Author: சேசாத்திரி

  • வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்

    -துக்கை ஆண்டான்

    ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத் தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப் பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும்  புன்செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரையும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும் “ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வேலியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப் பண்ணுவதே.” இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.

    இப்பட்டர்கள் குடியிருக்கிற மனைகளுக்கு நிலம் காலும் பாடிகாப்பானுள்ளிட்ட பணி செய் மக்களுக்கு நிலம் காலும் ஆக நிலம் முப்பத்திரு வேலியும் சந்திராதித்தவரையும் இறையிலி ஆக விட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.(கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)

    இடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வரதராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு.

    மகன் – கீழ்ப்படிந்த வீரன், subordinate soldier; மனை – வீடு.

    விளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்.

    இந்த பிராமண வீடுகளை ஒட்டி நிலம் காலும் ஒதுக்கப்படுகின்றது. அவை கொல்லைப்புறமாக இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. இவர்களுடன் பாடிகாவல் உள்ளிட்ட பிற பணியாளருக்கும் இறையிலியாக தலைக்கு கால்நிலம் என 32 வேலி நிலம் நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் வரை செல்லக் கடவதாக வழங்கப்படுகின்றது.

    22 பேருக்கு 32 வேலியை வகுத்தால் ஒருவருக்கு ஒன்றரையாக (1.45) நிலம் கிட்டுகின்றது. இந்த ஒன்றரையில் கால் என்பது சற்றொப்ப 0.242 என வருகின்றது. அப்படியானால் பாடிகாவல் உள்ளிட்ட பிற கோவில் பணிசெய்வோருக்கு நிலம்கால் என்ற அளவில் 32 வேலி நிலத்தை வகுத்தால் 128 பேர் நிலம் பெறுகின்றனர். ஆக ஒரு பழைய கோவில் ஊரை திருத்திச் சீரமைத்து பெரிய ஊராக அமைத்தான் வாணகோவரையன் என்பது விளங்குகின்றது.  இந்த கால்நிலம் பெறும் 128 பேரில் 22 பிராமணரும் அடங்குவர் என்று தெரிகின்றது. அந்த 22 பேரைக் கழித்தால் 128 – 22 = 106 பிராமணரல்லாதார் நிலம் பெற்றனர். இந்த கால்நிலம் என்பது பயிர் நிலமல்ல மாறாக அவர்கள் தம் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்வதற்கே என்று புரிகின்றது. பிராமணருக்கு அரசனே வீடு கட்டிக் கொடுத்ததால் அவை அளவில் பெரியவாகவும் கிணறு உடையவாகவும் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.

    அதேநேரம் கால்நிலம் பெற்றவர்கள் எளியோர் என்பதால் அவர்களால் அதிகம் செலவழித்து பெரிய வீடு கட்ட முடியவில்லை என்பதோடு கிணறு வெட்டினால் கூடுதல் செலவாகும் எனபதால் கிணறுஅற்ற சிறு வீடுகளாகவே அவர்தம் வீடுகள் காட்சிப்படுகின்றன. கால்நிலம் என்பதும் சிறுபரப்பு நிலத்துண்டு தான் அதுவே சிறிய வீட்டிற்கும் காரணமாகின்றது.

    மற்றொரு மடலாடல் குழுவில் 3 ஆண்டுகள் முன் பிராமணர் பிறர் வீடுகள் கிணறு அமையா வண்ணம் தடுத்துவிட்டனர் என்று தொல்லியலாளர் பத்மாவதி என்பவர் கருத்து கூறியதாக பதிவான போது அதை மறுத்து பிராமணர் வீடுகள் கிணறுடன் இருப்பதற்கு அவை வேந்தர், மன்னர், அரையர்களால் பெருஞ்செலவு செய்து  கட்டப்பட்டவை. பிறருடைய வீடுகள் கிணறு இன்றி சிறியவாக இருப்பதற்கு காரணம் அவர்தம் வீடுகள் அவர் தம் சொந்த செலவால் கட்டப்பட்டதே காரணம் என்று பிழையை சுட்டிக் காட்டினேன். தொல்லியலாளர் பத்மாவதி திராவிட கருத்தியலின் தாக்கத்தால் அவ்வாறு தவறான ஒரு கருத்தை கல்வெட்டில் செய்தியாக கூறப்பட்டுள்ளது என திணித்துள்ளார் என்று எடுத்துரைத்தேன். இப்போது போல அப்போது என்னால் கல்வெட்டுச் சான்று ஏதும் தரஇயலவில்லை என்பதே குறை.

    தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் தம் சொந்தக் கருத்தை கல்வெட்டுச் செய்தியாக புகுத்தாமல், திணிக்காமல் இருப்பதுவே சாலவும் நன்று, அல்லவிட்டால் பல தலைமுறைக்கு அத்தவறான கருத்து எடுத்துச் செல்லப்பட்டு சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதே நடப்பு உண்மை.

    இப்போது இந்தக் கல்வெட்டின் மூலம் பெரம்பலூர் வட்டம் சித்தளி ஊரில் மட்டும் அல்ல, கோவில் அமைந்த பிற எல்லா ஊர்களிலும் இதே முறையில் தான் பிராமணருக்கு வீடும், பிறருக்கு வீட்டு மனை மட்டும் என வழங்கப்பட்டன. அதனால் தான் பிராமண வீடுகள் கிணறுள்ள பெரிய வீடாகவும், பிறருக்கு கிணறற்ற சிறிய வீடாகவும் அமைந்தன என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.  இன்றும் கோவில் ஊர்க் கிராமப் புறங்களில் வீடுகள் இதே நிலையில்தான் அமைந்துள்ளன என்பதைக் கண்டு தெளியலாம். இந்த வேறுபாட்டிற்கு ஏற்றத்தாழ்விற்கு வேந்தர், மன்னர், அரையர் தாம் காரணமே ஒழிய பிராமணர் காரணகர் அல்லர். அப்படியான நிலையில் பிராமணரைப் பழிப்பது நன்றன்று.

    வேந்தர், மன்னர், அரையரான அரசர், நாட்டுக் கிழான் ஆகிய நாலடுக்கு அதிகார அமைப்பு பிராமணருக்கு வேத பாடசாலை அமைத்து கல்வி புகட்டி, கோவில் கட்டி வேலைவாய்ப்பு தந்து குடியிருக்க வீடும் ஏற்படுத்தித் தந்தது என்ற வகையில் 4 அகவை முதல் இறக்கும் காலம் வரை பாதுகாவலராக உத்தாரமாக (supportive) இருந்து தந்தைக்கு ஒப்பான நிலையில் பேணியதற்கு பிராமணர் நன்றி உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். ஆளப்பிறந்தவர், ஆண்டகுடி, மண்ஆண்டவர், அடக்கிஆண்டவர் என்று மார்தட்டிக் கொள்வோர் காரணமின்றி பிராமணரைப் பழிப்பது என்பது இதில் அவர்கள் போற்றும் அரசகுடியோரை பழிப்பதாகவே கருதத்தக்கதாக உள்ளது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III, பக். 100. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை – 8

    Share
  • வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    சேசாத்திரி

    வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
    2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
    3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
    4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக்  காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
    5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும்  புன்பயிற் செய்தால் புனத்துக்கு  ஒரு பணமும்  இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
    6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.

    விளக்கம்:

    விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது.

    நன்செய் பயிரில் பாழும் உமி மட்டும் உள்ள சாவியைத் தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்குக் கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து, மேலும் 10 ல் 1 பகுதி கழித்து, வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குருத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவர்க்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவர்க்கு இரண்டு பணமும் புன்செய் பயிர் செய்தால் புனத்து 1 பணமும் தரவேண்டும். இவை தவிர்த்து வேறு எந்தப் புது வரியும் செலுத்த வேண்டாம்.

    இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்களை நன்றாக வாட்டி வதைத்து, தலையில் குத்தி, கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர். வலங்கை இடங்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்துக் காட்டப்பட்டார்களோ அல்லது இவர்கள் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா?

    மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு சரிநிகராக வைக்கப் படுவது, 15 ஆம் நூற்றாண்டில். இவர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:

    தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு

    Share
  • புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்

    துக்கை ஆண்டான்

    மீன்பிடி வலையரான முத்தரையர்களின் தீண்டாமை விலக்கு நிகழ்வுகளை பழங்காலச் சமூக வரலாற்று நோக்கில் காண்டிட, உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இருப்பவை இதில் இடம்பெறும் சில புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்.

    பிறப்பு சார்ந்த சாதீயத் தீண்டாமை என்பது கண்ணிற்கு புலனாகாத வேலியும் சுவரும் போன்ற ஒரு திறந்தவெளிச் சிறைக் கட்டமைப்பு ஆகும் என்பது புரிதல். இந்தத் தீண்டாமை தமிழ்நாட்டில் எப்போது? எந்த வடிவில்? அறிமுகமானது. இதற்கு தாக்குண்ட சமூகங்கள் யாவை? என்பதை பார்ப்போமானால் இக்காலத்தே பலராலும் பரவலாக மேடையிலும், எழுத்திலும் விவரிக்கப்படுவது போல் ஊருள் நுழையவிடாமை, பொதுக் குளத்தில் நீர் மொள்ளத் தடை, எச்சில் துப்பத் தடை, வேட்டியை குறிப்பிட்ட முறையில் கட்டத் தடை போன்றதாக இருந்திட வில்லை. மாறாக, தொழில் சார்ந்து பிணம் தீண்டாமை என்ற வகையில் தான் அது முதன்முதலில் 15/16 ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகமாகின்றது. அதே நேரம் சாதீயத் தீண்டாமை இன்னும் பிற்பட்ட காலத்தில் 17/18 நூற்றாண்டுகளில் தான் அறிமுகமாகி இருக்க வேண்டும் என்ற ஊகக் கருத்திற்கு தக்கவாறு தான் தமிழ்நாட்டில் பறையர்கள் ஊருள் குடியிருக்க சுதந்திர உரிமை பெற்றிருந்ததையும், உயர் அரசு பதிவிகளில் இருந்ததையும்  புதுக்கோட்டை கல்வெட்டுகள் நமக்கு இயம்புகின்றன. சாதீயத் தீண்டாமைக்கு எடுகோளாக அம்பேத்கர் மனுதர்மத்தில் இருந்து வைக்கும் குறிப்புகள் பிணத் தீண்டாமையைப் பற்றி தான் பேசுகின்றனவேயன்றி சாதீய தீண்டாமை பற்றி பேசவில்லை.

    X  50 குறிப்பை எடுத்துவிட்டதால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது

    //Ambedkar > Manu smriti says:

    1. 50. Near well-known trees and burial-grounds, on mountains and in groves, let these (tribes) dwell, known (by certain marks), and subsisting by their peculiar occupations.
    2. 51. But the dwellings of the Chandalas and the Shvapakas shall be outside the village, they must be made Apapatras and their wealth (shall be) dogs and donkeys.
    3. 52. Their dress (shall be) the garments of the dead,(they shall eat) their food from broken dishes, black iron (shall be) their ornaments and they must always wander from place to place.
    4. 53. A man who fulfils a religious duty, shall not seek intercourse with them; their transactions (shall be) among themselves and their marriages with their equals.
    5. 54. Their food shall be given to them by others (than an Aryan giver) in a broken dish; at night they shall not walk about in village and in towns.
    6. 55. By day they may go about for the purpose of their work, distinguished by marks at king’s command, and they shall carry out the corpses(of persons) who have no relatives; that is a settled rule.
    7. 56. By the King’s order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals. . (தூக்கில் இட்டால்  அங்கே குற்றவாளிகளின் பிணம்தான் விழும்) //

    X  50 குறிப்பை நீங்கிவிட்டால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது.

    இக்கால் இந்தியாவில் 1108 சாதிகள் ஒடுக்கப்பட்ட அட்டவணை சாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுகூட மனுதர்மத்தால் சுட்டப்படவில்லை. மாறாக, பிணங்களை கையாளும் வெட்டியான் சாதியான சண்டாளர் பற்றி தான் குறிப்பு உள்ளது. இந்தியாவில் அத்தனை ஒடுக்கப்பட்ட சாதியரும் பிணத்தை கையாள்வதில்லை என்பது ஈண்டு கருதற்பாலது. ஆனால் கடந்த 125 ஆண்டுகளாக மேலை வரலாற்று ஆசிரியர் முதல் இக்கால தலித்திய இயக்கங்கள் வரை எல்லோரும் பிணம் கையாளும் வெட்டியான்களுக்கான இந்த மனு தர்மக் கருத்தை அத்தனை ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதும் திணித்துத் தவறாகக் காட்டி சாதீயத் தீண்டாமைக்கான உண்மையான மூல காரணத்தை, காரணகரை பிறர் அறியவிடாமல் செய்துவிட்டனர், செய்தும் வருகின்றனர். நெய்தல், குறிஞ்சி, முல்லை நில மக்களில் சாதீய தீண்டாமை அறவே இல்லாமல் இருக்க வயல் சார்ந்த மருத நிலத்தில் மட்டுமே இந்த 1,108 சாதிகள் இருக்கக் காரணம் என்ன? என்று இதுவரை எவரும் சிந்திக்கவில்லை. சிந்தித்தால் உண்மையான காரணகர் பிடிபட்டு விடுவார்கள். பின் மதமோ, பிராமணரோ, மனுதர்மமோ அதற்கு காரணம் அல்ல என்பது விளங்கிவிடும். கீழ்காணும் கல்வெட்டுகள் இதற்கு வலுவான சான்றுகளாக உள்ளன. ஊன்றிப் படிப்பவருக்கு இதில் அறிவுவெளிச்சம் கிட்டும்

    இனி புதுக்கோட்டை கல்வெட்டுகள்

    எண் 847. 21 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், புல்வயல், ஈசுவரன் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    _ _ த்து சாகாத _ _ _ _ மேல் செ / ல்லாநின்ற  விக்கிறம வருசம் சித்திரை / 1445_ [4] நாள் வயலகநாட்டு புல்வயல் / ம _ _ ம ஊர் ஆக இசைந்து ஊரவ / ரோம் இவ்வூர் வலையரில் கடை _ / த _ _ ற்றில் கடம்பராய முத்தரைய / ர் [எ]ழுந்தராமை வென்ற முத்தரைய _ / பனையன் உள்ளிட்டாற்கும் உலகப்ப _ / யன் உள்ளிட்டாற்கும் நடுவிற்கூளபெ _ / ந[ச]ரதிருவன் உள்ளிட்டாற்கும் சயிரன் / உள்ளிட்டாற்கும் மேலைக்கூவ தேவே / ந்திர முத்திரையன் வகை  மணவாளர் / காத்தான் உள்[ளி]ட்டாற்கும் வள்ளி பெரி / யான் உள்ளிட்டாற்கும் ஆக இந்த மூன்று / வலையற்கும் கல்வெட்டிக்குடுத்தப / டி இவர்கள் திம்மைக்குச் செய்யுந் தொழில்பாடுகளில் நம்முடைய ஊற் / குள் பெண்டுகள் அல்லவானால் வலைச்சி முக்காட்டு இட்டுச்சவத்துக்கு மு / க்காட்டு இட்டு சவத்துக்கு முன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் சவம் / அடிக்கினால் மற்றா நாள் தண்ணீர் சொரிஞ்சு காடு ஆற்றுகிறதும் இந்த இரண் / டு தொழிலுங் (தொழிலுங்) கழித்து குடுத்தமைக்கு ஊரவ / ர் சொற்படிக்கு தென்னவதரையர் எழுத்து.

    வயானம் – இடுகாடு; அடிக்கி – அடக்கம்; கழித்து – ஒதுக்கி; தின்மை –அமங்கல சடங்கு: வலைச்சி – மீனவத்தி.

    விளக்கம்: சக ஆண்டு 1445 (1523 AD) வயலக நாட்டு புல்வயல் ஊர் சபையோர். இவ்வூர் வலையரில் கடம்பராய முத்தரையர், எழுந்தராமை வென்ற முத்தரையர், பனையன் உள்ளிட்டார்,  உலகப்பனையன், நடுவிற்கூள திருவன், சயிரன், மேலக் கூவ தேவேந்திர முத்திரையன், மணவாளர் காத்தான், வள்ளி பெரியான் உள்ளிட்ட இம்மூன்று வலையர் மக்களுக்கும் கல்லில் வெட்டிக் கொடுத்த உரிமை யாதெனில் அமங்கல தொழில்பாடுகளில் நம்முடைய ஊரில் பெண்டுகள் இல்லாது போனால் வலைச்சியர் முக்காடு இட்டுக் கொண்டு பிணத்திற்கு முக்காடு இட்டு  பிணத்திற்கு முன்னே சென்று இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவும், அடக்கம் செய்த மறுநாள் தண்ணீர் தெளித்து தோட்டம் ஏற்படுத்துவதுமான இரு தொழிலையும் ஒதுக்கிக் கொடுத்த ஊர்ச் சபையோரின் சொல்லை ஏற்று ஆமோதித்த தென்னவதரையர் எழுத்து.

    இக்கல்வெட்டு மூலம் ஈமத்தொழில் வலையர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவு. விளைவுகள் இதன் பின் தான் தெரியவரும்.

    எண் 926. 11 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    ஸுபமஸ்து மன்மத ஆண்டு ஆனி மாதம் 8 நாள் நயினார் குடுமியார் நயினார் ஸ்ரீ பண்டாரக் காரியத்துக்குக் கடவார் / விசலூர் கோனாட்டு முத்திரையன் செலிந்திவன முத்திரைன் உட்பட்டாற்கு கல்வெட்டிக் குடுத்த / படி இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன்னே முக்காடு இட்டும் நடந்தபடியினாலே இவர்களை / பிறவூர் வலையர் சாதி நீக்கி இனம் பண்ணினபடியினாலே இவர்கள் குடி போயிருக்கையில் மல்லப்ப / னாயக்கர் பல்லவராயர் பண்டார உத்தாரமாக பட்டடை காவலும் முக்காடு இடவும் வேண்டாம் என் / று  கட்டளையிட்டபடியினாலே இந்தபடி இ சந்திராதித்தவரையும்  நடத்தக் கடவோமாகவும் இது காரியத்துக்கு / யாதாம் ஒருத்தர் அகுதம் பண்ணினால் கெங்கைக்கரையிலே கராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போக / கடவதாகவும் இப்படிக்கு தானத்தார் பரமேசுரர் பட்டர் எழுத்து. சைவ[ப்]பிறகாச பட்டர் எழுத்து / சீகாரியஞ் செய்வார் எழுத்து. கோயில் கணக்கு கோனாட்டு வேளார் எழுத்து. மல்லப்ப / னாயக்கப் பல்லவராயர் காரியத்து இ கடவார் தையலாபிள்ளை எழுத்து. விசலூர் வெள்ள எழுத்து. / மருங்கூ,ர் சேவகமுத்தரையன் பிடாரன் எழுத்து.

    பண்டாரம் – கோயில் நிர்வாகம்; உத்தாரம் – துணையாக, ஆதராவாக.

    விளக்கம்: 1415 AD மற்றும் 1475 AD இல் நிகழ்ந்த மன்மத ஆண்டுகளில் ஒன்றில் ஆனி மதம் 8 நாள் இக் கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும். கோவில் பணிக்குச் செல்லும் விசலூர் கோனாட்டு முத்திரையன், சிலந்திவன முத்திரையன் உட்பட்டாருக்கு கல்வெட்டு மூலம் தெரிவிப்பதாவது இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன் முக்காடு இட்டு நடந்து சென்றதால் பிறவூர்  வலையர்கள் இவர்களை சாதி நீங்கி ஈனம் செய்துவிட்டனர். அதனால் இவர்கள் குடிபோன இடத்தில் மல்லப்ப நாயக்கரான பல்லவராயர் கோவில் உத்தாரமாக இவர்கள் பட்டடை காவலும் முக்காடும் இடுவதற்கு தடைபோட்டார். இதாவது, கோவில் பணியை அனுமதித்து பிணப் பணியை தடை செய்துவிட்டார். அதன்படியே சந்திராதித்தர் வரை நடந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தக் கட்டளையை எவரேனும் மீறினால் அவர் கங்கைக் கரையில் கரவை மாட்டைக் கொன்ற குற்றத்தை சம்பாதித்தவர் ஆகுவார் என கோவில் ஸ்தானத்தார் (பொறுப்பாளர்) பரமேசுவர பட்டர், சைவப்பிரகாச பட்டர், திருப்பணி செய்வார், கோயில் கணக்கு கோனாட்டு வேளார், பல்லவராயர் பணியாளர் தையலாப் பிள்ளை, விசலூர் வெள்ளாளர், விசலூர் சேவக முத்திரையன் பிடாரன் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

    இதன் மூலம் பிணத் தீண்டாமை சாதி விலக்கு பரவி பிணம் தீண்டலுக்கு எதிரான சமூக எதிர்வினை ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகின்றது.

    எண் 906. 17 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    விக்கிறம ஆண்டு வைசாக மாதம் 25 நாள் குடுமியார்மலை நயினார் ஸ்ரீ பண்டார / திருவாசல் காரியத்துக்கு கடவர் தானத்தாரோம் மேற்படியூர் / வலைக்குன்[று] சூழ்நாட்டு முத்திரையன் கோனாட்டு முத்தி[ரை]யந் உள்ளிட்டாற்கு பிடிபாடு பண்ணிக் குடுத்தபடி பின்னுக்கு யி / ந்த ஊரிலே சாவு செத்தால் கட்டையும்மிட்டு முக்காட்டுமிட்டுத் தீ / ச் சட்டியுங் கொண்டு சுளுந்துங் கொளுத்தப் போய் சவங்காத்து / நின்று சுட்டு நடக்[கை]யில் யிக்காரியம் [செ]ய்ய யின வகையாது என்று / (கும்) போய்யிருக்கையில் யிந்தக்காரியம் மட்டும் வேண்டாம் என்று[ங்] /  கட்டளையிடுகையில் மற்றபடி[க்]கு நன்மைக்கு பந்தல் சுளுந்து கழங்க / யிலை  தகறற்றுஞ் செய்ய[வு]ம் குறைவறுப்பஞ் செயவும் நன்மைக்கு உண் / டான முறைமை எல்லா[ஞ் செ]ய்யவும் கொளம் ஏரி கரும்ப யிறையம் / யிராசகரமட்[ட]ம்மைப்பாடும்(ப்) பண்ணி தானத்தா(த்து)ற்கும் ஊராற்கும் / உள்ள காட்சி பல சு[வ]ந்தரமுண்டான சுவந்தரமுஞ் செய்து சுகத்திலே யிரு[க்]க கடவராகவும் யிற்படிக்கு / அதிகாரம் சிவந்தெழுந்தார் எழுத்து. பரமேசுவரபட்டர் எழுத்து. /  சிபப்பிறகாச பட்டர் எழுத்து. சிகாரிய[ஞ்] செய்வார் எழுத்து. கோயில் கண(கு)க்கு குடுமிகோநாட்டு வேளாந் எழுத்து.

    கட்டை – ஈம விறகு, உயிற்ற உடல்; சுளுந்து – தீப்பந்தம்; பண்டாரம் – கோயில் மேலாண்மைக் குழு; நன்மை – மங்கல நிகழ்ச்சி.

    விளக்கம்: மேலேகண்ட கல்வெட்டு எண் 847 இல் தந்த பிணத்தொழில் உரிமைக்கு ஏற்பட்ட எதிர்வினை இது. 1523 AD வைகாசி மாதம் 25 ஆம் நாள் வெட்டி கல்வெட்டு. குடுமியான் மலை சிகாநாதர் கோவில் திருவாசல் பணிசெய்யும் பொறுப்பாளர்கள். குடுமியான்மலை வலைக்குன்று சூழ்நாட்டு முத்திரையன், கோனாட்டு முத்திரையன் உள்ளிட்டார்க்கு பிடிபாடு (behavioural guidelines) வழங்கியதாவது. இனி இந்த ஊரில் சாவு விழுந்தால் பிணத்தை பாடையில் வைத்து, முக்காடு இட்டு, தீச்சட்டியை ஏந்தி சுளுந்து கொளுத்தி, பிணம் காத்தும் எரித்தும் வந்த வேலையை இனியும் செய்ய வகையில்லை என்பதால் இந்த அமங்கல வேலையை கைவிட்டு நன்மையான மங்கல வேலைகளான பந்தல் இடுதல், சுளுந்து (தீப்பந்தம்), கழங்கஇலை, இப்படி எல்லா வகை மங்கல வேலைகளையும்; குளம், ஏரி, கரும்பஇறை வேலை ஆகியன மட்டும் செய்து கோவில் பொறுப்பாளர்க்கும் ஊர் சபையோருக்கும் இடர் இல்லாமல் காணும்வண்ணம் உரிமையோடு செய்து ஊர்த்தடை இன்றி உரிமையுடன் சுகமாக வாழ்ந்துவர வேண்டும் என்று, இப்படிக்கு அதிகாரம் சிவந்தெழுந்தார், பரமேசுவர பட்டர், சிவப்பிரகாச பட்டர், ஸ்ரீகாரியம் செய்வார், கோயில் கணக்கு குடுமிகோநாட்டு வேளான் ஆகியோர் ஓலையில் கையெழுத்திட்டனர்.

    எண் 945. 7 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், திருவேங்கவாசல், வியாக்ரபுரீசுவரர் கோவிலில் மடப்பள்ளிக்கு வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    பிலவங்க ஆண்டு புரட்டாதி மாதம் 8 அந்தியது ஆவு / டைய பல்வராயர் திருவேங்கைவாசல் / வலையற்கு வரக்காட்டின காரியம் தாங்கள் / கோயில் சூலம்  போட்டபடியினாலே போiன / [னா]ர்கள் சூளக்காறர். சொன்னார்கள் எங்களுக்கு / சூலமும் வேண்டாம்மென்று. கட்டளையிட்டு கல் / லு வெட்டிப்  போடுகிறோம், தாங்கள் ____

    சூலக்காரர் – சூலம் பொறித்தோர்.

    விளக்கம்: பல்லவரான பல்லவராயர் புதுக்கோட்டையை ஆண்ட பின் மறைந்து அழிந்தபடியால் தொண்டைமான்கள் இராமநாதபுரம் சேதுபதி இசைவுடன் அங்கு அரசு பொறுப்பிற்கு வந்தனர், 17 ஆம் நூற்றாண்டில். தமிழ்வேந்தர் ஆட்சி இழப்பிற்கு பின்னும் நாயக்கர் ஆட்சிக்கு முன்னுமான இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த 1427 AD மற்றும் 1487 AD பிலவங்க ஆண்டுளில் ஏதோ ஒன்றில் புரட்டாசி மாதம் 8 ம் தேதி இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. கிழமை குறித்திருந்தால் நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கும்.

    ஆவுடை பல்லவராயர் திருவேங்கைவாசல் வலையரை வரவழைத்து எடுத்துக் கூறிய செயலாவது நீங்கள் கோயில் சூலம் இட்டபடியால் அந்த சூலக்காரர் சினந்து சொன்னார்கள் எங்ளுக்கு சூலமும் வேண்டாம் பிறிதும் வேண்டாம் என்று போய்விட்டார்கள். அதனால் கட்டளையிட்டு  கல்வெட்டிப் போடுகிறோம், இனி நீங்கள் என்று செய்தி முற்றுப் பெறாமல் விடுபட்டுள்ளது. பிற கல்வெட்டுச் செய்திகளை ஒப்பிட்டால் இவர்கள் பிணத் தொழிலை கைவிட வேண்டும் என்பதாகவே இருக்கும் என்று மட்டும் ஊகிக்க முடிகின்றது. 

    எண் 948. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் தர்மசமர்த்தினி அம்மன் கோவிலின் கீழ்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. சவுமிய வருஷம் ஆடி மாதம் 26 நாள் கானனாட்டுத் தெற்காட்டுர் ஊர்கமைந்த ஊரவரோம் மேற்படியூர் புறஞ்சேரியிலிருக்கும் பறையற்குப் பிடிபாடு பண்ணிக்குடுத்தபடி, இவர்கள் முன்னுக்கு களஞ் செதுக்குகையில் இப்போ களஞ்செதுக்க_ _ _ _ _ ங்களு
    2. க்கு ஆற்றாதென்கையில் பின்பு ஊராகக் கூடிப் பறையரைக் களஞ் செதுக்க வேண்டாமென்று கட்டளையிட்டுக் குடுத்த (யிட்டுக் குடுத்த) படியிலே சந்திறாதித்தவரை செல்ல முன்னுண்டான சுவந்திரமும் பற்றி ஊருலே குடியிருக்கவும் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டி
    3. க் கொள்ளக்கடவாராகவும் _ _ _  வாணாதராயர் எழுத்து. தெற்காட்டூர் வேளார் எழுத்து. சொல்லி ஆடுவார் எழுத்து நாட்டுக் கணக்குத் தென்னவரையன் எழுத்து. இந்த _ _ _ _ மந்திருமே _ _ _ _ ம்பான் மூளி பெரியான் உள்ளி[ட்]டாரு.

    பிடிபாடு – வழிகாட்டு நெறி (Behavioral guidelines): களம் – வயல்;

    விளக்கம்: விசயநகர ஆட்சி உண்டான பின் 60 ஆண்டு குறிப்பு தமிழ்க் கல்வெட்டுகளில் இடம் பெற்றது. நாயக்கர் ஆட்சி என்றால் வேந்தர் பெயர், ஆட்சி ஆண்டு தமிழ்வேந்தர் காலத்தில் இருந்தது போலவே குறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அல்லாமல் இக்கல்வெட்டு சௌமிய ஆண்டு ஆடி 26 ஆம் நாள் என்று வெட்டப்பட்டுள்ளது. எனவே இது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பின்னான நிகழ்வு எனக் கொண்டால் 1429 AD அல்லது 1489 AD இல் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் கிழமைக் குறிப்பு இருந்திருந்தால் சரியான ஆண்டை நம்மால் குறிக்க வியலும். அப்படி இதில் கிழமை ஏதும் குறிக்க இல்லை.

    கான நாட்டின் தெற்காட்டூர் ஊரூக்கு அமைந்த ஊர் சபையோர் இவ்வூரின் கண் உள்ள புறச்சேரியில் வாழும் பறையர் குல மக்களுக்கு பிடிபாடு (behavioural guidelines) ஏற்படுத்துகின்றனர். இவ்வூரில் முன் போல வயல்களை செதுக்க இயலாது என்று பறையர் கூறிவிட்டபடியால் ஊரார் ஒன்றுகூடி இனி பறையருக்கு வயல் செதுக்கும் பணியைத்தரக் கூடாது என்று முடிவெடுத்து கட்டளையிட்டபடி சந்திராதித்தர் வரை நடைமுறைப்பட வேண்டும். அதே வேளையில் முன்பிருந்த உரிமை போலவே (சுதந்திரம்) இப்போதும் இவர்கள் ஊருள்ளே குடிஇருப்பதற்கு கல்லிலும் செப்பேட்டிலும் எழுத்திலும் வடிக்கும் உரிமையை தந்தனர். அதை அரசர் வாணாதராயர் உள்ளிட்ட ஆட்சிப் பொறுப்பாளர்கள் ஆதரித்து கெயெழுத்திட்டனர்.

    ஊருக்குள் முன்னைப் போல் உரிமையோடு குடிபுக உரிமை இருப்பதை இக் கல்வெட்டு காட்டுவதால், குறிப்பாக தீண்டாமை நடைமுறைகளான காலில் செருப்பு அணியாமை, ஊர் குளத்தில் தண்ணீர் மொள்ளாமை, ஊருள் சில தெருக்களில் நடந்து போகாமை, வேட்டியை இந்த முறையில் தான் கட்ட வேண்டும், எச்சில் துப்பக் கூடாது என்பன போன்ற செயல்கள் இல்லாமையை காட்டுவதால் 15 ஆம் நூற்றாண்டும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சாதி தீண்டாமை ஒடுக்குமுறை இருந்ததே இல்லை என்பதற்கான பொன்னான சான்றாகும் இக்கல்வெட்டு.   

    எண் 956. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. ஆனந்த ஆண்டு ஆவணி மாதம் 5 நாள் தெற்காட்டூராக அ[மை]ந்த ஊரவரோம் [மேற்படி] யூர் பள்ளற்கும் பறைய[ற்கும்] _ _ _ _ _ _ பள்ளற்கு தவிலும் முரோசும் சேமக்கல  
    2. மும் நன்மை தின்மை பெருவினைக்குங் கொட்டி போக கடவராகவும். பறையர் அஞ்சு கா _ _ _ _ _ கடவ _ _ _ _ _ _ சந்திராதித்தவரை செல்ல[வு]ம் வீராண
    3. இந்தப்படி நடக்க கடவராகவு இற்படிக்கு வாணாதராயர் எழுத்து. வேளார் எ.ழுத்து. _ _ _ _ _ _ _ ழுத்து.

    விளக்கம்: 15 ஆம் நூற்றாண்டில் 1434 AD மற்றும் 1494 AD ஆகிய ஆண்டுகளில் ஆனந்த ஆண்டு நிகழ்கின்றது. அதில் கிழமை குறிப்பிடாத ஆவணி மாதம் 5 ஆம் நாள் தெற்காட்டூர் ஊர் சபையோர் அவ்வூரின் கண் வாழும் பள்ளர் பறையர்க்கு இடையே எழுந்த உரிமைப் போரில் மங்கல அமங்கல பெருவினைகளில் பள்ளர் தவிலும், முரசும் கொட்டிக் கொள்ளவும் சேமக்கலசம் கொண்டு செல்லவும் உரிமை வழங்கப்படுகின்றது. பறையருக்கான உரிமை பற்றிய கல்வெட்டு பகுதி சிதைந்துள்ளதால் அறியமுடியாமல் போய்விட்டது. இதை வாணாதராயர் உள்ளிட்ட சில அரச அதிகாரிகள் கட்டளையாக கையெழுத்திட்டு ஒப்புகின்றனர்.

    எண் 198. 32 வரி கல்வெட்டு. _ _ _ _ வட்டம், கீரனூர், உத்தமநாதசுவாமி கோவிலின் சுவாமி கோவில் வடபுறச்சுவர் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராச இராச தேவற்க்கு யாண்டு 28 ஆவதின் எதிராமாண்டு இரட்டைபாடி கொண்ட சோழவளநாட்டு உற[த்]தூர் கூற்றத்து

    ஊராய் இசைந்த ஊரோம் என நீண்டு நீர், நிலம், வயல், குளம் குறித்துக் குறப்பிடும் இக்கல்வெட்டில் பல அரையர்கள் இணைந்து இறைவருக்கு திருநாமத்துக்காணி, நாச்சியாருக்கு அமுதுபடி ஆகியவற்றுக்கு கல்வெட்டுப் பிரமாணம் கொடுத்தனர். பூசையும் திருப்பணியும் செய்ய கல்வெட்டிக் குடுத்தோம் என்று சில அரையர்கள் கூறுமிடத்து 26 ஆம் வரி தொடர்ச்சி

    1. வான் எழுத்து அஞ்ஞூற்று பரையன் எழுத்து தொண்டமனாடாழ்வன் எழுத்து. இராசாக்கியரையன் எழுத்து.எதிரிலிச் சோழன் நாடாழ்வான் எழுத்து. கொல்லத்தரையன் எழுத்து.
    2. மாணிக்கராயன் எழுத்து. கிடாரங் கொண்ட பரையன் எழுத்து. காங்கை நாடாழ்வான் எழுத்து. செம்பிய நாடாழ்வான் எழுத்து. உப்பிலிக் குடியில் ஈழங் கொண்டு நாடாழ்

    என்று 32 வரியில் அரையரும் பிறரும் கையொப்பமிட இக் கல்வெட்டு முற்றுகிறது.

    விளக்கம்: மூன்றாம் இராசராசனின் 28 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1245 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு இது. இறைவர்க்கு திருநாமத்துக் காணியும் இறைவிக்கு அமுதுபடியும் குறித்து விவரம் தந்த பின் இதற்கு கையொப்பமிட்ட அதிகாரப் பொறுப்பில் இருந்த பறையர் அரசர், நாட்டுக் கிழான் பதவிகளில் இருந்தது பற்றி குறிக்கின்றது இக் கல்வெட்டு. அடுத்து வரும் கல்வெட்டுகள் அதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.

    எண் 421. 15 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் வடபுரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீமத்கி[தி](தி)க்குமேல் கோச்சடை(ச்சடை)பன்மரான  த்ரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு நாலாவது கும்ப நாயற்று பூர்வபக்ஷத்துத் துதிகையும் வியாழக்கிழமையும் பெற்ற மிருஹஸீர்ஷத்து நாள் காநாடான விருதராஜ பயங்கர வளநாட்டுக் கானாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை ஊராக இசைந்த ஊரோம்

    அடுத்து நிலம், வயல், குளம், திசை போன்ற செய்தி உடைய வரிகள். 14 ஆம் வரி தொடர்ச்சி

    1. _ _ _ டயான் மக்கணாயன் தற்குறியும், கண்டன் பொருளன் தற்குறியும், அரசர் மக்களின் பரிமன விளா _ _ _ இராசாங்க நாடாழ்வார் தற்குறியும் இப்படிக்கு பிள்ளான் இராசநான இராசிங்க தேவன் எழுத்து. இப்படி[க்]கு பிறந்தான் சேவகநான கானாட்டுக் பரையன் எழுத்து. இப்படி[க்]கு வளத்தானான அரசர் மீகாமப் பரையன் எழுத்து. இப்படிக்கு நம்பி அஞ்நூற்றுவப் பேரரயன் தற்குறியும் அவையன் உலகுடையா
    2. ற்குறியும் வெள்ளூர் பெரயன் பொப்பாண்டான் தற்குறியும் அழகன் _ _ [ம்]பாண்டன் தற்குறியும் இந்த அனையர் தற்குறியும் இட்டு _ _ _ _ பிரமாணம் எழுதினேன் இவ்வூர் கணக்கு _ _ _ _ _ பெருமாள் எழுத்து. இப்படிக்கு இக்கோயில் சிவப்பிராமணரில் துக்கைபட்டர் சொக்கபட்டன் தற்குறியும் இட்டு சிவபாதகயார் வில்லியார் எழுத்து  _ _ _ _ _ மறமாணிக்கலயினார் எழுத்து. 

    விளக்கம்: சுந்தரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு (1280 AD மே 2). கானாட்டு விரையாச்சிலை ஊராக அமைந்த ஊரின் ஊர்ச்சபையோர் கோவிலுக்கு நிலம் வழங்குதல் பற்றி கூறும் செய்திகளில் ஈறாக நாட்டுக் கிழான், அரையன் பதிவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பம் இடுகின்றனர். இதன் மூலம் பறையர் உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்ததை அறிய முடிகின்றது. இதாவது, பிற்பட்ட காலத்தில் ஒடுக்கப்பட்டோர் முற்பட்ட ஒரு காலத்தில் ஒடுக்குதலுக்கு ஆட்படாமல் வாழ்ந்தது உண்மை என்பதற்கு இக் கல்வெட்டு ஒரு சான்று. அப்படியானால் மதமும், பிராமணரும், மனுஸ்மிருதியும் இவர்களை ஒடுக்கி இருக்கவில்லை என்று தானே பொருள். உண்மையில், பின்னாளில் இவர்களை ஒடுக்கியது அரசியல் அதிகார அமைப்பு என்று தானே கொள்ள முடிகின்றது.

    எண் 393. 18 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு. எண் 393.

    1. ஸ்ரீ மேற்க்கித்தி[க்]குமேல் கோமாறுபன்மரான  திரிபுவனச் சக்கரவத்திகள் எம்மண்ட[லமுங் கொண்ட]ருளிய ஸ்ரீ குலசேகர தேவற்கு யாண்டு 15 வதின் எதிராமாண்டு கற்கடகநாயற்று பூர்வபக்ஷத்து வா_ஸியும் புதன்கிழமையும்
    2. பெற்ற மூலத்துநாள் கேரளசிங்கவளநாட்டு மட்டியூரான நிருபசேகர_ _ _ மங்கலத்து வரகுணீஸ்வரமுடைய நாயனார் திருமடைவிளாகத்துப் பெரிய திருக்கூட்டதுத்  தவணை முதலியார் மாணிக்க வாசகர் ஆளை

    இதன் பின் நிலம், வரி செய்திகள் இடம் பெறுகின்றன. இனி 15 ஆம் வரி தொடர்ச்சி

    1. படி சந்திராதித்தவற் செல்வதாக இன்னாயனார் திருக்கோயில் திருக் க[ற்]றளியிலே கல்வெட்டிக் குடுத்தோம் கோயில் வாசகப்பிச்ச முதலியாற்கு அரசு மக்களும் மறமுதலிகளும் இ[வ்வ]னைவோமும் இப்படிக்கு நாட்டான் கொண்டன் எழுத்
    2. து மங்கலநாடாழ்வான் எழுத்து. உய்யவந்த தேவன் எழுத்து. அஞ்நூற்றுவ தேவன் எழுத்து. கொண்டன் நாட்டான் எழுத்து வீரசிங்கப் பெரையன் எழுத்து. அஞ்நூற்று பரையன் எழுத்து. இராசசிங்க நாடாழ்வானும் பெருந்துறை
    3. ப் பெரையனும், பொற்கள் நெருங்கிப் பெரையனும், அரசமீகாமப் பெரையனும், நிலமை அழகியநாடாழ்வானும், கொண்டானும் இவர்கள் கைந்தர[யு]ம் இட்டு இவர்க[ள்] சொல்ல இப்ரமாணம் எழுதினேன் இவ்வூற் கணக்கு வயஸகமுடை
    4. யான், உய்யவந்தான் உலகுடையான் எழுத்து. இது பன்மாஹேஸ்வர் ரக்ஷை.

    விளக்கம்: குலசேகர பாண்டியனின் 15 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1283 AD சூலை 7) இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.  வரகுண ஈசுவரருக்கு நிலக்கொடை வழங்குவது பற்றிய விவரத்தை கூறி, அதற்கு அடுத்து உயர் அதிகாரப் பதவிகளான அரையன், நாட்டுக் கிழான், படைத் தலைவர் பதவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பமிடுகின்றனர். கல்வெட்டு எண் 421 இல் இடம் பெறும் சில பெயர்கள் இதிலும் இடம் பெறுகின்றன. எனவே தீண்டாமை இவர்களை தமிழ்வேந்தர் ஆட்சியில் அண்டவேயில்லை, மாறாக இவர்களால் அயல்மொழியர்க்கு பயன் எதும் இல்லை என்று ஆகிவிட்ட 16/17 ஆம் நாற்றாண்டில் தான் அயல் மொழியர் ஆட்சியில் தான் இந்த ஒடுக்குமுறை ஏற்பட்டிருக்கலாம். ஆட்சி அதிகார மாற்றம் இவர்களுக்கு இந்த தாழ்ந்த நிலைமையை ஏற்படுத்தி இருக்க பின் ஏன் தேவையின்றி மனுஸ்மிருதி, பிராமணர், சைவ வைணவ மதங்களை இந்த இழுக்கிற்காக சாட வேண்டும்? இது அடுத்த தலைமுறையை, வருங்கால சமூகத்தை தவறாக வழிநடத்துவது அன்றோ?

    எண் 960. 44 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் இரண்டாம் கோபுர வாசலில் வலப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    நள வருஷம் ஆவணி மாதம் 12 தி கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழவள / நாட்டு குன்றுசூழ் நாட்டுப் பரம்பை [ஊர்] செருந்தா நம்புசெய்வாரும் பாண்டியனார் மகன் வன்னி / யர் உள்ளிட்டாரும் திருச்சிராப்ப[ள்]ளி  உடையார் அங்கிஷத்துக்கு கடவ உதை[யப் பெருமாளும்] / இன்மூவர் உள்ளிட்டாரோம் இன்னாட்டுப்ப[கை]த் தலைப்பாடி காவலான கீழைக்குறச்சி ஊராளிகளில் / வழித்துணையான மாவலிவாணாதராயன் உள்ளிட்டாரும் சோழகோன் பரையர் மகன் சூறாண்டாற்கும் பகை தீ / ந்து காவமுறி குடு[த்]த பரிசாவது மு[ன்]னாளிலே செய்யான் மாவலிவாணாதராயன் பள்ளர் பசகள் ஓடிப்போ நெருஞ்சிக் / குடியீலே இருக்கையில் இவர்க[ளூர்] மாடும் அ[ழி]த்து இந்த பள்ளரையும் பிடித்துக் கொண்டு வருகச்சிதே இந்த / நெருஞ்சிக்குடி ஊரார் பரம்பை ஊருலே கூப்பிட்டு வரு[கை]யில் கூப்பி[ட்]டு படைக்கச் சென்று சிற்றண்ணல்வாசலில் / செங்குளத்திலே சென்று முட்டி செய்யான் மாவலிவாணாத[ராயன்] உடனே படையாய் நம்புசெய்வார் மகனார் பண்டியனா / ர் படுகைஇல் இப்பழி கேட்பதாக சிற்றம்பலவரான நம்புசெய்[வா]ர் [இரண்]டு கரைநா[ட்டை] யுங்குவித்து ஒருமை மு[றி]யும் இட் / டு இவனை எழச் செய்வதாக இவன் வாசலிலே படையாய் பொரு[கச்சே] சிற்றம்பலவரான நம்புசெய்வாரும் இவர் மகனா _ _ _ _ ருச்சி / ராப்பள்ளி உடையாரும் பட்டு இ

    Share
  • கூவம் தந்த செழுச்சி அல்லிக்கேணி

    சேசாத்திரி சிறீதரன்

     

    மயிலைமா வல்லிக் கேணியான்

    திவ்.இயற்.நான்மு.35

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு

    குயிலொடு மயில்கள் நின்று ஆல

    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1073)

    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1075)

    – திருமங்கை ஆழ்வார்

    http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3792

    குரவம் – common bottle flower

    குரவ மலர் மணம் வீசும் குளிர்ந்த பொழில்களும் கதிரவனின் ஒளிக்கதிர் படா இருண்ட சோலைகளில் குயிலும் மயிலும் திரிகின்ற மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி என அதன் இயல்பைப் புகழ்கிறார் திருமங்கை ஆழ்வார். மயிலையும் அல்லிக்கேணியும் அக்கால் ஒன்றுபட்ட பகுதியாகவே இருந்துள்ளன. மயிலை இன்னும் சிறப்புற்று இருந்ததாலேயே மயிலையின் திருவல்லிக்கேணி எனப்பட்டது போலும். இவ்விரு நிலத்தொகுதியும் செழுச்சியுற்றது (fertile) என்னவோ கூவம் ஆற்று ஓட்டத்தின் நீர்ப்பாய்ச்சனத்தினால் தான் என்பது யாவரும் உணரவேண்டிய உண்மை.

    திருவல்லிக்கேணி, வேங்கட கிருஷ்ணன் எனப் பெயரிய பார்த்தசாரதி பெருமாளின் கோவில் கொண்ட ஊர். இது ஆழ்வார்கள் பாடல் பெற்ற,108 வைணவ தலங்களுள் ஒன்று. இங்கத்து கோவிலின் கருவறை முற்றத்தில் உள்ள தந்திவர்மப் பல்லவனின் 12 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.808) கல்வெட்டு இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கு சான்று. மேலும் கருவறை முதல் முற்றம் வரை உள்ள பாறை கருங்கல் வகை சார்ந்தது . கருவறையின் புறச்சுவர் மஞ்சள் நிறப் பாறை வகையினது என்பது இக்கோவில் பின்னீடு சோழர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. இக்கோவில் அக்காலத்தே அந்த அளவிற்கே சிறிதாக இருந்துள்ளது.


    ​​

    1. வடக்கு கருவறைச் சுவர். ​(சோழர் காலம் வரை கோவில் இந்த அளவே இருந்துள்ளது)

    2. மேற்கு கருவறைச் சுவர்.

    3. தாயார் சன்னதியை ஒட்டிய தெற்கு கருவறைச் சுவர்.

    ​ஆனால் இக்கோவில் இன்று மிகக் கம்பீரமாக காட்சிப்படுவதற்கு காரணம் விசய நகர ஆட்சியின் போது அரங்கநாதர், இராமர், வரதர், நரசிம்மர், ஆண்டாள், ஆழ்வார்கள் என தனி சன்னதி அமைக்கப்பட்டு விரிவுற்றது. கோவிலின் பழைய அமைப்பு அக்கால் மறுசீரமைக்கப்பட்டது. அதற்கு சோழர் கால கல்வெட்டுகள் பல அடிக்கல்லாக தரையில் வைத்து பூசியிருப்பதே சான்று,

    பின்னர் இக்கோவிலில் மேற்கு புறத்தில் கசேந்திர வரதர் சன்னதி முதல் ஆண்டாள் சன்னதி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பண உதவி செய்த தெலுங்கு ஆண், பெண் கொடையாளிகளின் சிலைகள் செதுக்கப்பட்டு ஒவ்வொரு தூணிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தூண்களைப் பார்த்தாலே அவற்றின் செலவுக்கு கணக்கு என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும். அதே போல ஆண்டாள் சன்னதி முதல் சுவர் கண்ணாடி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு உதவிய தெலுங்குப் பெண்ணின் சிலை ஒரு தூணிலே வடிக்கப்பட்டு அதன் மேல் தெலுங்கு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தெலுங்கரின் முயற்சியால் இக்கோவில் கம்பீரத்தோடு பிரம்மாண்ட தோற்றத்தையும் எய்தியது எனலாம். பெருமாளின் தென்புறச்சுவரில் நெடிய தெலுங்கு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இந்நெடியக் கல்வெட்டு 1585 இல் பெனுகொண்டாவை தலைமை இடமாகக் கொண்டு ஸ்ரீ ரங்கராயர் ஆண்டுவந்த போது இராமராஜ வேங்கடபதிராஜுவின் தளவாய் திருமலைராயர் மாட நெல்லூர் செஞ்சம் கிராமம் தலையாறி கண்காணிப்பிலுள்ள , நீடு கிராமம் நிடாரம்பரம் கிராமம் ஆகிய இரு கிராமங்களை திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு தானமாகக் கொடுத்து அதைக்கொண்டு பெருமாளுக்கு என்னென்ன கைங்கரியம் செய்யவேண்டும் என்று ஒரு நெடிய பட்டியலே கொடுத்து அதில் ஒரு குறையும் இல்லாமல் நடந்தேற வேண்டும். அதற்கு இடர் செய்வார் கங்கை கரையில் பசுவையும் பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று பொறித்துள்ளார்.

    கோவிலுக்குள் சிறிதளவேனும் வெளிச்சமும் காற்றும் வரட்டும் என்று கருதித்தானோ என்னவோ தென்புறத்தில் மடைப்பள்ளிக்கும் தாயார் சன்னதி மண்டபத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பெரிதாக மண்டபம் ஏதும் கட்டாமல் விட்டுவிட்டதை உணர முடிகிறது.


    4. மேற்கு திசை சிலை மண்டபம்.

    5. ஆண்டாள் சன்னதிக்கு நேரே அமைந்த மண்டபம்.

    6. ஆண்டாள் சன்னதி மண்டபம் எழும்ப உதவிய பெண். தலைமேல் அவர் பற்றி தெலுங்கு கல்வெட்டு.
    ​​

    இப்படியாக விசயநகர – நாயக்கர் ஆட்சியின் போது இக்கோவில் 16 /17 ஆம் நூற்றாண்டுகளில் விரிந்து பெருமையுற்ற நிலையில் சத்திரபதி சிவாஜி தனது படை ஒளரங்கசிப்பின் தென்னக படையெடுப்பால் அழிந்து விடாமல் காக்கும் உத்தியாக தமிழகம் வந்தார். அப்போது வேலூர், செஞ்சி நாயக்கர் ஆட்சி ஒழிக்கப்பட்டு மராத்தியர் ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வாட்சி சிறு காலப் பொழுதே நிலைத்தாலும் பல சிவன் கோவில்களில் மராத்தியர் வெற்றி நினைவாக மண்டபங்கள் கட்டுவிக்கப்பட்டு அறப்பணிகள் நிறைவேறினர். மராத்தியரில் சிலர் மாத்துவ வைணவத்தை பின்பற்றுவோரும் உண்டல்லவா? ஆதலால் மராத்தியர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் தமது முத்திரையை பதித்தனர். கோவிலினுள் கட்டுவதற்கு இடமே இல்லாமல் தெலுங்கர் தமது அறப்பணியை ​முடிந்துவிட்டதால் மனம் கலங்காத மராத்தியர் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து திருக்குளம் நோக்கி புடைப்பு சிற்பங்கள் கொண்ட நெடிய வரவேற்பு மண்டபத்தை கட்டுவித்தனர். அதில் ஒரு தூணில் ஒரு மராத்திய அதிகாரி தனது மனைவியுடன் ஒருங்கே நின்று பெருமாளை நோக்கி கைக் கூப்பி நிற்கிறார். அவர் தலையை மராத்திய தலைச் சிதவல் அணி செய்கிறது. அவரது சிலைக்கு கீழே மண்ணீ வர் என்று அவரது பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.


    ​​

    7. வெளியில் அமைந்த மராத்தியர் கட்டிய வரவேற்பு மண்டபம்.

    8. மண்ணீவர் என பெயர் பொறித்த மராத்திய அதிகாரி மனைவியுடன் தொழுகிறார்.

    9. திருக்குளமும் அதில் மண்டபமும்.

    கல்வெட்டும் / விளக்கமும்:

    – – – நம்பியும் அருளாளனும் உள்ளிட்டோம் – – – / – – – டும் ஆக உரு இருபத்தாறுக்கும் எரிக்க கடவ திருநு – – / – – – கக் கடவோம் இவ்வுரு இருபத்தாறுங் கைக்கொண் – – – / – – -ரான நான தண்டிப்பிடிக்கோன் மக்களில் திருவா – – – / – – – ர்க்கு இரண்டும் எரிய இட்ட குத்துவிளக்கு இரண் – – –

    விளக்கம்: கோயிலில் காட்சி படுத்தியுள்ள, இரு ஓரங்களிலும் எழுத்தை இழந்த 12 – 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இது. நுந்தா விளக்கு எரிக்கிறோம் என ஆடு (உரு) 26 ஐ பெற்றுக்கொண்ட பிராமணர், நான்காம் அதிகார நிலை நாடு கிழார் தண்டிப்பிடிக்கோன் பிள்ளைகளில் திருவா- – என்பவரிடம் இருந்து விளக்கு எரிக்க இரண்டு குத்துவிளக்கும் பெறப்பட்டன என்பது செய்தி .



    ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக் – – – / ஸிங்க நாயற்று பூர்வ ப[ க்ஷ ] – – – / ண்ட சோழ மண்டலத்து புலியு – – -/ ஆளுடையர் திருவாந் யூருடை – – – / ளைகளில் கழுமலவூரர் பக் – – – / கொண்ட நற்புதுக் கா[சு] – – – -/கச் செலுத்தக் கடவோமாக – – –

    விளக்கம்: வலது ஓரம் எழுத்துகளை இழந்து தரையில் கிடந்து மிதிபட்டு தவிக்கும் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. கழுமலவூரரிடம் (சீர்காழி) இருந்து திருவான்மியூர் உலகாளுடைய பெருமானுக்கு அன்றாட பூசனைக்கு வேண்டியன செய்ய புதுக்காசுகளை பெற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.



    ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரண[ம்] ஸ்வஸ்தி ஸ்ரீ மன்மகாமண்டலேஸ்வர ஸ்ரீ வீர பிறுதாப சதாசிவ தேவமகாராயற்கு செல்லா நின்ற ஸம்வற்ஸரம் 1486 (1564) க்கு செ

    ல்லா நின்ற ரத்தாக்ஷி வருஷ மகரநாயற்றில் பூற்வபக்ஷத்தில் உத்திராடமும் ஆதித்யவாரமும் பெற்ற நாள் தெள்ளிய சிங்கப்பெருமாளிட தாஸன் நரசிங்கதாஸன் தேசாந்திரி பண்ணி — க்க — –

    யிங்கரியம் பள்ளிகொண்ட பெருமாள் மகாலக்ஷ்மியார் பூ[மி] தேவியார் நாரசிங்கப்பெருமாள் வராகனாராயணப் பெருமாள் சேஷன் திருப்பதிஷ்ட்டையும் கிஷ்ணன் யுஹ்மணிதேவி பல – – – [டா]ள் – – –

    மதன் அனுருத்திரன் ஸாத்திகை ஆழ்வார் திருப்பதிஷ்டையும் வேதவல்லினாச்சியாற்கு உற்சவ விக்கிறகமும் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும் கிஷ்ணன் கோ{யி}[லும்] முன் – – –

    மண்டபமும் வேதவல்லி நாச்சியார் கோயிலும் முன் திருவாய்மொழி மண்டபமும் திருமடப்பள்ளியும் அடைய வளைஞ்சாந் திருமதிளும் திருவாபரணங்களும் யிந்த ஸறுவ

    கயிங்கரியமும் தேஸாந்திரி நரசிங்கயங்கார் கையிலே தெள்ளிய ஸிங்கப் பெருமாள் கொண்டருளினார். கிறாமம் புதுப்பாக்கம் வேப்பேரி வேஷாறுபாடி யிந்த [கிறாம]

    ங்களும் கொண்டருளினார் யிந்த ஸகளவித கயிங்க [ரியங்களும் சந்திராதித்தவரைய் தெள்ளியஸிங்கப் பெருமாள் கொண்டருளவும்.

    விளக்கம்: 1564 ல் விசயநகர வேந்தர் சதாசிவ ராயர் ஆட்சியின் போது தெள்ளிய சிங்கப்பெருமாளின் தாசன் என்று கூறிக்கொண்டு நரசிங்கையிங்கார் என்பவர் அரங்கநாதர், இலக்குமி, பூதேவி, நரசிம்மர், வராகர், சேஷ நாகம், கிருஷ்ணன், ஆழ்வார் போன்றோருக்கு சன்னதிகள் ஏற்படுத்தி பதிவித்தார் (பிரதிஷ்டை செய்தார்). நகையணியும், வேதவல்லித் தாயாருக்கு செப்புத் திருமேனியும் செய்வித்துக் கொடுத்தார். அரங்கநாதர், கிருஷ்ணன் சன்னதிக்கு முன் மண்டபம் கட்டுவித்தார். வேதவல்லி தாயாருக்கு தனி சன்னதியும், மடைப்பள்ளியும், முன் திருவாய்மொழி மண்டபமும், வளைந்த மதிலும் கட்டி கொடுக்க இவை அனைத்தையும் தெள்ளிய சிங்க பெருமாள் ஏற்றுக்கொண்டார்.

    அதோடு வேப்பேரி, வியாசர்பாடி அவற்றுக்கு இடைப்பட்ட புதுப்பாக்கம் (இக்கால் பட்டாளம் ஆக இருக்க வேண்டும்) ஆகிய கிராமங்களை தெள்ளிய சிங்க பெருமாள் நரசிங்கய்யங்காரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறார்.

    வேப்பேரி தினத்தந்திக்கும் வியாசர்பாடி அம்பேதுக்கர் கல்லூரிக்கும் 5- 6 கிலோ மீட்டர் நீளத் தொலைவு இடைவெளி, தினத் தந்தி முதல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலகம் வரை 2.5 – 3 கிலோ மீட்டர் தொலைவு அகலம் உள்ளது. இத்தனைப் பெருங்கொடையை அளிக்க வேண்டுமெனில் நரசிங்கயங்கார் பெரிய ஆட்சி அதிகாரப் பொறுப்பில் இருந்தவராய் இருக்க வேண்டும்.என்று எண்ணத் தோன்றுகிறது. இதே போன்ற தெளிவான செய்தி உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆழ்வார்கள், ஆண்டாள் போன்றோருக்கு எப்போது தனி சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் வணங்கி வரலாயினர் என்பதை உறுதிப்படுத்தலாம். அதோடு கோவில்களில் வாகனங்களில் தெய்வத்தை ஏற்றி ஊர் உலா வரும் திருவிழா எப்போது தொடங்கியது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதே போல் சிவன் கோவில்களில் 63 நாயன்மார்கள் எப்போது சிலையாக பதிவிக்கப்பட்டனர் என்பதையும் உறுதிப்படுத்தலாம். இவை தாம் உண்மையான தொல்லியல் நோக்கிலான கோவில் கட்டட ஆராய்ச்சி.

    ஆற்று மேடுகளில் கோவில் இயக்கம் உருப்பெறவும் கால்கொள்ளவும் பெரிதும் துணைநின்றவர் ஆட்சியில் முதல் அதிகார நிலையில் இருந்த பல்லவ வேந்தர்கள் ஆவர். மேலைச் சாளுக்கியர், இராட்டிரகூடர் எழுச்சியால் பின்னாளில் இவர்கள் இரண்டாம் அதிகார மன்னர் நிலைக்கும், மூன்றாம் அதிகார அதியரைசர் நிலைக்கும் தாழ்ந்து போனார்கள். இவர்கள் இக்கால் எந்த சாதியில் கலந்து கரைந்து போயிருப்பார்கள் என்ற ஆவல் அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே. இதற்கு சான்றாக ஒரு 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது.

    சென்னைபுரி / ஸ்ரீ அருணாச்சலேசுவர / ர் கோயில் – வீடு – / மயிலை நல்லப்பா / முதலியார் புத்திரராகிய / ஜஷ்டீ சு முத்துசாமி / முதலியார் தற்மம் தொ / ண்ட மண்டலத்தா/ ரில் – வைசிய குலம் / துளுவவேளாளம் / பு. பல்லவராய கோ / த்திரம் – போதாய[ன] / சூத்திரம் -சாலிவா / கன – வருஷம் / 1764

    விளக்கம் : தொண்டை மண்டலம் மூன்றாம் வருணம் துளுவ வேளாள சாதியில் பல்லவ கோத்திரத்தில் பிறந்த மயிலைவாழ் நல்லப்ப முதலியார் மகன் ஜஸ்டிசு முத்துசாமி முதலியார் சென்னை அருணாசலேசுவரர் கோயிலுக்கு வீடு ஒன்றை தானமாகக் கொடுத்தார்.

    மேற்சொன்ன நான்கு கல்வெட்டுகளும் “சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்” நூலில் உள்ளன. மேற்கோள் உதவி கோவை திரு. சுந்தரம்.

    தொண்டை மண்டல கல்வெட்டில் குறிக்கப் பெறும் மூன்றாம் அதிகார நிலை அதியரைசர்கள் அரையன், ராயன் என்றும், நான்காம் அதிகார நிலை கிழார்கோன்கள் நாடுகிழான் என்றும் குறிக்கப்படுகின்றனர் . அரையன், கிழான் யாவரும் பெரு நிலக்கிழார்களே. ஆகவே தொண்டை மண்டலத்தில் 16 /17 ஆம் நூற்றாண்டில் சாதி உருவான காலத்தில் இவர்கள் துளுவ வேளாளர்களாக தம்மை அறிவித்துக் கொண்டுள்ளனர். மேலும் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியிலும், 19 ஆம் நூற்றாண்டு வெள்ளையர் ஆட்சியிலும் இந்த துளுவ வேளாளர்கள் பல கோவில்களை கட்டுவித்ததும், மறுசீரமைத்ததும், பல கொடைகளை நல்கியதும் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன என்பது இவர்கள் முன்னோரான அரையன், கிழவன் போன்றோர் செய்தது போலவே அறப்பணியை தொடர் ந்து இவர்கள் வெள்ளையர் ஆட்சி வரை செய்து வந்துள்ளனர் எனக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் பார்த்தால் கல்வெட்டுகளில் சிவாச்சாரி பிராமணர்களுக்கு இணையாக அல்லது அடுத்ததாக கல்வெட்டுகளில் அதிகம் இடம்பெறும் மக்கள் வேளாள மக்களாகவே உள்ளனர். தமிழ் மொழிக் காப்பு, பண்பாடு நாகரிகக் காப்பு, சமய அறங்காப்பு ஆகியவற்றில் தமக்கு நிகரில்லாத முதலிடம் பெற்ற இந்த வேளாள மக்கள் இக்கல்வெட்டுகள் உள்ள காலம் வரை அவரின் பங்களிப்பு நினைத்து போற்றலுக்கு உரியதாகிறது.

    கோவில் ஆடு மாடுகளை வளர்த்து அன்றாடம் விளக்கு எரிக்க நெய் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மன்றாடி, கோணார் போன்ற இடையர் கல்வெட்டில் மூன்றாம் இடம் பிடிக்கின்ற சாதியார் ஆவார். .

    கலிங்கத்தை வெற்றிகொண்ட பல்லவன் கருணாகரத் தொண்டைமானை அவன் மனைவி தான் வழங்கிய திருநந்தா விளக்கு கல்வெட்டில் அவனை வேளாண் என்று குறிப்பிடுகிறாள், “ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்துமூந்று ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து திருவத்தி / யூராழ்[வா]ர்க்கு சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி உடையான் வேளாண் கருணாகரநாந தொண்டைமானார் / தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.

    நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், 2011, தொகுதி 2, எண் :5, பக் – 10, காஞ்சி வரதர் (அருளாள பெருமாள்) கோயில்

    Share
  • கொசத்தலை ஞாயிறு

    நீரின்றி எவ்வாறு உலக வாழ்க்கை அமையாதோ அவ்வமே ஞாயிறுக் கீற்று மண்ணில் விழாமல் உயிர்ப்பு நிகழாது. புல், பூண்டு, பயிர், பச்சை, பாசி என யாவும் கதிரொளியால் உயிர்க்கின்றன. இந்த கதிரொளியான எல்லிக்கீற்று மண்ணில் விழாவிட்டால்.பயிர், பச்சை, பாசிகளை நம்பி வாழும் உயிர்கள் எத்தனை பெருமை மிக்கதானாலும் மாண்டு போகும். நீரும் ஒளியும் உயிர் நிலைப்பிற்கும் பெருக்கத்திற்கும் இன்றியமையாதன.

    கோள்கள் கதிரோனைச் சுற்றிவருவதால் இக்கோள்களின் தாக்குறுத்தம் தம் எதிர்கால வாழ்வை பாதிப்படைய செய்யும் என்பதால் அதைத் தவிர்க்க. இந்த உருள் கோள்களை மனித வடிவில் வடித்து அவற்றுக்கு கழுவாய்ப் பூசனை ஆற்றுகின்றனர் மக்கள். பூசனையால் அந்த தாக்குறுத்தத்தில் இருந்து தப்பலாம் என நம்புகின்றனர், நம்புவிக்கப்படுகின்றனர்

    தஞ்சை திருவாரூர் மாவட்ட கோவில்கள் பலவற்றில் கோள்களுக்கான கழுவாய் (பரிகார) பூசனைகள் ஆற்றப்படுகின்றன. இந்த நம்பிக்கையால் நாடு முழுவதும் இருந்து அக்கோவில்கள் திரளான மக்களை நாள்தோறும் ஈர்க்கின்றன. அதனால் அக்கோவில்கள் வளமாக, செழிப்பாக உள்ளன.

    கொசத்தலை ஆறு சென்னைக்கு அருகே சோழவரத்தைக் கடந்த பின் கொசத்தலை ஆற்றில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இஞ் ஞாயிறு என்னும் கிராமத் திருத்தலம் அமைந்து உள்ளது. கொசத்தலை ஆற்றில் இறுதியாக அமைந்த பழமையான கோவில் இந்த ஞாயிறு கோவிலே. இக்கால் வேயப்பட்டுள்ள வெளி வட்டச் சுற்று சாலை (outer ring road) இக்கோவிலை எளிதில் விரைந்து அடைய உதவுகிறது. செங்குன்றம் – மீஞ்சூர் வரை நீளும் இச்சாலையில் அருமந்தை கூட்டு சாலை அமைந்த இடத்தில வடக்காக 3 கிலோமீட்டர் சென்றால் இக்கோவிலை அடையலாம். செங்குன்றம் வழி செல்லாமல் மாதவரம் > வடபெரும்பாக்கம் > விளாங்காடுபாக்கம் > பெருங்காவூர் > அருமந்தை கூட்டுச் சாலை வழியாக செல்வது தொலைவைக் குறைக்கும்.​

    வழிநெடுகலும் பச்சைப் பசுமை போர்த்திய வயல்களைக் கடந்தால் ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேசுவரர் கோவிலை அடையலாம். அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் காணப்படும் கோவில் இது. ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கழுவாய் தேடி வழிபடுகிறார்கள். இத்தனைக்கும் இங்கு கதிரோனுக்கு என்று தனி சன்னதி கூட இல்லை. ஈசுவரருக்கு தென்கிழக்கு மூலையில் கதிரவன் புஷ்பரதேசுவரரை நோக்கி நின்ற நிலையில் இரண்டடி சிலையாகக் காட்சிப்படுகிறார்.


    அம்மன் சன்னதி முதல் இன்றுள்ள தெற்கு வாயில் வரையான தலைவாயில் நோக்கிய தூண் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. மண்டபம் கட்டியவர் நுழைவு வாயிலில் தனது உருவத்தை சிலையாக வடித்து தன்பெயரை தெலுங்கில் பொறித்துள்ளார். ஆக நாயக்கர் ஆட்சிக்கு முன் மண்டபம் கட்டியிருக்கவில்லை என்பது புலனாகிறது. சன்னதியை விட்டு வெளியே வரும் போது இருதூண் மண்டபம் உள்ளது. அவற்றில் எதிர் எதிராக மராத்திய அதிகாரிகளின் (அண்ணன் தம்பிகள் போலும்) புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பாகை அவர்கள் மராத்தியர் என்று அடையாளப்படுத்துகிறது. அவர்களுக்காகவே கட்டப்பட்ட இருதூண் மண்டபம் என்று தெரிகிறது. ஏற்கெனவே திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர் கோவில்களில் மராத்திய அதிகாரிகளின் சிற்பம் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளதை நான் குறிப்பிட்டுள்ளேன். இது குறுகிய கால மராத்திய ஆட்சியில் வடதமிழ்நாட்டில் சைவம் புத்தெழுச்சி பெற்றதைக் காட்டுகிறது. கோவிலில் சுந்தரரை மணந்த சங்கிலி நாச்சியாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது, அவர் இவ்வூரினர் என்பதால்.

    ​​ ​

    கோவில் கருவறையின் மேற்கு, தெற்கு புறச்சுவரில் சில தெளிவில்லாத கல்வெட்டுகள் தேய்ந்த நிலையில் காணக்கிடக்கின்றன. ஆனால் சன்னதியை விட்டு வெளியே வரும் போது கிழக்கு வலப்புறத்தில் மண்டபத்தை ஒட்டிய கருங்கல் சுவற்றில் நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. இது கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளது என்றாலும் கல்வெட்டு ஆழமாக வெட்டப்படாததால் அல்லது தேய்த்து மெறுகேற்றியதால் எழுத்துகளை படத்தில் படிக்க முடியவில்லை. எனவே மைசூர் நடுவண் தொல்லியல் துறையிடம் இருந்து மைப்படி வாங்கப்பட்டு அதன் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. தென்புற கல்வெட்டு மிக தேய்ந்துள்ளதால் அப்போதே ASI மைப்படி எடுக்கவில்லை. கருவறையின் மேற்கு குமுதம் கிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டுகளை மட்டும் படியெடுத்துள்ளனர். ஜடவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து முடிவுறாத கல்வெட்டுப் பலகை ஒன்று இருந்துள்ளது. இப்போது இல்லை என்றாலும் இக்கோவில் அவன் காலத்தது என்பது தெளிவு.

    படம்

    1. தலைவாயில்.

    2. அருள்பாலிக்கும் கதிரவத் தேவன்.

    3. 15 ஆம் நூற்றாண்டில் தலைவாயிலை நோக்கி தூண் மண்டபம் கட்டியவர்.

    4. மராட்டிய அதிகாரி சிலை.

    5. மராட்டிய அதிகாரியின் உடன்பிறந்தவர்.

    6. சங்கிலி நாச்சியார் சன்னதி.​

    7. திருவோடு மரம்.

    8. கண்கவரும் தாமரைக் குளம்.

    சங்கிலியார் சன்னதி

     

    திருவோடு மரம்

    தாமரைக்குளம்


    9. ஒயிலாக அமர்ந்த பெண் இன்னும் சிலையாகாமல் ஓவியமாய் நின்றுவிட்டாள்,என்றாலும் எழில் நங்கை தான். ஏன்இப்படி? சிற்பி கத்துக்குட்டியா? அல்லது மண்டபம் அமைத்த தெலுங்கர் குறைந்த கூலி கொடுத்தாரா? தெரியவில்லை. பல தூண் சிற்பங்கள் ஓவியமாகவே நின்றுவிட்டன இங்கு.

    10. கோவில் விமானம்.

    11.கொடிமர நோக்கு.



    ​ ASI 1916 ஆம் ஆண்டு அறிக்கையில் பொன்னேரி வட்டம் ஞாயிறு கிராமம் புஸ்பரதேசுவரர் கோயில் கல்வெட்டுகள் பற்றி

    12 . கல்வெட்டின் மைப்படியில் இருப்பது கிழக்கு சுவர் கல்வெட்டு.

    13 & 14 கிழக்கு சுவர் கல்வெட்டின் இரு பாதி ஒளிப்படங்கள் அடுத்தடுத்து


    கொசத்தலை ஆறு ஞாயிறை அடுத்து மீஞ்சூர், விச்சூர், மணலி புதுநகர் கடந்து எண்ணூர் உப்பங்கழியில் கலக்கிறது.

    ஞாயிறு கல்வெட்டு பாடம் / விளக்கம் > திரு. சுந்தரம் (கோவை)

    முதல் படம்: இரண்டாவது படம்

    1 ………ஸ்ரீமஹாமண்டலேசுர ராஜாதிராஜ ராஜ…………….. வீரப்ரதாப பூர்வதெக்ஷிண………………
    2 ய நம ………..ஆளாநின்ற ஸ்ரீ வீர அச்சுந்தை ய தேவ ய தேவ ………….ராஜ்யம் பண்ணி அருளாநின்ற
    3 மஹாராயர் …………செல்லாநின்ற விசய வருஷம் மாசி மாதம் சிவராத்ரி புண்ணியகால………………….
    4 னமந ய …..குமாரன் நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஸ நம் ……………………..ந்தன்ம..
    5 ப…ம……க்குள கிறாமம் பூதேரி விளாகம் நாயற்று பூ…. ………………..அங்கரங்க வைபோகத்துக்கும் சுவாமி
    6 தேவ ம. ….ற்கு புண்ணியமாக தந்தனவோலு வொந்நப்ப நாய க்கர் குமாரன் நாகம நாயக்கர்…….கிறாமம் பூதேரி விளாகம்
    7 முதல் ……………வயிபவமும் நடத்த கடவதாகவும் யிந்த தறுமத்துக்கு யாதொருத்தர் அஹிதம் பண்ணினார்கள்
    8 கெங்கை கரயிலே கோஹத்தி பிறம்ம ஹத்தி பண்ணின பாவத் திலே போக கடவனாகவும்

    விளக்கம்:

    கிராம தர்ம சாசனம் என்று கல்வெட்டு குறிக்கிறது. ஒரு கிராமத்தின் ஒரு பகுதியான பூதேரி விளாகம் என்னும் பகுதி கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படுகிறது. கொடையாளி நாகம நாயக்கர் என்பது “நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம த்ர்ம்ம சாஸனம்” என்ற கல்வெட்டுத்தொடரால் அறிந்துகொள்ள இயலுகிறது. கல்வெட்டின் தொடக்கத்தில், ஆட்சியிலிருக்கும் விஜய நகர் மன்னர் பற்றிய குறிப்பு தெளிவாயில்லாதது கொண்டு அரசர் பெயரை உறுதிப்படுத்த இயலவில்லை.. “அச்சுந்தை…ய தேவ” என்பது யாரைக் குறிக்கிறதுஎனத் தெரியவில்லை. அரசர் பெயரை முன்னிறுத்தி அவருக்குப் புண்ணியமாகக் கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடையாளி தந்தனவோலு என்னும் ஊரினர் என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஆந்திரத்தில், பட்டிபுரோலு என ஓர் ஊர் உண்டு. அது போன்றஓசையமைப்பில் இந்த தந்தனவோலு ஊர் அமைந்திருக்கலாம். கொடையாளியின் பெயர் நாகம நாயக்கர் என்றாலும், அவருடைய தந்தை பெயர் வொந்நப்ப நாயக்கர் என்பதை பொன்னப்ப நாயக்கர் எனவும் படிக்க வாய்ப்புள்ளது. “வொ” எழுத்து கிரந்தமாயின் பொந்நப்ப நாயக்கர் எனப் படிக்கலாம். கொடை கோயிலில் அங்கரங்க வைபோகத்துக்கும், சுவாமியின் (பூசைக்கும்?) மற்றும் சிலவைபவத்துக்கும் அளிக்கப்படுகிறது. அங்கரங்கவைபோகம் என்பதற்கு விக்கிரக அலங்காரம், பூசை, படைப்பு முதலிய அனைத்துத் தேவைகள் என்று கல்வெட்டுச் சொல்லகராதி கூறுகிறது. 7-ஆம் வரியில் வருகின்ற வயிபவம், வைபவம் ஆகலாம். இச்சொல் கல்வெட்டுச் சொல்லகராதியில் காணப்படவில்லை. மாதம் ஒரு முறை நடத்தப்பெறும் சில குறிப்பிட்ட நிகழ்வாயிருக்கலாம். கல்வெட்டின் இறுதியில், கல்வெட்டு மரபுப்படி (ஓம்படைக்கிளவி), மேற்படி தர்மத்துக்கு கேடு செய்பவர்கள் கங்கைக் கரையில்,
    பசுவையும், பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இன்னொருவர் தந்த பாடம்:

    வரி 1. ஸ்வஸ்தி ஸ்ரீ மஹா மண்தலேசுர ராஜாயிராஜ ராஜ வீரபிரதாப பூர்வதெக்ஷிண உத்

    வரி 2. த்த ஸமுத்ராதிபதி ஆளா நின்ற ஸ்ரீ வீர அச்சுதைய தேவ மகாராயர் பிரிதிவிராஜ்யம் பண்ணி அருளா நின்ற — –

    வரி 3. சூசளசயஅ (1448) த[ன்] மேல் செல்லா நின்ற விசய வருஷ மாசி மாதம் சிவராதிரி புண்ணிய காலத்திலே நா[ய]ற்று பூதே{ரி] அப்ப[னுக்]கு தந்தன்ம – – – – –

    வரி 4. ன்ம நாயக்கர் குமா[ரர்] நாகமநாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஷநம் அச்சுதராய மஹாரா[யர்] நாயக்க- – த்தனமாக பண்ணி – – –

    வரி 5. – – க்கு – – ள கிறாமம் பூதேரி வளாகம் நாயற்று பூதேரி அப்பற்கு அ – – – தைக்கும் அங்கரங்க வைபோகத்துக்கு[ம்]

    வரி 6. தேவ மஹாராயற்கு புண்ணியமாக கந்தனவோலு பொந்நப்ப நாயக்கர் குமாரர் நாகம நாயக்கர் விட்ட கிறாமம் பூதேரி விளாகம். இந்த கிறாமத்தி – – –

    வரி 7. ட முதல் பூசையும் அங்கரங்க வயிபவமும் நடத்த கடவதாகவும் இந்த தருமத்து[க்கு] யாதொருத்தர் அஹிதம் பண்ணிநார்கள்

    வரி 8. [கங்]கை கரையிலே கோ ஹத்தி பிரம்ம ஹத்தி பண்ணின பாவத்திலே போவானாகவும்

    கட்டுரையாளர் பின் குறிப்பு:

    கல்வெட்டில் இடம் பெறும் நாகம நாயக்கர் என்பவர் இன்று கர்னூல் என மருவிவிட்ட அன்றைய கந்தெனவோலுவை வாழிடமாகக் கொண்ட பொன்னப்ப நாயக்கருடைய மகன் ஆவார். இவர் புண்ணியம் கருதி ஞாயிற்று கிராமத்தில் கோவில் கொண்ட பூதேரி அப்பனான புஷ்பரதேசுவரருக்கு (பூந்தேர் = புஷ்பரதம்) தன்னை நாயக்கனாக ஆக்கியதற்கோ அல்லது அச்சுதராயர் அரசராக பொறுப்பேற்றதற்கோ கொடையாக தந்த கல்வெட்டு ஆவணம் யாதெனில் “பூத்தேரி அப்பன் கோவிலில் முதல் பூசைக்கும் விழாக்காலத்தில் தெய்வத்திருமேனிக்கு அலங்காரம் செய்யவும் ஒரு கிராமத்தை தந்தார்” என்பதே. இந்த கிராமக் கொடையை 1533 ல் நடக்கின்ற விஜய வருடம் மாசி மாதம் சிவராத்திரி நன்னாளில் வழங்குகிறார். ஆனால் 1448 உடன் சக ஆண்டு 78 ஐ சேர்த்தால் 1526 என்ற ஆண்டில் வந்து நிற்கிறது. அப்போது கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசை ஆண்டு கொண்டிருக்கிறார். அவரது தம்பி அச்சுதராயர் அப்போது அரச பொறுப்பில் இல்லை என்பது காலக்குறிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளதை காட்டுகிறது. இந்த கொடைக்கு யாரொருவர் கேடு (அஹிதம்) செய்கின்றானோ அவன் கங்கைக் கரையில் பசுக்கொலையும் பிராமணக்கொலையும் புரிந்த பாவத்தை அடைவான் என்று கல்வெட்டு முடிவுறுகிறது.

    தமிழ்ச் சொல்லை அகற்றி சாசனம், அஹிதம், ஹத்தி ஆகிய சமற்கிருத சொற்கள் இடம்பெற்றுள்ளன. பூந்தேர் இன்னும் பிற்காலத்தில் புஷ்பரதம் என்றாகியுள்ளது. .

    இத்தலம் பற்றிய செய்தி தரும் பிற தரவுகள்:

    http://templesoftamilnadu.co.in/gnayiru-gramam-suryan-sthalam/

    Share
  • திருவாலங்காடு – இரத்தினசபை

    -சேசாத்திரி சிறீதரன்

    வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில்.

    இது ஒரு பாடல்பெற்ற தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களைத் தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித்தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாகக் கல்வெட்டுகளைத் தேய்த்துக்கரைத்து அழித்துவிட்டனர்.  இரத்தினசபை வாயிலைத் தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதேநேரம் அந்த இரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்குச் சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.   (படம் 1)

    கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள். (படம் 2&3)

    கோயில்தூண்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படிப் புடைப்புச் சிற்பங்கள் ஏதும்  இல்லை. இலை, மரம், பூ, தெய்வ வடிவுகள்தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வைக் குறிக்கிறது. அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக ஏங்கித்தவிக்கத் திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண  அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை? அவர்கள் உணர்வு அற்றவர்களா? என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்துப் போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியும்? நீங்களும் அந்த மோகினியைக் காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினிச் சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.

         

    தலைக்கோபுரம்

    இரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரணக் கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு சென்னையிலிருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள்.

    சிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும் கம்பீரமாகவுள்ளன. அதிகக் கல்வெட்டுகளையும் பெற்றுள்ளன. பொதுவாகப் பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில்தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தால் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஓர் ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறுதான்  சில கிலோ  மீட்டர் தள்ளித்  கிழக்கில் பூண்டி அணைநோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசுப் புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும்  கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர்செய்து  பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால்தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும், கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம்.  கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12க்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர்.

    https://www.google.co.in/maps/place/Kosasthalaiyar+River/@13.2995634,80.1086905,11z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a527956dec6497b:0xb572296a37c13b17!8m2!3d13.2996017!4d80.2487789

    திருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்துள்ளது. மற்றபடி இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக்  கோயம்பேடு, வில்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்துதான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.

    இவ்வூரில் தமிழரில் வன்னிய ரெட்டியார்களும், முதலியார்களும், தெலுங்கரில் ரெட்டிமார்களும், நாயுடுகளும் மிக அதிகமாக வாழ்கின்றனர். இவர்களுக்குத்தான் இங்கத்து விளைநிலங்களும் சொந்தம். அவ்வளவு ஏன்? வடதமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் 90% இந்த நான்கு சாதியருக்கு  மட்டுமே சொந்தமாகவுள்ளன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் என்றாலும் முதலியாருக்குப் பதிலாக வேறு பிற தமிழ்ச் சாதிகள் இடம்பிடிக்கின்றனர். தெலுங்கு சாதிகள் மட்டும் அங்கேயும் இதே சாதிகள்தான்.  தமிழ்நாட்டில் எந்த மன்னர் ஆட்சி போனாலும் எந்தப் புதிய மன்னராட்சி வந்தாலும் அவர்களைத் தமக்கு ஆதரவாக்கிப் பலநூற்றாண்டுகளாக இவ்விளைநிலங்களை இவர்கள் தமக்கு மட்டுமே உரிமையாக வைத்துள்ளனர். மற்ற தமிழ்சாதிகள், ஒடுக்கப்பட்ட  தலித்துகளுக்கு விளைநிலங்களில் உரிமை கிடையாது. இதுதான் இன்று வரை தொடரும் சமூக அநீதி நிலைமை (social  injustice) என்பதை யாவரும் உணரமுடியும். ஆனால் பாருங்கள் வெள்ளையர் ஆட்சியில் ஆங்கிலேயருக்குக் கைகட்டி செய்யும் வேலைகளை அதிகமாக பிராமணர்கள் ஆக்கிரமித்து கொண்டு உள்ளனர் என்று கூக்குரல் கொடுத்த சமூக நீதிப் போராளிகள் என்னவோ இந்தச் சாதிகளில் இருந்துதான் அதிகம் வந்தார்கள். ஆனால் ஏனோ அவர்கள் கருத்திற்கு தம்முன்னோர் விளைநிலங்களைத் தம்  சாதிகளுக்கு மட்டுமே உரிமையாக்கி வைத்திருப்பது ஆக்கிரமிப்பாக, சமூக அநீதியாக  தோன்றவில்லை. இது தமக்கு ஒரு நியாயம் பிறர்க்கு ஒரு நியாயம் என்பதன் பாற்படும்.

    சமூக அநீதி நிலக்கிழமையால் தான் பேரளவில் நிகழ்ந்தது, நிகழ்கிறது. தமிழக மக்கள்தாம் வரலாற்றில் இந்தச் சமூக அநீதி குறித்த விழிப்பை  அறிந்துகொள்ள வேண்டும். இப்போது சிலர் விகிதாசார அடிப்படையில் அந்த அந்தச்சாதி மக்களுக்கு தேர்தலில், தொகுதி ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று பேசிவருகிறார்கள். ஆனால் விளைநிலம் என்று வரும்போது மட்டும் இந்தச் சாதி விகிதாசார அடிப்படையை அவர்கள் பொருத்திப்பார்க்க மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்த விகிதாசார அடிப்படை பற்றிப் பேசுபவர்கள் பெரும்பாலும் இந்த நிலக்கிழமை சாதிகளை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மைக்கு உண்மையாகும்.  விளைநிலங்கள் அனைத்தும் தனியார் உரிமையிலிருந்து நீங்கிக் கூட்டுறவின் கீழ் கொண்டுவரப்பட்டு வேளாண்மை ஒரு தொழிலாக செய்யப்பட்டு  அதில்  ஒதுக்கீட்டு முறையில் எல்லாச் சாதியாருக்கும் இந்த விளைநிலம் கிட்ட  ஏற்பாடு ஆகின்றவரை இது சமூக அநீதியாகவே தொடர்ந்துகொண்டு இருக்கும்.

    திருவாலங்காடு கல்வெட்டுகளின் படங்கள் 17 முதல் 23 முடிய
    உள்ளவையுடன் 11-ஆம் படத்தையும் படித்ததில் கிடைத்தவை;

    படம்-17

    யுடைய (முழான்)….ராயன்
    ……….ட்டை (ஸ்ரீ) ..க்கோ …… காச்யபன்
    …..திருவாலங்காடு……….(சாவா) மூவாப்

    படம்-18

    …ராயன்   வடுகநாதன் ….நத
    காச்யபன் திருச்சிற்றம்பல பட்ட(னும்)
    சாவா மூவாப்பெரும் பசு (4?)  இ

    படம்-19   – படிக்க இயலவில்லை

    படம்-20

    வரங்கில் அண்டமுற் ந…
    பட்டனும் ஆத்ரேயன்  ச

    படம்-21

    ……கோட்டத்து …
    ண்டமுற்  ந… மாந்த..
    ஆத்ரேயன் சந்த்ரசேகர (பட்டனும்)

    படம்-22

    …பழையனூர் நாட்டு…
    ளிய  நாயநார் திருமு(ன்)
    (ப0ட்டனும் காச்யபன் கா..

    படம்-23

    திருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)
    கா…பட்டனும்

    விளக்கம்:   கோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை அளித்தது பற்றிய கல்வெட்டு.  கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு?) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக்கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன. கல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கபெறும் ஆடு, பசு ஆகியவற்றைச் ”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம். இந்தக் கால்நடைகள்  இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய கால்நடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா”  என்னும் குறிப்பு. கொடையாளி,  உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்…. ராயன் வடுகநாதன்    என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உணர்த்துகின்றன.

    கொடைப்பொருள்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப் பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன் முதலியோர் ஆவர்.

    இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யப கோத்திரத்தான் எனத் தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது.  (அடுத்த கல்வெட்டுப்படம்-11-இல் இப்பழையனூர் நாட்டுப்பிரிவு, மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.

    படம்-11

    1 (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..
    2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி
    3 …கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும்
    4 ர  சோழர(ச)…க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)

    விளக்கம்:  மேலே கூறியவாறு, திருவாலங்காடு, மணவில் கோட்டம்,மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின்முதல் வரியில் காணப்படுகிறது.  கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு)  இறைவன் பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். அதாவது, இறைவன் நாமம்; காணி = உரிமை.

    இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று, ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை

    என்று வழங்கப்படும். ஏலத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும். கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஓர் அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப் பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கிடையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். – திரு. சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப் பொருள் கூறியவர்.

    பி.கு.: மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது. https://en.wikipedia.org/wiki/Manavur  இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது. . https://soki.in/manavoor-tiruvelangadu-thiruvallur.அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது.

    படம் 11 கீழே

     

     

     

     

    Share
  • அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்

    சேசாத்திரி சிறீதரன்

     

    தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன. இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே இவ்வூரில் பல தங்கும் விடுதிகள், கடைகள் என சுற்றுலாவினால் தொழில்வளமையும் பொருளியல் வளமையும் பொங்குகிறது. திருச்செலவு தான் இவ்வூர் இயக்கத்திற்கு உயிர்நாடி.

    இவ்வூரில் பல கோவில்கள் அமையப்பெற்றாலும் கல்வெட்டு, சிற்பம் பழமை ஆகியவற்றில் முதன்மையானது என குறிக்கத்தக்க பெருமை உடைய கோவில் .அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில்.. ஆதி கும்பேசுவரர் கோவில் போல் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி இராவிட்டாலும் சிறப்பு என்னவோ இந்த கோவிலுக்கு தான்.

    பொதுவாக கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களில் கருவறையையோ அல்லது மண்டபத்தையோ ஒட்டி தேர்ச்சக்கரங்கள் பொருத்தி குதிரை பூட்டி இழுப்பது போலவும் யானை இழுப்பது போலவும் கட்டி இருக்கிறார்கள். இது கட்டடபாணி பிற்கால சேர்கையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொண்டைமண்டல கோவில் தூண்களில் புடைப்பு சிற்பம் இருப்பது போல இக்கோயில்களில் புடைப்பு சிற்பம் அவ்வளவாக காணப்படாமல் பூக்கோலம், மரம், கொடி போன்றவையே அதிகமாக பொதுவாக வடிக்கப்பட்டுள்ள்ளன. மேலும் பல மண்டபத் தூண்கள் கருநாடக கோவில் கட்டட அமைப்பை கொண்டுள்ளதானது இவை விசயநகர ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அமர்த்தி இக்கோயில்கள் நன்றாகக் பேணப்பட்டு வருகின்றன..

    பேருந்து நிலையத்திலிருந்து கோவில்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் அருகருகே அமைந்துள்ளதானது இவ்வூர் முன்பு 2 கிலோமீட்டர் பரப்பளவிற்கும் குறைவாக இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது. இனி படங்கள் காண்போம்.

     

    இளமை குலுங்கும் இளவரசி அல்லது இளைய அரசி
    தாலி அணிந்த வேந்தி /அரசி
    நகையணி துறந்து பூணூல் மட்டுமே அணிந்து நோன்பு கோலத்தில் வேந்தர்

    கருவறை புறச்சுவரை சுற்றிலும் சோழ வேந்தர், வேந்திகளின் சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கும்படியாக அழகுற செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளன. கச்சை இல்லா முலைமார்பு பல்லவர் உருவங்கள் தாமோ என மதிமயக்குகின்றன. எனினும் சிலைகளுக்கு அருகிலேயே வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இவற்றின் காலத்தை அறியமுடியும் பல்லவரா/ சோழரா? என்றும் அறிய முடியும் என நம்பலாம்.

    காதில் குழையுடன் நோன்பிருந்த வேந்தன் இப்போது ஒயிலாக நிற்கிறான்
    சோழ வேந்தருக்கே உரிய தலைமயிர்கட்டு அணி. சிவப்பு கல்லில் இருந்து மாறுபட்ட பழுப்பு கல் பிறப்பட்டதோ
    உலகப் பேரழகு தோற்கும் இந்த வேந்தியிடம்
    பேரமைதி தவழும் தோற்றம்
    வேந்தனுக்கு உரிய மிடுக்கு

     

    3 & 4 படங்கள் ஒரே ஆளுடையன. பிற வெவ்வேறு  ஆள்களுடையவை .
    தேராக மாற்றப்பட்ட மண்டபம். சக்கரத்தில் 12 ராசிக்கு உரிய அதிபதிகள் புடைப்பு சிற்பம்

    Share
  • கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்

    சேசாத்திரி
       

    நூல் குறித்து சுருக்க விளக்கம்: 

    1889 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டுக் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அக்குசிரிங்கசில் (Oxyrhynchus) விவிலிய அகழ்வாய்வுக் கூட்டமைப்பு நடத்திய அகழாய்வில் கண்டெடுத்த பாபிரசுச் சுருள் ஒன்றனுள் கிரேக்க நகைச்சுவை நாடகமும் அடங்கும். திரு. பெர்னார்டு பி. கிரென்பெல் (Bernard P. Grenfell), ஆர்தர் எசு. அண்ட்டு (Arthur S. Hunt) ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கிரேக்க நாடகத்தின் கிரேக்கப் பகுதியை ஆங்கிலத்தில் பெயர்த்தியும் கிரேக்கம் அல்லாத சொற்களை ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு செய்தும் 1903 இல் அதை ஒரு நூலாய் வெளியிட்டனர். இதன் காலத்தை அவர்கள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டினதாக முடிவு கட்டினர். 

    இந்த நாடகத்தில் ஆங்காங்கே கிரேக்கம் அல்லாத வேற்று மொழி உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இது அந்த ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்நாடகத்தில் தென்கன்னட மாவட்டத்தில் இருந்து பிரித்த உடுப்பி மாவட்டத்தின் உடுப்பிக்கு அருகில் உள்ள மள்பி என்ற துறைமுகத்தை ஆளும் தலைவன் குறிப்பிடப்படுவதால் அதில் உள்ள வேற்று மொழி திரவிட மொழி தான் என்று முடிவு கொண்டனர். முனைவர் ஈகன் உல்ட்சு என்ற ஆய்வாளர் இந்த வேற்று மொழி கன்னடமே என்று கூறினார். 

    1927 இல் திரு. கோவிந்த பய் என்ற கன்னட அறிஞர் அந்த உரையாடல்களைக் கன்னடமாகக் கொண்டு ‘பிரபுத்த கர்னாடகா’ என்ற நூலாக வெளியிட்டு தம் கருத்தை வழங்கினார். இன்னும் பலர் இந்த வேற்று மொழி பழைய துளு, பழைய கொங்கணி, பழைய கன்னடம், பழந்தமிழ் என்றெல்லாம் சொல்லி உள்ளனர். 

    இந்நாடகத்தில் 48 திரவிட மொழித் தொடர்கள் உரையாடல் பகுதியில் எண்ணிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. கன்னட மொழியை நன்றாக அறிந்த பேராசிரியர் திரு இரா. மதிவாணன் அவற்றை நன்கு ஊன்றி ஆராய்ந்து இவை கன்னடம் அல்ல என மறுத்து, மாறாக இவை துளு நாட்டு வட்டார வழக்குத் தமிழின் திரிந்த மக்கள் பேச்சு வழக்கு என்று தம்முடைய “கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல், 1978” என்ற குறுநூலில் 30 – 35 பக்கங்களில் ஒப்பிட்டு நிறுவி உள்ளார். பக்கம் 29 இல் செவ்விய தமிழ் சொல்லாட்சிகளாக 11 தொடர்களைச் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த மக்கள் வழக்குத் திரிபிற்கு ஒரு காட்டாக சென்னை வட்டார வழக்கில் ‘அதற்கு என்ன என்கிறார்’ என்ற சொற்றொடரைக் கல்லா மக்கள் ‘அதுக்கு இன்னான்ற’ என உரைப்பதைச் சுட்டுகிறார். 

    படிக்குநர்கள் இந்நாடகம் குறித்து மேலதிகச் சேதிகளை அறிந்து கொள்வதற்காகவே இக்குறுநூல் இணைப்பில் இணைக்கப்பட்டு உள்ளது. முதலில் 30 – 35 பக்கங்களில் தமிழ் –  துளு – ஆங்கில எழுத்து பெயர்ப்பு ஆகியவற்றின் ஒப்பீட்டைப் படித்து விட்டு, அதன் பின் பக்கம் 20 – 29 வரை கொடுத்துள்ள நாடகத் தெளிவுரையையும் படித்த பிறகு ஆங்கிலத்தில் உள்ள கிரேக்க நாடகத்தைப் படித்தால் நாடகம் நன்றாகப் புரியும், சுவையூட்டும். அப்படியல்லாமல் நேரடியாக ஆங்கில நாடகத்தைப் படித்தால் ஒன்றும் புரியாமல் அலுப்பை ஏற்படுத்தும். 

    இனி, இணைப்பில் . . . . .

    கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்”- ஒளிவருடியது

     
    Share