திருச்சி புலவர் இராமமூர்த்தி

வழிவரும்  இளைப்பி  னோடும்  வருத்திய  பசியி  னாலே
அழிவுறும்  ஐயன்  என்னும்  அன்பினிற்  பொலிந்து  சென்று
குழிநிரம்  பாத  புன்செய்க்  குறும்பயிர்  தடவிப்  பாசப்
பழிமுதல்  பறிப்பார் போலப்  பறித்து அவை கறிக்கு  நல்க

இளையான்குடி மாறனார், வந்தஅடியாரின் ஈரமேனியைத்துடைத்து வேறு ஆடையளித்து ‘அடியார்மிகவும்பசியோடு இருக்கிறார்’ என்றபோது, ‘நம் வறுமை நீங்க  இன்று பகலில்   விதைத்த முளைநெல்லை வயலிலிருந்து வாரிக்கொண்டு வந்தால் என்னால் ஆனதைச் செய்வேன்’ என்றார். வயலில் இருந்து வந்த ஈரநெல்லை வறுத்து, இடித்து அரிசியாக்கி உணவு  சமைக்க அடுப்பில் எரிதுரும்பு இல்லைஎன்றார் உடனே நாயனார்   தம்வீட்டின் உட்கூரை மூங்கில் வரிச்சுக்களைப் பிடுங்கிப் போட்டார். அடுப்பு மூட்டிநெல்லை வறுத்து  அரிசியாக்கிச்   சோறாக்கினார். அடுத்து ‘கறிக்கு இனிஎன்னசெய்வது?’ என்றுகேட்டார். அப்போது நாயனார் பின்பக்கம் புன்செய்ப் பயிராக முளைத்திருந்த  கீரையைப்  பறித்து  நல்கினார்

இப்பாடலின் பொருள்: “வழி வந்ததாலுளதாகும் இளைப்பினுடனே அதன் முன்னரே வருத்திய பசியினாலே எமது ஐயன் வருந்தும்“ என்கின்ற அன்பினாற் கிளர்ந்து சென்று தமது கொல்லையிலே, முளைக்கவைத்த குழிகளினின்றும் மேலே கிளம்பும் பருவம் உறாத சிறிய இலைக்கறிப் பயிர்களைக் கையினாற்றடவிப் பாசப் பழிமுதலை அறவே பறிப்பவர்போல அவற்றை வேரோடும் பிடுங்கி வந்து கறிக்காக (நாயனார்) மனைவியார் கையிற் கொடுக்க, இப்பாடலில்  வழிவரும் இளைப்பினோடும் வருத்திய பசி என்பது – வழி வருதலாலுள தாகிய இளைப்பு – அயர்ச்சி. வழிவருதலென்னும் புறத்து நிகழ்ச்சியாகிய அயர்ச்சியுடன் உள்ளிருந்து வருத்திய பசியும் என்க. எனவே உள்ளும் புறமுமாக இருவழியானும் அடியவர் வருந்தினார் என்று அவர்பாற் சென்ற அன்பு காரணமாக நாயனார் தம்  கவலைகொண்ட உள்ளத்தைக்  குறித்தது.

அடுத்து அன்பினிற் பொலிந்து சென்று  என்ற தொடர்,  அன்பு நிறைதலால் மிகக் கிளர்ச்சியுடன் விரைந்துபோய். இது நாயனார் பயிர்களைப் பறிப்பதற்குச் சென்ற விரைவினையும், அது போழ்து அவரது மன நிலையையும் குறித்தது. ஒவ்வோர் கணமும் அடியவர் பசி அதிகரித்தலைப் பொறுத்துக் கொள்ளாமல்  இவ்விருவரும் செய்த செயல்களின் தன்மை குறித்தபடியாம்.

மேலும்,  குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் – புன்செய்ப் பயிர் – கீரை முதலிய இலைக்கறிப் பயிர். இவை புன்செய் நிலத்தில் பயிரிடப்பெறுவன. குழிநிரம்பாத – பயிர்கள் இடப்பெற்ற குழிகளின் அளவுக்கு மேற்பட்ட உயரம் மேலே வளர்ந்து வராத. புன்செய் – வீட்டுக் கொல்லையாக நாயனார் பயன்படுத்திய புன்செய் நிலம் நாயனார் முளை வாரிவந்தது நெல் விளையும் நன்செய் நிலமென்றும்,கறிக்காகும் குறும்பயிர் பறித்து வந்தது அவரது மனையை அடுத்துக் கொல்லைப் பயிர் செய்துவந்த புன்செய் நிலமென்றும் அறியலாம். இப்போது பரமக் குடியை அடுத்த இளையான் குடி என்னும் இவ்வூரில் வீட்டு மனைகளின் அடுத்து இங்குக் குறித்த புன்செய் மேடு என்று வழங்கும் ஒரு புன்செய் இடமும், அதனை அடுத்து இது குறித்த முளைவாரி அமுதளித்த ‘’முளைவாரிக்குட்டை’’ எனவழங்கும் நன்செய் நிலமும் இன்னுங் காணப்பெறுகின்றன.

இவ்விரண்டு நிலங்களினும் நாயனார் நென்முளையும், பயிரும் மேல் விளையாமல் வாரியும் பறித்ததும் விட்டபடியால் இன்றைக்கும் ஒன்றும் விளையாமலிருந்து வருகின்றன என்பது அவ்வூரார் சொல்லக்  கேட்ட செய்தியாம். இவற்றை வேலியிட்டுப் பாதுகாத்து உலகிற்கு அறிவிக்குமாறு கல்வெட்டு முதலிய, நினைவின் அடையாளங்கள் பொறித்துக் காவல்செய்து போற்றுதல் சைவர்களின் முதற்கடமைகளில் ஒன்றாம்.

அடுத்து தடவி   என்ற  சொல் , குழி நிரம்பாத குற்றளவுடைமையானும், நள்ளிருட் காலமாதலானும் அக்குறும் பயிர்களைத் தடவிப் பறிக்க வேண்டியதாயிற்று என்க. பாசப் பழிமுதல் பறிப்பார்போல நாயனார் பறித்தவை குறும்பயிர் அன்று; அவை அவரது பாசத்தின் பழிமுதல் பறித்தலே போல நின்றன என்றார். பாசப் பழிமுதல் – ஆணவமாகிய சகல மலத்திற்கும் வேராகி நிற்கும் மூலமலம் என்பர். “யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றும் அற ‘’ என்பது கண்ணப்ப நாயனார் புராணம்.  பிற்காலத்துச் செல்லல் நீங்குதற்காக வித்தியிருந்த நெல் முளை வாரியதனானே வித்துமேல் விளையாமல் செய்த செயல் ஆகாமிய கர்மங்களைக் கிழித்தலும், குறும்பயிர் வேருடன் பறித்ததனானே பிராரத்த வினைகளை அழித்தலும், மனையின் அலக்குக்களை அறுத்து மேலும் புவன போகங்களை இல்லாமல் வீட்டியதனாலே சஞ்சித கர்மங்களை அழித்தலும் குறிக்கப்பெற்றன என்று இங்கு விசேடப்பொருள் காண்பாருமுண்டு. இவை ஆணவம் முதலான  மும்மலங்களின் அழிவு குறித்தன என்பாருமுண்டு. இவையெல்லாம்  சிவாநுபவப்  பொருள்;

முதல் – மூலவேர்.  பறிப்பார்போல – இங்கு போல என்ற உவமவுருபு பயன்பற்றித் தோன்றிச் சிறப்பு நிலைக்களமாயின உவமம் என்பர். உவமிக்கப்பட்ட பொருளும் உவமையும் பண்பினால் ஒன்றேயாயின ஒற்றுமை நிலைகுறித்து நின்ற அழகும் காண்க.  குறும்பயிர்கள் வேரோடு பறிக்கப் பெற்றபடியால் பாசப் பழிமுதல் என்றார்

நயம் : இப்பாடலில்  சைவ நன்மக்கள் தம்  முன்வினை, கடந்த பிறப்பின்  வினை, இப்பிறவி வினை  என்ற  சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் ஆகிய  வினைகளை  அறுத்த பின்னரே இறையருள் பெறலாம் . இவற்றை கூரை வரிச்சு , குறும்பயிர் ஆகிய  அடையாளங்களால்  உணர்த்திய  சேக்கிழார் பெருமானின்  பாடல் நயம்  எண்ணியெண்ணி  இன்புறத்தக்கது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *