Tag: அண்ணாகண்ணன்

  • வெட்கம் இல்லாத பதவி நேசர்களுக்காக ஒரு சட்ட மசோதா

    வெட்கம் இல்லாத பதவி நேசர்களுக்காக ஒரு சட்ட மசோதா

    அண்ணாகண்ணன்

    தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்

    மசோதாவின் வரைவின்படி, ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

    என் பார்வையில், செந்தில் பாலாஜி போன்றவர்களுக்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது ஆகி, எவ்வளவு காலம் சிறையில் இருந்தாலும் அமைச்சர் பதவியை விடாதவர்களுக்கு இனி வேறு வழியில்லை.

    We cannot be so shameless that we continue to occupy constitutional positions while facing serious charges என அமித் ஷா கூறியுள்ளார். வெட்கம் இல்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைப் பதவியிலிருந்து விரட்டத்தான் வேண்டும்.

    ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கத்தக்க குற்றச்சாட்டில், 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், 31ஆவது நாள் அவர்கள் பதவி இழந்துவிடுவார்கள். இதில் பிரதமர் பதவியையும் சேர்த்தது, பா.ஜ.க.வின் நடுநிலைமையைக் காட்டுகிறது. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்று இதன் மூலம் நிலை நாட்டுகிறார்கள்.

    பொய்யான குற்றச்சாட்டில் கைது ஆகிச் சிறையில் இருந்தால்…? இப்படி நிறைய நடந்திருக்கிறதே.

    பொய் என நிரூபித்துவிட்டு வெளியே வந்து, பிறகு பதவி ஏற்க வேண்டியதுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையே விதித்தாலும் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்து, வழக்குகளைக் கால வரையின்றி இழுப்பார்கள். சாட்சிகளைக் கலைப்பார்கள். எதிர்க்கட்சிகளின் சதி என்பார்கள். இந்த அரசியல் விளையாட்டில், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது. மேலும், சிறையில் இருந்து இவர்கள் எந்த அலுவலும் பார்க்க முடியாது. அப்படி இருக்க, அந்தப் பதவி எதற்காக?

    குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்றே சட்டம் கருதும். ஆனால், பெரும் பதவிகளில் இருப்பவர்கள், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, மிரட்டி, சாட்சிகளைக் கலைத்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அதிக வாய்ப்பு உண்டு. எனவே தார்மீக ரீதியாக அவர்கள் தாமாகப் பதவி விலக வேண்டும். அல்லது நீக்கப்பட வேண்டும்.

    சிறையில் இருக்கும் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்காத முதலமைச்சரை இந்தச் சட்டம், மறைமுகமாகக் கண்டிக்கிறது. இது ஈகோ விஷயம் கிடையாது, அரசு அலுவல் தடைப்படுகிறது, மக்கள் பணம் வீணாகிறது, குறுக்குவழியில் செல்வாக்கு செலுத்த இடம் உண்டாகிறது எனச் சுட்டிக் காட்டுகிறது.

    செந்தில் பாலாஜியைப் பதவியிலிருந்து நீக்கத் தமிழக ஆளுநர் வலியுறுத்திய போது, தமிழக முதலமைச்சர் மறுத்தார். இப்போது ஆளுநரின் நிலையே சரி என்பதை இந்தச் சட்டம் நிறுவுகிறது. இது ஒரு வகையில் ஆளுநருக்கு வெற்றி. தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் ஆளுநர் வழிகாட்டுகிறார்.

    Share
  • கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் – எடப்பாடியார் செய்ய வேண்டியவை

    கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் – எடப்பாடியார் செய்ய வேண்டியவை

    அண்ணாகண்ணன்

    எடப்பாடியாரின் சுற்றுப் பயணக் கூட்டத்தில் அவசர ஊர்தி வந்தது, சர்ச்சையாகியிருக்கிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், கூட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வந்ததைப் பார்த்துக் கோபமான எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கூட்டத்திலும் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் ஏற்றி வந்து இடையூறு ஏற்படுத்துவதை அரசு வழக்கமாக வைத்துள்ளது. இதுவரை 30 கூட்டங்களில் இவ்வாறு நடந்துள்ளது. இது மீண்டும் நடந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரே பேஷண்ட் ஆகிவிடுவார் என்று பேசியுள்ளார்.

    முதலமைச்சர் பொறுப்பு வகித்த, வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் எடப்பாடியார், இன்னும் பண்பட்ட முறையில் இதை அணுகியிருக்கலாம். எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே ஓர் ஓரத்தில் அவசர ஊர்திகள் செல்ல வழி ஏற்படுத்தி வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கூட்டத்திலும் கூட்டத்தின் அளவுக்கு ஏற்ப ஒன்றோ அதற்கு மேலோ அவசர ஊர்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஏதும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்களைக் கவனிக்க மருத்துவக் குழுவும் அவசர ஊர்தியும் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும், மொத்தமாகக் கூட்டம் கூடாமல், சற்றே இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தேவையுள்ளவர்களுக்குத் தண்ணீர், மருந்து போன்றவை அனுப்ப வசதியாக இடையிடையே ஒற்றையடிப் பாதைகளும் தேவை. கூட்டம் மொத்தமாக ஒரே நேரத்தில் கலையாமல், சிறுகச் சிறுகக் கலைவதற்கு ஏற்ப, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட வேண்டும். இவை அடிப்படை, அத்தியாவசிய ஏற்பாடுகள்.

    இத்தகைய இடர்கள் நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே, எந்தக் கட்சியின் கூட்டம், மாநாடு, பரப்புரை நிகழ்வதாக இருந்தாலும் சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அவற்றை ஏற்பாடு செய்த பிறகே அனுமதி எனக் காவல் துறை நிபந்தனை விதிக்கலாம். வந்த பின் நோவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது.

    Share
  • தூய்மைப் பணியாளருக்கு அநீதி – அடிப்படை அமைப்பிலேயே சிக்கல்

    தூய்மைப் பணியாளருக்கு அநீதி – அடிப்படை அமைப்பிலேயே சிக்கல்

    அண்ணாகண்ணன்

    சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்பட அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் ஊதியம் உயர்கிறது. படிகள் உயர்கின்றன. ஓய்வூதியம் உயர்கிறது. பணிப் பாதுகாப்புடன் மருத்துவ வசதி, காப்பீடு, போனஸ் உள்ளிட்ட பலவும் கிடைக்கின்றன. எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இவை இன்னும் பெருமளவு உயரும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் இவற்றை மறுப்பது ஏன்?

    அவர்களை அரசுப் பணியாளர் என்பதிலிருந்து தனியார் தொழிலாளர் என மாற்றியபோதே, அவர்களின் உரிமைகளை இழந்துவிட்டார்கள். அவர்கள் கேட்பது, ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும். வழங்க முன்வருவதோ, காலை உணவும் காப்பீடும்.

    அரசுத் துறைகளைத் தனியார்மயம் ஆக்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், சிலரை மட்டும் இவ்வாறு தனியார் துறைக்கு மாற்றிவிட்டு, இதர துறைகளில் உள்ளோர் பல மடங்கு ஊதியத்துடன் வாழ்வது, மிகப் பெரிய பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் இல்லையா?

    1. தனியார்மயம் ஆக்குவதாக இருந்தால், அனைத்து நிலைகளிலும் அவ்வாறு ஆக்குங்கள். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ஊதியம் என்று வரையறை செய்யுங்கள். கார்ப்பரேட் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். வேலைத் திறனுக்கு ஏற்பவே ஊதியம், ஊதிய உயர்வு. வேலைத்திறனில் பழுது இருந்தால் பணிநீக்கம் என நடைமுறைப்படுத்துங்கள். கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.

    2. அரசுத் துறை, தனியார் துறை ஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள். அரசுத் துறைக்கு மட்டும் கூடுதல் ஊதியம் என்பது தவறான முன்னுதாரணம். மக்கள் வரிப்பணத்திலிருந்தே இந்த ஊதியம் வழங்கப்படுகிறது. 7 கோடிப் பேரின் வரிப்பணம், 2 சதவிகித (14 லட்சம்) அரசு ஊழியர்களுக்காகச் செலவிடப்படுகிறது. பெரும்பான்மைத் தமிழர்கள், தகுதியான ஊதியம், பணிப் பாதுகாப்பு இல்லாமல் போராடும்போது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் பாதுகாப்பான வாழ்க்கை என்பது, சமூகத்தின் அடிப்படை அமைப்பிலேயே உள்ள சிக்கல். அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதில்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதே சிக்கல். கொடுத்தால் எல்லோருக்கும் கொடுங்கள். அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே சட்டம், ஒரே கண்ணோட்டம் இருக்க வேண்டும். இதுவே உண்மையான சமூக நீதியாக இருக்கும்.

    Share
  • நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு

    அண்ணாகண்ணன்

    நாகாலாந்து ஆளுநர் மாண்புமிகு இல.கணேசன் அவர்கள், இன்று சென்னையில் மறைந்தார். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். சொற்சுவையும் கருத்தாழமும் சொல்வன்மையும் ஒருங்கே அமைந்த நாவரசர். ஆழ்ந்த புலமையும் தேச பக்தியும் பொதுநலமும் அணிகலன்களாய்ப் பூண்டவர். பொற்றாமரை என்ற அமைப்பின் மூலம் தமிழ் வளர்த்தார்.

    2006ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக இல.கணேசன் பொறுப்பு ஏற்றிருந்தார். சிஃபி நிறுவனத்தில் தமிழ்த் தளத்துக்கு நான் ஆசிரியராக இருந்தேன். உலகெங்கும் உள்ள சிஃபி வாசகர்களுடன் நேரலையில் கலந்துரையாட வருமாறு இல.கணேசன் அவர்களை அழைத்தேன். என் அழைப்பை ஏற்று, சென்னை டைடல் பூங்காவில் உள்ள சிஃபி அலுவலகத்துக்கு வந்து வாசகர்களின் கேள்விகளுக்குச் சுவையாகப் பதில் அளித்தார். அவர் பதில்களைச் சொல்லச் சொல்ல, மூத்த இதழாசிரியர் கே.வெங்கடேஷ் உடனுக்குடன் தட்டச்சு செய்தார். எங்களுடன் சிஃபி மலையாளம் இதழாசிரியர் சென்னி வர்கீஸ் இணைந்தார். எழுத்தாளர் மலர்மன்னன், இல.கணேசன் அவர்களை அழைத்து வரும் பணியினை ஏற்றுக்கொண்டார். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் நூலை, இல.கணேசன் அவர்களிடம் அளித்து மகிழ்ந்தேன்.

    இல.கணேசனின் மறைவு, ஒரு கட்சிக்கு இல்லை, தேசத்திற்கே இழப்பு.

    Share
  • ஆளுநர் – இரண்டு சீர்திருத்தங்கள் தேவை

    ஆளுநர் – இரண்டு சீர்திருத்தங்கள் தேவை

    அண்ணாகண்ணன்

    இரண்டு முக்கியச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

    பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் இத்தனைப் பேருக்குப் பட்டங்களை ஆளுநர் வழங்கினார் என்கிறார்கள். மாணவர்களும் நாங்கள் ஆளுநரிடமிருந்து பெற்றோம் என்கிறார்கள். உண்மையில் நடப்பது என்ன?

    மேடையில் ஏறும்போது யாரோ அலுவலர் ஒருவர், பட்டத்தை மாணவர்கள் கையில் கொடுக்கிறார். மாணவரே அதை ஆளுநரிடம் கொடுக்கிறார். நிழற்படக் கலைஞரைப் பார்க்கிறார்கள். படம் எடுக்கிறார். பட்டத்துடன் மாணவர், மேடையை விட்டு இறங்குகிறார்.

    உண்மையில் மாணவருக்குப் பட்டம் அளித்தவர், யாரோ ஒருவர். இதற்கான பெயர் மட்டும் ஆளுநருக்கு. இதை ஆளுநர் அல்லது பட்டம் வழங்குவோர் தம் கையால் மாணவருக்கு வழங்கும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும்.

    இதே போல், சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை ஆளும் அரசின் சார்பாக ஒருவர் எழுதுகிறார். அதைத்தான் ஆளுநர் வாசிக்கிறார். பெயர் மட்டும் ஆளுநர் உரை. இதை மாற்றி, ஆளுநர் உரையை ஆளுநரே நிகழ்த்தும் வகையில் நடைமுறையைத் திருத்த வேண்டும்.

    Share
  • தெருநாய்களை என்ன செய்யலாம்?

    தெருநாய்களை என்ன செய்யலாம்?

    அண்ணாகண்ணன்

    நாடு முழுவதும் நாய்களைக் காப்பகங்களில் வைத்துப் பராமரிப்பது, மிகப் பெரிய வேலை. இது நிதிச் சுமையுடன் வேறு பல சிக்கல்களையும் கொண்டுள்ளது.

    நாய் பொதுவாகத் தனக்கென எல்லை வகுக்கக் கூடியது. வேறு நாய் தன் எல்லையில் நுழைந்தால், பயங்கரமாகச் சண்டையிட்டு விரட்டும். இப்போது எல்லா நாய்களும் ஒரே இடத்தில் இருப்பது, மிகப் பெரிய அதிகாரப் போட்டியை உருவாக்கும். இது, நாய்களுக்கு இடையே அடிக்கடி சண்டையை உருவாக்கும். இவற்றைத் தவிர்க்க, தனித் தனிக் கூண்டுகளில் அடைக்க வேண்டும்.

    நாய்களுக்கு உணவு அளிப்பது ஒரு நிலை. அதன் உடலுறவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அடுத்த சவால். எந்த நாயை எதனுடன் எந்தச் சுழற்சியில் சேர்ப்பது? இவற்றைக் கண்காணித்து, கணக்கெடுப்பது அடுத்த வேலை. பெண் நாயின் பிள்ளைப் பேறு சமயத்தில் அரசே கவனிக்க வேண்டும். குட்டிகளையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

    நாய்களைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, தடுப்பூசி போட்டு, அதன் கழிவுகளை அகற்றுவது, பெரும் பணி. இவற்றில் ஒரு பகுதியைத் தானியக்கமாகச் செய்ய முயலலாம்.

    நாய்களை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதற்கான என் யோசனைகள்

    1. நாய்கள், அதன் குட்டிகள் ஆகியவற்றின் விவரங்களை நிழற்படம், நிகழ்படங்களுடன் இணையத்தளத்தில் பட்டியலிடலாம். வேண்டுவோர், வந்து தத்து எடுக்க வழி வகை செய்யலாம்.

    2. நாய்களைச் செல்லப் பிராணிகளாக மட்டும் கருதாமல், காவல் பணியில் ஈடுபடுத்தலாம். அவரவர் மதிலுக்குள் நாய்களை வைத்துக்கொள்ள, காவல் பணியில் ஈடுபடுத்த, அவற்றை வளர்ப்போருக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும்.

    3. மோப்பத் திறன் கொண்ட நாய்களைக் காவல் துறை, தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு விற்கலாம்.

    4. குறிப்பிட்ட வேலைகளைச் செய்யவும் வித்தைகள் காட்டவும் நாய்களைப் பயிற்றுவிக்கலாம்.

    5. நாய்களின் கழிவுகள், மாடுகளின் கழிவுகள் போல் உரம் ஆகாது. ஆனால், நாய்களின் கழிவுகளிலிருந்து மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுத்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.

    6. நாய்க்கறி, மனிதர்கள் உண்ண ஏற்றது இல்லை என்கிறார்கள். ஆயினும், சீனம், வியட்னாம் உள்ளிட்ட சில நாடுகளில் நாய்க்கறி உண்ணுகிறார்கள். எனவே, நாய்க்கறியை விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். நாய்களை உயிருடனோ, மாமிசமாகவோ அனுப்பலாம். மாமிசமாக அனுப்பும் தேவை இருந்தால், நாய்க்கறிக் கூடங்களை அமைக்கலாம்.

    7. உயிரியல் பூங்காக்களிலும் தேசியப் பூங்காக்களிலும் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு நாய்களை உணவாக அனுப்பலாம்.

    8. நாய்கள் காப்பகங்களை உயிரியல் பூங்காக்களைப் போல் வளர்த்தெடுக்கலாம். இங்கே விதவிதமான நாய்களை ஒரே இடத்தில் காணலாம். எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களை இங்கே சுற்றுலா அழைத்து வரலாம்.

    9. பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மக்கள், நாய்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யலாம். தங்கள் வீட்டு உணவுகளைச் சமைத்தும் கொண்டு வரலாம். அல்லது 100 நாய்களுக்கு ஆகும் உணவுச் செலவை நன்கொடையாகவும் வழங்கலாம். இதற்குச் சான்றிதழ் கொடுக்கவும் ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம், நாயுணவு நன்கொடை வளரும்.

    10. உணவகங்கள், மாணவர் விடுதிகள், திருமண மண்டபங்கள், வீடுகள் ஆகியவற்றில் மீதமாகும் உணவை இங்கே கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் உணவு வீணாவதையும் தடுக்கலாம். நாய்களுக்கும் உரிய உணவு கிடைக்கும். ஆனால், நாய்க் காப்பகங்களில் ஏற்கெனவே உணவு சமைத்துவிடுவார்கள். எனவே, மிச்சமாகும் உணவைச் சேமித்து வைத்து அடுத்த நாள் வழங்க, குளிர்ப்பதனிகளையும் அறை வெப்பநிலையில் உணவைச் சூடாக்கித் தரும் கருவிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

    11. நல்ல உணவு கிடைத்த பிறகு சும்மா இருப்பது, நாய்களின் உடல்நலனுக்கு நல்லதில்லை. அவை உடல் பெருத்து, சோம்பேறியாகும் வாய்ப்பு அதிகம். எனவே, நாள் முழுதும் அதற்கு வேலை தர வேண்டும். நாய்களுக்கு ஓட்டப் பந்தயம், பந்து விளையாட்டு, கூட்டமாகக் குளிப்பது, குழி தோண்டுவது, நீளம் தாண்டுவது, பல குரலில் பேசுவது, கண்களைக் கட்டிவிட்டுப் பொருளைக் கண்டுபிடிக்கச் சொல்வது.. எனப் பல போட்டிகளை நடத்தலாம். இவற்றைக் காண மக்களையும் அனுமதிக்கலாம். இதற்கெனக் கட்டணமும் விதிக்கலாம். இந்த வகையில், இந்தச் செலவுகளை ஈடுகட்டலாம்.

    12. நாய்கள் வரம்பு மீறிக் குழந்தைகளையும் அப்பாவிகளையும் விரட்டிக் கடித்து, தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக்கொண்டுள்ளன. பூனைகள் அமைதியாக, சுதந்திரமாகச் சுற்றித் திரிகையில், திமிரெடுத்துத் திரிந்த நாய்களுக்கு இதன் மூலம் நல்ல பாடம் கிடைக்கும். நாய்கள் தங்கள் எல்லையை உணர்ந்துகொள்ள வேண்டும். அதை மீறினால், இதுதான் கதி. இது தொடர்பாக, ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

    Share
  • ஆளுநரை அவமதிப்பது, தவறான முன்னுதாரணம்

    ஆளுநரை அவமதிப்பது, தவறான முன்னுதாரணம்

    அண்ணாகண்ணன்

    ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்த மாணவியின் மீது ஊடக வெளிச்சம் பாய்கிறது. ஒட்டுமொத்த பட்டமளிப்பு நிகழ்வையும் திசைதிருப்பி, அவர் புகழப்படுகிறார். ஆளுநரை அவமதித்து விட்டதாகக் கொண்டாடுகிறார்கள். முந்தைய துணைவேந்தர்கள் மாநாட்டில், கலந்துகொள்ளக் கூடாது எனத் துணைவேந்தர்களைத் தடுத்துவிட்டதாக ஆளுநரே கூறியிருந்தார். ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் இல்லை. முதலமைச்சரே வேந்தர் என்ற சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாகக் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் இன்னும் பதில் அளிக்க வேண்டும். ஆளுநருக்கு எதிராக முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் இதர அமைச்சர்களும் கூட வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறார்கள். பொதுக் கூட்டங்களில், ஊடகங்களில் பேசுகிறார்கள்.

    ஆளுநர் தேவையா? என்பது குறித்தும் ஆளுநரின் நடவடிக்கைகள், பேச்சுகள் குறித்தும் பேசலாம், விமர்சிக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் ஆளுநருக்கு உரிய மதிப்பு அளித்து, கருத்தியல் ரீதியாக, சட்டப்பூர்வமாக மட்டுமே நிகழ்த்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று, பதவிப் பிரமாணம் செய்து, பதவி வகிக்கின்றவர்கள், அந்தச் சட்டத்துக்கு மாறாக, ஆளுநரை அவமதிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகவே பொருள். சட்டமன்றத்திலேயே ஆளுநருக்கு எதிராகக் கோஷம் எழுப்புவதும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மேடையிலேயே ஆளுநரைப் புறக்கணிப்பதும் தவறான முன்னுதாரணங்கள்.

    நாளை இத்தகைய அவமதிப்புகள், முதலமைச்சருக்கு எதிராக அல்லது அரசுப் பதவியில் இருக்கும் எவருக்கு எதிராகவும் நிகழலாம். அப்போதும் இப்படியே இவர்கள் கொண்டாடுவார்களா?

    ஆளுநரின் கருத்துகளை விமர்சிப்பது எனில், எந்தப் புள்ளிகளில், எந்தச் சான்றுகளின் அடிப்படையில் வேறுபடுகிறோம் என எடுத்துப் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட தாக்குதலாக அது மாறக் கூடாது. இத்தகைய நிகழ்வுகளைத் தரமான சம்பவமாகவும் சாகசமாகவும் வீரப் பிரதாபமாகவும் முன்வைக்கக் கூடாது. முக்கியப் பொறுப்புகளில் இருப்போர், வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அவர்களே எல்லை மீறிப் பேசக் கூடாது. அவர்கள் கீழே பணியாற்றுவோர் இவ்வாறு ஏதும் செய்தால், கண்டிக்க வேண்டுமே தவிர, பாராட்டக் கூடாது. சட்டத்தை மீறுவோருக்கு இது ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும்.

    ஆளுநருக்குக் கடிதம் எழுதலாம். அவருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றலாம். அவர் மீதான புகாரைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். சட்டப்பூர்வமான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றலாம். ஆனால், அவரைக் கேலி செய்வது, பட்டப் பெயர் வைப்பது (ரம்மி ரவி), ஒருமையில் அழைப்பது போன்றவை, உண்மையில் அவரைத் தூற்றவில்லை. இப்படிச் சொல்பவர்களின் / செய்பவர்களின் தரத்தையே காட்டுகின்றன. இவை தமிழ்நாட்டின் மாண்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த மண்ணின் மதிப்பைத் தாழ்த்துகின்றன. வள்ளுவருக்கும் கம்பருக்கும் பாரதிக்கும் விழா எடுக்கும் ஆளுநர், கம்ப ராமாயணத்தை மலையாளத்தில் மொழிபெயர்க்க முன்பணம் கொடுக்கும் ஆளுநர், தமிழ்நாட்டு அறிஞர்களுக்கும் ஆளுமைகளுக்கும் விருது அளித்துப் பாராட்டும் ஆளுநர், இந்த மண்ணில் எத்தகைய பண்புகளை எதிர்பார்ப்பார்?

    I Disapprove of What You Say, But I Will Defend to the Death Your Right to Say It என்ற புகழ்பெற்ற வாசகம் நினைவுக்கு வருகிறது. நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பேன் என்பது இன்றைய ஜனநாயகச் சூழலில் மிக முக்கியமானது. ஆளுநரின் கருத்தை நீங்கள் ஏற்காமல் போனாலும், அதைச் சொல்ல அவரை முழுமையாக அனுமதிக்க வேண்டும்.

    ஆளுநர் சட்டமன்றத்தில் பேசும்போதும் இதர நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் அவமதிப்பது, எள்ளி நகையாடுவது, கண்டனத்திற்கு உரியது. இதில் அரசியல் சாகசம் செய்வது, தமிழ்நாட்டின் மதிப்பைக் குறைக்கும். இன்றைய நிலையில் ஆளுநர் என்பது சட்டப்பூர்வமான, அரசியலமைப்புச் சட்டத்தின் படியான பதவி. அவருக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டியது, அனைவரின் கடமை. இதை மீறுவோர் மீது மாநில அரசு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, மாநில அரசே அந்தப் பிழையைச் செய்யக் கூடாது.

    Share
  • பெண்மைகள், ஆண்மைகள் – சில பிழைகள்

    பெண்மைகள், ஆண்மைகள் – சில பிழைகள்

    அண்ணாகண்ணன்

    யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். சிம்பு நடித்த தொட்டி ஜெயா திரைப்படத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், தாமரை எழுதிய பாடலை ஹரிணியும் ரமேஷ் விநாயகமும் இணைந்து பாடியுள்ளனர். இதயத்தை வருடும் இனிய இசையும் வரிகளும் கொண்ட பாடல். இதில் இடம்பெற்ற இந்தச் சொல்லும் இந்தக் கனவும் நிற்கட்டும், நம்மை வானம் வந்து ஈரக் கையால் வாழ்த்தட்டும் என்ற வரியை நான் மிகவும் ரசித்தேன்.

    இதில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன

    உன்னைக் கண்டபின்னே எந்தன்
    பெண்மைகளும் உயிர் பெறுதே
    கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
    வெட்கங்களும் வெளிவருதே

    பெண்மை என்றும் பெண்கள் என்றும் சொல்லலாம். பெண்மைகள் என எங்கும் சொல்வதில்லை. அதுபோல் வெட்கம் எனச் சொல்வோம். வெட்கங்கள் எனச் சொல்வதில்லை. மெட்டுக்காக எழுத வேண்டும் எனில், பெண்மைமிக உயிர் பெறுதே என்றும் வெட்கம்அது வெளிவருதே என்றும் எழுதியிருக்கலாம். தாமரை இப்படி எழுதியது வியப்பளிக்கிறது.

    இதுபோல் இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது. தேநீர் விடுதி என்ற படத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையமைப்பில் முருகன் மந்திரம் வரிகளில் உயிரோடு உறவாடி என்ற பாடலில் ஒரு வரி.

    உன் பெண்மைகள் ஏங்கிடுதே
    என் ஆண்மைகள் தூண்டிடுதே

    இவ்வாறு பெண்மைகள், ஆண்மைகள் என நாம் சொல்வதில்லை. பெண்மை, ஆண்மை மட்டுமே உண்டு. மெட்டுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனில், உன் பெண்மையது ஏங்கிடுதே, என் ஆண்மையது தூண்டிடுதே என எழுதியிருக்கலாம்.

    பிழைகளைத் தவிர்த்தால், பாடல்கள் இன்னும் சிறக்கும்.

    Share
  • ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    அண்ணாகண்ணன்

    வலது கையை முன்னே நீட்டி உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் பாணி. நாஜிக்கள், வாழ்க ஹிட்லர் என்று கூறியபடி, இதே போல் வலது கையை நீட்டி வணங்கினார்கள். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேகியா போன்ற நாடுகளில் இவ்வாறு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் இது வெறுப்புணர்வைத் தூண்டும் செயலாகக் கருதப்படுகிறது.

    தமிழ்கூறு நல்லுலகில் ஹிட்லரின் தாக்கம் ஆழமானது. துரை வைகோவின் முட்டிப் பட்டை, மிக அண்மைக் காலச் சான்று. ஹிட்லர் பாணியில் சீமானும் நாம் தமிழர்களும் உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. ஹிட்லர் பேசுவது போலவே வீராவேசமாகச் சீமான் பேசுவதும் தற்செயலானது இல்லை. வைகோவும் இவ்வாறு உறுதிமொழி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட எல்லா நிலைகளிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கின்றனர். பள்ளி நிகழ்ச்சிகளிலும் இதைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.

    இவ்வாறு கைநீட்டி உறுதி ஏற்பதன் வரலாற்றுப் பின்னணி, பலருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான நாஜிக்கள், இவ்வாறு ஹிட்லரை வணங்கினார்கள். தங்கள் பகைவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றார்கள். 60 லட்சம் யூதர்களையும் யூதர் அல்லாத மேலும் 60 லட்சம் பேரையும் நாஜிக்கள் கொன்றுள்ளார்கள். சுமார் ஒன்றே கால் கோடிப் பேரைக் கொன்ற கொடுங்கோல் ஆட்சித் தலைவரைப் போற்றும் ஒரு குறியீடு இது.

    இந்தப் பின்னணி குறித்து இன்று பலரும் மறந்துவிட்டார்கள். உறுதிமொழி என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு இது வந்துவிட்டது. நமது மரபுக்கு ஏற்ற வகையிலான சைகையை, உடல்மொழியை நாம் பின்பற்ற வேண்டும். நாம் சத்தியம் செய்யும்போது, கையடித்துச் சத்தியம் செய்வோம். ஆனால், இவ்வாறு கைநீட்டிச் செய்வதில்லை. ஒரு கையை நெஞ்சருகில் வைத்து, இன்னொரு கையை அதன் மேல் வைத்து, சத்தியம் செய்வது போன்று உறுதிமொழி ஏற்பது நம் மரபுக்கு, வழக்கத்திற்கும் ஏற்றது. அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் இதைப் பரிசீலித்துத் தகுந்த வழிகாட்ட வேண்டும்.

    Share
  • இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    அண்ணாகண்ணன்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    ஒரு மகத்தான ஆளுமையுடன் இவரை ஒப்பிடுவது அணுவளவும் பொருந்தாது என்றாலும் ஒரே ஒரு மனநிலைக்காக இந்த ஒப்பீடு.

    காங்கிரஸ் கட்சியில் இராஜாஜி இருந்தபோது இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதலமைச்சர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் உள்துறை அமைச்சர் என அதி உயர் பதவிகள் பலவற்றை வகித்தார். பின்னர், ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் காங்கிரசிலிருந்து விலகினார். சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். 1967 தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகத் தலையெடுக்கவே இல்லை. ஒரே ஒரு காய்நகர்த்தலில் காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தையே மாற்றினார் இராஜாஜி.

    அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறைகள் இருந்தார். துணை முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய வலது கரமாக இருந்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தீய சக்தி என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவரின் மகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேடிச் சென்று சந்தித்துள்ளார். “அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எதிர்காலத்தில், தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என்று வேறு கூறியுள்ளார். தன்னை மதிக்காத அதிமுக, பாஜக கட்சிகளுக்குப் பாடம் புகட்ட, தி.மு.க. அணியில் அவர் இணையக்கூடும். தேர்தல் பரப்புரையில் திமுகவுக்காக ஓ.பன்னீர்செல்வம் வாக்குக் கேட்பது, அரசியலில் விநோதமான காட்சி. இது வாக்குகளாக மாறுவது ஐயமே என்றாலும் அதிமுக – பாஜக அணிக்கு கருத்தியல் ரீதியாக ஒரு பின்னடைவாக அமையலாம்.

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும் இந்த ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அது, தாங்கள் கொலு வீற்றிருந்த கட்சியை அழிக்க, நேரெதிர் அணிக்கும் மாறத் துணிகிற மனநிலை. இந்தக் கசப்பு, மிகக் கடுமையானது. நான் அழிந்தாலும் பரவாயில்லை, உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற அளவுக்குத் தீவிரமானது.

    Share
  • நடிகைகளைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா?

    நடிகைகளைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா?

    அண்ணாகண்ணன்

    நடிகைகளை, திரைக் கலைஞர்களைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைக்கக் கூடாதா? அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பேசக் கூடாதா? இது, திரைக் கலைஞர்களைக் குறைத்து மதிப்பிடுவது. அத்துடன், அவர்களை அவமதிப்பது.

    நாகை புத்தகத் திருவிழாவில் (2025 ஆகஸ்டு 1 – 11), புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் தனித் தனித் தலைப்புகளில் பேச இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல், நகைச்சுவை நிகழ்ச்சி, ஆடல், பாடல், பல்வகை இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற உள்ளன. நாகப்பட்டினம் ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் (Nagapattinam Collector) விரிவான விவரங்கள் உள்ளன.

    கலைத் துறைகள் பலவற்றிலிருந்தும் புகழ்வாய்ந்த வல்லுனர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்கள் புதுமுகங்கள் அல்லர். தங்கள் துறையில் தங்கள் திறமையை நிரூபித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதை இரண்டு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும். முதலாவது, மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டு சேர்ப்பது. இரண்டாவது, இந்தக் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பது. இரண்டு தரப்பாருக்கும் இதில் நன்மை இருக்கிறது. புத்தகக் காட்சியாக முன்வைக்காமல், புத்தகத் திருவிழாவாக முன்னெடுக்கிறார்கள். சுற்றுவட்டார மக்களை வர வைக்க வேண்டும், அவர்களை ஈர்க்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள்.

    புத்தகத் திருவிழா என்றவுடன் எழுத்தாளர்களே முக்கிய விருந்தினர்களாக இருக்க வேண்டும் என்பது பழங்கால எதிர்பார்ப்பு. புத்தகத் திருவிழாவில் உள்ள மொத்த நூல்களில் இன்று வாழும் எழுத்தாளர்களின் நூல்களின் எண்ணிக்கை, சொற்ப விழுக்காடே இருக்கும். இதற்கு முன் வாழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்களின் ஆக்கங்களே மிகுதி. மேலும், ஜோதிடம், சமையல், வணிகம், அரசியல், ஆன்மீகம், திரைப்படம் போன்று பல துறை சார்ந்த புத்தகங்கள் உள்ளன. எனவே, புத்தகக் காட்சி என்றவுடன் இலக்கியவாதிகள் இது தங்கள் இடம் எனத் நினைத்துக்கொள்ளக் கூடாது. இது, எல்லோருக்குமான இடம்தான்.

    புத்தகக் காட்சி என்பது, அறிவியக்கத்தின் ஒரு பகுதி என்று கே.என்.செந்தில் எழுதியதைப் படித்தேன். இது, பழைய நம்பிக்கை. இது உண்மையாக இருந்தால், புத்தகங்கள் படித்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்களே. நாம் படிக்கும் புத்தகங்கள் பலவற்றை நாம் மறந்துவிடுவோம். நினைவில் இருக்கும் சிலவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புத்தக ஆசிரியர் எழுதிய அனைத்தையும் வாசகர் ஏற்றுக் கடைப்பிடிக்க மாட்டார். அப்படி இருந்தால், திருவள்ளுவரின் கருத்துகளை அதைப் படித்த பலரும் ஏற்று நடந்திருப்பார்களே. தாம் எழுதியபடி எழுத்தாளர்களே நடந்துகொள்வதில்லை. புத்தகம் ஒருவர் வாழ்வில் பெரிய மாற்றம் எதையும் நிகழ்த்திவிடாது. அப்படி ஒருவரிடம் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால், அதற்கு அந்தத் தனி மனிதரே காரணம். அந்தப் புத்தகம் இல்லை. இந்தத் தூண்டுதலை அவரது மனம், வேறு எதனிடமிருந்தும் பெற்றிருக்க முடியும். மாறுவதற்கு உரிய மனநிலை, அவரிடம் இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணம்.

    புத்தகங்களால் அறிவை மழுங்கடிக்கவும் முடியும். மூட நம்பிக்கையை, வெறுப்பை, காழ்ப்பை வளர்க்கவும் முடியும். புத்தகங்களால் பொய் பேச முடியும். பொய்யை உண்மை என்று நம்ப வைக்க முடியும். எனவே, ஒட்டுமொத்தமாகப் புத்தகம் படித்தால் அறிவு வளரும் என்று கூற முடியாது. புத்தகக் காட்சிகளை அறிவியக்கத்தின் ஒரு பகுதி என்றும் கூற முடியாது.

    நாகை புத்தகக் காட்சியில் நீயா நானா கோபிநாத் பேசுகிறார். அவருடைய ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! என்ற புத்தகம், விற்பனையில் ஐந்து லட்சம் பிரதிகளை நெருங்குவதாக அதன் அட்டையிலேயே அச்சிட்டிருக்கிறார்கள். முழுநேர எழுத்தாளர்களே நினைத்துப் பார்த்திராத விற்பனை இது. இவரிடமிருந்து எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள ஏதும் இருக்கிறதா? இல்லையா?

    பதிப்பாளர்களுக்குப் புத்தகக் காட்சி என்பது பெரிய வணிகச் சந்தை. எது தேவையோ, எதை வெளியிட்டால் விற்குமோ அதை வெளியிடுவார்கள். இதர நுகர்பொருள்களைப் போல், புத்தகங்களையும் ஒரு நுகர்பொருளாகக் கருதுவது, இயல்பான வணிகக் கண்ணோட்டம். இதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
    எழுத்தாளர்கள் பலருக்குச் சுவையாகப் பேசத் தெரியாது. அப்படிப் பேசத் தெரிந்தவர்களின் உதவி, அவர்களுக்குத் தேவை. தங்கள் படைப்பின் மீது, புத்தகத்தின் மீது சிறிதளவு வெளிச்சமாவது விழாதா என்ற அந்தரங்க ஏக்கம், பலருக்கும் உண்டு. சிறிய அங்கீகாரம், பாராட்டு அல்லது விமர்சனம், அவர்களின் இருப்பை நினைவூட்டும்.

    திரைப்பட நட்சத்திரங்களை உரிய விதத்தில் பயன்படுத்தினால், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பயன் கிட்டும். நட்சத்திரத்திடம் பேசி, இன்னும் ஒரு மணி நேரம் அரங்கில் இருங்கள் எனக் கேட்கலாம். ஐந்நூறு ரூபாய்க்கு அல்லது ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினால், திரைப்பட நட்சத்திரத்துடன் சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ளலாம் என ஒரு திட்டத்தை அறிவிக்கலாம். இதன்வழியே ஒரு சிறிய உடனடிப் பயன் கிட்டும்.

    எழுத்தாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது. தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் மிதக்கக் கூடாது. படிப்பவர்கள் யாரும் இல்லை என்றால், எழுதுவது யாருக்காக?

    பேச வரும் நட்சத்திரங்களுக்கு அரசு தரும் சன்மானம் எவ்வளவு என்று தெரியாது. இது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவர்கள் இந்தச் சன்மானத்திற்காக இந்த அழைப்பை ஏற்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அரசு அழைப்பு என்பதை ஒரு பெருமையாகக் கருதியே வருவார்கள் என நினைக்கிறேன்.
    நட்சத்திரங்களின் வலிமை, செல்வாக்கு, ஆளுமை என்பது அரங்கில் பேசுவதோடு முடியாது. ஊடகங்களில் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இதை ஆக்கப்பூர்வமான ஒன்றாகவே பார்க்க வேண்டும். இந்த நிகழ்வில் பங்கேற்காத, இதற்குச் சற்றும் தொடர்பில்லாத, இதனால் எந்த ஆதாயமும் பெறாத ஒருவனாகவே இதைச் சொல்கிறேன்.

    Share
  • கண்ணதாசன் பாடலில் பிற்போக்கான கருத்துகள்

    கண்ணதாசன் பாடலில் பிற்போக்கான கருத்துகள்

    அண்ணாகண்ணன்

    கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா? – உன்
    கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

    என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 1962ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கண்கள் திரைப்படத்தில், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடிப்பில், கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு, எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையமைக்க, பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார்.

    பிற்போக்கான பல கருத்துகள், இந்தப் பாடலில் உள்ளன.

    ஆடவர் எதிரே செல்லாதே
    அம்பெனும் விழியால் கொல்லாதே
    காரிருள் போல் உன் கூந்தலைக் கொண்டு
    கன்னி உன் முகத்தை மூடு – தமிழ்க்
    காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
    மேகத்துக்குள்ளே ஓடு

    என்றும்

    புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?

    என்றும்

    கண்ணாடி முன்னால் நில்லாதே – உன்
    கண்ணாலும் உன்னைக் காணாதே

    என்றும்

    இந்த
    மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
    தனியே வருவது பாவம்

    என்றும் இதில் வரும் வரிகள், பெண்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக் காட்டும் வரிகள்.

    பெண்கள் வெளியே வரக் கூடாது, சிரிக்கக் கூடாது, தங்கள் அழகைக் காட்டக் கூடாது, ஆண்களின் எதிரே செல்லக் கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது, முகத்தை மூட வேண்டும், தனியே வெளியே செல்லக் கூடாது என அன்று இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. அன்றைய சமூக நிலையைப் படம் பிடித்துக் காட்டும் பாடல். அதே நேரம் இன்றைய காலத்துக்குப் பொருந்தாத பாடல். நாம் கடந்து வந்த தூரத்தைக் காட்டும் பாடல்.

    சில பிரிவினருக்குள் இன்றைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பலவும் அப்படியே இருக்கின்றன. இது, செய்திகளின் வாயிலாக நமக்குத் தெரிய வருகிறது. ஆயினும், இப்படியான கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெரும்பான்மைப் பெண்கள் இன்று வெளியே வந்துவிட்டார்கள். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழத் தொடங்கிவிட்டார்கள். வீறுகொண்டு விழித்தெழுந்த பெண்ணினத்தின் ஒப்பற்ற ஒளியின் முன்னால், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

    Share
  • மாநிலங்களவை உறுப்பினர் உறுதிமொழி – தமிழாக்கத்தில் சில சிக்கல்கள்

    மாநிலங்களவை உறுப்பினர் உறுதிமொழி – தமிழாக்கத்தில் சில சிக்கல்கள்

    அண்ணாகண்ணன்

    மாநிலங்களவை உறுப்பினராகக் கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் பொறுப்பேற்ற காட்சியைக் கண்டேன். அவர்கள் வாசித்த உறுதிமொழி வாசகத்தையும் கவனித்தேன்.

    ஆங்கில உறுதிமொழி வாசகம் இதுதான்

    Form of oath or affirmation to be made by a member of Parliament:—

    “I, A.B., having been elected (or nominated) a member of the Council of
    States (or the House of the People) do swear in the name of God / solemnly affirm that I will
    bear true faith and allegiance to the Constitution of India as by law established,
    that I will uphold the sovereignty and integrity of India and that I will
    faithfully discharge the duty upon which I am about to enter.”]

    தமிழில் உறுதிமொழி ஏற்றவர்கள் அனைவரும் ஒரே வசனத்தையே கூறினார்கள். சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் மீது எனக் கூறினார்கள். இது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது என இருக்க வேண்டும். I will bear true faith and allegiance என்பதை உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் என்றார்கள். முன்னர், இது நம்பிக்கையும் விசுவாசமும் என இருந்தது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.

    பற்றார்வமும் பற்றுறுதியும் எனத் திருகலாகச் சொல்லாமல், உண்மையான பற்றும் உறுதியும் கொண்டிருப்பேன் என்றாலே எல்லோருக்கும் எளிமையாகப் புரியும். இங்கு இரண்டு முறைகள் பற்று வர வேண்டிய தேவையில்லை.

    I will uphold என்பதையும் பற்றி நிற்பேன் என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். காத்து நிற்பேன் என எழுதலாம்.

    solemnly affirm என்பதற்கு formal and dignified manner என்றும் sincerity என்றும் பொருள் இருக்கிறது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர், உளமார உறுதி மொழிகிறேன் எனக் கூறியிருக்கிறார்கள். இன்று பொறுப்பேற்ற கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர், விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன் என்றார்கள். இது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தது போல் செயற்கையாக உள்ளது. உளமார என்பதே உயர்வானது.

    இதை யார் இவ்வாறு மொழிபெயர்த்தார்கள் என்று தெரியவில்லை. எனினும் பாராளுமன்றத்தில் உரிய குழுவினர் இதைச் சரிபார்த்தே அங்கீகரித்திருப்பார்கள். அப்படியும் இதன் தரம் சிறப்பாக இல்லை.

    எனினும், இன்று பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவர்களின் பணி சிறக்கட்டும். அவர்களின் முயற்சிகள் அர்த்தமுள்ளதாய் ஆகட்டும்.

    Share
  • கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது

    கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது

    அண்ணாகண்ணன்

    திகில் ஊட்டக்கூடிய இந்த இயல்பினை அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன்.

    கூடு விட்டுக் கூடு பாய்வது இத்தனை எளிது என்றும் நான் நினைக்கவில்லை.

    திரைப்படம் பார்க்கையில் அதிலிருந்து வெளியே நின்று பார்ப்பதில்லை. அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமாகவும் நானே ஆகிவிடுவது. பல பாத்திரங்கள் இருக்கையில் அதில் ஒன்றுக்குள் புகுந்துவிடுவது. அதன் உணர்வுகளுடன் ஒன்றிக் கலந்துவிடுவது. அந்த நேரத்தில் புற உலகிலிருந்து முற்றிலுமாக விலகிவிடுவது.

    திரையில் போர்க்களக் காட்சி. வாளுருவி, குதிரையில் ஏறி, எதிர்வரும் வீரர்களின் மேல் பாய்ச்சிக் கொல்வது. சுற்றி நின்று தாக்கும் நூற்றுக்கணக்கான வீரர்களைத் தனியொருவனாக எதிர்த்து நின்று சுழன்று சுழன்று தாக்குவது. இங்கெல்லாம் அந்த நாயகன் அங்கே தனித்து இல்லை.

    நாயகி தண்ணீர் குடிக்கையில் அந்தத் தண்ணீராக அவள் வாய்க்குள் புகுந்து, கழுத்தில் இறங்கி, நெஞ்சுத் துடிப்போடு வயிற்றில் இறங்குவது. ஒவ்வொரு நடன அசைவின்போதும் தன்னிச்சையாக அதேபோல் நடனம் ஆடுவது, சொடுக்கும் பார்வையிலும் துடிக்கும் உணர்விலும் கலப்பது.

    கிரிக்கெட் பார்க்கையில் பந்து வீச வரும்போது அந்தப் பந்துவீச்சாளராக மாறுவது. பிறகு அந்தப் பந்தாகவே மாறிவிடுவது. மட்டைவீச்சாளருக்கு வருகையில் மட்டை வீச்சாளராகவே மாறுவது. இப்போது மொத்த மைதானமும் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவாக மாறி, ஓடிவரும் அவரது காலாக, அவரது கையாக, முட்டியாக, கைப்பிடியாக, பிறகு அந்த ஈட்டியாகவே மாறி, எழுச்சியுடன் பாய்வது. டென்னிஸ் பார்க்கும்போது அந்த ஆட்டக்காரராக மாறுவது. இப்போது பந்தை எதிர்கொள்வதும் அடிப்பதும் அவர் இல்லை. நானே. திரையில் மட்டுமில்லை, நிஜத்திலும் இப்படித்தான்.

    கர்நாடக சங்கீதத்தில் ஓர் ஆலாபனையைக் கேட்கையில், அந்த நாவின் அசைவை, கண்டத்தின் அதிர்வை, மூச்சுக் காற்றின் பயணத்தை, அந்த இசை தோன்றும் இடத்தை உணர முடிகிறது. இதையே ஊளையிடும் ஒரு நாயின் குரல், தீனமாக எழும் ஒரு பசுவின் குரல், ஏங்கி அழைக்கும் ஒரு குயிலின் குரல் எழும் இடத்தையும் நெருங்க முடிகிறது.

    குழந்தையுடன் பேசும்போது குழந்தையாகவே மாறிவிடுவது, அதனுடன் சண்டையிட நேர்ந்தால் குழந்தையுடன் சரிக்குச் சரியாக நின்று சண்டையிடுவது, வாகனத்தை ஓட்டுகையில் முழுமையாக ஓட்டுநராகவே மாறிவிடுவது, தோசை சுடும்போது முழு கவனத்தையும் தோசையின் மீது வைப்பது, சாலையோரம் ஒரு புன்னகையைக் கண்டால், அதை முழு உள்ளத்துடன் ஏற்றுப் புன்னகைப்பது, எந்த வேலையைச் செய்யும்போதும் அந்த வேலையை மட்டுமே மனத்தில் நிறுத்துவது போன்றவை இயல்பாக நடக்கின்றன.

    இலக்கிய வரிகளைப் படிக்கையில் அதை எழுதியவரின் உள்ளத்துடன் பொருந்தி வாசிப்பது, திருவள்ளுவரின், ஆண்டாளின், பாரதியின், விவேகானந்தரின் உள்ளத்திற்குள் வாழ்வது, ஓர் அன்றாட நடவடிக்கை. எந்தப் பெரிய முயற்சியும் இல்லாமலே இதைச் செய்ய முடிகிறது. நினைத்த மாத்திரத்தில் அதுவாகவே மாறுவது.

    கூர்மையான, நுணுக்கமான சில பணிகளைச் செய்யும்போது, என் உடலே கூர்முனையாக மாறிவிடும். மொத்த உணர்வுகளும் ஆற்றலும் ஒரு புள்ளியில் குவிந்துவிடும். என் பார்வை குவியும். என் விரல் குவியும். என் வாய் குவியும். என் மூச்சுக் காற்றும் அதைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அதை நிறுத்திவைத்து, நிறைவேற்றும் பணிகளும் உண்டு.

    நான் செய்யக்கூடிய செயல்கள் பலவும் மிகச் சிறப்பாக இருக்கக் காரணம், அதற்கு என்னை ஒப்படைப்பதே. அச்செயலில் மாபெரும் ஆற்றல் படைத்த, மகத்தான ஆளுமை என்ற எண்ணத்தில் அதை நான் செய்யத் தொடங்குகிறேன். செய்யத் தொடங்கிய பின், அந்த எண்ணத்தையும் மறந்துவிடுவேன். அந்த நேரத்தில் வேறு எது குறித்தும் நான் சிந்திப்பதில்லை. விளைவு, இயல்பாகவே என் செயல்களின் தரம், பெரும் உயரத்தில் இருக்கும். சில நேரங்களில் வேறு சிந்தனையில் இருக்கும்போது, இன்னொரு பணியைச் செய்தாக வேண்டிய சூழல் தோன்றும். மனம் ஈடுபடாத நிலையில், சில பணிகள் சாதாரணமாக அமையும். சில நேரங்களில் இந்தத் தரம் போதும் என நானாக நினைப்பதால், சிலவற்றில் அது சராசரியாக அமைவதும் உண்டு.

    இப்படியான தருணங்களைத் தவிர்த்து, பல நேரங்களில் நான் பற்றற்ற நிலையில் இருப்பதுண்டு. அதாவது, எத்தகைய பணிகளையும், கூடுபாய்வதையும் முடித்துவிட்டு, அமைதிக்குத் திரும்பிவிடுவது. இரண்டும் இரண்டு மனநிலை, அவ்வளவே.

    நீ எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு. இது வெறும் தத்துவம் இல்லை. வாழ்க்கைக் கொள்கை. அனைத்தும் மனத்திலிருந்தே தொடங்குகிறது. இதை இங்கு எழுதக் காரணம், என்னைப் போல் இது எல்லோராலும் முடியும். கடினமான பயிற்சி எதுவும் தேவையில்லை. முழுமையாக நம்பினால் போதும். சிறிதும் ஐயமின்றி நம்புங்கள். உங்களாலும் உங்கள் மனநிலையை ஒரு கணத்தில் மாற்ற முடியும். அதற்குரிய தேவையும் விருப்பமும் இருப்பது இந்த மனநிலையை இன்னும் எளிதில் கொண்டு வரும். முயற்சி திருவினையாக்கும். ஒரே ஒரு முறை முயன்றாலும் போதும்.

    படம்: ஐயப்பன் கிருஷ்ணன்

    Share
  • ஒரு கதை

    ஒரு கதை

    அண்ணாகண்ணன்

    குருதிப்புனல் திரைப்படத்தின் கதைப்படி, காவல் துறை அதிகாரிகள் இருவர், தீவிரவாதக் குழுவிற்குள் ஊடுருவிக் கலப்பர். அவர்களுள் ஒருவர், படிப்படியாக முன்னேறி அதன் தலைமைப் பதவிக்கு வருவார். ரமணா திரைப்படத்தில், ஒரு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் போட்டித் தேர்வு எழுதி, அரசின் பல்வேறு துறைகளில் நுழைந்து நேர்மையாகப் பணியாற்றுவர். இதே போல் என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

    உலகையே மாற்ற வேண்டும் என்ற உந்துதல் கொண்ட கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒரு குழுவாகச் சேர்கின்றனர். நாட்டின் அவல நிலை, அவர்களை வருத்துகிறது. சும்மா எழுதிக்கொண்டிருந்தால் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். இலஞ்சத்தை ஊழலையும் ஒழிக்க வேண்டும். நல்லாட்சி வழங்க வேண்டும். சரியான நீதி கிடைக்க வேண்டும். உரியவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். இவற்றையெல்லாம் நிறைவேற்ற, நேரடி அரசியலில் இறங்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என முடிவு செய்கின்றனர்.

    கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவுக் குரல் கொடுத்தால் போதாது என்று நேரடியாகக் கட்சிகளில் சேர்கின்றனர்.
    தங்களுக்குச் சாதகமான கட்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் சேர்கின்றனர். தங்கள் பேச்சாற்றலால், எழுத்தாற்றலால் முழுநேர அரசியல்வாதிகளையே தூக்கிச் சாப்பிடும் வகையில் செயல்படுகின்றனர். தங்கள் தலைவர்களைப் போற்றுவதானாலும் எதிர்க் கட்சிகளைத் தாக்குவதானாலும் முரட்டு அடி அடிப்பதில் முத்திரை பதிக்கின்றனர். பிரசார பீரங்கிகளாக வளர்கின்றனர். செய் அல்லது செத்துமடி, ஒன்றுசேர் புரட்சி செய், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என வீரமாகப் பேசுகின்றனர்.

    அவர்களின் பெயர்கள் சுவரொட்டிகளில், பதாகைகளில் சிறிய எழுத்தில் தொடங்கி, படிப்படியாகக் கொட்டை எழுத்தாக வளர்கின்றன. கட்-அவுட்டுகளிலும் இவ்வாறே அவர்களின் உருவம் வளர்கிறது. மேடைகளில் சிறிய மாலை, ஆளுயர மாலையாக வளர்கிறது. சிறிய நினைவுப்பரிசு, பெரிய நினைவுப்பரிசாக வளர்கிறது. தொலைக்காட்சிகளில் சில விநாடிகள் தோன்றியவர்கள், மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். பத்திரிகைகளில் ஓரச் செய்தியாக இருந்தவர்கள், தலைப்புச் செய்தியாக வளர்கிறார்கள். அவர்கள் வெளியிடும் புத்தகங்களும் சிறிய அளவிலிருந்து பெரிய புத்தகங்களாக வளர்கின்றன. விரைவில் அவர்களுக்குப் பட்டங்கள் கிடைக்கின்றன. தலைவர்களின் இதயத்தில் இடம் பிடிக்கின்றனர். கட்சிகளில் பொறுப்புகளுக்கு வருகின்றனர். படிப்படியாக முன்னேறி, தேர்தலில் போட்டியிடுகின்றனர். பதவிகளுக்கு வருகின்றனர்.

    இந்த இலக்கியவாதிகளும் அவர்களின் உள்வட்டத்தினரும் கட்சிகளின் அனைத்து நிலைகளிலும் அனைத்துக் குழுக்களிலும் இடம் பெறுகின்றனர். சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளுக்குமான செயல்திட்டத்தை இவர்கள் வடிவமைக்கின்றனர். எந்தக் கருத்தை முன்வைக்க வேண்டும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எப்படி முறியடிக்க வேண்டும், யாருடைய வாக்குகளை எப்படிப் பெற வேண்டும், எந்தக் கூட்டத்தை எப்படித் தூண்டிவிட வேண்டும், தங்களுக்குப் பாதகமான சூழலில், திடீர் சர்ச்சையைக் கிளப்பி, பிரசாரங்களை எப்படித் திசைதிருப்ப வேண்டும் என அனைத்திலும் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.

    அடுத்தடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் யார் என்பதிலிருந்து மாநில அரசின் விருதுகள் யாருக்குக் கிடைக்க வேண்டும், யாருடைய புத்தகங்களை நூலகத்திற்கு வாங்க வேண்டும், தலைவர்களை யார் சந்திக்க வேண்டும், தலைவர்கள் யாரைச் சந்திக்க வேண்டும், கூட்டங்களில் தலைவர்கள் என்ன பேச வேண்டும் என்பது வரை இவர்களே தீர்மானிக்கின்றனர். இவர்களின் படைப்புகள், பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படுகின்றன. தேர்வுகளில் இவர்களைப் பற்றிய கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுதுகின்றனர்.

    மாநிலத்தில் மட்டுமின்றி, மத்தியிலும் இவர்கள் அதிகாரத்திற்கு வருகின்றனர். இப்போது, நாட்டின் குரலாக இவர்கள் ஒலிக்கின்றனர். அயல்நாட்டுத் தூதுக் குழுவிலும் இவர்களே இடம் பிடிக்கின்றனர். இவர்களின் பின்னால் இலட்சக்கணக்கானவர்கள் திரள்கின்றனர். சுழல் விளக்கு பொருத்திய மகிழுந்துகளில் இவர்கள் விரைகின்றனர். இரண்டாம் கட்டத் தலைவர்களாக உயர்கின்றனர். எல்லாக் கட்சிகளிலும் இவர்களே மூளையாகச் செயல்படுகின்றனர். எந்த முடிவையும் இவர்களைக் கேட்காமல் தலைவர்கள் எடுப்பதில்லை. இவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ன? இவர்கள் என்னென்ன சமூக மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்? புதியதோர் உலகைப் படைத்தார்களா? மீதியை வெள்ளித் திரையில் காண்க.

    இந்தக் கதையைத் திரைப்படம், வலைத்தொடர் போன்று ஏதேனும் வடிவத்தில் எடுப்பவர்கள், எனக்கு உரிய காப்புரிமைத் தொகையை (ராயல்டி) தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    Share