-றியாஸ் முஹமட்
தீப்பந்தங்கள் எல்லாம் என்னை நோக்கியே குறி வைக்கப்படுகிறது
கருகிப் போன என் தோல்களுக்கு
வலி உணர்வு தெரிவதேயில்லை
பாழாய்ப்போன என் மனதிற்குப் 
பாதகர்களின் கொடும் செயல் புரிவதேயில்லை!
கருகிப்போன என்னுடம்பின்
தழும்புகளையும், நரம்புகளையும்
எலும்புகளையும்
எப்படித்தான்
அடையாளம் கண்டு சித்திரவதை செய்கிறார்களோ…?
உணர்வுகளற்று
உயிரும், கருகிப் போன
உடல்தானே !
இனி,
கருநாகம் தீண்டினாலென்ன?
கழுகுகள் கொத்தினாலென்ன?
கண்டம் துண்டமா
நீ வெட்டினாலென்ன?
இறைவன் வகுத்த
போதனையில்தானே வாழ்ந்தேன்
ஏன் இந்தச் சித்திரவதையால் சாகிறேன் !
காலாவதியாகிப் போன
என் ஆத்மா சாந்தியடைய…
இறைவா!
நீ தந்து விட வேண்டும்
எனக்கொரு கல்லறை
என் தாய் நாட்டில்
எனக்கொரு மண்ணறை!

Leave a Reply