-விவேக்பாரதி
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நன்னாள்…
உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத்
தருவுடை யானைத் தமிழுடை யானைத் தனதுடல்மேற்
றிருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த
பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!

-விவேக்பாரதி
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நன்னாள்…
உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத்
தருவுடை யானைத் தமிழுடை யானைத் தனதுடல்மேற்
றிருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த
பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!
-விவேக்பாரதி
பெண்மை என்பதோர் ஆயுதம் – நம்
பெருமை அளந்திடும் சீதனம்
பெண்மை என்பதோர் பூவனம் – அது
பேண வேண்டிய தோர்வளம்!
பெண்மை காப்பதே நம்கடன் – அப்
பேறு வாய்ப்பதே தெய்வதம்
பெண்மை வாழ்கெனப் பாடுவோம் – எந்தப்
பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!
ஆணின் பலமெலாம் ஊனிடம் – பெரும்
ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
காண வேண்டிய கீர்த்திகள் – நம்
காரி கைவசம் பூர்த்திகள்
பேணும் நல்லறம் பெண்ணிடம் – பல
போரும் அமைதியும் பெண்ணிடம்
தூணைப் போலதைக் காத்துதான் – எதிர்
தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!
வானின் மாமழை தாய்க்குணம் – அலை
வண்ணக் கடலும் காதல்மனம்
சேனை ஆயிரம் ரௌத்திரம் – பல
செழுமை பெண்கொளும் பூரணம்!
ஞானம் அவர்சொலும் போதனை – அவர்
நாமம் தேன்வரும் கீர்த்தனை
தானு ணர்ந்திதை ஏத்துவோம் – பெருந்
தண்மை பெண்களைப் போற்றுவோம்!!
-விவேக்பாரதி
தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! – புதுத்
தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் – இனி
அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் – அந்த
ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? – வந்து
முழுதாக எனைவார்த்த செந்தமிழே – நாவை
முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே – உன்னை
மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் – எந்த
முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!
பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் – அந்தப்
பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் – ஒரு
காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் – ஆ
ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் – உனைச்
சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் – உமை
சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் – மீதி
நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் – இது
நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?
தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை – எனைத்
தொடாமலே தந்தபுதுச் சித்திரமே – விழி
பட்டாலே பாடுகின்ற பாவலனாய் – உயர்
பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே – இனி
கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் – நான்
கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் – நீ
சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் – உன்
சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!
27.01.2019
“இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி இருக்கிறார் இயக்குநர் மு.மாறன் அவர்கள். பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் இயக்குநர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த மு.மாறன் ஒரு நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதன் திரைக்கதை அமைப்பு தான் இந்தப் படத்திற்கு பலம் என்று தோன்றுகிறது. இதன் திரைக்கதையைக் குறித்து முதலில் காண்போம். 1950களில் மிகவும் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அக்கிரா குரோசோவாவின் “ரோஷோமான்” என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்த திரைக்கதை உத்தி (ரோஷோமான் தாக்கம்/ Rashomon effect) தான் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது எனலாம்.
ரோஷோமான் தாக்கம்/Rashomon effect என்பது ஒரே நிகழ்வை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து பல்வேறு கோணங்களில் பிரித்துக் காட்டக்கூடிய ஓர் உத்தி எனலாம். சாத்தியக் கூறுகள், நோக்கம், சாட்சிகள் போன்றவற்றின் அடிப்படையில் அந்த நிகழ்வானது எந்தக் கதாபாத்திரத்தால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்னும் சிந்தனைத் தளத்தை இந்த உத்தியின் மூலம் பார்வையாளர்கள் உணரலாம். ரோஷோமான் என்னும் ஜப்பானிய திரைப்படமே இந்த உத்தியை முதலில் திரையில் கையாண்டதால் இதற்கு அதன் பெயரே அமையப் பெற்றது. தமிழ்த் திரையில் பிரபல இயக்குநர் திரு எஸ். பாலசந்தர் அவர்கள் இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” என்னும் திரைப்படமே இந்த உத்தியில் தமிழில் வெளியான திரைப்படம். இப்படிப் பட்ட திரைக்கதையைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்கிறது “இரவுக்கு ஆயிரம் கண்கள்.”
ஒரு வாடகை மகிழுந்து ஓட்டுநராக இருக்கும் பரத் (அருள்நிதி), அவரது காதலி சுசீலாவுக்குத் (மஹிமா நம்பியார்) தொல்லை கொடுக்கும் கணேஷை (அஜ்மல் அமீர்) தட்டிக் கேட்கத் துடிக்கிறார். தொழிலதிபர் வசந்த் (ஜான் விஜய்), அவரது மனைவி ரூபலாவை (சாயா சிங்) வெறுக்க, ரூபலாவுக்கு அறிமுகமில்லாத தொலைபேசி எண் மூலம் தொடர்பில் வரும் கணேஷ் ரூபலாவை ஏமாற்றித் தவறாகப் படம்பிடித்ததாகத் தற்கொலைக்கு முயற்சி செய்ய, இதற்கும் சேர்த்துப் பழிவாங்க முற்படுகிறார் பரத்.
முருகேசன் (ஆனந்த்ராஜ்) என்னும் முதியவர் ஆறுதலாகத் துணை தேவை என்று விளம்பரம் கொடுக்க, கணேஷும் அவரை ஏமாற்றத் தன் காதலி அனிதாவுடன் (வித்யா ப்ரதீப்) முருகேசன் வீட்டுக்குச் சென்று பணம் பறித்துத் தப்பித்து விடுகிறான். பணம் போன துக்கத்திலும் கோபத்திலும் கணேஷைப் பழிவாங்க நினைக்கிறார் முருகேசன்.
பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் மாயாவுடன் (சுஜா வரூணி) தனிமையில் இருக்க நினைக்கும் நரேன் வைத்தியநாதனும் (ஆடுகளம் நரேன்), கணேஷால் மிரட்டப்பட்டு பணத்தைப் பறிகொடுக்கிறார். மயக்கம் தெளிந்த நரேன் மாயமான மாயாவைத் தேடுகிறார். மாயாவுடன் அவரது மகிழுந்தும் காணாமல் போகிறது. சில நாட்களில் மகிழுந்து கிடைக்கவே, மாயாவையும் கணேஷையும் ஒன்றாகப் பார்க்கும் நரேன், இருவரையும் பழிவாங்க எண்ணுகிறார்.
இதற்கிடையில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவுடன் தனிமையில் இருக்கும் காணொலிக் காட்சியைக் காட்டி, வசந்திடம் பணம் பறிக்க முயல்கிறான் கணேஷ். வசந்திடம் ரூபலாவின் படத்தையும் காட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்கிறான், அவனைக் கொன்றேனும் அந்த ஆவணத்தைக் கைப்பற்றக் கிளம்புகிறார் வசந்த்.
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது. அது கணேஷ் வீட்டில் நடக்கிறது? யார் கொலை செய்யப் படுகிறார்? யார் கொலை செய்கிறார்? என்னும் சூழ்ச்சி நிறைந்த முடிச்சுகளைத் திரைக்கதை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுத்தாளர் வைஜெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்) செய்திகள் மூலம் கவனமாகப் பார்த்துக்கொண்டு தனது அடுத்த கதையாக எழுத நினைக்கிறார். கதையின் திருப்புமுனையை அவர் யூகித்து ஒரு கதை சொல்லி முடிக்க, அடுத்த கணத்தில் அவரும் இறந்து போகிறார். இதுவே இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் கதைக்களம்.
ஒரு இயக்குநரின் முதல்படம் என்ற அளவில் இதனைப் பார்த்தால் ஆழ்ந்த வேலைப்பாடுகளும், மிகுந்த உழைப்பும் இயல்பாகவே இதில் அவர் செலவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. சாம் சீஎஸ் அவர்களின் பின்னணி இசை திரைப்படத்தில் விறுவிறுப்புக்கு மேலும் பலத்தைக் கூட்டி இருக்கிறது. சான் லோகேஷ் அவர்களின் படத்தொகுப்பு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களுக்கும் தனிப் பாராட்டு.
கதையின் போக்கில், முன்னாள் காதலியின் நினைவில் ரூபலாவை வெறுக்கும் வசந்த், அனிதாவின் வலையில் எப்படி விழுகிறார்? எழுத்தாளர் வைஜெயந்தி எதற்காகக் கொல்லப் படுகிறார்? என்ற கேள்விகள் அப்படியே இருக்கின்றன. முருகேசனாக வரும் ஆனந்த் ராஜ் பேசும் வசனங்கள் அனைத்திலும் ஏமாற்றத்தை விட நகைச்சுவை உணர்வே ஓங்கி இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அல்லது அவ்வளவு ஏமாந்ததாக உணர்வதைக் காட்டாமல் இருந்திருக்கலாம். இவை சில கேள்விகள். ஆக மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள் நம் அன்றாட வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
-விவேக்பாரதி
கண்மூடிக் கட்டிலிலே கனவோடு சாய்ந்திருக்கப்
பண்பாடும் நெஞ்சகத்தில் பாழாக ஒருகேள்வி
கேட்டது ! நெஞ்சம் கிளர்ந்தது ! கேள்விதனைக்
கேட்டவரார் அஃதறியேன்! கேள்விமட்டும் எதிரொலியாய்!!
உண்மைக்குப் பொருளென்ன? ஊர்வாழ வழியென்ன?
பெண்மைக்கு விடையென்ன? பேரழகுந் தான்என்ன?
என்றெல்லாம் கேட்டிருந்தால் ஏதேனும் கவிசொல்லி
மன்றத்து முன்னவரின் மரியாதை உரைசொல்லி
தூங்கி இருப்பேன்! தோன்றிவந்த கேள்வியதோ
ஏங்கிட வைக்கும் எக்காளக் கேள்வியம்மா!
என்தேவை யாதென் றென்னை யாரோ
தன்தேவை தீரத் தடுத்தங்கு கேட்டுவிடத்
தேவையென்று நானெதனைத் தெளிந்துரைப்பேன் தெய்வதமே!!
தேவையென்றால் யாதென்றே தெரியாத பிள்ளையன்றோ!!
விட்டில் பூச்சிக்கு விளக்கொளிதா னேதெரியும்!
சிட்டுக் குருவிக்கு சிறுநெல் தானேதெரியும்!
பாடசாலை பயில்கின்ற பச்சிளம் பாலகனைத்
தேடலரும் வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம்
பெருங்கேள்வி கேட்டுவிட்டால் பேதை என்செய்வேன்!
குரங்குக்குக் கீதைக் குணமூட்டல் சாத்தியமா?
கண்கட்டிக் காதலனைக் காட்டுக்குள் விட்டதுபோல்,
பண்கூட்ட மறந்ததொரு பாடகனின் மேடைபோல்,
அச்சம் எதிலும் அச்சமயம்! அச்சமயம்,
உச்சிக் குடுமியை உயரே பிடித்திழுத்துக்
காதைத் திருகிக் கனிவான கொட்டுவைத்து
எழுப்பி விட்டதொரு ஏகாந்த அருட்சோதி!
ஆகாச மார்க்கத்தில் ஆழ்ந்துவந்த நற்ஜோதி!
ஏகாரம் சேர்கவிபோல் எழும்பிவந்த பொற்சோதி!
“ஏடா பிள்ளாய்! எழுத்தறிவும் பெற்றிலையோ
மூடா! முன்னவர்கள் மொழிந்தனவும் கற்றிலையோ?
நின்தேவை விளம்ப நிமிடங்கள் பலநூறோ?
என்கேள்விக் கதுசொல்” என்றென்னை அதட்டிடவே
ஒன்றும் புரியாமல் ஓரசைவும் காட்டாமல்
வன்புலியைக் கண்டவொரு வளையெலிபோல் காட்டுக்குள்
சிங்கத்தைக் கண்டவொரு சிறுநரிபோல் நின்றிருந்தேன்!
அங்கதற்குள் ஒருமாற்றம் அண்டிப் பயங்கொடுக்கச்
சட்டென்று விழித்தேன் சகலமும் பின்னறிந்து
பட்டென்று பேனாவைப் பாசத்தோ டெடுத்ததற்குச்
செல்ல முத்தங்கள் சிலவிட்டு வாழ்த்திட்டு
வெல்லத் தமிழணங்கை வென்று தொழுதிட்டு
தேவை யாதென்று தெளிவாய் எழுதவந்தேன்!
“தேவை தெரிந்துவிட்டால் தேவனாகிப் போவேனே!”
அதற்குள் இன்னுமொரு அழகான இளம்பெண்ணாள்
பதுமை, சிரிக்கின்ற பால்குடம்! இதழ்ச்சிவப்பால்
என்னை அழைக்க எழுதவந்த கதைமறந்து
மின்னேர் உடல்புல்லி மீண்டுமீண்டும் முத்தமிட்டு
மோகப் பெருமயக்கில் மொத்தமும் மறந்ததுபோல்!
ஏகக் காதலே இதயமெலாம் நின்றதுபோல்!
உச்சக் கலைதொட் டுடல்விட்டு வானுலக
எச்சம் அடைந்தேன்! ஏராளப் பறவைகள்
கூடி முயங்கிக் குதிக்கும் விசும்பிடையே
பாடி மகிழ்ந்தேனப் பாவை கைவிலகப்
பதறி விழித்தேன் பார்வை திருத்திச்
சிதறிய விழிக்கோணம் சிந்தாமல் சேர்த்து
மணிபார்த்தேன்! மணியெட்டு மயக்கம் தீர்ப்பதற்காய்க்
கனிந்த காலை,”சித்தக் கனவென்று சொல்லியதே!!
விவேக்பாரதி
தனனதந்த தத்தத்த தந்த
…தனனதந்த தத்தத்த தந்த
……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா !
மணமறிந்த தெத்திக்கு மந்த
…மதுவருந்த தித்தித்த வண்டு
……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு
மரமுவந்து கொட்டிக்க னிந்த
…மணியிலிங்கு மொத்திட்ட தென்றல்
……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு
கணமுமிங்கு சுற்றிக்கி டந்த
…கடுமைகல்லின் செக்குற்ற எண்ணெய்
……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு
கடவுளென்னு மொப்பற்ற வொன்று
…கவலைதுன்ப மெத்திக்க ளைந்து
……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு
பணியொடந்த கட்டிச்ச தங்கை
…பவளதண்டை யிட்டுத்தொ டர்ந்து
……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்
பருவமங்கை சக்திக்க தம்ப
…பதமறிந்து துக்கத்தெ ழுந்து
……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை
அணிதிரண்டு சுற்றிக்கி டந்து
…அழகுசங்க மத்தைப்பு கழ்ந்து
……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே !
அயிலையந்த யிக்கட்ட ழிந்து
….மமரரங்கு சுற்றத்தை வெல்ல
……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே !
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
தனத்த தந்தன தனதன தனதன
…தனத்த தந்தன தனதன தனதன
……தனத்த தந்தன தனதன தனதன – தனதானா !
செழித்த மஞ்சளொ டழகுடை நுதலினிற்
…சிவக்க குங்கும மணிபெற அணிபவள்
……சிவத்தி னங்கமு முடையவ ளுமையவள – ளடிபேணிச்
சிறக்கு மந்நிலை அடையுக விரையுக
…சிவத்தி னுள்பொரு ளறியுக உயருக
……சிதைக்கு மின்னலு மவளடி சரணெனின் – கடிதேகும் !
கொழித்த கொங்கையு மதரமு முடலினில்
…குதிக்கு மங்கியு குழைகளு மிடையினில்
……குறுக்க ணிந்திடு மணிகளு மதிசயப் – பொருளாகும்
கொடுக்க நல்வர மிழிவொடு துயரினைக்
…கெடுக்க வென்றவ ளழகினைத் தொழுதிடக்
…….கொதிப்ப டங்கிடு மழிவுக ளழிவதை– உணர்வோமே !
வழித்த டந்தனி லுமையவ ளதுபெயர்
…விளிக்க வந்திடு மொருபுது பலமொடு
……விழிக்கு ளிங்ஙண மரிதெனு மறிவென – உணர்ந்தேதான்
வளத்தை நல்கிடு முலகதின் கதியெனும்
…வனக்கொ ழுந்தினை மதியினுள் நிறுவுக
……வருத்த மன்னையி னருளடி தொழுதிட – வுடனோடும்
சுழித்த கங்கையுஞ் சுடர்விடு மதியொடு
…சுழற்றும் வெஞ்சின விழியது முடையரண்
…..சுவைக்கு மெல்லித ழுடையவ ளுமையவ – ளெனநாடி
சுகத்தைத் தந்திடு வெனமொழி பகருக !
…சொடுக்கி யின்னலைக் களையுக வெனுந்தினம்
……சுடர்க்க தம்பவி ழியினருள் பொழியுவ – ளுமையாளே !
தனன தனனனா தத்தன தத்தன
…தனன தனனனா தத்தன தத்தன
……தனன தனனனா தத்தன தத்தன – தனதானா !
அருளி லடியவ ருற்றிடு மத்துய
…ரதுவு மழிவுற வைத்திடு மத்தனி
…..னரசி பதகம லத்தினைப் பற்றுக – தினமோடி !
அரச மகளெனத் ! தச்சனி னற்புத
…அழகு மகவென ! இப்புவி மெச்சுற
……அரணின் தவமதை முற்றிட வைத்தவ – னுடல்சேரக்
கருமை நிறமதை யுற்றிட, அத்தனைக்
…கடலொ டுலகுப டைப்பவ னுக்கொரு
…..கடுமை தவமதி யற்றிய சக்தியைப் – பணிவோமே !
கரும வினையதை முற்றுமெ ரிப்பவள்
…களப விழியருள் முக்திய ளிப்பவள்
…..கவலை உடையவ ரத்துய ரெத்திடு – முமையாளே !
வித்தக இளங்கவி. விவேக்பாரதி
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன – தனதான
தத்தன தனவென நித்தமு நடமிடு
…மத்தனி னுடலினில் – சரிபாதி
முத்தென விடமம ருத்தமி பதகம
…லத்தினை யடையுக – உலகோரே ! (1)
மத்தள வயிறனு மத்தனை அழகுக
…ளெட்டிட வுடலுடைக் – கசடாலே
மொத்தமு மெழிலென வித்தக மமைவுறப்
…புத்தருள் பொழிந்தவ – ளுமையாளே ! (2)
மக்களி னிடறற மிக்கம கிழவவ
…ரெக்கண மலறினு – முடனேகித்
தக்கதொர் துணையெனப் பக்கமு மமைபவ
…ளக்கறை அறியுக – உலகோரே ! (3)
அக்கொடு மகிசிய ரக்கனு மழிவுறக்
…கக்கிருள் விலகிட – வருவோளைச்
சிக்கெனப் பிடித்தவள் வக்கனை பதமல
…ருக்கொரு சரணமு – மொழிவோமே ! (4)
வித்தக இளங்கவி. விவேக்பாரதி
காப்பு
ஆத்தாளை அண்ட மளந்தாளை ஏழுலகம்
காத்தாளைக் என்றன் கவிதையினைப் – பூத்தாள
வாவெனக் கூப்பிட்டு வார்க்கின்றேன் வண்ணப்பா !
காவென்றேன் செந்தமிழே கா !
பதிகம்
அரனுடலில் பாதி
…அமையவுரு வாகி
…அழகுவடி வான – உமையாளே
முருகனவ னாள
…முழுமைமிகு வேலை
…முறுவலொடு தந்த – உமையாளே
திருவுடலில் மேவுங்
…களபமத னாலே
…திடமகவை யீன்ற – உமையாளே
அருளினொளி பாய
…அழிவுணர்வு மாய
…அமைந்தகதி நீயே – உமையாளே ! (1)
மனதுரையும் மாய
…மினியகல நாளும்
…மதிமொழியும் நாம – முனதேகாண்
தனமுடைய தாயே
…தயையருளு வாயே
…தவறுகளைப் போக்கும் – வழிதேடி
தினமுனது பாதத்
…திருவருளை நாடும்
…திசைவழியி லோர்க்கு – மருள்வாயே !
கனகபத மாடிக்
…கவிவனைய நாளும்
…கடுகிவர மீனு – முமையாளே ! (2)
பவளமணி தண்டை
…படுவழகி லாரம்
…பகருமிடைச் சூட்டி – அணிவோளே
கவலையது போகிக்
…கரிநெருப்பில் வேகக்
…கடைவிழியில் பாரிங் – கதுபோதும் !
தவழுமெழில் மாரில்
…தமிழினணி பூட்டித்
…தரணியிது காக்க – உடன்வாராய் !
சிவனழகி தேவி !
…சிறுமைகுண மேவி
…சிதையுமுறை நீக்கி – யருளாயே ! (3)
விவேக்பாரதி
கவியரசு கண்ணதாசன் அவர்களது “கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா” என்கிற வண்ண மெட்டிற்கு திரு. கிரேஸி மோகன் எழுதச் சொல்லி நான் எழுதிய கவிதை.
கன்னங் கரிதெனத் தோன்றும் இரவினில்
…..கண்கள் விழித்திருப்பேன் – கவிப்
…..பண்கள் படித்திருப்பேன் ! அடி
கன்னி அழகினைக் காண அனுதினம்
…..காற்றில் அலைந்திருப்பேன் – அடர்க்
…..காட்டில் விழுந்திருப்பேன் !!
எந்தத் திசையிலும் எங்கெங்கு காணிலும்
…..உன்றன் திருமுகமே – எழில்
…..கொஞ்சும் கலைமுகமே ! நிதம்
சிந்தனை செய்கையில் கத்திக் கதறிடும்
…..ஆசையில் நெஞ்சமடி – சுகம்
…..ஆற்றிடப் பஞ்சமடி !
கண்ணுக்கு முன்னொரு மாயை தெரியுது
…..கைகளை நீட்டுகிறேன் ! – கனவின்
…..பொய்களைக் காட்டுகிறாய் ! அடி
பெண்மை இனத்தவர் காதல் மிகுத்திடும்
…..பெட்டை மயிலினமே – இசை
…..பெற்ற குயிலினமே
எத்தனை நாளின்னும் ஏற்க பிரிவினை ?
…..சொல்லடி கண்மணியே – எதிர்
…..நில்லடி பெண்ணழகே ! இதழ்
முத்தம் கொடுத்துயிர் மோட்சம் அடைந்திட
…..முல்லை மலர்ச்சரமே – ஒரு
…..சொல்லை உதிர்த்துவிடே !!!
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
நீல விசும்பிடையே – மிக
…நீளக் கிடக்கும் வெளியிடையே
கால மறிந்திடவே – அதோ
…கடுகி வந்தது வான்பிறையே !
சீல முடையதுவாய்ப் – பல
…சீவனைக் காத்திட வல்லதுவாய்ச்
சாலங்கள் காட்டிடவே – பிறைச்
…சந்திர னாயிறை தோன்றினனே !
நோன்பிருந்தார் உலகில் – அவர்
…நோவை அகற்றியே நூதனமாய்
வான்வழி வந்தவனே – அருள்
…வாரிச் சொரிந்திருள் மாய்த்திடுவாய் !
ஊன மகற்றிடுவாய் – வழி
…உண்மையி லேயெமைக் கொண்டுசெல்வாய்
ஞான மளித்திடுவாய் – எழில்
…ஞாலத்தைக் காக்கும் இறையருளே !
புனித ரமலானை – புவி
…பூரிப் புடன்கொண் டாடிடவே
மனிதர் வர்க்கத்திலே – துயர்
…மன்னும் மனத்தை அழித்திடுவாய் !
இனியொரு காதல்கொலை – வெறி
…இனக்கொலை காணப் பொறுமையிலை
எனதரும் இறையவனே – கொதிப்
…பேறிக் கிடக்குதெம் நெஞ்சகழி !
தீவினை ஓட்டிடுவாய் – நலம்
…திக்கெட்டும் கொண்டுநீ சேர்த்திடுவாய்
ஆவினைக் காத்திடுவாய் – நிலை
…அழகி இயற்கையைக் காத்திடுவாய் !
காவல் புரிந்தெமக்குப் – பழிக்
…காட்டை எரிக்கும் கனல்கொடுப்பாய் !
நாவி லுனைப்புகழ்ந்தோம் – இறை
…நபியரு ளேவந்து நலமருளே !