-மேகலா இராமமூர்த்தி

மனங்கவரும் இந்தப் பனங்காய் வண்டியை ஓட்டிச்செல்லும் சிறார்களைக் காண்கையில் நம் உள்ளமும் குழந்தையாய் மாறிக் குதூகலிக்கின்றது.

nungu vandi

காலச்சக்கரமும் இந்த வண்டிச்சக்கரங்களைப் போலவே சுழன்றுசெல்லும் இயல்புடையது என்பதை இத்தருணத்தில் நம் மனம் எண்ணிப்பார்க்கின்றது.

நுங்குவண்டி கண்ட நம் கவிஞர்கள் மனத்தில் நுங்கும் நுரையுமாகக் கற்பனைவெள்ளம் கரைபுரண்டோடத் தொடங்கியிருக்கும். அந்தக் கவிவெள்ளத்தில் நாமும் நனைந்துவரலாம்!

***

’நொங்குவண்டி பூட்டிக்கிட்டுச் சந்துபொந்தெல்லாம் சுற்றிவரும் சிறுவர்களின் மகிழ்வைத் தன்கவிதையில் கவினுறப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹிஷாலி. 

நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு
சந்து பொந்து தாண்டி வந்தோம்
பத்து மரக் காற்றிலும்
பட்ட துன்பம் தான் மறந்தோம்
எட்டு திசை போனபின்பும்
விட்டு மனம் போகலையே
ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும்
உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி 

***

இற்றைய வாழ்வில், உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதிபயக்கும் பழைய விளையாட்டுக்கள் எல்லாம் காணாமற்போய்க் கணினி விளையாட்டுக்களே கதியென்று சிறார்கள் மாறிவிட்டிருப்பது கண்கூடு. அதனை விளக்கும் கவிதை…

வெப்பம் நிறைந்த கோடையிலே
விளையா நுங்கு குடித்தபின்னே
அப்பா லெறிந்த கூந்தலிலே
அழகு வண்டி தனைச்செய்து
கொப்பை ஒடித்தே ஓட்டியநாள்,
கணினி உலகில் மெய்மறக்கும்
இப்போ துள்ள பிள்ளைகட்கே
இலாமல் போன பழங்கதையே…!

 *** 

வெம்மை தணிக்கும் நுங்கையுண்டு அதிலே வண்டிசெய்து ஓட்டிமகிழும் பாக்கியத்தை இழந்துவிட்ட தலைமுறை இது!” என்று இன்றைய குழந்தைகளின் நிலைக்காக இரங்கியுரைக்கும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

***

இயற்கையை மறந்தோம்…கூடவே இயற்கையோடு நம்மை இணைத்துவைக்கும் விளையாட்டுக்களையும்! ”நுங்கே அறியாத் தலைமுறைக்கு நுங்குவண்டி குறித்துமட்டும் என்ன தெரிந்துவிடப்போகிறது? இயற்கையன்னையே என்செயப் போகிறாய் எம் இளைய தலைமுறையை?” எனச் சீற்றத்தோடு வினா எழுப்பும் கவிதை…

வனங்கள் தொலைந்தது போல நம்
வாழ்வின் வசந்தங்கள் தொலைந்தனவோ……
மரங்கள் தொலைந்தது போல நம்
மனம்லயிக்கும் விளையாட்டுகள் தொலைந்தனவோ…..
கூடிவிளையாடும் கூத்துகள் தொலைந்து
கணிணி விளையாட்டில் தனிமைப்பட்டனவோ…..
காலக்கொடுமையால் இயற்கையைத் தொலைத்து
மூச்சுத்திணறும் செயற்கையில் வாழ்கிறோம்.
முன்னோர் காட்டிய பாதை தொலைந்து
முட்டுச்சந்தில் முட்டிமோதி வாழ்கிறோம்.
இளந்தலைமுறை மீதொரு இறுக்கத்தை
எதற்குச் சுமத்துகின்றீர் கல்வியின் பெயரால்
பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகளா
மனனஞ்செய வைக்கும் தொழிற்சாலைகளா….
நுங்கையே மறந்த சிறுவர்க்கு
நுங்குமட்டை வண்டியோட்டத் தெரியுமா….
சுற்ற மறந்த பம்பரங்களாய்
துள்ள மறந்த கோலிக்குண்டுகளாய்….
தாவ மறந்த கிட்டிப் புள்ளாய்….
தாண்ட மறந்த குதிரைகளாய்
பூப்பறிக்க வரமறந்த சிறுமிகளாய்…..
பாண்டியாட மறந்த நொண்டிகளாய்…….
சிறுமணல்வீடு கட்டமறந்த சிறுசுகளாய்
காக்காக்கடி மறந்த வெள்ளந்திகளாய்….
பல்லாங்குழி விழ மறந்த பட்டுகளாய்….
தட்டாங்கல் மறந்த தளிர்களாய்……

இயற்கையை மறந்து இயற்கையை இழந்து
இயற்கையைத் தொலைத்து இயற்கையைக் கலைத்து
எங்கெங்கோ திரிகின்றோம்
இழந்தனவற்றை அறியாமலேயே….
என்செயப்போகின்றாய் இயற்கையன்னையே….
எம் இளந்தலைமுறையையே!

பழைய விளையாட்டுக்கள் அனைத்தும் பொய்யாய்ப் பழங்கதையாய் வழக்கொழிந்துவரும் வேதனையை உணர்வுபூர்வமாய்த் தன் ஆக்கத்தில் சுட்டியிருக்கும் திரு. இளவல் ஹரிஹரனுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "படக்கவிதைப் போட்டி 58-இன் முடிவுகள்"

  1. இவ்வார சிறந்த கவிஞராய் என்னைத் தேர்ந்தெடுத்த திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் ‘வல்லமை’ நிர்வாகத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.