நூல் அறிமுகம் – ‘ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம் – 1950 வரை’ (தொகுதி 01)

எம். ரிஷான் ஷெரீப்
mrishansh@gmail.com

‘ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம் – 1950 வரை (தொகுதி 01)’ எனும் தொகுப்பை அண்மையில் கிடைக்கப் பெற்றேன். மிகவும் அருமையானதும், காத்திரமானதும், கனதியானதுமான ஒரு தொகுப்பு நூல் இது.

ஈழ இலக்கியவாதிகள் சி.ரமேஷ், கு.றஜீபன், சு.ஸ்ரீகுமரன் (இயல்வாணன்), இ.இராஜேஸ்கண்ணன் ஆகிய நால்வர் ஒன்றிணைந்து ஏழு தசாப்தங்களுக்கு முந்தைய ஈழச் சிறுகதைகளைத் தேடிச் சேகரித்து, ஒரு முழுமையான தொகுப்பாக்கித் தந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொக்கிஷமான இத் தொகுப்பை வடக்கு மாகாணத்தின் ‘பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு’ வெளியிட்டிருக்கிறது.

இத்தொகுப்புக்கான நீண்ட பதிப்புரையை தொகுப்பாளர்களில் ஒருவரான கவிஞர் சி. ரமேஷ் எழுதியிருக்கிறார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதைகள் குறித்தும், சிறுகதையாசிரியர்கள் குறித்தும் ஆழமான திறனாய்வுப் பார்வையில் மிகுந்த தேடலுடனும், அர்ப்பணிப்புடனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு முன்பிருந்த மக்களின் வாழ்வியலையும், பாரம்பரியத்தையும் அந்த மண் வாசனையோடு பிரதிபலிக்கும் இச் சிறுகதைத் தொகுப்பு அனைவரும் வாசிக்க வேண்டியதும், பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதுமான ஒரு வரலாற்று ஆவணம் ஆகும். ஆயிரத்து நாற்பத்தெட்டுப் பக்கங்களைக் கொண்டுள்ள பாரியதும், அரியதுமான இச் சிறுகதைத் தொகுப்பு நூலை எமக்கும், வருங்கால சந்ததியினருக்குமாக அளித்துள்ள சி. ரமேஷ், கு. றஜீபன், சு. ஸ்ரீகுமரன் (இயல்வாணன்), இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியும், பாராட்டுகளும் என்றென்றும் உரித்தாகும்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *