திவாகர்

தை மாதம் வந்தாயிற்று.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஏனெனில் தைமாதம் புதுநெல் அறுவடையில் கிடைக்கும் உழவர் பெருமக்கள் யாவரும் புதுநெல்லைத் தந்து ஆண்டு முழுவதற்குமான தங்கள் வயிற்றுச் சோறைப் பெறும் மாதம். உழவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க, அந்தப் பொங்கும் மகிழ்ச்சியை மங்கலமாகக் கொண்டாட வழி வகுத்த மாதம். தாம் மட்டுமல்லாமல் தம்மால் ஆதரிக்கப்பட்டுவரும் கால்நடைகளையும் சிங்காரித்து அழகுபார்த்து ஆராதனை செய்து சந்தோஷத்தை அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிரும் மாதம். உழவர்களின் பொன்னான மாதம்.

இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இந்த இருபது-இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வந்த பசுமைப் புரட்சி உலகின் வயல் வளத்தையே புரட்டிப் போட்டு விட்டது. இயற்கையாகவே வரவேண்டிய தானிய உணவுகள், காலம் பார்த்துக் கிடைக்கவேண்டி பயிரிட வேண்டிய உணவுப் பயிர்கள் பெருகி வரும் மக்கள் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டும் வளர்ந்து வரும் நாகரீக உலகின் வசதிக்கேற்பவும், சுலபமாகவும் அதே சமயத்தில் மிக அதிக அளவில் உற்பத்திப் பெருக்கத்தையும் ரசாயனப் பொருட்கள் உதவியின் மூலம் பெற்றுக்கொண்டு வருவதை உலகெங்கும் கண்டு வருகிறோம். நிச்சயமாக உழவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடாக நம் நாட்டை அறிவித்துக் கொள்ளலாம். மகிழ்ச்சியான விஷயம்தானே.. ஆனால் அப்படி இல்லைதான். உற்பத்தி அதிகமானாலும் உழவர்களுக்கு உற்பத்திக்கான செலவு வகைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் உழவர் சமுதாயம் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்படுகின்ற காலங்கள் இவை.

311091_106473259466111_178984958_nஇதைப் பற்றி நிறைய எழுதலாம். உற்பத்திச் செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி, கடனைத் திருப்பமுடியாமல் உழவர்கள் நாடெங்கும் தற்கொலை செய்துகொள்வதைக் கேட்டுக் கண்ணீர் வடிக்காமல் இருக்கமுடியாது. இத் தருணத்தில் உழவர்களைப் போற்றுவோம் என்று நமக்கு உறுதியாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல் உழவர்களைப் போற்றும் குறட்பாக்களை எழுதி பொருளையும் அழகாக விவரித்துப் பதிவிட்ட திண்டுக்கல் தனபாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். இதோ அவரது பதிவின் சுட்டி.

http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html.

படித்துப் பாருங்கள். உழவின் அருமை புரியும். ஆதிகாலத்திலேயே சொல்லப்பட்ட கருத்துகள் இன்றும் பொருந்தும் வகையில் இருப்பதற்காக ஒரு பெருமையும், அதே சமயத்தில் இந்த உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாமும் உதவி செய்து கை கொடுக்கவேண்டிய உந்துதலும் கிடைக்கும்

திரு தனபாலன் உழவர்களுக்கு மட்டும் தோழரல்ல. அவர் எல்லாப் பதிவர்களுக்கும் தோழர். எங்கெங்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தானே வலிய வந்து உதவும் பண்பாளரான திரு தனபாலன் அவர்களை இந்தத் தைமாதத்து வாரத்தில் வல்லமையாளராக வந்தமைக்கு வாழ்த்துகள்.

கடைசி பாரா: திருமதி காயத்ரி பாலசுப்ரமணியம்:

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. வாழ்த்திய அன்பு பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி

  2. திரு. திவாகர் அவர்களுக்கும், திருமதி.காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்… வாழ்த்துக்கள்…

    இதை எனக்கு வாழ்த்துகளோடு தெரிவித்த திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கும், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மிக்க நன்றி…

  3. வாழ்த்துகள் தனபாலன்.. “வல்லமையாளர்” என்று சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் நீங்கள். பெருமையும் சந்தோஷமும் கலந்து வாழ்த்துகிறேன்..

  4. வல்லமையாளர் என்பதற்கு மிகப் பொருத்தமானவர் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் .அவருக்கும் ,உங்களுக்கும் பாராட்டுக்கள் !

  5. இந்தவார வல்லமையாளர் திண்டுக்கல் திரு.தனபாலன் அவர்களுக்கும், திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  6. உழவர் முதல்
    பிளாக்கர் வரை…..
    அனைவருக்கும்
    பொதுவானவர் விருதுகள் வழங்கியதில் வாழ்த்துகள்.

  7. மனமார்ந்த வாழ்த்துகள், தனபாலன்! மிக்க மகிழ்ச்சி! சொல்லேர் உழவரான தங்கள் தமிழ்த் தொண்டு மிகவும் போற்றத் தக்கது! 

  8. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எந்த விருதுக்கும் தகுதியான ஒரு மனிதன். அவருக்குத் தெரியாத விடயங்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம். எந்த ஒரு துறையையும் நுணுக்கமாக ஆராய்ந்து அதை அழகு தமிழில் கட்டுரையாக வடிக்கக் கூடியவர். சலிப்பில்லாத உழைப்பாளி. மதிப்புக்குரிய ஒரு மனிதனைக் கௌரவித்து நீங்களும் கௌரவத்தைத் தேடிக் கொண்டீர்கள். வாழ்த்துக்கள் திவாகருக்கும் உரித்தாகட்டும்.
    “ஒன்றுபட்டு உயர்வோம்”

    வாழ்த்துக்களுடன்
    இ.சொ.லிங்கதாசன்
    ஆசிரியர்
    அந்திமாலை இணையம்
    டென்மார்க்.
    http://www.anthimaalai.dk

  9. பாராட்டிய அன்பு நெஞ்சங்களான பி.தமிழ்முகில் நீலமேகம், சச்சிதானந்தம், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர்களுக்கு மனமார்ந்த நன்றி

  10. டிடி அவர்களுக்கு வாழ்த்துகள் எல்லார்வலைப்பூவிலும் முதலில்வந்து பின்னூட்டமிடும் டிடி அவர்களின் சுறுசுறுப்பு வியப்பானது பாராட்டவேண்டிய ஒன்று..

    காயத்ரி அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *