ஜப்பானிலிருந்து உணவு இறக்குமதி செய்யத் தடை நீட்டிப்பு
கதிர்வீச்சு காரணமாக ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது, மேலும் மூன்று மாதங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
கதிர்வீச்சு ஆபத்து ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுகளுக்குள் இருப்பதாக நம்பகத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் வரையில் இந்தத் தடை நீட்டிக்கப்படும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், வாராந்திர ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்தத் தடை குறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைவர் பி. ஐ. சௌரதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஜப்பானில் இருந்து அணு உலைகளில் ஏற்படும் கதிர் வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து உள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்தியது. இதனால் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் ஏற்படக் கூடிய மாசு மற்றும் ஆபத்து குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஜப்பானில் கதிர்வீச்சு பரவி வருவதைத் தொடர்ந்து இதுபோன்ற ஆபத்து இந்தியாவில் ஏற்படுவது தடுக்கப்படும். அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மேலும் மூன்று மாத காலத்திற்கு அல்லது கதிர் வீச்சு அளவு ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புக்குள் இருக்கிறது என்ற நம்பகத்தகுந்த தகவல்கள் கிடைக்கும் வரையில் தடை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
2011 ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கதிர்வீச்சு மற்றும் ஐசோடோப் தொழில்நுட்ப வாரியம், பாபா அணு ஆராய்ச்சி நிலையம், அணு ஆராய்ச்சி ஒழுங்கு முறை ஆணையம், இந்திய டாக்சிகாலஜி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை வாரியம், தொழில் ஆராய்ச்சிக்கான ஸ்ரீராம் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை