உலகமெங்கும் ஒரே மொழி …
— கவிஞர் காவிரிமைந்தன்.
உலகமெங்கும் ஒரே மொழி …
காலவெள்ளத்தில் கரைந்துபோகாதது காதல் ஒன்றுதான்! உள்ளங்கள் பேசுவதற்காகவே உலகில் தோன்றிய மொழி! இந்த மொழியை எந்த மனிதனும் பேசாமல் இல்லை! அப்படிப் பேசமறந்தவன் மனிதனுமில்லை! ஜீவராசிகளில் மனிதனால் மட்டுமே வழிவழியாக மொழியப்படுவதுடன், கவிதைகளாய், காவியங்களாய், கலை வடிவங்களாய் பதிவுகள் செய்யப்பட்டுவரும் உன்னத மொழி காதல்!
அன்பின் மறுவடிவம் காதல் என்பதை அறுதியிட்டுச் சொல்வதற்கு ஆதாம் ஏவாள் முதல் இன்றுவரை காதலர்கள் படையெடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அங்கு இங்கு என்று பேதம் இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கிற காதலை உலகமெங்கும் காண முடிகிறதல்லவா?
இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் இனிமைதவழும் தென்றல்காற்று இதயத்தில் பரவிநிற்கும்! எளியதமிழில் கவிதைமுழங்கும் காதலின் ஊர்வலம்!
கவியரசரின் கைவண்ணத்தில் ஒவ்வொரு வரியிலும் உன்னதம் தென்படுகிறது! மகத்தான சக்தியாய் விளங்கும் காதலின் மாண்புகள் புரிகிறது! அள்ளி எடுத்த பின்னும் இன்னும் அமுதசுரபியாய் விளங்குவது காதல் என்கிற சுகவரியில் கொஞ்சம் மூழ்கலாமே!
நாடோடி திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மீட்டிய இசையில், கண்ணதாசன் கவிதைமழையில், கானக்குயில்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய கீதம்! காதலுக்கு இது ஒரு வேதம்!!
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
(உலகம்)
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
(உலகம்)
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் தேடிய பின்னும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடிச் சென்று சேர்வது காதல்
தேடிச் சென்று சேர்வது காதல்
(உலகம்)
காணொளி: https://youtu.be/O2j_0yaXZkM