Tag: பி.தமிழ்முகில் நீலமேகம்

  • “கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்!

    — பி. தமிழ்முகில் நீலமேகம்.

    படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
    படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு !
    என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் நமது பெருந்தலைவர் காமராசர் அவர்கள். இவர்தம் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி பெற்றமையால் இவர் “கல்விக்கண் திறந்த காமராசர்” என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர் அவர்கள் படித்தது ஆறாம் வகுப்பு வரை மட்டுமே. இவரது கல்வி குறித்த விபரம் கீழ்வருமாறு:
    ◆ 1908 ம் ஆண்டு திண்ணைப் பள்ளியிலும் ஏனாதி நாயனார் வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.
    ◆ 1909 ம் ஆண்டு சத்திரிய வித்தியசாலாவில் கல்வி.
    ◆ 1914 ம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் கல்வியை நிறுத்திக் கொண்டார்.
    காமராசர் அவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்காத போதும், தன் நாடு, தன் மக்கள் குறித்து அறிய வேண்டியவை அனைத்தையும் நன்றாகவே அறிந்திருந்தார். இதனால் தான் காமராசர் அவர்கள் படிக்காத மேதை என்றழைக்கப் படுகிறார்.

    கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
    என்ற திருவள்ளுவரின் குறளுக்கு இணங்க, கல்விச் செல்வமே எத்தனைக் காலமானாலும் அழியாத செல்வம் என்பதை நன்குணர்ந்த காமராசர் அவர்கள், அச்செல்வத்தை ஏழைச் சிறார்களும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று பேராவல் கொண்டார். அதற்கான காமராசரின் திட்டம் தான் இலவச கல்வித் திட்டம்.

    இவருக்கு முந்தைய ஆட்சியில் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்தார். அது தவிர, மேலும் பனிரெண்டாயிரம் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன. சிறார்கள் மூன்று மைல் தூரத்திற்கு மேல் நடக்க விடாது, மூன்று மைல் தூரத்திற்கு ஒரு பள்ளி அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் பள்ளிகளில், தேவையான புதிய வசதிகள் செய்யப்பட்டன. பதினோராம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டது.

    சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? வயிறு காய்ந்திருந்தால் படிப்பது எப்படி? இதனால், காமராசர் அவர்கள் இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார். பிள்ளைகட்கு உணவுடன் கல்வி வழங்க, பகல் உணவுக்கு வரி போடவும் தயங்கமாட்டேன் என்றவர் காமராசர். இந்த மதிய உணவுத் திட்டத்திற்காக எனது மற்ற பணிகளையும் கூட ஒதுக்கி விட்டு, ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றார். பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தினை உலகெங்கிலும் முதன் முறையாகத் தமிழகத்தில் 1957 ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவந்தவர் நம் காமராசர் அவர்கள். இத் திட்ட த்திற்கான உதவி “Care of USA” அமைப்பினரால் வழங்கப்பட்டது.

    பள்ளிகளில் சீருடை முறையை அமல் படுத்தியவரும் காமராசர் அவர்கள் தாம். இளம் மனங்களில் சாதி மத பேதங்களை களைந்திட இத்திட்டத்தை அறிவித்து செயல் படுத்தினார்.

    ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏழு சதவிகிதமாக இருந்த கல்வி கற்றோர் விகிதம், காமராசர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் 37 சதவிகிதமாக உயர்ந்தது. பள்ளிகளின் எண்ணிக்கையை மட்டுமுயர்த்தினால் போதாது. கல்வியும் தரமானதாக இருத்தல் வேண்டும். இதற்காகப் பள்ளி வேலை நாட்களும் அதிகரிக்கப் பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில் உருவானது தான் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology (IIT), Madras). மருத்துவம், பொறியியல், விவசாயப் பட்டயப் படிப்பிற்கான கல்வி உதவித் தொகைகள் கிடைக்க வழிவகை செய்தார். இதனால் இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது. இது தவிர உடற்கல்வி கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகளும் ஆரம்பிக்கப் பட்டன.

    கல்வியறிவுடன் பொது அறிவையும் விழிப்புணர்வையும் மாணவர்கள் மட்டுமன்றி பொது மக்களும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக, கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை நூலகங்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களது ஊர்களில் நூலகம் அமைக்க இடம், பொருட்கள், புத்தகங்கள் வழங்கி உதவ மக்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இத்திட்டம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவரும் காமராசர் அவர்களே.

    காமராசரின் குந்தா அணைக்கட்டு திட்டத்தின் சிறப்பையும், அதில் காமராசர் ஐயா அவர்களின் பங்கினையும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கத் திரைப்படமாக எடுக்க ஓர் அதிகாரி கருத்து கூற, அதற்கு ஆகும் மூன்று இலட்ச ரூபாய் செலவில், பத்து ஊர்களில் பள்ளிக்கூடம் கட்டி பிள்ளைகட்கு கல்வி வழங்கிடலாம். அரசின் கடமையை, தனிப்பட்ட மனிதனான தனது பெயரில், தானே செய்ததாக ஏன் சொல்ல வேண்டுமெனக் கடிந்து கொண்டவர் காமராசர் அவர்கள்.

    காமராசரின் அனுபவ அறிவு எத்துனையோ பட்டப்படிப்பு படித்தவர்களை விட மேலானது. அவர் பல்கலைக்கழகங்களில் படித்ததில்லை. ஆனால், அவருக்குப் பூகோளம் தெரியும். வெறும் கோடுகளால் எல்லைகளை நிர்ணயித்து, புள்ளிகளால் இடங்களைக் குறிப்பது பூகோளமாகாது என்பது காமராசர் அவர்களின் கருத்து. மக்கள், அவர்களது வாழ்விடம், அவர்தம் வாழ்வாதாரம், அவர்தம் தொழில்முறை இவையனைத்தும்தான் தலைவர் காமராசர் அவர்களைப் பொறுத்தவரை பூகோளம்.

    தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பிரதமர் நேரு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமைச்சர் பக்தவத்சலம் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காமராசர், ஆண்டுக்கு அறுபது என்ற எண்ணிக்கையில் படித்து முடிக்கும் கால்நடை மருத்துவ மாணவர்களை மட்டும் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த இயலாதென்பதால், பள்ளி இறுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கட்கு ஓராண்டு கால்நடை அபிவிருத்தி பயிற்சி வழங்கும் திட்டம் அறிவித்தார்.

    இதற்கான மையங்கள் தமிழகத்தில் ஓசூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, செட்டிநாடு, அபிஷேகப்பட்டி ஆகிய இடங்களில், கால்நடைப் பண்ணைகளில் கால்நடை அறிவியலின் அடிப்படைகளைப் பயிற்சிகளோடு சொல்லிக் கொடுக்க புதிய படிப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. கால்நடை பராமரிப்பு, அவற்றின் உடற்கூற்றியல், உடலியல், சுகாதாரம், கால்நடைகளைக் கையாளுதல், நுண்ணுயிரியல் எனக் கால்நடைகள் குறித்த பல்வேறு பொருள்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, கால்நடை ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டு, கிராமங்களில் நியமிக்கப் பட்டனர்.

    கல்வி வளர்ச்சிக்குத் தனது மேலான பங்களிப்பை வழங்கியுள்ள இம் மாமனிதர் கல்விக் கண் திறந்தவர் என்பதில் ஐயமேதுமில்லை. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு முன்னோடியாய் விளங்கிய இவர்தம் தன்னலமற்ற சேவையின் பயனை இன்றளவும் நாம் அடைந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. அவர்தம் பாதம் பணிந்து போற்றுவோம்.

     

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் ஏப்ரல் மாத கட்டுரைப் போட்டி முடிவு

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    Google_Appliance

    வணக்கம். சென்ற மார்ச் மாதம் (1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் மற்றும் சுரேஜமீ எழுதிய இரு கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரைகள் குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

    திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

     

    அன்பிக்கினிய அனைவருக்கும் வணக்கம்.

    வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் முடிவு அறிவிக்க நாளானது, மன்னிக்கவும்.

    இணையத்தின் பயன்பாடுகள் சேவைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான இரு சேவைகள் குறித்த கட்டுரைகள் வல்லமைக்கு வந்திருக்கின்றன.

    முதலாவதாக இணையத்தில் கிடைக்கும் இலவச புத்தகங்கள், நூலகங்கள், குறித்து திருமதி. தமிழ்முகில் நீலமேகம் தந்திருக்கும் விவரங்கள். அருமையான பல விவரங்களை தொகுத்து அளித்திருக்கிறார்.

    அடுத்த கட்டுரை இணையத்தில் சமூக வலைதளங்கள், அதில் இருக்கும் சாதக பாதங்கள், பாதுகாப்பு முறை என விரிந்து செல்லும் கட்டுரை. அருமையான தொகுப்பு சுரேஜமி. தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.

    இரண்டுமே முக்கியமான கட்டுரைகள். இருந்தும் பலருக்குத் தெரியாமல் இருக்கும், இளைய தலைமுறைக்கு உந்துகோலாக, வாசிப்பைத் தூண்டவும், அறிவை விசாலமாக்கவும், பள்ளி, கல்லூரி, ஆய்வுகள் என அனைத்து வகையினருக்கும் உதவும் இணைய புத்தகங்களும் நூலகங்களும் குறித்த கட்டுரை என்னளவில் வெற்றி பெற்ற கட்டுரையாகிறது. வாழ்த்துகள் திருமதி தமிழ்முகில்

    Iyappan Krishnan

    உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
    நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
    அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
    தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணைய நூலகங்கள்

    பி. தமிழ் முகில்.

     

    பயன்மிகு இணையவழிச் சேவைகள்

    இணைய நூலகங்கள்

     நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.

    இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள்  நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும்   நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

     

    இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )

    Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox)  ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.

     இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.

    இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில்  பயன்படுத்தலாம்.

    https://archive.org/

     இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub  என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.

     

    திறந்த நூலகம் ( Open Library )

    Open Library  என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.

    திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது.  யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.

    இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம்.

    திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.

    PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி  நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

    இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.

    http://www.openlibrary.org/

     

    சென்னை  நூலகம்  

    திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை  20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

    இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

     http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

    இந்நூலகத்தின் இணையதள முகவரி

     http://www.chennailibrary.com

     

    நூலகம் திட்டம்  (noolaham.org) :

    நூலகம் திட்டம் ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ கூட்டுழைப்பாகும்.

    இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக,  மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.

    இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.

    இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.

    http://www.noolaham.org

     

    மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு  திட்டம் ( Project Madurai ):

    உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும்.

    இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம். தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.

     இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தினை  கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

    http://www.projectmadurai.org/index.en.html

    இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.

    http://www.projectmadurai.org/pmworks.html

    புத்தகங்களை  pdf   கோப்புகளாகவும், Unicode, TSCII  எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.

     

    தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :

    தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.

     சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.

    இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal’s dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.

    நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.

    இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.

    http://tamilvu.org

    செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.

     

    திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):

      தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.

    இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.

      http://www.openreadingroom.com/

     

    பிரித்தானிய தமிழ் நூற்சேகரம், தமிழ் மரபு அறக்கட்டளை:

     பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)

    அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html

     தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில்  பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில்  பார்த்து பயன் பெறலாம்.

    http://tamilheritagefoundation.blogspot.ca/

    தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.

    http://thfreferencelibrary.blogspot.ca/

     

    தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :

       தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்களும் கிடைக்கின்றன.

    இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.

     

    தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ

    http://thamizhagam.net/tamillibrary/tamillibrary.html

     

    இலவச தமிழ் மின்னூல்கள் :

     மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).

      பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை  மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

     இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.

     இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.

     http://freetamilebooks.com/

     

    கூகுள் புத்தகங்கள் : 

    கூகுள் நிறுவனம் வழங்கும் சேவை கூகுள் புக்ஸ் ஆகும். இத்தளத்தில் தமிழ் புத்தகங்களும் கிடைக்கின்றன.  இச்சேவையை கீழ்காணும் தளத்தில் பெறலாம்.

    http://books.google.com/

      கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

    https://play.google.com/books

     

    குறிப்பு :

    இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் இங்கு குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

    அன்பினிய நண்பர்களுக்கு,

    Google_Appliance

    வணக்கம். சென்ற மாதம் (மார்ச் 1, 2015)  ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ என்ற போட்டியை அறிவித்திருந்தோம். சிறந்த கட்டுரை படைப்பவர்களில் மாதம் ஒருவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். இந்த முறை திருமிகு பி. தமிழ்முகில் நீலமேகம் எழுதிய ஒரு கட்டுரை மட்டுமே வந்துள்ளது. இப்போட்டியின் நடுவர் திரு ஐயப்பன் அவர்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பியதில் அவர் இக்கட்டுரை குறித்த தம் கருத்துகளை அளித்திருக்கிறார். திருமிகு தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த மாத வெற்றியாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வருகிற மாதங்களில் இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் வரும் என்று நம்புகிறோம்.

    திரு ஐயப்பன் அவர்களின் போட்டி முடிவு

    வணக்கம்

    கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

    இணையத்தில் இன்று பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் பல பயன்பாடுகளில் ஒன்றாக கட்டுரையாளர் வரைபடச் சேவையை தேர்ந்தெடுத்து முத்தான தகவல்களை தந்திருக்கிறார். கூகிள் தொடர்ந்து இந்திய இரயில் தடப் பயணம் குறித்து வரும் செய்திகள் முதற்கொண்டு பல விவரங்களை மிக நேர்த்தியாக, புரியும் வண்ணம் தந்திருப்பது அருமை.

    இணைய பயண்பாடுகளின் ஒரு பகுதியை மட்டும் குறித்து இவர் எழுதி இருப்பது நன்றாக இருந்தாலும் இன்னும் எத்தனையோ விவரங்கள் தமிழில் பதியப் படாமல் இருக்கின்றன. இன்றைய பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் தொலைபேசிகள் ஆரம்பித்து வீட்டில் பார்க்கும் தொலை காட்சி வரை இணையத்தின் ஆக்டபஸ் கரங்கள் நீண்டிருக்கின்றன. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அவற்றை நெறிபடுத்தி தேவையான பல விவரங்களை கட்டுரையாளர் தொகுத்து சிறு மின்னூலாக வழங்கினால் பலருக்கும் நல்லதொரு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

    இந்தக் கட்டுரையாளரை நான் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கிறேன். மீண்டும் வாழ்த்துகள்.

    அன்புடன்
    ஐயப்பன்

    இந்தப் போட்டி, மார்ச்சு 2015 முதல் பிப்ரவரி 2016 வரை மாதந்தோறும் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ.100 (நூறு ரூபாய்) பரிசாக வழங்கப்படும். ஓராண்டு முடிவில் தேர்வு பெற்ற 12 கட்டுரைகளிலிருந்து ஒரு கட்டுரைக்கு ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பரிசு வழங்கப்படும். தேர்வு பெறும் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று, தாரிணி பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியாகும். அதன் அச்சுப் பிரதி, கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறோம். பயனுள்ள நல்ல கட்டுரைகளை வரவேற்கிறோம் நண்பர்களே. அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – வரைபடங்கள்

    — பி. தமிழ்முகில் நீலமேகம். 

     

    இணையம் – இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தினை நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விடுகிறது. நமது அன்றாட வாழ்வில், பலவகையான தேவைகளுக்காக நாம் இணையத்தினை பயன்படுத்துகிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கினறன, சில நிறுவனங்கள் இலவச சேவையாக செய்கின்றன. இக்கட்டுரையில், இலவச வரைபட ( Maps ) உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் குறித்து காணலாம்.

    முதல் நிறுவனம், நாம் அனைவரும் அறிந்த கூகுள் (Google). இவர்கள் வழங்கும் வரைபட சேவை கூகுள் மேப்ஸ் (Google Maps).
    கூகுள் மேப்ஸ் இணைய தளத்தின் முகவரி : maps.google.com
    கூகுள் வரைபடத்தின் உதவியுடன் நாம் ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு செல்வதற்கான வழித்தடங்கள், அவ்விரு இடங்களுக்கும் இடையே உள்ள தூரம், செல்ல ஆகும் காலம் போன்றவற்றை கணக்கிடலாம்.

    நடந்து செல்ல விரும்புவோருக்கு வழித்தட உதவி, செல்ல ஆகும் கால நேரம், அதேபோல், வாகனங்களில் செல்வதானல் ஆகும் கால நேரம் போன்றவற்றை கணித்து தருகிறது. அவ்வழித்தடங்களில் செயல்படும் போக்குவரத்து சேவைகள், நாம் கிளம்பும் இடத்திற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு பேருந்து வரும் நேரம், அது செல்லும் வழித்தடம், வழித்தடத்தில் இருக்கும் ஏனைய நிறுத்தங்கள், ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் செல்ல ஆகும் கால அளவு போன்ற விபரங்களையும் கணித்து தருகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து, வடபழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தட விபரங்கள் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் கீழ்க்கண்டவாறு:

    map1

    இந்த வரைபடத்தில், இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழித்தட விபரங்கள், போக்குவரத்து நேரமும் நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் வழித்தடத்திற்கானவை. அதற்குக் கீழே இருக்கும் மற்றோர் வழித்தடம் குறித்த விபரங்கள் அறிய விரும்பினால், அதன் மீது சுட்டியினை வைத்தால், அதன் விபரங்கள் காண்பிக்கப்படும். காரில் செல்ல ஆகும் நேரம் 24 நிமிடங்கள் , கடக்கும் தூரம் 10.1 கி. மீ. பேருந்தில் செல்ல ஆகும் நேரம் 58 நிமிடங்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஓர் பேருந்து வசதி உண்டு போன்ற விபரங்களை நமக்கு இந்த வரைபடம் அளிக்கின்றது.

    இது வாகனங்களில் செல்வதானல் உதவும் வழித்தடம்

    map2

    இது பேருந்தில் செல்வதானால் உதவும் வழித்தடம்

    map3
    இந்தப் படம் இரயில் நிலையத்திலிருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல பேருந்து ஏற வேண்டிய நிறுத்தம், பேருந்து அந்த குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு வரும் நேரம், பேருந்து எண்கள் மற்றும் அவை செல்லும் இடங்களின் விபரம், இடையில் இருக்கும் நிறுத்தங்களின் எண்ணிக்கை, செல்ல ஆகும் கால நேரம், இறங்கும் இடம், இறங்கிய இடத்திலிருந்து நடக்க வேண்டிய தூரம், நடக்க ஆகும் நேரம் போன்ற விபரங்களையும் வழங்குகிறது.மேலும், நாம் தேடும் வழித்தடத்தில் மின் இரயில்      (Electric Trains ) திட்டம் இருப்பின், அது குறித்த விபரங்களையும் வழங்குகிறது.

    கூகுள் வரைபடங்கள் உதவியுடன் கிடைக்கும் இன்ன பிற சேவைகள் :

    குரல் மூலம் வழி நடத்தும் கூகுள் வரைபடங்கள் ( Google Voice Navigation )

    கூகுள் வரைபடங்கள், குரல் மூலம் வழிகாட்டும் வசதியை நமக்கு அளிக்கின்றன. தற்சமயம், இந்த வசதி ஆன்ட்ராய்ட்( Android ) இயக்க அமைப்பில் ( Operating System ) கிடைக்கிறது. இவற்றை, ஆன்ட்ராய்ட் தொலைபேசிகள் ( Android Phones ) மற்றும் ஆன்ட்ராய்ட் வரைவு லக்கமாக்கிகள் ( Android tablets ) ஆகியவற்றில் பயன் படுத்தலாம்.
    தற்சமயம் இந்த வசதி அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கோயமுத்தூர், டில்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, மைசூர், நாக்பூர், பூனா, சூரத், திருவனந்தபுரம், வதோதரா, விசாகப்பட்டினம் ஆகிய இந்திய நகரங்களுக்கு கிடைக்கிறது. இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.

    கூகுள் எர்த் ( Google Earth) மற்றும் கூகுள் வீதி வரைபடங்கள் ( Google Street View maps )

    கூகுள் வீதி வரைபடங்கள் உலகின் தெருக்களை, அவற்றின் அமைப்புகளை அப்படியே காட்டும். நாம் புதிதாக ஓர் இடத்திற்கு / நாட்டிற்கு செல்ல இருக்கிறோம் எனில், அங்கு நாம் செல்லும் இடம் / தெரு / இடத்தின் முகவரி தெரியுமேயானால், வீதி வரைபடங்களின் உதவியுடன், நாம் செல்லவிருக்கும் இடம் நேரில் பார்க்க எப்படி இருக்கிறது, அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

    map4
    எடுத்துகாட்டாக, அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் இருக்கும் அருள்மிகு வெங்கடேஸ்வரர் கோயிலின் தோற்றம் கூகுள் வரைபடத்தின் தெருப் பார்வையில் மேற்கண்டவாறு தெரிகிறது.

    map5
    இந்த வரைபடத்தில் கீழே வரைபடத்தின் வலது பக்க ஓரத்தில் சிறியதாக மஞ்சள் நிறத்தில் மனித உருவம் போன்ற குறியீடு உள்ளது. அதன் பெயர் பெக்மேன் (peg man). அக்குறியீட்டினை எடுத்து வந்து வரைபடத்தில் நீல நிற பாதையில் விட்டால், அந்த பாதை உண்மையில் எப்படி இருக்கிறதோ அப்படியே நமக்கு காட்டும். அதுவே கூகுளின் தெருப்பார்வை ஆகும்.

    இது அக்கோயிலின் வெளிப்புறத் தோற்றத்தின் புகைப்படம்

    map6

    (நன்றி, இப்புகைப்படம் yelp.com ல் இருந்து எடுக்கப்பட்டது)

     

    கூகுள் உள்ளரங்க வரைபடங்கள் ( Google Indoor Maps )

    முக்கிய கட்டிடங்களின் உள்ளரங்க வரைபடங்கள் ( Floor Plans ) நமக்கு கூகுள் உள்ளரங்க வரைபடங்களின் உதவியுடன் கிடைக்கிறது. தற்சமயம் இந்தியாவில் இவ்வசதி சில குறிப்பிட்ட வணிக வளாகங்கள் (Malls) , அருங்காட்சியகங்கள் (Museums), விமான நிலையங்கள் (Airports) ஆகியவற்றிற்கு கிடைக்கிறது. இது குறித்த விபரங்கள் நமக்கு கீழ்காணும் இணைய பக்கத்தில் கிடைக்கிறது.
    https://support.google.com/gmm/answer/1685827?hl=en

    ரெயில் ராடார் ( Rail Radar)

    இந்தியன் இரயில்வே நிறுவனத்தார், கூகுள் வரைபடங்களின் உதவியுடன் உருவாக்கிய தகவல் தளம் ரெயில் ராடார். நாம் ஓர் குறிப்பிட்ட இரயில் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இரயில் கிளம்பிய இடம், கிளம்பிய நேரம், அடுத்து வரவிருக்கும் இரயில் நிலையம், இரயில் செல்லும் வழியில் இருக்கும் ஏனைய இரயில் நிலையங்கள், அந்நிலையங்களுக்கு செல்லும் நேரம், அங்கிருந்து கிளம்பும் நேரம் போன்ற விபரங்களை வழங்குகிறது.இந்த வசதி கூகுள் வரைபடங்களின் உதவியுடன் வழங்கப் பட்டு வந்தது. வரைபடத்தில் இரயில் செல்லும் பாதை, தற்சமயம் இரயில் இருக்கும் இடம், சரியான நேரத்தில் இலக்கை சென்றடையுமா அல்லது காலதாமதங்கள் இருக்கக் கூடுமா போன்ற விபரங்களையும் வழங்கியது. ஆனால், தற்சமயம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டது. வரைபடம் இல்லாது, இரயில் குறித்த விபரங்கள் மட்டும் தற்சமயம் கிடைக்கிறது. இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
    http://enquiry.indianrail.gov.in/ntes/

    கூகுள் மேப் மேக்கர்
    இந்த சேவையை பயன்படுத்தி, நாமே வரைபடத்தில் புதிதாக விபரங்களை சேர்க்கவோ, ஏற்கனவே இருக்கும் விபரங்களை மாற்றி அமைக்கவோ முடியும்.

    ஒரு பகுதியில் கிடைக்கும் சேவைகள், எடுத்துக்காட்டடாக, உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள்,பள்ளிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள் குறித்த விபரம், சாலைகள்,ஒரு குறிப்பிட்ட பாதைக்கான பேருந்து அல்லது இரயில் சேவைகள், நகரின் முக்கியமான கட்டிடங்கள், வங்கிகள், வங்கிகளின் தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் இருக்கும் இடங்கள் போன்ற விபரங்களை பயனாளர்கள் உள்ளீடு செய்யலாம். அந்த விபரங்களை கூகுள் நிறுவனம் சரி பார்த்து, பின்னர் அவ்விபரங்களை வரைபடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.
    ww w.google.com/mapmaker மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளும் கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படும் கூகுள் வரைபடங்கள் மூலம் கிடைக்கப் பெறலாம்.

     

    இனி, இலவச வரைபட சேவைகள் வழங்கும் இன்னபிற நிறுவனங்கள் / வலைதளங்கள் குறித்து காணலாம்.
    1. மேப் க்வெஸ்ட் ( Map Quest ) www.mapquest.com
    2. யாகூ மேப்ஸ் ( Yahoo Maps ) https://maps.yahoo.com/
    3. பிங் ( Bing ) ( MSN நிறுவனம் வழங்கும் சேவை) http://www.bing.com/maps/
    4. மேப் மை இந்தியா மேப்ஸ் ( MapmyIndia Maps) http://maps.mapmyindia.com/  – இதில் வழித்தட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
    5. ஹியர் (Here ) (Nokia நிறுவனம் வழங்கும் சேவை) https://www.here.com

    Share
  • படக் கவிதைப் போட்டி – 3இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    சிலை வணக்கம் புரியும் சிறுவனின் மனத்தில் புகுந்து, கலை மணக்கும் கவிதை வடித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். புதுவை சரவணன் எடுத்த நிழற்படத்தின் சாரத்தை நிஜப் படமாய் எழுத முயன்றீர்கள்.

    16720185552_5ebd517bcb_o

    தெய்வத்தை வணங்கும் தெய்வம் என்று முகநூலில் ராமன் ஜனனியும் ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…! என்று வேலுச்சாமியும் வர்ணித்தது, இந்தப் படத்திற்கான அழகிய தலைப்பு.

    வீட்டுச் சிக்கல்களையும் நாட்டுச் சிக்கல்களையும் சொந்தச் சிக்கல்களையும் தீர்க்க, இந்தச் சிறுவன் கடவுளை வேண்டுவதாக, கவிஞர்கள் அடுக்கிய விதத்தைக் கண்டோம். அதில்

    எப்போதும் இதையே பேசிடாமல்
    என்னை அவர்கள் கொஞ்சிடணும்

    என எஸ்.பழனிச்சாமியும்

    உன்னை வேண்டுவேன் படைத்தவனே
    உலகினில் வேண்டாம் அனாதைகளே…!

    என செண்பக ஜெகதீசனும் தீட்டிய வரிகளை ரசித்தேன்.

    எனினும் ஒரு முழுக் கவிதை என்ற அளவில் பார்க்கையில், பி.தமிழ்முகிலின் படைப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

    ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
    சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
    சுகமாய் தான் வாழனும்
    பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே!

    கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
    பருந்து காக்கையிடம் இருந்து
    பத்திரமா காக்க வேணும் – அவையும்
    என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும்!

    கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
    என்னைக் கண்ட மறு நொடியே
    துள்ளி ஓடி வந்திடனும்
    அன்புடன் நானும் அணைத்திடனும்!

    சின்னச் சின்ன ஆசைகளின்
    சின்னஞ்சிறு பட்டியலிது
    பட்டியல் வளரும் வேளைதனில்
    பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே!

    பொய் பொறாமை புரட்டும் தான்
    என் மனதை அண்டாது காத்திடனும்
    அன்பும் பண்பும் எந்நாளும்
    குறையாது நானும் வாழ்ந்திடனும்!

    நாளும் உன்னைச் சந்தித்தே
    நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
    நலமும் வளமும் உலகமெலாம்
    நிலைத்திடவே வேண்டிடுவேன்!

    இவற்றைச் சின்னஞ்சிறு ஆசைகளாகப் பார்த்தாலும் அர்த்தம் உண்டு. அதே நேரம், குறியீடுகளாகப் பார்த்தாலும் பொருள் உண்டு. மேலும் கடவுளை நலம் கேட்பது ஓர் அழகு என்றால், தனக்காக வேண்டாமல், உலகமெலாம் நலமும் வளமும் நிலைத்திட வேண்டுவது, இன்னும் அழகு. வேண்டும் என்பதன் பேச்சு வழக்கு வேணும் என்றே இருக்க வேணும். மூன்று சுழியை இரண்டு சுழியாக்கினாலும், கவிதை அம்சத்துக்காக, இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகப் பி.தமிழ்முகிலைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    அத்தனை பேரும் கடவுளை வேண்டுகையில், கடவுளே குழந்தையிடம் உரையாடுவது போல் மாற்றி யோசித்ததோடு மட்டுமின்றி,

    குட்டிச்செல்லமே…!
    கூடவே நானிருப்பேன் – உன்
    குட்டித்தோழனாக…!

    எனக் கடவுளைக் குட்டித் தோழனாக்கிய தனுவை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அறிவிக்கிறேன்.

    தமிழ்முகிலுக்கும் தனுவுக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    பி.தமிழ்முகில் நீலமேகம்

    Kannadasanபொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல்கள், நாளை நம் நினைவில் நிற்குமா என்று கேட்டால், நிச்சயமாக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லலாம். இன்றைய பாடல்கள் காளான்கள் போன்றவை. அவற்றிற்கான ஆயுட்காலம் மிகக் குறைவு. கருத்தாழம் மிக்க பாடல்களே காலமெலாம் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத அற்புதப் படைப்புகள் பலவற்றை நமக்குப் பெரும் பொக்கிஷங்களாகக் கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன் என்பது நிதர்சனமான உண்மை.

    காதல் ஆயினும் சரி, தத்துவமாயினும் சரி, கவிஞரது கவிதை வரிகள் எல்லாமே சராசரி மனிதன் தனது வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில் இருக்கின்றபடியால், கேட்பவர்களின் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்கிறது.  காலம் பல கடந்தும், இன்றளவும் நம் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன அவரது பாடல்கள்.

    நிறப் பேதம் பார்த்து,  மனங்களை வருத்தும் மானுடர்கள் மத்தியில் வாழும் பெண்ணொருத்தி, தன் மனக்குமுறலைக் கண்ணனிடம் கொட்டுவதாகக் கவிஞர் எழுதியுள்ள  இந்தப் பாடலினுள் மாநிறம் அல்லது கருப்பு நிறத் தோல் கொண்ட  பெண்கள், தம்மையும் அச்சூழலில் பொருத்திப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு, மனத்துயரை அச்சூழலில் எவ்வளவு அழகாகத் தன் கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர்!

    மனம் பார்க்க மறுப்போர் முன்
    படைத்தாய் கண்ணா!
    நிறம் பார்த்து வெறுப்போர் முன்
    கொடுத்தாய் கண்ணா!
    இனம் பார்த்து எனைச் சேர்க்க
    மறந்தாய் கண்ணா!

    மனித மனம் பச்சோந்தியைப் போன்றது. சந்தர்ப்பத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன் நிலையை மாற்றிக் கொள்வது.எடுத்த முடிவில் நிலையாக நில்லாதது. உயர்ந்த இடத்தில் இருக்கும் அனைத்துமே உயர்வானவை என்றும், எளிமையானவை அனைத்தும் தாழ்வானவை என்னும் மாயையை உண்மை என்று நம்புவது மனித மனம்.

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்.

    ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது நிம்மதியானஉறக்கம். மனதினுள் எத்துணை பெரிய பாரம் ஏறிக்கொண்டு, உறக்கம்தனைக் கண்களை அண்ட விடாது செய்தாலும், கவிஞரின் மெல்லிய பாடல்கள் மயிலிறகாய் வருடி, நித்திராதேவி நம் கண்களைத் தேடி ஓடிவரும்படி செய்துவிடும். அத்தகைய பேராற்றல் கொண்டவை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.

    உதாரணத்திற்குச் சில பாடல்கள்…

    •பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
     பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

    •மலர்ந்தும் மலராத பாதி மலர்
     போல வளரும் விழி வண்ணமே

    •தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
     அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    •கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
     வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

    •கண்ணே கலைமானே கன்னி மயில் என
     கண்டேன் உன்னை நானே

    போன்ற பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகப் பெரியவர்கள் வரை  தன்வயப்படுத்தி, நித்திரையை அவர்கள் கண்வயப்படுத்தும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

    மனித வாழ்க்கையை நான்கே வரிகளில் கவிஞர் எவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறார் பாருங்கள்.

    பிறந்தோம் என்பதே முகவுரையாம்
    பேசினோம்
    என்பதே தாய்மொழியாம்
    மறந்தோம்
    என்பதே நித்திரையாம்
    மரணம்
    என்பதே முடிவுரையாம்.

    உன்னதமான காதலைச் சொல்ல இதைவிடவும் வேறு வார்த்தைகள் இருக்கின்றனவோ?

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
    சொல்லாத
    சொல்லுக்கு விலையேதும் இல்லை
    ஒன்றோடு
    ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
    உலகங்கள்
    நமையன்றி வேறேதும் இல்லை
    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
    நாளோடும்
    பொழுதோடும் உறவாட வேண்டும்

    கேட்கும் போதெல்லாம், நம்மையும் உணர்ச்சிவசப்படச்செய்து, கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள், தன்  கண்பட்டு விட்டதாலேயே தன் காதலனுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டதோ என்றெண்ணி, காதலி படும் பாட்டை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்!

    கண் பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ
    அதை நானறியேன்
    என்
    கண்  பட்டதால் உந்தன் மேனியிலே
    புண்பட்டதோ
    அதை நானறியேன்.
    புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்
    இந்தப்
    பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

    சிரிப்பு ! – இது மனித இனத்திற்கு இறைவன் அளித்த சிறப்பு. குழந்தைகளின் சிரிப்பைக் காணக் காண இன்பம் கரைபுரளும். அதே சிரிப்பைக் குழந்தை குமரியானதும் சிரித்தால் சொல்வார்கள் ” பொண்ணு சிரிச்சா போச்சு, புகையிலை விரிஞ்சாப் போச்சு “என்று. விதியையும் விரட்டி அடிக்கும் மதியும் சக்தியும் சிரிப்பிற்கு உண்டு என்று சிரிப்பைப் பற்றிக் கவிஞர் சொல்கிறார்.

    குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
    அதைக்
    குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
    பொறந்ததுக்குப்
    பரிசு இந்த சிரிப்பு அல்லவா!
    இது
    பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா!
    வேண்டும்
    மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
    அந்த
    விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்

    குடும்பம் என்ற அழகான கூட்டில் பறவைகளின் இனிமையான இசை வெள்ளம். கணவன், பிள்ளை இருவரையும் குழந்தைகளாகப் பாவித்து மனைவி பாடும் அழகானதோர் கீதம் கவிஞரின் கவிதை வெள்ளத்தில்.

    பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
    நான்
    படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
    எனக்காக
    இரு நெஞ்சம் துடிக்கின்றது – இதில்
    யார்
    கேட்டு என் பாட்டை முடிக்கின்றது.

    பள்ளி, கல்லூரிகளில் நிகழும் பிரிவு உபசார விழாக்களில் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்குமோ?

    பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடித்
    திரிந்த பறவைகளே”
    எந்த ஊரில் எந்த நாட்டில்
    என்று
    காண்போமோ?
    எந்த அழகை எந்த விழியில்
    கொண்டு
    செல்வோமோ?”

    இன்னும் எத்தனை எத்தனையோ….சொல்லிக் கொண்டே போகலாம்.

    நமது வாழ்வில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் கவிஞரது பாடல்கள்  நிச்சயம் நம் நினைவுகளில் நிழலாடிச் சென்றிருக்கும். காதல், நட்பு, சகோதர பாசம், குடும்பம், குழந்தைகள், துயரம், சோகம் என்று ஏதேனும் ஓர் சூழலில் நம்மைக் காந்தமாய் கவர்ந்திழுக்கும்.

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை”

    என்று  தீர்க்கதரிசியைப் போல் கவிஞர் அன்று சொன்னது எவ்வளவு உண்மை.காலத்தால், மக்களின் இரசனையில், கற்பனை, எண்ணங்கள், என்று அனைத்திலும் எத்துணை பெரிய மாற்றம் ஏற்பட்ட போதும், அவர் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றளவும் நம்மிடையே தன்  பாடல்களினால் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்னும், காலம் பல கடந்தாலும், நிலையாக நம் மனங்களில், இனிய கவிதைகளாய் வாழப் போகிறவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

     

    Share
  • இரத்தினக் கம்பளம்

    பி. தமிழ்முகில் நீலமேகம்

     

    உன் பிஞ்சுப் பாதம்

    மண்ணில் பதிய

    பூமித் தாயும் அகமகிழ்ந்து

    உளம் பூரித்து – ஆனந்தம் வழிய

    புன்னகையுடன்  உனக்கு

    இரத்தினக் கம்பளம் விரித்து

    வரவேற்பளிக்கிறாளோ ??

    கள்ளமறியா கிள்ளையே !!!

    அவளை  எந்நாளும் காத்திட

    உறுதிகொண்டால் – எந்நாளும்

    நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!!

    நல்வாழ்வு வாழ மண் – மழை காக்க

    மனதில்  உறுதி கொள்வோமே !!!

    இரத்தினக் கம்பளத்தின் எழிலினை

    இரசித்து மகிழ்வோமே !!!

     

     

    Share
  • உறக்கத்திலோர் உளறல் !!!

    பி.தமிழ்முகில்   நீலமேகம்

     

    ஜானவி அந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் பாடப்பிரிவில் புதிதாக இணைந்திருந்தாள் . கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சென்ற பின்னரே அவள் வந்து சேர்ந்திருந்தாள் . பொறியியல் நுழைவுத்  தேர்வெழுதி விட்டு, முடிவுகளுக்காய் காத்திருந்தாள் . அவளது மதிப்பெண்கட்கு வெளியூரில் உள்ள புகழ் பெற்ற பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், தங்களது பிள்ளையை தங்களை விட்டு வெகு தொலைவிலிருக்கும் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அவளது பிரிவால் கஷ்டப்பட அவளது பெற்றோர் விரும்பவில்லை. எனவே, அவளை தங்களது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் கல்லூரியிலேயே சேர்த்தனர்.

    அன்றாடம் கல்லூரிக்கு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பேருந்தில் பிரயாணம்.  காலை மாலை வேளைகளில் இரண்டு மணிநேர பிரயாணத்தால் அவள் மிகவும் சோர்வுற்றாள் . இதனால், அவளுக்கு பாடங்களில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை. காலையில் அவசர அவசரமாக   உண்டும் உண்ணாமலும் ஓடுவாள். மாலையிலோ, பயணக் களைப்பிலேயே சீக்கிரமாய் உறங்கிப் போவாள். பாடங்கள் படிக்க போதிய நேரம் இல்லாமல் இருந்தது. கல்லூரி விடுதியில் தங்கிக் கொண்டால், அலைச்சலும் மிச்சமாகும், படிக்கவும் நிறைய நேரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், விடுதியில்  சேரப்போவதாக பெற்றோரிடம் கூறினாள். இதைக் கேட்டவுடன், அவர்களுக்கு என்னவோ போல் இருந்தது. மகளைப் பிரிய அவர்கள் விரும்பவில்லை. பின்னர், அவளது படிப்பு  கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அரைமனதாக ஒப்புக் கொண்டனர். இதுநாள் வரை, தன பெற்றோரை பிரியாத ஜானவிக்கு மனது என்னவோ போலிருந்தது. ஒருவாறு மனதினை தேற்றிக் கொண்டாள் . வார இறுதியில் வீட்டிற்கு வந்து செல்லலாம் என்றபடியால், அவளது மனதிற்கு ஆறுதலாய் அமைந்தது.

    கல்லூரி விடுதியில் ஜானவிக்கு கொடுக்கப்பட்ட அறையில் ஏற்கனவே நால்வர் தங்கி இருந்தனர்.இரண்டு இரண்டாமாண்டு மாணவிகள் அனிதா, கற்பகம், மூன்றாமாண்டு மாணவி சக்தி, முதலாமாண்டு மாணவி சந்தியா. ஐந்தாவதாய் ஜானவி வந்து சேர்ந்தாள். ஜானவி அறைக்குள் சென்று தனது உடைமைகளை வைத்து விட்டு, அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மற்றவர்களது முகத்தில் அவ்வளவாக ஆர்வமில்லாது கடனே என்று அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு மாத காலமாய் நால்வராய் மட்டுமே இருந்து பழகிய அவர்களுக்கு, ஐந்தாவதாய் வரும் ஒருவரை அனுசரித்துப் போக மனமில்லை. அவர்கள் ஏன்  இப்படி இருக்கிறார்கள் என்பது விளங்காமல் சற்று குழப்பமடைந்தாள். அவர்களது செய்கைகளும் நடத்தைகளும் சற்று வருத்தமளித்தாலும், தான் படிப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். எவரைப் பற்றியும்  எண்ணி எதற்கு வீணான மனசஞ்சலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென  சகஜ நிலையில் இருக்க முயன்றாள்.

    ஓர்நாள்  இரவு, விடுதியில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, எங்கும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. வெளி வராண்டாவில் இருக்கும்   மின்விளக்கின் ஒளியைத்   தவிர, மற்ற இடங்களில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது, பூச்சிகளின் சப்தம் மட்டுமே.திடீரென, அந்தப் பேரமைதியைக் குத்திக் கிழிக்கும் விதமாக, ஓர் குரல். தூக்கத்திலிருந்து பதறிப்போய்  எழுந்தாள்  சக்தி. முதலில் முனுமுனுப்பாய் ஆரம்பித்த அக்குரல் மெல்ல மெல்ல உயர்ந்தது. சப்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜானவி பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேசுவது எதுவும் ஓர்  கோர்வையாக இல்லாமல், ஏதோ உளறல் போல் இருந்தது. அறையிலிருந்த மற்ற நால்வரும் பயந்து போய்  விழித்துக் கொண்டனர். யாரும் எழுத்திருக்காது படுத்தபடியே வைத்த கண் வாங்காது ஜானவியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென ஜானவி, தடதடவென்று  உருண்டு வந்து, தன்  அருகினில் படுத்திருந்த சக்தியினை வேகமாக கட்டிலுக்கடியில் தள்ளிவிட்டாள் . மேலே காலை தூக்கிப் போட்டவள், சக்தியைப் பார்த்து, ” யார் நீ ? ” “யார் நீ ?” என்று பெரும் கூச்சலிட்டாள் . எதிர்பாரா நேரத்தில், எதிர்பாராததொரு நிகழ்வினைக் கண்ட சக்தி பயத்தில் அப்படியே உறைந்து போனாள். வீறிட்டு அலறினாள் . இதற்குள், அனைவரும் பயந்து போய், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து பயத்துடன் சுவற்றின் ஓரமாய் ஒதுங்கி நிற்க, சக்தியும் ஒருவாறு சமாளித்து கட்டிலுக்கடியிலிருந்து எழுந்து மற்ற மாணவியருடன் நின்று கொண்டாள். அனைவரும் பயத்தில் ஏதும் புரியாது நின்று கொண்டிருக்க, படுக்கையில் இருந்து எழுந்த ஜானவி, அப்போது தான் உறக்கத்திலிருந்து  எழுந்தவள் போல் ,    ” என்னாச்சு ?       ஏன் எல்லாரும் பயந்து போய்  நிக்கறீங்க? ” என்றவாறு மற்றவர்களிடம் வந்தாள். ஆனால், அனைவரும் பயந்து ஒதுங்கினர்.

    அடுத்தநாள் காலை, இச்செய்தி  விடுதி முழுவதும் பரவியது. விடுதி மாணவிகள் அனைவரும் ஜானவியை விசித்திரமாகப் பார்த்தனர். அவளது வகுப்பில் மற்ற மாணவியருக்கும் இவ்விஷயம் தெரியவர, எவரும் அவளுடன் பேசவில்லை.  இன்னும் பலரோ பயந்து ஒதுங்கினர். சிலர் ஒருபடி மேலே போய்  ” இவளுக்கு பேய் புடிச்சிருக்கு போல”  என்றனர். சிலர்           “இவளுக்கு பைத்தியம்” என்று தங்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் கேட்ட ஜானவி, கண்கள் குளமாக மௌனமாய் நடந்து கொண்டிருந்தாள் . ஜானவியின்  பின்னால் கூட்டமாக, அவளது வகுப்பு மாணவியர் சிலர் வந்து  கொண்டிருந்தனர். அவர்கள் மெல்லிய  குரலில் ” ஏய் ! ஜானவி போறா…இவளுக்கு பேய் புடிச்சிருக்கான்னு பாத்துரலாம்.பேய்க்கு முன்னாடி நின்னு பேசுனா தான் கேட்கும்.பின்னாடி இருந்து பேசுனா தெரியாது. இவ பேயான்னு சோதனை பண்ணிருவோம்” என்று பேசி இருக்கின்றனர்.இதனால் மிகவும் மனமுடைந்து போனாள்  ஜானவி. அறையில் உடனிருக்கும் மாணவியரோ , ஜானவி அறையில் இருந்தால், படீரென கதவை அடைப்பதும், எவரையோ திட்டுவதைப் போல் மறைமுகமாக ஜானவியைத் திட்டுவதும் என  அவளை துன்பப் படுத்தினர். இதனால், காலையில் அறையை விட்டு வெளியேறினால், மாலையில் அறையில்  எவருமில்லாத நேரத்தில் வந்து தன்  வேலைகளை முடித்துக் கொள்வாள்.இரவிலும் வெகுநேரம் கழித்து அனைவரும் உறங்கிய பின்னரே, உறங்க வருவாள். அவளது நிலை மிகவும் பாவமாக இருந்தது.

    சில நாட்களாக ஜானவியை கவனித்து வந்தாள் சக்தி. அவள் ஏதோ சோகத்தில் இருப்பதாய் உணர்ந்தாள். மாணவியர் அவளை கிண்டல் செய்வதையும் கேள்விப்பட்டாள். மிகவும் வருத்தமுற்றாள். அவளது மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்தவளாய், அன்று மாலை வகுப்புகளனைத்தும் முடிந்த நிலையில் ஜானவியை அவளது வகுப்பில் சென்று பார்த்தாள்.  ஒருவித பயத்துடனே சக்தியை நோக்கி வந்தாள் ஜானவி. ” பயப்படாத ஜானவி. ” என்று அவளுக்கு தைரியமளித்தாள். ” அன்றைக்கு  இராத்திரி என்ன நடந்ததுன்னு தெரியுமா? ” என்றாள். “தெரியலையே அக்கா… எல்லாரும் பயந்து போய் நின்னுட்டு இருந்தீங்க. நானும் வந்து உங்களோட நின்னப்ப , எல்லாரும் என்னையப் பாக்கவே பயந்து ஒதுங்குனீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நானும் பயந்துட்டேன் அக்கா” என்றாள் .  சக்தி மெதுவாக அந்த இரவு நடந்த விபரங்களை ஒவ்வொன்றாகச் சொன்னாள். ” நான் இப்படி எல்லாமா அக்கா பண்ணினேன் ? எனக்கு எதுவுமே தெரியாது அக்கா. சாரி ” என்றாள் ஜானவி.  தான் ஏதோ  உடல் கோளாறுக்காக மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அம்மருந்தின் பக்க விளைவுகள் இவ்வாறு இருக்கக்கூடுமென மருத்துவர் கூறியிருப்பதாக தெரிவித்தாள். உண்மையை அறிந்து கொண்ட சக்தி, அதன்பின் அவளுடன் எப்போதும் போல் சகஜமாகப் பழகினாள்.

    ஒருமாதம் சென்றுவிட்ட நிலையில், ஜானவியுடன் அனைவரும் சகஜமாகப் பழகாவிட்டாலும், ஒரு சிலர் அவளுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டனர். தனிமைத் துயர் தீர்ந்தபடியால், அவளும் மகிழ்வுடன் தன் பாடங்களில் கவனம் செலுத்தலானாள் . ஒருசிலரோ, இன்னும் அவளை கிண்டலடித்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களை அவள்  ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தன் தோழியருடன் மகிழ்வாகவே தன் கல்லூரி வாழ்வை அனுபவித்தாள்.

    மீண்டும் ஓர் நாள் இரவு, ஜானவி தூக்கத்தில் கை கால்களை உதற  ஆரம்பித்தாள். ஏதேதோ பேசினாள் . இம்முறையும் அறையில் உடனிருந்த மற்ற மாணவியர் அனைவரும் பயப்பட, சக்தி மட்டும் அருகில் சென்று அவளை எழுப்பினாள். அவள் எழுந்திரிப்பதாய் இல்லை. பெருங்குரலெடுத்து ஏதோ பேச ஆரம்பித்தாள். மனதினுள் இதற்கு முன் ஏற்பட்ட அனுபவம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , ஜானவியை உலுக்கினாள். ” ஜானவி !  ஜானவி ! எழுந்திரு ! என்னாயிற்று உனக்கு ? எழுந்திரு!  ” என்று சற்று சப்தமாகக்  கூறினாள். உறக்கம் கலைந்தவளாய் எழுந்த ஜானவி , ” என்னக்கா ஆச்சு ? ஏதாவது பேசினேனா? ” என்றாள். “ஆமாம் ! ” என்றாள்  சக்தி . ” பயமா இருக்கு அக்கா! நான் உங்க கையைப் பிடிச்சுட்டு படுத்துக்கறேன்” என்ற ஜானவி, சக்தியின் கையைப் பிடித்தவாறே உறங்கிப் போனாள். அதன்பின், ஓர்நாளும் ஜானவி உறக்கத்தில் பேசவில்லை.

    தனக்கு ஆதரவாயும், பக்கத் துணையாகவும் ஒருவர் இருக்கிறார் என்ற மனோதிடம் ஜானவிக்கு ஏற்பட, அவளது பயம் அனைத்தும் இருந்த இடம் தெரியாது பறந்தோடியது.

     

    p.s.

     Somniloquy

               Somniloquy or sleep-talking refers to talking aloud while asleep. It can be quite loud, ranging from simple sounds to long speeches, and can occur many times during sleep. Listeners may or may not be able to understand what the person is saying. Sleep talkers usually seem to be talking to themselves. But sometimes, they appear to carry on conversations with others. They may whisper, or they might shout.actions may be funny or violent. Things that can cause sleep talking include : certain medications, emotional stress, fever, mental health disorder.

    Source:

    wikipedia.org

    webmd.com

     

     

    Share
  • வினையான விளையாட்டு

        பி.தமிழ் முகில் நீலமேகம்

          வனிதா, இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி.அந்நகரிலிருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் பயின்று வந்தாள். கல்வி, கலை என அனைத்துத் துறைகளிலும் திறமை வாய்ந்தவள்.குறும்புத்தனமும் சூட்டிகையும் நிறைந்தவளும் கூட.எப்போதும் கலகலப்பாய் வளைய வரும் அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் கூட்டம் நிரம்பி வழியும். பந்தயம் கட்டி ஜெயிப்பதென்றால் அதிலோர் தனி ஆர்வம் அவளுக்கு.

       அந்தக் கல்லூரியில் கட்டுப்பாடுகள் அதிகம்.நூலகத்திற்கு செல்வதாகட்டும், கணிப்பொறி மையத்தினை பயன்படுத்துவதாகட்டும், அடையாள அட்டை இல்லாமல் உள்ளே நுழைய எவருக்கும் அனுமதி கிடையாது.ஒருமுறை, தோழிகளிடம்

    நான் லைப்ரரி கார்ட் இல்லாம லைப்ரரிக்கு போய் ரெஃபரென்ஸ் எடுத்துட்டு வந்து காமிக்கறேன்.என்ன பெட்?” என்றாள்.

    சரி.நீ போய்ட்டு வந்தீன்னா உனக்கு ஒரு டைரி மில்க் சாக்லேட்” என்று தோழிகளும் சொல்ல, “சரி” என்று கூறியவள் நூலகத்தினை நோக்கி நடந்தாள்.அனைவரும் எதிர்பார்த்தபடியே நூலக வாசலிலேயே அவள் நிறுத்தப் பட்டாள்.

    லைப்ரரி கார்ட் எங்க?” என்றார் அங்கிருந்த அட்டென்டர்.

    இல்லைக்கா, எங்க மேடம் என்னை வரச்சொன்னாங்க” என்றதும், அவள் உள்ளே அனுமதிக்கப் பட்டாள்.

    உள்ளே சென்ற அவள், அங்கு தனது விரிவுரையாளரைக் கண்டதும் திகைத்தாள்.ஒருவாறு,  சகஜ நிலைக்கு வந்தவள்,

    குட் ஆஃப்டர்னூன் மேம்” என்றுவிட்டு, “மேம், எனக்கு ரெஃபெரென்ஸ் புக் வேணும்.அடுத்த மாசம் செமினார்க்கு நிறைய நோட்ஸ் எடுக்கனும்.ஆனா, ஸ்டூடன்ட்ஸ்க்கு ரெஃபெரென்ஸ் புக்ஸ் தரமாட்டாங்க.நீங்க எடுத்து தந்தீங்கன்னா, நோட்ஸ் எடுத்துட்டு ரெண்டு நாள்ல குடுத்துடறேன் மேம்” என்றாள்.

            ஆசிரியையும் அவளுக்கு புத்தகம் எடுத்துக் கொடுத்தார்.அதை வாங்கிக் கொண்டு அவள் வெளியே வர, அன்று அவளுக்கு பந்தயத்தில் ஜெயித்ததற்கு ஒரு சாக்லேட் கிடைத்தது.

            ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும்.அன்று மாலை வகுப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், தோழிகள்  அனைவரும்  மரத்தடியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அவசர அவசரமாய் மூச்சிரைக்க ஓடி வந்தாள்  ரஞ்சனி.

    என்னடி? இப்படி மூச்சிரைக்க ஓடி  வர்ற ? என்னாச்சு? ” என்றாள் வள்ளி.

    ஏய், இன்னைக்கி ஹாஸ்டல்ல ரூம் செக்கிங் பண்ண வர்றாங்களாம்” என்று  பதட்டதுடன்  கூறினாள்.

    அதனால என்னடி? எதுக்கு இப்படி பயப்படற? ” என்றாள் வனிதா.

                         “நான் அடுத்த வாரம் நடக்க இருக்கற  கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம்க்கு, நாம போடப்போற கிராமிய நடனத்துக்கு தேவையான பட்டு சேலை,நகைகள் எல்லாம் வெச்சிருக்கேன். ரூம் செக்கிங் அப்போ பாத்தாங்கன்னா  காஸ்ட்லி திங்க்ஸ் வெச்சிருக்கறதுக்காக  ஃபைன்  போட்டுடுவாங்க.அது போக நான் இன்னும் நிறைய இங்கிலீஷ் நாவல் எல்லாம் வெச்சிருக்கேன்.பாட புத்தகங்களைத் தவிர வேற புத்தகங்கள் வெச்சிருந்தா எல்லா பொருட்களையும் வாங்கி வெச்சுடுவாங்க.அதுக்கு பிறகு அப்பா வந்து ஹாஸ்டல்  வார்டனை பார்த்து ஃபைன்  கட்டின பிறகு தான்  பொருளெல்லாம் தருவாங்க. அதுவும் போதாதுன்னு, ஒரு மாசம் காலேஜ் ஹாஸ்டல்ல இருக்க விட மாட்டாங்க.நானும் வெளியூர்ல இருந்து எப்படி தினமும்  காலேஜ்க்கு வந்துட்டு போறது?”

                 ஒரு பிரச்சனையும் ஆகாதுடி.எதுக்கு கவலைப்படற?” என்ற வனிதா சற்று நேரம் அமைதியாய் இருந்தாள்.நேரமானபடியால், தோழிகள்  அனைவரும் ஒவ்வொருவராய் கிளம்ப ஆரம்பித்தார்கள்.ஒருத்தி, “நான் ரூம்க்கு போய் என் திங்க்ஸ் எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைக்கறேன்.ரூம் செக்கிங் ன்னு பேச்சு அடிபடுதுல்ல.அப்புறம் திங்க்ஸ் ஒழுங்கா இல்லைன்னு கூட சில சமயம் ஃபைன்  போட்டுடுவாங்க.” என்றவாறு கிளம்பிச் சென்றாள்.மற்ற மாணவியர், ” நான் காலேஜ் பஸ்க்கு  போய் நிக்கறேன். இப்போ போய் நின்னாத் தான் ரெண்டு ட்ரிப் கழிச்சாவது வீட்டுக்கு போக முடியும்.” என்று கிளம்பிச் சென்றனர்.

              ஏதோ சிந்தனையில்  ஆழ்ந்தவள் போலிருந்த வனிதா, ” இருங்கடி.இதோ  வந்துடறேன்” என்றவாறு விறுவிறுவென்று  நூலகத்தின்  மாடிக்குச் சென்றாள். இப்பொதெதுக்கு செல்கிறாள் ? நூலகம் பூட்டும் நேரமாயிற்றே என்றெண்ணியபடி  அனைவரும் நிற்க, “இந்நேரம் எங்கடி போற? ” என்றொருத்தி கேட்க, “வந்துடறேன் இரு” என்று பதில் கூறிவிட்டு  சென்றாள் .

                நூலகத்தின் ஐந்தாவது தளமான மொட்டை மாடிக்குச் சென்றவள், அங்கிருந்து தன்  தோழிகளை அழைத்து கையசைத்தாள்.

    இந்நேரத்தில் எதற்கு அங்கு போனாள் ? “  என்று தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைப்பிடிச் சுவற்றின் மீது ஏறி  அமர்ந்தாள்  வனிதா. தோழியின் செய்கையைப் பார்த்து அதிர்ந்தவர்களாய்  ” ஏய் ! என்னடி பண்ற? ஏன்  அங்க ஏறி உக்காந்திருக்க?” என்றனைவரும் அலற   ” ஒரு பதினைந்து நிமிஷம்டீ , வந்துடறேன் ” என்றாள் .

                  இதற்குள், யாரோ நூலகத்தின் மாடியில், தடை செய்யப்பட்ட  பகுதியில் சுவற்றின் மீதேறி அமர்ந்து இருப்பதறிந்த ஆசிரியைகள் அங்கு வந்து விட்டனர். ஹாஸ்டல் பொறுப்பாசிரியர்கள் அனைவரும் என்ன ஆனதோ ஏதானதோ என்ற பரபரப்புடன் அங்கு ஓடி வந்தனர்.என்னாயிற்று, ஏதாயிற்று என்று பரபரப்புடன் விசாரித்தனர்.கூட்டம் சேர்ந்து வருவதைக் கண்ட வனிதாவிற்கு உள்ளூர  “ஒருவாறு இன்றைக்கு ஹாஸ்டலில் நடக்கவிருந்த  ரூம் செக்கிங் நடக்காதவாறு பரபரப்பை  செய்து விட்டோம். இந்த பரபரப்பு அடங்கி, அவர்கள் செக்கிங் ஆரம்பிக்க இன்று முடியாது. இனிமேல் செக்கிங் வருவதாய் இருந்தாலும், அவளது பொருட்களை நாம் வாங்கிச் சென்று, வீட்டில் வைத்திருந்துவிட்டு, அவள் ஊருக்குச் செல்லும் போது  கொடுத்துவிடலாம்” என்று எண்ணியவாறு இறங்க எத்தனித்தவள், நிலை தடுமாற ஆரம்பித்து விட்டாள் . மேலிருந்து கீழே பார்த்து  பேசிக் கொண்டு நின்றதில், அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. தடுமாறி கைப்பிடிச் சுவரைப் பிடிக்க எத்தனித்தவள், எவரும் எதிர்பாராவண்ணம் கண்ணிமைக்கும் நேரத்தில், மாடியிலிருந்து விழுந்து விட்டாள் .

                          ஐயோ ” என்று  அலறியபடி விழுந்தவள் , எழுந்து கொள்ள எத்தனித்த போது, ஏதோ தன் உடலின் கீழ்ப்பகுதி மிகவும் இலேசாகிப் போனது போல் உணர்ந்தாள்.வலது கையை  தரையில் ஊன்றி எழுவதற்கு எத்தனித்தவள், கைகளை தரையில் வைத்ததற்கான உணர்வுகளே இல்லையே என்றெண்ணி கையைப் பார்த்தாள்.அப்போது ஓர் ஆசிரியர், ” என்னம்மா ! என்னாச்சு? என்ன செய்யுது உனக்கு? ” என்றலற, அவள் விழுந்த இடத்தில், அவள் உடலிலிருந்து ஏதோ நீராய்க் கசிந்திருக்க, “என்னாச்சுடீ உனக்கு? கீழ பாரு” என்று தோழிகள் அலற, அங்கு கண்டவள், சிறுநீர் தன்னிச்சையாய் வெளியேறுவதைக் கண்டதும் படபடப்பானாள். “ஐயோ! என்னால எழுந்திருக்க முடியலையே. என் கை, கால்ல உணர்ச்சியே இல்லையே ! ” என்றரற்றினாள்.

              அடுத்த சில நொடிகளில் ஆம்புலன்சில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்துச் செல்லப் பட்டாள்.அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், ” அதிகமான எலும்பு முறிவு, அதிர்ச்சி, இவற்றினால  உணர்விழந்திருக்காங்க. எங்களால முடிந்தவரை நாங்கள் சிகிச்சை செய்யறோம். அதற்கு மேல் ஆண்டவன் தான் காப்பாற்றனும்.” என்று கூறி விட்டனர். 

                   கலையும் கற்பனையும் ஒருங்கே இணைந்தவோர் எழில் ஓவியத்தில் வண்ணக் கலவைகள் கொட்டி விட்டால் அது எந்நிலையில் இருக்குமோ, அதே நிலையில் தான் இருந்தாள் வனிதா. அவளது தாய் அன்னபூரணிக்கும் தந்தை கமலக்கண்ணனுக்கும் கண்களில் நீர் கரைபுரண்டோடியது.நினைவு தப்பிப் போய், உணர்விழந்தவளாய் கிடக்கும் மகளிற்கோர் வழி பிறந்திடாதா, என்றேங்கினர் அவளைப் பெற்றவர்கள்.

                தன்னைச் சுற்றிலும் நடப்பதை உணர்ந்து கொள்ள முடியாதவளாய் சிதிலமடைந்த ஓவியமென கட்டிலில் வீழ்ந்து கிடந்தாள் வனிதா.

                                    

    Share
  • பேனா

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

    பாவலரின் கற்பனை எனும்
    கருவினில் உதித்த
    கவிதைக் கிள்ளைக்கு 
    உயிர் கொடுத்து
    உரு கொடுத்து
    பத்திரமாய் ஈன்றெடுக்கும்
    அன்பு அன்னை !!!

    உடலில் மை எனும்
    உதிரம் கொண்டு
    உழைத்து ஓடாய் தேய்ந்து
    உதிரமனைத்தும் சுண்டி
    சோகையான உடன்
    உதாசீனமாய் புறந்தள்ளுகிறோம்
    சற்றும் கவலையே இல்லாமல் !!!


    பாராட்டு சிம்மாசனம் எட்ட
    படிக்கட்டுகளாய் விளங்கி
    எழுத்துக்கு உயிர் தந்து
    எழுத்தாளரின் வெற்றிக்கு காரணியான
    பண்பான உழைப்பளிகளின்
    பாடு ஒரு நாளும்
    பாராட்டப்படுவதில்லை !!!


    மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டு
    உருவான திர்மானத்தில்
    வேள்வித்தீ என
    மக்கள் உள்ளங்களில் 
    கோலோச்சும் சிந்தனைகள்
    எழுதுகோல் துணைகொண்டு
    உருவாக்கப்பட்டவை அன்றோ ???

     

    Share
  • பெற்றோர்

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    தட்டுத் தடுமாறி மெல்ல
    எட்டு எடுத்து வைக்கையிலே
    பட்டுக் கரம் தா என்
    கட்டித் தங்கமே என்றேந்தி
    எட்டி வைக்கும் அடிகளுக்கெல்லாம்
    தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி
    எட்டுத் திக்கு சென்றாலும்
    கட்டி ஆள்வாய் உலகையே
    நாட்டிடுவாய் வெற்றிக் கொடியையே !!!
    என்று
    உற்சாகமூட்டும் அன்னை தந்தை
    உற்ற துணையாய் இருக்கையிலே
    உன்னத நம்பிக்கை  மலையென
    உள்ளமதில் எழுந்து நிற்க
    உலகையே கைப்பற்றி விட்டது போன்றொரு
    உயர் எண்ணம் உள்ளமதில் குடியேற
    உள்ளங்கையில் தவழ்ந்தாடும் வெற்றி மாலைகள் !!!

    Share
  • ஒரு தாயின் ஏக்கம்

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    காலமெல்லாம் கழனிக்காட்டில்

    காத்து மழையும் பாராம

    கனலா சுட்டெரிக்கும் சூரியனையும் மதியாம

    களை பறிச்சி காசு சேத்து

    கண்ணான இராசா உன்ன

    கருத்தா நானும் படிக்க வெச்சேன்

    கடல் கடந்து நீயும் காசு சேர்க்க

    கழனிக் காட்டையும் தான்

    கடனுக்கு குடுத்தேன் !!!

    கடனுந்தான் தீந்து போச்சு

    காசுந்தான்  உனக்கு சேந்து போச்சு

    கண்ணசர மறந்து காத்துக் கிடக்கும்

    கருவுல சுமந்தவ நினைப்பும்

    கனவுல வந்துபோற ஒன்னாச்சு !!!

    கருக்கல்லுல வந்துடுவியோ – இல்ல

    கண் தொறந்தா விடியல்ல வந்துடுவியோன்னு

    கண்ணு ரெண்டும் பூத்துப் போயி

    கண்ணான புள்ளை உன்ன

    காணக் காத்துக் கிடக்குறேன் உன் ஆத்தா

    கண் மூடுமுன்ன சுருக்குன்னு வந்துடனும் என் இராசா !!! 

    Share
  • விலை கொடுத்து வாங்கும் கவலை !!!

     

     பி.தமிழ் முகில்

    பெருமையாய் தான்
    எண்ணிக் கொள்ளும் மனம்  !
    கையில் புதிதாய்  பகட்டாய் – ஆறாவதாக
    ஒரு விரல்  முளைத்து விட்டது
    போன்றொரு பிரமை !!!
    அது அழகாய் கவர்ச்சிகரமாய்
    காட்சியளிப்பதாய் மனதிற்குள்
    ஓர்   பேய்   எண்ணம் !!
    புகையிலையை சுருட்டி
    பற்ற வைத்து – புகையை உள்ளிழுத்து
    நெஞ்சில்  நிறுத்தி – இருமாது
    புகையை வெளியேற்றுதல்
    உலக மகா  திறமையென்று
    அறிவிலிகளின்  அறிவுரை வேறு !!
    ஆனால் உண்மையில் ???
    நெருப்பில் சூடு பட்டு
    எரிந்து கருகிய நிலையில்
    புற்று நோயால் – செயலிழந்த
    நுரையீரல் !! – புற்றும் மெல்ல
    உடலெங்கும்  பரவ –
    உயிருக்கே வந்தது  உலை !!!
    தேவையா ?? – விலை கொடுத்து
    வாங்கும் இக்கவலை ??

     

    Share
  • வந்து விட்டது வசந்த காலம் !!!

     

    பி. தமிழ்முகில் நீலமேகம்

     

    இலையுதிர்த்த  மரங்களெல்லாம்

    மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருக்க

    மகரந்தங்களைத் தேடி மலர்களை

    சில் வண்டுகள் ரீங்கரிக்க

    குறுகிய காலத்துள்  –

    மரக் கிளைகளில்

    இலைகள் துளிர்த்திருக்க

    உதிர்ந்த மலர்கள்

    நிலமெங்கும் மலர் மஞ்சம்

    அமைத்திருக்க –

    எங்கெங்கு  காணினும்

    மஞ்சள்  மகரந்தங்கள்

    மங்களம் பரப்பிட

    கூடவே ஒவ்வாமையையும்

    இலவச  இணைப்பாய்

    அள்ளி வழங்கிட

    உற்சாகமூட்டும் வண்ணங்கள்

    நம்மைச் சூழ்ந்திருக்க

    பறவைகள் பரவசமாய்

    வானில் இசைபாடி

    வலம் வர – உறக்கத்திலிருந்த

    அணில்களும் முயல்களும்

    உற்சாகமாய் துயிலெழுந்து

    துள்ளியோட – வந்து விட்டது

    வசந்த காலம் !!! – எங்கெங்கும்

    உற்சாகமும் இன்பமும்

    சூழ்ந்திருக்கவே !!!!

    Share