசை பொன்னாசை மாறாத ஆசை
    வாய்பேசாக் குழந்தைகளை வதைக்க வருகிறதே
    பள்ளிகள் மீதெல்லாம் அள்ளியே வீசி
    பாலகர்கள் மடிவதனை  வேடிக்கை பார்க்கிறதே

    ஊரெல்லாம் பற்றியே எரிகின்ற வேளை
    உப்பரிகை உல்லாசம் ஒருகாலும் நிலைக்கா
    பிணந்தின்னும் பேய்களாய் மாறுகின்ற மனங்கள்
    பிணமாகப் போவதை அறியாத தேனோ ?

    ஓலமிடும் குரல்கள் ஓய்ந்துவிட வேண்டும்
    நீள்நிலத்தில் அமைதி  நிறைந்து விடவேண்டும்
    ஆரழுதும் நிற்கா ஆறுதலே வேண்டும்
    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    Share