Tag: ஞா. கலையரசி

  • கர்ம வீரர் காமராசர்

    ஞா.கலையரசி

    முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
    பழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன்
    பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான்
    இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான்
    அரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே
    காதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்!”

    ஆயிரம் சொற்களில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நாம் சொல்ல நினைப்பதை, ஆறே வரிகளில் அற்புதச் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

    காமராசரின் பற்பல சாதனைகளில், முதலில் என்னைக் கவர்ந்தது, பொதுவாழ்வில் அவர் கடைபிடித்த நேர்மையும், கண்ணியமும், எளிமையும் தான்.  ஒரு தடவை பதவியிலிருந்தாலே பத்துத் தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும், இன்றைய அரசியல்வாதிகளோடு  ஒப்பிடும் போது, இவர் இமயமாக ஜொலிக்கிறார்!

    இன்றைய காலக்கட்டத்தில், மக்களின் நன்மதிப்பைப் பெற்று எளிதாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள் அனைத்துமே,  காமராசர் பொற்கால ஆட்சியைக் மீண்டும் கொண்டு வருவோம் என்று கூசாமல் புளுகுமூட்டைகளை அவிழ்த்தவண்ணமிருக்கின்றன.  இவரின் பெயரை உச்சரிக்கக் கூட இன்றைய அரசியல்வாதிகளுக்கு அருகதையில்லை என்பது தான் வேதனையான உண்மை!

    விருதுநகரில் வசதியில்லாக் குடும்பத்தில் பிறந்த காமராசர், தம் விதியை நொந்தவாறு குருட்டு அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டியிருந்தாரென்றால், இன்று நாடு புகழும் தலைவர் நமக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

    அதிகம் படிக்கவில்லையாயினும், மாபெரும் கட்சியில் அடிமட்டத் தொண்டனாக சேர்ந்து தம் அயராத உழைப்பினாலும், அசாத்திய திறமையாலும், தூய்மையான தொண்டினாலும் கட்சியின் தலைமைப் பொறுப்பை அடைந்ததோடு, இந்தியாவின் பிரதம மந்திரிகளை நியமிக்கும் ‘கிங் மேக்கர்,’ அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது எவ்வளவு பெரிய இமாலய சாதனை?  இவருடைய சாதனைகள் அனைத்துமே வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை.

    ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய அத்தனை குணாதிசயங்களும் இவரிடம் இருந்தன.  ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால், கீழ்த்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை, அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தார்.

    தொலைநோக்கு பார்வை இவரிடத்தில் இருந்ததால், குறுகிய கால அரசியல் நோக்கில் வெறும் வாக்கு வங்கிக்காகச் செயல்படாமல், சமுதாயத்தில் அடிமட்டத்தில் உழலும் மாந்தரின் வாழ்வுத் தரத்தை முன்னேற்ற, நீண்ட காலத் திட்டங்கள் தீட்டினார்.

    மக்களின் அடிப்படை பிரச்சினையான வறுமையைப் போக்கிட, நோய் நாடி நோய் முதல் நாடினார்.  தற்குறிகளாகத் திரியும் குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்து விட்டால், ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்குக் கிடைக்கும் எனச் சிந்தித்தார்.  மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக அறிவு சார்ந்த, திறன் வாய்ந்த சமுதாயம் உருவாகக் கல்வி அவசியம் தேவை என்பது இவருக்குத் தெரிந்திருந்தது.

    சமுதாயம் மேம்பாடு அடையவும், தரமான குடிமக்கள் உருவாகவும் கல்வி மிக முக்கியம் என்பதால் தானே வள்ளுவர் கல்வி, கல்லாமை என இரு அதிகாரங்கள் ஒதுக்கிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்?

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும் ஏமாப் புடைத்து

    என்று ஒரு தலைமுறையில் பெறும் கல்வியானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று சொல்லிக் கற்பதை வலியுறுத்தும் வள்ளுவர், கல்லாமை என்ற அதிகாரத்தில்

    உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்

    களரனையர் கல்லா தவர்.

    எனக் கல்லாதவரைக் களர் நிலத்துக்கு அல்லவா ஒப்பிடுகிறார்?

    மீன் தருவதற்குப் பதில் மீன் பிடிக்க கற்றுக்கொடு என்கிறது சீனப் பழமொழி!

    பள்ளிப்படிப்பை அரைகுறையாக நிறுத்திவிட்ட போதிலும்,  கல்வியின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்திருந்தார் காமராசர்.  அரசியல் இலாபங்களுக்காக இலவசங்களை வாரியிறைத்து, நாளிதழ்களில் முழுப்பக்க  விளம்பரங்கள் மூலம் சுயதம்பட்டம் அடித்து, அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்து கொள்ளும்,  இன்றைய  தலைவர்கள் போல, இவர் எண்ணினாரில்லை!

    மாறாக இளந்தலைமுறை கல்வி கற்று நம் சமுதாயம் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில், கல்வியை ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டி, முனைப்புடன் செயலாற்றினார்.

    பசியால் அவதிப்படும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவது கடினம்;  பள்ளியிலேயே சத்துணவு கொடுத்தால், பட்டினிக் கொடுமையால் அவதிப்படும் மக்கள், மதிய வேளை சாப்பாட்டுக்காகவாவது தங்கள் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவார்கள் என்ற இவர் நம்பிக்கை பொய்க்கவில்லை!.

    இவர் ஆணைப்படி கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன; பள்ளிகளில் மதிய வேளையில் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டது;   எல்லாக் குழந்தைகளுக்கும்  கல்வி கிடைத்தாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பள்ளியிறுதி வரை கட்டணமில்லாக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.  பள்ளிகளில் ஏழை, பணக்காரர் வேறுபாட்டைப் போக்கும் விதத்தில் சீருடை வழக்கம் அமுலுக்கு வந்தது.

    திறக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பள்ளிகளுக்குக் கல்வி போதிக்கப் பயிற்சி பெற்ற ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. படித்து விட்டு வேலை யில்லாமல் இருப்பவர்களை, ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியராக நியமித்து விடலாம் என்று இதற்கும் தீர்வு சொன்ன காமராசர், ‘அ, ஆ’ ‘அம்மா,’ ‘அப்பா’ என்று சொல்லிக் கொடுக்க பயிற்சி ஆசிரியராத் தேவை என்றும் கேட்டாராம்!  இம்முடிவினால் வேலையில்லாப் பட்டதாரிகள் பலருக்கு வேலை கிடைத்தது!

    உள்ளூர் மக்களின் உதவியையும், நன்கொடைகளையும் பெற்று அந்தந்த ஊர்ப் பள்ளிக்கூடங்களின் நிலைமையைச் சீராக்கும் பள்ளிச் சீரமைப்பு இயக்கம், தமிழ்நாட்டில் தோன்றி, அதன் புகழ் இந்தியா முழுமைக்கும் பரவிற்று.

    தலைவர் காமராசரால் வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்கள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தும் முயற்சியில் தமிழகக் கல்வித்துறை சிறப்பான வெற்றி பெற்றிருப்பதாக  மனந்திறந்து பாராட்டினார்.

    அன்று காமராசர் மட்டும் தமிழகமெங்கும் பள்ளிக் கூடங்கள் திறந்து ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை இலவசமாக்கிக் கல்விக் கண்ணைத் திறந்திருக்காவிட்டால்,  இன்று நாம், மாடு தான் மேய்த்துக் கொண்டிருப்போம்!  அதில் சந்தேகமேயில்லை.  எனவே இவ்வுலகம் உள்ளளவும், தமிழ்ச் சமூகம் இவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றது!

    அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே, ஓய்வூதியம் கிடைத்தது. மற்றவர்களுக்கு பிராவிடண்ட் நிதி மட்டுமே கிடைத்தது.  காமராசர் இதனை மாற்றி எல்லா ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    இவர் தமிழக முதல்வராகயிருந்த ஒன்பது ஆண்டுகளில் (1954 -1963) தமிழகம் தொழிற் துறையிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்தது.  திருச்சி பாய்லர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை உள்ளிட்ட பல பெரிய தொழிற்சாலைகள், இவர் முயற்சியால் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்பு கிட்டியது.

    வேளாண் துறையிலும் இவர் செய்த சாதனைகள் அளப்பரியது.  மணி முத்தாறு, வைகை, ஆழியாறு போன்ற அணைத் திட்டங்கள் இவர் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன.   இவரின் திறமையான ஆட்சியில் தமிழகம் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் பெற்று விளங்கியதால், இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினாராம் நேரு.

    மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்; காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கினார் காமராசர்.  இதை கே.பிளான் (காமராசர் திட்டம்) என்றழைத்தார்கள்.  எல்லோருக்கும் முன் மாதிரியாக தமிழக முதல்வராக இருந்த காமராசர் தாமே பதவியிலிருந்து விலகி திரு.கே.பக்தவச்சலத்தை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.

    பதவி ஆசை இவரிடம் துளியும் இல்லை என்பதை நினைக்கும் போது இப்படியும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்தாரா என வியக்கிறேன்!   பார்வை முழுதும் மங்கி, நடக்க முடியாமல் தள்ளாடும் வயதிலும், நாற்காலியை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? அவர் எங்கே?

    1963 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பிரதமர் நேருஜி மரணமடைந்த போது, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெருங் குழப்பம் நிலவியது அப்போது லால் பகதூர் சாஸ்திரி பெயரைப் பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தவர் காமராசரே.

    குறுகிய காலத்தில் சாஸ்திரி அகால மரணமடைந்த வேளையில்  “நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!” என இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்கியதும் இவரே.

    காமராசர் நினைத்திருந்தால் நாட்டின் பிரதமராக ஆகியிருக்க முடியும்.  ஆனால் அவர் பதவியைத் துச்சமாக மதித்தார்.  மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழி விட்டு அவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பதுடன்  கட்சியை வலுப்படுத்தி நாட்டு நலப்பணி செய்யவும் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது.  ஜனநாயகத்தின் மேல் அவருக்கிருந்த பற்றும் இளைஞர்களின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையும் அளவிடற்கரியது.  ஆனால் இன்றைய ஜனநாயகமோ, கிழடு தட்டி கம்பூன்றிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி அப்பா, பையன் பேரன் எனப் பரம்பரை சொத்தாகிவிட்டது.

    ஒருமுறை தெரு முனையிலிருக்கும் குடிநீர்க் குழாயை தம் வீட்டருகே அமைத்துத் தரும்படி சகோதரி கேட்டபோது “அது அரசு அமைத்த குழாய் அனைவருக்கும் பொதுவானது; அதை நம் வீட்டருகே அமைக்க எந்தச் சட்டமுமில்லை; எனவே அங்குப் போய்த் தண்ணீர் பிடித்துக்கொள்,” என்று சொல்லிவிட்டாராம் தலைவர்.

    அரசு இயந்திரத்தைத் தமக்காகவோ, தம் நெருங்கிய உறவுகளுக்காகவோ துஷ்பிரயோகம் செய்யாமல், இறுதி மூச்சு உள்ளவரை சொத்தென்று சில கதர் வேட்டி சட்டைகள், நூறு ரூபாய்க்கும் குறைவான பணம், வாடகை வீடு என்று வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராசரின் தன்னலமற்ற தொண்டைப் போற்றிப் பாராட்ட வார்த்தைகளில்லை!

    எங்கும் எதிலும் லஞ்ச ஊழல் லாவண்யங்கள் புரையோடிப் போய்க் கிடக்கும் இச்சமூகத்தில், பொன்னுக்கோ பொருளுக்கோ ஆசைப்படாமல் கடைசிவரை நேர்மையைக் கடைபிடித்து, தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து அரும்பெரும் சாதனைகள் நிகழ்த்தி வரலாறு படைத்தார் என்பதால் தான், இவர் மறைந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆகியும் தமிழகம் கர்ம வீரர் காமராசர் என்ற பெயரை அடிக்கடி உச்சரிக்கின்றது.

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”   என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாய்த் திகழ்கிறார் கர்ம வீரர் காமராசர்.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்

    — ஞா.  கலையரசி.

     

    “காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ
    வேதனை தீர்த்தவன்
    விழிகளில் நிறைந்தவன்
    வெற்றித் திருமகன் நீ!”
    என்று எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து காலத்தை வென்று இன்றைக்கும் மக்கள் நெஞ்சங்களில் காவிய நாயகனாக உலா வருபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
    என்ற பாடலுக்கேற்ப, மக்கள் மனதில் அணையா தீபமாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்!

    “வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
    என்று கேட்டால் தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்பது தான் ஒரே பதிலாக இருக்கும்! இவர் அளவுக்கு மக்கள் நெஞ்சங்களில் குடி கொண்டவர் ஒருவர் இனிமேல் தான் பிறந்து வர வேண்டும். குறிப்பாக அடித்தட்டு மக்களிடம், இவருக்கிருந்த செல்வாக்கு அளப்பரியது. “இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம்; ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்று புலம்பினார்கள், இவருடைய இரங்கற் கூட்டத்தில்.

    இவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், ஒவ்வோராண்டும் இவர் நினைவு நாளில் பொது மக்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் படத்துக்குப் பூவும் பொட்டும் வைத்து விளக்கேற்றி வழிபடுகிறார்கள் என்பதிலிருந்து தலைமுறைகள் தாண்டியும் இவர் மக்கள் மனதில் மகத்தான சக்தியாகத் திகழ்கிறார் என்பது விளங்கும். மக்கள் நெஞ்சமெனும் கோவில்களில் தெய்வமாகக் குடிகொண்டிருக்கும் ‘தனிப்பிறவி,’ எம்.ஜி.ஆரை, மக்கள் அதிசய பிறவி என்றும், ‘ஆயிரத்தில் ஒருவன்,’ என்றும் இன்றளவும் போற்றுகிறார்கள்.

    தமிழ்த் திரையுலகில் தமக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு சினிமாவைக் கண்ணுங்கருத்துமாக நேசித்து, சாதாரண மக்களுக்கான படம் கொடுத்து, அதன் பின் அரசியலிலும் வெற்றிகொடி நாட்டியவர். தமக்காக மட்டும் வாழாமல் அடுத்தவருக்காகவும் வாழ்ந்ததால் தான் பொன்மனச்செம்மல், ஏழைப்பங்காளன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று போற்றப்படுகிறார்.

    பொதுவாழ்வில் இவரடைந்த வெற்றிகள், அதிர்ஷ்டத்தால் ஓரிரவில் பெற்றதல்ல. கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, எந்த வேலையிலும் மனமொன்றி முழுதாக ஈடுபடல் போன்ற இவரின் சிறப்புக்குணங்களால், தமிழ்த்திரைப்பட வரலாற்றிலும் சரி, அரசியலிலும் சரி, யாரும் வெல்லவியலாத வரலாற்று நாயகனாகத் திகழ்ந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னேறி விண்ணைத் தொட்டுச் சாதனை படைத்தவர். சிறுவயதில், குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    பின்னர் திரையுலகில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் துவங்கி கதாநாயகனாக உயர்ந்து, தமக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். துவக்கத்தில் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு காலங்களில் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து முக்கிய உறுப்பினராக இருந்தவர், பின்னர் பொருளாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக இவர் திரைவாழ்வு அமைந்திருந்த நேரத்தில், பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

    “படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.

    படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!

    இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.

    துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன.  நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.

    செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.

    எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன …

    “ஒரு தவறு செய்தால்
    அதைத் தெரிந்து செய்தால்
    அவன் தேவன் என்றாலும்
    விடமாட்டேன்”
    என்றும்;

    “தனியானாலும், தலைபோனாலும்
    தீமைகள் நடப்பதைத் தடுத்து நிற்பேன்”
    என்றும் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து அவருக்காகவே பாடல்கள் எழுதினர் கவிஞர்கள்.

    “நதியைப் போலே நாமும் நடந்து பயன் தர வேண்டும்… 
    கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்… 
    வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்… 
    வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிடவேண்டும்…”
    என்ற வைர வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டவை.

    “மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்,” என்பதை மெய்ப்பித்து தம் பாடல்களில் தனித்துவத்துவத்தை ஏற்படுத்தியவர். இம்மூன்றெழுத்தைக் கடமை என்றும் சொல்லலாம்; எம்.ஜி.ஆர் எனவும் கொள்ளலாம்; சமுதாய விழிப்புணர்ச்சி, தாய்நாடு, தாய்மொழி பற்று ஆகியவை இவர் படப்பாடல்களில் எப்போதுமே கலந்திருக்கும். பாடல்கள் மட்டுமன்றி வசனத்திலும் இவர் அதிக கவனம் செலுத்தினார். “நான் வெற்றி ஒன்றையே பரிசாகப் பெற்று வருபவன்!” என்று சொல்லும் வில்லன் வீரப்பாவுக்கு, “நான் எதிரிகளுக்குத் தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன்!” என்று பதிலடி கொடுத்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெறுவார். நிஜ வாழ்விலும் இதை இவர் நிரூபிக்கத் தவறவில்லை!

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. 1967 ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய காலக்கட்டத்தில், வெளியான‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை வெளியிட முடியாமல் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளித்துப் பல ஊர்களிலும் அதனைத் திரையிடச் செய்தவர்கள் ரிக்ஷாக்காரர்களே. அது போலப் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்ட போது அவருடைய ரசிகர் மன்றத்தினர், அவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து படத்தை வெற்றி பெறச் செய்தனர்.

    1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரமும், செல்வாக்கும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்ததென்றால், மக்கள் மனதில் இவர் நீக்கமற நிறைந்திருந்ததும், மக்களைக் கவர்ந்திழுத்த இவரின் காந்த சக்தியும், நம் நன்மைக்காக உழைக்கக்கூடியவர் என்று இவர் மீது மக்களுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தாம் காரணங்கள்.

    முதல்வராக இருந்த காலத்தில் இவர் தீட்டிய சில திட்டங்கள், மக்களிடையே இவர் செல்வாக்கை அதிகரித்தன. குறிப்பாக காமராஜரின் பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்தை முட்டை முதலியன சேர்த்துச் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தியது, உடை, புத்தகம்,காலணி வழங்கியது, உழவர் கடன் தள்ளுபடித் திட்டம்,   ஆதரவு அற்ற மகளிர்க்கான நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் எண்ணத்துடன் இவர் கொண்டு வந்த இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள், ‘பொன்மனச்செம்மல்,’ என்ற பட்டப்பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னபடி எம்.ஜி.ஆர் உண்மையிலேயே ஏழை, எளிய மக்களை நேசித்தார். அவர்களுக்காக உள்ளம் உருகினார். அவர்களது மேம்பாட்டிற்காக உழைத்தார்.

    1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த போதே, தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். பத்தாண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருந்த போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது கொடுத்துப் புகழாரம் சூட்டினர்.

    தாம் நினைத்ததை நடத்தி முடித்தவர் மக்கள் திலகம். நடிகனாகவும் அரசியல்வாதியாகவும் புகழ் பெற விரும்புவோர்க்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை ஒரு பாடம்.

     அவர் மரணப்படுக்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் இப்பாடல் ஒலிபரப்பானது …

    “உள்ளமதில் உள்ளவரை
    அள்ளித்தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாஎன்றால்
    மண்ணுலகம் என்னாகும்?”
    என்றும் …

    “உன்னுடனே வருகின்றேன்
    என்னுயிரைத் தருகின்றேன்
    மன்னன் உயிர் போகாமல்
    இறைவா நீ ஆணையிடு!”
    என்றும் …

    மக்கள் தம் உயிரை ஈந்து எம்.ஜி.ஆரை உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்று இறைவனிடம் கண்ணீர் மல்க வேண்டுதல் நடத்தினர். இதிலிருந்து எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும், பாசமும் விளங்குகின்றதல்லவா?
    அதனால் தான் கவிஞர் வைரமுத்து சொன்னார்:
    “ஒரே ஒரு சந்திரன் தான் ;
    ஒரே ஒரு சூரியன் தான் ;
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்;”
    தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்காலத்திலும் எம்.ஜி.ஆரின் புகழ் குன்றாமல் ஒளிவீசக் காரணம், மக்கள் தங்கள் நெஞ்சங்களில் அவர் உருவத்தை அழியாத கோலமாகத் தீட்டி வைத்திருப்பது தான். என்றென்றும் அது கலையாது; மறையவும் மறையாது!

    “நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
    என்றும் அது கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை”

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

     

    –ஞா.கலையரசி

    Kannadasanகவிஞர், திரைப்படப்பாடலாசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன் என்றாலும், என்னைப் பெருமளவு பாதித்தவர் திரைப்படப்பாடலாசிரியர் கண்ணதாசனே.

    சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,’ என்ற பாடல்.

    உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – என்
    உள்ளம் எனும் சூரியனைக் கோபம் மூடுது
    காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
    பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

    என்று தகிக்கும் உச்சி வெயில் சூரியனை, கடுங்கோபத்தால் டென்ஷன் அதிகமாகி சிடுசிடுக்கும் உள்ளத்துக்கு ஒப்பிட்டு எழுதிய இவ்வரிகள் அப்போதே என்னை ஈர்த்துச் சிந்திக்க வைத்தன.

    ஒருவித லயிப்புடன் இப்பாடலை நான் பாடியதாலோ என்னவோ, பள்ளித் தோழிகள் அடிக்கடி இதனைப் பாடச்சொல்லிக் கேட்பது வழக்கம். ஐந்தாம் வகுப்பின் முடிவில் என் தந்தையின் பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டோம். ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தேன். பழைய பள்ளித் தோழிகளின் பெயர்கள் ஒன்றிரண்டு நினைவில் இருந்ததே தவிர, அவர்களின் முகங்கள் நினைவில் இல்லை.

    கல்லூரியில் சேரத் திரும்பவும் பழைய ஊருக்கு வர வேண்டியதாயிற்று. கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள், ஒருத்தி என்னைப் பார்த்து “ஏய், குழந்தையும் தெய்வமும் பாட்டு பாடுவியே, அந்தக் கலையரசி தானே நீ?” என்றாள்.

    அப்போது தான் லேசாக அவள் முகம் நினைவுக்கு வந்தது. அவள் என் ஐந்தாம் வகுப்புத் தோழி அனுசுயா. என் அடையாளத்தை மீட்டெடுத்துப் என் நட்பைப் புதுப்பிக்க உதவிய இப்பாடலை எழுதியவர், கவிஞர் கண்ணதாசன்!

    ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் இனிமையானது என்று போற்றப்படும் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில், பாட வேண்டும் என நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல், கண்ணதாசனின், ‘பசுமை நிறைந்த நினைவுகளே!’ அன்றிலிருந்து இன்று வரை, அத்தினத்தில் அனைவராலும் பாடப்படும் பாடல் இது தானே?

    பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடிப் பறந்த பறவைகளே
    பழகிக் கழித்த தோழர்களே
    பறந்து செல்கின்றோம்

    என்பதில் ‘பறந்து’ என்பதற்குப் பதிலாகப் ‘பிரிந்து’ என்று பாடுவதாக ஏற்பாடு.

    அந்த நாளும் வந்தது. கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியைகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்து இறுதியில் தோழிகள் அனைவருடனும் இப்பாடலைப் பாடத் துவங்கினேன்.

    குரங்குகள் போல, மரங்களின் மீதே தாவித் திரிந்தோமே
    குயில்களைப் போலே, இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
    வரவில்லாமல், செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
    வாழ்க்கைத் துன்பம், அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே

    என்று பாடுவதற்குள்ளாகவே, பெரும்பாலோர் பாடமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் துவங்க, கஷ்டப்பட்டுத் தொடர்ந்து பாடி முடித்தவர்கள் ஓரிருவர் மட்டுமே.

    இப்பாடலைக் கேட்ட எங்கள் முதல்வர், “நீங்களே சொந்தமாக எழுதிப்பாடியதா?” என வினவினார். திரைப்படப்பாடல்களைப் பற்றி மிக மோசமான எண்ணம் கொண்டிருந்த அவர், இப்பாடலைக் கேட்ட பிறகு தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

    ஏற்கெனவே இதே வரிகளைப் பலமுறை பாடிப் பார்த்திருந்தும் கூட அச்சமயத்தில் முழுவதும் பாடமுடியாத அளவுக்கு, தொண்டையை அடைக்க வைத்த அவ்வளவு பொருத்தமான வரிகளைக் கொண்ட பாடல்! கல்லூரியில் காலடி வைக்காத கவிஞர், மாணவப் பருவத்தின் அனைத்து அம்சங்களையும் அழகாகச் சொல்லிப் பிரிவின் வேதனையைத் துல்லியமாக உணர்த்தி எங்களை அழ வைத்த நிகழ்வு, என்றுமே மறக்க முடியாதது. தொலைக்காட்சியில் இன்று இப்பாடலைக் கேட்டால் கூட, அந்த நாள் நினைவுகள், நேற்று நடந்தது போல, நெஞ்சிலே வலம் வருகின்றன! அந்தளவுக்கு என் மலரும் நினைவுகளில், முக்கிய இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல் இது!

    என் கல்லூரி வாழ்வின் முதல் நாள், பழைய தோழியை அடையாளம் காணவும், இறுதி நாளை வாழ்நாள் முழுக்க நினைவில் நிறுத்தவும் உதவியவை கண்ணதாசனின் இந்த அருமையான திரையிசைப்பாடல்களே!

    பள்ளி நாட்களில் தினமும் இரவில் தந்தை, தங்கை, தம்பிகளுடன் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, அன்றைய தின நிகழ்வுகளையும் செய்திகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே சாப்பிடுவது வழக்கம். அச்சமயத்தில் என் தந்தை, அரசியல், இலக்கியம், சினிமா, நாட்டு நடப்பு பற்றிய பலசெய்திகளை எங்களுக்குச் சொல்வார்.

    ஒருநாள் தமிழலக்கியத்தை ஆழமாகக் கற்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயத்தை எடுத்தாண்டிருப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார்,” என்ற பாரி மகளிரின் பாட்டின் கருத்தை மையமாக வைத்து, அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே” என்ற பாடலைக் கவிஞர் இயற்றியிருப்பது பற்றிச் சொன்னார்.

    தொடர்ந்து ‘அத்திக்காய்,’….என்ற பாடல் பற்றிப் பேச்சு வந்தது. அதுவரை அத்திக்காய் என்றால் அத்திமரத்தின் காய் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு வரியாக தந்தை விளக்கம் சொன்னபோது, எங்களுக்கு வியப்புத் தாங்கவில்லை.

    ஆர்வக்கோளாறு அதிகமாகி “உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?” என்றால் என்ன அர்த்தம் அப்பா?” என்று அவர் சொல்லாமல் விட்ட வரிக்குத் தம்பிகளுக்கு முன்னால் அசட்டுத்தனமாய் நான் கேட்டதும், அது காதில் விழாதது போல் அவர் எழுந்து கையலம்பச் சென்றதும், இதைப்போய்க் கேட்கிறாயே என்று என் தங்கை, யாருக்கும் தெரியாமல் என் காலைக் கிள்ளியதும் என் நினைவுக்கு வந்து, இப்போதும் என்னை நாணச் செய்கின்றது.

    பள்ளிப்பருவத்தில், நோட்டுகளின் கடைசிப் பக்கங்களில் திரைப்படப் பாடல்களை எழுதிவைக்கும் பழக்கம் எங்களிடமிருந்தது. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பில்லாமல் சொல்லுமளவிற்கு அவை மனப்பாடமாயிருந்தன. மனப்பாடச்செய்யுள் பகுதியில் கண்ணதாசன் பாடல்களிலிருந்திருந்தால், வகுப்பில் எல்லோருமே முழுமதிப்பெண் பெற்றிருந்திருப்போம்! அக்காலத்தில் இரவு பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரை வானொலியில், ‘நெஞ்சில் நிறைந்தவை,’ என்ற தலைப்பில் திரைப்படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றில் பெரும்பாலானவை கவிஞர் கண்ணதாசனுடையவை தாம். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டே அவற்றைக் கேட்பது மனதுக்கு இதமான தாலாட்டாக இருக்கும்.

    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    உள்ளத்தின் கதவுகள் கண்களடா – இங்கே
    உறவுக்குக் காரணம் பெண்களடா

    போன்ற பாடல்களைக் கேட்டுவிட்டு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே தூங்கிவிடுவது வழக்கம். வானொலியை நிறுத்தாமல் தூங்கிவிட்டமைக்கு அடுத்த நாள் காலையில், அம்மாவிடம் திட்டு வாங்குவது சகஜமாய் நடக்கும் நிகழ்வு.

    கவலைகளால் மனம் சோர்ந்து போயிருக்கும் சமயங்களில், கவிஞரின்
    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

    உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக,
    மலர்கள் மலர்ந்தது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்,
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்?
    ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்திவா

    போன்ற பாடல்களைக் கேட்கும் போது சோர்வு நீங்கி, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.

    நெருங்கிய உறவுகளை இழந்து விரக்தியின் எல்லையில் நின்ற போது
    போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” என்ற பாடலை நமக்காகவே கவிஞர் எழுதியிருக்கிறாரோ என்று தோன்றும்.

    என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
    இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே

    நிம்மதியிழந்து தூக்கத்தைத் தொலைத்த காலத்தில், இவ்வரிகள் சொல்லும் நிதர்சனம் உறைத்தது!

    முதன்முதலில் தாய்மைப்பேறை எதிர்நோக்கியிருந்த காலத்தில்,
    பூப்போல பூப்போல பிறக்கும்
    பால் போல பால் போல சிரிக்கும்
    மான் போல மான் போல துள்ளும்
    தேன் போல இதயத்தை அள்ளும்

    என்ற வரிகள் மனதை மயிலிறகால் வருடி பேருவகை அளித்தன!

    “உள்ளாடும் உயிரொன்று கண்டேன், அதன்
    உருவத்தை நான் என்று காண்பேன்?,”
    என்று முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாயொருத்தியின் கனவையும் ஏக்கத்தையும் அத்துணை நுணுக்கமாக தாம் அனுபவித்தது போல் சொல்லில் வடித்த கவிஞரை, என்ன சொல்லிப் புகழ?

    அமைதியான நதியினிலே ஓடும்- ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் நதியினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

    உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும் போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும்
    பெரும் பணிவு என்பது பண்பாகும்

    கருணை பொங்கும் உள்ளம்- அது
    கடவுள் வாழும் இல்லம்
    கருணை மறந்தே வாழ்கின்றான்
    கடவுளைத் தேடி அலைகின்றான்

    போன்ற வாழ்வியலுக்குத் தேவையான உயரிய தத்துவங்களை எளிய மொழியில் பாமரருக்கும் புரிகின்ற மாதிரி, பொட்டில் அடித்தாற் போல் படைத்துச் சென்ற மக்கள் கவிஞரின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் சக்தி படைத்தவை!

    என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிஞரின் பல்வேறு பாடல்கள் பொழுதுபோக்கு என்ற அம்சத்தைத் தாண்டி என் ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட காரணத்தினால், ‘அந்த நாள் முதல், இந்த நாள் வரை’ அவை என் மீது தாக்கத்தைச் செலுத்தி என்னை உயிர்ப்புடன் இயங்க வைப்பது, முழுக்க முழுக்க உண்மை!

    ‘காலங்களில் அவள் வசந்தம்,’ பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலம், தமிழ்த்திரையிசைப் பாடல்களின் வசந்த காலம் என்றால் அது மிகையில்லை!

    Share
  • அன்பு நண்பி மணிமொழிக்கு!

    அன்பு நண்பி மணிமொழிக்கு ஆதிரை எழுதியது.

    இங்கு நான் நலமே.  அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலத்தையும் அறிய ஆவல்.

    நீண்ட நாட்களுக்குப் பின் உன் கடிதத்தைப் பார்த்தவுடன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விட்டேன்.  ஆனால் அதில் உன் அண்ணன் மகன் பாலச்சந்தரின் திருமண முறிவு பற்றி நீ கவலையுடன் எழுதியிருந்ததைப் படித்தவுடன் மிகவும் வேதனையாகிவிட்டது.  அவனை எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது.  சிறு வயதில் நீ தானே அவனை வளர்த்தாய்?  அவனது பெற்றோரை விட, ‘அத்தை’ ‘அத்தை’ என்று உன்னிடம் தான் அவனுக்கு ஒட்டுதல் அதிகம்!

    நீ குறிப்பிட்டிருந்தது போல், இக்காலத்தில் திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் மண முறிவு நிகழ்வது, மிகவும் கவலையளிக்கும் செய்தி தான்.   இக்கால பிள்ளைகளுக்கு எங்கும் எதிலும் அவசரம் தான்.  கண்டவுடன் காதல், பெற்றோரை எதிர்த்து அவசரத் திருமணம், மஞ்சள் கயிறு காய்வதற்குள்ளாகவே மணமுறிவு!

    ஹிந்து பத்திரிக்கையில் மணமகன்/மகள் தேவை விளம்பரங்களில் பாதிக்குப் பாதி மணமுறிவு பெற்றவர்களின் விளம்பரம் வருவதைப் பார்த்தாயா? நம் குழந்தைகள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் மணி?

    ஒரு குழந்தை பிறந்த பின்னரும், பாலுவின் மனைவி மணமுறிவு பெறுவதில்  ஆர்வம் காட்டுவது தான் பெரிய கொடுமை. குழந்தையின் நலனை உத்தேசித்தாவது, இருவரும் சேர்ந்திருக்கக் கூடாதா? சிறுவயதிலேயே பெற்றோரைப் பிரிந்து வாழ, அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது?

    மணமுறிவுக்கு அப்பெண் வீட்டார் பதினைந்து லட்சம் கேட்கிறார்கள் என்பதையறிந்து அதிர்ச்சி.  மணமுறிவை இப்போது பெண்வீட்டார் ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏனெனில் என்னுடன் வேலை பார்க்கும் விஜி என்பவரின் மகனுக்கும், இது போன்றே நடந்தது.  திருமணம் முடிந்த ஆறு மாதங்களுக்குள் விஜியின்  மருமகள், “இனிமேல் இங்கு வாழ முடியாது,” என்று சொல்லி விட்டு அவளது அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள்.  இரவில் அலுவலக நண்பர்களுடன் பார்ட்டியில் கூத்தடித்து விட்டு, நேரங்கழித்து வீட்டுக்கு வந்தவளைக் கணவன்   கண்டித்தானாம்.  தன் சுதந்திரத்தில்(!) தலையிடுவதாக அவனோடு சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டுக்குப் போனவள், போனவள் தான்.

    இவர்களும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள்.  “பெண்ணையும் பையனையும் தனிக்குடித்தனம் வைத்து விடுகிறோம்;  நாங்கள் யாருமே வரமாட்டோம்,” என்றெல்லாம் கூடச் சொல்லிப் பார்த்தார்கள்.  ஆனால் அவள் எதற்கும் மசிவதாய் இல்லை.  ‘இனி இவனோடு சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை,’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாளாம்.

    பெண்ணின் பெற்றோரும், அவளது அந்த முடிவுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்ற போது விஜி மிகவும் நொந்து போய்விட்டார்.  நம் பிள்ளையோ, பெண்ணோ இது போல் தவறு செய்யும் போது பெற்றோராகிய நாம் என்ன செய்வோம்?

    திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்!  குடும்பத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்.  இரண்டு பேரும் வெவ்வேறு குடும்பத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் என்பதால், துவக்கத்தில் கருத்து வேறுபாடு இருக்கவே செய்யும்.  அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையை நாசம் செய்து கொள்ளக்கூடாது; விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையே ஈகோ என்ன வேண்டிக்கிடக்கிறது? என்றெல்லாம் நம் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லி, இருவருக்கும் சமரசம் செய்து வைக்கத் தானே முயல்வோம்?

    ஆனால் இப்போது பெற்றோரே, தம் பெண்ணிடம், “நீயும் தான் அவனுக்கிணையாகச் சம்பாதிக்கிறாய்; நீ எதற்கு அடங்கிப் போக வேண்டும்?  பிரிந்து வருவது தான் சரி,” என்று பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில் இன்னும் அதிகமாக்குகிறார்கள்.  அல்லது “இது என் மகளுடைய வாழ்க்கை பிரச்சினை; இதில் அவள் தான் முடிவெடுக்க வேண்டும்; எங்களால் எதுவும் செய்ய முடியாது,” என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.  விளைவு?  மணமுறிவு!

    அதற்கு நஷ்ட ஈடாக பையன் வீட்டாரிடம் பதினைந்து அல்லது இருபது லட்சம் எனப் பேரம் பேசுவது தான் எல்லாவற்றிலும் கொடுமை!  எத்தனை லட்சம் கொட்டிக் கொடுத்தாலும், நாசமாய்ப் போன தம் பெண்ணின் வாழ்வு சீராகி விடுமா என்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

    நாம் இருபது ஆண்டுகள் வேலை செய்து பெற்ற வருமானத்தை நம் பெண்கள் இருபது வயதிலேயே பெறுகிறார்கள் என்பது மகிழ்ச்சி தான்.    ஆனால் அதற்காக பெரியவர்களை மதிக்காமல்,  அவர்களது புத்திமதியை அலட்சியம் செய்யும் போக்கு, எதற்கும் விட்டுக்கொடுத்து வாழாத பிடிவாதம் தான் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

    மேல்நாட்டுக் கலாச்சாரத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி நம்முடையதைக் காற்றில் பறக்க விட்டு விட்டுக் காதலர் தினம் கொண்டாடுவதும்,  திருமணத்துக்கு முன்பே, எந்தவிதக் கட்டுப்பாடுமின்றிக் காதலனுடன் சினிமா, பார்க் என்று சுற்றுவதும், ஆண் பெண் என்ற பேதமில்லாமல், மது அருந்துவதும்,  புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடு இரவில் பாட்டு, டான்ஸ் என்று பொது இடங்களில் கும்மாளம் அடிப்பதும்,  அங்கிங்கென்னாமல் எல்லா இடங்களிலும் மிகவும் சகஜமாகிவருகிறது. இதனால் பாரம்பரியம் மிக்க நம் குடும்பம் என்ற அமைப்பே, சிதைவுக்குள்ளாகும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் மணி!

    இது தான் பெண்களின் உண்மையான சுதந்திரம் என்ற மாயையில் இவர்கள் உழலுவது தான் சோகத்திலும் பெரிய சோகம்!

    கயலுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் துவங்கியிருக்கிறது மணி!  பையன்  ஏழையாக இருந்தாலும் படித்தவனாக, பண்புள்ளவனாக, நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாக, எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவனாக அமைய வேண்டும் என்பதே என் வேண்டுதல்!   அவளிடம் ஒரு அம்மாவாக மட்டுமில்லாமல், எந்த விஷயமானாலும் கூச்சப்படாமல் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு ஒரு தோழியாக நடந்து கொள்கிறேன்.  மேலும் அவளுக்கு நம் தமிழ்க் கலாச்சாரப் பின்னணி மற்றும் குடும்ப மதிப்பீடுகளைச் சொல்லியே வளர்த்திருக்கிறேன்.  எனவே மாமியார் வீட்டில், ‘பெண்ணை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்,’ என்ற நற்பெயரை அவள் எனக்கு வாங்கித் தருவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.  உனக்குத் தெரிந்த இடத்திலும், கயலுக்கு மாப்பிள்ளை பார்க்கவும்.

    மற்றவை உன் அன்பு கடிதங்கண்டு பதில்,

    இப்படிக்கு,

    ஞா.கலையரசி

    Share
  • அன்பு மணிமொழிக்கு!…

    ஞா.கலையரசி 

     

    அன்பு மணிமொழிக்கு ஆதிரையின் மடல்!

    அன்பு நண்பி மணிமொழிக்கு ஆதிரை எழுதியது.  இங்கு எல்லோரும் நலமே.  அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலத்தையும் அறிய அவா. 

    கவினுக்கு இன்றோடு ஐந்து வயது பூர்த்தியாகிறது.  பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஏற்படும் சண்டை இன்னும் நின்றபாடில்லை.  இருவரின் சண்டையைத் தீர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.

    இருவருக்கும் தாய்மொழி வழிக் கல்வி தான் கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தேன்.  ஆனால் நம் மக்களிடையே ஆங்கில மோகம் அளவுக்கதிகமாக இருப்பதால், நல்ல பள்ளிகள் என்ற பெயர் வாங்கிய அனைத்திலும், ஆங்கில வழிக்கல்வியே போதிக்கப்படுகிறது.

    அந்தப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு மக்கள் தவமாய்த் தவமிருக்கிறார்கள்.  காலையில் பத்துமணிக்குத் திறக்கப்படும் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க, இரவு முழுதும் சாலையில் கியூ வரிசையில் நிற்கிறார்கள்!

    ஊரோடு ஒத்துவாழவேண்டும் என்ற பொன்மொழியைக் காரணம் காட்டி குழந்தைகளை ஒரு பெயர் பெற்ற கான்வெண்டில் சேர்த்து விட்டார் என் கணவர்.  என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.  இரண்டாவது மொழியாக பிரெஞ்சோ, ஹிந்தியோ எடுக்கக்கூடாது, தமிழ் தான் எடுக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.

    பிள்ளைகளுக்குத் தான் ஏற்கெனவே தமிழ் தெரியுமே?  தமிழுக்குப் பதிலா ஹிந்தி, சம்ஸ்கிருதம் எதையாவது கத்துக்கலாமே, மதிப்பெண்ணும் கூடுதலாகக் கிடைக்கும் என்கிறாள் என் பக்கத்து வீட்டு மாமி.  மதிப்பெண் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்துக் குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தீர்மானிக்கும் நம் மக்களின் அறியாமை எப்போது மாறும் மணி?

    குழந்தைக்குத் தமிழ் பேசத்தெரிந்தால்  போதாதா?  தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? என்பது இவரது கேள்வி.

    பொருள் புரியாமல் கவின் பாடும் ஆங்கில நர்சரி பாடல்களைக் கேட்டுப் புளகாங்கிதமடைகின்றனர் என் வீட்டார்.  வானம் பார்த்த பூமியில் வாழும் நம் குழந்தைகள், மழையே மழையே வா வா என்று வரவேற்றுப் பாடாமல், “ரெயின் ரெயின் கோ அவே”  என்று உற்சாகமாகப் பாடும்போது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை மணி!

    சின்னவள் தூக்கத்தில் ரொம்பக் கெட்டி.  காலையில் அவளை எழுப்பிக் கிளப்புவது பெரும் பாடாக இருக்கிறது.  குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் கொஞ்ச நேரம் போய் விளையாடி விட்டு வாருங்கள் என்று சொல்கிறேன்.  சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?நம் சின்னவயதில் தெருவில் இருட்டுகிற மட்டும் விளையாடிய அனுபவங்கள் எவ்வளவு பசுமையாக நினைவிலிருக்கின்றன?

    ‘மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா,’ என்றானே பாரதி!  ஆனால் வெளியே சென்ற கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் இருவரும் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பி விடுகின்றனர்.  தெருவில் விளையாடுவதற்கு யாருமே இல்லையாம்.  பள்ளி விட்டு வந்தவுடன் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி விடுகின்றனர். அல்லது வீட்டுப் பாடம் செய்து  பிள்ளைகள் களைப்படைந்து, அப்படியே தூங்கி விடுகின்றனர்.

    விரல்கள் ஒடிந்து போகும் அளவுக்கா குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பார்கள் மணி?  ஒரு நாள் கவினுக்குக் கொடுத்த  வீட்டுப் பாடத்தைக் கண்டு மலைத்துப் போய், குழந்தை எழுதுவது போல இடது கையால் நானே கிறுக்கி எழுதியனுப்பினேன்.  ஆனால் அவளது வகுப்பு ஆசிரியை அதைக் கண்டுபிடித்து, “நாளையிலிருந்து உன் அம்மாவைப் பள்ளிக்கு வரச்சொல் என்றாளாம்!” எப்படிக் கண்டுபிடித்தாள்? என எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்!

    கவின் எழுதியதையும், நான் எழுதியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.  அவள் ஓர் எழுத்தைச் சின்னதாகவும், இன்னொன்றை மண்டை மண்டையாகவும் எழுதியிருக்கிறாள்.  ஆனால் நான் என்னதான் கிறுக்கி எழுதியிருந்தாலும், எல்லா எழுத்துக்களும் ஒரே அளவாக யூனிபார்மாக இருந்ததை வைத்து அவள் கண்டுபிடித்திருக்க வேண்டும்.  பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்களே, அது போல திருட்டுத் தனம் செய்தாலும் மாட்டிக்கொள்ளாமல் செய்ய சாமர்த்தியம் வேண்டும் மணி!

    பெரியவள் கயல் ஒருநாள் பள்ளி டயரியை மறந்து போய் விட்டாள் மணி!

    அதற்காக ஒரு நாள் முழுதும் அவளை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டுக்கொண்டே, ‘இனிமேல் டயரியை மறக்காமல் எடுத்துவருவேன்,’ என்று இருநூறு முறை இம்பொசிஷன் எழுதச் சொல்லியிருக்கிறாள் அவள் வகுப்பு ஆசிரியை.  மாலை வந்து கயல் அழுது கொண்டே முட்டியைக் காட்டவும், என் கோபம் எல்லையைக் கடந்து விட்டது மணி!  இத்தனைக்கும் இவள் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி!

    குழந்தையுடன் போய் அந்த ஆசிரியையைப் பார்த்து என் ஆத்திரம் தீருமட்டும் திட்டிவிட்டு வந்து விட்டேன் மணி!  நீயெல்லாம் கல்யாணமாகி ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் உனக்குக் குழந்தையின் அருமை தெரிந்திருக்கும் என்று திட்டியபோது அவள் முகமே சுருங்கிவிட்டது.  என் வீட்டாரோ ஏன் இப்படித் திட்டினாய், கண்டிப்பாக குழந்தைக்கு டி.சி. கொடுத்து விடுவார்கள் என்று என்னைப் பயமுறுத்தினர்.

    குழந்தைக்கு அநீதி இழைக்கப்பட்டால் கூடப் பெற்றோர் இது போல் பயந்து கொண்டு கேள்வி கேட்காததால்,  இவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.  டி.சி. கொடுத்தால் கொடுக்கட்டும்; இப்படிப்பட்ட பள்ளி என் குழந்தைக்குத் தேவையில்லை என்று கூறினேன்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

    பள்ளிகள் குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல் சிறைக்கைதிகள் போல் நடத்தும் கொடுமை இனியாவது மாற வேண்டும்!  சிறுகதை மன்னர் புதுமைப்பித்தனின் ‘மோட்சம்,’ கதையைப் படித்திருக்கிறாயா மணி?

    அக்காலத்தில் ஆசிரியர் மாணவரை நடத்தும் போக்கு, கொஞ்சங்கூட  மாறாமல் இன்னும் அப்படியே தான் இருக்கின்றது!

    தெருவில் கிடந்த ஒரு நாய்க்குட்டிக்கு ஒரு நாள் பரிதாபப்பட்டுப் பால் ஊற்றப்போய், இப்போது அது எனது மூன்றாவது குழந்தையாகி விட்டது!   குழந்தைகள் அதற்கு ஜிம்மி என்று பெயரிட்டிருக்கிறார்கள்.  அதன் பெயரை யாரோ கேட்ட போது ‘பி.ஜிம்மி,’ என்று இன்ஷியலோடு கவின் சொன்னதைக் கேட்டு, நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.  அவளுடையது  போலவே ஜிம்மிக்கும் ‘பி’ இன்ஷியலாம்!

    நீ மாற்றலாகிச் சென்ற பின்னரும், நம் நட்பு தொடர இந்தக் கடிதம்  மட்டுமே உதவுகிறது.  இது மட்டும் இல்லையென்றால் நம் தொடர்பு எப்போதோ அறுபட்டுப் போயிருக்கும்.  என் எண்ணங்களை, அனுபவங்களை, உன்னிடம் பகிர்ந்து கொள்வதில் உள்ள இன்பமே அலாதி தான் மணி!

    மற்றவை உன் கடிதம் கண்டு பதில்,

    இப்படிக்கு உன் அன்பு நண்பி,

    ஆதிரை

    Share
  • ‘டார்வின் படிக்காத குருவி’ – புத்தக மதிப்புரை

    ஜி. கலையரசி

    kalikal

     

    புதுவை அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராக பணியாற்றும் உமாமோகன் அவர்களின் முதல் கவிதைத்தொகுப்பு இது.

    இவரது கவிதைகள் ஏற்கெனவே வண்ணக்கதிர், செம்மலர், ஆனந்தவிகடன், கல்கி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.  வல்லமை, சொல்வனம், உயிரோசை, அதீதம். கீற்று, திண்ணை, மஹா கவிதை உள்ளிட்ட பல இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

    ‘டார்வின் படிக்காத குருவி,’ என்ற ஒரு கவிதையின் பெயரையே, தன் தலைப்பாகத் தாங்கி நிற்கும் இந்நூலில், நூற்றுக்கும் மேற்பட்ட  கவிதைகள் உள்ளன.

    மாந்த நேயம், இயற்கையோடியைந்த வாழ்வு, பசுமை சூழலைக் காத்தல், சுற்றுச் சூழலின் சமனைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பறவைகளை அழிவிலிருந்து மீட்டல், மலைக்கும் மடுவுக்குமான பொருளாதார ஏற்றத்தாழ்வை  நீக்குதல் போன்ற சிறந்த சமூக சிந்தனைகள், இவரது பல கவிதைகளின் பாடுபொருளாக ஒலிக்கின்றன.

    இயற்கையை விட்டு வெகுதூரம் விலகிப் போய், அனைத்தும் வணிகமயமாகி விட்ட இன்றைய சூழலில், நிலவோடு வாழ்ந்த அந்த இனிமையான நாட்களின், பசுமையான நினைவுகளை அசை போட்டு ஏங்குகிறார் கவிஞர்.

    நிலவைக் காட்டிச் சோறூட்டவோ, கதைகள் சொல்லிச் சீராட்டவோ இன்று யாருக்கும் நேரமில்லை.  தொலைக்காட்சிப் பெட்டியில் மூளையை அடகு வைத்து, கண் சிமிட்டக் கூட மறந்து, கார்ட்டூன் பார்த்தபடியே என்ன தின்கிறோம் என்கிற சுய உணர்வின்றி, வாயில் திணிப்பதை விழுங்கி வைப்பது தான் இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலை.

    ‘நதியும் நிலவும்,’ என்ற கவிதை:-

    “நிலவைக் கொண்டாடினோம்

    நிலவோடே வாழ்ந்தோம்

    நிலாச்சுவை மறந்த உலகில்

    ஓடிவா பாட ஒருவருமில்லை,”

    நிலாச்சோறு தெரியும்.  ‘நிலாச்சுவை’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  தேனில் ஊறிய பலாச்சுளை போல நிலாச்சுவை இனிக்கின்றது.  அன்னை தமிழுக்கு இவரது கொடை ‘நிலாச்சுவை.’

    பதிப்புரையில் யாழினி முனுசாமி சொல்லியிருப்பது போல், வார்த்தை களை வலிந்து திணிக்காமல், மிகவும் இயல்பாக தம் வாழ்வியல் அனுபவங்களை,  உள்ளத்து உணர்வுகளை எளிய நடையில் வெளிப் படுத்துகிறார் கவிஞர்.

    “வேற்று மொழி கலப்பின்றி, நுட்பமான சொற்கட்டுடன் கவிதைகள் இயல்பாக தமது வெளிகளை ஆட்சி செய்கின்றன,” என்று பாராட்டுகிறார், இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் இரா.மீனாட்சி அவர்கள்.

    இத்தொகுப்பில் சிறந்த கவிதைகள் பல இருந்தாலும், விரிவஞ்சி எனக்குப் பிடித்த ஒரு சில கவிதைகளை மட்டும், உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

    டார்வின் படிக்காத குருவி அல்லது குருவி டார்வினின் தத்துவத்தைப் படிக்கவில்லை என்று பொருள் மயக்கம் தரும் இக்கவிதை, இந்நூலிலுள்ள  சிறந்த கவிதைகளுள் ஒன்று:-

    அக்கவிதையை நீங்களும் சுவைக்க வேண்டுமா?

    “ஒரு காலத்தில்

    களத்துமேடு இருந்த ஞாபகத்தில்

    ஒரு காலத்தில்

    கூட்டமாய் வந்த ஞாபகத்தில்

    ஒரு காலத்தில்

    தானியம் கொத்திய ஞாபகத்தில்

    புதிய நகரின்

    குப்பைமேட்டு

    டெட்ராபேக்குகளில்

    அலகால் தடவித் தேடும்

    குருவியைப் பார்த்து

    சிரித்தது

    சுவரொட்டி  அசைபோடும்

    பசு.”

    இக்கவிதையை வாசித்தவுடன் என் சிறு வயதில் அடிக்கடி கண்ட காட்சி என் கண்முன்னே விரிகிறது.  வேளாண்மை செழித்திருந்த காலமது.  அறுவடை முடிந்து நெல் களத்துமேட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றது.  .  அங்குச் சிதறும் தானியங்களைக் கொத்தித் தின்ன கூட்டங்கூட்டமாய் சிட்டுக்குருவிகள் வருகின்றன.  புல்லையும் வைக்கோலையும் ஆசை தீர தின்றுவிட்டு அருகிலிருந்த  மர நிழலில் படுத்துக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருக்கின்றன மாடுகள்.

    இன்றோ விளை நிலங்கள் அனைத்தும் மனைகளாக்கப்பட்டுப் புதுப்புது நகர்களாகிவிட்டன.  வாய்க்கால், வரப்பு, களத்துமேடு, சம்பா, குறுவை, தாளடி, நன்செய், புன்செய், பத்தாயம், மானாவாரி சாகுபடி, வானம் பார்த்த பூமி போன்ற  சொற்கள் கொஞ்சங் கொஞ்சமாகப் புழக்கத்திலிருந்து விடைபெற்றுக் காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.  இன்றைய குழந்தைகளுக்குக் களத்துமேடு என்றால், என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே.

    பழைய ஞாபகத்தில் தன் பரிவாரங்களோடு வந்து தானியம் பொறுக்கித் தின்ற  இடத்தில் களத்துமேட்டைத் தேடுகிறது குருவி.  களத்து மேட்டைத்தான் காணவில்லையென்றால், கும்பல் கும்பலாக உடன் வந்த தன் கூட்டத்தையும் காணோம்.  அன்று வேண்டும், வேண்டாம் என்று இஷ்டத்துக்குத் தின்று தீர்த்த தானியக் குவியலில், ஒரு நெல்மணி கூட இன்று அகப்படவில்லை. கூடத்தில், முற்றத்தில், தாழ்வாரத்தில் நெல்லைக் கொட்டி வைக்கும் வீடுகளும் இப்போது  இல்லை.

    கிணற்றடியில், முற்றத்தில் பாத்திரம் துலக்கும் இடத்தில் முன்பெல்லாம் சோற்றுப் பருக்கைகள் சிந்திக்கிடக்கும்.  வீட்டில்  தானியங்களைப் புடைத்துச் சுத்தப்படுத்தும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறும் தானியங்கள் பறவைகளுக்கு உணவாகும்.  இன்றோ அடுப்பங்கரை தொட்டியில் சாமான்கள் கழுவப்பட்டு சிந்தும் உணவு தரைக்கடியிலுள்ள சாக்கடையில் கலந்து விடுகின்றன.  கடைகளில் சுத்தப்படுத்தப்பட்டு பாலீதீன் பைகளில் கிடைப்பதால் தானியங்கள் சிந்துவதற்கு வாய்ப்பில்லை.

    எனவே குப்பைமேட்டில் கிடக்கும் டெட்ராபேக்கில் ஏதேனும் சோற்றுப் பருக்கைகள் கிடைக்காதா என அலகால் தேடிப்பார்க்கும் அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவியைப் பார்த்துச் சிரிக்கிறது சுவரொட்டி தின்னும் பசு.

    வேளாண்மை போனதால் பசுவிற்கு வைக்கோல் இல்லை.  தோட்டம் இல்லாததால் வாழை மரங்கள் இல்லை.  சாப்பாட்டுக்கு வாழை இலைகள் பயன்படுத்திக் குப்பை தொட்டிகளில் போடும் பழக்கமும், இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது.

    ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை,’ என்கிற கதையாக வைக்கோலுக்குப் பதிலாக, வாழை இலைக்குப் பதிலாக, சுவரொட்டி தின்று வயிற்றை வளர்க்கும் பசு, குருவியைப் பார்த்துச் சிரிக்கிறது.

    இன்று குருவி!  நாளை …..நாம்?

    ஆண்டு பலவானாலும் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வசிக்கும் நகரவாசிகளுக்கு, ஒரு வீட்டில் விசேஷம் என்றால் ஊர் முழுக்க உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அந்நாளைய கிராமியச் சூழலைக் கண்முன் நிறுத்தும் ‘எங்கேந்த அதெல்லாம்?’ என்ற இக்கவிதை வாசித்து இன்புறத்தக்கது:

    “பேபியக்கா தைத்து விடும்

    தாழம்பூச் சடை……

    யார்வீட்டுப் பெண் சடங்கானாலும்

    வெளியில் வரும் கெம்புக்கல் திருகுப்பூ….. . ….

    பேன்குத்தும் தாலாட்டில்

    செருகும் கண்கள்,

    ஏழு வீட்டுக் கூரையும்

    கட்டெறும்பும்

    சேர்த்தரைத்த மருதாணி.

    எந்த வரியும் புரியவில்லை

    இந்நாளின் எழிலரசிக்கு”.

    செடி, கொடிகளோடு கூடவே வளர்ந்து, அவற்றோடு உணர்வு பூர்வமாய் ஒன்றிணைந்து மகிழ்ந்த நம் இளம்பிராயத்து இனிய நினைவுகளை மீட்டெடுக்கிறது, ‘ஒளிச்சேர்க்கை’ என்கிற இக்கவிதை:-

    “இந்தக் கோவை இலை

    சிலேட்டு துடைக்கப்

    பறிக்கப்பட்டிருக்கிறதா,

    இந்த மருதாணி

    இலைபழுக்க வாய்ப்பிலாது

    துளிர்க்க துளிர்க்க

    உருவப்பட்டிருக்கிறதா,

    இந்த இலந்தை முள்

    இளரத்தம் பார்த்திருக்கிறதா,

    ஆமெனில் இவற்றோடு

    வாழ்க்கை இருந்திருக்கிறது

    இல்லையெனில் இறந்திருக்கிறது.”

    மஞ்சள் செம்பருத்தி,’ என்ற கவிதையின் இவ்வரிகள், ஏழையின் துன்பங் கண்டு இரங்கும் கவிஞரின் மனித நேயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

    “பசித்த வயிற்றின் எரிச்சல் உணராதவனும்

    ஆடைக்கிழிசலின் அவமானம் உணராதவனும்

    ஏக்க விழிக்குழந்தையின்

    சடைத்தலைக்குச் சலிப்பவனுமான

    அவனுக்கும் மனிதன் என்று தான் பெயர்.”

     

    இத்தொகுதியில் என்னை மிகவும் பாதித்த கவிதை:

    ‘யுகாந்திரமாய்த் தவறும் உறக்கம்’

    “காலமிது காலமிது

    கண்ணுறங்கு மகளே

    காலமிதைத் தவறவிட்டால்

    தூக்கமில்லை மகளே,”

    என்ற பழைய திரைப்படப்பாடலை நினைவுபடுத்தும் இக்கவிதை, இதோ உங்களுக்காக:-

    “குழாயடிப் பாத்திரங்கள்

    விட்டுப்போன பால்கணக்கு

    ஊறும் அரிசி உளுந்து

    தீர்ந்து போன வெங்காயம்

    காலையில் வீசிப்போன

    ஒரு வசைச் சொல்

    ஒவ்வொன்றாக நுழைந்து

    குழு படத்துக்கு இடம்பிடிப்பது போல்

    நெருக்கியடிக்கின்றன.

    என் மேலிமைக்கும் கீழ் இமைக்கும்

    நடுவே கருவிழிக்குச் சற்று மேலே.”

    சமையல் முடித்துத் துலக்க வேண்டிய பாத்திரங்கள் குழாயடியில் கிடக்கின்றன; இரு நாட்களாய் வாங்கிய பால் கணக்குக்குச் சுவரில் கோடு போட மறந்து விட்டேன்;

    இட்லிக்கு ஊற வைத்த அரிசி உளுந்தை ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டும்; காலையோடு வெங்காயம் தீர்ந்து விட்டது, இரவு சமையலுக்கு வாங்க வேண்டும்;

    இவற்றோடு காலையில் கணவன் வீசிப் போன வசைச்சொல்;

    சம்பளம் இல்லா வேலைக்காரியாய் நாள் முழுதும் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்றாலும் கணவன் வாயிலிருந்து ஒரு பாராட்டு இல்லை.  அட! பாராட்டுக் கூட வேண்டாம்; மனம் புண்படும்படியாகத் திட்டாமலாவது இருக்கலாமில்லையா?  போன்ற சிந்தனைகள், ‘நான்,’ ‘நீ’ என்று குழுப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்க இடம் பிடிப்பது போல் முண்டியடித்து, இமைகள் கண்களை முழுவதுமாக மூடி நிம்மதியாகத் தூங்க விடாமல் அவளது உறக்கத்தைக் கெடுக்கின்றன.

    யுகம் யுகமாய்த் தூக்கத்தைத் தொலத்து நிற்கும் பெண்களின்

    அவல வாழ்வைச் சொல்லும் இக்கவிதை, என்னைப் பாதித்ததில் வியப்பு ஏதுமில்லை.  ஏனென்றால் நானும் ஒரு பெண் தானே?  ஒரு பெண்ணின் வலியை, வேதனையை இன்னொரு பெண்ணால் தானே உணர முடியும்?

    இவரது அபி உலகம் என்ற கவிதை தொடரை ரசிக்க வேண்டுமானால் நாமும் ஒரு குழந்தையாக மாற வேண்டும்.

    “மறுமொழியையே கேள்வியாக்கும் உத்தி, தனது கேள்விகளைப் பிற உயிரிகளின் பார்வையில் வைக்கும் நேர்த்தி, கனமான கருத்துக்களை அங்கதத் தொனியில் பேசும் பாங்கு, எல்லாமே பக்கத்துக்குப் பக்கம் நிரம்பித் ததும்புகின்றன.  அழகிய குளம், தாமரை குளம் என எளிதில் இறங்கிவிட முடியாது ஆழம் அதிகம்,” என்று முன்னுரையில் இரா,மீனாட்சி அவர்கள் கூறியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்.

    டார்வின் படிக்காத குருவி

    கவிதை தொகுப்பு

    ஆசிரியர்:-  உமா மோகன்

    பக்க எண்ணிக்கை:- 144

    விலை:- ரூ 90/-

    முதல் பதிப்பு:- டிசம்பர் 2013

    வெளியீடு:- முரண்களரி படைப்பகம்

               34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர்,

               சின்னசேக்காடு, மணலி, சென்னை-68. 

     

       

    Share
  • பிரெஞ்சிலக்கிய வரலாறு’ – புத்தக மதிப்புரை

    கலையரசி

    kalai

    இலக்கிய வரலாறு என்ற தலைப்பைப் பார்த்தவுடன், தலைமறைவாகும் எண்ணம் உடனே உங்களுக்குத் தோன்றுகிறதா?  ‘அச்சச்சோ! படு போர்! ஆளை விடுங்க,’ என்று திரும்பிப் பார்க்காமல் ஓடுபவரா  நீங்கள்.? ‘அது மெத்தப் படித்தோருக்கான நூல்; இலக்கிய கோட்பாடுகளைப் புரியாத மொழியில் ‘இஸம்’, ‘ரசம்,’ என்று ஏதேதோ சொல்லிக் குழப்புவார்கள்,’ என்ற கருத்துடையவரா நீங்கள்?

    பிரெஞ்சு இலக்கிய வரலாறு என்றால் அம்மொழியின் படைப்பாளர் களையும் படைப்புக்களையும், கால வரிசையில் தொகுத்துத் தருவது தான் ஆசிரியரின் வேலை;  அதில் சுவைக்க என்ன இருக்கிறது என்று  நினைப்பவரா?

    இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்,’ எனில், இந்த மதிப்புரை உங்களுக்கானது தான். இதை ஒரு முறை வாசித்தால், தலைப்பை மட்டும் வைத்து நூலின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது எவ்வளவு பெரிய தவறு என்று தெரியவரும்.

    பிரெஞ்சிலக்கிய வரலாற்றைத் தமிழில் கூறும் முதல் நூல் இது.  ஆசிரியர் பிரெஞ்சு மொழி வழிக் கல்வி பயின்றவர் என்பதால் அவ்விலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருக்கிறது.  தமிழிலும் புலவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

    பிரெஞ்சு, தமிழ் இரண்டிலும் இவர் பெற்றுள்ள புலமை, பிரெஞ்சு படைப்புக்களிலிருந்து எடுத்துக்காட்டுத் தரும்போது, ஆங்காங்கே அதற்கிணையான கருத்துக்களைத் தமிழிலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்ட பெரிதும் துணை புரிகின்றது.  கவிதைகளைக் கூட மொழியாக்கம் என்று தெரியாதவாறு, தமிழ்க்கவிதை போல் உருமாற்றித் தாம் பெற்ற இன்பத்தை நாமும் துய்க்கப் பெரிதும் உதவியிருக்கிறார்.

    ஆ(ன்)த்ரே ஷெனிஏ (Andre Chenier 1762 – 1794)  என்ற கவிஞர் பாரீசு புரட்சியின் போது மிதவாதி என்பதால் தீவிரவாதிகளால் கைது செய்யப் பட்டு 1794 ல் கொலையுண்டார்.

    kala

    எந்த நேரமும் தலைவெட்டும் மேடைக்கு அழைக்கப்படலாம் என்ற நிலையில் அவர் பாடிய 88 அடி கொண்ட ஒரு கவிதையின் முதல் 24 அடிகளின் தமிழாக்கத்தைப் படித்துப் பாருங்கள்:

    “கடைசிக் கதிரைப் போல்,”

    “அழகிய தொருபகலின் அந்தத்துக்கு உயிரூட்டும்

    கடைசிக் கதிரொளியும் கடைமென் காற்றும்போல்

    கொலைமேடைக் கீழிருந்து கவிதைதனைப் புனைவதற்கு

    இன்னமும் நான் முயல்கின்றேன்.

    விரைவில் என்முறை வந்துவிடலாம்.

    பளபளக்கும் எனாமல் டயலின் மேலே

    அறுபது சுவடுகளே அமைந்துள்ள பாதையில்

    வட்டமாக உலாவும் மணிமுள்

    ஒலியெழுப்பும் தன்னுடைய காலடியை வைக்குமுன்

    கல்லறை உறக்கம் என்இமை தம்மை

    அழுத்தக் கூடும்.

    இந்தப் பயங்கரச் சுவர்களுக்கு இடையில்

    ஆவிகளைத் திரட்டும் கொடுங்கூற் றுவனின்

    செய்தியைத் தாங்கித் தூதன் ஒருவன்

    பழிப்புக்கு ஆளான படைவீரர் புடைசூழ

    வந்தென் பெயரைக் கூவியே இந்த

    நீண்ட ஒளியற்ற நடைப்பா தைகளை

    நடுங்க வைக்கலாம்,

    நானெழுதத் தொடங்கும் இந்தக் கவிதையடி

    தன்னிறுதி அசையை அடைவதற் குள்ளே.

    கொலை வெறியரைக் குறிவைத் தேநான்

    இந்த வேல்களைக் கூர்தீட்டு கின்றேன்,

    நீதிக்கு மிகமிக மெல்லிய ஆதரவாய்.

    கவிதையை அரைகுறையாய் அவன்முடிக்கக் கூடும்.

    கைகளில் தளையிட்டு எனையிழுத்துச் செல்லலாம்.

    அந்தச் சோகச் செய்தி வரும்முன்பு

    என்னை யறிந்திருந்த எல்லா நண்பரும்

    அப்போது என்றனுக்கு அந்நியர் ஆகிப்

    பார்வை யாளராய்க் கும்பல் கூடுவர். (பக் 163)

    (பி.கு.  பளபளக்கும் எனாமல் டயலின் . . . . . காலடியை வைக்குமுன் – ஒரு மணி நேரத்திற்குள்)

    கவிதையை வாசித்தவுடன் சில மணித்துளிகள் ஒன்றுஞ் செய்ய தோன்றாமல் மனம் கனத்துப் போய்விட்டது எனக்கு.  உங்களுக்கு?

    ‘வசந்தத்தின் வருகை,’ என்ற கவிதை:-

             “காலமானது காற்று குளிர்மழை

             என்ற போர்வை களைந்து

             பளிச்சென்ற அழகிய ஒளிவீசும்

             வெயில் பூவாடை யணிந்தது.” (பக்கம் 36)

    படிமம் ஒன்றைச் சுவைக்க வேண்டுமா?

    “கடல்களின் பட்டுக்கும் வடதுருவப் பூக்களுக்கும் மேலே

    குருதி ஒழுகும் இறைச்சிக் கட்டடம்” (பக் 229)

    (“கடல்கள் உடுத்தியுள்ள நீலப் பட்டாடைக்கும், வட துருவத்தில் நிமிர்ந்து நிற்கும் வெள்ளைப் பனிப்பாறைகளுக்கும் மேலே, இரத்தம் கசிகிற மாட்டிறைச்சி போல், செக்கச் சிவந்து தோன்றும் அந்தி வானம்”)

    இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை உண்டு என்றால் நீங்கள் நம்புவீர்களா?  சேச்சே! இருக்காது என்பீர்கள்.  சான்று காட்டினால்?

    இதோ எடுத்துக்காட்டு:-

    “என்னிரு தோள்மேல் கைகளை வைத்தே

    அழைத்துச் சென்றனர் மணப்பெண் போலக்

    கொஞ்சம் முரட்டுத் தனமாய்த் தானே.

    காவலர் பெற்றார் கெளதாரி ஒன்று;

    கொக்கும் முயலும் ஒக்கவே தந்தேன்;

    இருப்பினும் உள்ளேன் இங்கே இன்னும்”

    ஆசிரியரின் குறிப்பு:- (அவர் கைதான போது தப்புவதற்காகக் கையூட்டுக் கொடுத்தார்.  பயனில்லை.  (லஞ்சம் வாங்கியும் காரியத்தை முடிக்காதவர்கள் அக்காலத்திலேயே இருந்திருக்கிறார்கள்) (பக்:44)

    அல்போன்ஸ் தொதே(Alphonse Daudet) எழுதிய ‘தர்த்தாரே(ன்) த தராஸ்கோ(ன்)’ என்ற நகைச்சுவை புதினத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும்  ஒரு காட்சியும் நல்ல நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. (பக்கம் 209)

    தமிழில் வழங்கும் ‘உனக்கும் பே பே, உங்கப்பனுக்கும் பே பே,’ என்னும் பழமொழிக்கு மூலம், பிரெஞ்சு நாடகம் ‘பாத்தலே(ன்)’ என்பது இந்நூலை வாசித்த பிறகு தான் தெரிகிறது. அக்கதை சுருக்கம் தெரிய, பார்க்க

    பக்கம் 35.

    துவக்கத்தில் பிரான்சு மற்றும் அதன் மொழி வரலாறு பற்றிச் சுருக்கமாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.  ஆங்கிலத்தில் உள்ள அதே 26 எழுத்துக்களே பிரெஞ்சிலும் உள்ளன.  இவை ரோமன் எழுத்துக்கள் அல்லது லத்தீன் எழுத்துக்கள் எனப்படும்.  பிரெஞ்சில் எழுத்துக்களை விட ஒலி மிகுதி.  17 உயிர் 19 மெய் ஒலிகள் இம்மொழியில் உள்ளன.  தமிழின் ‘ழ’ வுக்கு ஓரளவு ஒப்புமை உடைய ஒலி ஒன்று உள்ளது.”

    ‘ழ’ தமிழுக்கு மட்டுமே உரியது என்று தானே, நம்மில் பெரும்பாலோர் இதுவரை நினைத்திருந்தோம்; அது தவறு!

    படைப்பாளர் மற்றும் படைப்புகளின் பெயர்களைத் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பதால், அவற்றின் சரியான பிரெஞ்சு உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    நமக்குத் தெரிந்த ALEXANDRE DUMAS ஐ நாம் எப்படி உச்சரிப்போம்? அலெக்ஸாண்டர் டியுமாஸ் என்று தானே?  சரியான உச்சரிப்பு டியுமாசுமில்லை, பொடிமாசுமில்லை.  அலெக்சா(ன்)த்ரு துய்மா! (பக் 189)

    நூற்றாண்டு கால அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்நூலில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் பிரெஞ்சிலக்கிய வானில் உதித்த குறிப்பிடத்தக்க கவிமணிகள், அறிவியல் மற்றும் தத்துவ அறிஞர்கள், நாடகாசிரியர் நாவலாசிரியர் ஆகியோரின் வாழ்வு பற்றிய குறிப்புகளோடு

    அவர்களின் முக்கிய சிந்தனைகளையும் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.

    எடுத்துக்காட்டுக்கு பெர்னார்தே(ன்) (Bernardin 1737 – 1814) புகழுக்குக் கட்டியம் கூறும், ‘போலும்  விர்ழினீயும்’ (Paul et Virginie) என்ற நூலில் இருந்து சில சிந்தனைகள்:-

    “ஆயிரம் ரோஜாக்களின் நறுமணம் ஒரு கணந்தான் இன்பம் அளிக்கும்.  ஆனால் அவற்றின் இடையேயுள்ள ஒரெயொரு முள்ளின் குத்து நெடுநேரம் வலி தரும்.”

    “செல்வர்களுக்கு இன்பங்களின் நடுவே நேரும் ஒரு துன்பம், பூக்களின் நடுவே ஒரு முள்; ஏழைகளுக்கோ இன்னல்களுக்கு மத்தியில் ஓர் இன்பம், முட்களுக்கு இடையே மலர்.”

    “திண்ணமாக வந்தே தீரும் என்று நாம் தெரிந்து கொண்ட ஒரு துயரம், அது நிகழும் வரை உள்ள எல்லா நாட்களையும் சோகமயம் ஆக்கிவிடும்.”

    பிரெஞ்சு படைப்புக்களிலிருந்து எடுத்துக்காட்டுத் தரும்போது ஆங்காங்கே அதற்கிணையான கருத்துக்களைத் தமிழிலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்டுவது ஆசிரியரின் இருமொழி புலமைக்குச் சான்று:-

    எ.கா:- 1.

    வொல்த்தேர் (Voltaire 1694-1778) கூறுகிறார்:-

    “வாழ்க்கை இனியதும் அல்ல, இன்னாததும் அல்ல; அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வது நல்லது.”

    கணியன் பூங்குன்றனார் 2000 ஆண்டுக்கு முன் கூறினார்:

    “……………..வாழ்தல்

    இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

    இன்னாது என்றலும் இலமே.”  (பக்கம் 140)

    எ.கா:- 2

    உவமைகளை மிகையாக்கிப் புழங்கினர். 

    “காதலியின் கண்ணொளி சூரியனை இருட்டாக்கியது”

    “வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய”  (கம்பராமாயணம்)

    சூரியனின் ஒளி இராமனின் மேனி ஒளியால் மறைந்தது.  (பக்.60)

    எ.கா:-2 

    1. 150 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சியர் கண்டுபிடித்த குறியீட்டியல் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழில் இடம் பெற்றுள்ளது. அகநானூறு 160 – ஆமையொன்று முட்டையிட்டு அடும்பு என்னுங் கொடியால் அதை மறைத்தது. (நப்பசலையார்)

    தலைவி தன் களவொழுக்கத்தைப் பிறர் அறியாமல் மறைத்தாள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. (பக் 214)

    12 ஆம் நூற்றாண்டில் தான் பிரெஞ்சில் இலக்கியம் தோன்றியிருக்கிறது என்பதை இந்நூல் வாயிலாக அறியும் போது வியப்பு மேலிடுகிறது.  “இன்று பிரெஞ்சு எல்லாத்துறைகளிலும் பிரமாத வளர்ச்சியுற்ற செழுமை மிக்க மொழிகளுள் ஒன்றாக மிளிர்கிறது.  அதன் உரைநடை மிக விழுமிய தரம் உடையது.  “இத்தரத்தை எட்டுவதற்கு ஆங்கிலத்துக்கு 100 ஆண்டு தேவை என்று கணக்கிட்டுள்ளார் காலஞ் சென்ற தீர்ப்பாளர் எஸ் மகராசன்.”

    “சொல்லைத் தேய்த்துத் தேய்த்துச் சன்னக் கம்பிகளாய் இழுத்து இழுத்து நகாசு வேலை செய்யப்பட்ட மொழி பிரெஞ்சு”  (ஆதாரம்: தெய்வ மாக்கவி 1974) (பக் 12)

    பிரெஞ்சு உரைநடை மிக விழுமிய தரம் உடையது என்பதாலோ என்னவோ, அதன் வரலாற்றைக் கூறும் இந்நூலின் தமிழ் உரைநடையையும் மிக விழுமிய தரத்தில் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

    எடுத்துக்காட்டுக்குச் சில வரிகள்:-

    “பிரெஞ்சு உரைநடைக்கு வளம் தந்து வலுவான அடிப்படை அமைத்தவர் ராப்லே.  இந்த அடித்தளத்தின் மீது தான் அடுத்த நூற்றாண்டு( 17 ஆம் நூ)

    எழுத்தாளர்கள் எழில் மிகு மாளிகைகளை எழுப்புவார்கள்.”(பக் 46)

    “வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்த அவரின் நூல்கள், மாந்த மன ஆராய்ச்சியாளர்க்கு மதிப்பிட முடியாப் புதையல்.”  (பக்:53)

    ‘இருண்டு கிடந்த கவிதையுலகில் ஒளி பாய்ச்சிய ஞாயிறு’  (பக் 55)

    “யாப்பைச் செப்பமாய் அமைத்துப் பாமர மொழிச் சொற்களை விடுத்து உரைநடையினின்று மாறுபட்ட கவிதை நடையில் எழுதிப் பிறர்க்கு ஒரு புது வழி காட்டியவர் அவர்.”  (பக் 196)

    “சிறந்த யாப்பில் செவிக்கின்பம் பயக்கும் அல்லது அறிவை மயக்கும் சொற்களைப் பொறுக்கி எடுத்துப் பயன்படுத்தியதுடன், அடுக்கு மொழிகளையும் ஆங்காங்கே கோத்துள்ளார்.” (பக் 198)

    உரைநடைக்கு மேலும் கொழுமை சேர்த்த லபுருய்யேர் (La Bruyere) பற்றிக் கூறும் போது, ‘அவருடைய நடை வளமானது, படிப்போரின் கவனத்தை தம் பக்கம் ஈர்த்துப் பிணிக்கும் ஆற்றல் கொண்டது,’ என்று எழுதியிருப்பது  இந்நூலாசிரியரின் நடைக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.

    சட்டமியற்றல், நிர்வாகம், நீதி ஆகிய மூன்று தனித்தனியே இருக்கவேண்டும் என்று முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் பிரெஞ்சு அறிஞர் மோ(ன்)த்தேஸ்க்கிய (Montesquieu).

    இவரது இலக்கிய கொள்கையான “வாசிக்க வைப்பது போதாது; சிந்திக்கத் தூண்ட வேண்டும்” (பக்கம் 133) என்ற அறிவுரைக்கேற்ப, இந்நூல் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

    ஆசிரியர் தாய்மொழி மீது அளவற்ற பற்று கொண்டவர் என்பது ஏற்றம் பெற்றிருக்கும் பிரெஞ்சு மொழியோடு நம் மொழியை ஏக்கத்துடன் ஒப்பிட்டு, தமிழ் உன்னத நிலைக்கு வருவதற்கான ஆலோசனையை வழங்குவதிலிருந்து அறிகின்றோம்.

    பிரெஞ்சு மொழி ஆக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் வித்திட்ட பிரெஞ்சுக் கழகம் பற்றி வியந்து கூறும் போது, “இத்தகைய கழகம் தமிழகத்தில் தோன்றி அரசியல் நுழைய இடந்தராமல், மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டால் கொஞ்சங் கொஞ்சமாக நலிந்து வரும் தமிழ் மொழி தலைநிமிரும்; வளம் பெற்று உயர்ந்து ஓங்கும்.”  (பக்கம் 59)

    ‘சுற்றுலாவி,’ (பக் 128) (சுற்றுலா சென்று) என்பது இவர் தமிழுக்கு அளித்த புதுச்சொல்.

    “நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாகிய பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு மொழியின் இலக்கிய செல்வங்கள் பற்றிய வரலாற்றைத் தமிழுக்கு அளித்ததன் வாயிலாக ஞானசம்பந்தத்தின் கொடை ஞானக்கொடையா கிறது,” என்று பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் அவர்கள் முன்னுரையில்

    கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையே.

    இந்நூலை வாசித்து முடிக்கும் போது ஒட்டுமொத்த பிரெஞ்சு இலக்கியத்திற்குள் நீண்ட தூரம் பயணித்து ஒரு பறவை பார்வையுடன், அதன் சிறப்புக் கூறுகளைச் சுவைத்து மீண்ட திருப்தி நமக்கு ஏற்படுகின்றது.

    நூலின் பெயர்:- பிரெஞ்சிலக்கிய வரலாறு

    ஆசிரியர் பெயர்:-சொ.ஞானசம்பந்தன்

    பக்கம்:- 272

    வெளியான ஆண்டு:- நவம்பர் 2003

    உரிமை: ஆசிரியருக்கு

    விலை:- ரூ 90.00

    வெளியீடு:- மெய்யப்பன் பதிப்பகம்

              53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.

       எழுதிய பிற நூல்கள்:- லத்தீன் இலக்கிய வரலாறு

                             தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?

                             மோப்பசான் கதைகள் (பிரெஞ்சு சிறுகதைகள்)

                             சிங்க வேட்டை (பிரெஞ்சு குறும்புதினம்)

                             மறைந்த நாகரிகங்கள்

    Share
  • அன்னையர் தினம்

    கலையரசி

    “அம்மா! நாந்தாம்மா கெளரி பேசறேன்.”

    “என்னம்மா? காலங் கார்த்தால போன்?  மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் செளக்கியம் தானே?

    ”எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க.  ஒங்கக் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு?  உடம்பு, கிடம்பு சரியில்லையா?  இரத்த அழுத்தம் நார்மலாத் தானே இருக்கு?

    ”அதெல்லாம் ஒன்னுமில்லை.  மணி எட்டாவுது.  இப்பத்தான் படுக்கையிலேர்ந்து எழுந்திருச்சேன்.  அதான் குரல் கம்மியிருக்குது.  விடிகாலையில எழுந்திருச்சி நான் யாருக்குச் சாப்பாடு கட்டப் போறேன்?  நீங்கல்லாம் போன பிறகு எனக்குச் சமைக்கப் புடிக்கலே.  சாப்பிடப் புடிக்கலே.  வர வர வாழ்க்கையே ரொம்ப வெறுமையா இருக்கு கெளரி!”

    ”ஏம்மா சலிச்சிருக்கிறீங்க?  இவ்ளோ நாள் ஓடியாடி வேலை செஞ்ச வரைக்கும் போதும். இனிமே நீங்க ஓய்வெடுக்கிற வயசு.  நல்லாத் தூங்கிச் சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருங்க. சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டுருக்கேன்.   இன்னிக்கு அன்னையர் தினம்! ஒங்களுக்கு வாழ்த்துச் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”

    ”அப்பிடியா? வர வர நாள், கெழமை எதுவுமே ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது.  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிம்மா”.

    ”சரிம்மா.  அவசரமா ஆபீசுக்குக் கிளம்பிக்கிட்டுருக்கேன். அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க.  அப்புறமா போன் பண்றேன்.”

    ”சரிம்மா.”

    ”யாரு போன்ல?”என்று கேட்ட கணவர் மணியிடம்

    ”நம்ம கெளரி தான்.  இன்னிக்கு அம்மா தினமாம். வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டா,” என்றாள் காவேரி.

    ”அது சரி.  வெள்ளைக்காரனுங்க தான் ஒவ்வொன்னுக்கும் ஒரு நாளை ஒதுக்கி வைச்சிக் கொண்டாடுறாங்கன்னா

    நம்ம புள்ளைகளும் அதை அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டுதுங்களே.  இந்த மாதிரி பெத்த அம்மாவுக்கு வருஷத்துக்கு ஒரு நாள், போனாப் போவுதுன்னு அப்பாவுக்கும் ஒரு நாள்னு ஒதுக்கி, அன்னிக்கு அவசர அவசரமா ஒரு போன் பண்ணி வாழ்த்து சொல்றதோட தங்களோட கடமை முடிஞ்சிடுதுன்னு நினைக்குதுங்க. இந்த அவசர உலகத்துல பாசம், நேசம் எல்லாமே வெறும் சம்பிரதாயமா மாறிட்டு வருது காவேரி!

    ”சரி வுடுங்க.  அதுங்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை.  இந்த மாதிரி ஒரு நாளை ஒதுக்கி வைச்சிருக்கிறதினாலேயாவது பசங்களுக்கு நம்ம ஞாபகம் வருதே, அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.”

    ”அதுவும் சரிதான். அவ்ளோ வேலையிலேயும் எம் பொண்ணு எவ்வளவு ஞாபகமா போன் பண்ணுது பாரு? ஒம் பையனும்

    இருக்கானே! இதெல்லாம் அவனுக்கெங்கே ஞாபகம் இருக்கப் போவுது?

    ”சும்மா இருக்கிற என்னைத் தூண்டிவிட்டு என் வாயைப் புடுங்கிறதுல, அப்பிடி என்ன சந்தோஷம் ஒங்களுக்கு?    அவனுக்கு என்ன வேலையோ?   இந்த மாதிரி சம்பிரதாயமா வாழ்த்து சொல்றதெல்லாம், அறவே அவனுக்குப் புடிக்காது.”

    ”என்னமோ போ. பையனை விட்டுக் கொடுக்காம பேசக் கத்துக்கிட்டே.  மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனவன் தான்.  குழந்தையும் பொறந்து ரெண்டு வயசு முடிஞ்சிட்டுது.  பேரக்குழந்தையை இன்னும் நாம கண்ணாலேயே பார்க்கல.  போட்டோவிலேயும் கம்ப்யூட்டரிலேயும் பார்த்துத் திருப்திப்பட்டுக்கிறதோட சரி.  ஒரு தடவை வந்து காட்டிட்டுப் போடான்னு சொன்னா, விமான டிக்கெட்டுக்குக்  கணக்குப் பார்த்துட்டுப் பயணத்தை ஒத்திப் போட்டுக்கிட்டே போறான். எப்பத்தான் வரான்னு பார்ப்போம்.”

    “சரி சரி..  போயி  வேலையைப் பாருங்க. அவனை ஏதாச்சும் குத்தம் சொல்லலேன்னா, உங்களுக்குப் பொழுது போகாது.”

    கணவரிடம் மகனுக்காகப்  பரிந்து பேசினாலும், பையன் இப்போது மிகவும் மாறிப் போய்விட்டான் என்ற உறுத்தல், அவள் உள்மனதிலும் இல்லாமலில்லை.  வெளி நாடு போன புதிதில்,  இரண்டு நாட்களுக்கொரு முறை போன் பண்ணி அம்மாவிடம் பேசவில்லையாயின், அவன் தலை வெடித்துவிடும்.

    சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறான், எல்லாரையும் பிரிந்து தனிமையில் வாடுகிறான் என்று காவேரி தான்

    அவனை வற்புறுத்தி  26 வயதாகும் போதே, பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தாள்.  திருமணத்திற்குப்

    பிறகு இரண்டு நாட்களுக்கொரு  முறை இருந்த தொலைபேசி அழைப்பு, வாரத்திற்கொரு முறை என்றாகி இப்போதோ மாதத்துக்கொரு முறை என்றாகிவிட்டது.

    வேலை, குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு, அம்மாவுக்குப் போன் செய்ய அவனுக்கு நேரமின்றிப் போனது.

    “நான் பேசணும்னு நெனைக்கிறப்ப, உங்களுக்குப் பாதி ராத்திரி ஆயிடுது. சரி காலையில பண்ணிக்கலாம்னு நெனைப்பேன்.  வேலைப் பளுவில மறந்துடுதும்மா” என்பான் சமயத்தில்.

    மதியச் சாப்பாடு முடிந்து படுத்திருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது.  எழுந்து சென்று கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியத்தில் தலைகால் புரியவில்லை.  ஆம்.  அவளது அன்பு மகன், தன் மகளுடன் வாசலில் நின்றிருந்தான்.

    ”என்னப்பா திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல்?”

    “அன்னையர் தினத்திற்கு உங்களுக்கு நேரிலேயே வாழ்த்துச் சொல்லணும்னு வந்தேன்மா”

    அப்பாவின் கால்களைக் கட்டிக்  கொண்டு, எட்டிப்பார்த்த குழந்தையைக் கண்டவள், “இது தான் நம்ம வீட்டுக் குட்டி தேவதையா? வாடாச் செல்லம்” என்று ஓடிப் போய் குழந்தையை வாரியெடுத்து உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

    ’இப்போதாவது வந்து அம்மாவைப் பார்க்கணும்னு தோணிச்சே” என்று செல்லமாகப் பையனைக் கடிந்து கொண்டாள்.

    இரண்டாவது முறை மணி அடித்து விழிப்பு வந்த போதுதான், தான் கண்டது கனவென்று உணர்ந்தாள் காவேரி.

    கண நேரம் மகிழ்ச்சியில் திளைத்த மனதில், மறுபடியும் வெறுமை வந்து குடி கொண்டது.  ஒரு வேளை கனவில் கண்டது போலவே, மகன் உண்மையாகவே வந்து நின்றிருந்தால்?  அவசர அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

    வாசலில் பால்காரன் நின்றிருந்தான்.

    ”என்ன வேணும்? பாக்கெட்டைப் போட்டுட்டு போக வேண்டியது தானே? எதுக்கு மணி அடிச்சே?”‘

    ”எக்ஸ்டிரா பாக்கெட் வேணுமான்னு கேட்கத்தான்,”.

    ”ஒன்னும் வாணாம் போ”

    ”சும்மா போனா, ’எப்பவும் மணியடிச்சி கேட்டுட்டுப்

    போன்னு சொல்றீங்க? கேட்டாக் கோவிச்சிருக்கிறீங்க.

    இன்னிக்கு என்ன வந்துச்சி ஒங்களுக்கு?,”  முணுமுணுத்துக் கொண்டே சென்றான் பால்காரன்.

    திரும்பி வந்து படுத்த போது, தூக்கம் முற்றிலுமாக விடைபெற்றுப் போயிருந்தது.

    ”இந்தக் குழந்தைகள் வளராமல் தன்னுடனே இருந்திருக்கக் கூடாதா?” என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. மகனை உடனே நேரில் பார்க்க வேண்டும் போலிருந்தது.  என்ன தான் கணிணி காமிராவில் பார்த்தாலும், நேரில் பார்த்து ஆசையாய்த் தொட்டு அரவணைக்கும் ஆனந்தம் வருமா?

    மகனுக்குத் தன் மேலுள்ள  பாசத்தைக் கிண்டல் செய்யும் கணவரின் வாயை அடைப்பதற்காகவாவது, அவனிடமிருந்து  இன்று போன் வர வேண்டும் என அவள் மனம் ஏங்கியது.  எனவே மற்ற நாட்களில் போன் வரும் சமயங்களில் “முட்டி வலிக்குது, நீஙக் போய் எடுங்க,”. என்று அலுத்துக் கொள்பவள், அன்றுமுழுக்க ஒவ்வொரு முறை மணியடிக்கும் போதும் ஓடி ஓடிப் போய் எடுத்து ஏமாந்தாள்.

    வேகமாக ஊன்றி ஊன்றி  நடந்ததினால், முழங்கால் வீங்கிக் கொண்டு வலிக்கத் துவ்ங்கியது. மணி இரவு எட்டரைக்கு மேலாகி விட்டது.  சாதாரணமாக பையனிடமிருந்து எட்டு மணிக்குள் போன் வந்து விடும்.  நேரமாக ஆக, இனி போன் வராது என்ற எண்ணத்தில் மனம் சோர்ந்தது.

    ”ஏங்க!  மணி ஒம்பது ஆகப் போவுது.  தோசை ஊத்தி வைச்சிட்டேன்.  சீக்கிரம் சாப்பிட வாங்க.  ரொம்ப அசதியாயிருக்கு. படுத்தாப் போதும்னு இருக்கு உடம்பு”

    ”ஏன் கல்லை இறக்கிட்டே? ஒனக்குத் தோசை ஊத்திக்கலையா?”

    ”எனக்கு வேணாம்.  பசியில்லை”

    ”இராப்பட்டினி கூடாது. அதுவுமில்லாம வெறும் வயித்துல மாத்திரை போடக் கூடாது.  ஒரு தோசையாவது சாப்பிடு காவேரி,”

    ”ஒன்னும் வேணாம். நீங்க கம்முனு சாப்பிட்டுட்டுப் போயி படுங்க.  இது வல்லமையான கட்டை. ஒரு நாளைக்கு மாத்திரை போடலேன்னா, உசிரு போயிடாது.”

    மணி பதினொன்றிருக்கும்.

    ”ஏங்க ஏங்க.  போன் அடிக்குது.  கொஞ்சம் ஏந்திரிச்சி போயி யாருன்னு பாருங்க.”

    கணவரைத் தொட்டு எழுப்பினாள்  காவேரி.  ஆனால் அவரிடம்  எந்த அசைவையும் காணோம்.

    ”அதுக்குள்ளே தூங்கிட்டீங்களா?  படுக்கறதுக்குள்ளே எப்படித்தான் ஒங்களுக்குக் குறட்டை வருதோ?”

    சலித்துக் கொண்டே எழுந்து  சென்று ரிசீவரை எடுத்தவளின்  முகம்  மலர்ந்தது.

    ”எப்படிப்பா இருக்கே?  உமா எப்படியிருக்கா?  கொழந்தை நல்லாயிருக்காளா?  ரொம்ப சந்தோசம்பா. காலையில கெளரி கூட போன் பண்ணி வாழ்த்து சொன்னா. இன்னிக்குக் கண்டிப்பா நீ போன் பண்ணுவேன்னு ஒங்கப்பாக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.

    எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு சரியாச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்காதே.  ஒரு தரம் கொழந்தையை அழைச்சிட்டு வந்து கண்ணுல காட்டிட்டுப் போ.  வாரத்துக்கு ஒருவாட்டியாவது மறக்காம போன் பண்ணு.  சரிப்பா. வைச்சுடு.  எல்லாரையும் கேட்டதாச் சொல்லு.”

    ”ஏங்க ஒங்களைத்தானே.  லண்டன்லேர்ந்து தம்பி போன் பண்ணி ரொம்ப…….. நேரம் பேசிக்கிட்டிருந்தான்.

    காலையிலேர்ந்து கடுமையான வேலையாம். நேரமே இல்லியாம்.  இன்னிக்கு எப்பிடியாவது எனக்கு வாழ்த்து சொல்லணுங் கிறதுக்காகவே ஞாபகம் வைச்சிருந்து இராத்திரி ஆனாலும் பரவாயில்லன்னு போன் பண்ணினானாம். பாவங்க எம்புள்ளை.  இப்பவாச்சும் ஒத்துக்கிறீங்களா, அவனுக்கு என்மேல பாசம் ஜாஸ்தின்னு”

    ”சரி. சரி.  ஒத்துக்கறேன். மனுஷனை நிம்மதியாத் தூங்க விடு.  நீயும் நிம்மதியாப் படுத்துத் தூங்கு.  எங்க எழுந்திருச்சிப் போறே?”

    ”சாப்பிடப் போறேன்.”

    ”பசியே இல்லேன்னு சொன்னே?”

    ”அப்ப இல்லை. இப்ப ரொம்பப் பசிக்குது.”

    மனைவியின் உற்சாகத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது மணிக்கு.

    காலையிலிருந்து மனைவி  தவித்த தவிப்பைக் கண்டு  வேதனைப்பட்டவர், ’அம்மாவுக்குப் போன் பண்ணி அன்னையர் தின வாழ்த்தைச் சொல்,’ என்று பையனுடைய அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தாம் தான், என்று கடைசி வரை  அவளிடம் சொல்லவேயில்லை.

    Share