Tag: முனைவர் சி. சேதுராமன்

  • எப்போது வருவாய் நீ?

     

    முனைவர் சி. சேதுராமன்,
    தமிழாய்வுத்துறைத் தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.),
    புதுக்கோட்டை.
    Malar.sethu@gmail.com

     
    எந்தமிழ்த் தாய்பெற் றெடுத்த கவிமகனே
    எல்லோரின் உள்ளத்தில் எழுகின்ற கவிச்சுடரே!
    எங்கே எங்கள் கவிக்கோ? என்றிங்கு
    எந்தமிழர் எல்லாரும் ஏங்கிப் புலம்புகின்றார்
    ஏந்தலே! கவியரங்கில் கவிபாடி எம்மை மகிழ்வித்தாய்!
    எழில் நிறைந்த கவிதைகளில் ஏழையரைப் பாடி வைத்தாய்!
    ஏற்றமிகு சிலம்பின்கதை இருநாற்சொல்லில் இயம்பினாயே!
    பால்வீதி படைத்து பலர் நெஞ்சைக் கவர்ந்தாயே!
    சிலேடைக் கவிதைகளால் எம்சிந்தை குளிர்வித்த சீமானே!
    பாலைநிலா படைத்து பலர் மனத்திலும் குடிபுகுந்தாய்!
    விதைபோல் விழுந்தவன் என்று கவிபாடி இன்று
    விதையாக மாறிவிட்டாய்!
    நேயர் விருப்பத்தை நிறைவு செய்த நேயனே!
    கண்ணீரில் தவிக்கவிட்ட எங்கள் கவிக்கோவே!
    கவியுலகில் புதுமையினைப் புகுத்திட்ட பாவலனே!
    கற்பனையின் ஊற்றே! கலைவளர் நற்கவிச்சுடரே!
    கவிதை அரங்குகளை கவிபெறச் செய்தாயே!
    உம்கவிதை வாங்குதற்கோ எமன் உன்னை அழைத்திட்டான்?
    அருந்தமிழின் மீது அருங்காதல் கொண்டவனே!
    அழகுதமிழ்க் கவிதைகளை அள்ளி அள்ளித் தந்தவனே!
    அருந்தமிழர் நெஞ்சங்களில் அழகாய் அமர்ந்தவனே!
    அனைவரும் உன்கவிதை கேட்பதற்குத் தவிக்கின்றோம்
    அன்பார்ந்த தமிழினிலே அருமருந்தாய்க் கவிபடைக்க
    அப்துல் ரகுமானே எப்போது வருவாய் நீ?

    Share
  • சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வர்

    -முனைவர்  சி.சேதுராமன்

    தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமாக விளங்கும் எனது ஊரான மேலைச்சிவபுரிக்கும் தனித்ததொரு சிறப்பு உண்டு. ஆம், இங்குதான் தமிழன்னையின் உயர்விற்கு அயராதுபாடுபட்ட தமிழ்ப்பெருந்தகை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பிறந்தார். அவரால் மேலைச்சிவபுரி தமிழக வரலாற்றிலும் தமிழிலக்கிய வரலாற்றிலும் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றது. கதர்ச்சட்டை, கதர்வேட்டி கதர்த்துண்டு, கையில் குடை,  காலில் சாதாரண நடையன், நெற்றியில் திருநீறு இத்தகைய எளிமையான தோற்றத்துடன் தீட்சண்யமான கூர்ந்த பார்வையுடன் கம்பீரமாகத் திகழ்ந்தவர்தான் மூதறிஞர் வ.சுப.மா.

    manikkanar1987-ஆம் ஆண்டு நான் கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட்., முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே மூதறிஞரின் வீடு. அப்போது நான் கல்லூரிக்குப் போகும் போதெல்லாம் அவரும்என்னுடனேயே நடந்து வருவார். அவர் எங்கள் ஊர் என்பது தெரியும். அவரின் சிறப்புகளைப் பற்றி அறியாத பருவம்.

    நாள்தோறும் அவர் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபைக்கு வருவார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் எங்களுக்கு முதலாம் ஆண்டில் நம்பியகப்பொருள் இலக்கணத்தை பேராசிரியர் தா. மணி ஐயா அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் பாடத்தைக் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடன் நடந்துவரும் பெரியவர் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்தார். எனது ஆசிரியர் மணி ஐயா அவரைக் கண்டவுடன் பணிவாக வணக்கம் ஐயா என்று மரியாதையுடன் கூறிவிட்டுத் தான் எடுக்கும் பாடம் குறித்து அவரிடம் கூறினார்.

    கருப்பொருள் குறித்த பாடம்தான் பேராசிரியர் மணி ஐயா  நடத்திக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட மூதறிஞர் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள் குறித்த நூற்பாவைச் சிறிதுநேரம் எடுத்துரைத்து அதற்கு விளக்கம் கூறிவிட்டு அதிலிருந்து வினாக்களைக் கேட்டார். அவர்கேட்ட வினாக்களுக்கு விடைகளை எங்கள் வகுப்பிலிருந்தோர் கூறினோம். அப்போது மூதறிஞர் நூற்பாவைக் கூறுமாறு வினவ, நானும் என் நண்பர்கள் சிலரும் தெரிந்தவரை கூறினோம். அதனைக் கேட்டபின்னர் மூதறிஞர் எங்களைப் பாராட்டிவிட்டு வகுப்பறையை விட்டுச்சென்றுவிட்டார். அவர் சென்றபின்னர் அவர் யார் என்று எங்கள் பேராசிரியரிடம்கேட்டோம். அதற்கு அவர் ‘‘இவர்தான் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் என்ற தமிழறிஞர்’’ என்று எங்களுக்குக் கூறினார்.

    அதன்பின்னர் சன்மார்க்கச் சபைக் கட்டிடத்தில் மூதறிஞர் எங்களுக்குச் சிறப்பானதோர் உரையை வழங்கினார். அவரது உரையைக் கேட்ட எனக்கு அவர் மீதுபற்றுதல் ஏற்பட்டது. பலமுறை மூதறிஞர் உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனை எனது வாழ்நாளில் கிட்டிய பேறாகக் கருதுகிறேன். அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

    ஆனால் எனக்கு நூல்கள் கிட்டவில்லை. எனது ஆவல் நான் பி.லிட் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோதுதான் நிறைவேறியது. ஆம் மூதறிஞர் எழுதிய ‘‘தமிழ்க்காதல்’’ என்ற நூலைக் கற்கின்ற வாய்ப்பு அப்போது எனக்குக் கிட்டியது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகை சதாசிவம் அவர்கள் தன்னிடமிருந்த அந்நூலை எனக்குக் கொடுத்துப் படிக்குமாறு தந்தார். அந்நூலைப் படிக்கப் படிக்க என்னுள் மூதறிஞரைப்பற்றிய எண்ணம் மேலோங்கி எழுந்தது. அவரது மேதைமைத் தன்மை என்னுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய அறிஞரின் வீட்டருகில் வாழ்ந்துகொண்டு அவரைப் பற்றி ஒன்றும் அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

    எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் அவரைப் பற்றி கேட்டபோது அவர்கள்அவரைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூறினார்கள். எங்கள் ஊரில் வாழ்ந்துமறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி சுவாமிநாதன் செட்டியார் அவர்களும் மறைந்த எனது பேராசிரியர் பழ. சிதம்பரம் ஐயா அவர்களும் மூதறிஞரைப் பற்றி பல செய்திகளைக் கூறினர்.

    இளம் வயதில் தாய்தந்தையை இழந்து பர்மாவில் உள்ள வட்டிக்கடைக்குப் பெட்டியடிப் பையனாகச் சேர்ந்து அக்கடையின் முதலாளி யாராவது வந்து கேட்டால் தான் இல்லையென்று கூறுமாறு பொய் சொல்லச் சொன்னபோது மூதறிஞர்  மறுத்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற முதலாளி அவரை மீண்டும் ஊருக்கேஅனுப்பிவிட்டதாகவும் கூறி எந்தச் சூழலிலும் பொய்சொல்லாமல் வாழ்ந்த அவரதுநேர்மையை எங்கள் ஊர்ப் பெரியவர்களின் வாயிலாக அறிந்தபோது என்னுள் அவர் இமயமலைபோல் உயர்ந்து நின்றார்.

    மூதறிஞரை வீட்டிலேயே சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்று என்னுள் விருப்பம் எழுந்தது. அந்த நாளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதை விடத் தவம் கிடந்தேன் என்று சொல்லலாம். பல பணிகளின் காரணமாக மூதறிஞர் பல ஊர்களுக்கும் சென்று கொண்டிருந்தார். மூதறிஞரை எவ்வாறேனும் தனித்துச் சந்தித்துவிட வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. பி.லிட். மூன்றாம் ஆண்டுத் தேர்வும் வர, தேர்வெழுதிக் கொண்டிருந்தோம்.

    கடைசிநாள் தேர்வு நடந்த பொழுது ஓர் அதிர்ச்சியான தகவல் எங்களை வந்தடைந்தது. தேர்வறையில் கண்காணிப்புப் பணியில் இருந்த பேராசிரியர் அங்குவந்த மற்றொரு பேராசிரியரிடம் மூதறிஞர்  இறந்துவிட்டதாகத் தகவலைக் கூறினார்.  அதைக் கேட்ட எனக்குப் பேரதிர்ச்சி.  இது உண்மையானதா என்று அறிய என் மனம் பரபரத்தது. தேர்வினை முடித்தபின்னர் விரைந்து சென்று எனதுபேராசிரியரிடம் கேட்க அவர் கூறிய தகவல் என்னுள்ளத்தைப் பிளந்தது.

    ‘‘தண்டாமரையின் உடன் பிறந்து தண்டே நுகரா மண்டூகம்’’ போன்று இருந்துவிட்டோமே! என்று என்னுள்ளம் வேதனையில் துடித்தது. நானும் எனது வகுப்புத் தோழர்  பிரான்மலை கணபதி  அவர்களும் என்  ஊர்க்கார்கள் சிலருடன் மூதறிஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகக் காரைக்குடிக்குச் சென்றோம். யாரைப் பார்த்து உரையாட வேண்டும் என்று  எண்ணியிருந்தேனோஅங்கு அந்தப் பெருந்தகை இறைவனடி சேர்ந்திருந்தார்.

    எனக்குச் சொல்லொணாத வேதனை ஏற்பட்டது. மூதறிஞர் அவர்களுக்கு மனமுருக எனது அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவரது  இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு எனது நண்பருடன் திரும்பினேன். எனது ஊரில் அனைவரும் அவரைக்குறித்த பல்வேறு தகவல்களைக் கூறி  அவரை  நினைவு கூர்ந்தனர்.

    முன்பெல்லாம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைஎழுதுவதற்கு விளம்பரம் வந்தால் அதில் கல்வித் தகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் பி.லிட்.,  நீங்கலாக என்று குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் படித்தால் அரசுத்தேர்வுகளை எழுத முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மூதறிஞர் தனது முயற்சியால் அதனைப் போக்கி பி.லிட். பட்டம் பயில்வோரும் தேர்வெழுதும் நிலையைக் கொண்டுவந்தார்.  இது பலரது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொணர்ந்தது. எங்கள் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபையில் நடைபெற்ற மூதறிஞரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எங்கள் ஊர்க்காரர்களும் பலஊர்களிலும் இருந்து வந்த தமிழறிஞர்களும் மூதறிஞரின் சாதனைகளை நினைவுகூர்ந்தனர்.  அப்போதுதான் அவரது பெருமைகள் பல தெரியவந்தன.

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் மூதறிஞர். அதோடு மட்டுமல்லாது மூதறிஞர்  எழுதிவைத்த உயிலில் தனதுசொத்தில் ஒரு பங்கினை எங்கள் ஊர்  ஏழை எளியவருக்கு உதவி செய்வதற்கு எழுதி வைத்துள்ளதை அறிந்து உள்ளம் நெகிழ்ந்தேன். கிடைப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு போகும் இன்றய உலகில் இத்தகைய மாமனிதர்  வாழ்ந்திருக்கின்றாரே என்று எண்ணி வியந்தேன். பண்டித ஜவகர்லால் நேரு இந்தியத் திருநாட்டிற்காகத் தாம்வசித்த வீட்டைக் கொடுத்ததைப் போன்று மூதறிஞர் தாம் நேர்மையாக உழைத்துச்சேர்த்த செல்வத்தைத் தாம் பிறந்த ஊருக்கென்று எழுதி வைத்தார்.

    மூதறிஞரின் இத்தகைய செயல் காலம் உள்ளளவும் சிவபுரிக்காரர்களின் உள்ளத்தில் நின்று நிலைத்திருக்கும். அவர்  பெயரால் இன்றும் பல நலத்திட்டஉதவிகள் மூதறிஞரின் பிறந்த நாளில் அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  இந்த நூற்றாண்டு விழாவில் அவரது நினைவுகள் பலசுழன்று சுழன்று என்னுள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. அவர்  எங்களுக்கு ஒரு நூற்பாவைக் கூறி விளக்கமளித்த பாங்கு இன்றும் மறக்க முடியாத நிகழ்வாகவேஉள்ளது.

    மூதறிஞரிடம் பாடம் கேட்ட அந்த ஒருசில மணித்துளிகள் வாழ்நாளில் மறக்கமுடியாதவையாகும்.  மூதறிஞர்  செம்மலார் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வராக மூதறிஞர் விளங்கினார். கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியை வளர்த்தெடுத்து அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கும் கல்விக் கண்ணைத்திறந்து வைத்த அந்த மாமேதையின் பெயரை மேலைச்சிவபுரி மட்டுமல்ல தமிழ்கூறும் நல்லுலகமும் என்றும் கூறிக் கொண்டே இருக்கும். அதில் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.

    ***

    முனைவர்  சி.சேதுராமன்
    தமிழாய்வுத்துறைத் தலைவர்
    மாட்சி தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி) புதுக்கோட்டை.

    மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

     

     

    Share
  • என்று காண்​போம் இனி?!

    தமிழண்ணலுக்கு இரங்கற்பா

    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    நல்​லோரும் வல்​லோரும் நயமாகப் பாராட்ட
    நலமாய் தமிழ்வளர்த்த நாயக​னே – எல்​லோரும்
    பார்க்க ஏங்க விட்டாய்  உம்​மை
    என்று காண்​போம் இனி?

    ​நெற்குப்​பை ​பெற்​றெடுத்த பூங்குன்​றே எம்​மைச்
    ​சொற்குப்​பை ஆக்கிவிட்டுச் ​சொர்க்கம் ஏகிவிட்டாய்
    நன்றாய்த் தமிழ்வளர்த்த அண்ண​லே உம்​மை
    என்று காண்​போம் இனி?

    ​மே​லைச் சிவபுரியில் ​மேன்​மைமிகு கல்வியி​னை
    ​மேன்​​மை யுறச்​செய் தா​யே – ​மே​லை
    நா​டெங் கும்தமிழ்ச் ​சே​​யைக் காத்தஉ​மை
    என்று காண்​போம் இனி?

    தாலாட்டுத் தந்தாய் காதல் வாழ்வும்
    தந்தாய் நன்னூல் உ​ரைத​னை​யே -​ பாராட்டத்
    தந்து தண்டி யு​ரையும் தந்தஉ​​மை
    என்று காண்​போம் இனி?

     

     

    Share
  • யோகக் க​லை​யை வளர்த்​தெடுத்த பதஞ்சலிமுனிவர்

    மு​னைவர் சி.​ சேதுராமன்.

    Patanjaliயோகக் க​லை​​யை வளர்த்​தெடுத்தவர்களுள் பதஞ்சலி முனிவர் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். மக்களி​டை​யே அவர் குறித்து பல்​வேறு புராணக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதஞ்சலி முனிவரின் காலம் தொன்மையானது. இவர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாகவும் கூறுவர். இவ​ரைப் பற்றிய புராணக் க​தை​யொன்று மக்களி​டை​யே வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.

    பதஞ்சலி முனிவ​ரைப் புராணங்கள் திருமாலின் படுக்​கையாக விளங்கும் ஆதி ​சேஷனின் அவதாரம் என்று குறிப்பிடுகின்றன. திருமால் மண்ணுலகில் அவதாரங்கள் செய்ய வந்தபோது இவர் முனிவராக அவதாரம் செய்வதாகவும் கூறுகின்றனர்.

    பதஞ்சலி முனிவரின் வரலாறு:
    பாற்கடலில் பரந்தாமன் பள்ளி​கொண்டிருந்த​போது அவர் சிவ​பெருமானின் நடனத்தைத் தன் மனக் கண்களால் கண்டு மகிழ்ந்து ​கொண்டிருந்தார். திருமாலின் மகிழ்ச்சியால் அவரின் உடல் எ​டை திடீ​ரென்று அதிகரித்தது. இத​னை உணர்ந்து வியந்த ஆதி​சேடன் இதற்கான காரணம் என்ன என்று திருமாலிடம் ​கேட்டார்.

    ஆதி​சேடனின் வினாவி​னைக் ​கேட்ட திருமால் அ​னைத்திற்கும் மூலாதாரமாக விளங்கக் கூடிய சிவ​பெருமானின் ஆனந்தமயமான நடனக் காட்சி​யை உள்ளத்தில் கண்ட​தையும் அதன் அரு​மை ​பெரு​மை​யையும் விளக்கமாக எடுத்துக் கூறி அதனால்தான் தான் மகிழ்ந்ததாகவும் அதன் காரணமாத் தன் உடல் எ​டை அதிகரித்ததாகவும் கூறியருளினார்.

    திருமாலின் கூற்​றைக் ​கேட்ட ஆதி​சேடன் மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்த​தே ​பெருங்களிப்​பைத் தருமானால் இ​றைவனின் திருநடனத்​தை ​நேரில் கண்டு வணங்கினால் எத்த​கைய பரவச நி​லை ஏற்படும் என்று உணர்ந்து தானும் இ​றைவனின் ஆனந்த நடனத்​தைக் கண்டு வணங்க ​வேண்டும் என்று தனது விருப்பத்​தைத் திருமாலிடம் எடுத்து​ரைத்தார்.

    திருமாலும் தாம் கண்டு அனுபவித்து மகிழ்ந்த காட்சி​யை ஆதி​சேடனும் கண்டு மகிழ ​வேண்டும் என்று எண்ணி அவ​ரைச் சிதம்பரத்திற்குச் ​சென்று இறைவ​னைக் கண்டு வணங்கி வருமாறு கூறுகின்றார்.

    இ​றைவ​னது ஆனந்த நடனத்​தைக் கண்டு வணங்க விருப்பமுற்ற ஆதிசேஷன் தான் ஒரு முனிவரின் மகனாகப் பிறப்பதற்குத் திருவுளம் ​கொண்டார். அதன்படி ஆதி​சேடன் பிரம்மாவின் கண்ணிலிருந்து ​தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவதாகத் திகழ்பவருமாகிய அத்திரி முனிவருக்கும் மும்மூர்த்திகளையும் குழந்​தைகளாக்கிய அனுசூயா​தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அதிலும் இவர் மனிதத் த​லையும் பாம்பின் உடலும் ​கொண்டவராகப் பிறந்தார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    பதஞ்சலி – ​பெயர்க்காரணம்:
    தானும் நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன்.அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக் கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினார். மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். அவ​ரைக் கண்டு வணங்கிய ஆதி​சேடன் தான் தங்களது ஆனந்தத் தாண்டவ நடனத்​தைக் காண ​வேண்டும். இது​வே யான் ​வேண்டும் வரம் என்றார். அத​னைக் ​கேட்ட சிவ​பெருமான், “ஆதி​சேட​னே! நீ அத்திரி முனிவருக்கும் அனுசூயைக்கும் குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து, சிதம்பரம் அடைவாயாக. அங்கே என் நடனக் காட்சி​யைக் காண்பதற்குத் தவம் ​செய்து ​கொண்டிருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம்“ என்று இறைவன் அருள் செய்து மறைந்தார்.

    அதன்படி ஆதி​சேடன் அத்திரி, அனுசுயா​தேவி இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது பிறப்பு பற்றி ​வே​றொரு க​தையும் வழங்கப்படுவது சிந்த​னைக்குரியது. சிவ​பெருமானின் வரம் காரணமாக ஆதிசேடன் ஒரு நாள் சிவ​பெருமா​னைத் தியானித்துக் ​கொண்டு இ​றைவனிடம் கையேந்திக் ​கொண்டிருந்த அனுசூயையின் கைகளில் விழுந்தார். அத​னைக் கண்ட அனுசுயா​தேவி ஆதி​சேட​னைச் சாதராணப் பாம்​பென்று எண்ணித் தனது கையை உதறிவிட ஆதி​சேடன் அனுசுயா​தேவியின் பாதத்தில் விழுந்தார். இங்ஙனம் பாதத்தில் விழுந்ததாலும், இ​றைவ​னை வணங்கிக்(அஞ்சலித்த) ​கொண்டிருந்த ​கைகளில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக் காரணப் பெயர் பெற்றார் என்ற க​தையும் வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வாறு விழுந்த ஆதி​சேட​​னைப் பின்னர் அனுசுயா​தேவி தமது குழந்​தையாக வளர்த்து வந்தார். பதஞ்சலி முனிவர் வளர்ந்தவுடன் இ​றைவனின் திருநடனத்தைக் காண்பதற்காகச் சிதம்பரம் ​நோக்கிச் ​சென்றார். அங்கு வியாக்கிரபாதருடன் ​சேர்ந்து சிவ​பெருமானின் திருநடனத்​தைக் கண்டு மகிழ்ந்தார்.

    இப்பதஞ்சலி முனிவர், திருமூலர் உள்ளிட்ட எண்மருக்கு ​யோகக் க​லையி​னை நந்தி​தேவர் அருளிச் ​செய்ததாகவும் அவர்களிருவரும் நந்தியிடம் இருந்து கற்ற க​லை​யை மற்றவர்களுக்குக் கற்றுக் ​கொடுத்ததாகவும் கூறுகின்றனர். திருமூலர் இத​னை,

    “நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
    என்றிவர் என்னோடு எண்மருமாம்!”
    என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

    நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் இவற்​றை எல்லாம் எழுதியது ஒருவரே என்பது அறிஞர் பலரின் முடிந்த முடிவாகும்.

    பதஞ்சலி முனிவர் ஆதி​சேடன் அவதாரமாகத் தோன்றியவர். அதனால் பதஞ்சலி முனிவரின் விஷமூச்சுக்காற்றுப் பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் மாணவர்களுக்கு ​நேரி​டையாக அல்லாது அசரீரியாகவே க​லைக​ளைக் கற்றுக் ​கொடுத்து வந்தார். மாணவர்களால் அவ​ரைப் பார்க்க முடியாது.

    இந்நி​லையில் பதஞ்சலி முனிவருக்குத் திடீ​ரென்று ஓரா​சை மனதினுள் எழுந்தது. தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலைத் தம்முடைய மாணவர்களுக்குத் தாமே நேரி​டையாக இருந்து கற்றுக் ​கொடுக்க வேண்டும் என்ப​தே அவ்வா​சையாகும்.

    அவரது எண்ணப்படி ​பெரிய தி​ரை​யொன்​றைத் தமக்கும் மாணவர்களுக்கும் இ​டையில் ​தொங்கவிடுமாறு கூறினார். தி​ரை​யைத் தூக்கி யாரும் தன்​னைப் பார்க்கக் கூடாது என்று மாணவர்களுக்குக் கட்ட​ளையிட்டார். அவரது ஏற்பாட்டின்படி பாடம் ​வெகு சு​வையாகச் ​சென்று ​கொண்டிருந்தது. பலநாள்கள் மாணவர்கள் பாடங்​கேட்டனர்.

    இவ்வாறு இருக்​கும்​போது ஒருநாள் அம்மாணவர்களுள் ​கெளடபாதர் என்பவ​ரை மட்டும் பணி காரணமாக ​வெளியில் அனுப்பிய பதஞ்சலி முனிவர் மற்ற மாணவர்களுக்குப் பாடஞ் ​சொல்லலானார். மாணவர்கள் தம்​மை மறந்து பாடங்​கேட்டனர். அப்​போது அவர்கள் இத்த​கைய ஆசிரிய​ரைத் தாம் ​நேரி​டையாகக் காணாது இருக்கின்​றோ​மே மனத்தில் வருத்தம் எழத் தி​ரை​யை விலக்கி அ​னைவரும் அவ​ரைப் பார்க்க முடிவு ​செய்து அங்ஙன​மே தி​ரை விலக்கிப் பார்த்தனர்.

    அப்​போது பதஞ்சலி முனிவரின் பார்​வையும் கடும் விஷமும் பட்டு அவர்கள் அ​னைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டனர். ஆசிரியர் கூறிய அ​னைத்துப் பணிகளையும் முடித்து அங்கு வந்த கௌடபாதர் அங்கு நிகழ்ந்த​தை எண்ணி வருந்தினார். பின்னர் பதஞ்சலி அவ​ரைத் ​தேற்றி அவருக்குத் தாம் கற்ற க​லைகள் அ​னைத்​தையும் கற்றுக் ​கொடுத்தார்.

    கௌடபாதரும் தனது ஆசிரியரிடமிருந்து அனைத்துக் க​லைக​ளையும் கற்றுத் ​தேர்ந்தார். பதஞ்சலி முனிவர் அதன் பின்னர் யோக சூத்திரத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோகம்புரிந்தார். அப்​போது அவரது ஆழ்மனதில் தனது ஆதி​சேட அவதாரத்தின் மகிழ்ச்சியான காட்சி​யைக் கண்டு ​மெய்விதிர்விதிர்த்தார். சிவ​பெருமா​னைத் தியானித்து தில்​லைச் சிதம்பரத்தி​லே​யே இ​றைவனுடன் இரண்டறக் கலந்து சமாதிநி​லை அ​டைந்தார். இவர் பாணினி சூத்திரத்திற்கு விளக்கவுரை (பாஷ்யம்) எழுதினார். பதஞ்சலி யோக சூத்திரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.

    புஷ்ய மித்திரர் இவருடைய சம காலத்தவராகக் கருதப்படுகின்றார். புஷ்ய மித்திரரின் காலம் கி.மு.3-ம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் பதஞ்சலி முனிவரின் காலமும் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என்று கூறுவர். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சமஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. ஆனால் இதற்கு அடிப்ப​டையான சான்றுகள் ஏதும் இல்​லை என்பது ​நோக்கத்தக்கது. இ​வை எல்லாமே யூகங்களின் அடிப்ப​டையில் அ​மைந்த​வை என்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.

    திருமூலர் திருமந்திரம் என்பது ​யோக​நெறிக​ளைக் குறிப்பிடுகின்றது. திருமூலர் திருமந்திரம் தனித்த​தொரு ​யோக நூலாகத் திகழ்கின்றது. பதஞ்சலி முனிவரின் ​யோகசூத்திரம் ​யோகத்​தை விளக்கும் ​யோகநூலாக விளங்குகின்றது. இருவரும் தனித்தனி​யே நூல்க​ளை இயற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி முனிவரின் ​யோகசூத்திரத்​தைப் பார்த்​தே திருமந்திரத்​தை திருமூலர் எழுதினார் என்பது சற்றும் ​பொருந்தாத் தன்​மையு​டைய கூற்றாகும்.

    பதஞ்சலி முனிவரும், திருமூலரும் கூறிய ​யோக ​நெறிகள் அவரவர் ​பெயர்களி​லே​யே கூறப்பட்டு வருகின்றன. ​எது எவ்வாறிருப்பினும் பதஞ்சலி முனிவரும் திருமூலரும் உலகிற்கு ​யோக​நெறிக​ளை வழங்கிய பிதாமகர்களாக மூலவர்களாக விளங்குகின்றனர். இவர்களது ​யோக​நெறிகள் உலக மக்க​ளை உய்விக்க வந்த வாழ்க்​கை ​நெறிகளாக விளங்குகின்றன.

    ____________________________________________________________________________________

    மு​னைவர் சி.​ சேதுராமன்
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை
    Malar.sethu@gmail.com

    Share
  • யோக நெறிகளின் பிதாமகர் திருமூலர்

    — முனைவர் சி.சேதுராமன்.

    Thirumoolar_Nayanarயோக நெறிகளில் மிகச் சிறந்தவராக விளங்குபவர் திருமூலர் ஆவார். அவரே யோகநெறிகளின் தந்தையாக விளங்குகின்றார். யோகநெறிகளைத் தான் மட்டுமே பயன்படுத்திப் பயன் பெறாது அனைவருக்கும் அந்நெறியைப் போதித்து அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவராகத் திருமூலர் திகழ்கின்றார். இவர் எழுதிய திருமந்திரம் வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கும் பெருமை மிகுந்த யோக நூலாகத் திகழ்கின்றது.

    திருமந்திரம் பத்தாம்திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டுகாலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்று கூறுவர். திருமூலர் ஒரு யோகியாவார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருட்களையும் அடைய முடியும் என்ற உயர் யோக நெறியைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றார். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும்.

    கூடுவிட்டுக் கூடுபாய்தல்:
    தன் உடலை விட்டுவிட்டு வேறொரு உடலில் புகுவதையே கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்று சித்தர்கள் மொழிவர். இதனைப் பரகாயப் பிரவேசம் என்று குறிப்பிடுவர். பர – வேறு, காயம் – உடல், பிரவேசம் – புகுதல். இதன் பொருள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டுநீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததாக வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப்பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர்உதாரணமாக விளங்குகிறது.

    திருமூலரின் வரலாறு:
    நந்தியெம்பெருமான் மாணாக்கரில் பதஞ்சலியும், வியாக்கிரமரும் கயிலையினின்றும் தென்னாடு வந்து தில்லையம்பலத்தில் சிவபெருமானுடைய நடன தரிசனம் காண்பதற்காக வந்த காலத்து, திருமூலநாயனாரும் தம்முடைய சொந்த உடம்புடன் (அஃதாவது மூலனுடைய சரீரத்தில் புகுவதற்கு முந்தி) அவர்களுடன் கூடவே வந்து, நடனக் காட்சியைக் கண்டு களித்துப் பின் கயிலைக்கு ஏகி, அங்குத் தவத்தினில் இருந்தார் என்பதை,

    “செப்பும் சிவாகமம் என்னுமப் போர்பெற்று
    அப்படி நல்கும் அருணந்தி தாள்பெற்றுத்
    தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
    ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே.”
    “இருந்தேனிக் காயத்தில் எண்ணிலி கோடி
    இருந்தேன் இராப்பகல் அற்ற விடத்தே
    இருந்தேன் இமயவர் ஏத்தும் பதத்தே
    இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.”
    என்ற தமிழ் மூவாயிரச் செய்யுட்களால் அறியலாம்.

    “இமயவர் ஏத்தும் பதத்தே” என்றதாலும், “என் நந்தி இணையடிக் கீழே” என்றதாலும். நாயனார் தில்லைக்கூத்தைக் கண்டு களித்தபின் கயிலை சென்று தவம் இயற்றினார் என்பது தெளிவாகின்றது.

    திருமூலர் பதஞ்சலி வியாக்கிரமருடன் தென்னாடு போந்தது முதல் தடவையாகும். அப்போது அவருக்குத்திருமூலர் என்ற பெயர் கிடையாது. இரண்டாவது முறையாக அவர் கயிலையினின்றும் பொதியையை நோக்கிவரும்போது, சோழநாட்டுச் சாத்தனூரில் பசுக்கள் மேய்க்கும் மூலன் இறந்து கிடக்கக் கண்டு, தம் உடலை ஓர்அரசமரப் பொந்தில் வைத்துவிட்டு, தம் உயிரை மூலன் உடம்புக்குள் புகுத்தி மூலனாக எழுந்த பின்னர் அப்பெயர் ஏற்பட்டது ஆகும். யோகநெறியை நந்திதேவரிடமிருந்து கற்ற திருமூலர் சிவ யோகியாகவே முதலில் அறியப்படுகிறார்.

    மூலன் உடலில் புகுந்தது: 
    கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அட்டமா சித்திகளையும் கைவரப் பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கையிலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும்பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

    செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

    பின்னர் திருவாவடுதுறையை அடைந்தார். அங்கு இறைவனை வணங்கினார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன், அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.

    அப்போது அதன் வழியாகச் சென்ற சிவயோகியார் அதனைக் கண்டார், பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

    மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகிக் கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார்.

    அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிரூபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

    சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்றிருந்து, நன்னெறிகளை விளக்கும்‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார்.

    தாம் வீடுபேறு அடைவதற்கு முன்னர் “திருமந்திரத்தைத்” தம்முடைய ஏழு சீடர்களுக்கும் கற்பித்து, உலகில் பல மடங்களை ஏற்பாடு செய்து பதி, பசு, பாச இலக்கணங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்குமாறு செய்து, திருமந்திரம் எழுதப்பட்ட ஒரு சுவடியைத் திருவாடுதுறைத் திருக்கோயிலின் முன்னர் இருக்கும் பலிபீடத்தின் கீழ்ச் சேமித்து வைத்த பின்னரே இறைவனோடு கலந்தார்.

    திருமூலருக்கு ஏழு சீடர்கள் உண்டு என்பதும், அவர் ஏழு மடங்களை நிறுவினார் என்பதும்,

    “மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
    இந்த எழுவரும் என்வழி யாமே.”
    “வந்த மடமேழு மன்னும்சன் மார்க்கம்
    முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை.”
    என்ற திருமந்திரச் செய்யுட்களால் அறியலாம்.

    திருமூலரது நூலுக்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மனித உடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளார். அதனால் பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்றுவழங்கப்பட்டது.

    திருமந்திரத்தை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார். இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தரநாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் சிவபெருமானின் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும்.

    திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரத்தில்

    “மந்திரங் கொண்டு வழிபடு வோர்க்குச்
    சுந்தர நாதன் சொல்லிய மந்திரம்
    நந்திஎந் நாதன் நாவார ஓதினன்
    பைந்தொடி மேனிப் பயனது தானே.”
    “வந்தமட மேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
    முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
    தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
    சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே.”
    என்று குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

    இச்செய்யுள் சுந்தரநாதருடன் ஒருங்கு கற்ற ஒருவரால் பாடப்பெற்றது. இவருக்கு நாதன் என்ற பட்டம் நந்தியெம் பெருமானால் கொடுக்கப்பட்டது. இதனை,

    “நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றொம்.”
    என்ற தமிழ் மூவாயிரச் செய்யுள் விளக்குகிறது.
    திருமூலர் மூலனின் உடலில் புகுந்ததை,
    “அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
    புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானைப்
    பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
    இகலிடத் தேயிரு ணீங்கிநின் றேனே.” (141)
    என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.

    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரா?
    திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருந்தாரா? என்று பலருக்கும் ஐயம் எழும். அவர்களது ஐயத்தைப் போக்குகின்ற வகையில்,

    “வளியினை வாங்கி வயத்தி லடக்கில்
    பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
    தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
    வளியினும் வெட்டு வளியனு மாமே.”(551)
    “நீல நிறனுடை நேரிழை யாளொடும்
    சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
    ஞால மறிய நரைதிரை மாறிடும்
    பாலனு மாவர் பராநந்தி யாணையே.”(718)
    என்றும்,

    “எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
    அங்கே அதுசெய்யில் ஆக்கைக்கு அழிவில்லை.”(552)
    “அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை.”(715)
    “நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
    வாட்டமு மில்லை மனைக்கும் அழிவில்லை.”(584)
    “ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
    பேராமற் கட்டிப் பெரிதுண வல்லிரேல்
    நீரா யிரமும் நிலமா யிரத்தாண்டும்
    பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.”(702)
    என்றும்,

    “காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
    கூற்றை யுதைக்கும் குறியது வாமே.”(553)
    மூல நாடி மூக்கட் டலக்குச்சியுள்
    நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காண்
    மேலை வாயில் வெளியுறக் கண்டபின்
    காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.”(602)
    என்றும்,

    “உடம்பா ரழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”(704)
    என்றும் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

    இப்பாடல்களில் திருமூலர் தம் அனுபவத்தைக் கூறியுள்ளார். “தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”என்பது ஆன்றோர் கொள்கையாதலால், உலகத்தார் அறிந்து வாழ்வாங்கு வாழ்வதற்காக நீண்ட நாள் வாழ்கின்ற நெறிகளைத் திருமூலர் தம் நூலின்கண் தெளிவுறுத்தியுள்ளார்.

    திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாக அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்திக் கூறியுள்ளார்.

    அகத்தியர், 12 காண்டத்தில்
    1.திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
    2. திருமூலர் சிற்ப நூல் – 1000
    3. திருமூலர் சோதிடம் – 300
    4. திருமூலர் மாந்திரிகம் – 600
    5. திருமூலர் சல்லியம் – 1000
    6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
    7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
    8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
    9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
    10. திருமூலர் பெருங்காவியம் – 1500
    11. திருமூலர் தீட்சை விதி – 100
    12. திருமூலர் கோர்வை விதி – 16
    13. திருமூலர் தீட்சை விதி – 8
    14. திருமூலர் தீட்சை விதி – 18
    15. திருமூலர் யோக ஞானம் – 16
    16. திருமூலர் விதி நூல் – 24
    17. திருமூலர் ஆறாதாரம் – 64
    18. திருமூலர் பச்சை நூல் – 24
    19. திருமூலர் பெருநூல் – 3000
    20.திருமூலர் ஞானோபதேசம் 30
    21.திருமூலர் நடுவணை ஞானம் 30
    22.திருமூலர் ஞானக் குறி 30
    23.திருமூலர் சோடச ஞானம் 16
    24.திருமூலர் ஞானம் 11
    25.திருமூலர் குளிகை 11
    26.திருமூலர் பூஜாவிதி 41
    27.திருமூலர் வியாதிக் கூறு 100
    28. திருமூலர் முப்பு சூத்திரம் 100…
    என்ற நூல்களும் இவரால் இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை ஆய்விற்குரியது. ஆனாலும் திருமந்திரமே திருமூலரின் ஒப்பற்ற நூலாக அனைவராலும் போற்றப்படுகின்றது.

    திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார்.

    திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாகக் கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமந்திரத்தில் உடலோம்பு நெறிகளாகப் பல்வேறு யோகநெறிகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    ராஜயோகம், ஹடயோகம், மந்திர யோகம், சந்திர யோகம், ஆசனங்கள், அட்டாங்க யோகம், பரியங்க யோகம் போன்ற யோகநெறிகள் திருமூலரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. எளிமையாக யோகநெறிகளைத் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளமை சிறப்பிற்குரியது. முதன் முதலில் யோகநெறிகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் இயம்பிய பெருமை திருமூலரையே சாரும் எனலாம். அதனால்தான் திருமூலரை யோகநெறிகளின் பிதாமகர் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவருக்குப் பின்னர் பலர் யோகநெறிகளை எடுத்துரைத்திருந்தாலும் அனைத்திற்கும் மூலமாக அமைந்திருப்பது திருமூலர் குறிப்பிடும் யோகநெறிகளேயாகும் என்பது வெள்ளிடை மலையாகும்.


    முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • வியப்பில் ஆழ்த்தும் குறள் அமைப்பு

    மு​னைவர் சி.​சேதுராமன்.

    பல்லாண்டு காலங்கள் ஆனாலும் பல நூல்கள் நீடித்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அந்நூலின் அமைப்பு, அழகு, எளிமை ஆகியவையே என்று கூறலாம். ஒரு நூலின் அமைப்பே அந்நூலைக் காலங்கடந்தும் மக்களின் மனதில் கொண்டு சேர்த்து நிலையாக நிறுத்துகிறது. அவை என்றும் இறவாப் புகழ் கொண்ட நூல்களாக விளங்குகின்றன. இறவாப் புகழடைந்த நூல்களுள் கட்டமைப்பில் திருக்குறள் சிறந்து விளங்குகின்றது.

    ஒவ்வொரு திருக்குறளும் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய விளக்கத்தைத் தருவனவாக உள்ளது. அதிலும் சில திருக்குறள்களின் பொருள் அக்குறள்களிலேயே அமைந்திருப்பது வியப்பிலும் வியப்பாகும்.

    திருக்குறள் எளிமையாக, அதிலும் குறிப்பாக கற்பார் மனங்கொளத்தக்க வகையில் பொருள் புலப்படும் வண்ணம் அமைந்திலங்குகின்றது.

    குறளின் அமைப்பு:
    குறள்கள் முதலடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீர்ளையும் கொண்டு அமைந்துள்ளன. இவை குறளுக்குப் புதியதொரு பொருள் விளக்கத்தையே அளிக்கின்றன. திருக்குறளின் முதற்குறளாக அமைந்துள்ள,
    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”
    எனும் கடவுள் வாழ்த்துத் திருக்குறள் எளிமையாகப் பொருள் புரியும் வகையில் அமைந்துள்ளது.

    இக்குறளின் அமைப்பைச் சற்று மாற்றியமைத்தால் பொருள் எளிதில் புலப்படும்.
    “எழுத்தெல்லாம் அகர முதல.
    உலகு ஆதிபகவன் முதற்றே”
    இவ்வாறு மாற்றியமைத்துப் பாருங்கள். குறளின் பொருள் எளிதில் விளங்கும். எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டு விளங்குகின்றன. உலகம் ஆதிபகவனாகிய இறைவனை முதலாகக் கொண்டு இயங்குகின்றன என்று குறளே எளிதில் நமக்குப் பொருளை உணர்த்துவது சிறப்பிற்குரியதாகும்.

    அடிமாற்றப் பொருள் தருவன:
    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்”
    இத்திருக்குறளை,
    “நிலைமிசை நீடுவாழ்வார்
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்”
    என்று கீழடி மேலடியாகக் கொண்டு படித்தாலும் பொருள் மாறாது கற்பார்க்குப் பொருள் தெளிவாகின்றது.

    இதனைப் போன்றே,
    “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
    திண்ணி யராகப் பெறின்”
    எனும் குறளை,
    “எண்ணியர் திண்ணியராகப் பெறின்; எண்ணிய எண்ணியாங்கு எய்துப.”
    என்று அடிகளை மாற்யினால் குறளின் பொருள் நன்கு விளக்கம் பெறுகிறது.

    மேலும்,
    “ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித்
    தாளாது உஞற்று பவர்”
    என்ற குறளை,
    “உழைவின்றித் தாளாது உஞற்றுபவர் ஊழையும் உட்பக்கம் காண்பர்” என்று அடிகளைச் சற்று மாற்றினால் எளிதில் பொருள் விளக்கம் பெறுகின்றது.

    காலம் அறிதல் அதிகாரத்தில் இடம்பெறும்,
    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்”
    எனும் குறளின் அடிகளை,
    “காலம் கருதி இடத்தாற் செயின்; ஞாலம் கருதினும் கைகூடும்”
    என்று மாற்றினால் குறளின் உட்பொருள் எளிதில் நமக்கு விளங்குகின்றது.

    “காலங் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்”
    எனும் குறளை,
    “ஞாலங் கருதுபவர் கலங்காது காலங்கருதி இருப்பர்” என்று சொற்களைச் சிறிது மாற்றி அடிகளையும் மாற்றினால் எளிதான பொருள் நம் நெஞ்சில் நிறைகின்றது.

    சொற்களை முன்னும் பின்னும் மாற்றுதல்:
    அடிகளை மட்டுமல்லாது குறளில் உள்ள சொற்களை முன்பின்னாகவும் மேலது கீழாகவும் மாற்றினால் புதிய புதிய பொருளைத் தருவதாகச் சில குறட்பாக்கள் அமைந்துள்ளன, இதற்குச் சான்றாக,
    “கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக”
    என்ற குறட்பா அமைந்துள்ளது.
    இக்குறளானது,
    1. கற்க
    2. கற்க கற்க
    3. கசடறக் கற்க
    4. கற்பவை கற்க
    5. கற்றபின் கற்க
    6. நிற்க கற்க
    7. அதற்குத் தகக் கற்க.
    என்று கற்க என்னும் சொலலை மட்டும் குறளின் ஒவ்வொரு சொல்லுடன் முன்பின்னாக ஒட்டினால் பலவிதமான புதிய பொருளை நமக்கு அவை தருகின்றன. இக்குறட்பா ஏழுவிதமான கருத்துக்களை நமக்குத் தருகின்றது. இவ்வேழும் ஐ.நா. சபையின் கல்வி பற்றி சாசனத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    பொன்மொழி போல் விளங்கும் குறள் வரிகள்:
    வள்ளுவரின் குறள் வரிகள் பல பொன்மொழிபோன்று அமைந்து இன்பம் பயக்கின்றன. அவை பின்வருமாறு:
    1. கற்க கசடற
    2. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
    3. உள்ளம் உடைமை உடைமை
    4. எண்ணிய எண்ணியாங்கு எய்துப.
    5. கற்றிலனாயினும் கேட்க
    6. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    7. அன்றறிவாம் என்னாது அறம் செய்க
    8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
    9. தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
    10. ஊழையும் உட்பக்கம் காண்பர்
    11. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
    12. உள்ளற்க உள்ளம் சிறுகுப
    13. எனைத்தானும் நல்லவை கேட்க
    14. சொல்லுக சொல்லிற் பயனுடைய
    15. எண்ணித் துணிக கருமம்
    16. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
    17. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
    18. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்
    19. யாகாவாராயினும் நா காக்க
    20. அடக்கம் அமரருள் உய்க்கும்
    21. காக்க பொருளாக அடக்கத்தை
    22. நன்றி மறப்பது நன்றன்று
    23. மறவர்க மாசற்றார் கேண்மை
    24. அன்பின் வழியது உயிர்நிலை
    25. பெண்ணின் பெருந்தக்க யாவுள
    26. செயற்கரிய செய்வார் பெரியர்
    27. நீரின்றி அமையாது உலகு
    28. முயற்சி திருவினையாக்கும்
    29. உடையர் எனப்படுவது ஊக்கம்
    30. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
    31. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
    32. உள்ளத் தனையது உயர்வு
    33. ஞாலம் கருதினும் கைகூடும்
    34. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்
    35. நல்லினத்தின் ஊங்கு துணையில்லை
    36. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்
    37. அறிவு அற்றம் காக்கும் கருவி
    38. அறிவுடையார் ஆவதறிவார்
    39. அறிவுடையார் எல்லாம் உடையார்
    40. கேடில் விழுச்செல்வம் கல்வி
    41. கண்ணுடையர் என்பவர் கற்றோர்
    42. கற்றனைத் தூறும் அறிவு
    43. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்
    44. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
    45. பெருக்கத்து வேண்டும் பணிதல்
    46. நலன் வேண்டின் நாணுடைமை வேண்டும்
    47. அற்றால் அளவறிந்து உண்க
    48. மிகினும் குறையினும் நோய் செய்யும்
    49. உண்ணற்க கள்ளை
    50. நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை
    51. மருவுக மாசற்றார் கேண்மை
    52. முகம் நக நட்பது நட்பன்று
    53. நகுதற் பொருட்டன்று நட்டல்
    54. நாடென்ப நாடா வளத்தன
    55. இடுக்கண் வருங்கால் நகுக
    56. இடுக்கண் களைவதாம் நட்பு
    57. பற்றுக பற்றற்றான் பற்றினை
    இவையும் இவை போன்ற பிற வரிகளும் ஒரு வரியிலமைந்த பொன்மொழிகளாக அமைந்துள்ளன. இவ்வரிகள் வள்ளுவர் உரைத்த திருக்குறளின் பிழிவாக அமைந்து இன்பம் பயக்கின்றன.

    இங்ஙனம் குறளின் அமைப்பானது வியப்புறும் வகையில் அமைந்து புதுப்புதுப் பொருள் விளக்கங்களைத் தருகின்றன. குறளின் ஒவ்வொரு வரியும் ஒரு புதுவிதமான உள்ளார்ந்த பொருளைத் தந்து கற்பார்க்கு வியப்பையும் இன்பத்தையும் அளிக்கின்றன.

    முனைவர் சி.சேதுராமன்,
    தமிழாய்வுத்துறைத் தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்கோட்டை-1
    E-mail: sethuramansingaram@yahoo.com

    Share
  • தொல்காப்பியத்தில் பாடாண்திணை

    — முனைவர்  சி.சேதுராமன்.

    தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் களவு, கற்பு என்ற இயல்களும் பொருளியல் என்பது ஐந்தாவது இயலாகவும் அமைந்துள்ளது. யாப்பிலக்கணத்தையும் அணியிலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தொடு சேர்க்காமல் பிற இலக்கணத்தை; தனித்தனியாகக் கூறுவர். ஆனால் தொல்காப்பியர் யாப்பிலக்கணத்தைச் செய்யுளியல் என்றும் அணி இலக்கணத்தை உவமயியல் என்றும் கூறியுள்ளார். ஆறாவதாக மெய்ப்பாட்டியலும் ஏழாவதாக உவமவியலும் எட்டாவதாகச் செய்யுளியலும் ஒன்பதாவதாக மரபியலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன.

    அகத்திணை – புறத்திணை
    தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது. அவ்வொழுக்கம் தொடர்புடைய மனைவி, மக்கள் உற்றார், உறவினரோடு ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், அயலார், பொதுமக்கள் என்பவரோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. திணை என்பது ஒழுக்கம் என்பதால் அகவொழுக்கம் அகத்திணையிலும் புறவொழுக்கம் புறத்திணையிலும் கூறப்பட்டன.

    புறவொழுக்கத்தைக் கூறும் புறத்திணையியலில் முதலாவதாகக் கூறப்படும் வெட்சி என்னும் ஒழுக்கம், அறவழியில் நடக்கும் மன்னன் ஒருவன்தான் படையெடுத்துச் செல்லும் செய்தியைத் தன் பகைவனுக்கு முன்னரே அறிவிப்பதாகும். திடீரென்று படையெடுத்துப் போனால் பகைவர் நாட்டிலுள்ள பெண்டிரும், பிணியுடையோரும், சிறுவரும் பிறரும் அஞ்சி அல்லலுற்று அலமருதல் வேண்டத் தகுந்ததில்லை என்ற அறவுணர்வுதான். பகைவர் எனினும் அவரிடம் அறவுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை உணர்த்துவதே வெட்சி ஒழுக்கமாகும். இத்தகைய அடிப்படை உணர்வுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    புறத்திணை இயலில் இரண்டாவதாகச் சொல்லப்படுவது வஞ்சித்திணை. வஞ்ச நெஞ்சப் பகைவனின் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வதே அது. மூன்றாவது உழிஞைத் திணை. பகை நாட்டிலுள்ள அரணை வளைத்துக் கைப்பற்றிக் கொள்வது. நான்காவது தும்பைத் திணை. போர்க்களத்தில் இருபடையும் பொருது வெற்றி தோல்வி அடைவது. ஐந்தாவது வாகைத் திணை. வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவது. ஆறாவது காஞ்சித்திணை. நிலையாமை பற்றி எண்ணிச் செயற்படுவது. ஏழாவது பாடாண்திணை. இஃது முன்னோர் கூறிய குறிப்பில் பரவலும் புகழ்தலும் செய்வது ஆகும்.

    பாடாண்திணை
    பாடாண் என்பது புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்களாற் பாடப்பெறும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். புலவராற் பாடப் பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினைப் பாடாண் எனும் சொல் உணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

    பாடாண்திணை தனக்கென ஒரு தனிநிலை பெறாது பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழுக்கு ஏற்ற ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாக அமையும். அகத்திணை, புறத்திணை இரண்டும் மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவனவாகும். ஆதலால் பாடாண் திணையும் மக்களுக்கு உரியதாகவே ஆதல் வேண்டும். இது கருதியே பாடாண் பாடல்கள் எல்லாம் மக்களில் தக்காரின் புகழாகவே வரும் என்று கூறினர்.

    பாடாண் திணையும் கைக்கிளையும்:
    பாடாண் திணைப் பகுதி கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது எட்டு வகையுடையதாகும் என்பதை,
    ‘‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
    நாடுங்காலை நாலிரண்டுடைத்தே’’(தொல்.புறத்.,20)
    என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

    கைக்கிளையில் காதற் சிறப்பு ஒருவருக்கே ஆகிவரும். அதுபோலப் பாடாண்திணையிலும் சிறப்பானது தகுதியுடைய ஒருவருக்கே உரித்ததாக வரும். கைக்கிளையில் காதற்கூற்று, பாராட்டும் தலைவனிடத்ததாகும். பாடாண்திணையில் புகழும் கூற்று புகழ்வோனிடத்திலேயே அமையும். கைக்கிளையில் இழுக்கு நீக்கித் தருக்கியலே சொல்லி இன்புறுதல் உரிது. பாடாணில் பழி தழுவாத புகழ்ச்சி ஒன்றே பயின்று வரும். கைக்கிளைக்கும் பாடாணுக்கும் நிலமும் பொழுதும் வரையறையில்லை. ஒருதலையாய் வெளிப்படையாக அமையுமதனால் படாண்திணை கைக்கிளைக்குப் புறனாக அமைந்தது.

    ஒரு நிலத்திற்கு உரியதாக அன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோன்று ஒரு பாலுக்கு உரித்ததன்றி ஒருவரை ஒருவர் ஏதேனும் ஒரு பயன் கருதிய வழிப் பாடப்பெறுவது பாடாண்திணையாகும். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாது வெளிப்படையாக வருவதுமாகிய பண்பு இவ்விரண்டிற்கும் பொருந்தும். பாட்டுடைத் தலைவன் வணங்கிப் பாடும் புகழ்ச்சியும் வேண்டப் பாடும் புலவர்கள் பரிசிற்பொருளை வேண்டும் முறையில் அமைந்தது பாடாண்திணை ஆதலால் இஃது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று.

    இல்லற வாழ்வில் ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயல்களாகிய அகவொழுக்கங்களும், அரசியல் வாழ்விலே போர் வீரர்கள் மேற்கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்றும் அறுவகைப் புறத்திணை ஒழுகலாறுகளும் ஆகிய இவ்வொழுக்கங்களை நிலைக்களமாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வனவாகும்.

    பாடாண் திணையில் பாடுதல்வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சி முதலிய ஆறு திணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளையும் செயல்களையும் நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றுந் தனிநிலைத் திணைகளாகும். பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்குறித்த திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணையாகும்.

    தலைமக்களுக்குரிய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கு அமைந்த மாந்தரது ஒழுகலாறு பாடாண் திணையாகும் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். பாடாண் அல்லாத வெட்சி முதலிய பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்புப் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றாத நிலையில் அவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்துந் திறத்தால் அவை வெட்சி முதலிய தனிநிலைத் திணைகளாகும் எனவும் அச் செயல்களைக் கருவாகக் கொண்டு புலவர்கள் பாடும்போது அங்ஙனம் தாம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக் குறிப்புப் பாடாண் என்னும் சார்புநிலைத் திணையாகும் எனவும் பகுத்துணர்தல் வேண்டும்.

    புலமையுடையோர் பலரும் தமது உரையினாலும், பாட்டினாலும் உயர்வாகப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க இல்வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற் தன்மையே தொல்காப்பியர் கூறிய பாடாண் திணை எனில் மிகவும் பொருத்தமுடையதாகும்.

    வெட்சிப் பாடாண் – வெட்சியடியாகப் பிறப்பது
    ‘‘ஒன்னர் முன்னிலை முருக்கிப் பின்னின்று
    நிரையொடு வரூஉம் என்ஐக்கு
    உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே’’(புறம்.,262)
    பகைவருடைய தூசிப் படையை முறியடித்துப் பெயர்ந்து போகும் தன் படைக்குப் பின்னே நின்று ஆநிரையோடு வருகிறான் என் தலைவன். அவனுக்கு அருகேயிருந்து உடன் வரும் வீரர்கள் அவனைக் காட்டிலும் பெரிய பொலிவு உடையவராய் உள்ளனர் என்று கூறித் தலைவனையும் வெட்சியடியாகப் புகழப்படுவதால் இது வெட்சிப் பாடாண்திணை ஆயிற்று எனலாம்.

    இவ்வாறே உழிஞைப் பாடாண் உழிஞையடியாகப் பிறப்பது:
    ‘‘ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே
    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
    குடிப்பொருள் அன்று நும்செய்கை’’ (புறம்.,45)
    என்று நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்திருந்தான். எனவே இது உழிஞையாயிற்று. கோவூர்க்கிழார், ‘‘உம்முள் ஒருவர் தோற்பினும் தோற்பது உம்குடியே! இருவரும் வெல்லுதல் இயற்கையும் அன்று; ஆதலால் நும் செய்கை உம் குடிக்குத் தக்க ஒரு செயல் அன்று’’ என்று குடியைப் புகழ்வதால் இது உழிஞைப் பாடாண்திணையாகும். இவ்வாறே பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு பாடாண்திணை வரும்.

    அமரர் கண் முடியும் அறுவகை
    பாடாண்திணையின் பகுதியாகத் தொல்காப்பியர்,
    ‘‘அமரர்கண் முடியும் அறுவகையானும்
    புரைதீர் காமம் புல்லிய வகையினும்
    ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப’’
    எனறு குறிப்பிடுகின்றார்.

    இதற்கு இளம்பூரணர், ‘‘அமரர் கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பனவற்றினும், குற்றம் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும், அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணையாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்’’ என்று உரைகூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர், அறுவகை என்பதற்கு, முனிவர், பார்ப்பார், ஆநிலை, மழை, முடிவேந்தர், உலகு என ஆறு என்று குறிப்பிடுகின்றார். இருவரும் ஒரே வகையைக் குறிப்பிடாது மாறுபட்டுக் குறிப்பிடுகின்றனர்.

    இளம்பூரணர் வணக்க வகைகளைக்(கொடிநிலை உள்ளிட்டவை வணக்க வகைகள்) கூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர் வணங்கப்படும் பொருள்களைக் (செயற்கையான தேவர்கள், முனிவர்கள், பார்ப்பார் உள்ளிட்டவை வணங்கப்படும் பொருள்கள்) குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை எழுதிய நாவலர் அவர்கள்,

    ‘‘தொல்காப்பியர் தாம் கருதிய ‘ஆறுவகை’’யினைத் தம் நூலில் எங்கு, எவ்வாறு காட்டியுள்ளார் என்பதை இரண்டு உரைகாரர்களுமே விளக்கினார் இல்லை. தாம் கூறக் கருதிய தொகைப் பொருள் இவையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல் கூறுபவரல்லர் தொல்காப்பியர்….தொல்காப்பியர் தொகை சொன்னால் வகை கூறியுமிருப்பர். வகை கூறாமல் தொகை மட்டும் கூறுவது அவர் இயல்பு அன்று. அவ்வாறு இல்லாதிருந்தால் தொல்காப்பியம் இன்றுவரை நின்றிராது. தொல்காப்பியர் முன்னர் திணை ஒவ்வொன்றிலும் பெயர் சுட்டிக் கூறியுள்ளார். அவையே வகையாம். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பன வகையாம். இந்த வகை அறுதானே, இந்த வகைக்குத்தாம் தொல்காப்பியர் தொகை கூறுகிறார். அந்தத் தொகையே அறுவகை எனப்படுகிறது” என்று குறிப்பிட்டு,

    தொல்காப்பியர் குறிப்பிடும் அமரர் என்பதற்கு,‘‘அமர் என்பது போர். அமரர் என்பது போர் செய்யும் வீரரைக் குறிக்கும். வெட்சி, ஆநிரை கொள்ளும் போர். வஞ்சி, படையெடுத்துச் செல்லும் போர், உழிஞை, அரணை வளைத்துச் செய்யும் போர். தும்பை தன் வலிமையையே தன் துணையாகக் கொண்டு செய்யும் போர். வாகை போரில் வெற்றி கொள்ளுதல். காஞ்சி, போரில் இழந்த இழப்பைக் கண்டு நிலையாமையை எண்ணுதல் இவையாவும் போர் பற்றியன. பாடாண் என்பது அப்போர் பற்றிய போர் வீரரது வீரம் குறித்து அவர்பாற் சென்று முடியும் புகழ்ச்சி. பாடாண் முன்பு குறித்த ஆறின் அடியாக வரும் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுவதேயாகும்’’ என்று குறிப்பிடுகின்றார். நாவலர் குறிப்பிடும் இதுவே பொருத்தமான உரையாக அமைந்திலங்குகின்றது.

    வழக்கில் திணைப் பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து அதனதன் கூறுபட நின்று வாழ்த்துதலும், புகழ்தலும் சொல்லுமிடத்தும் பண்டைச் சான்றோர் கூறியுள்ள இயற்பாக்களே அன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படாது என்று தொலகாப்பியர் குறிப்பிடுகிறார்.

    காமப்பகுதி:
    பாடாண் திணையில் காமப்பகுதி கடவுளோடும் மக்களிடத்தும் நீக்கார் என்று கூறுவர். (காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் மருங்கினும் என்மனார் புலவர்) இது இயற்பெயருடனும் வரலாம் என்று குறிப்பிடுவர். இக்காமப்பகுதி மக்களுக்கேயன்றி கடவுளோடு கடவுள் காதல் கொண்ட பாடாணுக்கும்(‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’-கம்ப.மிதிலை.,35 இராமன்-சீதை காதல்) கடவுள் மனிதரோடு காதல் கொண்ட பாடாணுக்கும்(‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகை யமர்ந்தன்றே’திருமுருகு.,100-102 முருகன்-வள்ளி காதல்)வரும். இவ்விரு முறையும் புலனெறி வழக்கில் வருதல் உண்டு. அதற்கு விலக்கில்லை.

    இக்காமப்பகுதி குழவிப் பருவத்தும் உரியதாகும்.(குழவி மருங்கினும் கிழவதாகும்)இதுவே பிள்ளைத் தமிழ் இலக்கிய வகைக்கு அடிப்படையாயிற்று என்பது நோக்கத்தக்கது. கடவுள்-கடவுளோடும், கடவுள் மானுடரோடும் கொள்ளும் காமப் பகுதியோடு காதற்பருவம் பெறாத சிறாரிடத்திலும் தூய காமப் பகுதி உரியதாகும்.

    பேதைப் பருவமுடைய சிறாரிடத்துக் காதற் செவ்வி கருத முடியாது. காம உணர்வு குழவிக்கில்லை. எனினும் அக்குழவியிடத்தில் தூய காதல் கொள்வாருடைய அன்பின் தன்மை பற்றிய பாடாண் அக்குழவியின் மேல் சார்த்தி வருவதே இங்கு கூறப்படுவதாகும். ஊரின் காமப் பகுதி நிகழ்தலும் உரித்து என்று கூறுவர். இதற்கு தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப் பிறப்பும் பாராட்டுதற்குரியனவாகும். அப்பாராட்டுப் புலனெறி வழக்கொடு பொருந்தும் என்பர். இதனைத் தொல்காப்பியர்,
    ‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
    வழக்கொடு சிவணிய வகைமையான’’ (புறத்.,30)
    என்று குறிப்பிடுகிறார். இது உலா இலக்கிய வகைத் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் வழக்கில் பொருந்தி வரும்.

    கடவுள் வாழ்த்தோடு வருவன:
    திணைகள் யாவும் மக்களின் ஒழுக்கம் குறித்தே வருமாயினும், பாடாண்திணை வகையில் ஒருசில தலைமக்களின் பாராட்டுடனும் வரும். ஆனால் குறிப்பிடப்படும் சில, கடவுள் வாழ்த்தொடு பொருந்தியே வரும். அவை கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் ஆகும்.(‘‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே-)

    கொடிநிலை என்பது கொடியெடுத்துப் படைக்கு முன்னர் செல்லுதல். இது வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு,
    ‘‘புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப்
    போகுங் காலை
    கொள்ளும் கொடியெடுத்துக் கொன்றவையும்
    கொடுமர முன்செல்லும் போலும்’’ (சிலப்.,வேட்டுவ வரி, 13.பா)
    என வரும் சிலப்பதிகாரப் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதில் நிரை கருதிப் போதல் வெட்சி. அதற்குக் கொடியெடுத்து முன் செல்லல் கொடிநிலை. கொற்றவை பரவல் கடவுள் வாழ்த்து ஆகும்.

    கந்தழி என்பது மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக் குறிக்கும். இக்கந்தழி என்பதை காந்தள் என்று பொருள் கொண்டு காந்தள் மலரைச் சூடிக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்குக் காந்தள் என்று பெயர் வந்தது. வேலைக் கையிலேந்திய வேலன் முருகனைத் துதித்து வெறியாடுவது காந்தள் எனப்டும் காந்தள் வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும் என்று அறிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. வள்ளி என்பது வள்ளல் தன்மையைக் குறிக்கும். வள்ளி என்பதனைப் பெண்கள் ஆடும் வள்ளிக் கூத்து என்றும் குறிப்பிடுவர். வள்ளி ஒரு கொடிக்குப் பெயர். ஆதலால் கூத்தைக் குறிக்க வாடாவள்ளி என்று கூறப்பட்டது. ‘‘கொடி வாடும்’’; ‘‘கூத்து வாடாது’’. எனவே வாடாவள்ளி என இது கூறப்பட்டது. வள்ளி வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும்.

    இளம்பூரணர் கந்தழி என்பதற்கு விளக்கம் கூறாமல்,
    ‘‘அன்றெறிந்தானும் இவனால் அரண்வலித்து’’
    என்ற வெண்பாமாலைப் பாட்டை உதாரணமாகக் காட்டி அமைவர;. அப்பாட்டு உழிஞை வகையாகும். நச்சினார்க்கினயர் கந்தழி என்பதற்கு, ‘‘ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்’’ என்று பொருள்கூறுவர். தொல்காப்பியரால் கொடிநிலையும் வள்ளியும் வெட்சித் திணையில் விளக்கப்பட்டன. அவற்றைப் போலவே காந்தள் என்பதும் வெட்சித் திணையில் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள்’’ என விளக்கப்பட்டது. கந்தழி என்பது எங்கும் விளக்கப்படவில்லை. காந்தள் முருகக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வந்ததாகும். முதலன மூன்றும் என்பன கொடிநிலை, காந்தள், வள்ளி என்பனவேயாகும் இவற்றால் கந்தழி கொள்ளத் தகுந்ததில்லை. காந்தள் என்பதே கொள்ளத் தகுந்தது; பொருத்தமானதும் ஆகும்.

    கந்தழி என்பதற்கு, நாவலர் பாரதியார், ‘‘காந்தள் என்பது ஏடு பெயர்த்து எழுதுவோரால் பொருட் பொருத்தம் கருதாமல் கந்தழி என எழுதப்பட்டது போலும். அவ்வாறு வந்த கந்தழியை உரையாசிரியர்கள் இருவரும் அப்படியே ஏற்றுத் தம்முள் மாறுபட்டு உரை கண்டனர் எனத் தெரிகிறது. இதனாலும் கந்தழி துறையாகாமல் காந்தள் வலியுறுவது காண்க’’ என்று குறிப்பிடுவது பொருந்துவதாக உள்ளது.

    கொற்றவள்ளை:
    மன்னனின் புகழினை விளக்கமாகக் கூறியும் பகைவர் அழிவுக்கு இரங்கியும் பாடும்பாடல் கொற்ற வள்ளை எனப்படும். இதுவும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு, ‘‘கொற்றம் என்பது வெற்றி. வள்ளை என்பது உலக்கைப்பாட்டு. பெண்டிர் தம் அரசனின் வெற்றிக்கு மகிழ்ந்து உலக்கைக் குற்றோடு ஒத்துப்பாடும் பாட்டு கொற்றவள்ளை எனப்படும். கொற்றவள்ளை வஞ்சி வகையைச் சேர்ந்தது. இது கடவுள் வாழ்த்தொடு பொருந்தியும், கடவுள் வாழ்த்தின்றி தலைமக்கள் புகழ் மட்டும் சுட்டியும் வரும்’’ என்றும் பொருள் கூறுவர்.

    பாடாண் திணையின் துறைகள்:
    பாடாண் திணை 10 துறைகளைக் கொண்டது. அவையாவன,

    1. கொடுப்போர் ஏத்தல்: கொடைகொடுக்கும் வள்ளல்களைப் புகழ்தல், கொடார்ப்பழித்தல்: பெருஞ்செல்வராயிருந்தும் வழங்காதவரைப் பழித்தல், அதாவது ஈயார் பழியாம்; ஈவோர் புகழாம். எனவே அதுவும் பாடாண்திணையாயிற்று.
    2. இயன்மொழி வாழ்த்து-நெருங்கிப் பொருந்திப் புகழ்வது இயன்மொழி ஒருவனிடம் உள்ள சால்பை உரைப்பது இயன்மொழியாகும்.
    3. வாயில்நிலை: சேய்மையினின்று வந்த வருத்தம் தீர வாயில் காவலனிடம் கூறுதல்.
    4. கண்படைநிலை: பரிசில் பெறுவோர் உறங்கக் கருதிக் கூறுவது. இதனை, ‘‘பரிசில் மாக்களும் துயில்கமா சிறிதே’’ என்ற தொடராலேயே பொருள் விளங்கக் காணலாம்.
    5. வேள்வி நிலை: கபிலை நிறமுள்ள பசுவைக் கருதிய வேள்வி. பசுவின் நெய்யால் வேள்வி செய்வதுண்டு. ஏனெனில் பசுக்களை வேள்வித் தீயிலிட்டுக் கொன்று அவற்றின் ஊனை உண்பது தமிழர் முறையில்லை. இதனை,
    ‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர் செகுத்து உண்ணாமை நன்று’’(குறள்259)
    என்ற திருக்குறள் விளக்குவது நோக்கத்தக்கது. நெய் முதலிய பொருள்களை வேள்வித்தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்து முழப்பதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாதிருப்பது நல்லது என்பது நம்முன்னோரின் உயர்ந்த கொள்கையாகும். அதனால் பசுக்களின் நெய்யைக் கொண்டு வேள்வி நிகழ்த்துதலையே தொல்காப்பியர் இதில் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    6.விளக்குநிலை: வேலும் கோலும் குறித்த விளக்கு நிலை. அதாவது இருள்நீக்கி ஒளி உதவும் விளக்குப் போன்று தீது நீக்கி நன்மை பயப்பது வேலும் கோலுமாகும். வேல் காவலுக்கும், கோல் முறை செய்தலுக்குமாக வந்த ஆகுபெயர்கள். (‘‘செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது, பிறிது தெறல் அறியார் நின்நிழல் வாழ்வோர்…அறம்துஞ்சும் செங்கோல்-முறைசெய்யும் கோலைக் காட்டும். ஏமக்காப்பு-காவல் செய்யும் வேலைக் காட்டும்’’…புறம்.,20)
    7. வாயுறைவாழ்த்து: வாய்மை, தீமையிலாத சொலல். அத்தீமையில்லாதவை உறைந்த வாழ்த்தே வாயுறை வாழ்த்தாகும். வாய்-வாய்மொழி. உறை-மருந்து. வாயுறை என்பது சொல் மருந்து எனப் பண்புத்தொகையாகும். வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையுமாம் என்பர் நச்சினார்க்கினியர். வாய்மொழியாகிய மருந்தைக் கொண்டு தீமை நீக்குவது என்பது கருத்து.
    8. செவியுறை வாழ்த்து: செவியில் அறிவுறுத்தல் செவியுறை வாழத்தாகும். இதனை செவியறிவுறூஉம் எனவும் கூறுவர். ‘‘செவியுறை -செவிமருந்து அடங்கி வாழ்வார்க்குப் புகழாதல் வாழ்த்தின் பாற்பட்டது’’ என்பர் நச்சினார்க்கினியர். செவிமருந்தினால் நலம் பயக்கச் செய்வது கருத்து.
    9. புறநிலை வாழ்த்து: வழிபடும் தெய்வம் உன்னைப் புறங்காப்ப பழியில்லாத இல்லறச் செல்வத்தோடு புதல்வர்ச் செல்வமும் பெற்று வழிவழி சிறந்து வாழ்வீராக என்பது புறநிலை வாழ்த்தாகும்.
    10. கைக்கிளை: ஒருதலைக் காதலாகும். இதற்கு நாவலர் அவர்கள், ‘‘பாடாண் துறைகள் அடுத்த சூத்திரத்தில் கூறப்படுவதாலும் தொல்காப்பியர் கையாளும் முறையாலும் இங்கு கூறுபவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளாம்; துறைகளாகா. இன்னும் ‘‘நாடுங்காலை நாலிரண்டு உடைத்தே’’ என முன்னே எண் கொடுத்துத் தெளிவாக்கியுள்ளார் தொல்காப்பியர். இத்தொகு நிலையைத் ‘‘தொக்க நான்கு’’ எனப் பிறவற்றிலிருந்து பிரித்து வேறு கூறியுள்ளார். எனவே இங்கு கூறப்பட்டவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளே என்று கொள்ளவேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார்.

    பாடாண் திணையின் பிற துறைகள்:
    பாடாண் திணையின் துறைகளாகத் தொல்காப்பியர் மேலும் பத்துத் துறைகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:

    1. துயில் எடை நிலை: துயில் எழுப்பும் நிலை. துயிலும் அரசர்க்குக் குற்றமற்ற அவர் நல்ல புகழைக் கருதிப் புகழ்வோர் எடுத்துரைப்பது. இது நாளடைவில் பள்ளிஎழுச்சி என்ற சிற்றிலக்கிய வகைக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    2. ஆற்றுப்படை: ஆற்றுப்படுத்தல் – வழிகாட்டல். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்னும் நால்வகை இரவலரும் தனித்தனியாகப்ப் பரிசில் பெற்று மீளும்போது, இரவலன் ஒருவன் பரிசில் பெற விரும்பி வள்ளலைத் தேடிச் செல்லும் அவனுக்கு வழியிடையில் இடைப்படத் தோன்றி, பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை அவனுக்குத் தெரிவித்து அவனும் அவ்வள்ளல்பால் சென்று பரிசில் பெறச்சொல்லும் துறையாகும். (கூத்தர்-ஆடல் செய்வோர், பாணர்- இசைபாடுவோர், பொருநர்- நாடகத்தில் குறித்த ஒருவனைப் போல நடிப்பவர், (பொருந்-ஒப்பு), விறலி-இசைக்கேற்ப ஆடுபவள் விறல் என்பது உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டும் திறம். அத்திறமை உடையவர; விறலியர;). இத்துறை ஆற்றுப்படை என்ற இலக்கியத்திற்கு வழிகோலியது.
    3. பெருமங்கலம்: பிறந்தநாள் விழா. மன்னனுக்கோ, தலைவனுக்கோ சிறந்த நாள் என்பது அவன் பிறந்த நாள் ஆகும். அதில் அவன் சினம் அகற்றி விழாக் கொண்டாட வேண்டும். அன்று பகைவரையும், தவறு செய்தோரையும் சினத்தல் கூடாது. சிறைவீடு செய்தல், கொடை வழங்குதல் வேண்டும். இது ஒரு துறையாகும்.
    4. மண்ணு மங்கலம்: மண்ணுதல்-நீராடுதல், மங்கலம்- விழாக் கொண்டாடுதல். சிறந்த புகழுடைய முடிசூட்டு விழாவின்போது நடக்கும் நீராட்டுவிழா.
    5. குடைநிழல் மரபு: உலகியல் ஒழுக்கத்தை உயர்த்தும் வேந்தனது குடைநிழல் முறை கூறல்.
    6. வாள்மங்கலம்: பகைவரை வெற்றி கொள்ளக் கருதி வேலை, வாளை நீராட்டும் மங்கல விழாவாளும் வேலும் மன்னர்கள் ஒன்றெனக் கருதுவர்.
    7. எயில் அழித்த மண்ணுமங்கலம்: நிலைத்த மதிலை அழித்தபின் நீராடும் மற விழா. பகைவர் மதிலின் குடுமியைக் கைக்கொண்ட பின் பெருமிதம் கொண்டாடும் நீர்விழா உழிஞைத்திணயில் ஒரு துறை. அது மதிலை அழியாது கைப்பற்றிய விழா. இங்கு பாடாண்திணையில் வரும் இத்துறை மதிலை அழித்துவிட்டுக் களியாட்டம் நடத்துவது. கைக்கொண்டது அங்கு. அழித்தது இங்கு. விழாவெல்லாம் நீராடியே தொடங்குவது மரபு. இதனை,
    ‘‘கடுந்தேர்க் குழித்த ​ஞெள்ளல் ஆங்கண்
    ​ வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்ழப்
    பாழ்செய்தனை, அவர் நனந்தலை நல்எயில்’’(புறம்.,15)
    என்ற பாடல் விளக்குகின்றது. பகைவரது பரந்த இடத்தையுடைய நல்ல மதிலை அழித்து, விரைந்ததேர் குழிசெய்த வீதியில் வெளியவாயையுடைய கழுதையாகிய புல்லிய இனத்தைப் பூட்டி உழுது பாழ் செய்தாய் என்று இப்பாடலில் மதில் அசெய்து கூற்படுவது நோக்கத்தக்து.
    8. அரசனது முன்வாயிலில் வந்து பரிசில் கேட்கும் நிலை. இதற்கு,
    ‘‘வான்தோய் நீள்குடை வயமான் சென்னி!
    சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
    ஆசாகென்னும் பூசல்போல
    வல்லே களைமதியத்தை உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
    பொறிப்புணர் உடம்பில் தோன்றி என்
    அறிவுகெட நின்ற நல்கூர்மையே’’(புறம்.,266)
    என்ற பாடல் சான்றாக அமைகின்றது. சென்னியே சான்றோர; கூடியிருந்த அவையில் வந்து நேர;ந்த ஒருவன், யான் உற்ற துன்பத்திற்கு நீர் துணையாய் இருந்து எனக்குப் பற்றுக் கோடாக வேண்டும் என்ற ஆரவார வேண்டுகோளைக் கேட்ட சான்றோர் அவன் துன்பத்தை விரைவில் தீர்த்தனர். அதுபோல என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னைக் கருதி வந்த விருந்தினரைக் கண்டு விருந்தளிக்க முடியாமல் ஒளிந்து கொள்ளும் திருந்தா நிலையுடையது என் இல்வாழ்க்கை. என் உடம்பில் தோன்றி என் அறிவு கெடும்படி நின்ற என் வறுமையை விரைவில் தீர்ப்பாயாக என்றார் புலவர். இதில் முன்வாயில் நின்று பரிசில் கேட்ட நிலை கூறப்படுவது நோக்கத்தக்கது.
    9. இருவகை விடை: 1. புரிசில் பெற்ற பின்னும் ஈந்தோனைப் புகழ்ந்து தானே விடை கேட்டல், 2. ஈந்தோன் விடை கொடுத்தல். இவை உலக வழக்கில் பயின்று வரும் இருவகை விடையாகும்.
    10. காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து: நாள் நிமித்தம், புள்நிமித்தம், பிற நிமித்தங்களால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சமும் நன்மைக்கு உவகையும் கொண்டு குறைவில்லாமல் ஆராய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து.
    ‘‘காலனும் காலம் பார்க்கும்…………
    ………………………………………
    அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
    எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்
    களிறு மேற்கொள்ளவும் காழக நீப்பவும்’’(புறம்.,41)
    யமனும் உயிர்க்கொள்ளக் காலம் பார்க்கும். அஞ்சத் தகுவனாகிய பறவைகள் குரலிசைப்பவும், பல் நிலத்திலே வீழவும், எண்ணெயைத் தலையிலே தேய்க்கவும், பன்றி மேல் ஏறவும், ஆடையைக் களையவும் ஆகிய செயல்களால் நாள், புள் நிமித்தங்களும் பிறவும் இப்பாடலில் வந்தன. இவற்றால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சப்படுதல் இயல்பு. அதனால் அதனை அறிந்து வாழ்த்தினைக் கூறுகின்ற முறைமை இப்பாடலில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

    உலகியலில் வரும் ஒழுக்க நடத்தைகளில் கருத்துக் கொண்டு மூன்று காலமும் தழுவிப் பாடாண் துறைகள் வரும். இங்கு கூறப்பட்ட துறைகள் பலதிறப்பட்ட புறத்திணைகளுக்கு உரியன. எனினும் தலைவன் புகழ், வாழ்த்துக்களாய் வருதலால் பாடாண் துறைகளாய் முடிகின்றன.

    பாடாண்திணையில் வாழ்த்தல், புகழ்தல், முன்னோர் கூறிய குறிப்பு ஆகிய மூன்றிடத்திலும் இயற்பாக்களோடும், இசைப்பா, வண்ணக் கூறுகளும் வந்து வழங்கும். தூய காதல் பகுதியாகிய ஏழாவதும் எட்டாவதும் கடவுளோடு கடவுள், கடவுளோடு மனிதர் குழவிக் கைக்கிளை ஆகிய முறைகளில் வருவதுண்டு. பாடாணில் ஊர்சிறப்பும், உயர்குடிப் பிறப்பும் கூறுத் உண்டு. அப்போது உண்மைப் பெயர் சொல்லிப் பாடுவதுண்டு. அகத்திணையிற்றான் உண்மைப் பெயர் சுட்டக் கூடாது. பாடாண்திணையில் கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருவது கொடிநிலை, காந்தள், வள்ளி என்பன. கொற்றவள்ளை என்பதும் கடவுள் வாழ்த்தோடு பொருந்தியும் கடவுள் வாழ்த்தின்றியும் வரும். பாடாண் திணை சிறப்பு வகையில் எட்டாகத் தொல்காப்பியரால் மொழியப்பட்டுள்ளன. பாடாண் துறைகளாகப் பத்துவகைகளையும் தொல்காப்பியர் மொழிந்துள்ளார்.

     

    முனைவர் சி.சேதுராமன்
    தமிழாய்வுத் துறைத்தலைவர்
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.)
    புதுக்கோட்டை-1
    மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com

     

     

    Share
  • ‘‘புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள்”

    — முனைவர் சி. சேதுராமன்.

    purananooru

    நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் சார்ந்த சமுதாயத்த்தால் பாதுகாக்கப்படுகின்றன.மனிதனின் தன்னல மற்றும் சமுதாய உணர்வுகளே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. இந்நம்பிக்கைகள்காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராதபொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனிதமனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவ்வாறு காரணம் கற்பித்துக்கொண்டவைகளே பின்னர் நம்பிக்கைகளாக உருவாகின்றன.

    மனித மனத்தின் விளைவாக நம்பிக்கைகள் தோன்றுகின்றன. இந்நம்பிக்கைகள் காலங்காலமாக ஒருதலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனித வாழ்க்கையின்பிரதிபலிப்புகளாகத் திகழும் இலக்கியங்களிலும் இந்நம்பிக்கைகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    நாட்டுப்புற நம்பிக்கைகள்:
    அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர; அறிஞர். காரணகாரியத்தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறு முடிவதை நம்பிக்கை என்றும் சான்றுகளின்அடிப்படையிலோ, காரண காரியத் தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை(ளுரிநசளவவைழைn) என்றும் வகைப்படுத்துவர். மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்பண்பாட்டின்கண் அடங்கி விடுகின்றன. நாட்டுப்புற நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுவளர்ச்சியின் படிக்கற்கள் என்பது நோக்கத்தக்கது. மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரையில் பலவிதமானநம்பிக்கைகள் கொண்டிருக்கின்றான். மனிதனின் இந்நம்பிக்கைகளே அவனது வாழ்வை இயக்குகின்றன. மேலும்மனிதன் வாழ்வில் வளம் பெறுவதற்கு இந்நம்பிக்கைகளே அடித்தளமாக அமைந்திலங்குகின்றன.

    இந்நம்பிக்கைகள் எப்பொழுது தோன்றின என்று அறுதியிட்டுக் கூற இயலாது. இந்நம்பிக்கைகள்மக்களின் நடைமுறை வாழ்வில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் இந்நம்பிக்கைகளைசமுதாயப் பண்பாட்டின் வளர்ச்சிக் கூறுகளின் தொகுதி எனக் கூறலாம். மனித வாழ்க்கையில் காணப்படும்நம்பிக்கைகளுக்குக் காரணத்தை அறிய முடியாததாக இருந்தாலும் மனித சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டுச்செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனி மனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாயநம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு.

    பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன. இச்சடங்குகள் என்பதுநிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும் என்பர். இது மனி மனிதனின் சுயமான ஆக்கமாகவோபண்பாட்டினுடைய தனிச்சிறப்புக் கூறாகவோ அமையும். பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் இன்றிச்சடங்குகளிலேயே வெவ்வேறு நாகரிகங்களின் நம்பிக்கைகளும் இலட்சியங்களும் மிகத் தெளிவாகவெளிப்படுத்தப்படுகின்றன என்கிறார் ரூத் பெனிடிக்ட்.

    பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இயற்கையின் மாறுதலுக்கேற்றாற் போன்றுமனித மனமும் மாறுபடுகின்றது. இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையில் நம்பிக்கைகள் தோன்றின.புறநானூற்றில் பல்வேறுவிதமான நாட்டுப்புற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இந்நம்பிகைகள் அனைத்தும்சகுனம் சார்ந்து இயற்கையோடு இயைந்ததாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

    சகுனங்கள் குறித்த நம்பிக்கைகள்:
    சகுனம் பார்க்கும் நம்பிக்கை உலகெங்கிலும் காணப்படுகின்றது. பண்டைத் தமிழர; இதனைப் புள்,நிமித்தம் ஆகிய சொற்களால் குறிப்பிடுகின்றனர். நிமித்தம் என்பது வாழ்வில் நிகழவிருக்கும் நன்மைதீமைகளைச் சில குறியீடுகளின் வாயிலாக உணர்த்துவதாகும். நிமித்தங்கள் அனைத்தும் நம்பிக்கையைச்சார்ந்தனவாக உள்ளன. நிமித்தங்களை, நற்செயலையும், நற்பயனையும் அறிவிக்கும் குறியீட்டினைநன்னிமித்தம் என்றும் தீய செயலையும், தீமையையும் தெரிவிக்கும் குறியீட்டினை தீ நிமித்தம் என்றும்அவற்றின் செயற்பாட்டு விளைவு கருதி இருவகையாகப் பகுக்கலாம்.

    இதனை நாட்டுப்புற வழக்கில் நல்ல சகுனம், தீய சகுனம் என்று குறிப்பிடுவர். ஒரு செயலைத்தொடங்கும்போது நல்ல சகுனம் தோன்றினால் அச்செயல் நன்மையாக முடியும் என்றும், தீய சகுனம்தோன்றினால் அச்செயல் தோல்வியடையும் என்றும் நம்புகின்றனர்.

    நல்ல நாள், நேரம் பார்த்தல்:
    ஒரு செயலை நல்ல நாளில் செய்யத் தொடங்கினால் எவ்விதத் தடங்கலின்றி நன்றாக முடியும் என்றுமக்கள் நம்புகின்றனர். மன்னர்கள் போர் தொடங்குவதற்கு நல்ல நாள் பார்த்தனர். நல்ல நேரத்தை முழுத்தம்என்று குறிப்பிட்டனர். இம்முழுத்தத்தை இன்று முகூர்த்தம் என்று கூறுகிறோம். போர் தொடங்கும் முன்னர்நல்ல நாள் குறித்து அந்நாளில் வெண்கொற்றக் குடையையும், வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்துச்சென்றனர். இதனை வாள்நாள்கோள், குடைநாள் கோள் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
    தொல்காப்பியத்தில்,
    ‘‘நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்”(தொல்., பொருள்., 91)
    என நாள் நிமித்தமும், புள் நிமித்தமும் சுட்டப்படுகின்றது.

    மன்னனைக் காணப் போகும்போது இரவலர்கள் நல்ல நாள், நல்ல நிமித்தம்(சகுனம்) பார்த்துச் செல்வர்.அவ்வாறு சென்றால்; நிறையப் பரிசில்கள் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். நாளும் சகுனமும்சரியில்லையெனில் அவர்கள் மன்னனைக் காண்பதற்குச் செல்லமாட்டார்கள். இதனை,

    ‘‘நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
    பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
    வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப்
    பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
    பீடு கெழு மலையன் பாடியோரே” (புறம்., 124)

    என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது. விதை விதைக்கும்போதும் மக்கள் நல்ல நாள் பார்த்தே விதைவிதைப்பர்.நல்ல நாளில் விதைவிதைத்தால் நன்கு விளைச்சல் பெருகும் என்று மக்கள் நம்பினர். பன்றி உழுத புழுதியில்குறவர் நல்ல நாள் பார்த்து திணையை விதைத்தையும், விளைந்த தானியத்தை உண்பதற்கு நல்ல நாள்பார்த்தனர். நல்ல நாளில் உண்டால் எந்தவிதமான தீங்கும் நேராது என்றும் மக்கள் நம்பினர். மக்களின்இந்நம்பிக்கையினை,

    ‘‘கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
    கடுங் கண் கேழல் உழுத பூழி,
    நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
    உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
    முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்” (புறம்.,168)

    என்ற கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய பாடல் தெளிவுறுத்துகிறது.

    மன்னர்கள் போருக்குச் செல்லும்போது நல்ல சகுனங்களைப் பார்த்தே புறப்பட்டனர். எட்டுத் திசைகளிலும்எரிகொள்ளி எரிந்து விழுதல், பெரிய மரத்தின் இலையில்லாத கிளை உலர்ந்து போதல், ஞாயிறுபலவிடங்களிலே செறிந்து தோன்றுதல், அச்சம் தரும் பறவைகள் ஓசையெழுப்புதல் ஆகியவை நனவில் தீயசகுனங்களாகும். இத்தகைய பெரியதீய சகுனங்கள் ஏற்படுகின்றனவா என்று பார்த்து அவ்வாறு ஏற்பட்டால் அதன்உட்பொருளை அறிந்தபின்னர் போருக்குச் சென்றனர். இச்சகுனம் பற்றிய மக்களின் நம்பிக்கையை,

    “வெல் போர் வேந்தே!
    திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
    பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
    வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
    அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்” (புறம்.,41)

    என்ற கோவூர்க்கிழாரின் பாடல் தெளிவுறுத்துகிறது. இன்றும் பயணத்தின்போது சகுனம் பார்த்துச் செல்லும்பழக்கம் மக்களிடையே இருந்துவருவது நோக்கத்தக்கது. இது பழக்கம் பற்றிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.

    தலையை விரித்துப் போடுதல்:
    பயணம் செய்யும்போது எதிரில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வருவது தீய சகுனமாகக்கருதப்பட்டது. அவ்வாறு வந்தால் உயிருக்குத் தீங்கு நேரும் என்று மக்கள் கருதினர். அவ்வாறு வந்துவிட்டால்அத்தீங்கினின்று தப்புவதற்காக உடனே கடவுளை வணங்கினர். இதனை,

    “தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
    உளருங் கூந்த னோக்கிக் களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”(260)

    என்ற புறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகின்றது. வழிச்செல்வோர் எதிரே, விரித்த தலைமயிருடன் ஒருத்திமுற்படவரின், அதனைத் தீநிமித்தமாகக் கருதுவது இயல்பு. தீநிமித்தத்தால் உண்டாகும் எனக் கருதிய தீங்கைவிலக்குதல் வேண்டி கள்ளியின் நிழலில் இருந்த தெய்வத்தை வணங்கினர். இத்தகைய சகுனம் குறித்தநம்பிக்கை இன்றும் மக்களிடையே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பறவை அலறுதல்:
    சில பறவைகள் பறப்பதும் சிலவகையான பறவைகள் அலறுவதும் தீயதை ஏற்படுத்தும் சகுனங்களாகமக்களால் கருதப்பட்டன. இச்சகுனங்கள் மக்களிடத்தில் காணப்படும் பல்வேறுவிதமான நம்பிக்கைகளைஎடுத்துரைக்கின்றன.

    ‘‘கூகை அலறினால் சாவு வரும், போத்துப் பறந்தால் பேத்தடி வைக்காதே”
    என்பது அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் நிலவி வரும் நம்பிக்கையாகும். அஞ்சத்தக்க கூகையும்பெருங்குரலெடுத்து அலறுகிறது. இது தீயது நிகழப் போகிறது என்பதைக் குறிக்கின்றது. தலைவன்இறந்துவிடுவதையே இவ்வாந்தையின் அலறல் எடுத்துரைக்கின்றது என்று மனைவி புலம்புகின்றாள்.

    ஆந்தைஅலறினால் தீயது நடக்கும் என்ற இந்நம்பிக்கை புறநானூற்றில்,
    ‘‘அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும்” (புறம்., 280)
    என்று இடம்பெற்றுள்ளது. ஆந்தை அலறுவதைத் தீ நிமித்தம் என்று மக்கள் நம்பினர் இதனை புறநானூற்றின் 40-ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. சிற்சில பறவை விலங்குகளின் காட்சியும் அவற்றின் குரல்களும் நன்மைதீமைகளைத் தெளிவுறுத்தும் என்று மக்கள் நம்பினர். வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடிச்சென்றபோது பரிசில் கிடைக்கவில்லை. அதற்காகப் புலவர் ஓரியைப் பழிக்கவில்லை. மாறாக,

    ”புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளி வருநர் பழியலர் அதனால்
    புலவேன் வாழியர் ஓரி” (புறம்., 204)

    என்று தான் புறப்பட்ட நேரத்தையும் எதிர்ப்பட்ட புள்ளையும் நோவது தவிர மன்னனை நோவது பயனற்றது என்றுகுறிப்பிடுகின்றார்.

    மலையமான் திருமுடிக்காரியைக் காண விரும்பியோர் தீய நாளில் சென்றாலும தீய பறவைஎதிர்ப்பட்டிருந்தாலும் கூட ஒன்றும் பெறாது திரும்பமாட்டார்கள் என்பதை,

    “நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
    புதனன்று புக்குத்திறனன்று மொழியினும்
    பெயர்குநர் அல்லர்’’(புறம்., 124)

    என்று குறிப்பிடுகின்றார். இங்ஙனம் நல்ல நேரத்தில், நல்ல நாளில், நல்ல சகுனம் பார்த்து எதையும்பழந்தமிழர்கள் செய்தனர் என்பதை புறநானூறு தெளிவுற எடுத்துரைக்கின்றது.

    போருக்கு வீரர்கள் செல்லும்போது சில பறவைகளின் ஒலி சகுனமாகக் கொள்ளப்பட்டது. அரசனுடன்பறவைகள் ஒலிகளைக் கேட்டு அதற்குரிய பலனைக் கூறுவோரும் இருந்தனர். ‘புட்பகை’ பற்றி,

    “புள்ளிடை தட்ப”(புறம்., 124)
    “உட்பகை ஒரு திறம் பட்டெனப் புட்பகைக்
    கேவான் ஆதலின் சாவேம் யாமென” (புறம்., 68)

    என்று புறநானூறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ஆந்தையின் அலறினால் தீயது நடக்கும் என்று மக்கள் நம்பினர்.இந்நம்பிக்கையினை புறநானூற்றின் 40-ஆவது பாடல் தெளிவுறுத்துகின்றது.

    விரிச்சிகேட்டல்:
    விரிச்சி என்பது நற்சொல் கேட்டலாகும். ஒரு செயலின் தொடக்கத்தில் பிறர் சொல்லும் சொற்களைச்சகுனமாகக் கொள்வது உண்டு. இதனையே விரிச்சி என்பர். பகைவர் நாட்ழற்குள் புகுந்து பசுக்களைக்கவருவதற்கு முன்பு வெட்சி மறவர் விரிச்சி கேட்டதைத் தொல்காப்பியர் ‘பாக்கத்து விரிச்சி’ என்றுகுறிப்பிடுகின்றார்.

    முதுசெம்பெண்டிர் நாழியில் நெல்லை எடுத்துச் சென்று, சுளகில் இட்டு, நீரும் பூவும் சொரிந்து விரிச்சிகேட்பர். இதனை முல்லைப்பாட்டு,
    ‘‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை
    அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
    யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
    நாழி கொண்ட நறுவீ முல்லை
    அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
    பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லைப்பாட்டு, 6-11)
    என்று குறிப்பிடுகின்றது.

    விரிச்சி கூறும் கட்டுவிச்சியான பெருமுது பெண்கள் குரல் தடுமாறாமல் கூறல் வேண்டும். அவ்வாறுதடுமாறினால் தீயது நிகழும் என்று மக்கள் நம்பினர். புண்பட்ட நிலையில் கிடக்கும் தலைவனின் இறப்பைஇதுகுறிப்பதாக மனைவி அஞ்சுகிறாள். அவளின் நம்பிக்கையை,

    “நெல்நீர் எறிந்து விரிச்சி யோர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா’’ (புறம்., 280:6-7)
    என்று புறநானூறு எடுத்தியம்புகின்றது.

    விளக்கு அணைதல்:
    நல்ல செயல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது விளக்கு அணைதல் கூடாது. அவ்வாறுஅணைந்தால் அது தீயதை விளைவிக்கும் என்று மக்கள் நம்பினர;. இந்த நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. புறநானூற்றில்,

    ‘‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா” (புறம்., 280)
    என விளக்கும் அணைதல் பற்றிய நம்பிக்கை இடம்பெற்றுள்ளது. நீண்ட நகரின் மாளிகையில் ஏற்றி வைத்தவிளக்குகளும் அணைந்து விடும். அதனால் போரில் புண்பட்டுக் கிடக்கும் தலைவன் இறந்துபடுவான். தலைவன்இறந்து நான் உயிர்வாழ்வது அரிதினும் அரிதாகும் என்று மனைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.இன்றும் ஏற்றிய விளக்கு அணைவது தீயதை உணர்த்தும் சகுனமாக மக்களால் நம்பப்படுகின்றது.

    கனவு:
    எல்லா மக்களிடமும் கனவு குறித்த நம்பிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருகனவிற்கும் ஒவ்வொருவிதமான பலன் உண்டு. பகற்கனவு பலிக்காது என்பர். அதிகாலையில் காணும் கனவுபலிக்கும் என்பர். இலக்கியங்களில் கனவு குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. இக்கனவுகள் வாழ்வில்நிகழப் போகும் நிகழ்வுகளை முன்னரே எடுத்துரைக்கும் தன்மை வாய்ந்தவை.

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் பகைவர்கள், இரு நான்கு திசைகளிலும் உற்கம்உற்கவும், வற்றல் மரம் தீப்பற்றி எரியவும், ஞாயிறு பலவாகத் தோன்றவும், அஞ்சத்தக்க பறவைகள்ஆரவாரிக்கவும், பல் கழன்று விழவும், தலையில் எண்ணெய் ஊற்றவும், கோட்டு மாவூரவும், படைக்கருவிகள்கட்டிலொடு சாயவும் கனவு கண்டு தங்களுக்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்து,

    “எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
    களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
    வெள்ளெரி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
    கனவின் அரியன காணா, நனவில்
    செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
    மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்”
    என்று அஞ்சியதாக புறநானூறு(41) குறிப்பிடுகிறது.

    வெள்ளியும் எரிகோளும்:
    வெள்ளிமீன் வட திசையில் இருந்தால் நாட்டில் வளம் பெருகும். தென்திசைக்குச் சென்றால்மழைபெய்யாது; பஞ்சம் ஏற்படும். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே இருந்து வருவது நோக்கத்தக்கது.மக்களிடையே காணப்படும் இத்தகைய நாட்டுப்புற நம்பிக்கையானது புறநானூற்றிலும் காணப்படுகின்றது.பாரியின் நாட்டில் சனிமீன் புகையினும், எல்லாத் திசையிலும் புகை தோன்றினாலும் வெள்ளி தெற்கேசென்றாலும் மழை வளம் தவறாது என்ற பாரியின் நாட்டின் வளம் குறித்துக் குறிப்பிடும்போது,

    “மைம்மீன் புகையினும். தூமம் தோன்றினும்
    தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
    வயலகம் நிறைய, புதல் பூ மலர,
    மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்’’ (புறம்., 117)
    என்று கபிலர் இயம்புகின்றார்.

    வெள்ளிக் கோள் தென்திசையில் எழுவது தீய சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் வானில் எரிமீன்,குளமீன், தாள் மீன் ஆகிய விண்மீன்கள் புகைந்து தோன்றினும் தீய சகுனமாகும் (நிமித்தங்களாகும்). இவைநாட்டில் வறுமையும் பஞ்சமும் ஏற்படப் போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் தீய சகுனங்களாக மக்கள்கருதினர். மக்களின் இத்தகைய சகுனம் குறித்த நம்பிக்கையை,

    ‘‘வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
    பள்ளம், வாடிய பயன் இல் காலை” (புறம்., 388)
    “அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
    மிக வானுள் எரி தோன்றினும்,
    குள மீனொடும் தாள் புகையினும்’’ (புறம்., 395)
    என்ற பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    அதேபோன்று தூமகேது வானத்தில் தோன்றினால் நாட்டை ஆளுகின்ற அரசர்களுக்கு ஆகாது என்றுமக்கள் நம்பினர். அவ்வாறு ஒரு தூமகேது தோன்றிய ஏழாவது நாளில் சேரமான் யானைக்கட்சேய் மந்தரஞ்சேரல்இரும்பொறை மாய்ந்தான். இதனை,

    “ஆடுஇயல் அழல் குட்டத்து
    ஆர்இருள் அரை இரவில்
    முடப் பனையத்து வேர்முதலாக்
    குடைக் குளத்துக் கயம்காய,
    பங்குனி உயர் அழுவத்து,
    தலை நாள்மீன் நிலைதிரிய,
    நிலை நாள்மீன் துறை படிய,
    பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனை எரிபரப்ப, கால் எதிர்பு பொங்கி
    ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே:
    அது கண்டு யாமும், பிறரும் பல்வேறு இரவலர்,
    பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
    நோய் இலன் ஆயின் நன்றுமன்தில் என
    அழிந்தி நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
    அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே” (புறம்., 229)
    என்று கூடலூர்க்கிழார் குறிப்பிடுகிறார்.

    மேடராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற்காலின்கண் நிறைந்த இருள் கொண்ட பாதி இரவு;அப்போது முடப்பனை போன்ற வடிவை உடைய அனுஷ நாளின் முதல் நட்சத்திரம் முதலாகக் குளம்போன்றவடிவை உடைய புனர்பூச நட்சத்திரத்தின் கடைப்பகுதியாக விளங்கும்; அத்தகைய பங்குனி மாதத்தில்முதற்பதினைந்தில் உச்சமாக விளங்கும் உத்தரம் சாய்ந்தது; அதற்கு எட்டாம் நாட்சத்திரமாகிய மூலம் அதற்குஎதிரே எழும்; அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட மீன்களில் எட்டாவதாக உள்ள மிருகசீரிடம், துறையிலேதாழ்ந்து படியக் கீழ்த்திசையிற் போகாமலும் வடதிசையிற் போகாமல், தீத்திசையாகிய வடகிழக்கே வீழ்ந்ததுஒரு மீன். கடல் சூழ்ந்த உலகின் விளக்காக முழங்குகின்ற தீப்பரக்கக் காற்றால் விசிறப்பட்டு வீழ்ந்தது. அம்மீன்விழுவதைப் பார்த்து யாமும் இரவலர் பிறராகிய பல்வேறு வகையினரும், வேந்தன் நோயில்லாமல் இருக்கவேண்டும் என்று அஞ்சினோம். நாங்கள் அஞ்சியவாறே ஏழாம் நாள் வந்தது. இன்று மன்னன் இறந்தான் என்றுஇப்பாடலில் நாட்டுப்புற மக்களின் நம்பிகை இடம்பெற்றுள்ளது.

    பேய் பற்றிய நம்பிக்கை:
    கண்ணுக்குப் புலப்படாத பேய்கள் இரவில் உலவுவதாகவும் இவை பெரும்பாலும் சுடுகாட்டிலேயேஉலவியதாகவும் மக்கள் நம்பினர். இப்பேய்கள் பிணங்களை விரும்பி உண்ணும்; இறந்த வீரர்களின் குருதியைத்தலையில் தடவித் தலையை வாரும் என்ற பேய்கள் குறித்த நம்பிக்கை மக்களிடம் நிலவியதை,

    ‘‘வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு”(புறம்., 238)

    என்று புறநானூறு குறிப்பிடுகிறது. போர்க்களங்களில் கழுகுகளும், நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களைஉண்டதாக மக்கள் நம்பினர்(புறம்., 373). பேய்கள் பிணந் தின்றதையும், இறந்து கிடந்த வீரரின் குருதியைத்தலையில் தடவித் தலைவாரியதையும் புறநானூறு(369, 62) குறிப்பிடுகிறது.

    பேய்கள் போர்க்களத்தில் மண்டையோடுகளில் சமைத்து அதனைக் கொற்றவைக்குப் படைக்கும் என்றுமக்கள் நம்பினர். மக்களின் இந்நம்பிக்கையானது,
    “பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற்
    கூவிள விறகி னாக்குவரி நுடங்க
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட
    மாமறி பிண்டம் வாலுவ னேந்த
    வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம்
    வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய்” (372)
    என்று புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரியதலைகளாற் செய்ப்பட்ட அடுப்பிலே கூவியங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே,வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னிமரத்தின் கொம்பை யதிற்செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால் ஈனாத பேண்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த மாக்களும்உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப்பானாய்ஏந்திக்காட்ட களவேள்விசெய்தவனே என்று பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி மாங்குடிக் கிழார் என்றபுலவர் பாடும்போது இந்நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்.

    பேய்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவையாகும். இப்பேய்களிடம் இருந்துதப்பிப்பதற்குப் பல்வேறுவிதமான செயல்களைச் செய்தனர். வீட்டில் இரவம், வேம்பு இவற்றின் குழைகளைச்செருகி வைத்தனர். யாழையும் பிற கருவிகளையும் முழக்கினர். வெண் சிறுகடுகைப் புகைத்தனர். ஆம்பற்குழலை ஊதினர். காஞ்சிப் பண்ணைப் பாடினர். தூபம் எடுத்தனர். இவ்வாறு செய்தால் தீங்கு செய்ய வரும் பேயைஓட்டிவிடலாம் என்று மக்கள் நம்பினர். இதனை,

    “தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,
    வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க,
    கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி,
    ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
    இசை மணி எறிந்து, காஞ்சி பாடி,
    நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ,
    காக்கம் வம்மோ காதலம் தோழி!
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே”(புறம்.,281)
    என்று அரிசில் கிழார் (புறம்., 98;15, 281) குறிப்பிடுகின்றார்.

    இந்நம்பிக்கை பற்றிய செய்தியை,
    “வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
    நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
    எல்லா மனையும் கல்லென்றவ்வே;’’ (புறம்., 296)
    என்று வெள்ளைமாளர் பாடுவதும் நோக்கத்தக்கது. இன்றும் பேய் பற்றிய பல்வேறு கதைகளும் நம்பிக்கைகளும்மக்களிடம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றும் வேம்பின் குழைகளை எடுத்து அடித்துப் பேய்ஓட்டும்பூசாரிகள் கிராமங்களில் இருக்கின்றனர்.

    சமய நம்பிக்கைகள்:
    சங்க கால மக்கள் இம்மை வாழ்வின் செம்மையிலும் இன்பத்திலும் விருப்பமுடையதாக இருந்தது.அவர்களின் சமயம் சார்ந்த வாழ்க்கை வாழ்வியல் நெறியாக இருந்தது. இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம், விதிஉள்ளிட்ட நம்பிக்கைகள் மக்களிடம் இருந்தது.

    கடவுள் பற்றிய நம்பிக்கை:
    பழந்தமிழ் மக்கள் மரங்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். வேங்கை, கடம்பு, அரசு, ஆல் ஆகியமரங்களில் தெய்வம் உறைவதாகக் கருதினர். அம்மரங்களைத் தாங்கள் வணங்கும் கடவுளாகக் கருதியமக்களின் கடவுள் பற்றிய நம்பிக்கையை,

    ‘‘கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
    நெருந லுண்டன மென்னாது பின்னும்
    செலவா னாவே களிகொள் புள்ளினம்”(புறம்.,199)
    என்ற பெரும்பதுமனார் பாடல் எடுத்தியம்புகிறது. இன்றும் மக்கள் வேம்பினை அம்மன் தெய்வமாகவும், கடம்பு,வேங்கை ஆகிய மரங்களை முருகனாகவும், ஆலமரத்தை சிவனாகவும் கருதி வழிபட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.

    சொர்க்கம் நரகம்:
    அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப நன்மையும் தீமையும் ஏற்படும் என்று அன்றிலிருந்துஇன்று வரை மக்கள் நம்புகின்றனர். அன்பையும் அறத்தையும் புறக்கணித்தவர்கள் நீங்காத நிரயம்(நரகத்திற்குச்)செல்வர் என்று மக்கள் நம்பினர். இதனை,
    ‘‘அன்பும் அறனும் நீக்கி நீங்கா
    நிரயம் கொள்பவ ரோடொன்றாது காவல்
    குழவி கொள்பவரின் ஓம்புமதி”(புறம்., 5)
    என்று புறநானூறு எடுத்தியம்புகிறது. இறந்தோரில் சிறந்தவர்(நல்லவர்) மட்டுமே சொர்க்கத்திற்குச் செல்வர்.தீயவர் நரகிற்குச் செல்வர். நல்லோர் இறந்து விண்ணுலகு எய்தும்போது அவரை சொர்க்கத்தின் தலைவனாகவிளங்கும் இந்திரனே எதிர்நின்று வரவேற்பான் என்று மக்கள் நம்பினர். இத்தகைய நம்பிக்கையைபுறநானூற்றின் 241-ஆவது பாடல் குறிப்பிடுகிறது.

    ஒருவர் இறந்த பின்னர் அவருக்குத் துணையாக அவர் செய்த நல்வினைகளே உடன் செல்லும்.இந்நம்பிக்கை இன்றுவரை மக்களிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கையினை,
    ‘‘வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை’’(புறம்.,367)
    என்ற ஔவையார் பாடல் புலப்படுத்துகிறது.

    போர்க்களத்தில் பகைவருடன் போர் புரிந்து மரணிப்பவர்கள் சொர்க்கத்தில் தெய்வ மகளிரை மணந்துமகிழ்வர் என்ற நம்பிக்கையும் நிலவியது. இந்நம்பிக்கையை,
    ‘‘மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
    உயர் நிலை உலகத்து, நுகர்ப” (புறம்.,287)
    என்ற புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது. படைத்தலைவன் தனது படைவீரர்கள் கிளர்ந்தெழுந்துபோர்புரியும் வகையில் அவர்களுக்கு இத்தகைய நம்பிக்கையூட்டும் சொற்களைக் கூறுவதாக இதனைக்கருதலாம்.

    வீர வாழ்க்கை வாழ்ந்து தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே முடித்தவர்கள் விசும்பில்வலவன் இயக்காத வான ஊர்தியிலேறி விண்ணுலகு(சொர்க்கத்திற்கு) செல்வர் என்ற நம்பிக்கையை,
    ‘‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான வூர்தி
    எய்துப என்பதம் செய்வினை முடித்தே” (புறம்., 27)
    என்று புலவர் ஒருவர் தெளிவுறுத்துகிறார். தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து செவ்வனேமுடித்தவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வர். இத்தகைய நம்பிக்கையை,
    ‘‘உயர்ந்த வேட்டத்து உயர;ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
    தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்
    தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனில்
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்” (புறம்., 214)
    என்ற கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது பாடிய பாடல் எடுத்துரைக்கின்றது. சொர்க்கம் குறித்த மக்களின்நம்பிக்கையை, (134, 141, 174) ஆகிய புறப்பாடல்களும் எடுத்துரைக்கின்றன.

    ஊழ்வினை நம்பிக்கை:
    ஊழ்வினை குறித்த நம்பிக்கை மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துள்ளது. தமதுவாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கும், முன்னேற்றத் தடை ஏற்படுவற்கும் முதன்மையான காரணமாகஊழ்வினையே விளங்குகின்றது என்று மக்கள் நம்புகின்றனர். ஊழ்வினையை வெல்ல முடியாது என்ற எண்ணம்மக்களின் மனதில் வேரூன்றிப் போய்விட்டது. இவ்வூழ்வினையை, பால், வரை, தெய்வம் எனப் பலவாறுகுறிப்பிடுவர். காதலர் ஊழின் ஆற்றலால் மீண்டும் சந்தித்து உறவு கொள்வர். இவ்வகையில் கணியன்பூங்குன்றனாரின்,

    ‘‘வானம் தண்டுளி தலைஇ யானாது
    கல்பொருது இறங்கும் மல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
    முறைவழிப் படூஉம்” (புறம்., 192)
    என்ற பாடல் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.

    மலையிற் பெய்த நீர் வெள்ளமாக ஓடும்போது அதிலகப்பட்ட மரத்தெப்பம் போன்றே உயிர்கள் விதியின்வழிச் செல்லும் என்று குறிப்பிடும் அவர் அதனால் பெரியோரை வியத்தலும், சிறியோரை இகழ்தலும் தமக்குஇயல்பில்லை என்று தெளிவுறுத்துகிறார். இப்பாடல் பழந்தமிழ் மக்களின் ஊழ்வினை நம்பிக்கைக்குச் சான்றுபகர்வதாக அமைந்துள்ளது. இன்றுவரை அனைத்துத் தரப்பு மக்களிடமும் இவ்வூழைப் பற்றிய நம்பிக்கை மிகுந்துகாணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஊழ் குறித்த செய்திகள், புறநானூற்றில்(75, 176, 236, 192) நான்கு பாடல்களில்இடம்பெற்றுள்ளன.
    வீடுபேறு (முக்தி)

    இலக்கியங்களின் பயன் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கும் ஆகும். அதிலும் வீடுபேறுஎன்பது மக்கள் அனைவரும் முயல்கின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை வீடுபேறு அடைவதே மக்களின்குறிக்கோளாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வுலகம் நிலையில்லாதது; அதனால் இதன் தன்மையைஅறிந்து இதனினும் சிறந்த இன்ப உலகமான வீட்டின்பம் பெறும் (வீடுபேறு) சிறந்த செயல்களைச் செய்தல்வேண்டும் என்பதைப் பக்குடுக்கை நன்கணியார்,

    ‘‘ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
    ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
    புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
    படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
    இன்னாது அம்ம, இவ் உலகம்;
    இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே” (புறம்.,194)

    என்று பாடுகின்றார். நல்லது செய்தால்தான் இறையருளாகிய வீடுபேறு ஒருவருக்குக் கிட்டும்.இல்லையென்றால் அவரை எமன் வந்து வருத்துவான். நல்லது செய்ய முடியவில்லை என்றால்தீயனவற்றையாவது செய்யாதீர்கள் என்ற மக்களின் வீடுபேறு குறித்த நம்பிக்கையை,

    ‘‘கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
    பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
    அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
    ல்லாரும் உவப்பது; அன்றியும்,
    நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே’’ (புறம்.,195)
    என்று நரிவெரூஉத்தலையார் எடுத்தியம்புகின்றார்.

    இன்றும் மக்கள் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றும் தீயது செய்தால் தீயது நடக்கும் என்றும்நம்புகின்றார்கள். இத்தகைய நம்பிக்கையை, ‘‘வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன்தினையறுப்பான்” என்ற பழமொழி எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது.

    மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை:
    இப்பிறவியில் நிறைவேறாத ஆசைகளோ, செயல்களோ இருப்பின் அவர்கள் மறுபிறப்பெடுத்து அதனைநிறைவேற்றுவர். மார்கழி மாதத்தில் இறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்றும் மக்கள் நம்புகின்றனர். அவரவர்செய்த நன்மை தீமைகளுக்கேற்ப மறுபிறப்பு என்பது இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் செய்தகொடுமைக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக மறுபிறப்பெடுத்து வந்து பழி வாங்குவர் என்ற நம்பிக்கையும்மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. பாரி தன்னைவிட்டுப் பிரிந்தபோது தன்னுயிர் நீங்காததால் கபிலர்வருந்தினார். இப்பிறவியல் பாரியுடன் கூடிய நட்பு தொடராது தமடைபட்டதே என்று துன்புற்ற கபிலர்மறுபிறவியிலாவது பாரியுடன் தனது நட்பானது தொடர வேண்டும். அதனை விதியே செய்யும் என்று கருதிமறுபிறவிக்காகத் தானும் பாரியைத் தொடர்வதாகக் கபிலர்,

    “இனையை யாதலி னினக்கு மற்றியான்
    மேயினே னன்மை யானே யாயினும்
    இம்மை போலக் காட்டி யும்மை
    இடையில் காட்சி நின்னோ
    டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே” (புறம்., 236)
    என்று பாடுகின்றார். இப்பாடல், ‘‘இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே” என்ற அகப்பாடலை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் விதி, மறுபிறப்புஆகியவை குறித்த நம்பிக்கைகள் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

    இறந்தவர் பற்றிய நம்பிக்கை:
    இறந்தவர்களை நினைத்து வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.இறந்தவர்களுக்காகப் படைக்கப்படும் உணவினை அவர்கள் வந்து உண்பார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு உணவு படைப்பதைப் பிண்டம் படைத்தல் என்பர். இது மூடநம்பிக்கையாக இன்று கருதப்பட்டாலும்இறந்தவர்களுக்குப் பிண்டம் படைக்கும் பழக்கம் இருந்துவருவது நோக்கத்தக்கது. பாண்டியன் பல்யாகசாலைமுதுகுடுமிப் பெருவழுதியின் போர் அறத்தைப் பாடும் நெட்டிமையார்,

    “தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்”(9)
    என்று குறிப்பிடுகின்றார். தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்லுங்கள் என்று கூறிப் போர்புரிந்ததாக புலவர் கூறுவது நோக்கத்தக்கது. இதற்கு விளக்கம் எழுதும் ஔவைதுரைசாமிப்பிள்ளை அவர்கள், ‘‘பிண்டம் – சோறு; உதகம் – நீர். ஒரு குடியில் இறந்தோர், தென்றிசைக்கண் இருந்து, தம் குடியிற் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர்”(ப.,27)என்று கூறுகின்றார். இறந்தோர் தங்களுக்குப் படைக்கும் சோற்றையும், நீரையும் வந்து உண்பர் என்று மக்கள்நம்பினர்.

    இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.இறந்தவர்கள் தெய்வமாக நின்று தங்களையும் குடும்பத்தினரையும் காப்பர் என்றும் மக்கள் நம்புவதால்தான்இப்பிண்டம் படைத்தல் என்ற பழக்கம் தொடர்கின்றது எனலாம். பிண்டமாகப் படைக்கப்பட்ட உணவை எவ்வாறுதன் கணவன் உண்டான் என்று மனைவியானவள் கண்ணீர் விட்டு வருந்துவதாக,

    “நோகோ யானே தேய்கமா காலை
    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
    தன்னமர் காதலி புன்மேல் வைத்த
    இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
    உலகுபுகத் திறந்த வாயிற்
    பலரோ டுண்டன் மரீஇ யோனே” (புறம்., 236)
    வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடும்போது குறிப்பிடுகிறார்.

    மேலும் பிண்டம் படைப்பதற்குரிய இடத்தை மனைவியானவள் பசுவின் சாணத்தை வைத்துமெழுகுகின்றாள். சாணத்தைத் தண்ணீர்விட்டுக் கரைத்து மெழுகாது சாணத்தில் கண்ணீரைவிட்டுக் கரைத்துமெழுகுவதாக தும்பிசேர் கீரனாரின்,
    ‘‘இன்றே,
    அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
    உயர் நிலை உலகம் அவன் புக,…. வரி
    நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
    அழுதல் ஆனாக் கண்ணள்,
    மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே’’ (புறம்.,249)
    என்ற பாடல் இயம்புகின்றது.

    மழை பற்றிய நம்பிக்கை:
    பருவ நிலைகள் மாறப் போவதை எறும்புகள், பூனைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரனங்கள் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும். இவ்வுயிரினங்களின் செயல்பாடுகளைப் பார்த்து அடுத்து என்ன நிகழும்என்று பழந்தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். எறும்புகள் தங்களது முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலப்பகுதிக்குச் சென்றால் மழையானது பெய்யும் என்று நம்பினர். இன்றும் கிராமப்புறங்களில் இந்நம்பிக்கைமக்களிடையே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் இத்தகைய நம்பிக்கையை,

    ‘‘பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
    முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
    சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்’’ (புறம்., 173)
    என்ற சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனின் பாடல் புலப்படுத்துகின்றது. இந்நம்பிக்கையானது, ‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழைபெய்யும்” என்று பழமொழியாக மக்களிடையே வழங்கப்பட்டுவருகின்றது. மக்களின் இந்நம்பிக்கையை இளம்பூரணர் தமது உரையில், ‘‘எறும்பு முட்டை கொண்டுதெற்றியேறின் மழை பெய்தது மழை பெய்யு மென்பது” (தொல். வினை. சூ. 45, இளம்.) என்று குறிப்பிடுவதும்நோக்கத்தக்கது.

    மழை பெய்யாமல் நாட்டில் வறட்சி ஏற்பட்டால் மக்கள் இறைவனை மழைவரம் வேண்டி வழிபடுவர்.இறைவனை வழிபட்டால் மழைபொழியும் என்று மக்கள் நம்பினர். அதேபோன்று மழை அதிகமாகப் பொழிந்துஅழிவானது ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்காக மக்கள் இறைவனை வழிபடுவர். இறைவனை வழிபட்டால்அதிகமாக மழைபொழியாது என்றும் மக்கள் நம்பினர். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகின்றது.

    திருவிழாக் கலாங்களில் மழைவரும் என்று அறிந்தால் உடனே மழைபொழியக் கூடாது என்பதற்காகதேங்காயை உடைத்துச் சூடத்தைக் காட்டி அதனை விழாவிற்காகப் போடப்பட்ட பந்தலின் மீது எறிவர். அவ்வாறுஎறிந்தால் பெய்து கொண்டிருக்கும் மழையோ அல்லது பெய்யப் போகும் மழையோ உடனடியாக நின்றுவிடும்என்று மக்கள் நம்புகின்றனர். மக்களின் இந்நம்பிக்கையை,

    “மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
    மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
    கடவுட் பேணிய குறவர் மாக்கள்
    பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
    புனத்தினை யயிலு நாட” (புறம்., 143)
    எனக் கபிலர் குறிப்பிடுகின்றார்.

    தெய்வத்தைப் போற்றும் குறமாக்கள், மழையற்ற காலத்து, மலையை மழை வந்து சூழ்க என்று பலியைத்தூவி வேண்ட மிகுதியான மழை பெய்தது; மழை மிகுதியாகப் பெய்ததால் அதனை நிறுத்துவதற்காக,மழை(முகில்) மேலே போவதாக என்று தெய்வத்தை வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கேற்ப, மழையும்இடம்மாறிப் பெய்தது. அதனால் குறமாக்கள் மகிழ்ந்தனர் என்று இப்பாடலில் மக்களின் நம்பிக்கையை புலவர்தெளிவுறுத்துகிறார். இந்நம்பிக்கை குறித்த செய்தியானது,

    “குன்றக் குறவ னார்ப்பி னெழிலி,
    நுண்ப லழிதுளி பொழியு நாட” (ஐங்குறு. 251)
    என ஐங்குநுறூற்றிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புறநானூற்றில் குறிப்பிடப்படும் நம்பிக்கைகள் இன்று வரை மக்களிடையே இருந்து வருகின்றது.இவ்வாறு பல்வேறுவிதமான நம்பிக்கைகளை எடுத்துக் கூறி பண்பாட்டுக் களஞ்சியமாக புறநானூறுவிளங்குகின்றது. புறநானூறு குறிப்பிடும் நாட்டுப்புற நம்பிக்கைகள் வாழ்வியல் சார்ந்தவையாகவும், மக்களின்பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்திலங்குகின்றன.

     

     

     

    முனைவர் சி. சேதுராமன்,
    தமிழாய்வுத் துறைத்தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை – 622 001.
    Malar.sethu@gmail.com

     

     

     

     

     
    படம் உதவி: http://garuda-sangatamil.com/pages/third/images/purananooru.jpg

    Share