— கவிஞர் காவிரிமைந்தன். 

 

 

முத்து நகையே உன்னை நான் அறிவேன் …

rojaraniமனித உறவுகளின் மேன்மையெல்லாம் உள்ளத்தாலே உணரப்படுதலே! அன்பு, கருணை, இறக்கம் என்கிற உணர்வுகளை நாடியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் தாய்க்கு மகன் பிள்ளைதான் என்பார்கள்! நாளெல்லாம் நெடிதுழைத்தாலும் நாடுவது பாசம், பற்று, காதல், பக்தி எனும் ஜீவன் தொடும் உணர்வுகளைத்தான்!

எந்த ஒரு படைப்பாளனும், எழுத்தாளனும், கவிஞனும் கூட வாசகர்கள் நெஞ்சில் பதிவது எப்போது தெரியுமா? ஒவ்வொரு மனிதனின் நிழலாய், நிஜமாய் தொடரும் இன்ப துன்பங்களைத் தனது படைப்பில் தொட்டுக்காட்டும்போதுதான்!

வெள்ளித்திரையில் என்று வரும்போது, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, நடிப்பு, குரல், இயக்கம் என்று பல்வேறு கலைஞர்களின் கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

sivajiநம் அபிமானத்திற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்கள் மேடைகளில் கவியரசு கண்ணதாசன் பற்றி அடிக்கடி குறிப்பிடும்போது அவருடைய தன்னுணர்ச்சிப் பாடல்கள் தனித்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடுவார். அப்படி தன் உணர்ச்சிகளைப் பாத்திரங்கள் வாயிலாக ஏற்றித் தருகிற யுக்தி அனுபவம் வாய்ந்த கவிஞர்களுக்கே கைவந்த கலை!

நம் நினைவுப் படலங்களில் இது போன்ற பாடல்கள் நிலைத்துவிடுவதற்குக் காரணமும் இதுதான்! கவிதையோடு இசை கைப்பிடித்து வருகின்ற அழகைத் தனது குரலால் அல்லவா வெளிப்படுத்துகிறார்கள் பாடக பாடகியர்! கற்பனையும் ஒப்பனையும் கலந்திருந்தாலும் அற்புதம் என்று நம்மைப் பரவசப்படுத்தும் நடிப்புத் திறத்தாலே உயர்ந்து நிற்கிற நடிகர் திலகமும், இதோ ‘என் தம்பி’ திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரைந்தளித்த இப் பாடலை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வார்த்தெடுத்த இசையில், டி.எம்.சௌந்தரராஜன் குரலில் உயிரூட்டியிருக்க … கேளுங்கள் இன்னொரு முறை!

முத்து நகையே உன்னை நான் அறிவேன்
தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்

நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சைவிட்டுச் செல்ல எண்ணுமோ

வட்டமிடும் மனதைக் கயிறாலே
கட்டியிழுத்தாலும் விலகாதே
கட்டியிழுத்தாலும் விலகாதே
சுட்டும் விழிச் சுடரே மயங்காதே
தோளில் வைத்து வளர்ப்பேன் கலங்காதே

பொன்னை நினைத்தா நான் வாழ வந்தேன்
உன்னை நினைத்தே நான் காண வந்தேன்
உன்னை நினைத்தே நான் காண வந்தேன்
என்னை அறியும் உந்தன் மனசாட்சி
இறைவன் இருந்தால் அவன் சாட்சி

மனித வாழ்வில் சுகமும் சோகமும் தானே இரண்டு பக்கங்கள் என்கிற வரையில் இப்பாடல் மனதில் தவழும், மயிலிறகாய் வருடிக்கொடுக்கும்…

காணொளி: https://youtu.be/ea1tW8G5DvA

https://youtu.be/ea1tW8G5DvA

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.