மார்ச் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!
வெங்கட் சாமிநாதன்
இந்த முறை கதைகளின் வருகை குறைந்திருந்தாலும் நல்ல எழுத்தின் சதமானம் பெருகியுள்ளது என்பதோடு சில புதிய கைகளும் தென்படுகின்றன். ஒரு வேளை நான் மறதியில் புதிய கை என்கிறேனோ என்னவோ.
இம்முறை எனக்கு மூன்று கதைகள் குறிப்பிடத் தக்கனவாகப் படுகின்றன. இரண்டு பழைய கைகள். மாதவன் இளங்கோவின் “அமைதியின் சத்தம்”. அயல் நாட்டு வாழ்வின் சிக்கல்கள். கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல் போய்விடுவதைல்லை.
அதே மனிதப்பண்புகள் தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருபபது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே. பழமை பேசியின் ”ககனமார்க்கம்”.கதையில். தன் ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார் பழமை பேசி.
கடைசியாக எனக்குப் புதியவராகத் தோன்றும் பார்வதி ராமச்சந்திரனின் “நம்மில் ஒருவர்” இம்மாதத்திய பரிசுக்குகந்த கதையாகச் சொல்லத் தோன்றுகிறது. புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம்.
பரிசுக்குரிய கதையாக பார்வதி ராமச்சந்திரனின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்.
அதே சமயம் முடிவில் இந்த வருடத்திற்கான சிறந்த கதைத் தேர்வின் போது, மாதவன் இளங்கோவின் அமைதியின் சத்தம், பழமை பேசியின் ககனமார்க்கம் கதைகளையும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். அவை முன்னரே பரிசு பெற்ற கதைகள் மாத்திரமலல, இக்கதைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.
பார்வதி ராமச்சந்திரனுக்கு என் பாராட்டுக்கள்.
இந்த மாதப் போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகளின் விவரம் வருமாறு:
மறுபடியும் ஒருமுறை
நம்மில் ஒருவர்….
அமைதியின் சத்தம்
பதில்??
முத்தம்
நவீன ரோபோக்கள் “
ககனமார்க்கம்
சாய்ந்து சாய்ந்து… அவள் பார்த்த போது …
உண்மைக்காதல்
தாமரை நெஞ்சம்
பயம் “
எழுச்சி
பரிசு பெற்ற திருமிகு பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திரு பழமைபேசி மற்றும் மாதவன் இளங்கோ இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து அனைவரும் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.