Tag: எம். ஜெயராம சர்மா

  • உயர்வினையே உணர்ந்திடலாம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     

    உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று

    உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும்

    உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல்

    பித்தேறி பலசெய்து  பேதலித்துநிற்கின்றார் !

     

    மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெரும்பயனே

    ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க்கு அமைந்ததுவே

    தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்

    நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் !

     

    அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது

    ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை

    பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்

    பிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் !

     

    வாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி

    வாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்

    வாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார்

    வாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் !

     

    பூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்

    பூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும்

    யார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின்

    அவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் !

     

    யேசுநபி காந்திமகான் நிறைவுடைய ரமணரிஷி

    பூமியிலே பிறப்பதனை புனிதமாய் ஆக்கிநின்றார்

    பாவிகளை ரட்சித்தார் பலவற்றை சொல்லிநின்றார்

    ஆர்வமுடன் கேட்டவர்கள் அறிவுபெற்று விழிப்படைந்தார் !

     

    வேதமொடு உபநிடதம் விதம்விதமாய்க் கற்றாலும்

    பாதகமாம் எண்ணமதை பதுக்கியே வைத்திருப்பார்

    பூதலத்தில் என்னாளும் பொழுதையே அழிக்கின்றார்

    பாதகத்தை ஒழித்துவிடின் பயனாகும் இப்பிறவி !

     

    பிறக்கின்றார் யாவருமே இறப்பதனைக் கண்டிடுவார்

    இருகின்ற வாழ்க்கையிலே எல்லோர்க்கும் உதவிடுவோம்

    பிறவியிலே மற்றவரை பேணிநின்று வாழ்ந்துவிடின்

    பிறப்பெடுத்த பெரும்பயனைப் பெற்றிடுவோம் யாவருமே !

     

    பார்க்கின்றோம் சிரிக்கின்றோம் பலவற்றைப் பேசுகிறோம்

    உண்கின்றோம் உடுக்கின்றோம் உல்லாசம் காணுகிறோம்

    ஊனமே இல்லாமல் வாழுகின்றோம் எனநினைத்தால்

    உண்மையிலே பிறப்பதனின் உயர்வினையே உணர்ந்திடலாம் !

     

    Share
  • இறைவாஅருளிவிடு நீ !

     

         ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )

     

    நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா

    நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல

    இயற்கையினை பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்

    நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ ?

     

    ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை

    வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை

    பரந்துநிற்கும் கடல்கூட பாரபட்சம் பார்ப்பதில்லை

    பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன் ?

     

    பூமிதனைக் குடைந்து புதையல் பலஎடுக்கின்றார்

    காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்

    நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்

    கேடெல்லாம் செய்துவிட்டு கீதைபற்றிப் பேசுகிறார் !

     

    ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்

    நாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்

    நீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை

    பாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரை பறிக்கலாமா ?

     

    படித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்

    குடிகின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்

    நடிக்கின்ற நாடகத்தை விட்டெறிந்து விட்டுவிட்டு

    நாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும் !

     

    கோபம்வந்தால் கொழுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்

    வாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல

    பாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை

    ஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம் !

     

    பலமொழிகள் பேசிடினும் பசியாவர்க்கும் ஒன்றேயாம்

    பலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்

    இவையாவும் சமமாயின்  ஏன்னீரைத் தடுக்கின்றார்

    இவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு !

     

     

    Share
  • சும்மா இரு !

          

          (   எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

    சும்மாஇரு என்று சொல்லுவது எளிதாகும்

    சும்மா இருப்பதுதான் சுகமான நிலையாகும்

    சும்மா இருந்துவிட நினைக்கின்றார் யாவருமே

    இம்மா நிலத்தினிலே என்றுமே உயர்ந்துநிற்பார் !

     

    சும்மா இருப்பது சுமையான காரியமே

    சுகம்கண்ட யாவருமே சும்மாஇருக்க மாட்டார்

    சுழன்றோடும் மனத்தாலே சும்மா இருப்பதற்கு

    சுதந்திரத்தைப் பெற்றுவிடல் சுகமான விஷயமல்ல !

     

    சும்மா இருந்ததனால் சுமைவிட்டார் ஞானியர்கள்

    இம்மா நிலத்தினிலே இவர்வணங்கும் பேறுபெற்றார்

    சும்மா இருந்தபடி சுவாசத்தால் பலபெற்றார்

    சுகமனைத்தும் துறந்ததனால் சும்மாவே இருந்தார்கள் !

     

    சும்மா இருந்துவிட்டால் சோறுதான் கிடைத்திடுமா

    சும்மா இருப்பதுதான் சோம்பலின் நிலையாகும்

    சும்மா இருந்துவிட்டால் சுதந்திரம் கிடைத்திடுமா

    சும்மாவை தூக்கியெறி துள்ளலுடன் வாழ்ந்திடலாம் !

     

    சும்மா இருந்துவிடின் அம்மாவும் வெறுத்திடுவாள்

    சும்மா இருந்துவிடின் துணையுமே துரத்திடுவாள்

    சும்மா இருந்துவிடின் தோழமையும் கிட்டவரான்

    சும்மா இருந்துவிடின் சுகத்துக்கே கேடாகும் !

     

    சும்மா இருப்பாரை சொறிநாயும் நோக்காது

    சும்மா இருப்பாரைச் சொந்தமுமே பார்க்காது

    சும்மா இருப்பார்க்கு சொர்கமுமே நரகமாகும்

    சும்மா இருப்பதற்கு சொல்லுகின்றார் பலகருத்தை !

     

    சும்மா இருஎன்று சொல்லுகின்ற நிலையினிலே

    சும்மா இருந்துவிடின் சோறுபற்றி நினைத்திடலாம்

    சும்மா இருஎன்னும் பொருள்பொதிந்து பார்த்துவிடில்

    இம்மா நிலத்திற்கது எட்டாத தத்துவமே !

     

    தத்துவமாய் இருக்கின்ற தகைமையுடை சொல்லதனை

    சாதாரண நிலையில் நாமெடுத்தால் வேறு அர்த்தம்

    உள்விழுந்து நோக்கிவிடின் உயர்கருத்தை கொள்ளுவதால்

    சும்மா நாமெண்ணிவிடும் சொல்லல்ல சும்மாயிரு !

     

    Share
  • என்னாளும் மகிழ்ச்சியன்றோ !

           ( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    வானம் மகிழ்வடைந்தால்

    மழையினைத் தந்துவிடும்

    பூமி மகிழ்வடைந்தால்

    புதுவிளைச்சல் கொடுத்துவிடும்

    சாமி மகிழ்வடைந்தால்

    சகலதும் கிடைத்துவிடும்

    ஆதலால் மகிழ்ச்சியினை

    அகிலமெலாம் விரும்புறதே !

     

    பூக்கொடுக்கும் மரங்களெல்லாம்

    பூமிக்கு மகிழ்ச்சிதரும்

    பழங்கொடுத்து மரங்களெல்லாம்

    பலருக்கும் மகிழ்ச்சிதரும்

    சினமகற்றி வாழ்ந்துவிடின்

    தினமுமே மகிழ்ச்சிதான்

    அதைமனதில் கொண்டுவிட்டால்

    அகிலமே மகிழ்ச்சியுறும் !

     

    பசித்தவர்க்கு உணவளித்தால்

    பசிதீர மகிழ்ச்சிவரும்

    அடித்தவரை அரவணைத்தால்

    அவர்மனமும் மகிழ்ச்சியுறும்

    பிடித்தமுடன் நடந்துகொள்ளின்

    பெரும்பாலோர் மகிழ்வுறுவர்

    அர்த்தமுடன் நாம்பழகி

    அனைவருமே மகிழ்ந்திடுவோம் !

     

    மற்றவரை மதித்துநின்றால்

    மகிழ்வுந்தன் கூடவரும்

    பெற்றவரை பேணிநின்றால்

    பெருமகிழ்ச்சி பெருகிவரும்

    கற்றவரைச் சேர்ந்துநின்றால்

    காலமெல்லாம் மகிழ்ச்சிவரும்

    கயவர்தமை ஒதுக்கிவிட்டால்

    கண்டிடலாம் மனமகிழ்ச்சி !

     

    நல்லநட்பு எப்போதும்

    நல்மகிழ்ச்சி நல்கிநிற்கும்

    பொல்லாத நட்பினால்

    பொசுங்கிவிடும் மகிழ்ச்சியெலாம்

    எல்லையில்லா மகிழ்ச்சிபெற

    எல்லோரும் விரும்புகிறோம்

    இறைவனிடம் சரணடைந்தால்

    என்னாளும் மகிழ்ச்சியன்றோ !

    Share
  • தினமுமே மகிழ்ந்திடலாம் !

      ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

    அளவுடனே உணவுண்டால்

    ஆரோக்கியம் அமைந்துவிடும்

    அளவுமீறி ஆகிவிடின்

    அனைத்துமே அழிந்துவிடும் !

     

    வாழ்வதற்கும் பணந்தேவை

    பணம்மட்டும் வாழ்வல்ல

    பணமெண்ணி வாழ்ந்துவிடின்

    பாழாகும் வாழ்க்கையது !

     

    படிக்கவேணும் வாழ்க்கையிலே

    பலவற்றை யாவருமே

    பட்டம்மட்டும் வாழ்வல்ல

    பண்பும்சேர்ந்து வரவேணும் !

     

    கோவிலுக்குப் போகவேணும்

    குறைசொல்லல் தவிர்க்கவேணும்

    பாவம்பற்றி எண்ணாமல்

    பலருக்கும் உதவவேணும் !

     

    மூத்தோரை வாழ்க்கையிலே

    முதலிடத்தில் வைக்கவேணும்

    ஆத்திரத்தை அடக்கிவிடின்

    அமைந்துவிடும் நல்லவாழ்வு !

     

    பொய்யென்னும் வார்த்தையினை

    பொசுக்கிவிட்டு வாழவேணும்

    மெய்யாக வாழ்ந்துவிடின்

    மேதினியே மகிழ்ந்துவிடும் !

     

    முன்னோர்கள் மொழிந்தவற்றை

    பொன்னாகக் கொள்ளவேணும்

    எம்மாலே இயன்றவரை

    எல்லோர்க்கும் உதவவேணும் !

     

    யார்மனதும் நோகாமல்

    நாமிருந்தால் நலன்பயக்கும்

    ஊருலகம் பழிப்பவற்றை

    ஒதுக்கிவிட்டால் உயர்வுவரும் !

     

    அப்பாவை அம்மாவை

    அழவிடுதல் முறையல்ல

    அவராசி கிடைப்பதுவே

    அனைவருக்கும் வாழ்வாகும் !

     

    மனம்மகிழ வாழ்வதற்கு

    வழிகள்பல இருக்கிறது

    தேர்ந்தெடுத்து வாழுங்கள்

    தினமுமே மகிழ்ந்திடலாம் !

     

    Share
  • சுகமுடன் என்றுமே வாழலாம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    சிரிப்பு ஒரு மருந்து

       தினமும் அதைநீ அருந்து

      அகத்தில் சிரிப்பு எழுந்தால்

      முகத்தில் சிரிப்பு மலரும் !

     

      குழந்தைச் சிரிப்பு குதூகலம்

      குருவின் சிரிப்பு பெருமிதம்

      தந்தை சிரிப்பு மனநலம்

      தாயின் சிரிப்போ தனித்துவம் !

     

     நட்பின் சிரிப்பு நற்கொடை

     நாட்டின் சிரிப்பு விடுதலை

     கற்பின் சிரிப்பு கண்ணகி

     கயவர் சிரிப்போ காரிருள் !

     

     அஹிம்சையின் சிரிப்பு காந்தியில்

     ஆன்மீகச் சிரிப்பு ரமணரில்

     மெளனத்தின் சிரிப்பு புத்தரில்

     வாழ்விலே சிறந்திடச் சிரித்திடு !

     

    ஆணவச் சிரிப்பு அழிவினில்

    ஆத்திரச் சிரிப்போ கொலையினில்

    நீதியின் சிரிப்பு தண்டனை

    நிம்மதி வேண்டினால் சிரித்திடு !

     

    பக்தியின் சிரிப்பு பக்குவம்

    பாவத்தின் சிரிப்பு  தண்டனை

    சத்தியச் சிரிப்பே உத்தமம்

    சாந்தியாய் இருந்திடு சிரித்திடு !

     

    நித்தமும் வாழ்க்கையில் சிரித்துநில்

    நிம்மதி உன்னிடம் வந்திடும்

    சொத்தென சிரிப்பினை நினைத்திடு

    சுகமுடன் என்றுமே வாழலாம் !

     

    Share
  • காத்துவிட வருவீரா !

     எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    வீரத்துறவியே நெஞ்சிலே ஆன்மீக

    சாரத்தை நிறைத்தவரே

    பாருக்கு வேராகி பக்குவத்தை

    ஊருக்கு உரைத்தவரே

    ஞானத்தின் திருவுருவே வாழ்வில்

    மோனத்தைக் கண்டவரே

    நால் வேதத்தை உள்வாங்கி

    நல்வாழ்வுக்கு அளித்தவரே !

     

    பாரதத்தாய்  ஈன்றெடுத்த பண்புளமே

    பார்வியக்க பலபகன்ற பகலவரே

    ஊரலைந்து நெறிவளர்த்த உத்தமரே

    உண்மையினை உணரத் துடித்தவரே

    சீரான குருதேடித் திருந்தவரே

    சிறப்புடனே உபதேசம் பெற்றவரே

    பாரைவிட்டு விரைவாக சென்றவரே

    பார்பிழைக்க அழைக்கின்றோம் வருவீரா !

     

    சமயநெறி அத்தனையும் பார்த்துவிட்டு

    சரியான நெறிதேர்ந்து சொன்னவரே

    சராசரி சாமியார் தமைவெறுத்து

    சன்மார்க்க தொண்டனாய் நின்றவரே

    உலகினுக்கு புதுக்கருத்தை உரைத்தவரே

    ஒவ்வாத அத்தனையும் வெறுத்தவரே

    நிலவுலகில் நிலையாக நிலைத்தவரே

    நீழ்புவியை காத்துவிட  வருவீரா !

    Share
  • கண்டிடுவாள் கண்ணனையே !

    எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

              பத்தியம் இருந்தும் பலவிரவு விழித்திருந்தும்

              நித்தமே தன்பிள்ளை நினைவாக மனமிருத்தி 

              எத்தனையோ வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டும்

              பெத்தெடுப்பாள் பிள்ளைதனை பிரியமுடன் பேரன்னை !

     

              பேச்சுவரா நிலையினிலும் பேசவைப்பாள் பேரன்னை

              மூச்சுவிடும் முகம்பார்த்து முறுவலிப்பால் பேரன்னை 

              ஆச்சரியம் எனநினைப்பாள் அவள்பிள்ளை அழகினையே

              அப்பிள்ளை ஆனந்தம் அவளுக்கே அருமருந்தாம் !

     

              உச்சிமுதல் கால்பார்த்து உள்ளமெல்லாம் பூரிப்பாள்

              இச்சையுடன் இறுகணைத்து எப்போதும் கொஞ்சிடுவாள் 

              பச்சைநிற உடையுடுத்தி பார்த்திடுவாள் கண்ணனென

              மெச்சியார் பேசிடினும் மெய்மறப்பாள் பேரன்னை !

     

              பட்டுமெத்தைக் கன்னத்தைப் பார்த்தபடி அவளிருப்பாள்

              தொட்டுதொட்டு அதைத்தடவி துன்பமெலாம் மறந்திடுவாள்

              நட்டநடு நெற்றிதனில் வட்டமாய் பொட்டுவைத்து

              கிட்டநின்று ரசித்தபடி கிழுகிழுப்பாள் பேரன்னை ! 

     

             கிருஷ்ண ஜயந்திதனில் கிருஷ்ணனே எனநினைத்து

             கிங்கிணி சதங்கைகட்டி கிரீடமும் தலைவைப்பாள்

             தன்பிள்ளை காலடியின் தடம்பதிப்பாள் வீடெல்லாம்

             தன்வீடு வந்துவிட்டான் கண்ணனென்பாள் பேரன்னை !

     

            புல்லாங்குழல் கொடுப்பாள் புதுச்சட்டை போட்டிடுவாள்

            எல்லோரும் வருகைதர எடுத்திடுவாள் விழாவங்கு 

            நல்லசேதி தருவதற்கு கண்ணன்வந்தான் எனச்சொல்லி

            நயமுடனே தன்பிள்ளை கால்தடத்தைக் காட்டிநிற்பாள் !

     

            பார்த்தவர்கள் பரவசத்தால் பலவற்றைப் பகர்ந்தவுடன்

            வேர்த்துநிற்கும் பிள்ளைதனை விருப்புடனே தூக்கிவந்து 

            பார்த்திடுங்கள் கண்ணனையே பகர்ந்திடுங்கள் விருப்பமெலாம்

            கேட்டவுடன் கொடுத்திடுவான் இப்பொழுதே கண்ணனென்பாள் !

     

            பிள்ளையைக் கண்ணனாய் கண்டுநிற்கும் பேரன்னை

            உள்ளமெலாம் பக்தியது ஊற்றெடுத்தே வந்துநிற்கும் 

            கள்ளமனம் கரைந்துவிட கண்டிடுவாள் கண்ணனையே

            மெல்ல அவள்பிள்ளை விரும்பிடுவான் அவள்வழியே !

     

    Share
  • நாம் நினைப்போம்! 

    எம். ஜெயராமசர்மாமெல்பேண், அவுஸ்திரேலியா

    உள்ளத்து உணர்வுகளை உலகினுக்கு எடுத்துரைக்கும்
    கள்ளமில்லா மனமுடயார் கவிதைகள்தாம்
    வாழ்கிறது
    வள்ளுவரின் கவிதையின்று வையகத்தில்
    நிலைப்பதற்குக் கள்ளமில்லா அவர்மனமே காரணமாய் ஆகியதே!

    எல்லோரும் வள்ளுவராய் இருந்துவிட முடிவதில்லை
    என்றாலும் இயன்றவரை ஏற்றதையே எடுத்துரைப்பார்
    நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நாளுமவர் தந்துவிடின்
    நாட்டிலுள்ளார் மனங்களிலே நன்மதிப்பைப் பெற்றிடுவார்!

    சங்ககாலக் கவிதையெலாம் நாம்படித்துப் பார்த்துவிடின்
    இங்கிதமாய்ப் பலகருக்கள் இருப்பதையும் உணர்ந்திடலாம்
    எங்களது தமிழ்மொழியின் மங்காத செல்வங்களாய்
    இருக்குமந்த அருமையினை எல்லோரும் அறிந்திடலாம்!

    சொற்சுருக்கம் சுவைநுணுக்கம் அத்தனையும்
    அரவணைத்துச் சுந்தரத்தமிழ் கொண்டு செப்பிநின்ற கவிதையது
    இப்பொழுது அவையாவும் எல்லோரும் படிக்காமல்
    எம்மேக்கும் பீயேக்கும் எடுக்கின்றார் படிப்பதற்கே!

    பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற பாடமாய்ப்
    பண்டிதர்க்கும் புலவர்க்கும் பரீட்சிக்கும் புத்தகமாய்ப் பண்டைத் தமிழிலக்கியங்கள் இருக்கின்ற
    பாங்கினையே
    பார்க்கின்றோம் எனநினைக்கில் பரிதாபம் எழுகிறது!

    சங்கத் தமிழ்படித்தால் சரியான கவிதைவரும்
    பொங்கிவரும் தமிழுணர்வைப் புதுவழியில் செலுத்திடலாம்
    கவிதையெனும் பெயர்சூடி வருகின்ற கவிதையெலாம்
    காலமென்னும் வரலாற்றில் காணாமல் போய்விடுமே!சாகாத இலக்கியங்கள் நாம்படைக்கத் தேவையில்லை

    மனம்நோவாத இலக்கியங்கள் படைத்துவிட
    நினைத்திடுவோம்
    வாழ்நாளை வளமாக்கும் வகையிலே படைத்துவிடின்
    வரவேற்று அனைவருமே வாரியே அணைத்திடுவார்!

    புழுதியிலே புரளுகின்ற இலக்கியங்கள் புறந்தள்ளிப்
    பழுதில்லா வகையான இலக்கியங்கள் படைத்தளிப்போம்
    நிலவுலகில் யாவருமே நினைந்துநிற்கும் வகையினிலே
    நலமுடைய இலக்கியங்கள் படைதளிக்க
    நாம் நினைப்போம்!

     

     

    Share
  • தெய்வமே தாயாவாள்!

     

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     

    jayaramasarama

     

    பூமியில் பிறந்தமுதல் பூமிக்குள் போகும்வரை
     தான்பெற்ற பிள்ளைக்காய்த் தனையிழப்பாள் தாயாவாள்
     சேயதனின் வாழ்வினுக்காய்ச் செலுத்திடுவாள் தன்னலத்தைப்
    பூதலத்தில் தெய்வமாய்ப் பொலிந்திடுவாள் தாயாவாள்
    ஆரென்ன சொன்னாலும் அதைமனத்தில் ஏற்றாமல்
    பேரெடுத்துப் பிள்ளைவாழ பெரும்பொறுப்பைத் தான்சுமந்து
    ஊருணரச் செய்துநிற்பாள் உண்மையிலே தாயாவாள்!

     நிலத்திலே வந்தபிள்ளை மலத்திலே கிடந்தாலும்
     மனத்திலே மகிழ்ச்சியுடன் அதைச்சுத்த மாக்கிநின்று
     கலத்திலே சோறிருந்தும் கவனமதில் கொள்ளாமல்
     அணைத்துமே மகிழ்ந்திடுவாள் அருமைமிகு தாயாவாள்!
     மார்பணைத்துப் பால்கொடுக்கும் தாயவளின் மார்புதன்னை
    நோவெடுக்கக் கடித்தாலும் நோவாகாக எடுக்கமாட்டாள்
    நீரருந்தி மோரருந்தி நீண்டநேரம் தான் இருப்பாள்
    தன்பிள்ளைப் பசிபொறுக்காள் தயவான தாயாவாள்!

    காய்ச்சலிலே தானிருப்பாள் களைப்புவந்து தான்படுப்பாள்
    ஆசையுடன் பிள்ளைதனை அரவணைத்தல் தவிர்த்துவிடாள்
    மூச்செல்லாம் முழுவதுமாய்ப் பிள்ளையிடம் தானிருக்கும்
    பேச்செல்லாம் பிள்ளையன்றிப் பிறிதறியாள் தாயாவாள்!
    கண்கலங்கிப் பிள்ளைகாணின் கதிகலங்கிப் போய்விடுவாள்
    உண்ணாமல் உறங்காமல் உயிர்கொடுத்தும்
    காத்திடுவாள்
    கருவுற்ற நாள்முதலாய்க் கையில்பிள்ளை வரும்வரைக்கும்
    கடவுளினை வேண்டிநிற்பாள் கருணைநிறை தாயாவாள்!

    பிரசவத்தில் அழுதிடுவாள் பெருந்துன்பம் கண்டிடுவாள்
    பிள்ளையது முகங்காணின் பெருமகிழ்வு எய்திடுவாள்
    காலமெல்லாம் தானழுவாள் கவலையெலாம் தான்சுமப்பாள்
    ஞாலமதில் பிள்ளையினைத் தாங்கிநிற்பாள் தாயாவாள்!
    அழுதழுதுப் பிள்ளைபெற்றும் ஆனந்தம் தானடைவாள்
    ஆனாலும் பிள்ளைதனை அழுவதற்கு விடமாட்டாள்
    ஒருபொழுதும் தன்னலத்தை உயர்த்திவிட எண்ணமாட்டாள்
    முழுமனதும் பிள்ளையிடம் கொடுத்துநிற்பாள் தாயாவாள்!

    பிள்ளைவளர்ந் தாளாகிப் பெரியநிலை அடைந்தாலும்
    உள்மனமோ பிள்ளையிடம் ஓடியே நின்றுவிடும்
    பிள்ளைதாயைப் பாராமல் பேசாமல் இருந்திடினும்
    கள்ளமில்லா அன்புதனைக் காட்டிநிற்பாள் தாயாவாள்!
    பால்கொடுப்பாள் தாயாவாள் பசிதீர்ப்பாள் தாயாவாள்
    நோய்தடுப்பாள் தாயாவாள் நுடங்கிவிடாள் தாயாவாள்
    வேர்விட்டு வளர்வதற்கு வித்தாவாள் தாயாவாள்
    மேதினியில் நாம்காணும் தெய்வமே தாயாவாள்! 

     

     

     

    Share
  • வாழ்வதற்கு வழிசமைப்போம்!

    –எம். ஜெயராமசர்மாமெல்பேண், அவுஸ்திரேலியா

     

    jayarama sarma 

    காந்திமகான் எனும்பெயரில் வந்துநின்ற பெருவெளிச்சம்
    கருமைநிறை அடிமைத்தனம் கழன்றோடச் செய்ததுவே
    வெள்ளையரை விரட்டிவிட்டு விடிவுவந்த பாரதத்தில்
    கொள்ளையரை விரட்டிவிட வருவாரா காந்திமகான்?

    உண்ணாத நோன்பிருந்து உயிருடனே வதைப்பட்டும்
    கண்ணான சுதந்திரத்தைக் கண்டுவிடப் பாடுபட்டார்
    மண்மீது மனிதர்க்கு மானமுடன் சுதந்திரமும்
    என்றுமே தேவையென எண்ணிநின்றார் காந்திமகான்!

    காந்தியது சாத்வீகம் கண்டுநின்ற வெற்றியினால்
    கணக்கற்றோர் காந்திய வழிநடக்கப் புறப்பட்டார்
    தேசமதைச் சிந்தைவைத்துச் சிறைசென்றார் பலபேரும்
    தேசப்பிதா காந்திமகான் தெய்வமென உயர்ந்துநின்றார்!

    காந்திமகான் எழுச்சியினால் கதிகலங்கி நின்றார்கள்
    சாந்தி சமாதானம்பற்றிச் சற்றுமவர் சிந்தித்தார்
    அன்னியமாய் இருந்தாலும் அவர்சற்று யோசித்தார்
    ஆதலால் காந்திவழி அவர்மனதை மாற்றியதே !

    வெள்ளையனை வெளியேற்றி வெற்றிக்கொடி பறக்கவிட்டு
    விரும்பிநின்ற சுதந்திரத்தை விருப்புடனே மனமேந்தி
    நல்லதொரு பாரதத்தை நாம்வளர்ப்போம் எனவெழுந்து
    நாளுமே பாரதத்தின் நலங்கெடுத்தல் முறையாமோ?

    பாரதத்தில் பலரிஷிகள் பலசமயப் பெரியோர்கள்
    வேறிடத்தில் இல்லாத அளவினிலே வெளிப்பட்டார்
    ஆனாலும் பாரதத்தில் அரக்ககுணம் மிகுந்தோரால்
    நாளாந்தம் சுதந்திரத்தை நாமிழத்தல் நடக்கிறதே !

    விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் மேலோங்கி வளர்கிறது
    அஞ்ஞானம் மிக்கோரும் அதைத்தாண்டி வருகின்றார்
    அருமைமிகு சுதந்திரத்தை அநுபவிக்க வாய்ப்பின்றி
    அமைந்துவரும் சூழலினை ஆர்வந்து தடுத்திடுவார்?

    ஊழலும் மதுவும்சேர்ந்து உழைப்பவர் நிலையை மாற்றி
    நாளுமே நொடிந்துவாழ நாட்டிலே நிலமையாச்சு
    ஆழமாய் எண்ணிப்பார்க்கின் அனைவரும் இணைந்தேநின்று
    ஊழலும் மதுவும்போக உழைத்திடுவோமே வாரீர்!

    பஞ்சமொடு பசியும் பலநோயும் ஒழியவேண்டும்
    அஞ்சிகின்ற மனநிலையை அகற்றியே விடவேண்டும்
    நஞ்சுநிலை நினைப்பையெலாம் நார்நாராய்க் கிழித்தெறியின்
    நல்லதொரு சுதந்திரத்தை நாமென்றும் சுவாசிப்போம்!

    அணிவகுப்பு, கொடியேற்றம் அதுவல்ல சுதந்திரமாம்
    அறம்சார்ந்த அத்தனையும் நிலம்காணல் சுதந்திரமே
    வளம்காண வேண்டுமெனின் வணங்கிடுவோம் சுதந்திரத்தை
    வாழ்வினிலே சுதந்திரமாய் வாழ்வதற்கு வழி சமைப்போம்!

     

     

    Share
  • ஆனந்த யாழுக்கு  அஞ்சலி!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

     

    na-muthukumar

    காஞ்சியில் பிறந்து கவிதையில் நுழைந்து ஆண்டுகள் குறுகி அமரராய் விட்டாய். பாரதிவழியில், பட்டுக்கோட்டையார் வழியில் பாவலனாய் மிளிர்ந்து பாதிவழியில் போய்விட்டாய். குறுகிய காலத்தில் அறிவுடன் எழுதி அடையாளமாகி நின்றாய். ஆனந்தயாழும், அழகு அழகும் உன்னைத் தேசியக் கவிஞனாக்கிப் பரிசினைப் பெற்றுத்தந்தது. ஆயிரம் பாடலுக்கு மேலெழுதி அனைவரின் அகத்திலே அமர்ந்துவிட்டாய்.

    மரணம் பற்றிய வதந்தி பாடிய நீயோ இன்று அதற்குள் அகப்பட்டுக்கொண்டாய். முத்துக்குமார் என்னும் உடம்புதான் அழிகிறதே அன்றி முத்துக்குமாரின் உணர்வுகள் சாகாவரம் பெற்று நிற்கின்றன. கவிஞனுக்கு மரணமே இல்லை. என்றாலும் உனது கவிமுகத்தைக் காணமுடியாதே…என்னும் கவலையால் யாவரும் கண்கலங்கி உனது பிரிவுக்கு இரங்கல் கூறி ஏக்கமாய் நிற்கின்றோம்!

    ***

    மரணம் பற்றிய வதந்தி!               

    திருஷ்டி கழிந்தது என்றார்கள்
    தீர்க்காயுசு என்றார்கள்
    படபடத்தோம் என்றார்கள்
    எப்போதோ எழுதிய
    என் கவிதையைச் சொன்னேன்
    இறந்து போனதை
    அறிந்த பிறகுதான்
    இறக்க வேண்டும் நான்.

    [நா. முத்துக்குமாரின் கவிதை]

     

    Share
  • மாக்கருணைக் கொடையன்றோ !

              எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    புலம்பெயர்ந்து சென்றாலும் புறப்பட்டு வந்திடுவார்

    நலம்கிடைக்கும் நல்லூரான் நற்றிருவிழா காண்பதற்காய்

    புலனைந்தும் தனைமறந்து புத்துணர்வு பெற்றுநிற்கும்

    புதுமையினைப் பெற்றுவிட புறப்படுவார் அன்பரெலாம் !

     

    வெள்ளைமணல் வீதியிலே விரதமுடன் அடியார்கள்

    உள்ளமெலாம் உருகிநிற்க உருக்கமுடன் பாடிநின்றி

    கள்ளமெலாம் களைந்துவிடு கந்தாவென அழைத்து

    நல்லதமிழ் பாடிநிற்பார் நல்லூரான் சன்னிதியில் !

     

    நாகரிகம் வந்தாலும் நல்லூரான் கோவிலிலே

    நல்லதமிழ்ப் பண்பாடே நாளுமே மிளிர்ந்துநிற்கும்

    நோயகல வீனைதீர நூறுமுறை அடியழித்துக்

    காதலுடன் நல்லூரான் காலடியைப் போற்றிநிற்பார் !

     

    முத்தமிழைத் தந்தகந்தன் அத்தமிழைக் கேட்பதற்காய்

    எத்திக்கும் எதிரொலிக்கும் எழில்கொஞ்சும் எங்கள்தமிழ்

    தமிழ்கேட்ட அனைவருமே தமைமறந்தே இருப்பார்கள்

    இவையாவும் நல்லூரான் இருப்பிடத்தின் பெருமையன்றோ !

     

    துறைதோய்ந்த நல்லறிஞர் துணிவுநிறை இளையோர்கள்

    அவையேறித் தமிழ்சாற்றி அனைவருக்கும் விருந்தளிப்பார்

    மறையுடனே திருமுறையும் மனம்சிறக்கச் செய்துநிற்கும்

    மங்கலங்கள் நல்லூரான் மாக்கருணைக் கொடையன்றோ !

     

    நல்லூரை நினைத்துவிடின் நம்மனத்தில் மாற்றம்வரும்

    எல்லாமே எங்களுக்கு இறையெனவே எண்ணவரும்

    நல்லசித்தர் பரம்பரையே நல்லூரில் உருவாச்சே

    நாமுமங்கு சென்றுவிடின் நாளுமே நன்மைவரும் !

     

     

    Share
  • வள்ளுவமும் வாழ்வியலும் !

    எம். ஜெயராமசர்மா, B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS

    கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர்

    மெல்பேண் . அவுஸ்திரேலியா

     

    வள்ளுவத்தின் சிறப்பு

    தமிழிலே தோன்றிய பல நூல்கள் வாழ்வியலைப் பற்றிய கருத்துக்களை பலவாறு எடுத்துக் காட்டிருக்கின்றன. அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையான தாகவோ எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான், திருக்குறளை நாம் கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.வாழ்வியல் சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் ஒன்றே முன்னுக்கு நிற்கிறது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

    நூல்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம். அந்தக் காலத்துக்கு ஏற்றவை, எக்காலத்துக்கும் ஏற்றவை என்று வகைப் படுத்தலாம். இதே வேளை நூல்களைக் கற்கும் வகையிலும் இருவகைப் படுத்தலாம். முதாலாவது எழுதிய காலத்துக்கே சென்று கற்பது. மற்றையது வாழும் காலத்திற்கு வந்து கற்பதாகும். இந்த வகையில் வள்ளுவமானது வாழும் காலத்திலேயே கற்கும் நூலாக விளங்குகின்றது. ஆகையால் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நூலாக விளங்கும் பெருமையைப் பெற்றிருக்கிறது.

    திருக்குறள் தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது என்பதை எவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அந்த அளவுக்கு அதன் அமைப்பும், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன.

    பகவத்கீதை வாழ்வுக்கு வழிகாட்டி தான். திருக்குரான் வாழ்வியலைக்  காட்டும் கருத்துக்கள் கொண்டது தான். பைபிளில் கூட வாழ்வியல் கருத்துகள்  காணப்படுகிறது. ஆனால் இவையாவும் சமயம் சார்ந்தனவாக இருக்கின்றன. கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது தான் வள்ளுவம்.

    ஆகவே தான் திருக்குறள் எந்தவிதச் சமயச் சார்பும் கலவாத சமுதாயச் சிந்தனை மிகுந்த நூலாக இருக்கிறது. கூறப்படும் சிந்தனைகளும் யாராலும் கூறப் படாதனவாகவும், புரட்சிகரமானதாகவும்,புதுமையானதாகவும் இருக்கின்றன.

    ஒருநூல் எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் சில காலத்துக்கு மட்டுமே பொருந்துவதாகவே பெரும்பாலும் இருக்கும். சில வேளை எழுதப்பட்ட காலத்தோடே அக் கருத்துக்களும் வலுவிழந்தும் கூடப் போய்விடலாம். அப்படியான நூல்கள் நிலைத்து நிற்பது என்பது கடினமானதாகவே இருக்கும். ஆனால் எழுந்த காலம் தொடக்கம் இன்று வரை ஏன் இன்னும் பல காலங்களுக்கும் நிலைத்து நிற்கும் அளவுக்குச் சிந்தனைக் கருவூலங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருமை  திருக்குறள் நூல் பெற்றிருப்பதால் தான் அது வாழும் நூலாக வாழ்வியலைக் காட்டும் நூலாக இருக்கிறது என்பதை யாவருமே ஏற்றுக் கொள்வார்கள்.

    உண்டோம், உடுத்தோம், உறங்கினோம் , என்பது வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்பது இவற்றுடன் அடங்கி விடுகிறது என்னும் அபிப்பிராயம் பெரும்பாலும் நம்மிடையே காணப்படுகிறது. விலங்களும் சாப்பிடுகின்றன. உறங்கிவிடுகின்றன. நாமும் அப்படியிருந்தால் அதன் அர்த்தம் தான் என்ன? மனிதன் என்றால் அவன் சிந்திக்கத் தெரிந்தவன்.பகுத்தறியும் தன்மை பெற்றவன். அவன் வாழ்வும் விலங்கு வாழ்வும் ஒன்றாகுமா?

    எனவே மனிதனது வாழ்வு இப்படித் தான் வாழவேண்டும்  என்னும் நிலைக்குள் இருந்துவிட்டால் தான் அங்கு வாழ்வியலைப் பார்க்கமுடியும். இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குப் பல வழிகளைத் தேர்ந்து அவற்றை வழங்கி நிற்பதால் தான் வள்ளுவம் மிகச் சிறந்த வாழ்வியல் நெறியாகி நிற்கிறது எனலாம்.

    வள்ளுவம் காட்டும் வழிகளை உலகிலுள்ள அனைவரும் கடைப்பிடித்தால் மிகவும் உன்னதமான வாழ்வு அவர்களுக்குக் கிடைத்து விடும். யாவரும் அறத்தின் வழியில் வாழுதல்  வேண்டும். அறத்தின் வழியில் பொருள் தேடுதல்வேண்டும். அறத்துடன் அன்பினையும் இணைக்க வேண்டும். அறமும் அன்புமும் இணையும் வேளை அத்துடன் ஒழுக்கத்தையும் சேர்த்துவிடல் மிகவும் முக்கியம் என்பது தான் வள்ளுவத்தின் தத்துவம்.

    வாழ்வியல் முறைகள்

    எப்படியும் வாழலாம் என்று மனம்போன போக்கிலே வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்க்கையாக இருந்து விடாது. வாழ்வென்றால் அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். குறிக்கோள் அற்ற வாழ்க்கை குருட்டு வாழ்க்கையாகும். சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வரப் பிரசாதமாகும். பகுத்தறியும் பாங்கு என்பது மனிதனை மாநிலத்தில் உயர்த்தி வைப்பதற்குக் காரணமாய் இருக்கின்றது.

    விலங்காக  மனிதன் விலங்குகளுடன் காட்டில் இருந்த நிலையைக் கடந்து நாட்டில் நாகரிகமாக வாழும் நிலைக்கு வந்து விட்ட பின்னரும் கூட மனிதனாக வாழ எண்ணா விட்டால் மனித வாழ்வுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் அல்லவா?  எனவே கல்வியறிவு என்பது வாழ்வியலின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது.

    இதனை வள்ளுவம் மிகவும் அழகாக எடுத்துச் சொல்லுகிறது.

      ” எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

         கண் என்ப வாழும் உயிர்க்கு”

      “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

        புண்ணுடையர் கல்லா தவர்”

    தனது அறிவாலும், நூல் அறிவாலும் நுனித்து அறிய வேண்டும். முதற் குறளில் எண் என்பதனை தன்னறி வென்றும் எழுத்து என்பதனை  நூல் அறிவு என்றும் எடுத்துக் கொண்டால் யாவருக்கும் வள்ளுவம் கூறும் பொருள் இலகுவில் புரிந்து விடும். எனவே தன்னறிவும் நூலறிவும் கல்வியால் வருகின்றதை நயமாகக் காட்டும் வள்ளுவம் வழிகாட்டிதானே!

    கல்வி கற்கா விட்டால் கண்கள் இருந்தும் அந்தக் கண்கள் பயனற்ற வாகிவிடும் என்பது இரண்டாம் குறளால் உணர்த்தப்படுகிறது. கண்களால் பொருள்களைப் பார்க்கவே முடியும். ஆனால் பார்க்கப் படுகின்ற பொருளைப் பற்றி அறியவேண்டு மானால் அங்கே அறிவு தேவைப்படுகிறது. அதனைப் பெறுவதற்கு யாவரும் கற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கண்ணிருந்தும் விஷயங்களை அறியும் ஆற்றல் இல்லா விட்டால் அது புண்தானே என்று புரிய வைக்கும் வள்ளுவத்தின் பாங்கு தான் அதன் வெற்றி யெனலாம்.

    வாழ்க்கையின் அத்திவாரம் கல்வியாக இருப்பின் அந்தச் சமூகம் தலைநிமிர்ந்த வாழ்க்கையினை வாழும். அறிவு என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். அதனை வளர்ப்பதற்குக் கற்றல் மிகவும் தேவையானதாகும். கற்கக் கற்க அறிவானது பெருக்கெடுத்துக் கொண்டே வரும்.

          “தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்கு

           கற்றனைத்து ஊறும் அறிவு “

    கல்வியை ஒருதரம் நாம் கற்று விட்டோமேயானால் அந்தக் கல்வியானது நம்முடன் சேர்ந்து ஏழேழு பிறவிக்கும் வரும் என்று துணிவாகச் சொல்லி கற்பதை இலட்சியமாக்குங்கள் என வள்ளுவம் செப்பி நிற்கிறது.

     “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்க

     எழுமையும் ஏமாப்பு உடைத்து”

    இது மாத்திர மல்ல கல்வியானது என்றுமே அழிவில்லாத செல்வமாகி நிற்கும். மற்றய செல்வங்கள் வராவிட்டாலும் கல்விச் செல்வமானது நம்முடன் வந்தே நிற்கும் அருமையும், பெருமையும் மிக்கது என்பது வள்ளுவத்தின் கருத்தாகும்

     “கேடில் விழுச்செல்லவம் கல்வி ஒருவற்கு

        மாடல்ல மற்றை யவை”

    மனிதன் மனிதனாக வாழ சிறந்த வாழ்வியல் என்பதை அடையக் கற்றல் என்பது எல்லோருக்கும், எங்கும், எச்சமூகத்துக்குமே தேவை என்பது வள்ளுவத்தின் கொள்கை எனலாம்.

    ஏன் கற்கவேண்டும்? கல்லாதவர்கள் வாழவில்லையா? குழந்தை பெற்றுக் குடும்பம் நடத்த வில்லையா? உயிரோடு இருக்க வில்லையா? என்றெல்லாம் விவாதங்கள் செய்யலாம். இதற்குச் சரியான பதிலையும் வள்ளும் வைத்திருக்கிறது.

     “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

        கற்றாரோடு ஏனை யவர்”

    விலங்குகள் கற்பதில்லை. அறிவுவளர்சி அற்றன. ஆனால் மனிதனோ அறிவுவளர்ச்சி உடையவன். மக்கள் மக்களாக வாழவேண்டும் என்றால் கல்வியறிவு முக்கியமாகும். உடல்வளர்ச்சி பெற்றுவிட்டால் வாழ்வுவாழ்வாகிவிடாது. அவ்வாறு வாழ்வது விலங்கு வாழ்க்கையே ஒக்கும்.  எண்ண வளர்ச்சிக்கு உரிய நூலறிவு தான் மனிதனை மனிதனாக்கும் என்று வள்ளுவம் சொல்லுகின்றது.

    வள்ளுவத்தின் தனித்துவம்

    அறநூல்கள் பல வந்திருக்கின்றன. அவையாவும் சமயம் சார்ந்ததாகவும்,  தாம் கூறும் அறக் கருத்துக்களை மட்டுமே முக்கியமாகக் கொள்ள வேண்டும் என்னும் தன்மையினவாகவுமே இருந்திருக்கின்றன. இதனால் இவைகள் நல்ல பல கருத்துக்களைச் சொன்னபோதும் அவற்றை மனித அன்றாட நடைமுறைகளுடன் இணைத்து அவற்றை வாழ்வியல் நெறியாக்கும் பாங்கினைப் பெற்று விட வில்லை என்று தான் கொள்ள முடிகிறது. ஆனால் வள்ளுவம் இந்த வகையில் தனித்துவம் பெற்றதாக நிற்கிறது. அறக் கருத்துக்களைத் தாங்கி நின்றாலும் அது எந்தச் சார்பும் அற்றதாகவும் , நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் அமைந்து விடுகிறது. எனவே வள்ளுவம் வாழ்வியல் நூலாகவே விளங்குகிறது. அறநூல் என்பது வேறு. வாழ்வியல் நூல் என்பது வேறு. வள்ளுவம் வாழ்வியல் நூலாக மிளிர்வதனால்  தான், இனம் கடந்து, மொழி கடந்து, நாடு கடந்து, யாவருக்கும் ஏற்றதாக இருக்கிறது என்பது இங்கு நாம் எல்லோரும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். உலகத்திலே இருக்கின்ற அனைவருக்கும் கல்வி முக்கியமானது. அதனை எவரும் தேவையற்றது என்று சொல்லவே மாட்டார்கள். அதே வேளை பொருளும் இன்றியமயாததுதானே! அந்தப் பொருளோடு அறமும் சேர்ந்துவிட்டால் மிகவும் சிறப்பாகவும் இருக்குமல்லவா? இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக ஒழுக்கம் தேவைதானே ! இதுதானே உண்மையான வாழ்வியல் தத்துவம். இதைத் தானே வள்ளுவமும் சொல்லி நிற்கிறது.

    உலகத்திலே கொலை , களவு, கள், காமம், பொய்  இவைகள் இல்லாமல் போகுமானால் அந்த இடம் சொர்க்கமாகத்தானே இருக்கும் ! அப்படி அமைய வேண்டும் என்று வள்ளுவம் ஆசைப்பட்டது. அப்படியான இடத்தில் வாழும் வாழ்வையே “வையத்துள் வாழ்வாங்கு வாழுதல் ” என்று வள்ளுவம் கனவு கண்டது.

    மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அவன் தன்னிலையை உணருதல் அவசியமானதாகும். அதற்கு  நிதானமே மிகவும் முக்கியமானதாகும். நிதானம் தவறினால் யாவுமே போய்விடும். நிதானத்தை இழக்கச் செய்வது ” கள் ” ஆகும். இந்தக் கள்ளினால் கொலைவரும், களவுவரும் , கூடவே காமமும் பொய்யும் இணைந்தே வந்துவிடும் என்பது வள்ளுவத்தின் அடிப்படையாகும். இவைகள் யாவும் இணைகின்ற பொழுது வாழ்வியலே கேள்விக்குறியாகி விடும்! ஆகவே மூலகாரணமாக  இருக்கின்ற கள்ளினை முதலில் கைவிடுதல் மிகவும் அவசியம் என்பதை வள்ளுவம் வலியுறுத்தி நிற்கிறது.

              “உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்

              கட்காதல் கொண்டொழுகு வார்”

    கள்ளைக் குடித்தால் மதியை இழக்க நேருவதோடு, இருக்கின்ற பொருள்களோ வலிமையோ எதுவுமே பயனற்ற தாகிவிடும். அது மட்டுமல்ல பெரியவர்கள் கூட குடித்தவர்களை மனிதர்களாகவே மதிக்கவே மாட்டார்கள். எதிரிகள் கூட பயப்படாத நிலையினையும் கூட குடியானது ஏற்படுத்தி விடும் என்று வள்ளும் அறிவுறுத்தி நிற்கிறது

     “ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

       சான்றோர் முகத்துக் களி”

    அன்பைச் செலுத்துகின்ற அன்னை  கூட கள் குடிப்பானை வெறுத்துவிடுவாளாம். அது மட்டுமல்ல அருளைச் செலுத்துகின்ற பெரியவர்களும் கூட குடிப்பவனை விரும்பாமல் வெறுத்து விடுவார்களாம் ! ஏனென்றால் இவர்களுக்கு முன்னாலேயே குடியால் தன்னிலை யிழந்து செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்யும் நிலை வந்துவிடுகிறதாம். இதனால் கள்ளானது சமூகத்தில் வாழுகின்ற அதாவது மானத்துடன் வாழமுடியாமலே செய்து விடுவதால் அதனை விலக்குதல் அவசியம் என்பது வள்ளுவத்தின் நிலையாகும்.

    கள்ளினால் வருகின்ற தீங்குபோல் தான் கோபத்தால் வருகின்ற அழிவுமாகும். “கோபமாவது பாவம் ” என்று சாதாரணமாகச் சொல்லுவது வழக்கம்.

        “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

          ஏமப் புணையைச் சுடும்”

    கோபம் வந்து விட்டால் இன்னார் இனியார் என்று பார்ப்பதே இல்லை. நன்மை தீமை ஆராய்வதில்லை. உதவியவர் என்றோ, சுற்றத்தவர் என்றோ கூடப் பார்ப்பதும் இல்லை. யாருக்குக் கோவம் வருகிறதோ அவரையும் அழித்து அவரை அண்டிய வர்களையும் அழித்து விடும் வல்லமை கொண்டதாகும். நெருப்புக்கு சேர்ந்தாரைக் கொல்லி என்று ஒரு பெயரை வள்ளுவம் காட்டி அதடனுடன் கோபத்தையும் இணைத்துக் காட்டிய பின்பும் கோபம் கொள்ளுவது எந்த அளவுக்கு வாழ்வினை அழித்துவிடும் என்பது எல்லோருக்கும் விளங்கத்தானே வேண்டும். வாழ்வியலுக்குக் கோவம் என்பது கள்ளுடன் சேருமாயின் வாழ்வியல் சிறக்குமா? அதனை வாழ்வியல் என்று சொல்லத்தான் முடியுமா? நிம்மதியுடன் வாழவேண்டும் என்பது தான் வள்ளுவத்தின் நோக்கமேயாகும்.   எல்லாவற்றுக்கும் எங்களின் வாய்ச்சொற்களே காரணமாகிறது என்பதை பொதுவாக எல்லோரும் தெரிந்திருப்பது கட்டாயமானதாகும். இதனை வள்ளுவம் மிகவும் நாசூக்காக எடுத்துச் சொல்லுகிறது.

     “யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

      சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

    எதனைக் காக்காது விட்டாலும் நாவை அதாவது சொல்லும் சொற்களைக் கவனத் துடன் சொல்லுதல் அவசியம். பேசும் வார்த்தைகளே நம்மைப் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆளாக்க வல்லன வாகும். நாவென்பதைக் காக்கா விட்டால் நாடே நலம் மிழந்தும் விடலாம். வாழ்வே அழிந்தும் விடலாம். இதனால் நாவடக்கம் என்பது மிகச் சிறந்த வாழ்வியல் தத்துவம் என்பதை வள்ளுவம் வற்புறுத்தி நிற்கிறது. இந்த நாகாத்தல்  என்பது உலகம் முழுவதிலும் வாழ்கின்ற அனைவருக்குமே பொருந்துவதாகும்.

    அறம் என்று சொன்னால் அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். மக்களின் வாழ்க்கையில் முதல் ஆதாரமே அறமாகும். அதற்கு அடுத்ததாக பொருளை எடுத்துக்  கொள்ளலாம். மூன்றாவதாக இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை மூன்றுமே மனித வாழ்வியலின் மூல ஆதாரங்கள் என்றே எடுத்துக் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.

    இவற்றை வள்ளுவம் எல்லோருக்கும் ஏற்ற வகையில் தந்து நிற்பதால் அது நிலைக்கும் வாழ்வியல் வழிகாட்டியாக இருக்கிறது என்பது வெளிப்படையாகும். நாகாத்தல் என்பது மிகச் சிறந்த அறமாகும்.

    வாய்மை என்பதையும் நாவினாலும் , மனத்தினாலும் , காக்கவேண்டும். வாய்மை என்பது வாழ்க்கையின் முக்கிய அறமாகி நிற்கிறது. வாய்மை தவறும் பொழுது வாழ்க்கையே தவறி விடுகிறது.

           “உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

              உள்ளத்துள் எல்லாம் உளன்”

    இது வள்ளுவம் சொல்லும் முக்கிய அறமென்றே கொள்ளலாம். பொய்மை ஒழிந்தால் வாழ்வு பிரகாசமாகும். வாய்மையானது வளர்ச்சி பெறுமானால் வாழ்வு வசந்தமாகிவிடும். வெகுளாமை வாய்த்துவிட்டால் யாவும் அது பெரும் வரமாக அமைந்துவிடும்.

    மன்னிக்கும் பண்பு தான் மனித வாழ்வியலில் எல்லோருக்கும் வேண்டிய ஒன்றாகும். அந்தப் பண்பு குறையும் பொழுதோ அல்லது இல்லாமல் போகும் பொழுதோ மனித வாழ்வு அர்த்த மற்றதாகி விடுகிறது. துன்பம் செய்தாலும் அதனைத் தாங்கி திருப்பி துன்பத்தைச் செய்யாமல் நன்மையே செய்து பாருங்கள் உங்களின் நிலை உங்களை அறியாமலேயே உயரும் .உள்ளுக்குள் ஒரு ஆத்ம திருப்தியே வந்து சேரும் என்னும் வாழ்வியல் தத்துவத்தை வாழும் புதிய அணுகுமுறையை வள்ளும் காட்டி நிற்கிறது.

         “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

             நல்நயம் செய்து விடல்”

    இதனை உலக மக்கள் கைக்கொண்டு வாழ்ந்தால் உலகம் சமாதானப் பூங்காவாக மாறிவிடும் நிலை வந்துவிடுமல்லவா? தனிமனிதன் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சமுதாயம் முன்னேற்றம் நாட்டுக்கே வழிவகுக்கும். நாடுகளின் முன்னேற்றம் தான் உலக முன்னேற்றமாகப் பரிணமித்து நிற்கும்.

    இதற்கு என்ன தேவை யென்றால் நல்ல வாழ்வியல்முறை தான் தேவை. அந்த வாழ்வியல் முறையை வள்ளுவம் .. இல்லறவியலாகவும், துறவறவியலாகவும், அரசியல் இயலாகவும் , அங்கவியலாகவும், ஒழிபு இயல்பாகவும், இன்ப இயலாகவும், சொல்லி அதன்படி வாழ்ந்தால் வையத்து மாந்தரெல்லாம் வளமுடன் வாழலாம், வாழ்வாங்கு வாழலாம் என்று நம்பிக்கையும் துணிவையும் தந்து நிற்கிறது.

    வள்ளுவத்தின் உன்னதம்

    வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பதை உலகப் பெரியோர்கள் பலர் தமது உள்ளத்தே பதித்து வைத்துள்ளார்கள்.

    “இந்துவுக்கு ஒரு கடிதம்” என்னும் டால்ஸ்டாயின் ஒரு பிரதியில் வள்ளுவத்தின் “அன்பின் வழியது உயிர் நிலை” என்பது மிகவும் சிறப்பாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இதனை தேசபிதா காந்தியடிகள் பார்த்துவிடுகிறார். அவரும் வள்ளுவத்தில் பெருமதிப்புற்று  – ” வள்ளுவரைப் போல் மிகப்பெரிய ஞானக் களஞ்சியத்தை வழங்கியவர் இந்தவுலகில் எவரும் இல்லை ” என்று நெஞ்சத்தால் போற்றுகின்றார்.

    “இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்”  என்னும் நூலில் –  “திருக்குறள் இல்லாமல் இந்தியச் சிந்தனை என்பது முடிவில்லாததாகும்” என்று ஆல்பிரட்  ஸ்வைட்சர் என்னும் அறிஞர் போற்றி நிற்கின்றார்.

    “ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்கவேண்டும்” என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் தனக்குள்  தானே செய்ய வேண்டிய கடமை என்ன? மற்றவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்ன? என்பனவற்றையெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும், வள்ளுவர் பேசுகிறார். உலக இலக்கியங்களுள் இத்தகைய மாண்புமிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்தனை சிறப்பாகப் பொலிவுறவில்லை என்று சொல்லலாம் என – உலக அறிஞரான ஆல்பர்ட்  ஸ்வைட்சர் போற்றியுள்ளார் .

     அதுமட்டுமல்ல “பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்துகின்றன. ஆனால் திருக்குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டினை உணர்தும் நூல்” என்றும் விதந்து கூறுகின்றார். இதிலிருந்து வள்ளுவம் என்பது மிகச்சிறந்த வாழ்வியல் என்பது புலனாகிறதல்லவா!

    பல உலக மொழிகளில் வள்ளுவம் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படிச் செய்யப்பட்டது என்பதை உற்று நோக்குதல் அவசியமாகிறது அல்லவா?  வள்ளுவம் காட்டும் வாழ்வியலை யாவருமே விரும்புகின்றமைதான் இதற்கு முக்கிய காரணமாகும். வள்ளுவம் பற்றி அறிவதற்கு யாவரும் ஆசைப்படுகிறார்கள்.அதுகூட அதன் வாழ்வியல் முறையினால்த்தான் என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகிறது.

    வள்ளுவத்தில் சொல்லப்பட்ட  வற்றைத் தவறாது வாழ்வில் கடைப்பிடிக்கத் தவறுதல் கூடாது. வாழ்க்கையுடன் பொருத்திப்பார்த்து எவற்றைச் செய்தல்  வேண்டுமோ அவற்றைச் செய்து எவற்றைத் தவிர்க்க வேண்டுமோ அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    எப்படியும் வாழலாம் என்று வாழும் உலகமக்களுக்கு இப்படி வாழ்ந்து  பாருங்கள் உங்கள் வாழ்வு எப்படி  – இன்பமாக,  இன்னலின்றி , அமைதியாக, அறம்செறிந்து,அகமும்புறமும் தூய்மையாக, இதுதான் வாழ்க்கை என்று  இருக்கும் என்னும்  நிலையைக் காட்டி நிற்பது தான் வள்ளுவத்தின் வாழ்வியலாகும்.

    ஆகவே  வைகத்திலுள்ளோர் வாழ்வாங்கு வாழ வேண்டுமாயின் வள்ளுவம்

    சொல்லும்  வாழ்வியலைப் போற்றுங்கள். அதன்படி வாழ்ந்து வளமதைப் பெற்றிடுங்கள் !

    Share
  • மறந்துவிட முடிவதில்லை !

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

         

          புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணில் 

                 நலங்கள்பல இங்கிருந்தும் நம்மனமோ வெறுமைநிலை

            உளம்மகிழ வாழவெண்ணி உழைக்கின்றோம் ஓய்தலின்றி

                 உளமகிழ்வோ சிலநேரம்  உளநெகிழ்வோ பலநேரம் 

            மனம்முழுக்க ஊரையெண்ணி மெளனித்தே நிற்கிறதே !

     

          நீர்கண்ட இடமெல்லாம் நீந்திநாம் களித்திருந்தோம்

                யாரென்ன கொடுத்தாலும் நாம்விரும்பி அதையுண்டோம்

          தார்ரோட்டில் ஓடிநின்றோம் தலைநிறைய எண்ணெய் வைத்தோம்

                 கார்ப்பயணம் இல்லாமல் கால்நடையாய் சென்றுவந்தோம் !

     

          ஓடிநிற்போம் பாடிநிற்போம் உடல்முழுக்க வியர்வைவரும்

                  ஒடியல்கூழ் குடித்துவிடின் உற்சாகம் தேடிவரும் 

          பனங்கிழங்கு பனாட்டு  பனங்குட்டான் பால்றொட்டி 

                  பாங்காக சுவைத்தபடி பந்தாடி மகிழ்ந்துநிற்போம் !

     

          சைக்கிளை எடுத்துக்கொண்டு சவாரி போய்வருவோம்

                 சந்தோஷம் மனமெல்லாம் தானாக வந்துநிற்கும்

          சைவத்தார் கடைவடையை சட்டினியில் தொட்டுநின்று

                  சகலரும் சுவைத்தநிலை சரித்திரமாய் போச்சுதிப்போ !

     

         எங்களது கல்லூரி அருகிலுள்ள கடையதனில்

              இடியப்பம் இடிசம்பல் இருப்பதுவோ சிலநாளே

        தங்கராசு அண்ணனது தாராள மனத்தாலே

               எங்களுக்கோ இடியப்பம் எப்படியோ கிடைத்துவிடும் ! 

     

         பாடசாலை விடுமுறையில் பலநண்பர் சேர்ந்தபடி

               கீரிமலைக் கேணிநோக்கி கிளம்பிடுவோம் சைக்கிளிலே

         கேணியிலும் குளித்திடுவோம் கிட்டவுள்ள கடலிலும்

                ஆசைதீர நீச்சலிட்டு அனைவருமே மகிழ்ந்துநிற்போம் !

     

          சித்திரையில் பட்டங்கட்டி திரளாகப் பறக்கவிட்ட

                  சத்தமிட்டுக் கூத்தாடி சகலருமே நின்றிடுவோம்

          வட்டமிடும் பட்டமெலாம் வாவெனவே அழைக்குதென

                 வண்ணக் கருவிழியால் வானத்தைப் பார்த்துநிற்போம் !

     

          போரென்னும் பெயராலே ஊரெல்லாம் ஓடியது

                 ஊரிலுள்ள மக்களெலாம் உருக்குலைந்தும் போனார்கள்

          ஊரைவிட்டு பேரைவிட்டு உற்றாரை இழந்துவிட்டு

                 யாருறவும் இல்லாத நாட்டிலிப்போ வசிக்கின்றோம் !

     

         எங்களது உழைக்கும்சக்தி எந்நாட்டில் இருந்தாலும்

               மங்காமல் இருப்பதனால் வாழுகிறோம் வீழாமல் 

        பொங்கிவரும் தமிழுணர்வால் எங்கள்தமிழ் வளர்க்கின்றோம்

               என்றாலும் தமிழ்பற்றி இன்னுமே எண்ணல்வேண்டும் !

             

            ஊரிலேவாழ்ந்த அந்த உவப்பில்லா காலமதை

                 உள்ளமது நினைக்கையிலே ஒருவெறுமை தெரிகிறது 

          வசதியுடன் வாழ்ந்தாலும் வசந்தகாலம் மனம்முழுக்க

               வாழ்ந்துகொண்டே இருப்பதனை மறந்துவிட முடிவதில்லை !

    Share