Tag: நெல்லைத் தமிழ்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 30

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 30 – வாய்மை

    குறள் 291:

    வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
    தீமை யிலாத சொலல்

    வாய்மைங்கது என்னன்னா மத்தவங்களுக்கு சிறிசா கூட கெடுதல் செய்யாத சொல்ல சொல்லுதது.

    குறள் 292:

    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனின்

    குத்தங்கொறயில்லாத நன்மைய குடுக்கும்னா உண்ம பேசுத எடத்துல பொய்யக்கூட சொல்லலாம்.

    குறள் 293:

    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்

    மனசறிஞ்சு பொய் சொல்லுதது தப்பு. அப்டி சொன்னாம்னா அவன் மனசாட்சியே அவன தண்டிக்கும்.

    குறள் 294:

    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்

    மனசால கூட பொய்ய நெனையாம இருக்கவன் ஒலகத்துல இருக்கவங்க மனசுல எல்லாம் இருப்பான்.

    குறள் 295:

    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை

    மனசார உண்ம பேசுதவங்க தவமும் தானமும் செஞ்சவங்கள விட ஒசந்தவங்க.

    குறள் 296:

    பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும்

    பொய் சொல்லாம இருக்குதது போல புகழ் வேற ஒண்ணுமில்ல. அது அவனயறியாம அறவழில அவனுக்கு எல்லா நல்லதையும் குடுத்துபோடும்.

    குறள் 297:

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று

    பொய் சொல்லாம ஒருத்தன் வாழ்ந்தாம்னா மத்த அறங்கள செய்யாம இருந்தாக் கூட  நல்லாதாவே ஆவும்.

    குறள் 298:

    புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்

    அழுக்கு போவ மேலுக்கு தண்ணி ஊத்தி கழுகினா சுத்தம் ஆவும். மனசுக்குள்ளார இருக்க அழுக்கு உண்ம பேசுததுனால தான் சுத்தம் ஆவும்.

    குறள் 299:

    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு

    கருக்கல் ல இருட்ட போக்குத எல்லா விளக்கும் விளக்காவாது. மனசுக்குள்ளார இருக்க இருட்ட போக்குத பொய் சொல்லாத தன்மைங்குத விளக்குதான் பெரியமனுசங்களுக்கு விளக்கு.

    குறள் 300:

    யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற

    வாய்மை யப் போல ஒசந்த கொணம் இப்பம் வர வேற இல்ல ங்குததுதான் ஆஞ்சு அறிஞ்சு உணந்துக்கிட்ட உண்ம.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் -29

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 29 – கள்ளாமை 

    குறள் 281:

    எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு

    அடுத்தவங்க எளக்காரமா பாக்கக்கூடாது னு நெனைக்கவன் மத்தவங்க பொருள மனசால கூட களவாங்க நெனைய கூடாது.

    குறள் 282:

    உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வே மெனல்

    மத்தவம் பொருள அவனுக்குத் தெரியாம களவாங்கணும் னுமனசால நெனைக்குததே தப்புதான்.

    குறள் 283:

    களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
    தாவது போலக் கெடும்

    களவாங்கதுனால வர சொத்து அதிகமாகுதது போல தோணுச்சினாலும் பொறவு முன்ன அவங்கிட்ட இருந்ததயும் சேத்து அழிச்சுப்போடும்.

    குறள் 284:

    களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமந் தரும்

    அடுத்தவம் பொருள களவாங்குத ஆச களவாண்ட பொறவு அழியாத துன்பத்த கொடுக்கும்.

    குறள் 285:

    அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
    பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

    மத்தவன் எப்ப அசருவான் களவாங்கலாம்னு நேரம் பாத்து இருக்கவன் கிட்ட அருள் கருதி நேசமா நடக்குத கொணம் இருக்காது.

    குறள் 286:

    அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
    கன்றிய காத லவர்

    சிக்கனத்த கடபிடிச்சி வாழ்க்க வாழாதவங்கதான்  அடுத்தவம் பொருள களவாண்டு வர ஆசப் படுவாங்க.

    குறள் 287:

    களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்க ணில்

    அளவறிஞ்சு வாழ்க்க நடத்துதவங்ககிட்ட அடுத்தவம் பொருள களவாங்குதது ங்குத கெட்ட புத்தி கெடையாது.

    குறள் 288:

    அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு

    அளவறிஞ்சு வாழுதவங்க மனசுக்குள்ள அறம் நிக்குதது போல களவாண்டு பழக்கப்பட்டவன் மனசுக்குள்ள வஞ்சம் நிக்கும்.

    குறள் 289:

    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்

    அடுத்தவம் பொருள களவாங்குதது தவித்து வேற ஒண்ணும் தெரியாதவங்க ஆக்கங்கெட்ட செயல செஞ்சு அப்பமே கெட்டழிஞ்சு போவாங்க.  

    குறள் 290:

    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
    தள்ளாது புத்தே ளுலகு

    களவாங்குதவங்கள அவங்க உசிரே வெறுத்துபோயிடும். களவாங்காம இருக்கவங்கள தேவர் ஒலகமும் வெறுக்காது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 28

    நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம் 

    குறள் 271:

    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்

    ஒழுக்கமானவன் போல ஊர ஏமாத்துத வஞ்சமனசுக்காரங்கள பாத்து அவங்க ஒடம்புல கலந்து இருக்க நிலம், நீர், காத்து, தீ,ஆகாயம் ங்குத அஞ்சு பூதங்களும் தங்களுக்குள்ள சிரிச்சிக்கிடும்.

    குறள் 272:

    வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
    தானறி குற்றப் படின்

    தன் மனசறிஞ்சு குற்றம் செய்யுதவனுக்கு அவனோட தவக்கோலம் என்ன பிரயோசனத்த கொடுக்க முடியும்?..

    குறள் 273:

    வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

    மனச அடக்க முடியாதவன் போடுத துறவி வேசம், பசு புலியோட தோலப் போத்திக்கிட்டு பயிர மேயுததுக்கு சமானம்.

    குறள் 274:

    தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

    தவக்கோலத்துல இருக்கவங்க கெட்ட செயல செய்யுதது புதருக்கு பின்னால மறஞ்சு நின்னு பறவைய வலைவீசி பிடிக்குத வேட்டக்காரனுக்கு சமானம்.

    குறள் 275:

    பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
    றேதம் பலவுந் தரும்

    எல்லாத்தையும் துறந்துட்டதா பொய் சொல்லி ஏமாத்துதவங்களுக்கு ஏன் அப்டி செஞ்சோம் ஏன் அப்டி செஞ்சோம் னு வருத்தப்படுத  மட்டுக்கு நெறய துன்பம் வந்து சேந்துக்கிடும்.

    குறள் 276:

    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணா ரில்

    மனசுக்குள்ள இருக்க ஆசய வெறுக்காம, வெறுத்தது போல நடிக்குத வஞ்சக மனுசங்கள மாதிரி இரக்கமில்லாதவங்க யாருமில்ல.

    குறள் 277:

    புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    மூக்கிற் கரியா ருடைத்து

    வெளில பாக்குததுக்கு குந்து மணி போல செவப்பா இருந்தாலும் அதோட மொனைல இருக்க கறுப்புபோல மனசுக்காரங்களும் ஒலகத்துல உண்டு

    குறள் 278:

    மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்

    தண்ணிக்குள்ள முங்கினவங்க தன்னய மறச்சிக்கிடது போல மனசுக்குள்ள அழுக்க மறச்சிகிட்டு தவத்தால ஒசந்தது போல நடிக்கவங்க பலபேரு இந்த ஒலகத்துல இருக்காங்க.

    குறள் 279:

    கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
    வினைபடு பாலாற் கொளல்

    நேரா இருக்க அம்பு கொல செய்ய ஒதவும்.  வளஞ்ச யாழ்கொம்பு நல்ல இசைய கொடுக்கும். அதுபோல மக்களையும் அவங்க உருவத்த பாக்காம செய்யுத செயல வச்சி எட போடணும்.

    குறள் 280:

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்த தொழித்து விடின்

    ஒலகம் பொல்லாப்புன்னு சொல்லுத கெட்ட செயல துறவி மனசார உட்டுட்டாம்னா மொட்டையடிக்குதது, சடா முடிவளக்குதது எல்லாம் செய்ய தேவையில்ல.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 27

    நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 27 – தவம் 

    குறள் 261:

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு

    மத்தவங்க தனக்கு செய்யுத துன்பத்த பொறுத்துக்கிடுததும் அவங்களுக்கு பதிலுக்கு துன்பம் செய்யாம இருக்குததும் தான் தவம்.

    குறள் 262:

    தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
    அஃதிலார் மேற்கொள் வது

    தவ ஒழுக்கம் ஒடயவங்களால தான் தவம் செய்ய முடியும். அது இல்லாதவங்களால முடியாது.

    குறள் 263:

    துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
    மற்றை யவர்கள் தவம்

    துறவிங்களுக்கு சாப்பாடும் மத்ததும் குடுத்து ஒதவணும் னு நெனச்சி குடும்ப வாழ்க்கைல இருக்கவங்க தவம் செய்யுதத மறந்து இருக்காங்களோ?

    குறள் 264:

    ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்

    நெஞ்சுறுதியும் கட்டுப்பாடும் உள்ள தவம் ங்குத நோம்பு வலிமையா உள்ளவனால நெனைச்ச நேரம் எதிரிங்கதோக்கடிக்கவும் சேக்காளிங்கள ஒசத்தவும் முடியும்.

    குறள் 265:

    வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்

    உறுதியான நோம்பால நெனைச்சத நெனச்ச மாதிரி அடஞ்சுக்கிட முடியும்ங்கதால குடும்ப வாழ்க்கைலயும் அது  முனஞ்சி செய்யப்படுது.  

    குறள் 266:

    தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

    தவம் செய்யுதவங்க மட்டுந்தான் தனக்குரிய கடமைய செய்யுதவங்க மத்தவங்க ஆச அலைகழிக்கதால வீணாப்போன காரியத்த தான் செய்வாங்க.  

    குறள் 267:

    சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

    புடம்போட்ட தங்கம் மினுங்குததுபோல தன்னய நோவடிச்சுக்கிட்டு ஒரு குறிக்கோள நினைச்சி நோம்பு இருக்குதவங்க எந்த துன்பம் வந்தாலும் ஒசந்து நிப்பாங்க.

    குறள் 268:

    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்

    தன்னோட உசிருங்குத பற்றுதலும், தான் ங்குத அகம்பாவமும்இல்லாதவங்களோட பெருமய புரிஞ்சிக்கிட்டு  ஒலகத்து மத்த உசிருங்கல்லாம் கும்பிடும்.

    குறள் 269:

    கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

    தவத்தால வலிமையடஞ்ச ஒருத்தனால எமனயும் செயிக்க முடியும்.

    குறள் 270:

    இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்

    ஏதுமில்லாத ஏழங்க அதிகமா இருக்குததுக்கு காரணம் தவம் செய்யுதவங்க கொறைவாவும், செய்யாதவங்க நெறய பேரும் இருக்துதான்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 26

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

     

    குறள் 251:

    தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்

    தன் ஒடம்ப வளக்குததுக்காக மத்த உசிரு குடியிருக்க ஒடம்ப தின்னுதவன் மனசுக்குள்ள இரக்கம் எப்டி இருக்கும்?

    குறள் 252:

     பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு

    பொருளுடையவரா இருக்குத சிறப்பு அத வச்சி காப்பாத்தாதவங்களுக்கு இல்ல. அருள் உடையவரா இருக்குத சிறப்பு மாமிசம் தின்னுதவங்களுக்கு இல்ல.

    குறள் 253:

    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
    உடல்சுவை யுண்டார் மனம்

    சண்ட போட ஏதுவா கொல செய்யுத ஆயுதத்த  வச்சிருக்கவனுக்கும், மத்த உசிரு குடியிருக்க ஒடம்ப ருசிச்சு சாப்பிடுதவனுக்கும் மனசுல இரக்க கொணம் இருக்காது.

    குறள் 254:

    அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
    பொருளல்ல தவ்வூன் தினல்

    ஒரு உசிர கொல்லாம இருக்குதது அருள்.  கொல்லுதது அருளில்லாத தன்ம. அதனால மாமிசம் சாப்பிடுதது அறம் ஆவாது. .

    குறள் 255:

    உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யா தளறு

    மாமிசம் சாப்புடாதவங்களாலதான் பல உசிருங்க சாவம வாழுது.  சாப்பிடுதவன நரகம் முழுங்கிப் போடும். வெளிய விடாது.

    குறள் 256:

    தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

    மாமிசம் சாப்பிடுததுக்காக உசிர கொல்லுதவங்க ஒலகத்துல இல்லன்னா அத விக்குதவங்களும் இல்லாம போயிடுவாங்க.

    குறள் 257:

    உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ண துணர்வார்ப் பெறின்

    மாமிசம் ங்குதது இன்னொரு உசிரோட உடற்புண் னு புரிஞ்சவங்க அத சாப்புடாம இருக்கணும். .

    குறள் 258:

    செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்

    மாசுமருவில்லாத மனசு இருக்குதவங்க உசிரு போன ஒடம்பான மாமிசத்த சாப்பிட மாட்டாங்க.

    குறள் 259:

    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று

    நெய்யயும் மத்த பொருளயும் வச்சி ஆயிரம் யாகம் செய்யுதத விட சாப்பிடுததுக்காக ஒரு உசிர கொல்லாம இருக்கது நல்லது.

    குறள் 260:

    கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்

    மாமிசம் சாப்பிடாம அதுக்காக மத்த உசிர கொல்லாம இருக்கவன ஒலகம் கையெடுத்து கும்பிடும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 25

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 25 – அருளுடைமை

    குறள் 241:

    அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணு முள

    எல்லாச் செல்வத்துலயும் ஒசந்தது அருள் ங்குத செல்வம் தான். மத்த எல்லா செல்வமும் கீழானவங்க கிட்ட கூட இருக்கும்.

    குறள் 242:

    நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.

    நல்ல வழிய தெரிஞ்சிக்கிட்டு அருளோடு வாழணும். பலவழிகள் ல ஆஞ்சு அறிஞ்சு பாத்தாலும் அருளே நம்ம வாழ்க்கைக்கு தொணையா நிக்கும்.

    குறள் 243:

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்

    அருள் நெறஞ்ச மனசக் கொண்டவங்க அறியாம ங்குத இருட்டு ஒலகத்துல கெடந்து சீரளிய மாட்டாங்க.

    குறள் 244:

    மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
    தன்னுயி ரஞ்சும் வினை

    எல்லா உசிரயும் இரக்கத்தோட காக்குதத தன் கடமயா செய்யுத பெரிய மனுசங்க தன் உசிர பத்தி கவலப் பட மாட்டாங்க.     .

    குறள் 245:

    அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
    மல்லன்மா ஞாலங் கரி

    உள்ளத்துல ஊறுத அருளோட இயக்கத்துனால சங்கடப்படாம கடமய செய்யலாம் ங்குததுக்கு ஒதாரணமா காத்தோட்டத்துனால செழிப்பா இயங்குத இந்த ஒலகத்த சொல்லலாம்.

    குறள் 246:

    பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்

    அருளில்லாம கெட்டத செய்யுதவங்க பொருளயும் தொலச்சி கடமையையும் மறந்தவங்க ஆவாங்க.

    குறள் 247:

    அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
    கிவ்வுலகம் இல்லாகி யாங்கு

    பொருள் இல்லாதவங்களுக்கு பூமில இருக்க வாழ்க்க சந்தோசமா இருக்காதது போல மத்த உசிருங்க கிட்ட பாசமா நேசமா  நடந்துகிடாதவங்களுக்கு மேல் உலகம் சந்தோசமா இருக்காது.  .

    குறள் 248:

    பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது

    பொருள் இல்லாமப் போனவங்க பொறவு சம்பாதிச்சிக்கிடலாம். அருளில்லாம இருக்கவங்க மறுபடி அருள் உள்ளவங்களா ஆகுதது சிரமந்தான்.

    குறள் 249:

    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்

    தெளிஞ்ச புத்தி இல்லாதவன் நூலப் படிச்சு அது சொல்ல வருதத சரியா புரிஞ்சிக்கிடமுடியுமா? அப்டிதான் அருள் இல்லாதவன் அறச்செயல செய்ய நெனைக்குததும்.

    குறள் 250:

    வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
    மெலியார்மேற் செல்லு மிடத்து

    அருள் இல்லாதவன் தன்னைய விட எளச்சவனுக்கு தொந்தரவு குடுக்கப்போகுத நேரம் இப்பம் ஒரு பலசாலி முன்ன வந்தா எப்டி பயந்து சாவோம்னு நெனைச்சிக்கிடணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 24

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 24 – புகழ்

    குறள் 231:

    ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
    தூதிய மில்லை உயிர்க்கு

    ஏழைங்களுக்கு குடுக்கணும். அதனால புகழ் உண்டாவும். இந்த புகழ் இல்லாம மனுசனோட வாழ்க்கைல ஆக்கம் தருததுனு  வேற எதுவும் இல்ல.

    குறள் 232:

    உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
    றீவார்மேல் நிற்கும் புகழ்

    புகழ்ந்து பேசுதவங்க எல்லாம் சொல்லுதது இல்லாதவங்களுக்கு பொருள குடுக்கவங்களோடபுகழப் பத்திதான்.

    குறள் 233:

    ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
    பொன்றாது நிற்பதொன் றில்

    ஒசந்து நிக்குத புகழத் தவித்து அதுக்கு சமமா அழிவில்லாம நெலச்சு நிக்கும் னு ஒலகத்துல எதுவும் இல்ல.

    குறள் 234:

    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தே ளுலகு

    இந்த பூமியில பெரிய புகழ்ச்சியோட வாழ்ந்தவங்கள தான் தேவர் உலகத்துல போற்றுவாங்களே தவித்து அங்க இருக்க தேவர்கள இல்ல.

    குறள் 235:

    நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
    வித்தகர்க் கல்லால் அரிது

    வாழ்க்கைல சிரமப்படும்போது கூட புகழ வளத்துக்கிடதும் செத்த பெறகுநெலச்ச புகழ பெறுததும் ஒசந்த அறிவாளிங்களால தான் முடியும் மத்தவங்களுக்கு சங்கடந்தான்..

    குறள் 236:

    தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று

    எந்தத் துறையில ஈடுபட்டாலும் அதில புகழோட விளங்கணும். அப்டி செய்ய முடியாதவங்க அந்த துறையில ஈடுபடாம இருக்குதது நல்லது.

    குறள் 237:

    புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவ தெவன்

    புகழ் பெறுத மாதிரி வாழ முடியாதவங்க தன்னய தானே நொந்துகிடாம தன்னய எளக்காரமா பேசுதவன நொந்துகிடதது எதனால?

    குறள் 238:

    வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
    எச்சம் பெறாஅ விடின்

    தனக்குப் பின்னால நெலச்சு நிக்குத புகழ பெறாதவங்களுக்கு அது அந்த வாழ்க்கைக்கே வந்த பொல்லாப்பு னு ஒலகம் சொல்லும்.

    குறள் 239:

    வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
    யாக்கை பொறுத்த நிலம்

    புகழ் இல்லாத ஒடம்ப இந்த பூமி சுமந்ததுனா அது வளம் கொறஞ்சு வெளச்சல் இல்லாம போயிடும்.

    குறள் 240:

    வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
    வாழ்வாரே வாழா தவர்

    பொல்லாப்பு இல்லாம வாழுதது தான் வாழ்க்கை. புகழ் இல்லாம வாழுதது செத்ததுக்கு சமானம்.

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 23

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 23 – ஈகை.

    குறள் 221:

    வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து

    இல்லாதவங்களுக்கு குடுக்குதது தான் ஈகை. மத்ததெல்லாம் ஏதோ ஒண்ண பதிலுக்கு எதிர்பாத்து செய்யுதது போல தான்.

    குறள் 222:

    நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.

    மத்தவங்ககிட்டேந்து நல்ல மொறைல பொருள பெற்றுக்கிட்டாலும் அது பெரும ஆவாது. தானம் குடுக்குததுனால மேலோகத்துல எடமில்ல னு சொன்னாலும் குடுத்து வாழுததுதான் நல்லது.

    குறள் 223:

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள

    நான் ஏழ னு பொறத்தியார் கிட்ட சொல்லாம இருக்குததும் இல்லாதவங்களுக்கு கொடுக்குததும் நல்ல குடும்பத்துல பொறந்தவனுக்கு மட்டுமே உள்ள கொணம்.

    குறள் 224:

    இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணு மளவு

    குடுக்குத கொணம் இருக்கவங்களுக்கு கூட தங்கிட்ட பொருள வாங்கிக்கிடுதவனோட சந்தோசமான மொகத்த பாக்குத வரைக்கும் அவனுக்காக இரக்கப் படுதது துன்பமாத்தான் தோணும்.

    குறள் 225:

    ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
    மாற்றுவா ராற்றலிற் பின்

    பசிய பொறுத்து நோம்பு இருக்குதவங்களோட வலிமகூட பொறத்தியாரோட பசிய போக்குதவங்களோட வலிமைக்கு பொறவு தான்.

    குறள் 226:

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி

    ஒண்ணும் இல்லாதவங்களோட வயித்துப்பசிய போக்கணும். அதுதான் பொருள் இருக்குத ஒருத்தன் தன்னோட பிற்காலத்துக்கு ஒதவுததுக்காக சேமிச்சு வக்கித எடம்.

    குறள் 227:

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
    தீப்பிணி தீண்ட லரிது

    தனக்கு கெடச்ச சாப்பாட்ட பலபேர் கூட பங்குபோட்டு சாப்பிடுதவனுக்கு பசிங்குத கெட்ட நோவு சுளுவா அண்டாது.

    குறள் 228:

    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்

    ஏழ பாழங்களுக்கு கொடுக்காம தன் சம்பாத்தியத்த வம்பா தொலச்சுபோடுத ஈரங்கெட்ட மனசுக்காரங்க மத்தவங்களுக்கு கொடுக்குததனால வர சந்தோசத்த புரிஞ்சுக்கிடமாட்டாங்களோ?.

    குறள் 229:

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமிய ருணல்

    சொத்து கொறஞ்சுபோயிடும் னு யாருக்கும் குடுக்காம தனியா திங்குதது மத்தவங்க கிட்ட கை ஏந்துத விட கொடும.

    குறள் 230:

    சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈத லியையாக் கடை

    சாவுதது விட துக்கம் வேற ஒண்ணுமில்ல. ஆனா இல்லாதவங்களுக்கு ஒண்ணும் குடுக்கமுடியாமப் போகுத நெலம வந்துச்சின்னா அதவிட சாவுததே நல்லது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 22

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

    குறள் 211:

    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
    டென்னாற்றுங் கொல்லோ உலகு

    இந்த ஒலகத்துல நாம மழைய தருத மேகத்துக்கு என்ன செய்யுதோம். அந்த மழை மாதிரி உள்ளவங்க பதிலுக்கு என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து ஒதவி செய்யமாட்டாங்க.

    குறள் 212:

    தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு

    ஒருத்தன் முயற்சி செஞ்சு சம்பாதிச்ச பொருளெல்லாம் தேவைப்படுதவங்களுக்கு ஒதவி செய்யத்தான்.

    குறள் 213:

    புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
    ஒப்புரவின் நல்ல பிற

    தேவ ஒலகத்திலயும் , இந்த பூமிலயும் ஒழைக்க முடியாம இருக்கவங்களுக்கு ஒதவுத கொணத்த மாதிரி வேற நல்ல செயல பாக்குதது சங்கடந்தான்.

    குறள் 214:

    ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்

    ஒழைக்க முடியாதவங்களுக்கு ஒதவி செய்யுதவன் தான் உசிரோட வாழுதவன் மத்தவன் செத்தவனுக்கு சமானம்.

    குறள் 215:

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு

    ஒலகம் நல்லா வாழணும்னு நெனைக்க பெருமக்களோட சொத்து எல்லாருக்கும் உபயோகப்படுத நீர் நெறஞ்ச ஊருணிக்கு சமானம்.

    குறள் 216:

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்

    ஈர நெஞ்சம்இருக்குதவன் கிட்ட சேருத சொத்து ஊருக்கு நடுவுல இருக்க மரம் பழுத்து குலுங்குதது போல எல்லாருக்கு ஒதவியா இருக்கும்.

    குறள் 217:

    மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்

    மத்தவங்களுக்கு ஒதவுத குணமுள்ள பெரிய மனுசன்கிட்ட சொத்து சேந்திச்சின்னா அது ஒரு மரத்தோட எல்லா பாகமும் மருந்தா பலன் தருதது போல ஆவும்.

    குறள் 218:

    இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
    கடனறி காட்சி யவர்

    செய்ய வேண்டிய கடமைய உணந்த ஒசந்த அறிவாளிங்க தங்கிட்ட கொடுக்குததுக்கு ஒண்ணுமில்லன்னாலும் ஒதவி செய்ய தயங்க மாட்டாங்க.

    குறள் 219:

    நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
    செய்யா தமைகலா வாறு

    மத்தவங்களுக்கு ஒதவுதையே தங்கடமையா செய்யுத ஒருத்தன் ஏழையாயிட்டான்னு அறிஞ்சுகிடதது அவனால பொறத்தியாருக்கு ஒதவ முடியாம போகுத நெலமய வச்சிதான்.

    குறள் 220:

    ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து

    இருக்குதத மத்தவங்களுக்கு கொடுத்து ஒதவினா கெடுதல் வரும்னு தெரிஞ்சிச்சினா நம்மள வித்தாவது அந்த கெடுதல வாங்குத அளவுக்கு அது தகுதியுள்ளது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 21

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 21 – தீவினையச்சம்

     

    குறள் 201:

    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை யென்னுஞ் செறுக்கு

    கெட்டவங்க கெடுதல் செய்யுததுக்கு அஞ்ச மாட்டாங்க. நல்லவங்க கெடுதல் செய்யுததுக்கு பயந்து நடுங்குவாங்க.

    குறள் 202:

    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்

    கெட்ட செயல செய்யுததுனால கெடுதலே வெளையும் ங்கதால கெட்ட செயல நெருப்ப விட கொடும னு நெனைச்சி பயந்துக்கிடணும்.

    குறள் 203:

    அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்குஞ் செய்யா விடல்

    கெடுதல் செஞ்சவங்களுக்கு அத பதிலுக்கு செஞ்சு பழிவாங்காம  இருக்குதது தான் அறிவுல எல்லாம் ஒசந்த அறிவுனு சொல்லுவாங்க.

    குறள் 204:

    மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

    மறதி ல கூட பொறத்தியாருக்கு கெடுதல் செய்யாம இருக்கணும். அப்டி செய்தாம்னா அவனுக்கு கேடு உண்டாக்க அறக்கடவுள்  நெனைக்கும்.

    குறள் 205:

    இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றுப் பெயர்த்து

    தன்னோட ஏழ்ம காரணமா ஒருத்தன் கெட்ட செயல செய்தாம்னா அவன் திரும்ப வறுமல கெடந்து சீரளியுவான்.

    குறள் 206:

    தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
    தன்னை அடல்வேண்டா தான்

    துன்பம் தன்னைய சுத்தி சுத்தி வந்து வருத்துதத விரும்பாதவன் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம இருந்துக்கிடணும். .

    குறள் 207:

    எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென் றடும்

    எத்தாம் பெரிய பகை இருந்தாலும் தப்பிச்சிக்கிடலாம். மத்தவங்களுக்கு கெடுதல் செய்யுததனால வர பகை பொறத்தாலயே இருந்து தொந்தரவு செஞ்சுகிட்டே இருக்கும்.

    குறள் 208:

    தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயா தடியுறைந் தற்று

    பொறத்தியாருக்கு கெடுதல் செஞ்சவன கேடு எப்டி அண்டும்னா, அவனோட நெழல் விடாம அவன் காலுக்கு கீழ தங்குதது போல.

    குறள் 209:

    தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
    துன்னற்க தீவினைப் பால்

    தன்னத் தானே விரும்புதவன் எத்தன சிறிசான கெட்ட செயலயும் செய்யாம விட்டுபோட்டு போயிடணும். .

    குறள் 210:

    அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின்

    ஒருத்தன் தப்பான வழில மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம வாழ்ந்தாம்னா அவன கேடு இல்லாதவன் னு அறிஞ்சிக்கிடலாம்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

    குறள் 191:

    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்

    கேக்கவங்க வெறுக்குத மாதிரி ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லுதவன் எல்லாராலையும் எளக்காரமா நெனைக்கப்படுவான்.

    குறள் 192:

    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கட் செய்தலிற் றீது

    பலபேருக்கு முன்ன ஒதவாக்கர பேச்சு பேசுதது சேக்காளிக்கு கெட்டது செய்யுததக் காட்டிலும் கொடும.

    குறள் 193:

    நயனில னென்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை

    உப்புபெறாத விசயத்த விரிச்சு பேசினாம்னா அவன ஒதவாக்கரை னு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 194:

    நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து

    ஒண்ணுத்துக்கும் ஒதவாத கொணங்கெட்ட சொல்ல பல பேர்கிட்ட சொல்லுதவனுக்கு அந்த சொல்லே நியாயங்கெட்ட வழியகாட்டி நல்ல கொணத்த கெடுத்து உட்ரும்.

    குறள் 195:

    சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்

    நல்ல கொணம் உள்ளவங்க ஒதவாத சொல்ல சொன்னாங்கன்னா அவங்களோட பெருமயும் புகழும் இல்லாம போயிடும்.

    குறள் 196:

    பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
    மக்கட் பதடி யெனல்

    ஒதவாத சொல்ல பலகாலம் சொல்லுதவன மனுசன்னு சொல்லுததவிட பதர் னு சொல்லணும்.

    குறள் 197:

    நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று

    படிச்ச பெருமக்க அறமில்லாத சொல்லக்கூட சொல்லலாம். ஆனா ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லாம இருக்குதது நல்லது.

    குறள் 198:

    அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பய னில்லாத சொல்

    அரும்பயன்களை ஆஞ்சு அறியும் திறம உள்ளவங்க ஒதவாத சொல்ல சொல்லமாட்டாங்க. .

    குறள் 199:

    பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்.

    களங்கமில்லாத புத்திசாலிங்க நெனப்பு மறந்து கூட ஒதவாத சொல்ல சொல்ல மாட்டாங்க.

    குறள் 200:

    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்

    சொற்கள்ல வாழ்க்கைக்கு ஒதவுதத மட்டும் சொல்லணும். ஒதவாதத சொல்லக்கூடாது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 19 –புறங்கூறாமை

     குறள் 181:

    அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறா னென்றல் இனிது

    ஒருத்தன் நல்லது செய்யலேன்னாலும் அடுத்தாளப் பத்தி பொறளி பேசமாட்டாம் னா அதுதான் அவனுக்கு நல்லது.

    குறள் 182:

    அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை

    ஒருத்தன நேர்ல பாக்கும்போது பொய்சிரிப்பு சிரிச்சி பேசிபோட்டு, அவன் போன பின்னால பொறளி பேசுதது அறமில்லாத கெட்ட காரியத்த செய்தத விட கொடும.

    குறள் 183:

    புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
    அறங்கூறும் ஆக்கந் தரும்

    ஒருத்தன காணும்போது பொய்யா நடிச்சு பொறத்தே பொறளி பேசி வாழுதத காட்டிலும் சாவுததே மேல்.

    குறள் 184:

    கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
    முன்னின்று பின்னோக்காச் சொல்

    ஒருத்தன் நேரா நிக்குதப்போ தயவுதாட்சண்யம் பாரம கடுமையா பேசிக்கிடலாம். அவன் இல்லாத சமயம் பின் விளைவ யோசிக்காம அவனப் பத்தி பேச வேண்டாம்.  

    குறள் 185:

    அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்

    ஒருத்தன் மத்தவங்களப் பத்தி பொறளி பேசுதத வச்சே அவன் அற வழில நிக்காதவன் னு தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 186:

    பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
    திறன்தெரிந்து கூறப் படும்

    அடுத்தவனப் பத்தி பொறளி பேசுதவனோட கொடுமையான குத்தங் குறைகள கண்டுபிடிச்சு மத்தவங்க அவனப் பத்தி பொறளி பேசுவாங்க.

    குறள் 187:

    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்

    சந்தோசமா கூடிப் பழகி நட்ப வளக்கத்தெரியாதவங்க பொறளி பேசி  நல்ல சேக்காளியையும் பிரிஞ்சி போக உட்ருவாங்க.

    குறள் 188:

    துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு

    நெருங்கி பழகினவங்களோட தப்ப அவங்க இல்லாத நேரம் பேசுதவங்க முன்ன பின்ன தெரியாதவங்கள பத்தி என்னதான் பேச மாட்டாங்க.

    குறள் 189:

    அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
    புன்சொ லுரைப்பான் பொறை

    நேர்ல இல்லாத ஒருத்தனப்பத்தி பொறளி பேசுதவனோட  ஒடம்ப, இவனயும் சுமக்குதது என்னோட தருமம் னு நெனைச்சி பூமி  சுமக்குதோ.

    குறள் 190:

    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னு முயிர்க்கு

    பொறத்தியாரோட தப்ப பாக்குதது போலவே தன்னோட தப்பையும் பாத்தோம்னா நிலச்சு நிக்குத இந்த ஒலக வாழ்க்கைல துன்பம் வருமா.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 18

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 18 –வெஃகாமை

    குறள் 171:

    நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்

    மத்தவங்களோட பொருள ஒருத்தன் அநியாயமா அபகரிச்சாம்னா அவனோட குடும்பம் அழிஞ்சி போவும், பழியும் வந்து அண்டும்.

    குறள் 172:

    படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்

    நியாயத்துக்கு பயந்தவன் மத்தவங்க பொருள அனுபவிக்கணுங்குத நெனப்புல பழி பாவம் செய்ய மாட்டான்.

    குறள் 173:

    சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்

    அறத்தால வருத நெலையான பயன விரும்புதவங்க ஒடனடியா பயன் கெடைக்கும் ங்குத நெனைப்புல மத்தவங்க பொருள எடுக்க நியாயம் இல்லாத செயல செய்யமாட்டாங்க.

    குறள் 174:

    இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர்

    ஒண்ணுமில்லாம போய் ஏழ்ம நெல வந்தாலும் அஞ்சு பொறிய அடக்கின படிச்ச பெரியவங்க மத்தவங்க பொருளுக்கு ஆசப் பட மாட்டாங்க.

    குறள் 175:

    அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
    வெஃகி வெறிய செயின்

    பொறத்தியார் பொருள் மேல ஆச வச்சி நியாயமில்லாத வழில அத எடுக்க நெனைச்சவனுக்கு எல்லாத்தையும் படிச்சு அறிஞ்சிகிட்ட நல்ல புத்தி இருந்தாலும் அதால என்ன பிரயோசனம்.

    குறள் 176:

    அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
    பொல்லாத சூழக் கெடும்

    அருளைப் பெறுததுக்கு ஆசப்பட்டு குடும்ப வாழ்க்கைல நல்லதனமா இருக்குத ஒருத்தன் தெரியாத்தனமா மத்தவம் பொருளுக்கு ஆசப்பட்டு கெட்டது செய்தாம்னா அழிஞ்சு போவான்.

    குறள் 177:

    வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்

    மத்தவம் பொருள புடுங்கிக்கிட்டு வாழ்க்கைல வளமா இருக்கணும்னு நெனச்சாம்னா அந்த வளத்த அனுபவிக்க நேரத்துல அது நல்லதில்ல னு உணத்திடும்.

    குறள் 178:

    அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்

    சொத்து கொறையாம இருக்கதுக்கு ஒரே வழி மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான்.

    குறள் 179:

    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
    திறனறிந் தாங்கே திரு

    மத்தவம் பொருள் மேல ஆச வைக்காம இருக்கதுதான் அறம் னு நெனைக்க பெருமக்கள் கிட்ட (திருமகள்) லச்சுமி தானே போய் குடியிருப்பா.

    குறள் 180:

    இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
    வேண்டாமை யென்னுஞ் செருக்கு

    பின் விளைவ எண்ணாம மத்தவம் பொருள் மேல வைக்குத ஆச நமக்கு அழிவ கொடுக்கும். ஆசப்படாம இருக்குதது வாழ்க்கைல வெற்றிய கொடுக்கும்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 17

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 17 – அழுக்காறாமை

    குறள் 161:

    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
    தழுக்கா றிலாத இயல்பு

    மனசில பொறாம இல்லாம வாழுத கொணத்த ஒருத்தன் தனக்கான ஒழுக்க நெறியா நெனைச்சிக்கிடணும்.

    குறள் 162:

    விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்

    ஒருத்தன் யார்கிட்டயும் பொறாமைப் படாம இருந்தாம்னா அவன் பெத்த பேறு ல அதுக்கு ஒப்பா வேற எதுவும் இல்ல.

    குறள் 163:

    அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணா தழுக்கறுப் பான்

    மத்தவங்க வாழ்க்கைல ஒசருதது பொறுக்காம பொறாமப் படுதவன் அறத்தால வர புண்ணியத்த வேண்டாம் னு மறுத்து சொல்லுதவனாவான்.

    குறள் 164:

    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக் கறிந்து

    பொறாமையால கெடுதல் வெளையும் னு அறிஞ்சி புத்தியுள்ளவங்க தீமையான செயல செய்யமாட்டாங்க.

    குறள் 165:

    அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
    வழுக்கியுங் கேடீன் பது

    பொறாமை உள்ளவங்களுக்கு வேற எதிரி தேவையில்ல. அவங்க கொணமே அவங்கள தோக்கடிச்சிடும்.

    குறள் 166:

    கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉ மின்றிக் கெடும்

    ஒதவியா ஒருத்தங்களுக்கு கொடுக்குதத கண்டு பொறாம படுதவனோட கொணம் அவன மட்டுமில்லாம அவனோட சொந்தக்காரங்களையும் சேத்து சோறும், உடுப்பும் இல்லாம அலைய உட்டுரும்.

    குறள் 167:

    அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்

    பொறாம கொணம் கொண்டவன திருமகள் னு சொல்லுத லச்சுமி தன்னோட அக்காள் மூதேவிக்கு அடையாளம் காட்டிபோட்டு நகந்துகிடுவா.

    குறள் 168:

    அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்

    பொறாமன்னு சொல்லுத பாவி ஒருத்தனோட சொத்த அழிச்சி அவன கெட்ட வழில போக விட்டுரும்..    .

    குறள் 169:

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்

    பொறாம இருக்குதவன் வளமா வாழுததும், பொறாம இல்லாத நல்லவன் வேதன படுததும் ஆராஞ்சுபாக்க வேண்டியவை.

    குறள் 170:

    அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

    பொறாம பட்டதனால ஒருத்தனுக்கு பெரும கெடச்சிது னு ஒலகத்துல இல்ல. பொறாம இல்லாதவங்க தாழ்ந்துட்டாங்க ன்னும் இல்ல.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 16

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 16 – பொறையுடைமை

    குறள் 151:

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை

    தம்மேல குழி தோண்டுதவன கீழவிழாம தாங்குத நெலம் போல தன்னைய எளக்காரமா பேசுதவனோட செயல கூட பொறுத்துக்கிடதுதான்  ஒசந்த கொணம்.

    குறள் 152:

    பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
    மறத்த லதனினும் நன்று

    அளவுக்கதிகமா செஞ்ச தீமயக் கூட பொறுத்துக்கிடணும். அத நெனைப்புல வச்சிக்கிடாம மறக்குதது பொறுத்துப் போவத விட நல்லது.

    குறள் 153:

    இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை

    வறுமையிலயும் பெரிய வறும வந்த விருந்தாளிய சரியா கவனிக்காம உடுதது. வலிமையிலும் பெரிய வலிம புத்திகெட்டவங்களோட செயல  பொறுத்துக்கிடதது.

    குறள் 154:

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
    போற்றி யொழுகப் படும்

    பொறுமையுள்ளவனா வாழுதவன தான் ஒலகம் நிறைவான மனுசன் னு சொல்லும்.

    குறள் 155:

    ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

    தனக்கு கெட்டது செய்தவன தண்டிச்சவங்கள பெரிய மனுசங்க ஒரு பொருட்டா மதிக்க மாட்டாங்க. பொறுத்துக்கிட்டவங்கள  மனசுக்குள்ளார வச்சி தங்கத்துக்கு சமமா மதிப்பாங்க.

    குறள் 156:

    ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்

    தனக்கு கெட்டது செஞ்சவன தண்டிச்சவனுக்கு அன்னிக்கு மட்டுந்தான் சந்தோசம். அத பொறுத்துக்கிட்டவனுக்கு ஒலகம் அழியற வர புகழ் நெலச்சி நிக்கும்.

    குறள் 157:

    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
    தறனல்ல செய்யாமை நன்று

    மத்தவன் நமக்கு கொடுமைய செஞ்சாலும் அத திரும்ப செஞ்சோம்னா அவனுக்கு நோவுமே ன்னு நெனச்சி பழி வாங்காம விடுதது நல்லது.

    குறள் 158:

    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
    தகுதியான் வென்று விடல்

    அகராதியால (ஆணவம்) அக்கிரமம் செய்யுதவங்கள நாம நம்மளோட  பொறும கொணத்தால செயிச்சிடலாம்.

    குறள் 159:

    துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்

    அத்துமீறி நடந்துகிடுதவங்க பேசுத கடுஞ் சொல்ல பொறுத்துக்கிட்டவங்க குடும்ப வாழ்க்க வாழ்ந்தாலும் எல்லாத்தையும் துறந்த தூய துறவிக்கு சமானம் தான்.

    குறள் 160:

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொ னோற்பாரிற் பின்

    சோறு திங்காம நோன்பு இருக்கவங்களுக்கு இருக்க மதிப்பு கூட கடுஞ்சொல்ல பொறுத்துகிட்டவங்களுக்கு அடுத்தபடியா தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share