மீனாட்சி பாலகணேஷ்

(சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)

பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியத்தின் பல பருவப்பாடல்களும் பலவிதமான சுவைகளைத் தம்முள் கொண்டு பொலிவன. தமிழ் நயம், எதுகை, மோனை அமைப்பு, வண்ணம், தொன்மங்கள், தலபுராணக் கதைகள் எனப் பலவிதமான நயங்களையும் நாம் இவற்றில் கண்டு இன்புறலாம்.

சிறுதேரை உருட்டி விளையாடும் முருகனைப் பற்றி எண்ணுங்கால், ஒரு புலவரின் கற்பனை தேரில் பல செயல்களைச் செய்தவர்களைப் பற்றி விரிகிறது. தேரினைப் பற்றியே கருத்துக்கள் குவிகின்றன.

ஒரு தேரின் அச்சு முறித்தவன் விநாயகப் பெருமான். முப்புரங்களையும் அழிக்கும் போருக்குச் சிவபிரான் புறப்பட்டகாலை முதலில் விக்கினங்களை அழிக்கும் விநாயகரை வணங்கிச் செல்லாததனால் அவர் சினம்கொண்டு சிவபிரானுடைய தேரின் அச்சினை முறியுமாறு செய்தார். பின்பு விநாயகப்பெருமானை வணங்கினார் சிவபிரான். தேரும் சரியானது; தேரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கடவுள் அமர்ந்து திரிபுரசங்காரத்திற்குத் தம் பங்கை அளிக்க, அந்தத் தேரினைச் செலுத்தும் சாரதியாக பிரம்மன் அமைந்தான். சிவபிரானோ அத்தேரில் நின்று நகைத்தான்; நகைப்பினாலேயே புரங்களை எரித்தழித்தான்.

 இது இவ்வண்ணம் இருக்க, திருமால் என்ன செய்தான் எனக் காணலாமா? அவன் கிருஷ்ணனாக அவதாரம் செய்த காலத்து, பாரதப்போரில் அருச்சுனனின் தேருக்குச் சாரதியாய் அமைந்தான். பிரம்மாஸ்திரம் அருச்சுனனை அழிக்க வந்தக்கால், அதனின்று அவனைத் தப்புவிக்க, தேரினைத் தனது காலால் ஒரு அழுத்து அழுத்தினான். அருச்சுனன் தலையைக் குறிவைத்து விடப்பட்ட பிரம்மாஸ்திரம் பயனின்றிப் போயிற்று. இது தேரில் திருமால் செய்த செயல்.

இவ்வாறெல்லாம் செயல்கள் செய்தோரான விநாயகப்பெருமான், சிவபிரான், திருமால் ஆகியோர் போற்றுமாறு சித்தர்கிரி முருகா, நீ தேரினை உருட்டுவாய்! என வேண்டும் பாடலிதுவாம்!

                             தேரின் அச்சு முறித்தானும் தேரைக் கடவ அமைந்தானும்

                             தேரில் நின்று நகைத்தானும் தேரை அழுத்திக் காத்தானும்

                              ……………………………………………………………….

                              …………………. சித்தர்கிரிக் கந்தா சிறுதேர் உருட்டுகவே1

சித்தர்கிரி முருகன் பிள்ளைத்தமிழில் இந்த இனிய பாடலைக் காண்கிறோம்.

***

வேறொரு அடியாருக்கு இந்தக் கடல்சூழ் உலகமே முருகன் உருட்டி விளையாடும் தேராகக் காட்சியளிக்கின்றது.

‘பூவுலகினைச் சூழ்ந்துள்ள கடல்களையே தேரின் சக்கரங்களாக அமைத்தும், புவியினை உட்காரும் இடமாகிய அடித்தட்டாகக் கொண்டும், பனிபடர்ந்த இமயமலை முதலான மலைகளைத் தேர்க்கால்களாக்கியும், ஏழு மேலுலகங்களையும் மேல்தட்டுகள் என அமைத்து அத்தேரினை அழகுசெய்யும் கொடுங்கைகளாக எட்டுத் திசைகளையும் வைத்தும், மேலே மூடுதுணி எனப்படும் அகலமான விதானமாக சுவர்க்கத்தை வைத்தும், தேரின் உச்சிமேல் சிகரமாக தொன்மறைகளை வைத்தும் பிரமனை அத்தேரின் பாகனாகக் கொண்டும், உலகு எனும் ஒரு தேரினைச் செய்து விளையாடும் செல்வனே, நீ உனது சிறுதேரினையும் உருட்டியருளுக!’ என முருகனை எல்லாம் வல்ல இறையாகக் கண்டு குழந்தையாகவும் கொண்டு அமைக்கப்பட்ட அழகிய பாடலிதுவாகும்.

                                         தாரணியைச் சூழ்ந்தலை சாகரங்கள் தம்மையே

                                                   சக்கரங்க ளெனவ மைத்துத்

                                         தடமாரும் புவிதனைத் தங்குமிட மாமடித்

                                                   தட்டெனவே கொண்டு …………….

                                                   ……………………………………………………

                                          சீரணியுந் தேரெனச் செய்துவிளை யாடிடுஞ்

                                                    செல்வதே ருருட்டி யருளே

                                            …………………………………………………2

***

முருகன் உருட்டும் சிறுதேர் உருள உருள, வேறு என்னவெல்லாம் உருளுகின்றது என அடியாரின் அன்பு உள்ளத்தில் எண்ணங்களும் உருண்டு விரிகின்றது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சென்னை மாநகர்க் கந்தசுவாமிபேரில் பாடிய பிள்ளைக்கவி இதுவாகும்.

மனவலிமை படைத்தவர்களின் உள்ளத்தில் ஒழுக்கம் நிறைந்துள்ளது (உருளுகிறது). அவர்கள் வாக்கில்  ‘சரவணபவ’  எனும் இருமூன்றெழுத்தாகிய ஆறெழுத்துச் சொல் புரள்கிறது (உருளுகிறது). கரத்தில் இறைவனின் பெயரை உச்சரிக்கும்தோறும் படிகமணிமாலைகள் உருளுகின்றன. வானில் நிலவானது உருண்டு வலம் வருகின்றது.

பொல்லா அரக்கரின் உடலங்கள் போர்க்களத்தில் மடிந்து உருளுகின்றன; புலவர்களின் வறுமைநோய் தீருகின்றது- (புறத்து உருளுகிறது); தேவர்களின் துயரங்கள் அனைத்தும் அரக்கர்களின் உடல்கள் இறந்து உருளும்போது தீர்ந்துவிடுகின்றன (புரத்து உருள).

கல்வியறிவற்ற கயவர்களின் கொடும் கண்ணீர் அருவி தாம் படும் அல்லல்களால் ஆற்றாமையில் திரண்டு வழிகின்றது (உருள்கிறது). விருப்பத்துடன் திருநீற்றினை அணிந்த உன் அடியார்களின் களிக்கும் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் முத்துக்கள்போன்று உருள்கின்றது.

சென்னைக் கந்தகோட்டத் தலைவனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டுக என வேண்டும் பாடல்.

                                              வல்லா ருளத்தில் குறியுருள

                                                        வாக்கில் இருமூன் றெழுத்துருள

                                              மலர்மென் கரத்தில் மணியுருள

                                                        ………………………………………..

                                              கல்லா மனத்துக் கயவர்கொடும்

                                                        கண்ணீர் அருவி கரைந்துருளக்

                                              ……………………………….

                                                        ……… பொழிற்சென் னையிற்றலைவா

                                              சிறுதே ருருட்டி அருள்வாயே

                                                         ………………………………………3

‘உருள’ எனும் சொல்லினை ஒவ்வொரு வரியின் ஈற்றடியாகவும் வெவ்வேறு தொடர்புகளில் அமைத்துப் பாடப்பட்ட அருமையான சுவைமிகு பாடலிது.

(சென்னை மாநகர்க் கந்தசுவாமிபேரில் பிள்ளைக்கவி- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

                                                                                                   ***

திருமால் மீதான சில பிள்ளைத்தமிழ் நூல்களின் நயத்தையும் காணலாமா?

பத்திராசல இராமச்சந்திரன் பிள்ளைத்தமிழின் சிறுதேர்ப்பருவப் பாடலொன்று சந்தநயம் செறிந்தும் பொருள்நயம் செழித்தும் அழகான தொன்மங்களை விளக்கியும் அமைந்துள்ளது கருத்தினைக் கவரும். ‘உருட்டிய’ எனும் சொல்லைப் பல கருத்துக்களில் அமைத்துக் கொண்டு கவிதையைச் சுவையாக்கித் தந்துள்ளார் புலவனார்.

‘ஓசைமிகுந்த அலைகளைக்கொண்ட கடல் எனும் சேலையை உடுத்திக்கொண்டிருப்பவள் நிலமடந்தை; அவளுடைய திலகமணிந்த முகங்களாக விளங்கும் எட்டுத்திசைகளிலும் பாதாளத்திலும் மேகங்கள் உலவுகின்ற மேலுலகமாகிய சுவர்க்கத்தின்மீதும் எனும் பத்து திசைகளிலும் வேகமாகத் தனது தேரினை ஓட்டியதால் தசரதன் எனப் பெயர் படைத்த மன்னனின் அருமை மனைவி கைகேயி ஆவாள். அவன் ஒரு போரில் தேர் செலுத்தியபோது அதன் அச்சு முறிந்ததனால், அவள் வளையல்களணிந்த தனது கையையே தேரின் இசை அச்சில் பொருத்தி அதனை சரியாக ஓடச் செய்தாள். அவளுடைய புதல்வனான இராமனே! பத்திரகிரி இறைவனே! சிறுதேர் உருட்டுக,’ என வேண்டுவதாக அமையும் பாடல். உருட்டிய எனும் சொல்லைப் பலவிதங்களில் கையாண்டுள்ளது சுவைபட அமைந்துள்ளது.

                                        நீர் உருட்டிய தெழிப்பார் முரிதரங்கத்தின்

                                                  நிரைகடல் கலைஉடுத்த

                                        நிலமகள் மணித்திலக முகமான எண்திசையும்

                                                   …………………………………

                                        கார் உருட்டிய ஒலிப்பொன் உலக மீதினும்

                                                   கடிது சென்றிடு திறத்தால்

                                        …………………………………………………

                                                  ஏர் உருட்டிய கேகயன்…………………………..

                                        இன்பமெய்ப் புதல்வி ஆகி

                                                   இசை அச்சு……………………………….

                                       தேர் உருட்டினள் புதல்வ! பத்திரகிரிக்கு இறைவ!

                                                   சிறுதேர் உருட்டியருளே!

                                        ………………………………………………4

***

வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழின் பாடலொன்று, தேருருட்டும் சிறுகுட்டனான வைகுந்தநாதன் இராமனின் கதையையே அருமையாக உள்ளடக்கிக் கொண்டு திகழ்கிறது. இதிலுள்ள பத்துப் பாடல்களுமே ஒவ்வொரு இராமாயண நிகழ்வையும் சுவைபட உட்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணிலுறையும் தேவர்கள், மறையோராகிய முனிவர்கள், தவம்செய்வோர் ஆகிய அனைவரையும் காக்க எண்ணங்கொண்டு  மனுவின் குலத்தில் அவதரித்தவன் இராமபிரான். இதனால் இராமாவதாரம் கூறப்பட்டது; அவன் குரங்குகளின் படையைக்கொண்டு ஒரு அணையைக்கட்டி உவரிக்கடலைக் கடந்து அப்புறம் சென்று காவல்மிகுந்த மதில்களைக்கொண்ட இலங்கைநகரில் உறைகின்ற அரக்கர்களைக் கொன்றான். பின்பு மிதிலைநகரின் மடமானாகிய சீதையுடன் புட்பக விமானத்தில் ஏறி தனக்கு உரிமையுள்ள நாட்டை (அயோத்தி) வந்தடைந்தான்; பின்பு அரசுரிமையை ஏற்றுக்கொண்டான் என்று முழுமையான இராமாயண காதையும் இதில் இரத்தினச் சுருக்கமாகக் கூறப்பட்டது.

அவன், திருமகளுக்கும் புவிமகளுக்கும் கணவனகிய திருமாலே, சிறுதேரை உருட்டுயருளுக எனும் பாடலிது.

                                             மாகத் தமரும் புத்தெளிர்

                                                         மறையோர் தவத்தர் தமைக்காத்து

                                              …………………………………….

                                                         மனுவின் குலத்தி லவதரித்தே

                                              யூகப் படைகொண் டணைதிருத்தி

                                                         யுவரிக் கடலப் புறமெய்தி

                                            ……………………………………………

                                                         வேக முடன்புட் பகமெய்து  

                                              மிதிலை மடமான் தன்னுடனே

                                                         மேவிப் பதிவந் தரசுரிமை

                                              விருப்புற் றளிக்கும் காகுத்தன்

                                                         ………………………………..

                                             கொழுநன் தடந்தே ருருட்டுகவே5

வித்தாரகவிஞர்களாகிய புலவர்பெருமக்கள் பலவித அழகிய உத்திகளைக் கொண்டு பாடல்களைப் படைத்துள்ள நயம் சிந்தைக்கு விருந்தாகிறது.

                                                                                           ***

திருமாலின் அடியார்கள் இராமாயணக் காதைகளின் சிறப்பான கதைகளைத் தாமியற்றியுள்ள பிள்ளைத்தமிழ் நூல்களில் அழகுபடப் புகுத்தியுள்ளமை நயக்கத்தக்கதாகும்.

‘எனக்கு மன்னன் தசரதன் இருவரங்களைத் தந்துள்ளான்; குறையாத வளம்பொருந்திய கோசலநாட்டினை ஒருகோலோச்சி பரதனே நாடாளுவன் என்பது ஒன்று; இராமனாகிய நீ சென்று காடாளச்செல்லவேண்டும் என்பது மற்றொன்றாகும்,’ எனச் சிற்றன்னையாகிய கைகேயி கூறியதன்படி, மலர்களைச் சூடிய கூந்தலாள் சானகியுடனும் கூடப்பிறந்த இளவலாகிய இலக்குவனுடனும் கொதிக்கும் பரல்கற்களையுடைய கொடும் கானகத்தை அடைந்தபோதும் செந்தாமரைபோல் மலர்ந்த திருமுகம் படைத்த செல்வனே உனது சிறுதேரினை உருட்டுக!

                                           தந்தா னெனக்கு வரமிரண்டும்

                                                      தலைநாளுரைத்த சொற்படிக்குன்

                                          தகப்பன் புரன் முறை தருமந்

                                                      தழைப்பஒரு கோலோச்சியெங்கும்

                                          நந்தா வளமைப் பரதனிந்

                                                      நாடாளுவன் நீகாடாள

                                          நடவென்று ரைக்க சிற்றவைசொல்

                                                     ……………………………………………..

                                          கொந்தார் குழவி சனகியொடுங்

                                                    கூடப்பிறந்த இளவலொடுங்

                                            ………………………………………………………….

                                         செந்தா மரைப்போற் றிருமுகத்துச்

                                                    செல்வா …………………………………………

                                         தென் பேரையில் நங்குலநாதன்

                                                    ……………………………… தேருருட்டுகவே6.

இந்நூலாசிரியர் கம்பனின் இராமகாதையால் கவரப்பட்டவர் என உய்த்தறியலாம். ஏனெனில் இராமனின் திருமுகம், கைகேயியின் இச்சொற்களைக் கேட்டும் அன்றலர்ந்த தாமரையினை ஒத்து மலர்ந்தவண்ணமே இருந்தது என்பது கம்பனின் கற்பனையே! (ஸ்ரீ குழைக்காதர் பிள்ளைத்தமிழ்)

                                             இப்பொழுது எம்மனோரால்

                                                    …………………………..

                                             செப்பரும் குணத்து இராமன்

                                                    திருமுகச் செவ்வி நோக்கில்

                                                     ………………………………

                                             அப்பொழுது அலர்ந்த செந்தா

                                                    மரையினை வென்றதம்மா7!

***

கவி காளருத்திரர் இயற்றியுள்ள அழகர் பிள்ளைத்தமிழ் இன்னொரு இராமாயண நிகழ்வைக் கண்முன் விரிக்கின்றது.

இராம இராவண யுத்தத்தில் இந்திரன் தனது தேரினையும் அத்தேரை திறம்படச்செலுத்தும் தேரோட்டியான மாதலியையும் இராமனுக்குத் தேரோட்ட அனுப்பி வைக்கிறான். அத்தேர் விரைந்து போர்க்களத்திடை சென்றபோது:

கடலின் அலைகள் மிகுதியாகப் பொங்கி இருகரைகளிலும் நீரை வீசின; கடலிலுள்ள சுறாமீன்கள் கதறலாயின; இராமனின் அம்புகளின் விசையினால் உண்டான தீயில் புனல் வறண்டு வற்றிப்போனது. நீண்ட கடலில் ஆழித்தேர் நெருப்பினைப்போல் புகுந்து அழிவை உண்டுபண்ணியது; இராமனின் வெற்றியினால், இத்துணை நாட்களாக அணுகவும் அஞ்சியிருந்த இலங்கைநகரினுள் ஆதவனின் தேர் புகுந்து சென்றது; கொலை அரக்கப்படைகளின் உடல்கள் வெம்மைபொருந்திய மலைகளாகக் கிடக்க, அவ்வுடல்களிலிருந்து வெளிப்போந்த உயிர்கள் அழகான பொற்றேர்களில் உயர எழும்பின; சிவந்த குங்குமக் குழம்பினை மார்பிலணிந்த தேவமாதர்கள் மகிழ்ச்சியால் புளகம் அடைந்தனர்; இராமனின் வெற்றியால் எங்கும் அனைவரும் விழா எடுத்துக் களித்தனர்; மாரவேள் ஆகிய மன்மதன் தென்றலெனும் தேரில் ஊர்ந்து வந்தான்.

இவையனைத்தும் தனது வெற்றி பொருந்திய வில்லைக்கொண்ட இராமன், குதிரைகளைக்கொண்ட மணித்தேரினை மாதலி நடாத்திட, இராவணனுடன் போர்புரிந்து வெற்றிகண்டபோது நிகழ்ந்தன எனப் புலவரின் கற்பனையும் வருணனைகளுமாகும்.

                                அலையெடுத் திருகரை நெரித்துச் சுறாக்கதற

                                            வறைபுனல் வறண்டுநெட்டை

                                ஆழியிற் கானலந் தேர்புக விலங்கைக்கு

                                            ளாதவன் றேர்கடாவக்

                                        …………………………………………………………

                                 ………………………………. வா னவமாதர்

                                             குங்குமச் சேதகத்து

                                 மலையெடுக் கும்புளகம் விளையவா வெங்கணும்

                                                         ……………………………………..

                                 மாரவே டென்றலந் தேரூர மாதலி

                                            மணித்தேர் நடாத்திவெற்றிச்

                                 சிலையெடுக் குங்கொண்டல் பரிமா தொடக்குபொற்

                                            சிறுதே ருருட்டியருளே

                                 சிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே

                                            சிறுதே ருருட்டியருளே8.

இவ்வாறு குதிரைகள் பொருத்திய சிறுதேரைச் செலுத்தியருளுக. அருச்சுனனுக்குத் தேர் செலுத்திய அழகனே! உனது சிறுதேரினை உருட்டி அருளுக என வேண்டுகிறார்.

இவை கம்பனின் இராமகாதையின் யுத்தகாண்டத்து நிகழ்வுகளைத் தம்முள் அடக்கிக்கொண்டு பொலிகின்றன என்றால் மிகையாகாது.

இவ்வாறு பற்பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் பலபாடல்கள்; பல நயங்கள்; பல அழகுகள்; படித்துமகிழவும் பற்பல கற்பனைகள்.

இதுகாறும் ஆண்பால் பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் வழக்கமாக அமையும் பத்துப்பருவங்களின் நயங்களைக் கண்டு மகிழ்ந்தோம். இனி வரும் அடுத்தடுத்த பாகங்களில் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்குட்பட்டு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பற்றிய செய்திகளைக் கண்டு மகிழலாம்.

                                                                                                                                                                       (வளரும்)

 

பார்வை நூல்கள்:

  1. கம்பபாதசேகரன்- சித்தர்கிரி முருகன் பிள்ளைத்தமிழ்
  2. தி. சு. ஆறுமுகதாசன் – குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்
  3. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்- சென்னைமாநகர்க் கந்தசுவாமி பேரில் பிள்ளைக்கவி
  4. தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள்- பத்திராசலம் இராமச்சந்திரன் பிள்ளைத்தமிழ்
  5. கோவிந்தன் – வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ்
  6. ஸ்ரீ குழைக்காதர் பிள்ளைத்தமிழ்
  7. கம்பன் – இராமாயணம்- அயோத்தியா காண்டம்- கைகேயி சூழ்வினைப்படலம்
  8. கவி காளருத்திரர்- அழகர் பிள்ளைத்தமிழ்

        

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.