‘அப்பச்சி’ முப்பது / காமராசருக்கு ஒரு வெண்பா மாலை- பாகம் 2
இலவசக் கல்வி :
கல்வித் தரமுயர்த்தி ’எல்லோர்க்கும் பள்ளியில்
கல்வி இலவசம்’ என்றாக்கும் சட்டத்தால்
கல்லாமை என்பதை இல்லாமல் ஆக்கிட
நல்லதாய்க் கண்டார் கனவு. (11)
கல்வித் தந்தை :
போதிய நூலகம் ஆய்வகம் பள்ளிக்கும்,
ஊதியம் கூடுதல் ஆசிரியர்க் கும்கொடுத்தார்;
கல்லூரி கள்பலவும் தந்தார்; தமிழகக்
கல்வியின் தந்தை அவர். (12)
அறிவொளி இயக்கத்தின் முன்னோடி :
படிப்பறிந்த ஒவ்வொரு மாணவரும் நாட்டில்
படிக்காத மூத்தவர் ஐவரைத் தேர்ந்து
படிப்பறிவுக் கற்றுத் தரவேண்டும் என்றார்;
படிக்காத மேதை அவர். (13)
கிங் மேக்கர் :
பிரதமர் ஆகும் பெரும்வாய்ப்பு வந்த
இருமுறையும் மற்றவரை அப்பதவி ஏற்கவைத்த
எங்கள் தலைவருக்கு மட்டும் பொருந்துமாம்
’கிங்மேக்கர்’ என்ற பெயர். (14)
அப்பச்சி :
விருதுநகர் சொந்தங்கள் வீழ்த்தியது அம்பால்;
குமரியின் பந்தங்கள் வாழ்த்தியது தம்அன்பால்;
’அப்பச்சி’ என்றழைத்து தில்லிக்(கு) அனுப்பினர்
கட்சிப் பிரிவை மறந்து. (15)
தலைமையின் பெருமை :
காலில் விழுந்தால் கடும்கோபம் தான்கொள்வார்;
பாலில் விழுமோர்த் துளிவிசம் என்பார்;
உறவுக்கும் கூடப் பரிந்துரைக்க மாட்டார்;
அரிய மனிதர் அவர். (16)
துறவி :
முதலில் ’விடுதலை தான்வரட்டும்’ என்றார்;
’முதிர்கன்னி யர்கரை சேரட்டும்’ என்றார்;
திருநாட்டை முன்னேற்ற முன்நின்(று) உழைத்தார்
திருமண வாழ்வைத் துறந்து. (17)
குழந்தை மனம் கொண்டவர் :
சற்றேனும் ஓய்விருந்தால் நள்ளிரவு என்றாலும்
குற்றாலக் கொட்டும் அருவியில் நின்றிடும்;
நீச்சத்தண் ணீர் தா எனக்கேட்டு வாங்கிடும்;
கூச்சமில்லாப் பிள்ளை அவர். (18)
படிக்காத மேதை :
ஆறாம் வகுப்பளவு தான்படிப்பு; ஆனாலும்
ஆறாய்ப் பெருகிடும் ஆங்கிலத்தில் வாதங்கள்;
எள்ளி நகைப்போரும் ஏமாற; அற்புதமாய்த்
துள்ளி விளையாடும் நாக்கு. (19)
தலைவர் வாக்கு :
’கிராமத்தின் முன்னேற்றம் நாட்டின்முன் னேற்றம்;
கிராமத்தை முன்னேற்ற காந்தியைப்பின் பற்று;
பகட்டகற்று; ஏழ்மை விரட்டிவிடு; பண்பைப்
புகட்டு!’;இது அப்பச்சி வாக்கு. (20)
தொடரும் ………………..