பிப்ரவரி 15, 2016

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

elangovan

 

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள். பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி “உலகத் தொல்காப்பிய மன்றம்” கிளையின் இந்திய பொறுப்பாளராக, புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் மு.இளங்கோவன் பணியினை முன்னெடுத்துச் செல்கிறார்.

elangovan2

துவக்கப்பட்டிருக்கும் “உலகத் தொல்காப்பிய மன்றம்” புதுச்சேரி கிளையின் சார்பாக, மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறப்போகும் சொற்பொழிவுகளின் வரிசையில் முதல் பொழிவு சென்ற வாரம் 08.02.2016 அன்று “தொல்காப்பியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சியில் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்றிவரும் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

elangovan3

முனைவர் மு.இளங்கோவன் இணையத்தமிழ் வளர்ச்சி பற்றியும், கணினித்தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ் இணையப் பயிலரங்கங்கள் பலவற்றையும், ஊடகக் கட்டுரைகளையும் தொடர்ந்து வழங்கி வருபவர். உலக அளவில் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளையும், உரைகளையும் வழங்கி வருபவர். இருபது நூல்களை வெளியிட்டுள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்கள், இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழி இளம் அறிஞர்’ விருது பெற்றவராவார்.

கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சார்ந்த பன்னாட்டு நிகழ்வுகளைப் பற்றியத் தகவல்களையும், உள்ளூர்த் தமிழறிஞர்கள் முதல் உலகத் தமிழறிஞர்கள் வரை பலரை நேர்காணல்கள் செய்தும், சென்ற காலங்களில் தமிழ்த்தொண்டாற்றிய மறைந்தவர்கள் பலரைப் பற்றியும் தனது வலைப்பதிவில் செய்திகளைத் தொகுத்து வழங்கி வருபவர். தமிழ் முன்னணி தினசரி நாளிதழ்களும் இவரது வலைப்பதிவுக் கட்டுரைகளில் காணும் தகவல்களையும் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஒரு இன்றியமையாத் தகவல் கருவூலம், ஒரு வரலாற்றுப் பெட்டகம் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவுகள் (http://muelangovan.blogspot.com/) என்பது குறிப்பிடத்தக்கது.

elangovan4

இசையார்வலர்கள் மகிழும் வண்ணம், கால்நூற்றாண்டு ஆய்வுகளைத் தேடித்தொகுத்த இசையாய்வுப்புதையலாக , பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் உருவாவதில் முயன்று தொகுத்து ஓராண்டிற்கு முன் வழங்கினார் முனைவர் மு.இளங்கோவன்.

“உலகத் தொல்காப்பிய மன்றம்” பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் சிறப்புற வளர்ந்து, அதன் நோக்கமான தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற குறிக்கோளை அடைய வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

_______________________________________________________

தொடர்புக்கு:
முனைவர் மு.இளங்கோவன்
மின்னஞ்சல்: muelangovan@gmail.com
செல்பேசி: +91 9442029053
ஃபேஸ்புக்: https://www.facebook.com/muelangovan
வலைப்பூ: http://muelangovan.blogspot.com/

_______________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *