ஜாம்பவான்
-தமிழ்த்தேனீ
இன்று ஶ்ரீராம நவமி!
ராமனின் கதை அல்லது நினைவு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஹனுமான் இருப்பான் என்பது ஐதீகம். அதனால் ராமாயணத்தை சொல்லும் பௌராணிகர்கள் ஶ்ரீராமனின் படத்தின் அருகே ஹனுமனுக்கு ஒரு மணை போட்டு வைப்பார்கள். ஹனுமன் அங்கே வந்து அந்த மணையில் உட்கார்ந்து ரசிப்பாராம். நாம் ஹனுமன் போல் அப்படிப்பட்ட மஹான் இல்லையென்றாலும் சாதாரண பாமரனாக பக்தி கொண்ட பாமரனாக ஶ்ரீராமனைப் பற்றிய நினைவுகளுடன் இருக்கும்போது நாமும் கூடவே இருப்போமா? கூடியிருப்போமா அப்படிக் கூடினால் அது சத்சங்கம். அதனால்தான் நான் சத்சங்கம் அமைவது பாக்கியம் என்பேன்.
விஸ்வாமித்ரர் தசரத மஹாராஜாவிடம் சென்று ராம லக்ஷ்மணர்களை அழைத்துக் கொண்டு நடந்து போய்க்கொண்டிருக்கிறார். கல்லிலும் மண்ணிலும் நடந்தே காய்ப்பேறிய கால்கள் விஸ்வாமித்ரருக்கு ஆனால் பூப்போன்ற பாதங்கள் கொண்ட செந்தாமரைப் பாதங்கள் கொண்ட ராஜாதி ராஜன் அல்லவா ஶ்ரீ ராமன், அவனும் லக்ஷ்மணனும் பாதரக்ஷை இல்லாமல் வெறும் காலுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள் விஸ்வாமித்ரரின் பின்னாலே.
விஸ்வாமித்ரர் திரும்பிக் கூடப் பார்க்காமல் இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறார். தேவாதி தேவர்களெல்லாம் இந்தக் காட்சியைக் கண்டு அடடா இப்படிப்பட்ட ஶ்ரீராமன் பின்னால் வருகையில் இரக்கமற்ற இந்த விஸ்வாமித்ரர் இப்படி நடக்கிறாரே ஒரு முறை கூட பின்னால் திரும்பிப் பார்க்காமல் வரட்டு மனதுடன் நடக்கிறாரே என்று தேவர்களும் மனம் வருந்த
விஸ்வாமித்ர மஹரிஷி தேவர்களின் வருத்தத்தை ஞானதிருஷ்டியால் தெரிந்துகொண்டு மனதுக்குள் உங்களுக்கென்ன தெரியும் நான் ஏன் திரும்பிப் பார்க்காமல் நடக்கிறேன் என்று “பரப்ரும்மம் ஶ்ரீராமன் அவன் நடந்து வருகிறான் ஒரே ஒரு முறை நான் திரும்பிப் பார்த்தாலும் மனமுருகி நான் ஓடிப் போய் அவன் காலிலே விழுந்துவிடுவேனே!”
அதன் பின்னர் அவன் எனக்கிட்ட கட்டளையை, கடமையை அதாவது ஶ்ரீராம திருக்கல்யாணம் தாடகை வதம் இன்னைமும் இன்னமும் எவ்வளவோ கடமைகள் நின்று போகுமே. எல்லாமே ஶ்ரீராமன் என்னுள் புகுந்து இட்ட கட்டளைதானே. அதனால்தான் நான் திரும்பிப் பார்க்காமல் நடக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இன்னமும் வைராக்கியத்துடன் நடக்கிறாராம் விஸ்வாமித்ரர். அடடா எப்படிப்பட்ட முனி ஸ்ரேஷ்டர்களை நாம் அடைந்திருக்கிறோம் என்று நினைத்தால் மனம் உருகுகிறது. அப்படிப்பட்ட முனிஸ்ரேஷ்டர்களின் வழிவந்ததால்தான் நாமெல்லோரும் விஸ்வாமித்ர கோத்ரம், ஶ்ரீவத்ச கோத்ரம், பாரத்வாஜ கோத்ரம் என்றெல்லாம் பெருமை கொள்கிறோம்.
பெரியவர்களைப் பார்த்தால் நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்கிறோம். அவர்கள் காலிலே விழுந்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லி நாம் என்னகோத்திரம் இன்னாருடைய பேரன் இன்னாருடைய பிள்ளை இந்த வம்சம் என்றெல்லாம் அறிமுகப்படுத்திக் கொள்கிறோம்.
அதுதான் நம் முன்னோர்கள் நமக்களித்த ஆதார் கார்ட், ஸ்மார்ட் கார்ட் எல்லாமே. அதை இப்போது வெளிநாடுகளில் அவர்களே கண்டு பிடித்தாற்போல் அடையாள அட்டையாக சோஷியல் செக்யூரிட்டி கார்ட் என்னும் பெயரில் கொடுக்கிறார்கள் இங்கிருந்து வெளிநாடு செல்லும் நம்மவர் வெளிநாட்டுக்காரன் புத்திசாலி என்று பாராட்டிக் கொண்டிருக்கிறான் எல்லாமே நம் வேதங்களிலும் புராணங்களிலுமிருந்தே எடுக்கப்பட்டது என்பதை அறியாமல் எப்போது நம் மதிப்பை நாம் உணர்வோம்?
தன்னால் பறக்க முடியும் என்பதையே உணராமல் இருந்த ஹனுமனுக்கே அவரால் பறக்க முடியும் என்பதை நினைவூட்டிய ஜாம்பவான் போலே நமக்கெல்லாம் எந்த ஜாம்பவான் வந்து நம்மை உணரவைக்க முடியும் என்று ஏங்கிக் கிடக்கிறேன் நான்.
*****
”உன்னை உணர்“
ஏதோ பொம்மை ஒன்றை வைத்திருந்தேன் பலவருடங்களுக்கு முன்னால் அதன் நிழல் சுவற்றிலே இப்படி காட்சி அளித்தது அதைப் புகைப்படமெடுத்து அந்தப் புகைப்படத்துக்கு நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை இது…
“எதுவாக நினைக்கிறோமோ அதாக
ஆகிறோம் எல்லோரும் சொல்கிறார்கள்
எனக்கும் ஒரு நம்பிக்கை
என் சிந்தை முழுவதும்
சிறகுகளின் ஆக்ரமிப்பு
எனக்குச் சீக்கிரம் சிறகு
முளைக்க வேண்டும்
சிட்டுக்குருவி போல்
வானில் பறக்கவேண்டும்.
எனக்கு எப்போது சிறகு
முளைக்கும் சீறிப் பாய்ந்து
இப்பிரபஞ்சம் சுற்றுவேன்
என்பதுதானே என் கவலை
கண்களை மூடி இறைவனைப்
ப்ரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்.
எனக்கும் சிறகுகள் முளைத்திருக்கின்றன
என்னலும் பறக்க முடியும்!!!
நான் அது புரியாமல் கவலையாய்
உட்கார்ந்து இருக்கிறேன் சுமை தாங்கியில்!
அனுமாருக்கு அவர் பலம்
உணர்த்தியது போல்
எனக்கும் என் பலம் உணர்த்த
யாராவது வராமலா போய்விடுவார்கள்
காத்திருக்கிறேன் அந்த ஞானியைத் தேடி
யார் அந்த ஜாம்பவான்?