Tag: சேஷாத்ரி பாஸ்கர்

  • நீல வண்ண அரை நிஜார்

    சேஷாத்ரி பாஸ்கர்.

    பள்ளிக்  காலங்களில் எனக்குச் சீருடையைத் தாண்டி பெரிய துணிமணி ஏதுமில்லை. ஏதோ ஒன்றோ  இரண்டோ தான். அதனைப் போஷிப்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அந்த நீல வண்ண அரை நிஜாரை மறக்கவே முடியாது. அக்கறை இல்லாமல் தைக்கப்பட்ட ஒன்று. அது காஞ்சி பட்டு அல்ல. ஆனால் கஞ்சி பட்டு அதன் நிறம் வெண் நீலம் ஆயிற்று.

    நல்ல முறுக்கேறிய பருத்தித் துணி. உடம்பு கீறும் அளவுக்கு அதன் மொரமொரப்பு. பணம் கொடுத்து (நாலணா) இஸ்திரி போட வசதி இல்லை. ஆனால் என் தந்தை மிகுந்த அக்கறை ஆனவர். வித்தியாசமாய் யோசிப்பவர். நல்ல டெக்னிகல் மூளை. ஒரு பெரிய டபராவை நன்றாய்ச் சுட வைத்து என் துணிக்கு இஸ்திரி போட்டு விடுவார். எப்படி அந்த சுடும் பாத்திரத்தைக் கையாண்டு அதைச் செய்தார் என்று இன்றளவும் எனக்கு ஆச்சரியம் .ஆனால் மனசால் செய்த காரியம். சுத்தமான அன்பு. எந்தப் பிரதி பலனையுன் பாராத குணம்.

    இஸ்திரி போட்ட பின் அந்த கிரீஸ் மேல் நகத்தால் கோடு கிழித்து வேலை முடித்தாலும் திருப்தி வராது அவருக்கு. அவர் கலைஞர். அந்தத் துணியை அப்படியே எடுத்து ஒரு பேப்பர் மேல் போட்டு அதன் மேல் அழுத்தமாய் உட்கார்ந்து இருப்பார். அணியும் போது தான் தெரியும் அதன் அருமை. அந்த காலத்து வண்ணான் ஜெயராமன் கெட்டான். அப்படி ஒரு நேர்த்தி.

    இன்று எவ்வளவு ஆடை அணிந்தாலும் எனக்கு அந்த நீல நிஜார் ஒரு காலமானி. இருக்கும் போது அவர் அருமை தெரியவில்லை. குடும்ப மயக்கம். இன்று மனசு கிடந்து அடித்து கொள்கிறது. கெட்ட பின்பு ஞானி….

    Share
  • உள்ளீடுகள்

    -சேஷத்ரி பாஸ்கர்

    கண்களற்ற காற்று காதோரம்
    தோற்று போய் திரும்பும்அலைகள்
    தகரடப்பாவில் தலையை விட்ட பாட்டி
    இன்னொரு முறை அலையை தொலைத்தாள் .
    அரைத்து போட்ட மின்னும் மணல்தூள் 
    எங்கோ வறுபடும் நிலக்கடலை .
    பிரமிப்பான தருணத்தை நழுவும் மனிதன்
    கடலுக்காகவே பிறந்தது போல் நிலா
    எப்போதும் அவசரமான நண்டுகள் .
    காலம் கடப்பதேன் கவலையில் மனம்.

    புதைமணல் வாழ்விலும் இதமான உள்ளிறக்கம்

    Share
  • சைக்கிளும் வலியும்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    எனக்கு சைக்கிள் கற்று கொடுத்தவன் என்னை விட வயது ரெண்டு சின்னவன். அவன் எங்கு கற்று கொண்டான் என தெரியாது . மந்தவெளி பக்கம் ஒரு மைதானம் . சுமார் ஒரு வாரம் இருக்கும் . அவன் என்ன சொன்னளாலும் கேட்பேன். வாடகை நான் தான் தர வேண்டும். ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் அவன்தான் ஒட்டுவான். கேள்வி கேட்க முடியாது. என்னை மதித்து யார் எனக்கு கற்று கொடுப்பார்? வாடகை வண்டியே தர மாட்டான். சுதர்சன் அவன் பெயர். முதுகில் குத்தி கொண்டே வருவான்.  வலி ஒரு பக்கம். இதில் அவஸ்தையில் எங்கே எதை கற்று கொள்வது. மற்றவர்க்கு ஒரு வாரம் என்றால் எனக்கு ஒரு மாதம். மர மண்டை அப்பவே! ‘நேர பார்’ என்பான்.  பெடல் செய்ய மறந்து விடுவேன். பெடல் செய்யும் போது பிரேக்கை பிடித்துக் கொள்வேன். வண்டி நகராத . அவனுக்கு குத்த வசதி. நல்ல அந்த மைதானம் அளவுக்கு முதுகும் இருக்கும். அசட்டுத்தனம். காந்தியே வந்தாலும் ரெண்டு போடுவார். நான் நின்ற இடத்தில சர்ரென வந்து ப்ரேக் போடுவான். அவ்வளவு எக்ஸ்பெர்டாம். நான் மயங்கி போய் நிற்பேன். அப்படி நடிக்கவாவது செய்யனும். என் பக்கம் வண்டி வந்தது . மணி என்ன எனக் கேட்டேன். நாலு ஆக பத்து நிமிஷம் என்றான். இன்னும் பத்து நிமிஷம்… .அதற்குள் நான் கற்று கொண்டு, முதுகில் வாங்கி கொண்டு. பேசாம குரங்கு பெடல் போதுமா? அடுத்த சுற்று ஆரம்பம். இந்த முறை பின்னால் வந்தவன் மறைந்து போனான். அது தெரியாத வரை எதோ ஓட்டினேன். அவன் இல்லை என்றவுடன். உடல் தளர்ந்தது. ஒரு நிமிஷத்தில் கைக்குள் வேர்வை. போ போ என்றான். குரல் கேட்டது. திரும்ப தைர்யம் இல்லை. வண்டியை போட்டுக் கொண்டு விழுந்தேன். ஹான்ட்ல் பார் வளைந்தது. அவனை காணோம். வண்டியைத் தள்ளி கொண்டு கடைக்குச் சென்றேன். இனி வண்டி தர மாட்டேன் என்றார். முட்டி வலியில் கை சதை பிய்ந்ததில் எதுவும் ஏறவில்லை. பைசா பாக்கிக்கு வீட்டுக்கு ஆள் அனுப்புவேன் என்றார். நான் சட்டை செய்யவில்லை. வீட்டுக்கு வந்து சைபால் தேடினேன். அதை திறப்பதற்குள் வலி ஆறிவிடும் போல் அவ்வளவு கெட்டி பாக்கிங். அப்பா குரல் கேட்டது. அய்யா ..வாசல்ல சைக்கிளில் காய் பை இருக்கு ..எடுத்துண்டு வா. சைக்கிளைப் பார்த்தேன். வலி மறைந்தது!

    Share
  • பெண் காவலர்கள் படும் பாடு!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    சென்ற வாரம் நாரத கான சபாவில் காபி குடிக்கும் போது திடீரென நான்கு பெண் காவலர்கள் வேகமாக வந்து காபி வேண்டும் எனச் சொல்லி அதனை வேகமாகத் தரச் சொன்னார்கள்.

    அவர்கள் அனைவரும் பந்தோபஸ்து வேலைக்காக வந்தவர்கள். ஆளுநர் அந்தப் பக்கம் வருவதாக அறிந்தேன். நடுவில் ஒருவர் அந்தக் காபிக்கு பணமும் கொடுத்துவிட்டார். ஒரு சின்ன பேச்சும் ஒரு குட்டி இளைப்பாறலும் கிடைத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில்.

    அவர்கள் குடித்துக்கொண்டுடிருந்த போதே திடீரென அவர்கள் மேலதிகாரியின் விசில் சத்தம் கேட்டு எல்லோரும் கடகடவென எழுந்து எதிர்த்திசைக்குப் போய்விட்டார்கள். அந்தச் சின்ன ஓய்வும் போய்விட்டது. அதுவும் பெண் காவலர்கள் பாடு மிகக் கஷ்டம். சிறுநீர் கழிக்கக் கூட அவர்கள் ஒரு அலுவலகமோ,  உணவு விடுதியோ தேட வேண்டிய நிலை.

    குறைந்த பட்சம் அவர்கள் நிற்கும் அந்த இடத்தில் பாதை ஓரத்தில் ஒரு சின்ன பெஞ்ச் போல ஒரு சிமெண்ட் பலகை செய்து கொடுத்தால் அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றலாம். வெரிகோஸ் ஒரு பெரும் தொல்லை. இந்தக் கஷ்டப் பணியில் அவர்கள் சலிப்பு அடையாமல் இருக்கச் சில சலுகைகள் தேவை தான்.

    இதை எல்லாம் தாண்டி அவர்கள் பொது மக்களிடம் கனிவுடன் இருப்பது சாதாரண செயல் அல்ல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவர்கள் அந்த குடித்த நான்கு காபிக்கும் காசு கொடுத்தவர்கள். இனாமாக அதைப் பெறவில்லை. இங்கு பெண்ணாய் பிறக்க மட்டும் இல்லை வாழவும் மாதவம் செய்ய வேண்டும்.

    Share
  • வாயுள் உலகம்!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ஒரு சின்னப் பந்து
    கருஞ்சிவப்பில்
    சுற்றி வெள்ளை முகப்பூச்சு
    பெண் பார்க்க செல்லும் பையன் போல்!

    குவியலாகக் கிடக்கும்
    நாம் நினைத்த இடத்தில்
    பார்த்தோர் செல்வார் பத்து வருடம் பின்பு
    சூரியன் போல் அனைவருக்கு பொது!

    அது உள் இருக்கையில் வராது பேச்சு
    சுரக்கும் அளவில்லாமல்
    சுழற்றியபடி பந்தாடும், வாய்
    உடைக்கத் துடிக்கும் மனம்!

    தடுக்க நினைக்கும் மறு கணம்
    மென்மை ஆக்கி நா உறிஞ்சும்
    பொறுக்க மாட்டா(து) பல் கடிக்கும்
    உடைந்திறங்கும் தேன் மிட்டாய்!

     

    Share