அகநானூற்றில் இல்லற விழுமியங்கள்

0

இரா. அமுதா

 

முன்னுரை

 

          உலகில் இனத்தாலும் மொழியாலும் தனித்தன்மை உடையவரே தமிழர்; ஆவார். சங்ககாலம் தமிழரின் வரலாற்றில் தலைசிறந்த காலம். சங்ககால மக்களின் மாசற்ற வாழ்வினை வெளிப்படுத்தும் காலம். இக்காலத்தே தோன்றிய இலக்கியங்கள் கருத்துவளமும் கற்பனைச் சிறப்பும் பொருந்திய அழகான பாடல்களைப் பெற்று மிளர்வன. ஈராயிரம் ஆண்டுகட்க்கு முன்னே தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குவன. தமிழ் மக்கள் பலமுறை பயின்று படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வங்கள் அவை. புறத்தே தோன்றும் காட்சிகளையும் அகத்தே தோன்றும் கருத்துகளையும் புனைத்து நிற்கும் அழகு ஓவியங்கள் அவை. சொல்வளமும் இனிமையான ஓசையும் கொண்டு மனித மனத்தை ஆராய்ந்து கூறுவதோடு பல்வேறு இல்லற, தனிமனித,சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்துவதில் சங்க நூல்கள் சிறப்புமிக்கதாயுள்ளன.

          சங்க இலக்கியங்கள் என்று கூறப்படும் பத்துப்பாட்டு;ம், எட்டுத் தொகையும் தமிழரின் பொற்கால இலக்கியங்களாகப் போற்றப் பெறுகின்றன. அவைகள் பண்டைத் தமிழர்தம் வாழ்வில் கொண்டிருந்த சிறந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் நமக்கு மானுட விழுமியங்களாக உணர்த்திவருகின்றன.

          தமிழர் தம் பண்பாட்டு வாழ்க்கைக்கு, பண்பட்ட வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது அகவாழ்க்கையே என்பதைச் சங்கப்பாக்கள் புலப்படுத்தி நிற்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் எட்டுத் தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகவாழக்கையைப் பற்றிக் கூறும் இலக்கியங்களாகும.; இவற்றில் அகநானூற்றில் கூறப்பட்டுள்ள அகவாழ்விற்கு அடித்தளமான இல்லறம் பற்றியும்,அவற்றுள் வெளிப்படும்  விழுமியங்கள் பற்றியும் ஆய்வதே இக்கட்டு;ரையின் நோக்கமாகும்.

இல்லறம் –

          ஆண், பெண் இருவரும் மனம்ஒத்து, கருத்தொத்து இணைந்து வாழ்க்கை நடத்துவதோடு பல்வேறு அறங்களையும் ஆற்றுபவர்களாக இருப்பதே இல்லறத்தின் சிறப்பாகும். இல்வாழ்க்கை வாழ்பவன் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் மட்டுமின்றி துறவிகள், ஏழைகள், இறந்த முன்னோர்கள் ஆகியோர்க்கும் துணையாக இருந்தல் வேண்டும். பழிக்கு அஞ்சுபவனாகவும், பகுத்துண்ணும் வழக்கம் உடையவனாகவும் வாழ்தல் வேண்டும். அவனது வாழ்வில் அன்பும் அறமும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அறநெறியில் இல்லறத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான். ஆதலால் நல்ல மனைவி, மக்களையும், சுற்றத்தினையும் பெற்று வாழும் ஆண்மகனுக்கு அமையும் வாழ்க்கைத் துணையாளும் குடும்பத்திற்கு ஏற்ற குணநலன்களோடு நற்பண்புகளையும், கற்பு என்னும் வலிமையையும் பெற்று வாழ்க் கூடியவளாக இருத்தல் அவசியம். சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் இத்தகைய சிறப்புகளையும் மாண்புகளையும் கொண்ட தலைவன், தலைவியரை மையமாகக் கொண்ட பாடல்கள் புனையப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலில் வெளிப்படுத்தப்படும் இல்லற விழுமியங்கள் காலத்தால் அழியாததாகவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருப்பதில் ஐயமில்லை.

இல்லற அறம் –

          சங்க காலத்தில் ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறைவு, முறை, பொறை முதலான இல்லற அறப்பண்புகள் வாழ்வியலில் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக இன்னுரை பேசுதலும் இன்னாதன செய்யாதிருத்தலுமே சிறந்த அறமாகக் கருதப்பட்டது. இல்லறக்கடன் ஆற்றுதல் வேண்டி தலைவன் பொருள் தேடிச் செல்லலும் அவன் வரும்வரை தலைவி ஆற்றியிருந்து இல்லறக்கடன் ஆற்றுலும் அகநானூற்றில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் அறம்பல புரிவதற்கும் பிறர் கடைவாயில் சென்று நிற்காத நிலைமைக்கும் பொருள் இன்றியமையாதது என்பதனை

                   “அறன்கடைப் படாஅவாழ்க்கையும் என்றும்

                 பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்

                 பொருளின் ஆகும்”           (அகம் 155:1-3)   

  

          என்ற பாடல் விளக்குகிறது. இப்பாடல் இல்வாழ்வில் அறம் தவறாதிருத்தலையும் பொருளின் இன்றியமையாமையையும் விளக்கி இல்லற விழுமியங்களை வெளிப்படுத்துகிறது.

          இல்வாழ்வார்க்குரிய அறச் செயலின்றும் பிறழாமல் நடத்தலும், நெருங்கிய சுற்றத்தார்க்கு எய்திய துன்பங்கள் பலவற்றையும் நீக்கி அவர்களை நல்வாழ்க்கை வாழச் செய்தலும் வேண்டுமெனில் தலைவியாகிய நீ சிலகாலம் என் பிரிவை ஆற்றியிருத்தல் அவசியம் என்று தலைவன் கூறுவதை

                    “அறந்தலைப் பிரியாதுஒழுகலும் சிறந்த

                  கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்

                  வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்” (அகம் 173:1-3)

         

          என்ற பாடல் விளக்குகிறது. நாம் துன்பத்தால் வாடி வருந்தினாலும் கவலையில்லை என்று சொல்லிய மனத்தின் தூய்மையை உணர்த்தும் இல்லற விழுமியம் போற்றத்தக்கது.

விருந்தோம்பல் –

          இல்லறத்தில் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று விருந்தோம்பல். விருந்தோம்பும் பெருவாழ்க்கையினை மகளிர் விரும்பினர். போக்குவரத்து வசதிகளும்,காசு கொடுத்து அறுசுவை உணவு கொள்ளும் உணவுச் சாலைகளும் இல்லாத அக்காலத்தில் விருந்தோம்பற் பண்பு சிறந்த இல்லற அறமாக மேற்கொள்ளப்பட்டது. விருந்தோம்பலைத் தலைமக்களுக்குரிய சிறந்த கடமைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

                    “விருந்து புறந்த ருதலும் சுற்றம் ஓம்பலும்

                  பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள்” (தொல் கற்பு-11)

          என்ற வரிகள் விருந்தோம்பலைத் தலைசிறந்த விழுமியமாக எடுத்துரைப்பதைக் காணலாம். பண்டைக் காலத்தில் வீடு தேடி வரும் புதியவர்களே விருந்தினர் எனப் போற்றப்பட்டனர். அவர்களை அகமும், முகமும் மலர இனிதே வரவேற்று விருந்தளித்தனர் என்பதை

                    “வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்

                   செறிந்த சேரிச் செம்மன் மூதூர்“(அகம்:15:6-7)

 

 என்ற வரிகள் விளக்குகின்றன.

இல்லற மகளிர்க்குரிய மாண்புகள்

          சங்க அக இலக்கியங்களின் வாயிலாக பெண்களின் பண்பாட்டை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். ஒரு குடும்பம் வாழ்வதும், தாழ்வதும் பெண்ணால்தான் என்று அக்கால மக்கள் நம்பி வந்தனா.; அந்த நம்பிக்கை இன்றும் உண்டு. பெண்கள் புகுந்த வீட்டின் இயல்புக்கேற்ப நடந்து கொண்டு பிறந்த வீட்டைப் பற்றி எண்ணி இருப்பர். பிறந்த வீட்டின் உதவியை எதிர் பாராதும், உதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளாதும் வாழ்ந்து சிறப்பு எய்தினர். அவர்கள் வாழ்வில் அன்பும், அறமும், அறிவும் பின்னியதாகவே அமைந்திருந்தது.

          பொருள்வயின் பிரிய எண்ணிய தலைமகன் தலைவியின் இயல்புகளை எண்ணி செலவழுங்கிநிற்கும் இடத்தில்

                     “….. நன்மனைப்

                  பன்மாண் தங்கிய சாயல் இன்மொழி” (அகம் 193 : 11-12)

          என்று கூறி தலைவியை சிறப்பிக்கின்றான.; நாள்தொறும் விருந்தோம்பல் முதலான நல் அறங்கள் நிகழ்தற்கு இடமான நன்மையுடைய நமது இல்லத்திற்கு உரியவளாகிய கற்புடை மகளிர்க்;கு இன்றியமையாத பல்வேறு மாண்புகளும் பொருந்திய தலைவி என்று தலைவியின் சிறப்புகளைத் தலைவன் விழுமியங்களாக வெளிப்படுத்துகின்றான். இதே கருத்தை தொல்காப்பியம்.

                   “கற்பும் காமமும் நற்பால் ஒமுக்கமும்

                 மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

                 விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

                  பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (தொல் கற்பு-11)

என்று தலைவியின் மாண்புகளை எடுத்துரைக்கிறது.

 இல்வாழ்வில் மழலை இன்பம் –

          அக்காலத்தில் மக்கட்பேற்றைப் பெறும்போதுதான் உண்மையான உh,,,யர்ந்;த நிறைவு பெற்ற மனித நிலையை ஒவ்வொருவரும் எய்தினர் என்ற கருத்தை உணர்த்துகின்ற பாடல்கள் பல அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அத்தகு மாண்புடைய மக்கட்பேற்றை அடைந்தவரின் விழு நிலையையும், அடையாதவரின் இழி நிலையையும் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

          இல்வாழ்க்கையின் பயனாக மக்களைப் பெற்றவரையே மாண்புடையவராகத், தலைமைப்பேறு உடையவராகப் பண்புடையோர் கருதினா.; குழந்தைப் பேற்றின் காரணமாக இவ்வுலகத்திலும் புகழொடு விளங்குவார்கள். மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் எனப் பலரும் கூறிய பழைய மொழிகள் எல்லாம் உண்மையாதலைக் காணலாம் என்பதனை

                   “இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

                  மறுமை உலகமும் மறுவின்று எய்துப

                  செறுநரும் விழையும் செயி;ர்தீர்;  காட்சிச்

                  சிறுவர்ப் பயத்த செம்மலோர் எனப்

                   பல்லோர் கூறிய பழமொழி  எல்லாம்,

                   வாயே ஆகுதல் வாய்த்தனம் – தோழி” (அகம்:66:1-6)

 

 என்ற பாடல் விளக்குகிறது.

வறுமையில் செம்மை –

        கணவன் இல்லம் வறுமையுற்ற போதிலும் செல்வம மிகுந்த தம் தந்தை வீட்டை நாடிச் செல்லாத தலைவி சிறப்பிக்கப்படுகிறாள். தலைவனின் இல்லிலிருந்து வந்த தலைவியிடம் தலைவன் இல் குறித்து வினவும் தோழியிடம் தலைவி உயர்வாகக் கூறி கணவன் இல்லறத்தைச் சிறப்பிக்கிறாள்.  இல்லறப் பெண்கள் அழகாலும், குணத்தாலும் சிறந்ததோடு, அன்பு, தலைவன் மனமறிந்து வாழ்தல், புதல்வரைப் போற்றும் பாங்கு, இல்லறக் கடமை, தெய்வக்;கற்பு முதலானவற்றான் சிறப்புற்று விளங்கி இல்லறத்தைச் சிறப்பித்தனர்.

தன்னலமற்ற பண்பு –

                        ‟விளைகவயலே! வருக இரவலர் ” (ஐங்.2:2)

          என்ற அடி தமிழர் அருள் நெறியை விளக்குவதாகும.; வயலில் தானியங்கள் விளைவது நமக்கு மட்டுமன்று இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவே என்ற கருத்தைக் கொண்டதே இவ்வடி. இல்லறமே நல்லறம் என்ற கொள்கை தமிழரின் உயாந்த அருள் நெறியை உணர்த்துகிறது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உழைத்து, உற்பத்தி செய்து பிறர்க்கு உதவும் தன்னலமற்ற பண்பு உடையவர்கள் என்பதனை அக நூல்கள் உயர்ந்த விழுமியமாகக் காட்டுகின்றன.

          தமிழர்கள் அகத்தையும்,புறத்தையும் இரு கண்களாகக் கண்டனர் அகம், புறம் என்னும் இரண்டும் ஒற்றுமை,வேற்றுமைகளைப் பெற்றிருப்பினும் புறத்தினும் அகமே சிறப்புடையதாகக் கருதப்பட்டது. புறத்திணைப் பொருளான வீரம் மக்களுள்  சிலர்க்N;க உரியது. ஆனால் அகத்திணைக்குப் பொருளான காமமோ ஆண் பெண் என்னும்  பிரிவுகளைக் கொண்ட உயர்திணை, அஃறிணை உயிர்களுக்கெல்லாம் பொதுவானதாகும். ஆண் பெண் இணைந்து வாழும் உயர்திணை வாழ்வினை இல்லறம் என சிறப்பிக்கின்றனர். இவ்வில்லறத்தில் தலைவனும் தலைவியும் இணைந்து அன்புநெறி பூண்டு விருந்தோம்பல், விட்டுக் கொடுத்தல், காத்திருத்தல், பகுத்துண்ணல் சுற்றத்தைக் காத்தல், கேட்டினை விலக்கல், ஈத்துவத்தல், புகழ்தேடல், முதலான உயரிய விழுமியங்களை வெளிப்படுத்த இல்லற மக்கள் கைக்கொள்ளும் ஒழுக்கங்களுக்கு இடப்படும் சிறப்புப் பெயரே பண்பு. பயன்தரும் பண்பின் இரட்டைக் குழந்தைகள் தான் அன்பும், அறமும். இவை வெளிப்படும் இடமே இல்லறம். இவ்வில்லறத்தின் வாயிலாக மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விழுமியங்களை அகநானூற்றுப் பாடல்கள் வெளிப்படுத்தியிருத்தலை இக்கட்டு;ரை விளக்குகிறது.

துணை நூற்பட்டியல-;

1)       பொ.வே.சோமசுந்தரனார் உரை, அகநானூறு, கழக வெளியீடு, பதிப்பு-1970.

2)       நச்சி;னார்க்கினியர் உரை, தொல்காப்பியம், கழக வெளியீடு, பதிப்பு-1966.

3)    அ.தட்சி;ணாமூர்த்தி, சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள்,                   மங்கயர்கரசி பதிப்பகம், பதிப்பு-2001.

4) முனைவர்.ப.கோமதி முதலானோர், சங்க இலக்கியங்களில் மானுட   விழுமியங்கள், அ.இ.பதிப்பகம், பதிப்பு-2011 

 

இரா.அமுதா,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி,

கோவை-10.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.