6d175b2b-2daf-4c2a-93a3-f99d50f97c59
—————————————
அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் -எனையிந்த
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட
தோழா கொடுத்திடு தோள்….(1)

அனுதினம் ராமா யணமதை ஓதும்
அனுமனே அஞ்சனை அன்பே -கணுவிலா
பக்திக் கரும்பே பயமிலா வாழ்க்கை
சித்திக்கச் செய்வாய் சரண்….(2)

வினய வடிவம் விழிகளில் பாஷ்பம்
கணைவிடு ராமன் கதையே -துணையாய்
அணையா விளக்காய் அமர்ந்த அனுமான்
இணையே(தும்) இல்லா இறை….(3)

பாரிஜாத வாசம் பணிராமன் காரியம்
வேறுஜாதி வானரம் மாருதி -மாறுவேடம்
பூண்டுவந்த ருத்திரன் பூமிவாயு புத்திரன்
வேண்டுவோர்தம் வீட்டில் வரவு….(4)

அண்ணல் நினைப்பினால் கண்ணில் பனித்திரை
விண்ணில் பறந்தோன் வெகுளியாய் -திண்ணையில்
ஸ்ரீ£ராம் ஜெயராம் ஜெயஜெய ராமென்று
தீராத் தவத்தில் திளைப்பு….(5)

வீரன் வினயன் வெகுசமர்த்தன் ஈசனவ
தாரன் ரகுநாதன் இஷ்டவேலைக் -காரன்
கடல்கடந்து அய்யன் கணையாழி தந்த
உடல்கடந்தோன் உள்ளம் உணர்….(6)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *