இலையுதிர் காலம்
க. பாலசுப்பிரமணியன்
நேற்றைய சொந்தங்கள் நிலையாய் இல்லை
பற்றிய பந்தங்கள் நினைவில் முல்லை
வந்தது நின்றது வளர்ந்தது வீழ்ந்தது
விந்தை வாழ்வெனும் மாயை கலைந்தது !
பூப்பும் மூப்பும் புலனுள் அடக்கம்
பூவா நினைவுகள் மண்ணில் கிடக்கும்
புரிந்த உயிர்கள் புதிதாய் பிறக்கும்
புரியா நெஞ்சங்கள் பொழுதும் துடிக்கும் !
மதியிட்ட கணக்கை விதியொன்று வென்றது
விழிகண்ட பார்வை வழியின்றி முடிந்தது
அறிவென நினைத்தது அமைதியில் மறைந்தது
விதியிட்ட பாதையோ வாழ்வெனும் கவிதை ?
வண்ணங்கள் விலகிட வெளிச்சமே உண்மை
எண்ணங்கள் மறைந்தால் எல்லாம் நன்மை
சின்னங்கள் உள்ளே சிறைப்பட்ட வாழ்க்கை
பின்னங்கள் இல்லை பேரருள் கருணை !
உதிர்ந்திடும் இலைகள் உணர்த்திடும் உவமை
சருகாய் வீழ்ந்ததும் சமத்துவம் உண்மை
உருவாய் இருக்கையில் உதவிடும் நிழல்கள்
உலகுக்கு இலைகள் தருகின்ற பெருமை !