Tag: விவேக் பாரதி

  • புத்தாண்டு அழகே வருக

    புத்தாண்டு அழகே வருக

    விவேக் பாரதி

    புத்தாண் டழகே வருக! – நாளும்
    புதுமை இன்பம் இயல்பாய்த் தருக!
    இத்தோ டின்னும் நலமாய் – ஒரு
    ஈடில் லாத சுகமாய்த் தரமாய்
    புத்தாண் டழகே வருக!

    கண்ணில் பட்டவை வண்ண மாகுக
    காற்றில் ஆயிரம் பண்கள் தூவுக
    மண்ணில் அனைத்தும் இன்ப மாகுக
    மனமெல் லாமும் மலர்க ளாகுக

    எண்ணம் நினைப்பன ஏற்ற மாகுக
    எல்லாம் எல்லாம் மாற்ற மாகுக
    தண்ணீர் அமுதம் வானில் வளர்க
    தரையெல் லாமும் நிறையென் றாக

    வயல்கள் எல்லாம் வளமை காண்க
    வழிகள் எல்லாம் வலிமை காண்க
    புயங்கள் உடல்கள் உறுதி காண்க
    புதிராம் வாழ்க்கை புதுமை காண்க

    நியதிகள் எல்லாம் நிலைமை காண்க
    நித்தமும் சத்தியம் நிறைவைக் காண்க
    முயற்சி அனைத்தும் முனைப்பைக் காண்க
    முற்றும் லட்சியம் வெற்றியைக் காண்க

    ஏமாற் றங்கள் இனிமறை யட்டும்
    ஏகாந்தங்கள் இனிநிறை யட்டும்
    நாமாய் உழைக்கும் நலம்வள ரட்டும்
    நல்லவர் நெஞ்சில் நயம்விளை யட்டும்

    ஓமெனும் தத்துவம் உள்ளுறை யட்டும்
    ஒவ்வொரு கணமும் களியிருக் கட்டும்
    ஆமிவை எல்லாம் இனியமை யட்டும்
    ஆண்டுகள் நிலையிலை அகமுண ரட்டும்!!

    Share
  • வல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்

    -விவேக்பாரதி

    நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை நாம் போராட மட்டும் தான் காண முடிகிறது. இந்த அவலநிலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கூறுகள் நம்மைச் சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தன் வளர்ச்சியை நம் வளர்ச்சியாக மாற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இளைஞர்கள் அறிவார்ந்த புரட்சிகளைக் கைகளில் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் இந்த வாரத்தின் வல்லமையாளர்.

    நீர் வளத்தைக் காக்க இயற்கை நமக்குக் கொடுத்த அற்புதமான வரம், பனை மரம். ஆழ்ந்து விரிந்து தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும் வேர்களைக் கொண்டவை பனைமரங்கள். ஆறு மற்றும் குளத்தின் கரை ஓரங்களில் பனைமரங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குளங்களெல்லாம் வற்றி நிலங்களாயின. நமக்கும் ஏனோ பனை மரங்களின் மகிமை மட்டும் இதுவரை புரியாமலேயே இருக்கிறது.  பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனையோடும் உழைப்போடும் தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணிக்கிறார் பனை சதிஷ் என்னும் இளைஞர். இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் வழியில் பயணிக்கிறார் இவர்.  சமகால இளைஞர்களைப் போல இவரும் வாழ்க்கைத் தேவைக்காகத் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்திருந்தாலும், பூமியில் பனை மரங்கள் போன்ற ஒரு வாழ்வாதாரத்தைக் காக்கப் பெரிதும் முயற்சியெடுத்து வருகிறார். பனை மரங்களின் பயன்களைச் செல்லும் இடங்களில் எல்லாம் தீர்க்கமாக வலியுறுத்தி வருகிறார்.

    பனை சதிஷ், தன் குழுவுடன் இணைந்து சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2000 பனை விதைகளை சென்ற பருவத்தில் விதைத்திருக்கிறார். இதனைப் பாராட்டி நேற்று (28.04.2019) கவிப்போம் அறக்கட்டளை இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது. துரித உணவுக் கலாச்சாரத்தில் மயங்கி, நம் கலாச்சாரத்தைத் தொலைத்து நிற்கும் இளைஞர்கள் மத்தியில் இவர் இயற்கை உணவுப் பழக்கங்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார்.

    “சிலரிடம் பனை பற்றி எத்தனை விழிப்புணர்வோடு பேசினாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் அதனைக் கடந்துவிடுவது இயற்கை, ஆனால் இளஞ்சிறார்கள் அப்படி அல்ல, பனை விதைகளை விளையாடக் கொடுத்து, நடச்சொல்லி, பனை மரங்களைப் பற்றிய பயன்பாட்டை விளக்கினால் அவர்கள் இந்தப் புரட்சியை மிகச் சாதாரண விளையாட்டாக செய்வார்கள்” என்று ஒரு அமைதிப் புரட்சியைச் செய்து நம்மையும் சேர்த்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார் பனை சதீஷ்.

    அவருடைய சாதனையையும், விடா முயற்சியையும் பாராட்டுகிறோம். வல்லமை மின்னிதழ் குழு பனை சதிஷுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இயற்கை வேளாண்மையுடைய வல்லமையை இன்னும் உலகறிய வைக்கவும் வாழ்த்துகிறோம்.

    பனை சதிஷ் குறித்து அறிய அவருடைய முகநூல் பக்கம் பார்க்கவும். (https://www.facebook.com/sathishkumar.pichandi)

    பனை குறித்த தகவல்கள் தேவைப்பட்டால் அவருடைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் (99949 69088)

    Share
  • ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்!

    பவள சங்கரி

     

    விவேக் பாரதி, “கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்” துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் “வித்தக இளங்கவி” என்ற பட்டம் பெற்றவர். “மகாகவி ஈரோடு தமிழன்பன்” விருது பெற்றவர். “முதல் சிறகு” என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.

    ஆர்வமும் திறனும்:

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும் திறன்.
    தமிழ் இலக்கியத்திலும் மரபு இலக்கணத்திலும் ஆர்வம்.

    பட்டங்கள், விருதுகள் :

    1) வித்தக இளங்கவி பட்டம் (2015)
    2) தமிழன்பன் – 80 விருது (2015)
    3) பைந்தமிழ்ப் பாமணி பட்டம் (2016)
    4) பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017)
    5) ஆசுகவி பட்டம் (2017)

    படைப்புகள்:

    1) யானைமுகனான கதை (மின்னூல்) (2015)
    2) முதல் சிறகு (2016)
    3) பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை (2017)
    4) ககனத்துளி (2018)
    5) பேசுபொருள் நீயெனக்கு (2018)

    வல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர் விவேக் பாரதியை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    Share
  • “தமிழ்நாடு” பெயர்சூட்டல் 50 ஆவது ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டம்

    சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டு, இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகின்றது. அதற்கான பொன்விழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை/பேச்சு/கவிதைப் போட்டிகள் 29.06.2018 காலை 9.00 மணி முதல் தொடங்கி சென்னை இராணி மேரி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த 80க்கும் மெற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வீதம் ஒண்பது மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாயினர். கவிதைப் போட்டிக்குத் “தமிழின் சக்தி” என்றும், கட்டுரைப் போட்டிக்கு “மொழிப்பற்றெங்கே விழிப்புற்றெழுக” என்றும் தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பேச்சுப் போட்டிக்கு தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விதவிதமான தலைப்புகள் அளிக்கப்பட்டன. இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறையுடன் தமிழக தமிழ்வளர்ச்சித் துறையின் சென்னை பிரிவும் சேர்ந்து நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியது. மதியம் 2.00 மணி அளவில் நிறைவு விழாவாக பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்பெற்று தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர் திரு. கோ.விசயராகவன் அவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியும், பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தியும் சிறப்புரை ஆற்றினார். இதே போட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரேநாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

    படம்: பரிசுபெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மாணவர்களுடன் தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநர். துணை இயக்குநர், சிறப்பு இயக்குநர் மற்றும் இராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர்.

    Share
  • சொர்க்க வாசம்

    images (2)

    ஓர் இரவு நெடுநேரம் தூங்க விடாமல் போக்கு காட்டிப் பின் ஒரு வழியாக காலையில் மலர்ந்த ஒரு உணர்வுப் பிரவாகம்

    காளியைத் துணைக்க ழைத்துக் காட்சியை அமைக்க வைத்துக்
    கவிதை செய்யக் காத்திருக்கிறேன்- அவள்
    கண்டு கண்டு பரிகசிக்கிறாள்! – மனத்
    தூளியை அசைத்து விட்டுத் தூங்குமென்னைக் கிள்ளி விட்டுத்
    தூரம் நின்றபடி சிரிக்கிறாள் – என்
    துன்பம் சோர்வினை மிதிக்கிறாள்!

    நீளுமிக் கணத்தி லென்னை நெஞ்சமே அமர்த்திக் கொண்டு
    நீலியூழிக் கூத்திசைக்கிறாள் – என்றன்
    நினைவெலாம் அவள் வசிக்கிறாள்! – தங்கத்
    தோளிலே இருக்கை தந்து தோய்வெலாம் முடிப்ப தென்று
    தோன்றிவந்தவள் நடிக்கிறாள் – திசை
    தோறுமின்னிசை படிக்கிறாள்!

    அண்மையில் நெருங்கி வந்து அக்கரைக் குயர்ந்து தாவி
    அன்னை சக்தி போக்குசெய்கிறாள் – நின்று
    ஆவி யுள்ளில் வாக்கு செய்கிறாள்! – காணும்
    உண்மையில் ஜொலிக்கும் சக்தி உணர்வெலாம் இனிக்கும் சக்தி
    உச்சி கோதி எனையணைக்கிறாள்! – கொஞ்சம்
    உழல விட்ட பின்பிணைக்கிறாள்!

    நீரில்வான் நெருப்பு காற்று நிலத்திலே திளைக்கும் ஆதி
    நித்தநித்தம் நமை அசைக்கிறாள்! – நம்
    நரம்பிலேறிச் சுரமிசைக்கிறாள் – அந்தக்
    காரிலே வெடித்து வந்து கடலிலே கலந்து பின்னும்
    கரியமேக மாய்த்திரள்பவள்! – தன்
    கடமையாக்க நமைவிடுக்கிறாள்!

    இசையினோ டின்ப வெள்ள அசைவெலாம் சமைக்கு மன்னை
    ஆடுங்கூத்தை உள்ளில் காண்கிறோம் – அந்த
    அனுபவத்தில் ஞானம் பூண்கிறோம்! – சூழும்
    விசையெலாம் நமக்கு வாய்க்கும் விடையெலாம் அருட்க டம்ப
    வாசினியின் ஆசியென்கிறோம் – அதன்
    வாசனையே சொர்க்கமென்கிறோம்!!

    -விவேக்பாரதி
    10.12.2017

    Share
  • மகாசக்திக்குப் பிரார்த்தனை

    விவேக் பாரதி

     

    Aadi-Sakti-parvati-Mata

     

    அம்பிகே சிவசக்தி – எனை
    ஆட்டுவிக்கும் காலம் எத்தனையோ?
    அம்படி நானுனக்கு! – எனை
    ஆற்றலோ டேவிடும் வில்லடிநீ!!
    நம்பினேன் உள்ளவரை – அவர்
    நாளெலாம் நடித்திடக் காணுகையில்
    வெம்பினேன் மனதுக்குள்ளே – இந்த
    வேதனை மாய்ந்திட வழியிலையோ?

    உள்ளமாம் அகழியிலே – நான்
    உள்ளொரு முதலைபோல் உழன்றிடவே
    தெள்ளிய ஞானமெனும் – ஒளித்
    தேரெனைக் கூப்பிடும் நாள்வருமோ?
    பள்ளெலாம் உன்புகழ்தான் – என்
    பாட்டெலாம் கூத்தெலாம் உன்பெயர்தான்
    துள்ளும்வேல் கொடுத்தெனையும் – தொடும்
    துக்கமும் நீங்கிடத் துணைபுரியே!!

    பற்றிலா வாழ்வுகொடு – இப்
    பாரினைப் பாடிடும் வலிமைகொடு
    ஒற்றிலா நெஞ்சுகொடு – உன்
    ஓங்கார ஓசையின் சந்தம்கொடு
    முற்றிலா இன்பம்கொடு – சுக
    முக்தியிலே எனை மூழ்கவிடு!
    கற்றிலேன்! கல்விகொடு! – புவிக்
    கயமையைப் போக்கிடும் கணையைக்கொடு!!

    உன்னொளிக் கிரணத்திலே – பல
    உவகைகண் டேன்மிக உணர்ச்சிகொண்டேன்
    அன்னையே உன்மடிமேல் – என்
    ஆவி அமர்ந்திடச் செய்பவளே
    என்னையே தந்துவிட்டேன் – இங்கு
    என்செயல் யாவையும் நின்செயலே
    இந்நில வாழ்வினிலே – யான்
    இயற்றுவ தெக்கடன்? சொல்லடியே!!

    அம்பிகே சிவசக்தி!!

    23.11.2017

    Share
  • வரவேற்புக் கவிதை

    விவேக் பாரதி

     

    என் கல்லூரியில் இன்று இணைந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த(இரண்டாமாண்டு) மாணவனான நான் மனதாரப் பாடிய வரவேற்புக் கவிதை….

    இளமை கொண்டவர்கள் வாழ்கவே – வாழ்கவாழ்க
    இளமை கொண்டவர்கள் வாழ்கவே !
    வளமை ஆக்கவந்த மக்களாம் – வாழ்கவாழ்க
    வலிப டைத்தவர்கள் வாழ்கவே !

    கனவு காணுங்கண்கள் வாழ்கவே – உயருதற்குக்
    கடமை ஆற்றுங்கைகள் வாழ்கவே !
    மனதில் அச்சமற்ற வீரர்கள் – பூமியெங்கும்
    மணம்ப ரப்பிநீடு வாழ்கவே !

    வேட்கை கொண்டநெஞ்சர் வாழ்கவே – சூழுகின்ற
    வேத னையெரித்து வாழ்கவே !
    பாட்டி சைக்ககுமிதழ்கள் வாழ்கவே – கல்விகற்று
    பாரு யர்த்தும்வர்க்கம் வாழ்கவே !

    காதல் பேணுமக்கள் யாவரும் – இன்பமுற்று
    கவிதை போலமண்ணில் வாழ்கவே !
    நீதி நேர்மைகொண்டு வாழ்ந்திடும் – இளைஞரென்றும்
    நீடு வாழ்கவாழ்க வாழ்கவே !

    எச்ச ரிக்கைகொண்ட மானுடர் – நல்லவார்த்தை
    எழுத மண்ணில்நன்கு வாழ்கவே !
    மெச்சு தற்குமுரிய சக்தியாம் – இளைஞரென்னும்
    மேன்மை யாளர்வாழ்க வாழ்கவே !

    Share
  • கருமாரி கிரகமாலை

     

    விவேக்பாரதி

     
    காப்பு

    318794_207332152667266_100001714496823_574807_651454047_n

    நவக்கிரக நாயகியே நானுன் பதத்தில்
    அவம்நீங்க வேண்டி அமர்ந்து – கவிசொல்வேன் !
    மாலை முடிந்திடவும் மாற்றம் நிகழ்ந்திடவும்
    காலங் கொடுத்தருள்வாய் காப்பு !

    நூல் :

    காரிய மாற்றிக் கடமைசெய் வோரின் கருத்திடையில்,
    சீரிய நோக்கிற் சிறப்புறச் செல்பவர் சிந்தைதனில்
    பேருரு வாகும் பெருங்கரு மாரி பெயருரைக்கச்
    சூரியத் தேவன் சுகத்தினை நல்கிச் சுடருகவே !

    சுடர்விடு மட்டிகை சுட்டிக ளாரமும் சூடியிங்கே
    இடமெனும் பாக மிருந்தருள் வீசும் இறையவளைக்
    கடமை புரியும் கருமா ரியவள் கனிப்பெயரைச்
    சடுதியிற் சொல்லிடச் சந்திரன் இன்பொளி சாற்றுகவே !

    சாற்று மவள்பெயர் தந்திடும் சக்திகள் சங்கடத்தை
    மாற்றி உயர்க்கதி மண்ணில் நிறுத்திடும் ! மாண்புடைய
    காற்றி லுயர்ந்து கருமா ரியின்பேர் கருதுகின்ற
    ஆற்ற லுணர்ந்தங் காரகன் நன்மை அளித்திடவே !

    அளிக்கும் சிரத்தையி லானந்தங் கண்டே அணைத்திடுவாள் !
    ஒளிதிகழ் கல்வியி லுண்மையி லூன்றியிங் கோங்கிடுவாள் !
    களிதருந் தேவி கருமா ரியின்பேர் கதைத்திடவே
    தெளிவினை நெஞ்சிடைத் தேக்க புதனெனும் தேவனுமே !

    தேவரின் துன்பமும் தேய்ந்திடக் கந்தனின் தேசெனவே
    காவலர் கைகொளும் கங்கெனும் வேலினைக் கைகொடுத்தாங்
    காவலில் நின்ற அருங்கரு மாரி அருட்பெயரைக்
    கூவிட வந்து குருவறி வூட்டுக குணமுடனே !

    குணமும் திறமும் குறையில் மதியும் குவித்திடுவாள் !
    மணமும் தவமும் மடமன மாளும் வழிவகுப்பாள்
    கணக்கை அறியும் கருமா ரியவள் கனற்பெயரால்
    பணமும் உயர்வும் பலசுக் கிரனவர் பாய்ச்சுகவே !

    பாய்ந்தெழுஞ் சத்தம் பகலிர வெல்லாம் படபடக்கக்
    காய்ந்தெழுந் தந்தக் கடுமகி ஷாசுரன் காலமறுத்
    தோய்ந்தவள் பேரை ஒழுகித் துதிக்கு மொருவர்தமை
    ஆய்ந்துபின் பற்றியிங் காள்க சனியெனு மாண்டவனே !

    ஆண்டவன் கொண்ட அரவைக் குடையா யமைத்திருப்பாள் !
    மீண்டது கையின் விரல்மோ திரமாய் மிளிர்ந்திடுமே !
    வேண்டு மனைத்தையும் வேகமெ னத்தரும் வெற்றியின்பேர்,
    யாண்டுமு ரைக்க யிராகுவும் நோக்குக யாக்கையையே !

    யாக்கை கடந்தவள் யாரும் வணங்கிட ஆதரிப்பாள் !
    பூக்கள் மணந்தரும் புன்னகை ஏந்திப் பொலிந்திடுவாள் !
    காக்கை நிறத்தள் கருமா ரியின்பேர் கதைசொலவே
    கேட்கும் அனைத்தையும் கேதுவும் நல்குக கேண்மையிலே !

    கேண்மையு மாகிக் கெடுத்திடு மெண்ணங் கெடுத்தெனக்கும்
    ஆண்மையை என்று மருள்க நவகிரக ஆண்டவர்தாம் !
    பூண்பது சத்தியம் ! புத்தியில் நிற்பது பூரணமே !
    காண்பது சக்தியைக் காய மவள்செயுங் காரியமே !
    “ஓம் சக்தி”

    Share
  • எது பக்தி ??

    விவேக் பாரதி

     
    பக்தி என்ப தெல்லாம் – இங்கே
    பாழ்ப டிந்து போச்சு !
    முக்தி என்ப தெல்லாம் – சாகும்
    மூட மென்று மாச்சு !
    பக்தி என்ப தென்ன ? – அன்பைப்
    பாடு கின்ற சமயம்
    அக்னி யாயின் அதனை – ஏற்றும்
    அறிவுத் திரியே பக்தி !

    பக்தி ஒன்றி னாலே – கிட்டும்
    பலன்கள் நூறு கோடி
    மக்கள் என்ற எண்ணம் – தங்கி
    மண்ணில் ஒழுக்கம் நேரும் !
    பக்க முள்ள மனத்தை – மனத்தால்
    பார்த்தும் உதவி செய்தும்
    அக்க றைகள் காட்டும் – நிலைமை
    அந்த பக்தி நல்கும் !

    கடவுள் பேரைச் சொல்லி – பெரிதாய்க்
    கட்சி சேர்த்துக் கொண்டு
    நடை முறை வழங்கி – அதிலே
    நடக்கத் தவறு கின்ற
    மடமை அல்ல பக்தி ! – உயரும்
    மார்க்கம் பக்தி யாகும் !
    உடைமை தீரும் போதும் – கையின்
    உறுதி பக்தி ஆகும் !

    ‘பற்றி ருக்க வேண்டும் – எதிலும்
    பசையி ருக்க வேண்டும்
    ஒற்றி ருக்க வேண்டும்” – என்றே
    ஓதல் பொய்மை யாகும் !
    பற்ற றுத்த நிலையே – உண்மைப்
    பக்தி யாகும் ! ஆசை
    அற்றி ருக்கும் நிலையே – பெரிய
    அருளின் பக்தி யாகும் !

    வேலை மீது மனிதன் – இங்கே
    வைக்கும் பாசம் பக்தி !
    கால மாற்றம் தன்னை – மனங்கள்
    காதல் கொள்ளல் பக்தி !
    கோலக் கவிதை மீது – கவிஞன்
    கொள்ளும் உரிமை பக்தி !
    ஞாலம் எங்கும் அன்பை – விதைக்கும்
    ஞானம் பக்தி யாமே !

     

    Share
  • காதலதிகாரம் (1)

    விவேக் பாரதி

    unnamed (4)

    Share
  • நீயிருப்பதால்

    விவேக் பாரதி

    unnamed (1)

    நீயிருப்பதால் இங்கு நானிருக்கிறேன் !
    நீயசைப்பதால் மண்ணில் நான்நடிக்கிறேன் !
    தீயிருப்பதால் என்னைப் பாடவைக்கிறாய் !
    திமிருப்பதால் கொஞ்சம் ஓடவைக்கிறாய் !

    பூமணத்திலே எழுந்து வார்த்தை தருகிறாய் !
    தாமதத்திலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய் !
    தீமனத்தில் நீரையூற்றி நீ தணிக்கிறாய் !
    நாமணக்கப் பாடல்தந்து நீ சிரிக்கிறாய் !

    ஏங்கவைத்துக் கதறி என்னை எழுதவைக்கிறாய் !
    தூங்கவிட்டு பின்னெழுப்பிக் கனவு தருகிறாய்
    வாங்கிவிட்ட பாவமென்ன ? என்னைக் கையிலே
    தாங்கிக்கொள்ள நேரமென்ன ? வா அணைக்கவே !

    மாலைநேரத் தென்றல் போல நீ நுழைகிறாய் !
    கோலம்நூறு என்னகத்தில் நீ வரைகிறாய் !
    வேலையென்ன பாரினுக்குள் என்னை வைக்கிறாய்
    காலமென்னும் நூல்படைத்து நீ அசைக்கிறாய் !

    ஒற்றைக் கையில் வீணையோடு நீ ஜொலிக்கிறாய்
    கற்றைக் கூந்தல் காற்றிலாட தீ வளர்க்கிறாய் !
    நெற்றிக் கண்ணன் பாதியாகி நிமிரவைக்கிறாய்
    வெற்றி உண்மை வீரமாகக் கொலுவிருக்கிறாய் !

    Share
  • கவியரசர் கண்ணதாசன்

    விவேக பாரதி 

     

    கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து….இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் நான் கேட்ட ஒரு கிராமியப் பாடலின் மெட்டில்….

    unnamed

    வானம்விட்டு வந்தானோ ? மண்ணுக்குள்ள நின்னானோ ?
    வார்த்தையால கட்டிப்போட்டு அவுக்காம போனானோ ?
    ஞானஞ்சொல்லித் தந்தானோ யாருகிட்ட கேட்டானோ ?
    ஞாலமெலாம் வாய்பொளக்க நாளும்பாடி வெச்சானோ ?

    ஊனமுற்ற பேர்கள உசுப்பிவிடும் பாட்டுல,
    ஊருக்குள்ள கேக்குற உற்சாகக் கூத்துல,
    தானும்வந்து நிக்குறானடி – என் கண்ணம்மா
    தமிழால சொக்குறோமடீ !

    பாட்டுபாடி வந்தானே பாடமெலாஞ் சொன்னானே
    பக்குவமா பக்தியோடு பலசேதி தந்தானே !
    ஆட்டம்போட வெச்சானே அமையாக வெச்சானே !
    ஆடி அடங்கிப்போகும் அர்த்தமெலாஞ் சொன்னானே !

    கூட்டஞ்சேக்க பாக்கல ! கொள்கயெதும் பேசல !
    கூட்டாளி யாகல ! குடுக்காம போகல !
    நாட்டுக்குள்ள நிக்குறானடி – என் கண்ணம்மா
    நாமபாத்து சொக்குறோமடீ !

    கண்ணனுக்கு தாசனா ! கவிதைக்கெல்லாம் ராசனா !
    கதசொல்லும் பாட்டுகளக் காலமெலாம் வீசுனான் !
    வண்ணத்தமிழக் கொஞ்சுனான் ! வரிவரியாக் கொஞ்சுனான் !
    வாழ்க்கையோட தத்துவத்த வாழ்ந்துகிட்டே பாடுனான் !

    கிண்ணத்தையும் மறக்கல ! கீதையையும் மறக்கல !
    கீழிருந்து வந்தவன் மறுபடியும் விழுகல !
    எண்ணத்துல நிக்குறானடி – என் கண்ணம்மா
    எழுத்தால சொக்குறோமடீ !

    https://soundcloud.com/vivekbharathi/nlb3dghekzqg

    Share
  • நாளையென்ன நாளை

     

    நாளையென்ன நாளையைய்யா வரதராஜா ! – உன்
    . நல்லருளை இன்றனுப்பு வரதராஜா !
    நீளுகின்ற காத்திருப்பு போதும்ராஜா – உன்
    . நிர்மலக்க ழல்காட்சி சிந்துராஜா !
    தோளிலென்னை வேஷபாரம் தாக்குகின்றதே – மனம்
    . தோற்றபடி வெந்தழுது வீங்குகின்றதே
    ஆளுமாக பாதஜாலம் காட்டுராஜா – அட
    . அம்பிகையின் சோதரனே வரதராஜா !

    காலமென்னை ஆட்டுவிக்கக் கண்டிருப்பதோ – உன்
    . கழல்பிடிக்க விளையாட்டு கொண்டிருப்பதோ
    ஓலமிட்டு கெஞ்சுமொலி கேட்கவில்லையோ – என்ன
    . ஓரவிழியின் ஜாலமெலாம் பிள்ளைமுன்னமோ ?
    தோலிறுக்கம் மொழிநடுக்கம் நேரும்போதுதான் – உரு
    . தோற்றியெனைத் தேவலோகம் காட்டுமெண்ணமோ ?
    பாலனிட்ட கவிப்புலம்பல் மாண்டுபோகவோ – ஒரு
    . பார்வையொளி வீசமனம் சொல்லவில்லையோ ?

    காத்திருப்பு நன்மையென்று கண்டபோதிலும் – உன்
    . கருணைமழை கடமைவினை அதைமறுப்பதோ ?
    பூத்திருக்கும் கண்களுக்குள் புயல்நடப்பதோ ? – வளிப்
    . பூழ்திவந்து நெஞ்சினோரம் வெடிவெடிப்பதோ ?
    சாத்திரங்கள் சொல்வதுபோல் வாட்டுமெண்ணமோ ? – இந்தச்
    . சமகாலத் தீயட்டம் இன்னும்மன்னுமோ ?
    ஆர்த்தெழுந்து கையிலெனைத் தூக்குராஜா – உன்
    . அருட்கமலப் பாதத்தைக் காட்டுராஜா !

     

    https://soundcloud.com/vivekbharathi/drofx6rv7ntu

     

    “ஓம் சக்தி”
    விவேக்பாரதி

    Share