படக்கவிதைப் போட்டி 71 – இன் முடிவுகள்
காயத்ரி பூபதி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் சாந்தி வீ ஜே. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.
இந்த வார படக்கவிதைக்கான ஒளிப்படத்தில் நம் கருத்திற்கு விருந்தாக காக்கையோடு ஒன்றாக கூடி உண்ணும் பசுவும், கன்றும் இடம் பெற்றுள்ளன. இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,
இங்கு இடம் பெற்றுள்ள கவிதைகள் பொதுவாக பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன.
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
என்ற குறள் கருத்தினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது செண்பக ஜெகதீசனின் கவிதை. மனிதன் உயர்வு பெற விலங்குகளிடமிருந்தாவது சுற்றம் பேணுதலை கற்க வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர்.
பாலைக் கொடுத்தாலும் பசுக்கள் பராமரிப்பு இல்லாமல் உணவிற்காக வீதியில் அலையும் நிலையையும், பகுத்துண்டு உயிர் ஒம்பும் நிலை மற்ந்த மனித மனத்தின் அவல நிலையையும் எடுத்துக்காட்டுகின்றார் சரஸ்வதி இராசேந்திரன்.
ஐந்தறிவுடைய உயிரினங்கள் கூட ஒற்றுமையுடன் ஒன்று கூடி உண்டு, எந்த வித பேதமின்றி, எங்கு சென்றாலும் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவ்வாறிருக்க மனிதன் பேதம் கொண்டு வாழ்ந்தால் ஆறறிவு இருந்தும் என்ன பயன் என்கின்றார் ராதா விஸ்வநாதன்.
கோமாதாவாகவும், குலமாதாவாகவும் போற்றப்படும் பசுக்களின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகின்றது இக்கவிதை,
பசுக்கள் உணவிற்காக வீதியையும், குப்பை தொட்டியையும் நாடும் நிலையையும், ஊசி போட்டு பால் கரந்தும், அடிமாடாகவும் வதைக்கப்படும் நிலையையும் எடுத்துக்காட்டி, பசுக்களுக்கு எதிராக நடக்கும் உயிர் வதைச் சட்டப்படி குற்றம் என்பதை அறிவுறுத்தியுள்ளார் கவிஞர். உயிரோம்பல் குறித்த கருத்தினை எளிமையான வரிகளில் வெளியிட்டுள்ள ரா. பார்த்தசாரதியின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.
Kavithaiai therntheduthathirku mikka nanri.
– Raa. Parthasarathy