Author: சற்குணா பாக்கியராஜ்

  • கம்புள்

    சற்குணா பாக்கியராஜ்

     

    “வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை
    தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்’”
    ஓரம்போகியார், ஐங்குறு நூறு, 85: 1-2

    சுருக்கமான உரை: வெண்மையான நெற்றியையும் விட்டு விட்டு ஓசை எழுப்பும் குரலையும் உடைய பெண் கம்புள், தன் சுற்றத்தோடு குளிர்ந்த பொய்கையிலிருந்து மகிழ்ந்து விளையாடும்..

    நாமக் கோழிகள் கூட்டம்

    சங்க இலக்கியத்தில் “கம்புள்” என்ற பறவையின் பெயர் நான்கு பாடல்களில் காணப்படுகிறது (ஐங்குறுநூறு 85, 60, அகநானூறு 356, புறநானூறு 297). மேற் கண்ட ஒரே ஒரு பாடலில் மாத்திரமே “வெண் நுதல் கம்புள்” என்று இந்தப் பறவையைச் சங்கப் புலவர் ஓரம்போகியார் மருதத் திணையின் பின்னணியில் வர்ணித்துள்ளார்.
    கம்புள் என்றால் அது எந்தப் பறவை?

    திரு. பி. எல். சாமி, தன்னுடைய “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” என்ற நூலில் “கம் என்றால் நீர் என்று பொருள். நீர்ப்புள் என்ற பொருளில் கம்புள் என்று வந்திருக்கலாம்” என்கிறார்.

    நாமக் கோழி, கன்யாகுமரி மாவட்டம்

    ஆகவே கம்புள், நீரில் வாழும் பறவை என்ற அடிப்படையில் பறவையியலை ஆராயும் போது தமிழகத்தில் ஏழு வகை நீர்க் கோழிகள் காணப்படுகின்றன. இவை குளக் கோழி (Common Moorhen), நீலக் கோழி (Purple Moorhen), வெண் நெஞ்சு நீர்க்கோழி (White-breasted Waterhen), தண்ணீர்க் கோழி (Water Cock), நாமக் கோழி(Coot), தாழைக் கோழி (Moorhen), இலைக் கோழி (Jacana) என்பவையாகும்.

    இந்தப் பறவைகள் Rallidae குடும்பத்தைச் சார்ந்தவை. இவை பொதுவாகக் குளம், குட்டைகள், ஏரிகள் அருகில் வளரும் நாணல் போன்ற புல் புதர்களில் மறைந்து வாழுபவை. இவைகளால் நீரில் வேகமாக நீந்தவும் முடியும். தண்ணீர்க் கோழியைத் (Water Cock) தவிரப் பிற நீர்க்கோழிகளுக்குப் பால் வேறுபாடு கிடையாது.

    இந்த ஏழு வகைக் கோழிகளிலும் இரண்டு வகை நீர்க் கோழிகளுக்கு மட்டுமே நெற்றியில் வெண்மை நிறம் உண்டு. அவை: நாமக் கோழி (Common Coot- Felica atra), வெண் நெஞ்சு நீர்க்கோழி (White breast Waterhen -Amaurornis phoenicurus).

    இந்த இரண்டு நீர்க் கோழிகளிலும் நாமக் கோழி ஒன்றிற்கு மட்டுமே நெற்றியில் வெண்மையான பட்டை போன்ற கவசமும் (frontal shield) வெண்மையான அலகும் காணப்படுகின்றன. பிற உடல் பாகங்கள் கறுப்பு நிறம். இந்தப் பறவை வாத்துப் போல் தோற்றமளித்தாலும் இது வாத்து அல்ல.

    நாமக் கோழிகள், இனப் பெருக்கமல்லாத காலங்களில் நீர் வளமுடைய பகுதிகளில் இரண்டு முதல் இருபது வரையிலும் சில சமயங்களில் நூற்றிற்கும் மேலாகக் கூட்டமாகக் காணப்படுகின்றன. நிலத்தில் காணப்படுவதை விடத் திறந்த நீர்பரப்புகளில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

    வெண் நெஞ்சு நீர்க்கோழிக்கு, வெண்மை நிறம் நெற்றியில் மட்டுமல்லாமல் நெற்றியிலிருந்து தொடங்கி, தலையின் இரு பக்கங்களும் மார்பும் அடி வயிறும் வெண்மையாகக் காணப்படும். முதுகுப் பகுதிக் கரும் சாம்பல் நிறமாகவும் வாலின் அடிப்பகுதி செம்பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

    வெண் நெஞ்சு நீர்க் கோழி தனித்தோ அல்லது இணையாகவோ காணப்படும். கூட்டமாகக் காணப்படுவதில்லை. நீர்க் கரையோரங்களிலும் வயல் பகுதிகளிலும் பூங்காவனங்களிலும் காணப்படும். எதிரிகளைக் கண்டால் புதர்களில் மறைந்து கொள்ளும்.

    இரண்டு பறவைகளின் குரல்களும் கரகரப்பானவை. இனப் பெருக்கக் காலங்களில் ஆண் பெண் இரண்டு பறவைகளும் குரல் எழுப்புகின்றன. வெண் நெஞ்சு நீர்க் கோழி விட்டு விட்டுக் குரல் கொடுப்பது தொலைவில் கேட்கும்.

    வெண் நெஞ்சு நீர்க் கோழி

     

    வெண் நெஞ்சு நீர்க்கோழி—– நாமக் கோழி
    ஒற்றுமைகள்:

    1. இரண்டு பறவைகளும் நீர்க் கோழிகள் இனத்தைச் சார்ந்தவை
    2. இனப் பெருக்கக் காலத்தில் இரண்டு பறவைகளும் இரவும் பகலும் கரகரப்பான குரல்களை எழுப்புகின்றன.
    3. பால் வேறுபாடு கிடையாது.

    வேற்றுமைகள்:

    1. வெண் நெஞ்சு நீர்க் கோழி, தனித்தோ இணையுடனோ காணப்படும்.
    கூட்டமாகக் காணப்படுவதில்லை.
    நாமக் கோழி இனப் பெருக்கம் அல்லாத காலங்களில் கூட்டமாகக் காணப்படும்
    2. வெண் நெஞ்சு நீர்க் கோழியின் நெற்றி மட்டும் வெண்ணிறமாக இல்லாமல் முகம், மார்பு, வயிற்றுப் பகுதியும் வெண்ணிறமாக இருக்கும்.
    நாமக் கோழிக்கு நெற்றிப் பட்டையும் அலகும் வெண்மை நிறம்.

    மேற் கண்ட தகவல்களைக் கொண்டு பாடலை ஆராய்ந்தால் புலவர் ஓரம்போகியார் வர்ணித்துள்ள “வெண் நுதல் கம்புள்” நாமக் கோழியாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

    References:
    The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)
    திரு.. பி.. எல்.. சாமி, பி எசி, 1976. “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” pp.112- 113.

    Share
  • ஹம்மிங் பறவைகள் (Hummingbirds)

    -சற்குணா பாக்கியராஜ்

    உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன. இவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின் வட பகுதியில் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் பறக்கும் போது சிறகுகள் “ஹம்” என்ற ஒலியை எழுப்புவதால் “Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன.

    உலகத்திலுள்ள மிகவும் சிறிய பறவை, கியூபாவில் காணப்படும் Bee Hummingbird.  இதன் எடை: 1/15 of an ounce நீளம்: அலகிலிருந்து வால் வரை- 1”. இதன் முட்டை காப்பிக் கொட்டையின் அளவு. ஹம்மிங் பறவையில் மிகப் பெரியது Giant Hummingbird. நீளம்: 8¼”

    இந்தப் பறவைகளால் மாத்திரமே நீண்ட நேரம்  சிறகுகளை முன்னும் பின்னும் வேகமாக அடித்துப் பூக்களிலிருந்து தேனை எடுக்கவும் (hovering),  பின்நோக்கிப் பறக்கவும் முடியும். இந்தப் பறவைகள் ஒரு நொடிக்கு இறக்கை அடிக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு வகையிலும் (species) வேறுபடுகிறது. உதாரணமாக Bee hummingbird  ஒரு வினாடிக்கு 50-80 முறையும் Giant hummingbird வினாடிக்கு 16 முறையும் இறக்கைகளை அடிக்கின்றன.

    ஹம்மிங் பறவைகள் பறக்கும்போது அதிக energy செலவிடப்படுவதால் பெரும்பான்மையான நேரம் மரக்கிளைகளிலும் மரக்குச்சிகளிலும் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றன. சில நேரங்களில் (உ.ம். குளிர்காலத்தில் இரவு நேரம்) physical activityஐக் குறைப்பதன் மூலம் (torpor) உடல் வெப்பத்தையும் இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு energy-ஐ சேமித்து வைத்துக்கொள்கின்றன.

    ஹம்மிங் பறவைகள் பூக்களிலுள்ள தேனை மட்டும் உண்ணாமல் சிறு பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துசெல்லும் நேரங்களிலேயே சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு தடவை உணவு உண்கின்றன.

    ஹம்மிங் பறவைகளின் உச்சந்தலை, தொண்டை, மார்பு பகுதிகளில்  மினுமினுப்பான இறகுகள் (iridescent) காணப்படுகின்றன. தொண்டையில் காணப்படும் மினுமினுப்பான இறகுகளை ”Gorget” என்று அழைக்கின்றனர். இந்த நிறங்கள் பார்ப்பவர்களின் கோணத்தைப் பொறுத்தது (angle). ஆண் ஹம்மிங் பறவை, தலையைப் பக்கவாட்டில் திருப்பும்போது  இந்த நிறங்கள் சூரிய ஒளியில்பட்டுக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் மிளிருகின்றன. சூரிய ஒளிபடாத நேரங்களில் கறுப்பாகத் தோன்றும். ஏனென்றால் இந்த மினுமினுப்பான நிறம் (iridescence), இறகுகளிலுள்ள pigment-ஆல் ஏற்பட்டதல்ல இறகின் அமைப்பால் (structural) ஆகும். இந்த நிறங்கள் பெண் பறவைகளைக் கவருவதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்கும் பயன்படுகின்றன.

    ஆண் ஹம்மிங் பறவை, உணவு கிடைக்கும் இடங்களில் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக் கொண்டு பிற ஹம்மிங் பறவைகளையும் எதிரிகளையும் அருகில் நெருங்க விடுவதில்லை.

    இனப்பெருக்கக் காலத்தில் ஆண் ஹம்மிங் பறவைகள்  பெண் பறவைகளைக் கவர உயரத்தில் பறந்து சடுதியில் கீழ்நோக்கிப் பாய்ந்து (diving) வினாடிக்குள் மேல் நோக்கிப் பறந்தோ பெண் பறவையின் முன்நின்று முன்னும் பின்னும் பறந்தோ தொண்டைப் பகுதியில் உள்ள நிறத்தைக் காட்டுகின்றன.

    ஆண் ஹம்மிங் பறவைகள் கூடு கட்டுவதிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் பொறுப்பு எடுப்பதில்லை. பெண் பறவை, சிலந்தி வலை, மெல்லிய நார்கள், மிருகங்களின் ரோமங்களைக் கொண்டு கூடுகட்டி, இரண்டு முட்டைகள் இட்டு அடைகாக்கின்றன. இரண்டு வாரங்களில், கண்கள் திறக்காத நிலையில் குஞ்சுகள் வெளிவந்த பின் குஞ்சுகள் வளர்ந்து கூட்டைவிட்டு வெளியேறும் வரையிலும் தாயே உணவு ஊட்டி வளர்க்கிறது.

    வலசைபோகும் ஹம்மிங் பறவைகள் கூட்டமாகப் பறப்பதில்லை. பிற பறவைகளின் முதுகில் அமர்ந்து செல்வதில்லை. தனியாகவே தங்கள் பயணத்தைத் தொடங்கி முடிக்கின்றன. பயணத்தைத் தொடங்கும்முன் பல நாட்கள் பெரும் அளவில் உணவு அருந்தி எடையை அதிகப்படுத்திக் கொள்கின்றன.

    இந்த அழகிய பறவைகளுக்குப் பூனை, வல்லூறுகள் போன்ற எதிரிகள் உண்டு. இவைகளில் மனிதன்தான் பெரிய எதிரி!! பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காகப் பறவைகளின் இறகுகளைப் பயன்படுத்தினர். அந்தச் சமயம் தென் அமெரிக்காவில் கோடிக்கணக்கான ஹம்மிங் பறவைகள் கொல்லப்பட்டு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் சில வகை ஹம்மிங் பறவைகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டன.

    பறவைகளின் இறகுகளை ஏற்றுமதிச் செய்ய அரசாங்கம் தடை விதித்ததால் இன்று தென் அமெரிக்காவில் ஹம்மிங் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    Within my garden Rides a Bird

    Within my Garden, rides a Bird
    Upon a single Wheel—
    Whose spokes a dizzy Music make
    As ’twere a travelling Mill—

    He never stops, but slackens
    Above the Ripest Rose—
    Partakes without alighting
    And praises as he goes

    Emily Dickson (1862)

     

     

    Share
  • மீன் கொடுத்துப் பெண் தேடுதலும் உணவு ஊட்டுதலும்

    சற்குணா பாக்கியராஜ்

    இனப் பெருக்கக் காலத்தில் பல ஆண் பறவைகள் தங்கள் துணைப் பறவைகளுக்கு உணவு ஊட்டிப் பராமரிப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கக் காலப் புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சிவந்த வாயையுடைய ஆண் கடல் காகம் தன்னுடைய கடுஞ் சூல் பேடைக்காக அயிரை மீனைக் கழியில் தேடுவதைக் கீழ்க் கண்டவாறு வர்ணிக்கிறார்.

    “கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்
    படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
    பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒருசிறை கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு
    இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
    பூஉடைக் குட்டம் துழவும் “
    நற்றிணை 272: 1-6
    .
    பறவையியலை ஆராயும் போது கடல் பறவைகள் இனத்தைச் சார்ந்த ஆலாப் பறவை (டெர்ன் -Tern) இனப் பெருக்கக் காலத்தில் அயிரை போன்ற சிறு மீன் இனங்களைக் கவர்ந்து அடைகாக்கும் தனது பெடைக்கு உணவாகக் கொடுக்கிறது என்பதைப் பல நாடுகளிலுள்ள பறவையியலாளர்கள் நடத்தியுள்ள ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகிறது .

    இனப் பெருக்கக் காலம் நெருங்கும் போது ஆலாப் பறவைகள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்று காலனிகள் உருவாக்கிய பின் பெண் தேடும் படலத்தைத் தொடங்குகின்றன. ஆண் பறவைகள் மீனைப் பிடித்து அலகில் கெளவிக் கொண்டு பெண் பறவைகள் இருக்கும் இடத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து சென்று தாங்கள் பிரமச்சாரிகள் என்பதை விளம்பரம் செய்கின்றன. தனக்குப் பிடித்த பெண் பறவையை ஆண் பறவையால் தெரிந்தெடுக்க முடியாது. ஆண் துணையைத் தேடிக் கொண்டிருக்கும் பெண் பறவை மீன் கொண்டு பறக்கும் ஆண் பறவையை விரும்பினால் அதைப் பின் தொடர்ந்து பறக்கும். இந்த நிகழ்ச்சியைப் பறவையியலாளர்கள் “Fish Flight” அல்லது “Fish Offering Ceremony” என்று அழைக்கின்றனர். இந்தச் சடங்கு சில வேறுபாடுகளோடு உலகெங்கிலும் உள்ள எல்லா வகை ஆலாப் பறவைகளிலும் காணப்படுகிறது.

    சில நேரங்களில் ஆண் பறவை, பெண் பறவையின் முன்னால் நின்று தலையையும் நெஞ்சையும் நிமிர்த்திப் பெருமையோடு ராஜ நடை நடந்து தன் பலத்தை வெளிப்படுத்தும். இதனை “Strutting Display” என்பர். ஒரு ஆண் பறவையின் பலம், கொண்டு வரும் மீனின் பருமன், எண்ணிக்கை இவைகளைக் கொண்டு பெண் பறவை, ஆண் பறவையைத் தேர்ந்தெடுக்கும். அதன் பின் பரிசுப் பொருளான மீனைப் பெற்றுக்கொண்டு இணைந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும்..

    LittleTerns: Courtship behavior: மீன் கொண்டு பறத்தல், நன்றி படம்: கூகிள்

    இந்த மீன் கொடுக்கும் சடங்கு, பெண் பறவை திடமான ஆண் பறவையைத் தெரிந்தெடுக்கவும் அடுத்த சந்ததி பலமுள்ளதாக வருவதற்கும் அடிகோலாக அமைகிறது.

    ஆலாப் பறவைகள் இணை சேர்ந்த பின் பல நாட்கள் ஆண் பறவை துணைப் பறவைக்கு உணவு கொடுப்பதில்லை. இரண்டு பறவைகளும் சேர்ந்து கூடு கட்ட ஆரம்பித்து பெண் பறவைக்குக் கரு உருவாகும் சமயம் ஆண் பறவை திரும்பவும் உணவு கொடுக்க ஆரம்பிக்கிறது. பெண் பறவை இரை தேடச் செல்லாமல் உணவுக்காக ஆண் துணையைக் கெஞ்சும். பெண் பறவை நிறைச் சூல் நிலையில் இருக்கும் போது ஆண் பறவை சில சமயம் மணிக்கொரு தடவை உணவைக் கொண்டு கொடுக்கிறது.

    “கருவுற்றிருக்கும் சமயம் பெண்பறவையின் எடை அதிகரிப்பதால் பெண் பறவை பறந்து நீரினுள் பாய்ந்து இரை தேட முடியாத நிலையிலுள்ளது, ஆண் பறவை உணவு ஊட்டும் போது இரண்டு பறவைகளிடையே உறவு பலமாகிறது, கரு ஆரோக்கியமாக வளருவதற்கு ஏற்ற சத்தான உணவும் கிடைக்கிறது,” என்று பறவையிலாளர்கள் விவரிக்கின்றனர்

    ( “Courtship and Feeding “ Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye 1988).

    ஆண் ஆலாப் பறவை பாசத்தோடு தன் துணைக்காக இரை தேடுவதைப் புலவர்,
    “பொம்மல் அடும்பின் மணல் ஒரு சிறை,
    கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
    இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
    பூஉடைக் குட்டம் துழவும் ” என்கிறார்.

    மேற் கண்ட சங்கப் பாடலில் புலவர் வர்ணிக்கும் “கடல்அம் காக்கை” கடல் பறவையினத்தைச் சார்ந்த கடல் காகமா (Gull) அல்லது ஆலாப் பறவையா(Tern) என்ற கேள்வி எழலாம்.

    தமிழகத்தில் Gull பறவையை “கடல் காகம்” அல்லது “கடல் புறா” என்றும் ஆலாப் பறவையை “கடல் குருவி” என்றும் சில இடங்களில் அழைக்கின்றனர். இரண்டு பறவைகளும் Laridae குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீர்க் கரையோரங்கள் முக்கியமாகக் கடற்கரையைச் சார்ந்த பகுதிகளான கழிகள், சதுப்பு நிலங்கள், வயல் பகுதிகள் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் கூட்டமாகவோ தனித்தோ காணப்படுகின்றன.

    கடல் புறா (Gull)

    கடல் புறாக்கள், புறாக்களைப் போலில்லாமல் காகங்களின் பண்புகளையுடையவை. காகங்களைப்போல் உணவைப் பகிர்ந்து கொண்டும் சமயத்திற்கேற்றவாறு கிடைக்கும் உணவையும் கழிவுப் பொருள்களையும் உண்ணத் தயங்காதவை. கடல் புறாக்களை நீர்க்கரைகள் மட்டுமல்லாமல் பூங்கா, புல் வெளிகளிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் காணலாம்.
    மேலும் கடல் புறாக்களால் நீரில் வெகு நேரம் மிதக்க முடியும். நீர்க் கரைகளில் அலகாலும் கால்களாலும் துழாவி இரை தேடுபவை. நீரில் மிதக்கும் உணவைப் பறந்து வந்து அலகால் எடுக்க முடியும். ஆனால் நீரில் மூழ்கி இரை தேடுவதில்லை. இவைகளின் அலகுகள் முனையில் வளைந்திருக்கும்.

    கடல் புறா (Gull)..படம்: சற்குணா பாக்கியராஜ்

    குளிர்காலத்தில் தமிழகத்திற்கு வலசை வரும் ஐந்து வகைக் கடல் புறாக்களும் குளிர் காலம் முடிந்ததும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடுகின்றன. தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை..


    மேலும் ஆண் கடல் புறா இனப் பெருக்கக் காலத்தில் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் போது சற்றுச் செரித்த உணவை வெளிக் கொண்டு வந்து (regurgitate) கொடுக்கிறது. மீனைக் கவர்ந்து கொண்டு வந்து கொடுப்பதில்லை.
    ஆலாப் பறவை (Tern)

    இரை தேடும் ஆலாப் பறவை, படம்: சற்குணா பாக்கியராஜ்

    ஆலாப் பறவைகள் நீரில் நெடு நேரம் மிதப்பதில்லை. பாதங்களில் சவ்வுகள் இருப்பினும் நீந்துவதில்லை. இவைகளின் முக்கிய உணவு மீன், இறா, புழு, பூச்சிகளாகும். ஆலாப் பறவைகளின் அலகுகள் நீண்டு கூர்மையாக இருக்கும்.


    இவை இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாக அல்லது தனித்து வட்டமடித்துப் (hover) பறந்து சென்று கொண்டிருக்கும். இரையைக் கண்டவுடன் செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் அலகில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும். ஆலாப் பறவைகள் அலகினாலோ அல்லது கால்களாலோ துழாவி இரை தேடுவதாக அறிவியலில் சான்றுகள் காணப்படவில்லை..

    புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் வர்ணித்துள்ள ஆண் கடல் காகம், ஆலாப் பறவையாகத்தான் இருக்க முடியும். கடல் புறாவிற்கும் ஆலாப் பறவைக்கும் பால் வேறுபாடு வெளிப்படையாகத் தெரியாது. ஆனால் கருவுற்றிருக்கும் துணைப் பறவைக்காக மீனைத் தேடிக் கவர்ந்து சென்று உணவூட்டுவது ஆண் ஆலாப் பறவை என்பது உலகம் முழுவதிலும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை!!


    “செவ் வாய்” என்று பாடலில் காணப்படுவது பறவையின் அலகா அல்லது வாயின் உள் பகுதியா?
    தமிழ் நாட்டிற்கு வலசை வரும் கிருதா ஆலாப் பறவைக்கும் (Whiskered Tern) சாதா ஆலாப் பறவைக்கும் (Common Tern) காஸ்பியன் ஆலாப் பறவைக்கும் (Caspian Tern) அலகுகள் சிவப்பு நிறம். இந்த ஆலாப் பறவைகள் கூட்டமாகவும் காணப்படும். இவை தமிழகத்தில் இனப் பெருக்கம் செய்வதில்லை.

    “செவ் வாய்” காஸ்பியன் ஆலாப் பறவை,
    காஸ்பியன் ஆலாப் பறவையின் சிவந்த அலகும் வாயின் உள் பகுதியும்.. படம்: “Bird Research Northwest” நன்றி

    காஸ்பியன் “குளிர் காலத்தில் தமிழகத்தில் அதிகமாக் காணப்பட்டாலும் மற்ற காலங்களிலும் இதை ஒரு சில இடங்களில் (உ..ம்: கோடிக்கரை) காணலாம். அருகில் உள்ள இலங்கையில் இப்பறவை இனப் பெருக்கம் செய்வதே இதன் காரணமாக இருக்கலாம்”( Grubh, R.B, 2012).

    பிற ஆலாப் பறவைகளின் அலகுகள் மஞ்சள் அல்லது கறுப்பு நிறமாக இருக்கும்.

     

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் புலவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுற்றுச் சூழ் நிலையை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய பாடல்களில் கருப் பொருள்களாகப் புகுத்தியுள்ளனர் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சான்று.

    References
    Ali, Salim (2002): The Book of Indian Birds Thirteenth Edition, Bombay Natural History Society, Oxford University Press
    Fazili, F. M (2014) Breeding biology of Indian whiskered tern Chlidonias hybrida indica (Stephens) at lake Wular Kashmir, Nature and Science 2014; 12(3)
    Grubh. R (2012): Wetland Birds of Tamil Nadu, Institute for Reservation of Natural Environment
    Lewis T. NOTES ON THE BREEDING-HABITS OF THE LITTLE TERN, British Birds,Vol.XIV: 74-82
    Meng and Melinda Chan in 2005; Little Terns: Courtship behavior – Bird Ecology Study Group www.besgroup.org/2006/07/27/little-terns-courtship-behaviour/Observations were made by. All images by them.
    Paul R. Ehrlich, David S. Dobkin, and Darryl Wheye,1988,”Courtship and Feeding “

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது.

    “எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

    “அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் போது தனக்கு அணியப் பூட்ஸ் அவசியமா அல்லது தன் சடலத்திற்குச் செருப்புகள் தேவையா என்று பகுத்தறிய வாய்ப்பு அருளப்படவில்லை”.

    “நான் மனிதனாக இருந்த போது உயிரோடு இருந்ததின் காரணம் ஒரு வழிப்போக்கனும் அவன் மனைவியும் காட்டிய இரக்கத்தாலும் அன்பினாலுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. அந்த அனாதைச் சிறுமிகள் இப்போது உயிரோடு இருப்பது அவர்களின் தாயின் வளர்ப்பல்ல. ஒரு அந்நியப் பெண்ணின் கருணையினாலும் அன்பினாலும் தான்.
    எல்லா மனிதர்களும் வாழ்வதின் காரணம் மனிதனில் காணப்படும் அன்பினால்தான். ஒருவருடைய தனி முயற்சியால் அல்ல. இறைவன் மனிதர்களுக்கு எது தேவை என்று வெளிப்படுத்தவில்லை. மனிதர்கள் தனித்து வாழ்வதை அவர் விரும்பாமல் அன்பினால் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்புகிறார்.

    அன்பாயிருப்பவனிடத்தில் இறைவன் குடியிருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார்”.

    இவைகளைக் கூறி முடித்த பின் அவன் இறைவனைத் துதித்தான். அவனுடைய குரலால் அந்தக் குடிசை நடுங்கியது. கூரை திறந்து அக்னி ஜூவாலை வானை நோக்கி எழும்பியது. தேவ தூதனுக்குச் சிறகுகள் தோன்றி பரலோகம் சென்றான். சைமனும், மனைவியும் குழந்தைகளும் கீழ் விழுந்து அவனை வணங்கினர்.
    சைமன் தன்னிலைக்கு வந்தபோது அந்தக் குடிசை எப்போதும் போலிருந்தது. அவனும் குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு ஒருவரும் அங்கு இல்லை.

    முற்றும்

    Share
  • சங்க இலக்கியத்தில் ஒளவையார் வர்ணித்திருக்கும் “குரீஇயினம்”

    -சற்குணா பாக்கியராஜ் 

                  “————————————பாரி பறம்பின்
    நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
    முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
    இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
    படர் கொள் மாலை படர்தந்தாங்கு (ஒளவையார், அகநானூறு: 303: 10-15)

    இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.

    மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.

    இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, p,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.

    திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, p, 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted  or  the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா)  என்று கொள்ள வேண்டுமென்கிறார்.

    சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374,  புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும்  குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.

    கிளிகளைச் சங்க இலக்கியத்தில் சிறு கிளி ( ஐங்குறுநூறு : 282, 283, 285), செந்தார்க்கிளி (அகம்:242), மடக் கிளி (அகம்:38), செவ்வாய்ப் பைங்கிளி (ஐங்குறுநூறு :284, நற்றிணை: 317), என்று வர்ணித்துள்ளனர். ஐங்குறுநூற்றில் கபிலர்  குறிஞ்சித் திணையில் ( பாடல்கள் 281-290) “கிள்ளைப் பத்து” என்ற பகுதியில் மலைச் சாரல்களில் விதைக்கப்பட்ட தினையின் கதிர்களைக் கிளிகள் கவரச் செல்லும் து இளம் பெண்கள் அவைகள விரட்டினர் என்று வர்ணித்துள்ளார்.

    திரு. பி. எல். சாமியின் கருத்துப்படி ஒளவையார் வர்ணித்திருக்கும்  “குரீஇயினம்” முனியாக் குருவிகளே, கிளிகள் அல்ல என்றால்  முனியாக் குருவிகள் எவை, கிளிகள் எவை, அவைகளின் வாழுமிடங்கள், உணவு, உணவு தேடும் முறைகளை பறவையியல் மூலமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

     பறவையியலில் முனியாக் குருவிகள் ( Munia-Lonchura):

    முனியாக் குருவிகளைத் தமிழகத்தில் “சில்லை” அல்லது “ராட்டினம்” என்றும், ஆங்கிலத்தில் முனியாக்கள் என்றும் அழைக்கின்றனர். திரு. பி. எல். சாமி, தன்னுடைய நூலில், “நாட்டுமக்கள் சில முனியாக் குருவிகளைக் கருப்புவரையன் சிட்டு, கருடவரிச்சிட்டு, ஆழ்வார்சிட்டு என்றும் அழைப்பர்” என்கிறார்.

     முனைவர் சலீம் அலி, தன்னுடைய “The Birds of India, ( Salim Ali, 1996, pp. 304-307) என்ற நூலில் “கருப்புத் தலை முனியா, புள்ளி முனியா, வெண்தொண்டை முனியா, வெள்ளை முதுகு முனியாக் குருவிகளை தமிழகத்திலும் இலங்கையிலும் நெல்லுக் குருவிகள், தினைக் குருவிகள் என்று அழைக்கின்றனர்” என்று குறித்துள்ளார்.

    முனியாக் குருவிகள் சிட்டுக் குருவிகளை விட உருவத்தில் சற்று சிறியவை.  உலகம் முழுவதிலும் நாற்பத்தியொரு வகை முனியாக் குருவிகள் உள்ளன என்று அறியப்படுகிறது.  இவை ஆசியா, சீனா, மேற்கு ஆப்பிரிக்கா முதல் அரேபியன் பெனின்சுலா, நியூ கினியா, ஆஸ்திரேலியா, பங்களா தேசம், இலங்கை, பாகிஸ்தான், போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.  இந்தியாவில் காணப்படும் ஏழுவகை முனியாக் குருவிகளில், ஐந்து அல்லது ஆறு வகைகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.  இவை கருப்புத்  தலை முனியா (Black-headed Munia), கருப்புக் தொண்டை முனியா (Rufousbellied Munia or Chestnut Munia), புள்ளி முனியா (Spotted Munia), சிவப்பு முனியா (Red Munia), வெண் தொண்டை முனியா (White-thorated Munia), வெள்ளை முதுகு முனியா (White-backed Munia) என்பவையாகும்.

    வாழும் இடங்கள்:

    முனியாக் குருவிகள்  வறண்ட சவானா, மலைப் பகுதிகள், பரந்த புல்வெளிகள், அறுவடை முடிந்த வயல்கள், நெல், கேழ்வரகு விளையும் நிலங்கள், மூங்கில் புதர்கள், கரும்பு விளையும் நிலங்கள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. கருப்புத் தொண்டை முனியாக் குருவிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் வாழ்கின்றன, வெண் தொண்டை முனியாக் குருவிகள் வறண்ட திறந்த புல்வெளிகளை விரும்புகின்றன.

    உணவும்,  உண்ணும் முறையும்: 

    முனியாக் குருவிகளின் முக்கிய உணவு தானியங்களாகும் ( granivorous). புல் விதைகள், நெல், தினை போன்ற தானியங்களை விரும்பி உண்கின்றன. முனியாக் குருவிகள் முக்கியமாகத் தினை, நெல் பால் கட்டும் பருவத்திலிருந்து  தானியங்கள் முற்றும் வரை உண்ணுகின்றன.

    முனைவர் தாமஸ், கேரள நாட்டில் நெல் விளையும் வயல்களில் முனியாக் குருவிகள்  உணவு உண்ணும் முறைகளை ஆராய்ந்தபோது “முக்கியமாகப் புள்ளி முனியாவும், வெண் முதுகு முனியாவும் அதிகமாகக் காணப்படுகின்றன, இவை நெற்கதிர்களில் அமர்ந்து நெல்லைத் தனித்தனியாகக் கொத்தி, தோலை நீக்கி உண்கின்றன. சில நிமிட நேரங்கள் உண்ட பின் வயலருகேயுள்ள வாழைத் தோட்டங்களிலும் மூங்கில் புதர்களிலும் அடைந்து சிறிது  நேரத்திற்குப் பின் நெல்லை உண்ண வயலுக்குத் திரும்பிப் பலமுறை வந்து போகின்றன. அருகில் அடைய மரமோ, புதிர்களோ இல்லையென்றால் திரும்பி வருவதில்லை” என்று கண்டுள்ளார் ( தாமஸ், S.T, 2006 ).

    இனப்பெருக்கம் செய்யாத காலங்களில், முனியாக் குருவிகள் இரைதேடும் நேரங்களிலும், அடையும் நேரங்களிலும்  ஐந்து அல்லது ஆறு குருவிகள்அடங்கிய சிறு கூட்டமாகவோ அல்லது நூறு அல்லது இருநூறு குருவிகள் அடங்கிய பெருங் கூட்டமாகவோ  காணப்படுகின்றன. இரவில் மரக்கிளைகளில் அடைகின்றன. மேற்கு ஆஸாமில் நெற் பயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் தூக்கணாங் குருவிகளைப் பற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் சேகரித்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்புத் தலை முனியாக் குருவிகளையும் புள்ளி முனியாக் குருவிகளையும்  பயிர் விளையும் இடத்தில் கண்டதாகப் குறித்துள்ளனர் (B. C. Saha and A. K. Mukherjee, JBN HIST, VOL. 75, pp 221-223).

    முனியாக் குருவிகள் கூட்டமாக இருக்கும் போது சிறு சலனம் ஏற்பட்டாலும் அலையலையாகப் பறக்கின்றன (“undulating rabble” by ornithologists).  இவை ஒரே வரிசையாகப் பறப்பதில்லை.

    செந்தார்க் கிளி ( Roseringed Parakeet ): 

    பறவையியலில் இவை Roseringed parakeets ( Psittacila krameri) என்று அழைக்கப்படுகின்றன. இவை உருவத்தில் மைனாவை ஒத்திருக்கின்றன. ஆண் பறவையின் கழுத்தில் சிவப்பு- கறுப்பு நிறத்தில் வளையம்காணப்படும். பெண் கிளிக்கு இந்த வளையம் கிடையாது.  H. Whistler (ornithologist) தன்னுடைய நூலில் (“Popular Handbook of Indian Birds”, 1963), இந்தவகைக் கிளிகள் ( Roseringed Parakeets) மிகவும் வேகமாகப் பறக்கக் கூடியவை. மாலை நேரங்களில் கூட்டங்களாகப் பறந்து மரங்களில் அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    “The flight is very swift and straight and these birds have the habit of an evening roosting flight flock after flock hurrying in succession along the same line to some patch of trees where they roost in company with flocks of Crows and Mynahs”. 

    காணப்படும் இடங்கள்: 

    இந்தக் கிளிகள் பங்களாதேசம், பாகிஸ்தான், இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளிலும் இந்தியாவில் உயர்ந்த மலைப் பகுதிகளையும் அடர்ந்த காடுகளையும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. 

    உணவும் உண்ணும் முறையும்:

     தினை, நெல் போன்ற தானியங்கள், அவரைக்காய் வகை, பழ வகைகள் முக்கிய உணவாகும். இரைதேடும் நேரங்களில் கூட்டமாகச் சென்று விளைந்த பயிர்கள், பழங்களைத் தேவைக்கு மேல் கொத்தியும், கடித்தும் வீணாக்கிப் பெருத்த சேதம் விளைவிக்கின்றன. கிளிகள்  நெல் பயிர்செய்யப்படும் இடங்களில் சிறு கூட்டங்களாக வந்து முதிர்ந்த கதிர்களை அலகினால் கொய்து, அருகிலுள்ள மரங்களுக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு விதையையும் அலகினால் எடுத்துத் தோலை நீக்கி உண்கின்றன. கதிரிலுள்ள எல்லா தானியத்தையும் உண்ணாமல் அடுத்தடுத்துப் புதிய கதிர்களைக் கொய்து வீணாக்குகின்றன ( தாமஸ், S.T,2006 ).

    முடிவு:

    ஒளவையார் வர்ணிக்கும் “குரீஇயினம்” கிளிகளா? முனியாக் குருவிகளா? பறவையியலையும் சங்க இலக்கியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பறவையியலில் கிளிகளும், முனியாக் குருவிவிகளும் இரைதேடும் நேரங்களிலும் அடையும் நேரங்களிலும் கூட்டமாகக் காணப்படுகின்றன. இவைகளை மலைச்சாரல்களில் காண முடியும். இரண்டு வகைப் பறவைகளும் நெல், தினை போன்ற  தானியங்களை உணவாகக் கொள்கின்றன.

     இந்தப் பறவைகளில் முக்கியமான வேறுபாடு என்னவெனில், முனியாக் குருவிகள் கதிர்களில் அமர்ந்து உண்கின்றன, கிளிகள் கதிர்களைக் கவர்ந்து கொண்டு பறந்து செல்கின்றன.

    புள்ளி முனியா, கருப்புத் தலை முனியா, வெண் முதுகு முனியாக்கள் நெல், தினை போன்ற தானியங்களை உண்பதால் இவைகளை நெல் குருவிகள், தினைக் குருவிகள் என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தக் குருவிகள் தானியக் கதிர்களைக் கவர்ந்து பறந்து செல்லாததால், அகநானூறூ 303-ஆம் பாடலில் வர்ணிக்கப்பட்டுள்ள குரீஇயினம், திரு. பி. எல். சாமியின் கருத்துப்படிக் கிளிகள் அல்ல, முனியாக் குருவிகளே என்பது கேள்விக் குறியாகவுள்ளது.

    சங்க இலக்கியத்தில்  குரீஇ என்னும் சொல் சிறு குருவிகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அகநானூறு: 303 ஆம் பாடலில் புலவர் எந்தச் சிறு குருவியைக் குறிப்பிடுகிறார் என்பதைப் படிப்பவர்கள் ஊகிக்க வேண்டியுள்ளது. கிளிகள் நெல்லைக் கவர்ந்து செல்கின்றன ஆனால் இவை சிறு குருவிகளல்ல.முனியாக் குருவிகள் கதிர்களைக் கவர்ந்து பறந்து செல்வதில்லை.

    இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒளவையார் வர்ணித்த குரீஇயினம் கிளிகளா அல்லது முனியாக் குருவிகளா என்று உறுதியாக வரையறுப்பது கடினம்.

    References:

    அகநானூறு: நித்திலக்கோவை, உரை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், கழக வெளியீடு, 2008

    Picture:  https://www.inditales.com  “SUNDAY SHOT: ROSE RINGED PARAKEET IN FLIGHT – BIRDING INGO”2014, by Anuradha Goyal Saha, B. C., and A. K. Mukherjee. 1978. Notes on the food of black-headed munia and the spotted munia in South Kamrup District, Western Assam (India). J. Bombay, Nat. Hist. Soc. 75:221·224.

    The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)

    Thomas. A.T “Ecological studies on certain species of granivorous birds in Malabar” Thesis. Department of Zoology, University of Calicut, 200

    கருப்புத் தலை முனியாக் குருவிகள், புதுக் கோட்டை, La Paz Group, நன்றி, கூகிள்

    புள்ளி முனியா (Spotted Munia- Lonchura  punctulata)

    கருப்புத் தலை முனியா (Lonchura Malacca)  (நன்றி கூகிள்)

    Parrot carrying rice stalk from a paddy field in Goa,

    https://www.inditales.com With kind permission from the photographer Ms. Goyal

    இலங்கையில் நெல்கவரும் கிளிகள், நன்றி கூகிள்

     

     

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12

     லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது. “எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
    “அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் போது தனக்கு அணியப் பூட்ஸ் அவசியமா அல்லது தன் சடலத்திற்குச் செருப்புகள் தேவையா என்று பகுத்தறிய வாய்ப்பு அருளப்படவில்லை”.

    “நான் மனிதனாக இருந்த போது உயிரோடு இருந்ததின் காரணம் ஒரு வழிப்போக்கனும் அவன் மனைவியும் காட்டிய இரக்கத்தாலும் அன்பினாலுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. அந்த அனாதைச் சிறுமிகள் இப்போது உயிரோடு இருப்பது அவர்களின் தாயின் வளர்ப்பல்ல. ஒரு அந்நியப் பெண்ணின் கருணையினாலும் அன்பினாலும் தான்.

    எல்லா மனிதர்களும் வாழ்வதின் காரணம் மனிதனில் காணப்படும் அன்பினால்தான். ஒருவருடைய தனி முயற்சியால் அல்ல. இறைவன் மனிதர்களுக்கு எது தேவை என்று வெளிப்படுத்தவில்லை. மனிதர்கள் தனித்து வாழ்வதை அவர் விரும்பாமல் அன்பினால் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்புகிறார். அன்பாயிருப்பவனிடத்தில் இறைவன் குடியிருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார்”.

    இவைகளைக் கூறி முடித்த பின் அவன் இறைவனைத் துதித்தான். அவனுடைய குரலால் அந்தக் குடிசை நடுங்கியது. கூரை திறந்து அக்னி ஜூவாலை வானை நோக்கி எழும்பியது. தேவ தூதனுக்குச் சிறகுகள் தோன்றி பரலோகம் சென்றான். சைமனும், மனைவியும் குழந்தைகளும் கீழ் விழுந்து அவனை வணங்கினர்.
    சைமன் தன்னிலைக்கு வந்தபோது அந்தக் குடிசை எப்போதும் போலிருந்தது. அவனும் குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு ஒருவரும் அங்கு இல்லை.

    முற்றும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 11

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    சைமனும், மெட்ரீனாவும் தாங்கள் இதுவரையிலும் யாருக்கு உணவும், உடையும், அடைக்கலமும் கொடுத்திருந்தனர் என்று உணர்ந்த போது அளவில்லாத ஆச்சரியமும், மகிழ்ச்சியுமடைந்து கண்ணீர் விட்டனர். மைக்கேல் மேலும் தொடர்ந்து “நான் மனிதனாகித் தனியாகவும் நிர்வாணமாகவும் விடப்பட்டேன். அது வரையிலும் மனிதனுடைய தேவைகளும், பசி பட்டினி, குளிர் ஒன்றும் அறியாதவனாக இருந்தேன். நான் குளிரில் உறைந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற போது எதிரில் ஒரு சிறிய தேவாலயத்தைக் கண்டேன். அங்குச் சென்ற போது ஆலயத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆகவே குளிருக்கு ஒதுங்க ஆலயத்தின் பின்பறம் சென்று அமர்ந்தேன். மாலை வேளை நெருங்கிய போது குளிரும், பசியும், உடல் வேதனையும் அதிகரித்தது. அப்போது திடீரென ஒரு மனிதனின் குரல் கேட்டது. அவன் ஒரு சோடிச் செருப்புகளைக் கையில் ஏந்திக் கொண்டு தனிமையிலே பேசிக் கொண்டு சென்றான். நான் மனிதனாக மாறிய பின்பு பார்த்த முதல் மனித முகம் அவனுடையதுதான். அவன் முகம் மிகவும் விகாரமாகக் காணப்பட்டதால் தலையைக் குனிந்து கொண்டேன். இங்கு நான் பசியிலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த போது அவன் குளிர்காலத்தில் எப்படித் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுவது, போஷிப்பது என்று பேசிக் கொண்டு சென்றான். அவன் முதலில் என்னைப் பார்த்து அறுவெறுப்படைந்து அங்கிருந்து விலகிச் சென்றான். எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. சிறிது நேரத்தில் அவன் திரும்பி வரும் சத்தம் கேட்டது. நான் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மரணக்களையாக இருந்த முகம் இப்போது தெளிவாக இருந்தது. இறைவனின் பிரசன்னத்தை அவனில் கண்டேன். அவன் என்னைத் தூக்கி விட்டு ஆடை அணிவித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் நுழைந்த போது ஒரு பெண் எங்களைச் சந்தித்தாள். அவள் முகம் அவனுடைய முகத்தை விட விகாரமாக இருந்தது. அவள் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளில் மரணத்தின் ஆவி நிறைந்திருந்தது. அவளைச் சுற்றியிருந்த மரணத்தின் வாடையால் எனக்கு மூச்சு விட முடியவில்லை. அவள் என்னைக் குளிருக்குள் துரத்த மனமுடையவளாக இருந்தாள். அவள் அப்படிச் செய்தால் மரணமடைவாளென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

    அந்த நேரத்தில் அவள் கணவன் அவளிடம் இறைவனைப் பற்றி பேசின போது அவள் மனம் மாறியது. அவள் எனக்கு ஆகாரம் கொண்டு வந்து கொடுத்த போது அவள் முகத்தைப் பார்த்தேன். அவளிடமிருந்த மரணக்களை மாறி இறைவன் குடியிருப்பதைக் கண்டேன். அப்போது இறைவன் கேட்டிருந்த முதல் உண்மையைத் தெரிந்து கொண்டேன். “மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? “மனிதனினுள் வாசமாயிருப்பது அன்பு”. இறைவன் என்னை மறக்காமல் முதல் உண்மையை வெளிப் படுத்தியுள்ளார் என்று நினைத்து முதல் முறையாகப் புன்னகைத்தேன்.
    நான் உங்களோடு தங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. ஒரு நாள் ஒரு மனிதன் வந்து தனக்குப் பூட்ஸ்கள் தைக்க வேண்டும், அவை ஒரு வருடம் உருக் குலையாமலும், தையல் பிரியாமலும் இருக்க வேண்டுமென்றான். நான் அவனைப் பார்த்த போது அவன் பின்னால் மரண தூதன் நின்று கொண்டிருந்தான். அவன் என்னுடைய தோழன். வேறு யாரும் அவனைக் காணவில்லை. அன்று மாலைக்குள் அந்த மனிதனின் ஆத்துமாவை எடுத்துச் செல்வான் என்று தெரியும். ஆனால் அது தெரியாமல் அந்த மனிதன் பூட்ஸ்கள் ஒரு ஆண்டு உழைக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது எது?, மனிதனுக்கு அருளப்படாதது அவனுக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள முடியாதுதான்”. என்னுடைய தோழனைப் பார்த்ததாலும், இரண்டாவது உண்மையை அறிந்து கொண்டதாலும் இரண்டாவது தரம் புன்னகைத்தேன்.

    கடைசி உண்மையைத் தெரிந்து கொள்ள உங்களோடு தங்கியிருந்தேன். ஆறு வருடங்கள் சென்று விட்டன. இன்று அந்த இரட்டைச் சிறுமிகள் அந்தப் பெண்ணோடு வந்த போது அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அந்தச் சிறுமிகளின் தாயின் ஆத்துமாவை எடுக்கச் சென்ற போது அவள் தன் ஆத்துமாவை எடுக்க வேண்டாமென்று கெஞ்சி, “ தாயும், தந்தையும் இல்லாமல் குழந்தைகள் வாழ முடியாதென்று” சொன்னதை நான் நம்பினேன். ஆனால் அந்த அன்னியப் பெண் சிறுமிகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்துப் பாலூட்டி, அன்புசெலுத்தி வளர்த்த விதமும், அவர்களுக்காகக் கண்ணீர் விட்ட போது அவளிடம் உயிருள்ள இறைவன் இருப்பதைக் கண்டு மூன்றாவது உண்மையை “எதனால் மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்பதைப் புரிந்து கொண்டேன். இறைவன் என் பாவத்தை மன்னித்து விட்டார் என்று உணர்ந்ததால் மூன்றாம் முறை புன்னகைத்தேன்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 10

     

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அந்தப் பெண்ணும் சிறுமிகளும் போன பின்பு மைக்கேல் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி சைமனையும், மெட்ரீனாவையும் வணங்கி, “நான் இப்போது உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இறைவன் என்னை மன்னித்து விட்டார். இத்தனை ஆண்டுகளும் எனக்கு உணவு, உடை, தங்க இடம் கொடுத்ததற்காக மிகவும் நன்றி. நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றான்.

    மைக்கேல் மேலிருந்து வெளிச்சம் பிரகாசிப்பதை கண்ட சைமன் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி, “மைக்கேல், நீ சாதாரண மனிதனல்ல. இங்கு உன்னைத் தங்க வைப்பதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ என்னால் முடியாது. ஆனால் இதை மட்டும் சொல். உன்னை நான் சந்தித்த போதும், வீட்டிற்கு அழைத்து வந்த நேரத்திலும் உன் முகம் மிகவும் இருண்டு போயிருந்தது. ஆனால் என் மனைவி, உனக்கு உணவு கொடுத்த போது முதல் தடவையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தாய். அதன் பின் அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், இன்று மூன்றாவது தடவையாக அந்தப் பெண்ணும், சிறுமிகளும் வந்த போதும் புன்னகை புரிந்தாய். மூன்று முறைகளும் உன் முகம் பிரகாசித்தது. இன்று உன் முகம் பகல் வெளிச்சம் போலிருக்கிறது. ஏன் உன் முகம் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? ஏன் மூன்று தடவைகள் மாத்திரம்தான் புன்னகைத்தாய்? சொல்லமாட்டாயா?” என்று கேட்டான்.

    அதற்கு மைக்கேல், “வெளிச்சம் என் மேல் பிரகாசிப்பதின் காரணம், இறைவன் என் தண்டனையை மன்னித்து விட்டார். மூன்று தடவைகள் புன்னகைத்ததின் காரணம், இறைவன் மூன்று உண்மைகளை அறிந்து கொள்ள என்னை இங்கு அனுப்பினார். நான் மூன்று உண்மைகளையும் அறிந்து கொண்டேன். உன் மனைவி உணவு கொடுத்த போது முதல் உண்மையை அறிந்து கொண்டேன். இரண்டாவது உண்மை, அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், மூன்றாவது உண்மையை அந்தச் சிறுமிகளைக் கண்ட போது புரிந்து கொண்டேன். ஒவ்வொரு உண்மையும் தெரிய வந்த போது புன்னகைத்தேன்” என்றான்.

    “மைக்கேல், இறைவன் ஏன் உன்னைத் தண்டித்தார்? அந்த மூன்று உண்மைகளும் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று சைமன் கேட்டான்.

    “நான் பரலோகத்திலுள்ள தூதன். இறைவனுக்கு நான் கீழ்ப்படியாததால் தண்டிக்கப் பட்டேன். அவர் என்னைப் பூலோகத்திற்குச் சென்று ஒரு பெண்ணின் ஆத்துமாவை எடுத்துக் கொண்டு போக அனுப்பினார். நான் பூலோகத்திற்கு வந்து அவளைப் பார்த்த போது, அவள் அப்போதுதான் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். அவளால் இரண்டு குழந்தைகளைத் தூக்கிப் பால் கொடுக்கச் சக்தியற்றவளாகக் காணப்பட்டாள். அவள் என்னைப் பார்த்த போது தன் ஆத்துமாவை எடுத்துச் செல்ல இறைவன் என்னை அனுப்பியுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு “இறைவனின் தூதனே, தயவு செய்து என் ஆத்துமாவைக் கொண்டு போகாதே. என் கணவனும் மரம் மேல் விழுந்து நசுங்கி இறந்து விட்டார். எனக்கு உற்றார், உறவினர் எவரும் கிடையாது. நான் இறப்பதற்கு முன்னால் இந்தக் குழந்தைகளுக்குப் பாலுட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகள் தாயும், தந்தையுமில்லாமல் வாழ முடியாது” என்று கூறி அழுதாள்.

    என் மனம் அவளுக்காக உருகியது. நான் ஒரு குழந்தையைத் தூக்கி அவள் பால் கொடுக்கப் படுக்க வைத்து விட்டு, மற்ற குழந்தையை அவள் கரங்களில் கொடுத்து விட்டுப் பரலோகம் சென்றேன். நான் இறைவனிடம் சென்று “அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை. அவள் கணவன் மேல் மரம் விழுந்து நசுங்கி இறந்து விட்டான். அவளுக்கு இப்போதுதான் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவள் என்னிடம், குழந்தைகள் வளர்ந்து தங்கள் கால்கள் ஊன்றி நிற்கும் வரைக்கும் நான் உயிர் வாழ வேண்டும். பிள்ளைகள் தாயும் தந்தையுமில்லாமல் வாழ முடியாதென்று சொல்லி அழுதாள். ஆகையால் அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை”, என்றேன்.

    அதற்கு இறைவன், ”நீ திரும்பிப் போய், அந்தத் தாயின் உயிரை எடு. அதன் பிறகு மூன்று உண்மைகளைத் தெரிந்த பின் பரலோகம் திரும்பி வா” என்றார். முதல் உண்மை மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது என்ன?” மூன்றாவது “மனிதர்கள் எதினால் வாழ்கிறார்கள்?”.

    தொடரும்

    “நான் திரும்பி பூமிக்கு வந்து அந்தத் தாயின் ஆத்மாவை எடுத்தேன். அந்தக் குழந்தைகள் அவள் மார்பிலிருந்து விழுந்தன. அவள் சடலம் படுக்கையில் உருண்டு விழுந்ததால் ஒரு குழந்தையின் கால் நசுங்கி விட்டது. நான் அவள் ஆத்துமாவை இறைவனிடம் கொண்டு செல்லப் பறந்த போது பெருங் காற்று அடித்த வேகத்தில் என் சிறகுகள் தொய்ந்து கீழே விழுந்து விட்டன. அவள் ஆத்துமா தனியாக இறைவனிடம் சென்று விட்டது. நான் பாதையோரம் விழுந்து விட்டேன்”.

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 9

    By
    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அந்தப் பெண், தன்னிடம் சிறுமிகள் வந்து சேர்ந்ததை விவரித்தாள். “ஆறு வருடங்களுக்கு முன்பு, ஒரே வாரத்தில் இவர்கள் பெற்றோர் இறந்து விட்டனர். தந்தை மரம் வெட்டுபவன். ஒரு நாள் மரம் வெட்டும் போது அவன் மேல் மரம் விழுந்து வயிறு நசுங்கி விட்டது. உடலை வீட்டிற்க்குக் கொண்டு வரும் முன்பே அவன் உயிர் பிரிந்து விட்டது. ஊரார் அவனை அடக்கம் பண்ணினர். மூன்று நாட்களுக்குப் பின் அவன் மனைவி இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவள் மிகவும் ஏழை. அவளுக்கு உற்றார், உறவினர் ஒருவரும் கிடையாது. பிரவசத்தின் போதோ அல்லது மரணத்தின் போதோ ஒருவரும் அருகில் இல்லை.

    நானும் என் கணவரும் அடுத்த குடிசையில் வாழ்ந்து வந்தோம். குழந்தைகள் பிறந்த மறுநாள் காலை அவளைப் பார்க்கச் சென்ற போது அவளுடைய இறந்த உடல் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தது. அவள் சடலம் குழந்தையின் மேல் உருண்டு கால் நசுங்கி விட்டது.

    ஊரிலுள்ளவர்கள் ஒன்று கூடிச் சடலத்தைக் கழுவி அடக்கம் பண்ணின பின்பு குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழும்பியது. எனக்குக் குழந்தை பிறந்து எட்டுவாரங்களாகியிருந்து. ஊரில் நான் மட்டும்தான் பாலூட்டும் தாயாக இருந்ததால் இந்தக் குழந்தைகளுக்கும் பால் கொடுத்து வளர்க்க ஒப்புக் கொண்டேன். ஊர்க்காரர்களும் “இப்போது நீ குழந்தைகளைக் கவனித்துக் கொள், அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிப் பின்பு நாம் ஒரு முடிவெடுக்கலாம்” என்றனர். முதலில் ஊனமுற்ற குழந்தைக்கு நான் பால் கொடுப்பதில்லை. அந்தக் குழந்தை பிழைக்காது என்று நினைத்தேன். ஆனால் ஏன் ஒன்றுமறியாத குழந்தை துன்ப படவேண்டும் என்று நினைத்து அதற்கும் பால் கொடுக்க ஆரம்பித்தேன். நான் இளமையாகவும், நல்ல உடல் பலத்தோடும் இருந்ததால் தேவைக்கு அதிகமாகப் பால் சுரந்தது. இறைவனின் சித்தப்படி இந்தக் குழந்தைகள் நன்றாக வளர்ந்தனர். ஆனால் என் மகனோ இரண்டு வயதான போது இறந்து விட்டான். எங்களுக்குச் செல்வம் பெருகிய போதிலும் எனக்கு வேறு குழந்தைகள் பிறக்கவில்லை. என் கணவருக்கு ஒரு ஆலையில் வேலை கிடைத்தது. நல்ல வருமானம் இருப்பதால் கவலையில்லாமல் வாழ்கிறோம். இவர்கள் இல்லாவிட்டால் என் வாழ்க்கை வறண்டு போயிருக்கும். இந்தச் சிறுமிகள் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நான் எப்படி நேசிக்காமல் இருக்கமுடியும்?”, என்று சொல்லிக் கொண்டு ஊனமுற்ற சிறுமியை அணைத்துக் கொண்டு மற்ற சிறுமியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். மெடீனா அவள் சொல்லி முடித்தை கேட்டுத் “தாயும், தந்தையும் இல்லாமல் ஒருவரால் வாழ முடியும். ஆனால் கடவுள் இல்லாமல் வாழ முடியாது, என்ற பழமொழி எவ்வளவு உண்மை” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

    அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மைக்கேல் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து திடீரென்று மின்னலடித்தது போல் வெளிச்சம் தோன்றி அந்தக் குடிசை முழுவதும் பிரகாசமடைந்தது. எல்லோரும் அவனைப் பார்த்த போது மைக்கேல் உட்கார்ந்து கைகளைக் குவித்துக் கால் முட்டுக்களில் ஊன்றி மேலே நோக்கிப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (8)

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    வருடங்கள் வந்து மறைந்தன. மைக்கேல், சைமன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்களாகி விட்டன. மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. அவசியத்திற்கு மாத்திரம் பேசினான். இந்த ஆறு வருடங்களில் இரண்டு முறைதான் புன்னகைத்திருந்தான். முதல் முறை மெட்ரீனா உணவு கொடுத்த போதும், இரண்டாவது செல்வந்தர் பூட்ஸ் தைக்க வந்த போதும்தான். சைமன் மைக்கேலிடம் எங்கிருந்து வந்தாயென்று கேட்பதேயில்லை. அவன் தன் வீட்டிலிருந்து போய் விடக்கூடாதே என்றுதான் கவலைப்பட்டான்.

    ஒரு நாள் காலை, என்றும் போல் மைக்கேலும் சைமனும் சன்னல் அருகிலிருந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். சைமனின் பிள்ளைகளும் அருகேயிருந்து விளையாடிக் கொண்டிருந்தனர். தீடிரென்று ஒரு மகன், விளையாடுவதை நிறுத்தி விட்டு, மைக்கேலை அணுகி, “மாமா, கொஞ்சம் வெளியே பாருங்கள். ஒரு அம்மா இரண்டு சிறுமிகளைக் கூட்டிக் கொண்டு நம் வீட்டை நோக்கி வருகிறார்கள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு வருகிறாள்”, என்றான். உடனே மைக்கேல் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டுச் சன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தான். சைமனுக்கு ஒரே ஆச்சரியம். இத்தனை ஆண்டுகளும் மைக்கேல் தெருவைப் பார்த்ததில்லை. சைமனும் தெருவைப் பார்த்தான். ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு நடந்ததைத் தவிர இரண்டு பேரும் பார்வைக்கு ஒன்று போலிருந்தனர். இரண்டு சிறுமிகளும் உரோமக் கோட்டுகளும் சால்வைகளும் அணிந்திருந்தனர்.

    அந்தப் பெண்மணி, இரண்டு சிறுமிகளோடு சைமனின் குடிசைக்குள் நுழைந்து, மேசை அருகில் உட்கார்ந்தாள். இரண்டு சிறுமிகளும் புதிய மனிதர்களைக் கண்டு பயந்து அந்தப் பெண்மணியின் முழங்கால்களின் அருகே நின்று கொண்டனர். சைமன் அந்தப் பெண்மணியை வாழ்த்தி விட்டு “நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

    “இந்தச் சிறுமிகளுக்கு வசந்தக் காலத்திற்கு அணியச் சப்பாத்துகள் வேண்டும்” என்றாள்.

    “நாங்கள் இதுவரையிலும் இவ்வளவு சிறிய சப்பாத்துகள் தைத்ததில்லை. ஆனால் தைக்க முடியும். எனக்கு உதவி செய்யும் மைக்கேல் இந்தச் சிறுமிகளின் சப்பாத்துகளைத் தைப்பானென்று கூறி விட்டு மைக்கேலைத் திரும்பிப் பார்த்தான். மைக்கேல் அந்தச் சிறுமிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு சிறுமிகளும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டார்கள். ஆனால் அவன் அந்தச் சிறுமிகளைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் அவர்களை அவனுக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும் போலிருந்தது. சைமனுக்குப் புதிராக இருந்தது. அவன் அதை வெளிக்காட்டாமல் அந்தப் பெண்மணியிடம் சிறுமிகளின் காலளவு எடுக்க வேண்டுமென்றான். அவள் ஊனமுற்ற சிறுமியை மடியில் இருத்தி, இவளுடைய கால்களின் அளவுகள் போதும். ஒரு அளவு ஊனமுற்ற காலுக்கும், மற்ற கால் அளவில் மூன்று சப்பாத்துகள் தைக்கலாம். ஏனென்றால் இவர்கள் இரட்டைக் குழந்தைகள். இரண்டு பேருடைய காலளவுகளும் ஒன்றுதான் என்றாள். சைமனும் காலளவுகளை எடுத்துக் கொண்டு “இந்த அழகிய சிறுமி பிறக்கும் போதே இப்படித்தான் பிறந்தாளா?”என்று கேட்டான்.

    “இல்லை, இவள் தாய் காலை நசுக்கி விட்டாள்”.

    இதுவரையிலும் அமைதியாக இருந்த மெட்ரீனா “அப்படியானால் இவர்கள் உன்னுடைய குழந்தைகளில்லையா?” என்று கேட்டாள்.

    “நான் இவர்களின் தாய் அல்ல, சொந்தமுமல்ல”, நான் இவர்களைத் தத்து
    எடுத்திருக்கிறேன்”.

    “அப்படியா, நீ இந்தக் குழந்தைகளிடம் இத்தனைப் பிரியம் வைத்திருக்கிறாயே!”, என்றாள் மெட்ரீனா.

    “எப்படி அன்பு வைக்காமல் இருக்க முடியும்? நான்தான் இவர்களுக்குப் பாலூட்டி வளர்த்தேன். எனக்கு ஒரு மகன் இருந்தான். அவன் இறந்து விட்டான். என் மகனை விட நான் இவர்களை நேசிக்கிறேன்”.

    “அப்படியானால் இவர்கள் யாருடைய குழந்தைகள்?”

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (7)

    லியோ டால்ஸ்டாய்  (Leo Tolstoy) 

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    சைமன், மைக்கேலிடம் அந்தச் செல்வந்தர் கொடுத்த விலையுயர்ந்த தோலைக் கொடுத்துக் கவனமாகப் பூட்ஸ்கள் தைக்கச் சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையில் ஆழ்ந்தான். மைக்கேல், தோலை மேசையில் விரித்து வெட்டத் தொடங்கினான். மெட்ரீனா, மைக்கேல் எப்படிப் பூட்ஸ்க்கு வெட்டுகிறான் என்று பார்க்க விரும்பி மேசை அருகில் வந்தாள். அவளுக்கும் பூட்ஸ், செருப்புகள் தைப்பது பற்றிக் கொஞ்சம் தெரியும். மைக்கேல், தோலைப் பூட்ஸ்க்கு வெட்டாமல் வேறு விதமாக வெட்டுவதைப் பார்த்து திகிலடைந்தாள். அவனுக்குத் தன்னைவிட அதிகம் தெரியுமென்று நினைத்து ஒன்றும் கேட்கவில்லை. சற்று நேரம் கழித்துத் திரும்பவும் வந்த போது அவன் பூட்ஸ்க்குப் பதில் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தான். மெட்ரீனாவின் மனதில் கவலை குடி கொண்ட போதும் மைக்கேலிடம் ஒன்றும் கேட்கவில்லை.

    இரவு சைமன் தன்னுடைய வேலையை முடித்து விட்டு மைக்கேல் முடித்து வைத்திருந்தை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தான். பூட்ஸ்களுக்குப் பதில் ஒரு சோடி மிருதுவான செருப்புகள்!! “மைக்கேல் இது வரையிலும் ஒரு தவறும் செய்ததில்லையே? அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் கேட்டிருந்தார். மைக்கேலோ மிருதுவான செருப்புகள் தைத்திருக்கிறான், அந்தச் செல்வந்தரிடம் நான் என்ன சொல்வேன்? இந்த விலையுர்ந்த தோலை என்னால் வாங்கிக் கொடுக்க முடியாதே” என்று கலங்கினான்.
    சைமன், மைக்கேலை நோக்கி, ”ஏன் இப்படிச் செய்தாய்?” அவர் பூட்ஸ்கள் கேட்டிருந்தார். நீ மிருதுவான செருப்புகள் தைத்திருக்கிறாய், நான் அழிந்து விடப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த போது யாரோ கதவைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர்கள் கதவைத் திறந்த போது, காலையில் அந்தச் செல்வந்தருடன் வந்த பணியாள் குதிரையிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்தான். சைமன் அவனை வீட்டிற்குள் அழைத்து “உனக்கு என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டான்.

    அதற்கு அந்தப் பணியாள், “என்னுடைய எசமானி, அந்தப் பூட்ஸ்கள் விஷயமாக இங்கு என்னை அனுப்பினாள்” என்றான்.

    “பூட்ஸ்களுக்கு என்ன?’

    “எசமானுக்குப் பூட்ஸ்கள் இனித் தேவையில்லை, அவர் இறந்துவிட்டார்”..
    “எப்படி நடந்தது?”.

    “நாங்கள் வீடு சென்றவுடன் பணியாட்கள் அவர் வண்டியிலிருந்து இறங்கக் கதவைத் திறந்த போது, அவர் இறந்து போயிருந்தார். அவருடைய விரைத்துப் போன சடலத்தை வண்டியிலிருந்து இறக்க மிகவும் கடினமாக இருந்தது. என் எசமானி, என்னிடம் இனி பூட்ஸ்கள் தேவையில்லை. சடலத்திற்கு அணிவிக்க மிருதுவான செருப்புகள் வேண்டும், எவ்வளவு நேரமானாலும் சரி, காத்திருந்து தைத்த பின் வாங்கிக் கொண்டு வா என்று கூறி அனுப்பினாள்” என்றான்.

    மைக்கேல் செருப்புகளையும், மீதியிருந்த தோலையும் சேர்த்துக் கட்டி அந்தப் பணியாளிடம் கொடுத்தான். அவனும் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றான்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (6)

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    மைக்கேல், சைமனின் வீட்டிற்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. மைக்கேல் காலை முதல் மாலை வரை செருப்புகள் தைத்தான். வேலை இல்லாத போது மெளனமாகக் கூரையைப் பார்த்துக் கொண்டிருப்பான். வீட்டை விட்டு வெளியே போவதோ பிறரிடம் பேசுவதோ கிடையாது. சைமன் வீட்டிற்கு வந்த முதல் இரவு மெட்டரீனா உணவு கொடுத்த போது அவன் புன்னகை செய்தது போல் மறுபடி ஒரு தடவையும் புன்னகை புரியவில்லை.

    ஒரு நாள் காலை சைமனும் மைக்கேலும் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். வெளியில் மூன்று குதிரைகள் பூட்டிய ஒரு அழகிய வண்டி வந்து அவர்கள் வீட்டின் முன் நின்றது. வண்டியின் முன் பகுதியிலிருந்து ஒரு பணியாள் இறங்கி வண்டியின் கதவைத் திறந்த போது, விலையுயர்ந்த உரோமக் கோட்டு அணிந்திருந்த ஒரு செல்வந்தர் சைமனுடைய வீட்டை நோக்கி வந்தார். மெட்ரீனா இருக்கையிலிருந்து எழுந்து, கதவை விரிவாகத் திறந்து வைத்தாள். வந்தவர் மிகவும் உயரமாக இருந்ததால், நிலைக் கதவு தலையில் இடிக்காமலிருக்க குனிந்து நுழைய வேண்டியிருந்தது. அவர் அறையினுள் நுழைந்து தலை நிமிர்ந்த போது தலை, கூரையைத் தொட்டு விடுவது போல் இருந்தது.

    வந்தவர், கோட்டைக் கழற்றி விட்டுப் பெஞ்சில் அமர்ந்து “உங்களில் யார் எசமான்?” என்று கேட்டார்.

    சைமன் பணிவுடன். “நான்தான் ஐயா’ என்றான்.

    அந்தச் செல்வந்தர் தன் பணிவிடையாளை அழைத்து, தான் கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த தோலை மேசை மேல் விரிக்கச் சொன்னார். பின் சைமனை நோக்கி “இது மிகவும் விலை உயர்ந்த தோல், ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டது. இதன் விலை இருபது ரூபிள்கள். நீ எனக்கு ஒரு சோடி பூட்ஸ்கள் தைக்க வேண்டும், பூட்ஸ்கள் குறைந்தது ஒரு ஆண்டு உழைக்க வேண்டும். அதற்கு முன்னால் தையல் பிரிந்து விட்டாலோ அல்லது பூட்ஸின் வடிவம் குலைந்து விட்டாலோ உன்னைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுவேன். பூட்ஸ் வடிவம் மாறாமலும், தையல் பிரியாமலும் இருந்தால் பத்து ரூபிள்கள் கொடுப்பேன்” என்றார்.

    சைமன், மிகவும் மெல்லிய குரலில், ”இந்த வேலையை எடுக்கலாமா?” என்று மைக்கேலைக் கேட்டான். அதற்கு மைக்கேல் மெளனமாகத் தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்தான்.

    சைமனும் அந்தச் செல்வந்தர் இட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்கி பூட்ஸ்த் தைக்க ஒப்புக் கொண்டு, அவருடைய கால் அளவுகளை வரைந்து கொண்டான். அவர் மைக்கேலைப் பார்த்து “இவன் யாரென்று” கேட்டார். அதற்கு சைமன், ”இவன் என்னுடன் செருப்புத் தைப்பவன். இவன்தான் உங்கள் பூட்ஸ்களைத் தைப்பான்” என்றான்.

    அவர் மைக்கேலைப் பார்த்து “நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள், பூட்ஸ் ஒரு வருடத்திற்குக் குறையாமல் உழைக்க வேண்டும்” என்றார். மைக்கேல் அவருக்குப் பதில் கொடுக்காமல் அவருடைய முதுகின் பின்னால், அறையின் மூலையில் யாரையோ பார்ப்பது போல் ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தவன், திடீரெனப் புன்னகை பூத்த போது அவன் முகம் பிரகாசமடைந்தது. அதைக் கவனித்த செல்வந்தர், “முட்டாள், ஏன் சிரிக்கிறாய், பூட்ஸ்களை ஒழுங்காகத் தைத்துக் குறித்த நேரத்தில் கொடுக்க வேண்டும்* என்றார். அதற்கு மைக்கேல் தகுந்த நேரத்தில் தைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டான்.

    அந்தச் செல்வந்தர் பெஞ்சிலிருந்து எழும்பி தன்னுடைய பூட்ஸ்களை அணிந்து கொண்டு உரோமக் கோட்டையும் போர்த்திக் கொண்டு வெளியே செல்லும் போது கதவருகே குனிந்து செல்ல மறந்து விட்டதால் தலை பலமாகக் கதவில் அடிபட்டு விட்டது. அவர் கோபத்துடன் தலையைத் தடவிக் கொண்டே வண்டியிலேறிச் சென்று விட்டார்.

    சைமன் இவ்வளவு திடகாத்திரமான மனிதரை இதுவரையும் பார்த்ததில்லை. ஆதலால் அவர் போன பின், “அவர் எப்படி வாட்ட சாட்டமாக இருக்கிறார், மரச்சுத்தியால் அடித்தாலும் கொல்ல முடியாது. தலை கதவில் இடித்த போது கூட ஒன்றும் ஆகவில்லை” என்று வியந்தான். “அவர் போல் செல்வந்தராக வாழ்ந்தால், ஏன் பலசாலியாக இருக்க முடியாது? “மலை போல் இருக்கும் போது, மரணம் கூடத் தொடமுடியாது” என்று மெட்ரீனாவும் ஆச்சரியப்பட்டாள்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 5

       தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    மறுநாள் காலை, சைமன் எழுந்த போது, மெட்ரீனா, அயல் வீட்டிலிருந்து ரொட்டி கடன் வாங்கச் சென்று விட்டாள். அந்தப் புதிய மனிதன், பெஞ்சின் ஒரத்தில் அமர்ந்து கைகளைக் கூப்பிக் கூரையை பார்த்த வண்ணமாக உட்கார்ந்திருந்தான். முகம் முந்தைய இரவை விடத் தெளிவாகவும் பிரகாசமாகவும் இருந்தது.

    சைமன், அவனைப் பார்த்து அவனுக்கு ஏதாவது தொழில் தெரியுமா என்று கேட்டான்.
    “எனக்கு ஒன்றும் தெரியாது”

    “உன் பெயரென்ன?

    “மைக்கேல்”
    “மைக்கேல், மனிதனுக்கு உணவும், உடையும் தேவை. உன்னைப் பற்றி நீ சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை. ஆனால் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். செருப்புத் தைக்கும் வேலையை நீ கற்றுக் கொண்டால் என்னுடன் தங்கியிருக்கலாம். உணவும் உறையிடமும் கொடுக்கிறேன்” என்றான். மைக்கேலும் அதற்கு இணங்கினான். சைமன் செருப்புத் தைக்கச் சொல்லிக் கொடுத்த போது மைக்கேல் மிகவும் எளிதாகப் புரிந்து கொண்டான். இரண்டு மூன்று நாட்களில் மிகவும் திறமையுடன் சைமனின் உதவி இல்லாமல் செருப்புகள் தைக்கத் தொடங்கி விட்டான். அவன் தைத்த செருப்புகள் போல் இது வரையிலும் ஒருவரும் தைக்கவில்லையாதலால், அவன் புகழ் எங்கும் பரவியது. பிற ஊர்களிலிருந்து மக்கள் வந்து செருப்புத் தைக்கக் கொடுத்தனர். சைமனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 4

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் 

    மெட்ரீனா கதவருகில் நின்று சைமனைப் பார்த்து, “அவன் நல்லவனாக இருந்தால் நிர்வாணமாக இருக்க மாட்டான். அவன் மீது ஒரு சட்டை கூட இல்லை. அவன் நல்லவனானால், நீ அவனை, எங்கே, எப்படிக் கண்டாயென்று சொல்லியிருப்பாய்” என்றாள். அதற்கு சைமன் “நானும் அதைச் சொல்வதற்குப் பல முறை முயற்சித்தேன், நீ இடங்கொடுக்கவில்லை” என்றான்.

    “நான் ஆலயத்தின் அருகே வந்த போது, இவன் நிர்வாணமாகக் குளிரில் உறைந்திருந்தான். இந்தக் கடுமையான குளிரில் எப்படி நிர்வாணமாக இருக்க முடியும்? இறைவன்தான் என்னை அங்கு அனுப்பியிருக்க முடியம். இல்லையென்றால் அவன் மரணமடைந்திருப்பான். நான் என்ன செய்வது? அவனுக்கு என்ன நடந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்? ஆகையால் நான் அவனுக்கு என் கோட்டைக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். மெடீனா, கோபப்படாதே. நாம் எல்லோரும் ஒரு நாள் மரணமடைவோம்”.

    மெடீனா கோபத்தில் பதில் சொல்ல நினைத்தவள் அந்த மனிதனைப் பார்த்து அமைதியானாள். அவன் கண்களை மூடி, கைகளை மடியில் வைத்துத் தலை குனிந்து பெஞ்சின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவன் புருவங்கள் சுருங்கி, வேதனையோடு இருப்பதைக் கண்டாள்.

    மெட்ரீனா அமைதியானாள். சைமன் அவளை நோக்கி “ மெட்ரீனா, உன்னிடம் இறைவனின் அன்பு இல்லையா?” என்று கேட்டான். அதைக் கேட்ட போது அவள் அந்த மனிதனைத் திரும்பவும் பார்த்தாள். அவள் மனம் திடீரெனெ இளகியது. கதவு அருகிலிருந்து விலகி அடுக்களைக்குச் சென்று குடிப்பதற்கு போதை கொடுக்காத திராவகத்தையும், மீதியிருந்த ரொட்டியையும் மேசை மீது கொண்டு வைத்துவிட்டு அவனைச் சாப்பிடச் சொன்னாள். சைமன் உணவைப் பகிர்ந்து கொடுத்தான். மெட்ரீனா மேசையின் மூலையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரெனெ அவள் மனம் இரக்கத்தால் நிறைந்து அவன்மேல் அன்பு கொண்டாள். உடனே அவன் முகம் பிரகாசமடைந்தது. அவன் கண்களை உயர்த்தி மெட்ரீனாவைப் பார்த்துப் புன்னகைத்தான். புருவங்களில் காணப்பட்ட சுருக்கங்களும், வேதனையும் மறைந்து விட்டன.

    அவர்கள் உண்டு முடித்த பின், மெட்ரீனா எல்லாவற்றையும், சுத்தம் செய்து விட்டு, அந்த மனிதனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டாள்..

    “நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்
    “அப்படியானால், எப்படிக் கோவிலருகில் வந்தாய்?”
    “என்னால் சொல்ல முடியாது”

    “யாராவது உன்னிடமிருந்து திருடினார்களா?”

    “இல்லை, கடவுள் என்னைத் தண்டித்தார்”

    “நீ அங்கே நிர்வாணமாக இருந்தாயா?”

    “ஆம், நிர்வாணமாகவும், குளிரில் உறைந்தும் இருந்தேன். சைமன் என்னைப் பார்த்து இரக்கம் கொண்டு அவன் கோட்டை எடுத்து எனக்கு அணிவித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்தான். நீ என் மேல் இரக்கம் கொண்டு உண்ண உணவும், குடிக்க நீரும் கொடுத்தாய். இறைவன் உனக்கு கைம்மாறு கொடுப்பாராக” என்றான்
    மெட்ரீனா, தான் தைத்துக் கொண்டிருந்த சைமனின் பழைய கோட்டையும், ஒரு பழைய கால் சட்டையையும் அவனுக்குக் கொடுத்து இரவு தூங்குவதற்கும் இடம் கொடுத்தாள். இரவு முழுவதும் மெட்ரீனாவால் தூங்க முடியவில்லை. வீட்டிலிருந்த கடைசி ரொட்டியும் முடிந்துவிட்டது. மறுநாள் உணவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சைமனும் தூங்கவில்லை. அவள், “சைமன், ஏன் அந்த மனிதன் நாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை? பார்த்தால் நல்லவனாகத்தான் தோன்றுகிறான்” என்றாள்.

    “ஏதோ காரணங்கள் இருக்கலாம்”.
    “சைமன், நாம் எல்லோருக்கும் கொடுக்கிறோம், நமக்கு ஏன் ஒருவரும் கொடுக்கவில்லை?”

    சைமனுக்குப் பதில் தெரியவில்லை. “சரி, நாம் இப்போது தூங்குவோம்” என்று கூறித் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 3

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    322978

    வீட்டில் சைமன் மனைவி, மெட்டீரினா, குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்துப் படுக்க வைத்து விட்டு, சைமன் அதிகமாக வெளியே உண்டிருப்பானென்று நினைத்துத் தானும் உண்ட பின் மீதியிருந்த ரொட்டியை மறு நாளுக்காகச் சேமித்து வைத்தாள். பின், சைமனின் பழைய கிழிந்த கோட்டை எடுத்துத் தைக்க ஆரம்பித்தாள். சைமன் அதிகாலையில் போனவன் இன்னும் திரும்பவில்லையே, அவன் புது கோட்டுத் தைக்கத் தோல் வாங்கியிருப்பானா? கடைக்காரன் அவனை ஏமாற்றி விடக்கூடாதே, எட்டு ரூபிள்கள் அதிகப் பணமல்லவா? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

    மெட்ரீனா கதவைத் திறந்ததும், வெறுங்கையோடு சைமன் ஒரு புதிய மனிதனோடு நிற்பதையும், அந்த மனிதன் தலையில் தொப்பி இல்லாமலும் கம்பளியிலான செருப்புகள் அணிந்திருந்ததையும் கவனித்தாள். கணவனிடமிருந்து மதுவாடை வருவதை உணர்ந்ததும் அவன் தோல் வாங்காமல் அந்தப் பணத்தில் ஒன்றும் இல்லாதவனோடு சேர்ந்து குடித்துக் கொண்டு அவனையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறானென்று நினைத்தாள். அவள் மனம் ஏமாற்றத்தால் வெடித்து விடும் போலிருந்தது. அவர்கள் இரண்டு பேரும் வீட்டினுள் வந்த போது அந்த அன்னிய மனிதன் இளைஞனாகவும் கணவனுடைய கோட்டு மாத்திரம் அணிந்து கொண்டு வேறு ஆடைகள் ஒன்றும் இல்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் ஒரே இடத்தில் தலை குனிந்த வண்ணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து இவன் நல்லவனல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தாள். சைமன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வைத்து விட்டுப் பெஞ்சில் அமர்ந்து, ஒன்றும் நடக்காதது போல் அந்த மனிதனின் கைகளைப் பிடித்து அருகே அமரச் சொன்னான். மெடீனா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு முகத்தைச் சுளித்தாள்.

    சைமன் அவளுடைய கோபத்தைக் கண்டு கொள்ளாதவன் போல், மெட்ரீனாவிடம் இருவருக்கும் உணவு பரிமாறச் சொன்னான். மெடீனாவின் கோபம் இரட்டித்தது. அவள், “நீ கோட்டுக்குத் தோல் வாங்கப் போனவன், அதை வாங்காமல் இருந்த கோட்டையும் கொடுத்து விட்டுக் குடித்திருப்பது மட்டுமல்லாமல், இன்னொரு ஆடையற்ற குடிகாரனையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய், நான் சமைத்திருக்கிறேன், ஆனால் குடிகாரர்களுக்குச் சாப்பாடு கிடையாது” என்றாள்.

    “நிறுத்து மெட்ரீனா, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள், இந்த மனிதன் எப்படிப் பட்டவென்று——–“ மெடிடீனா அவனை மேலும் பேசவிடவில்லை.

    “நீ பணத்தை என்ன செய்தாயென்று சொல்லவில்லை”.

    சைமன் கோட்டுப் பையிலிருந்து மூன்று ரூபிள் நோட்டுகளையும் எடுத்தான். அவளுடைய கோபம் தீரவில்லை. பணத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, ”குடிகாரர்களுக்குச் சாப்பாடு கொடுக்க முடியாது” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
    “மெடீனா, அதிகம் பேசாதே. நான் சொல்வதைக் கேள்”.

    அதற்கு மெடீனா “நீ என்ன மகா புத்திசாலியா? உன் பேச்சைக் கேட்பதற்கு? நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்பவேவயில்லை. நீ ஒரு குடிகாரன். என் தாய் கொடுத்த லினன் துணியையும் விற்றுக் குடித்தாய்” இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களைத் திரும்பவும் சொல்லிச் சத்தமிட்டாள். சைமன் பலமுறைகள் தான் இருபது கோபெக்குகளுக்குத்தான் குடித்ததையும், எப்படி அந்த மனிதனைக் கண்டான் என்று சொல்ல முயற்சி செய்தும் பலனில்லை.

    மெடீனா பேசுவதை நிறுத்தாமல் சைமன் மீது பாய்ந்து “என் கோட்டைக் கழற்றிக் கொடு, இது ஒன்றுதான் எனக்கிருப்பது” என்று கத்திக் கோட்டைப் பிடித்து இழுத்தாள். சைமன் கோட்டைக் கழற்ற முயலும் போது அவள் இழுத்த வேகத்தில் கோட்டுக் கையின் தையல் பிரிந்து விட்டது.

    அவள் அவனைச் சபித்துக் கொண்டே கோட்டைத் தலையில் போட்டுக் கொண்டு தன் கோபத்தைத் தணிக்க வெளியே செல்லக் கதவருகே போனவள், வந்திருப்பவன் எப்படிப்பட்டவன் என்று அறிய ஆவல் தோன்றியதும் தயங்கி நின்றாள்.

    தொடரும்

    Share